எஸ். ஆல்பர்ட் கவிதையும் நகுலனின் ‘நாய்கள்’ முன்னுரையும்

மதிப்பிற்குரிய ஆல்பர்ட் சாரின் – ஒரே ஒரு? – கவிதை நகுலனின் ‘நாய்கள்’ நாவலில் இருப்பதாக நண்பர் எம்.டி.எம் சொன்னார். நாற்றமிகு நாகூர் வந்ததுமே நாய்களைத்தான் முதலில் பார்த்தேன் 🙂 .  ‘இன்று’ பத்திரிகையில் அன்று வெளியான எஸ். ஆல்பர்ட் கவிதை முதலில்…

இல்லாத கிழவி

விரிந்திருந்த பழம் பலகையை
இல்லாத கிழவி தின்றாள்;
தின்றலும் கிழவியும் முடிந்ததும்
சென்றவன் பார்க்க நேர்ந்தது
பலகை சிறுத்திருந்தது
வயிறு பெருத்திருந்தது

***

சில வார்த்தைகள் – நகுலன்

nakulan-naaykal1இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் “நிழல்கள்”, “நினைவுப் பாதை” இவ்விரண்டும் புஸ்தக – ஸ்தாபனங்கள் வெளியிட்டவை. “ரோகிகள்” “குருஷேத்ரம்” என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று – ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.

இந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் “பசுவய்யா” எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்” என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந.முத்துசாமி “பசுவய்யா” எழுதிய “ஆந்தைகள்” என்ற கவிதையில்  “ஆந்தை” என்று குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் – அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படியில்லை என்றும் , எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில்” முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் என்றும் (ஞானரதம் – நவம்பர் 1973 – ரசமட்டம் பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ‘ஸிந்துஜா’ என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு “தனக்கே” (?) தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர்களில் நான் ஒருவன் (சதங்கை – செப்டம்பர் 73 – அலுப்புத் தரும் நிழல் யுத்தம் – பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே பத்திரிகையில் திரு. வெங்கட்சாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடையைத்தான் (சதங்கை – டிசம்பர் 73, பக்கம் 3) நினைவுறுத்துகிறது என்று எழுதியிருந்தார்.

இதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்கே. “பசுவய்யா” எழுதிய “நான் கண்ட நாய்களி”ல் வரும் நாய்களில் நிச்சயமாகப் “பசுவய்யா” என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை! ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு  அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்!.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு! இந்தப் புதுக்-கவிதை சகாப்தத்தில் அதிகமாக சர்ச்சைக்கு உட்பட்டவர் அமரகவி சி.சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது
அகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.

கடைசியாக ஒரு வார்த்தை – நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் “நகல்கள்” (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்!) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.

இந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப் பிழையின்றி தங்களுக்கே உரிய சிறப்பான முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை விநியோகிக்க முன் வந்த “வாசகர் வட்ட”த்திற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

“நகுலன்”
18-2-74
திருவனந்தபுரம்
***

நன்றி : எஸ். ஆல்பர்ட்

பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன்

‘Silent Saint’ என்று நான் அழைக்கும் பிரம்மராஜனும் ‘Silent Satan’ நாகூர்ரூமியும்தான் மீண்டும் நான் எழுதவந்ததற்கு காரணம். (அட, அதற்காக ஏன் அவர்களை அடிக்க ஓடுகிறீர்கள்?). பிரம்மராஜன் கவிதைகள் பற்றி நகுலன் எழுதிய பழைய விமர்சனத்தை ‘புது எழுத்து’ மனோன்மணி முகநூலில் பதிவிட்டிருந்தார். இங்கே மீள்பதிவிடலாம் என்று தோன்றியது. சில வார்த்தைகள் குழப்பமாக இருப்பதால் இமேஜ் ஃபைல்-ஐயும் கீழே இணைத்திருக்கிறேன். தவறு இருப்பின் சொல்லுங்கள், திருத்துகிறேன். என்னிடமிருக்கும் பிரம்மராஜனின் ‘மஹா வாக்கியம்’ நூலிலுள்ள கடைசி கவிதையில் , ‘யாருடைய தலையையோ சீவுவது போல பென்சிலை சீவினார் அவர்*’ என்ற முதல் வரிக்கு ‘அவர்’ என்பது நகுலன் என்ற குறிப்பு இருக்கிறது! இதற்கு தாஜ் ஒரு கவிதை எழுதுவார் என்று நினைக்கிறேன். தாஜுக்கு ஒரு போனஸும் பதிவின் அடியில் இருக்கிறது. நன்றி. –ஆபிதீன்

***

பிரம்மராஜன் கவிதைகள்
நகுலன்

அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி சிருஷ்டிக்கையில், பழக்கத்தின் வேகத்தில் மரத்துப்போன பிரக்ஞை புதியதையும் , அது நைந்துபோன பாஷையில்லை என்ற அதே காரணத்தின் அதை அசட்டை செய்கிறது!

ஞானக்கூத்தன் சொல்வது மாதிரி பிரம்மராஜன் கவிதை “ஒரு வித்தியாசமான குரல்” என்பது மாத்திரமில்லை; அது ஒரு சாசுவதமான குரல் என்பதிலும் ஐயமில்லை. அதன் தன்மைகளை பின்வருமாறு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். அது படிம வியாபகமானது; இங்கு படிமம் நுண்மையாகக் கட்டுக் கோப்புடன் இணைகிறது; இறுக்கமான நடை; அவரே சொல்கிற மாதிரி அறிவுலகின் இணைப்பிருந்தாலும் அறிவு உணர்வாக மாறுகிறது. எனவே கவிதை பிறக்கிறது. அவர் Co-authorship என்பதையும் புறக்கணிப்பதற்கில்லை. ஏன் என்றால் ஒரு கவிஞன் உலகம் அவன் அனுபவ உலகம்; இந்த அனுபவ உலகம் வாசகனுடைய அனுபவ உலகுடன் இணைகையில்தான் உண்மையான ரஸனை சூடு பிடிக்கிறது. இது வாசகனுக்கு அவனுக்குரிய மதிப்பைத் தருகிறது.

கவிதையில் வார்த்தைகள் ஒன்றிற்கு மேற்பட்ட “அர்த்தங்கள்” உடையவை. ஐம்புலன்களால் கிரகிக்கப்பட்டு, அனுபவச் சூழல்களால் வளர்ச்சியுற்று, சப்தமும் சித்திரமுமாக உள்வியாபகமுற்று அனுபவம் வார்த்தையின் மூலம் அதீத எல்லைகளை நோக்கி நகர்கிறது. சுருக்கமாகக் கவிதையில் வார்த்தையின் உள்வியாபகம் எல்லையற்ற பரிமாணம் உடையது. பிரம்மராஜன் வார்த்தையில் “அரூபமான வார்த்தைகள் செயல் இழந்து போகும் பொழுது அந்த இடத்தை நிறைவு செய்யப் படிமங்களால் மட்டுமே முடியும்.” மீண்டும், “படிமங்கள் இயக்கம் மிகுந்தவை” எங்கு ”படிமம் இயக்கமற்றதாக இருப்பின் அதைக் கொண்டிருக்கும் கவிதை செயல்வீச்சு அற்றதாகவே இருக்கும்”. ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஒரு இந்தியக் கவிஞர் சொன்னதாகக் கேள்வி: சில இந்தியக் கவிஞர்களின் படைப்புகளை நோக்குகையில் அவர்கள் ஐம்புலன்கள் அற்றவர்கள் என்று சந்தேகம் தோன்றுகிறது” என்று. அது எப்படியாவது போகட்டும்.

எதிர் கொள்ளல்” என்று ஒரு கவிதை. பாரதி கவிதையில் இருந்து ஒரு வரி. “வீணையடி நீயெனக்கு; மேவும் விரல் நானுக்கு”. இங்கு ரஸனை என்பது நேர்கோடாக இணைக் குறியீடாகச் செல்கிறது. ஆனால் பிரம்மராஜன் கவிதை இந்த அனுபவத்தை அதன் நானாவிதமான, ஏன், தாறுமாறான தன்மைகளுடன் காட்டுகிறது. ஆமாம், முதல்வரியே விதவிதமான விபரீதமான சப்த அலைகளை எழுப்புகிறது.

“அரங்கத்தில் அடிக்கடி இருள்”. இந்தக் கவிதையில் கலைஞனுக்கும் கலைக்கும், கலைக்கும் அதை எதிர்கொள்பவர்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. இந்த அடிப்படையில்; இருள், வானவில், கழுதைகள், அன்னை மடியில் பால் சுரப்பது, வீணை, கங்கை நீர், தகரத்தின் பிய்ந்த குரல்கள், மனதின் சுவர்கள், தளிர், உதயம் என்ற படிம வரிசைகள் இணைகின்றன. மௌனமாகப் படிப்பவர்களுக்கு நிறையவே கிடைக்கும்.

தொடர்கிறேன். தொடரும் பொழுதே இப்படியெல்லாம் தெளிவு படுத்த வேணுமா என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன். புதுக் குரலின் பரிணாமத்தில் ஈடுபாடுள்ளவன் என்பதனாலும், அந்தக் குரல் அதன் இயல்பில் வெளி உலகிலும் தொடர்ந்து ஒலிக்க ஒரு சூழலைச் சிருஷ்டி செய்ய வேண்டியிருப்பதும் ஒரு அவசியம் என்ற நோக்கத்திலும் என்னைத் திருப்திப் படுத்திக் கொள்கிறேன். “அறிந்த நிரந்தரம்” என்ற கவிதை, வாழ்க்கையை மீறியது ஒன்றுமில்லை என்ற ஒரு தத்துவச் சரடு (இந்தத் தத்துவத்தின் மீது உங்களுக்கும் எனக்கும் ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது இல்லையே இங்கு விஷயம்) இதில் வரும் படிம வரிசை :-

கருப்புச் சூரியன் X ரேடியம் முட்கள்
நகராத காலம் X ஊரும் நத்தை
காகம் X குழந்தையின் ரோஜாப் பாதங்கள்
சாமச்சேவலின் கூவல் = ஒரு ஸிம்பனி

வாழ்க்கையில் எந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மையம். இந்தக் கவிதையில் ஒரு படிம ப்ரயோகத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மூன்று வரிகள் :_

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்
உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்
கேட்காமல் மறதியில் கரைகிறது.

இங்குச் சில வாசகர்களேனும் “விழித்த காகம்… ரோஜாப் பாதங்களை கேட்காமல் மறதியில் கரைகிறது” என்ற அடிக்குறி இடப்பட்ட தொடரைக் கண்டு “புரியவில்லை” என்று சொல்லலாம். இதற்கு விஞ்ஞான பூர்வமான விளக்கம் தரலாம்; ஆனால் மீண்டும் அது இல்லையே இங்கே விஷயம்! நவீன கதையில் ஒரு புலனால் உணர்வதை இன்னொரு புலனுக்கு இணைப்பது என்பது ஒரு உத்தியாகக் கையாளபடுகிறது. மாத்திரமில்லை, இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ரௌத்ரம் என்ற அனுபவம் வரும்போது ரத்தச் சிவப்பை நினைவு கூர்கிறோமென்றால், ரோஜாவின் இளஞ் சிவப்பில் இனிமையான மெல்லிய இசையின் நாதத்தைக் கேட்கிறோமென்று சொல்லலாம்.

இளம் இரவில் இறந்தவர்கள்” என்ற இன்னொரு கவிதை இந்த வார்த்தைச் சேர்க்கையே, பிரம்மராஜன் கூறுகிறது மாதிரி, ஒரு கலாபூர்வமான விளைவை உண்டு பண்ணுகிறது. முக்கியமாக “இளம்” என்ற வார்த்தை. நவீன இலக்கியத்ஹில் வாழ்க்கை சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் நமது கவிதை படிம மயமாகி விடுகிறது. இந்தக் கவிதையில் படிம ப்ரயோகத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே எழுதலாமென்று நினைக்கிறேன். பிணவாடை தொங்கும், பூக்கும்-காளான் பூக்கும் என்பதால் இதயச் சுவர்கள் பிறகு குயில்X சில் வண்டு . இதைத் தொடர்ந்து காகை மரங்கள் X மூளைச் சாலைகள் (தொகுதியை ஒரு முறை முழுவதும் படித்தவர்களுக்கு மிஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள் என்ற கவிதை ஞாபகம் வரும்)

லாரி எஞ்ஜின்கள் ஸிம்பனி முற்றுப் பெறும்.  விஞ்ஞானம் வியாபார உலகை நோக்கி நகரும் புகைப்பலம். இதற்கு எதிராக இயற்கையின் உயிர்த்தெழல்- … இறந்த இவைகள் கிசுகிசுக்கும். இதை நவீன விமர்சன பாஷையில் குறிப்பிடுவதென்றால் எழுத்துக்கொண்டு ஜனனம் X மரணம் என்ற எதிர்மறைகளை இசைக்கும் வித்தை. மறுபடியும் காடு கருக, உடல் நாற்றம் வீச, ஒயற்கை உயிர்த்தெழுவது போல் படிமம் மூலம் நூலறுந்த பட்டம் மூங்கையில் படபடப்பது யோனியில் நீந்தும் விந்து என்பதால் அது போல்-இது என்ற ஒத்திசைப்பு- மீண்டும் வார்த்தை மூலம் ஒரு ஒத்திசைப்பு-முரண்பாடு இணைகிறது என்று கடைசியாக உச்சம் – நாளைக்கும் காற்று வரும். கவிதையில் அர்த்தம் எலியட் பாஷையில் சொல்வதென்றால் வாசகனுக்குப் போடும் இறைச்சித் துண்டு! அனுபவத்தின் ஐக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதைப் படிமங்கள் இயங்குவதால் வெவ்வேறு உலகங்களை மாறுபட்ட நிலைகளை ஒற்றுமை அடையச் செய்வது மாறாக நிற்கும் அனுபவ உலகங்களிலிருந்து படிமங்களை இணைப்பதால் பிரம்மராஜன் கூறியமாதிரி படிமம் தனியாகி நிற்காமல் ஒரு சுழற்சி மூலம் கட்டமைப்பில் பாய்கிறது. இன்னும் ஒரு கவிதையை விஸ்தரித்து விட்டு மேலே போகின்றேன். கடைசிக் கவிதை, இதைப் பற்றி நான் அதிகமாக எழுத விரும்பவில்லை. படிமங்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு –

பச்சைப் புதரில்
வெறும் விரல் பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று

என்றதில் “வெறும் விரல்” என்பது எந்தத் தோல்வியும் அதன் இயல்பை மீறி சாசுவத்தை நோக்கி நகர்கிறது என்று.

இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் படிமங்களைக் கவனமாகப் படிப்பவர்களுக்குப் “புரியாமல் இருக்கிறது” என்ற பிரமை நீங்கி விடும். மேலும் கவிதையில் வார்த்தை “கருத்துத் தொடர்பு” என்ற அடிப்படையில் வித-விதமான நிலைகளைப் பெறுகிறது. இன்னும் ஒன்று – கவிதையில் வரி- சப்த அடிப்படையில் நகர்கிறது என்ற பிரமையில் மயங்காமல் வரிக்குவரி “அர்த்தம்” தொடர்கிறது என்பதையும்  ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாசித்தால் “புரியவில்லை” என்ற பிரச்னை தலை காட்டாது! ஆனால் படிமம் மாத்திரமில்லை கவிதை, உயிரின் துடிப்பு உணர்ச்சி வேகத்தில் இங்கு கவிதையாக மிளிர்கிறது. அனுபவத்தின் பல குரல்களை இங்கு கேட்கலாம். அவற்றில் சில வருமாறு:

மனிதன்தான் வாழ்க்கைக்கு, இயற்கைக்கு, ஏன் சாவுக்குக்கூட அர்த்தம் கொடுக்கிறான். (இறப்புக்கு முன் சில படிமங்கள்) கலைஞனுக்கு அனுபவத்தின் வெளிப்பாடு மாத்திரம் போதும். (எதிர் கொள்ளல்) இந்த நிற்கும் பொழுது கூட எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு ஜ்வலிக்கிறது. (இப்பொழுது)

இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். முன்னர் கூறிய மாதிரி – இவற்றில் எல்லாம் மனித குலத்தின் மாறாத புராதனமான குரல் மிகப் புதுமையாக வருகிறது. அய்யப்ப பணிக்கர் ஒரு சமயம் கூறிய மாதிரி மிகப் புதியதின் பின் மிகப் பழையதின் சாயை காணப்படுகிறது.

சில உதாரணங்கள் :-

 ஒரு யுகம் வேண்டும் முகம் தேட
 மீட்சிக்குப் பயனற்றுப் போயினும் தாறு மாறாய்க் கிடக்கும்
வார்த்தைகளை எழுப்ப வேண்டும் உலுக்கி.
 ”புத்தகங்களை விட்டுச் சென்றவன் தனக்கு”
என்று ஒரு பெண் சொல்லலாம்.
 இந்த வரிகள் உன்மனதின் கேள்வியாகும் நேரம்
 என்னுருவம் எங்கோ தொலைவில் கல்மரம்.

***

பிரம்மராஜன் கவிதைகள் – நகுலன் (இமேஜ்1 & இமேஜ்2 )

***

போனஸ் : நண்பர் தாஜுக்கு..!

மிராஸ்லாவ் ஹோலுப்
கவிஞனுடன் ஒரு உரையாடல்

நீ ஒரு கவிஞனா?
     ஆம். நான்தான்.
அது எப்படி உனக்குத் தெரியும்?
      நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நீ கவிதைகள் எழுதியிருந்தால் அதன் பொருள் நீ ஒரு கவிஞனாய் இருந்தாய் என்பதுதான். ஆனால் இப்பொழுது?
      நான் மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை எழுதுவேன்.
விஷயம் அப்படியானால் ஒருநாள் மீண்டும் நீ கவிஞனாக ஆவாய். ஆனால்
எப்படி அது ஒரு கவிதைதான் என்று நீ தெரிந்து கொள்வாய்?
      கடைசிக் கவிதை போலவே அதுவும் ஒரு கவிதையாக இருக்கும்.
அப்படியானால் அது ஒரு கவிதையாக இருக்காது. கவிதை என்பது
ஒரே முறைதான்.
மற்றும் அது இரண்டாவது தடவை பழையதைப் போலவே இருக்காது
      அதே அளவு சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
எப்படி அவ்வளவு உறுதியாக நீ இருக்க முடியும்? கவிதையின் தரமே ஒரு முறைதான்.
மற்றும் அது உன் மீது சார்ந்திருப்பதில்லை. ஆனால் சந்தர்ப்பங்களின் மீது.
      சந்தர்ப்பங்களும் கூட அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன்.
அதை நீ நம்புவாய் ஆயின் நீ கவிஞனாக இருக்க மாட்டாய் மற்றும் ஒரு கவிஞனாக இருந்திருக்க மாட்டாய். வேறு எது உன்னை கவிஞன் என நினைக்கச் செய்கிறது?
      சரி- இப்போது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. மேலும் நீதான் எவன்?

***

நன்றி : பிரம்மராஜன், மனோன்மணி

***

மேலும்.. :

நாடோடி மனம் – பிரம்மராஜன் : மாலதி

வேறொரு புதுக்கவிதை –  தாஜ்

 

மீள்வாசிப்பு: நகுலனின் ‘இவர்கள்’ – தாஜ்

மீள்வாசிப்பு: நகுலனின் ‘இவர்கள்’

தாஜ்

தீர என்னை நான் கண்டுகொண்ட நாளில், என் அரசியல் பிணைப்புகளும், அடாவடிகளும் இத்து அத்து விழ; நிறைய மாற்றங்கள்! இலக்கியத் தேடல் அதில் ஒன்று. ‘சிற்பியின் நகரம்’ புதுமைப்பித்தன்/ ‘மரப்பசு’ ஜானகிராமன்/ ‘வேள்வித் தீ’ எம்.வி. வெங்கட்ராம்/ ‘கோபல்லக் கிராமம்’ கி.ராஜநாராயணன்/ ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ சுந்தர ராமசாமி/ ‘பதினேழாவது அட்சக் கோடு’ அசோகமித்ரன்/ ‘எஸ்தர்’ வண்ண நிலவன் இன்னும் பல நட்சத்திரப் படைப்பாளிகளோடு முதல் வாசிப்பிலேயே கைகோர்த்துக் கொண்டு தட்டுத் தடங்கள் இல்லாமல்  விரைந்த அனுபவம் சொல்லிக்கொள்ள தகுந்தது. அது மாதிரி, மௌனி/ நகுலன்/ கோணங்கி/ போன்ற படைப்பாளிகளிடம் நடக்கவில்லை. முதல் வாசிப்பில் அவர்களோடு கைக்கோர்ப்பதென்பது வானத்தை வில்லாக வளைப்பதாகப் பட்டது. 

கோணங்கியின் எழுத்து எனக்குப் புரியவில்லை என்பதைப் பற்றி வருத்தம் இருந்ததே இல்லை. அவர் எழுத்து அவருக்கே புரியுமா? என்பது குறித்து எனக்கு சந்தேகம் உண்டு. கோணங்கி மாதிரி, மொழியால் வாசனை மிரட்டும் அவரது உடன் பிறவா சகோதரர்கள் இன்னும் சிலர் உண்டு. பாவம் அவர்கள்! மௌனியையும், நகுலனையும் அப்படி சொல்லிவிட முடியாது.படைப்பின் நேர்த்தியை முன்வைத்து வித்தியாசப்பட்டவர்கள் அவர்கள். நிச்சயம் அவர்கள் கோணங்கி கிடையாது.  மௌனியை ஆர அமரப் படித்தால் அவரோடு ஒட்டிக்கொண்டு விட  முடியும். நகுலனிடம் கொஞ்சம் சிரமம் கொள்ள வேண்டும். அவரிடம் ஒட்டிக் கொள்வதென்பது அத்தனை எளிதல்ல. வாசகன், வாசிப்பில் விசாலமாகாதவரை நகுலன் சாத்தியமாக முடியாது!

இவர்கள்/ நாய்கள்/ வாக்கு மூலம்/ போன்ற நகுலனின் நாவல்களை வாங்கி வாசித்துத் தோற்றவன் நான். சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கவும், மீண்டும் மீண்டும் தோல்விதான்! என்றாலும், அவரது புத்தகங்களை கடாசி விடவில்லை. அவரது எழுத்து புரியவில்லை என்பது என் போதாமையைச் சார்ந்தது. இப்படித்தான் அன்றைக்கு நினைத்து அவைகளைப் பத்திரப் படுத்தி வைத்தேன். கடைசியில், அதுவே சரியென்றும் ஆனது. அல்லாது, ‘மீள்வாசிப்பு: நகுலனின் இவர்கள்’ எப்படி என்னால் இன்றைக்கு சாத்தியமாகியிருக்க முடியும்? 

நகுலனின் ‘நாய்கள்’ படித்து குழம்பிய நாளில், இன்றைய பிரபலமும் அன்றைய என் நண்பருமான ‘கோணல் பக்கங்கள்’ சாரு நிவேதிதாவிடம் அது குறித்து அளவளாவியது ஞாபகத்தில் இருக்கிறது. அது சமயம், ‘நாய்கள்’ நாவலின் புரியாமையும்/ புரிந்தறியும் மார்க்கம் பற்றியும் பேச, ‘புரிதலில் அந்த நாவல் தனக்கும் சவாலாக இருந்தது’ என்ற அவர், ‘அது புரியவில்லை என்று ஏன் சிரமம் கொள்கின்றீர்கள்? புரியும் விதமாய் நகுலனுக்கு எழுதத் தெரியவில்லையென நினைத்துவிட்டுப் போங்களேன்’ என்றார். சாருவின் அந்த மூன்றாவது அறிவுதான் இன்றைக்கும் அவரை நிறம் காண்பித்துக் கொண்டிருக்கிறது!

வெளிப்படையாக சொல்லிவிட முடியாத நிகழ்வுகளை படைப்பில் பதிய, சிடுக்கானதோர் மொழி நடை/ அதையொட்டிய கலை நேர்த்தி/ வாழ்ந்து பெற்ற அனுபவம்/ என்பன மட்டும்தான் மௌனியின் நுட்பம் சார்ந்த சங்கதி! ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதுவது மாதிரியான நடையொன்றும் அவரிடம் கூடுதலாக காணமுடியும். இதனைப் புரிந்து கொள்ள  இயலுமென்றால் மௌனியின் கதை வாசிப்பை தடங்கள் இல்லாது நிகழ்த்தலாம். பெரிய சிரமமின்றி, அவரது பேனா போன போக்கில் போய், கதையின்  விஷயதானங்கள்  அத்தனையையும் உள் வாங்கிக் கொண்டுவிட முடியும். இப்படியான தீர்மானமான கண்டெடுப்புகள் எதனையும் நகுலனிடம் கண்டு உணர முடியாது. மொழி வீச்சில் எந்தக் கட்டுக்கும் அடங்காதவர் அவர்!  சித்தம் போக்கு!

வாழ்வில், தீண்டாமையை உதாசீனம் செய்த நகுலன்தான், தனது எழுத்தின் புரிதலுக்குள் வாசகர்களை அண்டவிடாதவராகவும் இருந்தார்! படைப்பில்,  அவர்  முயன்று  காட்டியிருக்கும் மொழி அடாவடிகள் கொஞ்சமல்ல! வேலைப்பாடான, நுட்பமும் கூடிய கட்டிடத்தை மணிச் சித்திரத்தாழ் கொண்டு இறுக அறைந்து சாத்தி விடுபவர் அவர்! ஆர்வத்துடன் அவரது ஆக்கங்களை வாசிக்கப் புகும் வாசகன், மேலே நிலைதாண்டிப் போக முடியாது. அவன் திண்டாடுவது அவருக்குப் பிடிக்குமோ என்னவோ தெரியாது. அதன்படிக்குதான் யோசிக்க  தோன்றுகிறது. 

‘நான் ஒரு-இஸத்தையும் சேர்ந்தவனல்ல, தம்பி! நான் பேனா, தம்பி பேனா-எனக்கும் தெரியும் சில வித்தைகள், தம்பி, கேள்; உன்னைப் போல் நான் எழுதுவேன் என்றில்லை, தம்பி! எது என்னவானாலும் தம்பி, நான் என்னைப் போல்தான் எழுதுவேன் தம்பி.  அதில்தான் என்ன சுகம்! என்னுடைய இச்சா சுதந்திரம் தம்பி என்னுடைய உயிர்மூச்சு! என் பேனாப் பெயர் ஒரு புனைப் பெயர் என்றால் என் அசல் நாமதேயம் அனாமதேயம், எனக்கு என்ன தெரியும், தம்பி! எனக்கு ஊரும் கிடையாது, பேரும் கிடையாது! காரணமும் இல்லை, காரியமும் இல்லை! இகமும் கிடையாது, பரமும் கிடையாது! கண் பார்த்தது கை எழுதுகிறது! ஒரு சுழி மாறிப் போனால் உயிர் போச்சு! எந்த எந்த உருவில்தான் நான் என்னைக் காண்கிறேனடா!’ – (இவர்கள்/பக்கம்-123)

‘அவனுக்குத் தோன்றியது, எழுத்து விஷயத்தில் அர்த்தம் பூஜ்யமாவதில்தான் அர்த்தம் உருவாகிறது என்று. இது எழுத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்-வார்த்தை, வார்த்தைச்- சேர்க்கை, அந்தச்-சேர்க்கைகளின் முழு ரூபம்-ஒன்றிலும் நாம் கண்டு-பழகி-களைத்து போன உருவங்களைப் பார்க்கக்கூடாது. நிறைய-நிறைய எழுதி, எழுதி எழுதவேண்டுவதை எழுதாமல் விட்டு விட வேண்டும்.’ (இவர்கள்/பக்கம்-107)  

மேலே அவரது எழுத்தைப் பற்றி அவர் தந்திருக்கும் ஒப்புதல் ஒரு புறம் இருக்கட்டும். நாம் இங்கே  பார்வைக்கு எடுத்துக் கொண்டிருக்கும்  ‘இவர்கள்’ நாவலின்  தொடக்கத்தை, அந்த ஆரம்ப வரிகளின் விசேசத்தை பாருங்கள்!  

‘நவீனனுக்கு இன்று போல் இருந்தது. அவனை அறியாமலேயே அவனுள் ஒரு கேள்வியெழுந்தது. அதாவது அது எப்படியிருக்க முடியுமென்று? ஒருவேளை மனிதர்களுக்கு நிழல்கள் உள்ளது போல், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா? அதாவது இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா? கடிகாரத்தின் முள் அல்லவா நம்மைக் குத்திக் கொண்டே இருக்கிறது.’

‘ஆம், என்ன சொல்லிக்கொண்டு வந்தேன்?… நான் அவரைப் படித்திருக்கிறேன் என்று… அப்படிதானே, இகர முதல்வி? ஞாபகம் இருக்கிறதா நான் இன்னும் பிறக்கவில்லை என்று சொன்னது? ஒரு கட்டம் வரை நான் வெறும் ஒரு பரிசுத்த ஆவியாகத் திரிந்துகொண்டு இருந்தேன் என்றது? அப்பொழுது நான் B.A.படித்து விட்டு “வேலை, வேலை” என்று பரபரத்துக் கொண் டிருந்த காலம்…’

‘மனிதனிடம் பேசுவது மாதிரியில்லை….  மரத்துடன் மிருகங்களுடன் பேசுவதென்பது….  ஒரு மரத்துடன், ஒரு மிருகத்துடன் நீ பேச வேண்டுமென்றால்,  நீ ஒரு மரமாக மிருகமாக மாற வேண்டும். நின் உருவம் நிச்சலமாக வேண்டும்; மனம் ஒடுங்க வேண்டும். நீயும் ஜே. கிருஷ்ணமூர்த்தி படித்தவன்தானே. நவீனா, எனக்குத் தெரிந்தவரை  மிருகங்களுக்குப்  பைத்தியம் பிடிக்கலாம். மரங்களுக்கு வியாதிகள் வரலாம். ஆனால் ஒரு மரத்திற்குப் பைத்தியம் பிடிக்குமா? தெரியவில்லை. மரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. ஆனால் அவைகளுக்குப் பைத்தியம் பிடிக்குமா,…..?’

– மரங்களுக்கு பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி வாசகன் அறிவானா? மாட்டானா? அறியேன். ஆனால், ஒரு படைப்பாளி தன் படைப்பை இந்தச் சுதியில் ஆரம்பித்தால், வாசகன், அதிலும் குறிப்பாய் ஆரம்பக்கால வாசகன் தப்பிப்பதென்பது கஷ்டம்! மண்டையை பிறாண்டித்தான் கொள்வான்.  சந்தேகமே இல்லை. இந்நாவலின்  ஆரம்ப  வரிகளில்  ஒரு வேளை அவன் தப்பித்தாலும், அவனை விடாது விரட்ட இன்னுமான வரிகளில் இந்நாவலில் விரவிக்கிடக்கிறது.

பொதுவாய் நம்மவர்கள் எழுதும் புதுக் கவிதைகளில் அதற்கென பிரத்தியேகமாக சிந்தித்து அடுக்கும் லாவகமானதோர் மொழியை,  நகுலன் தனது நாவல்களின் உரைநடையில்  தாராளமாகப் புழங்குபவராக இருக்கிறார்!  ‘தன்னைவிட நீளும் நிழல்/ நான் பிறக்கவில்லை/ இறந்துப் போனேன்/ இறந்துப் பிறந்தேன்/ மரங்களுடன் பேசுவது/ மிருகங்களுடன்  உரையாடுவது….’ என்பது மாதிரியான வார்த்தைகள் நம்மவர்களின் கவிதைகளில் குறியீடாக எழுந்து, வாசிப்பின் குறுக்கே நின்று சேட்டைத்தருவதை கண்டிருக்கிறோம். இங்கே, உரைநடை வழியே நகுலன் அப்படி, நம்மை உண்டு இல்லையென செய்திருக்கிறார். 

ஆனாலும் பாருங்கள்,  நகுலனின் கவிதைகளில், அவரது கவிதை மொழி என்பது இலேசான/ சுளுவான/ பத்து வார்த்தைகளுக்குள் கட்டுமானம் கொள்வதாகவே காட்சித்தரும்.  ‘ராமச்சந்திரனா யெனக் கேட்டார்/ ஆம் என்றேன்/ எந்த ராமச்சந்திரன் என்று அவரும் கேட்கவில்லை/ நானும் சொல்லவில்லை/’ – அவ்வளவுதான் கவிதை! உலகில் இதைவிட எளிமையான  கவிதையை எந்தவொரு கவிஞனும் எழுதிவிட முடியாது. அவரது இன்னொரு கவிதையைப் பாருங்கள். ‘அவள் முகந்தடவி/ முலை கசக்கி/ முயல் வளைக்குள்/  மீன் பிடித்து/  நான்  களிக்கு மவ்வேளை/ ஜன்னலூடு உள்நோக்கும்,/ விண் அனைத்தும்/ கட்டி கட்டியாகக்/ காட்பரீஸ் சாக்லேட்’ – இப்படி, மொழியின் எளிமையே உருவாய் கவிதை எழுகிற அதே நகுலன்தான் உரை நடையில் நம்மை அண்டவிடாது அராஜகமும் புரிகிறார். குறிப்பிடத்தகுந்த எதிர்மறைப் போக்கு இது! இவரது,  இப்படியான எளிமைக் கொண்ட மூணுவரி, நாலுவரி கவிதைகளை, ‘மஹா வாக்கியம்’ பிரம்மராஜன் அங்கீகரிக்க மறுத்து, தனது ‘மீட்சி’ இதழில் பிரசுக்காது விட்டதோர் நிகழ்வு, அன்றைய இலக்கிய வட்ட சங்கதிகளில் ஒன்று! அது சரியென  கட்சிக் கட்டியவர்களின் பக்கம் நானும் இருந்தேன்.                                

அவருக்குத் தெரிந்த அல்லது அவரது அனுபவம் போதித்த அத்தனையும் வாசகனும் அறிந்திருப்பான் என்கிறக் கணக்கில் எழுதித் தீர்த்திருக்கிற அவரது படைப்புகள்,  கலை நேர்த்திக் கொண்டவைகள் என்பதைவிட, மொழி வித்தைக் கொண்டவை என்பதே சரி! ஆனால், ஓர் மேதமை கொண்டவனின் எழுத்தது என்பதற்குறிய அடையாளங்கள் ஆங்காங்கே  பளிச்சிடும். ‘உயிர்த்தலம்’ ஆபிதீனும் கூட, “அவரது படைப்பில் வழியும் மேதமையைப் பாருய்யா!” என்றே சிலாகிப்பார்! நகுலனின் படைப்புகளில், அவரது ஸ்தானத்தை திடுமென நவீனன்  கைக்கொள்வான்! சரியென நாம் வாசிப்பைத் தொடர்ந்தால், அவரது பேனா அந்த ஸ்தானத்திற்கு வந்து நின்று கதை நடத்தும்! அப்புறம், அவரது முன்னே பின்னே விழுகிற நிழல் பேசத் துவங்கி விடும். அப்படியே, அவரது சுசீலா வருவதும் போவதும் கதையின் அனிச்சை சங்கதியாகவே இருக்கும்.

நகுலன் இப்படி வாசகனை அலைக்கழிப்பதைப் பற்றி நான் சுட்டிக் காமித்தாலும், நகுலனின் போக்கை அப்படியே விரும்பும்; அதனூடே முழுகி விளையாடும் வாசகர்கள் ஒருபாடு அதற்கென்றே உண்டு! அவரது ஒவ்வொரு படைப்பிலும் உருவமற்ற சுசீலா வந்து போகும் எண்ணிக்கையினை அறியும் பொருட்டு, அவரது படைப்புகளை வாசிக்க  ஆர்வம்  கொள்பவர்களையும் கூட நான் அறிவேன்! நவீன இலக்கியத்தின் முன்னாள் தளகர்த்தருள் ஒருவரும், இன்றைக்கு, சக மக்கள் பொருள் குவிப்பதற்கான நவீன நெறிகளை வகுத்து  தந்திருப்பவருமான ‘அடுத்த வினாடி’ புகழ் நாகூர் ரூமி, எனக்குத் தெரிந்து நகுலனின் சுசீலாவை அவரது படைப்புகளில் தேடுபவராகவும், கசிந்துருகுபவராகவும் கண்டிருக்கிறேன். ( நாகூர் ரூமியின் ‘அடுத்த வினாடி’ படிக்கவும், பொருள் குவிக்கும் ஆசைப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை: குவிய இருக்கும் பொன்-பொருளையும், காசு-பணத்தையும், சேமித்துப் பாதுகாக்க வீட்டில் சேமிப்புக் கிடங்கு பல கட்டி முடித்தப் பிறகே…. அந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது உசிதம்.) துபாயின் வெப்ப வெளியில்  ஓடித் திரிந்து  பொருள் தேடும் எத்தனையோ  ஆயிரங்களில்  ஒருவரான ‘சாதிக்’ என்கிற என் இலக்கிய சகாவுக்கு, நகுலனின் படைப்பில் சுசீலா என்பது பல பொருள் தந்து கிளர்ச்சியூட்டும் வார்த்தை! சுசீலா பற்றி நகுலன் சொல்லாததெல்லாம் கூட இவருக்கு தெரியும்!

*
பத்திரப் பாதுகாப்பில் நான் வைத்திருந்த நகுலனின் ‘நாய்கள்’ நாவல், எனது இலக்கிய நண்பர்களின் உதவியால் கானாமல்போய்விட்டது. களவாடியவர்கள் கஷ்டப்பட்டிருக்கக் கூடும். என்றாலும் என் வாசிப்புக்கு அவர்கள் இப்படிக்கூட உதவ முடிந்ததை எண்ணியபோது சந்தோஷமாகவே இருந்தது.  ‘முத்துக்கறுப்பன்’  புகழ் மா.அரங்கநாதன் அவர்கள்,  நவீன இலக்கிய வானில் நான் நினைத்து நினைத்துப் பெருமைக் கொள்ளும் படைப்பாளி! அதைவிட நல்ல மனிதர் அவர்! “இதை வாசித்துப்பாருங்கள்” என்று அவர் சிபாரிசு செய்து தந்த புத்த கம், நகுலனின் ‘வாக்கு மூலம்’! முதல் வாசிப்பில் சங்கடம் தந்த அந்தச் சிறிய நாவலை, சில ஆண்டுகள் கழித்து வாசித்தேன். நகுலன் தனது இறப்புக் குறித்து கொள்ளும் ஆவலை அந் நாவல் பேசிய விதம் மனதில் பல சலனங்களை ஏற்படுத்தியது. அதன் புதியகட்டுமானம் கண்டு சொக்கித்தான் போனேன்.

‘இவர்கள்’. இந்நாவலை முன்வைத்து, இங்கே அவரது எழுத்தை நான் எத்தனைக்கு விஞ்சும் கேலி செய்ய எழுதினாலும், நிஜத்தில் இந்நாவலை அங்குலம் அங்குலமாகவே ரசித்தேன் என்பதே உண்மை. அசாத்திய கோணத்தில் அதில் அவர் மொழியை கையாண்டிருக்கும் விதம் அலாதியானது என்பதில் இரண்டு கருத்து கிடையாது.

நவீன இலக்கியத்திற்குள் தான் பிரவேசித்த காலகட்ட குறிப்புகளோடு நகுலன் எழுதியிருக்கும் நாவல்தான் ‘இவர்கள்’! தான் நட்பு பாராட்டிய படைப்பாளிகள் பலரைப் பற்றி இதில் வியந்து பேசும் நகுலன், தன் நட்பு வட்டத்திற்குள் வந்து நிலையற்றுப் போன சில படைப்பாளிகளைப் பற்றியும் இதில் சூசகமாய் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் நட்பு பாராட்டிய படைப்பாளிகளில் வெளிநாட்டுப் படைப்பாளிகள் சிலரும் கூட அடக்கம். நம்மவர்களில், க.நா.சு.வும்/ மௌனியும் நகுலனிடம் ரொம்பவும் ஆழம் கொள்கிறார்கள். அவர்களோடான நட்பை பாராட்டும் விதமாக நிறைய சங்கதிகளை இதில் எழுதி இருக்கிறார். அவரது நட்பு வட்டத்திற்குள் வந்து நிலையற்றுப் போன படைப்பாளிகளில்  குறிப்பிடத் தகுந்தவர்கள் எனில்…  சுந்தர ராமசாமியையும், பிரமீளையும் சொல்லலாம்.

மேலும் இதில், தனது தாய்/ தந்தை/ தமக்கை/ மற்றும் சகோதரர்கள் என்று பலரைப்பற்றியும் இதில் குறிப்பிடத்தகுந்த  செய்திகளை  சொல்லி இருக்கிறார்.  இவர்களைப்  பற்றியெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பதைவிட, காலத்தின் பதிவில் தீரப் பதிந்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும். ‘இவர்கள்’, அவரது வாழ்க்கைச் சரிதத்தின் மையப் பகுதியைப் பற்றிய பதிவென தீர்மானம் கொள்ளலாம்!  

         
மௌனியினுடைய மகன் ஒருவரின் மனநிலைப் பாதிப்பை/ தனது சகோதரன் ஒருவரின் மனநிலைப் பாதிப்பை/ அவர் இந் நாவலில் கொஞ்சம் பதிந்திருக்கிறார். அப்படி அவர், அதனைப் பதிந்திருக்கிற மொழி தெளிவில்லாமல்தான் இருக்கிறது. இந்நாவலின் பல இடங்களிலும்கூட இந்த தெளிவின்மையை காணமுடிகிறது. இந்தத் தெளிவின்மை  என்பது  நகுலனின்  மனநலப் பாதிப்பின் இடர்பாடுகளா? சொல்லத் தெரியவில்லை.  மௌனியை அறிந்தவர்கள் சிலர், நாவலுக்கு வெளியேயும் அவரது தெளிவின்மையற்ற அல்லது மனநலம் பாதித்திருந்ததுக் குறித்து எழுதியும் இருக்கிறார்கள். இந்தத் தெளிவின்மை என்பது அவரது அசாத்திய திறமையின் இன்னொரு பக்கமாகவே பார்க்கிறேன்.  தனது அதீத எழுத்தின் மூலம்,  தனது  உன்னதத்தின் உச்ச நிலையை கண்டுகொண்டு, அதனை உலகுக்கு அறிவிக்கும் ‘நான் கடவுள்’ புகழ் ஜெயமோகன், நகுலனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிற ஓர் குறிப்பை இங்கே வைப்பது தகும்.

ஜெயமோகன் எழுதிய ‘நினைவின் நதியில்’ என்கிற புத்தகத்தில், சுந்தர ராமசாமி நகுலனை பற்றி சொன்னதாக ஜெயமோகன் ஒரு செய்தியைச் சொல்கிறார்: நகுலனின் குணச்சித்திரத்தை சுந்தர ராமசாமி அவருக்கே உரிய முறையில் விவரித்தார். ‘ஒருமுறை, நாகர்கோயில் வரதுக்கு நானும் அவரும் ரயில்வே ஸ்டேஷனில நிக்கறோம். நகுலன் என் கூடவே இருக்கார். நான் நடந்தா அவரும் நடப்பார். நான் நின்னா அவரும் நிப்பார். பத்திரிகை வாங்கப் போனா அவரும் வருவார்.  ஒவ்வொரு ரயிலா வருது,  இந்த ரயிலா ராமசாமிம்பார். பேசாம இருங்கோ நம்ம ரயில் வாரப்ப சொல்றேன்னு நான் சொல்லிட்டேன். அப்றமும் போற வாற எல்லா ரயிலுக்கும் பதற்றத்தோட அப்டி கேக்கிறார். அதாவது பரவால்லை,  குட்ஸ்  ரயிலைப்  பார்த்து கேக்கிறார்.’ இந்தக் கூற்று இப்படி என்றால்…. நகுலனின் வசீகரமான நிழலும், ‘உலகம் ஓர் பெரிய எழுத்துக் கதை’ எழுதி என்னை  நிமிர்ந்துப் பார்க்க வைத்தவருமான  எஸ்.ராமகிருஷ்ணன், நகுலனை அவரது  அந்திமக் காலத்தில் (அவரின் இறப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு) கண்டு,  அவரது தடுமாற்றம் கொண்ட உடல் மொழியையும்/ வாய் மொழியையும்  அப்படியே பதிவு செய்து ‘தீராநதி’யில் பதிவேற்றிருந்தார். குறிப்பிடத் தகுந்த அந்தப் பதிவு சொல்ல முனைந்ததெல்லாம் ‘கடைசி காலங்கங்களில் நகுலன் கொண்டிருந்த மனநிலைப் பாதிப்பை’த் தான்.

மனிதர்களுக்கு மனநிலைப் பாதிப்பென்பது, ஒருவனுக்கு அறியாது வந்து சேரும் இன்னொரு வியாதி மாதிரி. அல்லது காலத்தில் அவனுக்கு கிடைக்கும் கொடை!  மனநிலைப் பாதிப்பை முன்வைத்து எந்தவொரு மனிதனையும் அளந்துவிட முடியாது. மனிதவர்க்கத்தில் அப்படியொரு பாதிப்பிற்கு ஆளாகாத மனிதனே கிடையாது. பீடிக்கும் அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப் படலாம். ஏதோ ஒரு தெளிவில் மனிதன் என்ன சொல்கிறான் என்பதைத்தான் நாம் பார்த்து தீரவேண்டும்.  வட்டத்திற்குள் வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதுதான்  இயற்கையின் நியதியாகவும் இருக்கிறது. மனநிலைக் கொண்டவராக கிசுகிசுக்கப்பட்ட அதே நகுலனின் தெளிவை கீழே பாருங்கள். அவரது உயர்ரக அங்கதத்தை இங்கே ரசியுங்கள்.இதுவும் ‘இவர்கள்’ நாவலின் வரிகள்தான். 

‘குழந்தை பிறந்தவுடன் அதற்கு, ‘இல்லாத’ வியாதிகளுக்கெல்லாம் ஊசி போடவேண்டும். எதற்கும் பாதுகாப்பு வேண்டியிருக்கிறது. ஆஸ்பத்திரி போகவே பயமாக இருக்கிறது.  ஒரு டாக்டரைப் பார்த்தால் போதாது; ஏராளம் டாக்டரைப் பார்க்க வேண்டும்; மூத்திரத்தை, மலத்தை, துப்பலை, ரத்தத்தை – எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். ஒரு பரிசோதனைக்  கூடத்தி லிருந்து இன்னொரு பரிசோதனைக் கூடத்திற்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு ரோகியும் ஒரு குற்றவாளி; அவன் கேஸ்கட்டைப் பார்த்துத்தான் மருந்து கொடுக்க முடியும். உங்கள் உடல் உள்ளில் இருப்பதுகூட எக்ஸ்ரே மூலம் ஒரு திறந்த புத்தகம். இக்கட்டான கட்டத்தில் ரத்தம், பிராணவாயு இவற்றிற்கெல்லாம் முன் கூட்டியே ஏற்பாடு செய்யவேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் மனிதனால் இனிமேல் சாவதானமாகச் சாக முடியாது! இவ்வளவு ஏற்பாடுகள் இருந்துகூட மனிதன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.  அதைக்கூடச்  சரியாக்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். மனிதன் மரணத்தை வென்று விடுவான். இயற்கை வைத்தியம் கூட மூத்திரம் குடிப்பதில் முடிகிறது.  விஞ்ஞானி உடலை மாத்திரம் இல்லை – உள்ளத்தையும்  விட்டு வைக்கவில்லை. ஃப்ராய்டு போன்றவர்கள் மனிதனின் மனதின் மூடியைத் திறந்ததும் மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள்!’

‘பொருளாதாரத் தத்துவஞானிகளுக்கு மனிதன் தான் கணக்கெடுக்க ஒரு புள்ளி;  மனோதத்துவஞானிகளுக்கு ஒரு பிறவி-நோயாளி,  பிறகு நவீன தத்துவ மோஸ்தர்கள் சாவின் முன்  தன் சுயேச்சை நிலை நிறுத்த யத்தனிக்கும் ஒரு முரட்டுப் பிள்ளை.  இயற்கையாக என்று இன்று ஒன்றுமில்லை; எல்லாம் சூழ்நிலை விவகாரம். மொழி-அடிப்படை-ஒரு-தத்துவக் கொள்கைப்படி பார்த்தால் ஜடங்களை மீறி மனித மனது என்று ஒன்று இருக்கிறதா என்ன? மேஜை, நாற்காலி என்பதுபோல் நாமும் கண் முன் காணும் ஒரு சாதனம்.'(இவர்கள்/பக்கம்-120, 121)

அவரது தெளிவின்மை என்பது, அவரது அசாத்திய திறமையின் இன்னொரு பக்கமே! நவீன இலக்கிய வட்டத்தில் நகுலனின் மறைவுக்குப் பிறகு, படைப்புகளால் அவர் வகித்த அந்தஸ்த்துக்குரியதோர் இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
satajdeen@gmail.com

***

See also : Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

‘சில அத்தியாயங்களிலிருந்து’ ஒரு அத்தியாயம்

நகுலனின் ‘சில அத்தியாயங்கள்’ நாவலிலிருந்து (இரண்டாம்) அத்தியாயம் :

***

nahulanஅந்த வீட்டில் யாருமில்லை – அவனைத் தவிர.

தாய் தந்தை, ஒரு சகோதரன் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று விட்டார்கள். அம்மா இருந்த பொழுது, வீட்டில் இல்லாவிட்டாலும் அந்தப் பைத்திய  ஆஸ்பத்ரியில் தனது வாழ்வில் பாதி காலத்தைக் கழித்த தம்பி உயிருடன் இருந்த காலத்து (சென்ற ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என்னவோ – அம்மா) ராமநாதன், நடராஜன், சிவன், கேசவ மாதவன் இவர்களெல்லாம் வந்தார்கள்; வந்தவாறே போனார்கள். அவரவர் அவரவர் உலகைப் பற்றித்தான் பேச்சு – அம்மா எப்பொழுதுமே இதைப் பற்றி ஒன்றும் சொன்னதில்லை. (தனக்குப் பிடிக்காவிட்டாலும்) அப்பாவும். இப்படி வந்தவர்கள் சிலர் சிதறிப் போனார்கள். நேற்று வரையில் சிதறாமல் இருந்தவர்கள் இன்று சிதறிக் கொண்டிருக்கிறார்கள் – சிதறவில்லை என்று நினைப்பவர்கள் கூட – அது அப்படித்தான் இருக்கும் (மூலத்தோ பிரம்ம ரூபாய – அம்மா). முதல் கோணல் முற்றும் கோணல் – இவன். இப்பொழுது எல்லாம் ஹரிஹர சுப்ரமண்ய ஐயர் வந்துவிட்டுப்போகிறார் – ஒரு வயதிற்குமேல் விஷய சுகங்களில் பற்றை அகற்றிவிட வேண்டும் என்று ஒரு மரபு – இங்கு அந்த வயதில்தான் வாழ்க்கையே ஆரம்பமாகிறது என்கையில் – என் ஆசைகளையெல்லாம் பெண்டாட்டிக்கென்று , பிள்ளைக்கென்று… புதைத்துக் கொண்டே வந்தவன் – திடீரென்று வாழ்க்கையில் எனக்காக நான் வாழாவிட்டால் என்ன வாழ்க்கை இது என்ற வேகம் வர – எழுத்தென்று சொல்லி, என்னவென்று கேட்க, வாவென்று சொல்ல, அந்த வழி செல்ல – திடீரென்று உள்ளிருந்த விளக்கு ஒரு பேய்த்தனத்துடன் எரிகிறது – எரிந்த விளக்குகள் மங்கிக்கொண்டே வந்தாலும் , இல்லை, இல்லை என்ற குரல்கள் – அவனுக்குத் தெரிந்தது. வீடு சூன்யமாகவில்லை; வீடு சூன்யமாவதற்கு முன் நாமே சூன்யமாகிவிடுகிறோம் – அவர் எழுதியிருந்தார் – ‘நல்ல அபிப்ராயம் சொன்னதற்கு நன்றி – என்று – அவனுக்கு மனம் குழம்பியது – அபிப்ராயம்தான் சொல்லியிருந்தான் – அதிலும் நல்லது/கெட்டது என்ற பாகுபாடு உண்டு என்பது அவனுக்கு அதைப் படித்த பின் தான் தெரிந்தது – ஒன்றும் சொல்ல முடியாது – நமது முன்னவர்கள் சொல்லவில்லையா – எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன், பராபரமே – அவனுக்குத் தோன்றியது – அழுத்தம் அந்தப் பராபரத்தில்தான் இருக்கிறது என்று – ஏன் என்றால் எவனுக்குத் தான் இன்பமாக இருக்கத் தெரிகிறது – கலை என்பதே ஆனந்தத்தைத் தருகிறது என்றால் – சிந்தித்துப் பார்க்க வேண்டும் – ஆனால் சிந்திப்பது என்பது ஒரு பழக்கமாகவில்லை என்ற நிலையில் – வீடு மாத்திரமே இருக்கிறது – எல்லாமே – கட்டில், நாற்காலி, கடிகாரம், புஸ்தகங்கள் – இப்பொழுது ஒரு சுமையாக, அழுத்துகின்றன – அம்மாதான் சொல்வாள் ‘நான் எப்பொழுதும் இருக்க மாட்டேன்டா’ என்று – அவன் ஒன்றும் சொல்லவில்லை – இன்று தோன்றுகிறது ‘நானும்தான்’ என்று சொல்லையிருக்க வேண்டும்/ சொல்லியிருக்கலாம் என்று – ஆனால் சொல்லாமல் இருந்ததுதான் சரி என்றும் – மனித மனிதனாக இருக்க முடியுமானால் – இது அய்யப்பப்பணிக்கர் தனது ஒரு பிரசித்தமான கவிதையில் எழுப்பிய கேள்வி – நடுவில் ஒரு கடிதம் – ‘நீங்கள் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கேள்விப்பட்டேன். வேதனை அதிகமாக இருந்திருக்கும். இந்த மாதிரி விபத்துக்கள் நம்மை மீறி ஏற்படும் செயல்கள். ஆனால் இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடக்கூடாது – இந்த மாதிரிச் சமயங்களில் உங்கள் நிலையில் பரிவு காட்டும் உள்ளங்கள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எல்லோருக்குமே வலிமை வேண்டியிருக்கிறது.’

நிகழ்ந்தது என்னவென்றால் அவனுக்கு ஒரு விபத்தும் நிகழவில்லை. அதை அந்தக் கடிதம் எழுதியவருக்குத் தெரிவித்தான். பின்? சொல்லப்போனால் மனிதன் மனது என்பது விசித்திரமானது என்று சொன்னால் மாத்திரம் போதாது – மிக மிக விசித்திரமானது – சுவராக, அலமாரிகளாக, புத்தகங்களாக, குப்பிகளாக, நினைவுகளாக, வீடு அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. வீடு சூன்யமாகுவதற்கு முன்பு அவன் சூன்யமாக முடியுமென்றால்? மனிதன் மனிதனாக முடியுமென்றால்.

***

நன்றி : சோபிதம் பதிப்பகம்

« Older entries