பதட்டம்! – கவிஞர் மகுடேசுவரன்

ஃபேஸ்புக்கில் மகுடேசுவரன் நேற்று எழுதிய பதிவை மிகவும் ரசித்தேன். கச்சிதமான காமெடி. பகிர்கிறேன். – AB

*

மின்கட்டணம் கட்டிவிட்டு வரும்வழியில் வெந்நீர் விருப்பு தோன்றிற்று. ஒரு தேநீரகத்தில் ஒதுங்கினேன்.

பருத்த உருவமுடைய ஒருவர் தம் தேநீரைப் பருகி எழுந்தார். *நிறப்பூச்சாளராக இருக்க வேண்டும். எழுந்து வெளியேறியவர் தம் வண்டியை அணுகினார். அதே விரைவில் பதறியபடி கடைக்குள் வந்தார்.

“வண்டில வெச்சிருந்த கவரைக் காணோம். உள்ளே பில்லு, கணக்கு நோட்டு, இரண்டாயிரத்து ஐந்நூறு பணம் வெச்சிருந்தேன்…” என்றார். கடைக்காரர் திருதிரு என்று விழித்தார். நாங்களும் பரபரப்படைந்தோம்.

நல்ல வேளை, கடை முழுவதும் கண்காணிப்புப் பதிவன்கள் பொருத்தப்பட்டிருந்தன. “கேமராவைக் கொஞ்சம் போட்டுக் காட்டுங்க…” என்று பதறியபடி வேண்ட கடைக்காரர் பதிவுப் படங்களைப் பின்னகர்த்தி ஓடவிட்டார்.

நிலைமையின் பதற்றமுணர்ந்த தேநீர்க்குடியர்கள் அனைவரும் படத்தை உற்றுக்காணத் தொடங்கினர். தேநீர்க் கலைஞர், உதவியாளர் என அனைவரும் காட்சித்திரை முன் கூடிவிட்டோம்.

”அதா… ஒருத்தன் வரான்… அவன்தான் எடுத்திருப்பான்… இல்லயே… வண்டியத் தொடாம போயிட்டானே… பக்கத்தில ஒருத்தன் வண்டியை நிறுத்தறான்… பாருங்க… அவனா இருக்குமோ…. அவனும் இல்லையே…” என்று ஒவ்வொருவரும் துப்பறியும் சிங்காரமாக மாறியிருந்தோம்.

யாரும் வண்டியை அணுகவில்லை. நிறுத்தியது நிறுத்தியவாறு இருந்தது.

“அப்ப நான் பெயிண்டுக் கடைலயே விட்டுட்டு வந்துட்டனாட்டம் இருக்குது…” என்று நிறப்பூச்சாளர் தம்மை மறந்து கூறினார்.

எல்லாரும் அவரையே பார்த்தோம். யாரையும் எதிர்கொள்ள முடியாமல் வெளியேறியவர் வண்டியைக் கிளப்பிக்கொண்டு கடையை நோக்கிப் பறந்தார்.

எங்களுக்கு வைக்கப்பட்ட தேநீர் ஆறியிருந்தது.

***

* நிறப்பூச்சாளர் : Painter

நன்றி : மகுடேசுவரன்

மறக்க முடியவில்லை அப்பா ! – மகுடேசுவரன் பதிவு (FB)

முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் நேற்று  எழுதிய பதிவு இது. படித்ததும் எப்படியோ ஆகிவிட்டது – என் சீதேவி வாப்பாவை நினைத்து. – AB

*

magudeswaran-fb3அப்பா இறந்து இன்றோடு இருபதாண்டுகள் நிறைவுறுகின்றன. என் சிறுவத்தில் அவர் வீட்டுக்கு வருவதற்குக் காலந்தாழ்ந்தால் கண்ணீர் வரும். அருகில் யாருமற்ற பொட்டல் காட்டு வீடொன்றில் தந்தையின் வருகையை எதிர்நோக்கி சீமையெண்ணெய் விளக்கின் அரைத்திரி ஒளியில் தாயாரும் நானும் தனியராய்த் தவித்திருப்போம். தளர்ந்து நான் உறங்கிவிடும் இரவுகளில் என்னை எழுப்பிக் கொஞ்சிவிட்டுத்தான் உறங்கச் செல்வார்.

அப்பா அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்லத் தெரியாது. தொலைந்து போய்விடுவோம் என்னும் அச்சம். அப்பா வாங்கித் தராத ஒன்றைத் தின்னத் தெரியாது. எல்லாம் அப்பாவாக இருந்த காலம் அது.

கறுப்பு நிறத்து மணிவிளிம்புக் காலுடையும் அரைக்கன்னம்வரை இறங்கிய கிருதாவும் தூக்கிச் சீவிய முடியுமாய்க் கிளம்பிச் சென்ற நாள்களில் அவர் அவ்வூரின் பெருமை. வற்றாத கிணறுகளும் வாழையும் நெல்லும் மிக்கிருந்த அவ்வூரின் வாழ்நாள்களை எப்படி மறப்பது ?

எல்லாமுமாக இருந்த ஒருவர் இல்லாமலே இருபதாண்டுகள் கடந்துவிட்டன. இதை நம்ப முடியவில்லை. அவர் எங்கோ வாழ்கின்றார் என்ற கற்பிதம்தான் அந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றியது. எல்லாவற்றிற்குமான தொடக்கம் அவர்.

நள்ளிரவில் சில நினைவுகள் ஆழ்ந்து தோன்றும். எங்கேனும் ஏமாற்றப்பட்டால், வஞ்சிக்கப்பட்டால், எதிர்க்கும் வலுவின்றி நின்றால் “ஐயா… நான் தந்தையற்றவன் ஐயா… என்னை இப்படிச் செய்யாதீரும்…” என்று கதறவேண்டும்போல் இருக்கும்.

எழுதப் படிக்கத் தெரியாத தாயாரோடும் எட்டு ஒன்பது படிக்கும் தம்பி தங்கையோடும் தந்தையில்லாத குடும்பத்தின் தலைமகனாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்.

தந்தையில்லாத வாழ்வில் நான் எத்தகைய கடைநிலையில் இருந்தேன் என்பதை உறவினர் வற்புறுத்தலின் பேரில் கோவைப் புதூர்க்குப் பெண்கேட்டுச் சென்ற இடத்தில் ஒரு தரகரின் மதிப்பீட்டில் உணர்ந்தேன். “ஏன்பா… நீ வெறும் பன்னண்டாங் கிளாஸ் படிச்சிருக்கே… டிகிரி ஏதும் படிக்கல… ஏதோ சொந்தமாத் தொழில் பண்றேன்கிற… இப்போதைக்குச் சின்னதா வீடு கட்டியிருக்கே… உன்னை நம்பி உங்கம்மா இருக்குதுங்கறே… தம்பி தங்கச்சி இரண்டும் படிப்புக்கும் சோத்துக்கும் உன்ன நம்பித்தான் இருந்தாகணும். அதுங்களுக்குக் கண்ணாலங்காட்சி காதுகுத்து வரைக்கும் நீதான் பார்க்கணும். இவ்வளவு பிக்கல் பிடுங்கலோட இருக்கிற உனக்கெல்லாம் எவன் பொண்ணு கொடுப்பான்னு நினைக்கிறே…?” என்று கேட்டார்.

அன்றைக்கே நான் செத்துவிட்டேன்.

வரும்போது நானும் அவ்வுறவினரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஓர் ஏரிக்கரையில் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்தினோம். அந்த ஏரிக்கரையில் நிற்கையில் என் கன்னங்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தது. அதிலிருந்து எப்படி நான் என்னைத் தேற்றிக்கொண்டு வந்தேன் என்றே தெரியவில்லை. நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

அப்பா இருந்திருந்தால் என்னைப் போன்ற ஒருவனுக்கு எவ்வளவோ துணையாக இருந்திருக்கும். சில கொடுஞ்சொற்களுக்கேனும் நான் தப்பியிருப்பேன்.எல்லாம் கற்றுத் தந்த நீங்கள் இவ்வாழ்க்கை இவ்வளவு வலிதரும் என்று சொல்லாமல் சென்றுவிட்டீரே.. தந்தையே.

ஓர் ஆறுதல். என் தந்தையார் பட்ட துன்பங்களில் ஒரு விழுக்காடுகூட நான் படவில்லை. எல்லாவற்றிலும் அவரே உடனிருந்து காக்கிறார் என்று நம்புகிறேன்.

அப்பா… உங்களை மறக்க முடியவில்லை அப்பா !

*

நன்றி : கவிஞர் மகுடேசுவரன்