:((( நொடிகளில் கழியும் காலமிது – தாஜ்

நட்புக்கு இலக்கணமான எங்கள்  நண்பர் தாஜ் நேற்று மாலை மறைந்தார்.  நல்லடக்கம் இன்று மாலை சீர்காழியில் நடைபெறும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

*

தாஜ் மறைவு பற்றி SLM ஹனீபா|   மஜீது | சென்ஷி | ஹமீது ஜாஃபர் | பிரபா மீனாட்சி | பிரபு கங்காதரன் |  வ.ந.கிரிதரன்சு.மு. அஹமது | அனார் | ஜமாலன் | எச். பீர் முஹம்மது | களந்தை பீர் முகம்மது | நூருல் அமீன் | நாகூர் ரூமி | போகன் சங்கர் | அமுதமொழி | R. ஷாஜஹான் | ரஃபீக் சுலைமான்தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம் | ஆசிப் மீரான் | அபு ஹாஷிமாபி.கே. சிவகுமார் | ‘காலச்சுவடு’ கண்ணன் |

 

தாஜ்  குறுநாவல்கள் – காலச்சுவடு

காலச்சுவடு பதிப்பகம் வெளியீடாக, பிரியத்திற்குரிய நண்பர் தாஜ்  எழுதிய ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு ‘தங்ஙள் அமீர்’ , 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவருகிறது.

பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பீட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

வாழ்த்துகள் தாஜ்!

அட்டை வடிவமைப்பு : ரஷ்மி.

*
தாஜ் முன்னுரை :

இந்தத் தொகுப்பைப் பற்றி, வாசிக்கும் நீங்கள் சொல்லும் தருணம் இது. மேலாக நான் ஏதேனும் சொல்லனுமென்றால்…

முதலில், என் மூத்த படைப்பாளிகள் அத்தனைப் பேர்களுக்கும் இந்த முயற்சியை முன்னிறுத்தி நெகிழ்வோடு நன்றி சொல்லனும். நன்றி! குறிப்பாய் பெரியவர் தி.ஜாவுக்கும், என் மீது அன்பு பாராட்டிய சு.ரா. அவர்களுக்கும்! அந்தக் கீர்த்திகள் செப்பனிட்டப் பாதையில்தான் இப்படி ‘எழுதுகிற பேர்வழி’யென வலியில்லாமல் நடந்து இருக்கிறேன்.

இதில் காணும் ஐந்து குறுநாவல்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திக்கைப் பிடித்து பயணித்து இருப்பவை. இவற்றில் ஓரிரண்டில் எங்கள் மண்ணின்- ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட – கீழத்தஞ்சை வட்டார – இஸ்லாமிய ராவுத்தர் குடும்பங்களில் பேசுகிற – என் மனமொன்றிய வட்டார மொழியை மகிழ்ச்சியோடு பிணைத்திருக்கிறேன். இதற்கு முன் இன்னொருவர் காணாத ரசனை இதுவெனவும் கருதுகிறேன்! மற்றப்படிக்கு நான் எதிர்கொண்ட கதாபாத்திரங்களின் நிறைவின்மை அல்லது நிறைவை நீங்கள்தான் சொல்லனும்.

நவீன இலக்கியத்தினை ஒருவிதக் காதலோடு நான் ஒன்றுவதற்கு காரணமான மறைந்த என் நண்பர் கூத்தாநல்லூர் ஹாஜா அலி, நண்பர்கள் ஆபிதீன், நாகூர் ரூமி, முகம்மது சாதிக் மற்றும் என் அன்பிற்குரிய திரு. கண்ணன், அண்ணன் களந்தை பீர்முகம்மது அவர்களுக்கும் என் நன்றிகள்.

80 – களில்பஞ்சம் பிழைக்கப் போன சௌதியில், நவீன இலக்கியத்தின் மேல் காதலானேன். என் மூத்தப் படைபாளிகள் பலரின் ஆக்கங்களை அங்கே வைத்துதான் வாசித்தேன். அப்படி வாசிக்கவும், உள்வாங்கிக் கொள்ளவும் உறுதுணையாக இருந்த ‘ரஸ்தனூரா- அராம்கோ கேம்’பிற்கும் நன்றிகள்! இன்னும் நான் நன்றி சொல்லனும் என்றால் அது என் மனைவி குழந்தைகளுக்கென்றே இருக்கும். அவர்கள் எனக்கு அவ்வப்போது சுதந்திரமான ஓர் இருப்பை வழங்கியிராவிடில் இந்தத் தொகுப்பே எனக்கு சாத்தியமாகி இருக்காது.

*

நன்றி : தாஜ் (https://www.facebook.com/tajdeen.sa)

கலைஞருக்கு கவிஞர் தாஜ் அஞ்சலி

kalaignar-1wp

‘உங்க பெயர் ?’
‘தாஜுதீன்!’
‘எந்த ஊர்?’
‘சீர்காழி.’
மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க?’
‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’
கேட்டது கலைஞர். பதிலளித்தது நான்.

*
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் ஸ்டாலின் முதலாக திமுக தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கொடுமைகள் பலவும் அவர்களுக்கு அரங்கேறியது. திமுகவில் இருந்து ராஜினாமா செய்தாகணும் என்ற கண்டிப்பு வேறு! கலைஞர் குடும்ப பெண்கள் கூட எமர்ஜென்ஸியின் மிரட்டலுக்கும் – வீடு புகுந்த போலீசார்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளானார்கள் – சரியாகச் சொன்னால், சுகந்திர நாட்டுப் பிரஜைகள் அனைவரும் கொடுங்கோலை நேர்கொண்ட தருணம் அது!

திமுகவில் பலரும் பலவித இன்னல்களுக்கு ஆளாக – ஒருகட்டத்தில் ஆட்சியை இழந்தார் கலைஞர். ஆட்சியை இழந்த நிலையிலும் எமர்ஜென்ஸியை எதிர்த்தார்! சென்னை வீதிகளில் இறங்கிப் போராடினார். அவர் கொஞ்சமும் பணியவில்லை. தன் கருத்துகளைச் சொல்ல உதவும் பேனாவையும் செய்தித்தாள்களின் சுதந்திரத்தையும் எமர்ஜென்சி அரக்கம் முடக்கிவிட்ட நிலையில் அவர்தான் என்ன செய்வார்!?

என்னோடு அண்ணாமலையில் படித்த – நண்பன் செல்வராஜ் சிதம்பரத்தை சேர்ந்தவன். கலைஞர் மீது பற்றும் பாசமும் கொண்டவன். கல்லூரி பருவத்தில் – என்னோடு அரசியல் விஞ்ஞானம் ( Political Science) படித்தான் என்றாலும், கல்லூரிக்கு வெளியே பெரியாரின் தத்துவங்களை கூடுதல் பாடமாகப் படித்தவன் அவன்! பின்னே கலைஞர் மீது பாசத்திற்கு சொல்லவா வேணும்?

அன்றைக்கு ஆட்சியை இழந்து – தொண்டர்களை இழந்து – எமர்ஜென்ஸியை எதிர்த்து ஒத்தையாக போராடிக் கொண்டிருந்த கலைஞரை நேரில் பார்க்க விரும்பினான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கலைஞரை அப்படி அவன் அன்றைக்கு பார்க்காது போயிருந்தால்தான் வியப்பு!

எங்க ஊரில் கோவிந்தராஜ் என்றொரு தோழர் வெற்றிலை பாக்கு ‘ஹோல்சேல்’ வியாபாரம் செய்துவந்தவர். திமுக அனுதாபி. எமர்ஜென்ஸி காலத்தில் திருவாரூரில் ஒரு கூட்டத்திற்கு போய்விட்டுத் திரும்பிய கலைஞருக்கு, சீர்காழியில் தன் வீட்டில்வைத்து பகல் சாப்பாடு கொடுக்க விரும்பினார். கட்சி நிர்வாகிகளை அனுகி முறையான அனுமதியையும் பெற்றார். ஆக, அந்த அனுதாபி வீட்டில் பகல் சாப்பாடு. அதன்படிக்கு அவரது வீட்டில் சாப்பாட்டை முடித்த கலைஞர், கோவிந்தராஜ் வீடு சார்ந்த பக்கத்து வீதியில் திமுக கொடியையும் ஏற்றினார்.

அந்தக் கொடியேற்ற தருணம் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியை 2-10 ஆல்-இந்திய ரேடியோ அறிவித்தது. அவசரமாக கலைஞர் சென்னை புறப்பட, வெற்றிலை-பாக்குக் கடை கோவிந்த ராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டு செல்லப்பட்டார். கலைஞருக்கு பகல் சாப்பாடு ஏற்பாடு செய்த காரணத்திற்காகவே அவரை சிறைவாசம் செய்தனர். எமர்ஜென்ஸியின் செயல்பாடுகள் குறித்து ஏன்? என்று கேள்விகேட்க முடியாத நேரம் அது!

கலைஞர் தன் அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை கண்டிருக்கிறார். தலைமையேற்றும் களம் கண்டிருக்கிறார். ஆனால், எமர்ஜென்சியை எதிர்த்து அவர் நிகழ்த்திய எதிர்வினைகளும் – போராட்டங்களுமே அவர் புகழை இந்திய முழுமைக்கும் கொண்டு சேர்த்தது என்பதுதான் உண்மை.

ஆட்சியை இழந்த கலைஞர் – சென்னை வீதியில் இறங்கி – எமர்ஜென்ஸி கொடுமைகளை தெளிவுப்படுத்தும் வாசகங்கள் கொண்ட நோட்டிஸ்களை – மக்கள் மத்தியில் வீசியடித்து கோஷம் எழுப்பிப் போராடினார். அவர் அப்படி அன்றைக்கு போராடியது தினசரி சங்கதியாக சிலநாட்கள் தொடர்ந்தது.

அந்த எமர்ஜென்ஸி நிலையிலும் – துவளாமல் அப்படிப் போராடும் கலைஞரை காண என்னையும் உடன் அழைத்தான் நண்பன் செல்வராஜ். ‘சென்னை போய் ஒருதரம் கலைஞரை பார்த்து வரலாம், கூடவே ‘ஷோலே’ இந்திப் படத்தை ‘சத்திய’த்தில் கண்டுவரலாம்’ என்று கூடுதலாக அழுத்தம் தந்தான். உட்பட்டேன்.

எமர்ஜென்ஸி நேரத்தில் கலைஞரை காண்போர்கள் அனைவருமே மத்திய அரசின் போலீஸாரால் கண்காணிப்புக்கு உள்ளாகும் நிலை இருந்தது. அதனையெல்லாம் யோசிக்காது என்னை அவன் அழைத்ததும் – நான் பரபரக்க கலைஞரைக் காணப் போனதும் மறக்க முடியாத நிகழ்வு.

அந்தக் காலக்கட்டத்தில் நான் காமராஜ் பிரியன். அதனாலேயே காமராஜை எதிர்த்த இந்திராவை எனக்கு பிடிக்காது. இந்திரா கொண்டுவந்த எமர்ஜென்ஸியையும் பிடிக்காது. அதன் சர்வாதிகாரத்தனங்களையும் சேர்க்க சுத்தமாய் பிடிக்காது. காமராஜ் சார்ந்து இந்த முடிவை நான் எடுத்திருந்தேன் என்றாலும், என் சுய அறிவும் அதனைதான் சொல்லியது. ‘சுதந்திரம் இல்லாமல் மனிதன் வாழ்வதெப்படி?’

எமர்ஜென்ஸி கொடுமைகளை – இந்தியா பூராவும் நடந்த பல மூத்த அரசியல்வாதிகளின் கைதுகளை, களமிறங்கி எதிர்க்க முடியாத உடல்நல குறைவில் காமராஜ் வீட்டிலேயே முடங்கிவிட, எமர்ஜென்சியை கலைஞர் பலமாக எதிர்த்தார்! பத்திரிகை ஆசிரியர் சோ, தன் துக்ளக் வாயிலாக எமர்ஜென்ஸியை மறைமுகமாகவும் – ஆனால் – மக்களுக்கு உறைக்கும்படிக்கும் ‘சடையராய்’ எதிர்த்து எழுதினார். அதாவது, அன்றைக்கு காமராஜின் பின்புலமாக நின்றபடிக்கு – அவரது பாதுகாப்போடு சோ எழுதினார் என்றும் கொள்ளலாம்.

அன்றைய காலக்கட்டத்தில் சிறையில் அடைக்கப்படாமல் வெளியில் நின்று போராடிய மாநில முதல்வர் ஒருவர் உண்டென்றால் அது கலைஞராகதான் இருக்கும். அதுமாதிரியே சிறைபிடிக்கப்படாமல் எமர்ஜென்சியை எதிர்த்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இருந்தார் என்றால் அது துக்ளக் ‘சோ’வாகத்தான் இருக்கும்! தவிர, ஏக இந்தியாவிலும் எமர்ஜென்சியின் போது கைது செய்யப்படாத பெரிய தலைவர் ஒருவர் விளங்கினாரென்றால் அது காமராஜாகதான் இருக்கும்!

இதனை இப்படிக்கூடச் சொல்லலாம், காமராஜின் உறுதுணையால் பிரதமர் அரியாசணை ஏறிய இந்திரா, தனது எமர்ஜென்சியின் போது இந்தியா பூராவும் பல அரசியல் தலைவர்களை – மதத்தலைவர்களை கைது செய்தபோதும், தமிழகத்தில் தனது அடாவடியை அடக்கி வாசித்ததற்கு காரணம், காமராஜ் தமிழகத்தில் இருக்கிறார் என்பதினாலேயே!

இப்படியான ஓர் கால சூழலில்தான் செல்வராஜும் நானும் கலைஞரைக் காணச் சென்றோம்.

ரயிலைவிட்டு இறங்கி, காலைப்பணிகளை முடித்துக் கொண்டு – கலைஞரைக் காண நேரே கோபாலபுரம் போனோம். அங்கே வீட்டில் கலைஞர் இல்லை. அன்பாலயத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். அன்பாலயம் (இன்றைக்கு அது திமுக இளைஞர் அணி சார்ந்த அலுவலகக் கட்டிடமாக இருக்கிறது – தவிர, ‘அறிவாலயம்’ அப்போது கட்டப்படவில்லை. )

அன்பாலயத்துக்கு போனோம். உள்ளே பெரிய ஹாலிற்குள் நுழைந்த போது, ஹாலின் மறுபக்கம் நீள மேஜை போடப்பட்டிருந்தது. மேஜைக்கு அந்தப் பக்கம் கலைஞர், நெடுஞ்செழியன், பேராசிரியர் என மூவரும் உட்கார்ந்து இருந்தனர். அவர்களைக் காணவந்த கட்சிக்காரர்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராய் அவர்களை கண்டு சென்றவண்ணம் இருந்தனர். செல்வராஜும் நானும் அந்த நீளவரிசையில் போய் நின்றோம். எங்க ‘டர்ன்’ வந்தது.

எங்களுக்கு முன் நின்ற கோவையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவர் கலைஞருக்கு வணக்கம் சொன்னார்கள். அவர்களிடம் கலைஞர் நேரம் எடுத்து கொண்டு, எமர்ஜென்சி நேரத்து நள்ளிரவு கைது பற்றி கூறி நொந்து கொண்டார். நள்ளிரவில் போலீஸார் வீடுதேடிவந்து ஸ்டாலினை அடித்துத் துன்புறுத்தி கைது செய்துகொண்டு போனதையும், வீட்டில் உள்ள பெண்களை கண்டமேனிக்கு பேசி துன்புறுத்தியதையும் அவர்களிடம் விவரித்தார் கலைஞர். அந்தக் கணவனும் மனைவியும் அழாத குறையாக கண்களில் நீர் மல்க அகன்றார்கள். அடுத்து என் நண்பன் செல்வராஜ் முறை. கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்னே நகர்ந்து பிற தலைவர்களுக்கும் தன் வணக்கத்தை செய்தபடி நகர்ந்தான். இப்போது நான் நகர்ந்து வணக்கத்துடன் கலைஞர் முன் நின்றேன்.

‘உங்க பெயர்?’ ‘தாஜுதீன்!’ ‘எந்த ஊர்?’ ‘சீர்காழி.’ மெல்லிய சிரிப்போடு, ‘என்ன செய்றீங்க? என கேட்டார் கலைஞர்.’ ‘சௌதிக்கு போக இருக்கிறேன்.’ அந்நாட்டிலிருந்து எனக்கு கடிதம் ஏதேனும் எழுதும்பட்சம் நேராக என் முகவரிக்கு எழுத வேண்டாம். இங்கே என் கடிதங்கள் அத்தனையும் போலீஸால் பிரித்துப் படிக்கப்படுகிறது. நண்பர்கள் முகவரிக்கு எழுதி எனக்கு கிடைக்கச் செய்யுங்கள்’ என்று சொன்னார். தலையாட்டினேன்.

‘எமர்ஜென்சியை எதிர்த்து முரசொலியில் நீங்கள் எழுதுவதை தவறாமல் படித்துவருகிறேன். மிகச்சிறப்பாக இருக்கு. நாவலர் அப்படி எதுவும் எழுதுவதில்லையே?’ என்று கலைஞரிடன் மெல்லக் கேட்டேன். தனது கையை நாவலர் பக்கம் சுட்டிக் காட்டி, ‘இதனை அவரிடமே கேளுங்கள்’ என்றார். மீண்டும் கலைஞருக்கு வணக்கம் செய்தவனாக முன்நகர்ந்து ‘எமர்ஜென்ஸி கொடுமைகள் குறித்து மறைமுகமாகவேனும் முரசொலியில் நீங்கள் ஏதும் எழுதுவதில்லையே ஏன்?’ யென கேட்டேன். அவர் என்னை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை. கீழே குனிந்தபடிக்கு ஏதோ யோசனையில் இருந்தார்.

எமர்ஜென்சி காலக்கட்டத்தில் அதன் சிறைவாசத்திற்கும் – அதனூடான பல கொடுமைகளுக்கும் – துன்புறுத்தல்களுக்கும் பயந்து, பல மாவட்ட திமுக நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் கட்சியைவிட்டு – தங்கள் தலைவர் கலைஞரை விட்டு – வரிசை வரிசையாக அண்ணா திமுகவுக்கு சென்றுகொண்டு இருந்தனர். அந்த வரிசையில் நாவலர் நெடுஞ்செழியனும் அண்ணா திமுக-விற்கு விரைவில் போக இருக்கிறார் என்றோர் செய்தி அன்றைக்கு உலா வந்தவண்ணம் இருந்தது. நான் சென்னையில் வைத்து அவரை கண்டுவந்த சிலநாட்களில் அது மெய்யாகி அவர், அண்ணா திமுக-வென்றாகிபோனார்!

கலைஞரை அதன் பின்னர் நான் சந்தித்ததில்லை. நானும் அதற்கு முயன்றதில்லை. காமராஜ் மீது பிரியம் கொண்டவனாக ஊரில் நாட்களை அரசியலோடு நகர்த்திக் கொண்டிருந்தேன். பின்னர் 1998-ம் ஆண்டு வாக்கில் ‘சுப மங்களா’ என்கிற இலக்கிய இதழ் வழியாக, நவீன இலக்கியம் பொருட்டான கலைஞரின் நேர்காணலில் எதிரொலித்த அவரது நவீன இலக்கியப் புரிதலுக்கு – எதிராய் விமர்சனம் ஒன்று எழுதினேன். அன்றைய கலைஞரது மந்திரிசபையில் சபாநாயகராகவும், திமுகவின் இலக்கிய அணித் தலைவராகவும் இருந்த ‘தமிழ்க்குடி மகன்’ சுபமங்களாவின் அடுத்த இதழில் என் விமர்சனத்திற்கு பதில் அளித்திருந்தார். 2006 – வாக்கில் திண்ணை வலைதளத்திலும், பின்னர் ஆபிதீன் பக்கங்களிலும் இந்தச் சர்ச்சையை குறித்த என் பதிவை செய்திருக்கிறேன்.

கலைஞர், இன்றைக்கு தனது 95-வது வயதில் இயற்கையை எய்தி இருக்கிறார். அவரது பெரும்வாழ்வு மதிக்கத் தகுந்தது. ஐந்துமுறை முதல்வராகி அவர் ஆற்றிய தொண்டுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே என்றாலும், பின்தங்கிய – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் செய்த நற்காரியங்கள் அதிகம். அத்தனையும் – திராவிட சிந்தனைக் கொண்டது. பெரியார் குறிப்பிட்டு சென்ற கீழ்த்தட்டு  மக்களுக்கான நற்காரியங்கள் அவை!

அந்த நற்காரியங்களை கலைஞர் செய்தார் என்று சுலபமாக நான் சொல்லிவிட்டேன். இதனையெல்லாம் அவர் நேரம் பார்த்து சட்டம் இயற்றி மேட்டுக்குடி மக்களின் ஏச்சு பேச்சுகளை ஏற்று – அவர்களது தடைகளை தகர்த்து – கலைஞர் நடத்திக்காட்டிய சாதனைகள்!

இன்னொரு மொழியில் சொல்வோமெனில், கலைஞர் நிறைவேற்றிய கீழ்த்தட்டு மக்களுக்கான திட்டங்கள் அத்தனையும் வாழ்வியல் புரட்சி சார்ந்தது. ஏழை எளிய மக்களுக்கான நல்வாழ்வை – அவர்களுக்கு கிட்ட வேண்டிய சமநீதியை ஓர் அரசு வழங்குவதென்பது சாதாரணமானதல்ல! வெளியில் நின்று வாய் இருக்கிறது என்பதற்காக எதனையும் பேசிவிடலாம். விமர்சித்துவிடலாம். ஆனால் அரியணையில் அமர்ந்த வண்ணம் அதனையெல்லாம் செய்து முடிப்பதென்பது அத்தனை எளிதானதல்ல.

இப்படியான திராவிட சிந்தனை கொண்ட சட்டங்கள் இனி சபையேறி – அது வென்று – மக்களை சென்றடைவதும்தான் எங்கணம்? பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத மண்ணில் நாளைக்கு இதெல்லாம் சாத்தியமா? எட்டுவழிச்சாலை போட – மலைகளை உடைக்க – கனரக கான்ராக்ட் விட்டு இங்கத்திய இயற்கை செல்வத்தை அள்ளிப் போக ஆயிரம் பேர் ஆளவருவார்கள் போவார்கள். அடித்தட்டு மக்களை கைதூக்கிவிட கலைஞர் மாதிரி இன்னொரு பெரியாரின் பிள்ளை எவர்வருவார்?
*
(6:56 PM 13/8/2018)

taj-fb2

நன்றி : தாஜ்

இதுவும் ஒரு வகை மனிதாபிமானம்தான்! – தாஜ்

taj-camel-fb117.02.2018 – சனி

இது என் மலரும் நினைவுகள், இன்றைக்கு இதனை என் டைரிக் குறிப்பாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி…

பன்னிரெண்டு ஆண்டுகாலம் சௌதி அரேபியாவின் கிழக்கு கடற்கரை நகரமான் ‘டமாம்'(Dammam)மில் தொடங்கி, அதன் சுற்றுப்புற நகரங்களில் நகர்ந்து, சௌதியின் மைய நகரமும், தலைநகருமான ரியாத் (Riyadh) மற்றும் அதைத் தொட்ட நாலாப்பக்கமும் சுமார் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் அளவில் பல திக்குகளிலும் தொழில் சார்ந்து சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படியொரு வேலை!

சௌதி அரேபிய என்றால்… பெட்ரோலும், பாலைவனமும்தான்! அந்நாட்டின் பாலைவனம் ஓர் கண்கொள்ளாக் காட்சி என்பதில் இம்மியும் சந்தேகமே இல்லை! நகரத்தை விட்டு தாண்டிப் போனால்.. பார்க்கும் திக்கெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மஹா சமுத்திரம் மாதிரி மணல்கொண்டு காட்சியாக இருக்கும்! இந்தப் பாலைவனத்தை கொண்ட அந்நாட்டின் கோடைப் பருவம் குறித்து எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நீங்கள் அறிந்தபடிக்கு, தீய்க்கும் உக்கிரம் கொண்டதுதான் அது! ஆனால், அந்நாட்டின் குளிரைப்பற்றிச் சொன்னால் உங்களில் எத்தனை பேர்கள் நம்புவீர்கள் அல்லது தீரத்தெரியும் என்று தெரியவில்லை. கோடைக் காலம் மாதிரியே குளிர் காலமும் அப்படியோர் அதீதம்தான்! சில நேரம், முனிசிபல் தண்ணிர் வரும் பைப் லைன் ஐஸ்’ஆக உறைந்தும் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

சுமார் ஐந்து மாதங்கள் நீளும் குளிரில், இரண்டு மாதக் காலம் அது ஏகத்துக்கும் விசேசமாக, பெயர் சொல்லும்படிக்கு இருக்கும்! டமாம் சுற்று வட்டத்தைவிட, தலைநகர் ரியாத்தின் சுற்று வட்டத்தில்தான் குளிர்காலக் குளிரின் தாண்டவம் அதிகம்! அப் பருவம் ஆரம்பிக்கும் போதும், அது முடிகிற போதும் ஓரிரு நாட்கள் கட்டாயம் மழை பெய்யும்! சில சமயம் அது ஒருவாரம் என்கிற கணக்கில் கூட நீடிக்கும். பொதுவில் அரேபிகளுக்கு மழை ஏனோ அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அது வேறு செய்தி சார்ந்தது. ஆனால், குளிர் அப்படியல்ல. அது அவர்களுக்கு இஸ்டம். இஷ்டத்திலும் இஸ்டம்.

இங்கே, சௌதியின் தலைநகர் ரியாத் பகுதியின் குளிர் காலக் குறிப்புகளோடு, நான் கண்டதும் கேட்டதுமான ஓர் நிகழ்வை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குளிர்காலம் அதிகரிக்க அதிகரிக்க நாடே ‘ஃபிரீஜ்’ செய்யப்பட்ட நிலைகொள்ளும்! இந்தியாவில் ‘இத்தனைக் குளிர்’ என்பது நாம் காணாத ஒன்று. டெல்லி மற்றும் சுற்றுப் புறங்களில் இப்படியோர் குளிர் உண்டென கேள்விப்பட்டதுண்டு. கண்டதில்லை. வருடா வருடம் நம் தமிழகத்தில் நாம் எதிர்க்கொள்ளும் மார்கழி மாதத்தின் அதிகப்படியான குளிர் என்பது, சௌதி அரேபியா எதிர்கொள்ளும் குளிரில் நூற்றில் பத்து சதவிகிதம்தான்!

ஆட்டிப்படைக்கும் குளிருக்காக வேண்டி வருடத்தில் பல மாதங்கள் சுவிட்சர்லாந்து தேடிப் பறந்துபோகும் மேல்மட்டது அரபி ஷேக்குகளுக்கு, இந்தக் குளிரால் தன் சொந்த நாட்டை அவர்களுக்கு அநியாயத்திற்குப் பிடித்துப் போகும். நாட்டின் குளிரால்…, அரபி ஷேக்குகளிடம் ‘குஷால்’ மேவும்! முதல் காரியமாக ஊருக்கு வெளியே, ஏதேனும் ஓர் திசைப்பிடித்து நாலாப் பக்கமும் விரிந்துக் கிடக்கும் பாலவனத்தின் பெருத்த வயிற்றுக்குள் குறைந்து குறைந்து ஐம்பது கிலோ மீட்டர் அளவிலாவது உட்புகுந்து போய் அங்கே பிரமாண்ட டெண்ட்-ஐ அடிப்பார்கள்.

அப்படி நிர்மாணிக்கப்படும் டெண்ட் சகல வசதிகள் கொண்டதாக இருக்கும். மணலில் சிக்குண்டுப் போகாது விரைந்து சென்றடைய ‘ஃபோர்வீல் கியர்’ கொண்ட கார்களையே எல்லோரும் உபயோகிப்பார்கள். அது பாருங்கள், மணல் பிரதேசத்தில் கொஞ்சம் சிக்காது, அப்படியே மிதந்த நிலையில் போய் வியக்க வைப்பதாக இருக்கும்!

தண்ணீர் டாங்கர் லாரி முதலாய் உணவுப் பொருட்கள், பழ வகையறாக்கள், சேவகத்திற்கான ஆட்கள், எடுபிடிகள் உட்பட அங்கே குவிக்கப்படும். எல்லோருமே முழு நீள குளிர் காக்கும் வசதிக்கொண்ட நவீன தோலாடைகளை மேலாடைகளாக உபயோகிப்பார்கள்! கால்பாதம்வரை நீண்டிருக்கும் அந்த மேலாடையினை தரித்த ஒவ்வொருத்தவர்களும், அவர்களே அறியாது ‘லெனின்’ ஜாடை கொள்வார்கள். நிஜத்தில் அவர்கள் லெனினை அறிந்திருக்கக் கூடியவர்களும் அல்ல. அமெரிக்க நிழலில் சுகம் காண்பவர்கள். அவர்களை அமெரிக்காவின் மறைமுக அடிமைகள் என்றாலும் பெரிய தவறாகிவிடாது!

அவ்வப்போது ஷேக்கும் அவரது ராஜவிசுவாச நண்பர்களும் நகரத்திற்கு போய்வருபவர்களாக இருந்தாலும், குளிரின் மாதங்கள் முழுமையும் அவர்களின் இரவு பொழுது டெண்டில்தான் கழியும்.

டெண்ட்டிற்கு முன்புறம் பெரிய பள்ளம். பள்ளத்தைச் சுற்றி நாலாப் பக்கமும் கம்புகள் ஊன்றப்பட்டு, அதன் மேல்பாகத்தை ஒருங்கே குவித்து கட்டி இருப்பார்கள். குவிக்கப்பட்ட கம்புகளின் மையத்தில் பிணைக்கப்பட்ட கவ்வையில், அறுபட்டு மேல் தோல் நீக்கப்பட்ட ஒட்டகக் குட்டியின் மேல்புறத்தில் எண்ணையும் அவர்களுக்கு விருப்பமான மசாலா கலவைகளும் பூசப்பட்டு, கவையில் மாட்டப்பட்ட நிலையில் அது தலைகீழாகத் தொங்கும்.

பள்ளம் பூராவும் கனமான மரத்துண்டுகளின் கனல் கனிந்து கொண்டிருக்கும். பள்ளத்தை சுற்றிய வட்டம் பூராவும் விரிக்கப்பட்ட பெட்சீட்டுகளில் திண்டுகள் போடப்பட்டிருக்கும். ஆங்காங்கே, ஹுக்கா புகைக்கான கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். ஷேக்கும் அவர்களது நண்பர்களுமாக அதனில் ஒய்யாரமாக சாய்ந்தபடிக்கு அமர்ந்திருப்பார்கள். கனிந்து கொண்டிருக்கும் நெருப்பலையின் வீச்சு அவர்களை அனத்திக் கொண்டே இருக்கும். அது குளிருக்கானதோர் சமன்பாடு.

தீயில் கருகும் ஓட்டக்கறியின் கவிச்சி வாசனை அவர்களை சுகந்தப்படுத்திக் கொண்டிருக்க, தொடர்ந்து, சேவர்களால் தரப்படும் கருப்பு டீயும், கஹுவா என்னும் கருப்புக் காப்பி டிக்காஷனும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். கஹுவா என்பது காப்பிக்கொட்டையோடு சரிசமான ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைத்தப் பொடியின் முதல் டிக்காஷன்! அவரவர்களின் எதிரே உள்ள ஹுக்காவைப் புகைத்தபடிக்கு அவர்கள் மொய்மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள். அனேகமாய், எகிப்து ஹோட்டல் அறைகளில் தனியே கண்டுகளித்த பெல்லி நடன மாதுகளின் பின் அழகைப் பற்றியதாக இருக்கும்.

இப்படி தினைக்கும் அறுபட்டு தீய்த்து உண்ணத் தேர்ந்தெடுக்கப்படும் இள வயது ஒட்டகங்கள், இந்தப் பாலைவன உள்வெளிக்கு ‘மஜ்டா’ டிரக்கில் கொண்டுவருவதே வாடிக்கை. அப்படி ஒருதரம் வந்த ஒட்டகக் குட்டிகளில் ஒன்று, சீராய் இறக்கப்படும்போது, மிரண்டு துள்ளிப் பாய்ந்ததில் எக்குத்தப்பாய் கீழே விழுந்து அதன் முன்னங்கால்களில் ஒன்று முறிந்து ஊனமாகிவிட்டது. விசயம் அறிந்த மேன்மைக்குரிய அல் நவுவ்ராத் பின்அப்துல் ரஹ்மான் பின்சௌத் என்கிற அந்த ஷேக், மனம் கொள்ளா சஞ்சலம் கொள்ள, ஒட்டகத்திற்கு வைத்தியம் பார்க்க, அதற்குரிய டாக்டரை உடனடியாக வரவழைக்கிறார்! தொடர்ந்தும், அந்த ஒட்டகத்திற்கு ஷேக்கின் நேர்பார்வையிலேயே வைத்தியமும் நடந்தது!

ஒட்டகத்திற்கு கால்கட்டு போடும் போதும், மாற்றுக்கட்டு போடும் போதும், ஷேக்கே வைத்தியனுக்கு உதவியாளனாக ஒட்டகத்தை தட்டித் தடவித்தந்து தன் மனிதாபிமானத்தின் விசாலத்தை வெளிப்படுத்தியபடிக்கு இருப்பார்! இதனாலோ என்னவோ அந்த ஒட்டகக் குட்டிக்கு ஷேக்கை பிடித்துப் போய்விடுகிறது. அது பங்கிற்கு ஷேக்கை தன் மூக்கால் தொட்டு வருடி ஸ்நேக நேசத்தை வெளிப்படுத்தும்.

ஷேக்கிற்கு அந்த ஒட்டக் குட்டியை மிகவும் பிடித்து போய்விட, அதனை அறுத்துச் சுட்டு சாப்பிடுவதையும் மறந்து தன்னுடனேயே நகரத்திற்கும் கொண்டு செல்கிறார். அதற்கு ஏக வசதிகள் கொண்ட தங்குமிடத்தை ஏசி சகிதமாக ஏற்படுத்தித் தந்து, நித்தமும் அதனைப் பார்ப்பதையும் அதனோடு நேரத்தை செலவழிப்பதையும் வழக்கமாக ஆக்கிக் கொள்கிறார். வெளிநாடுகளுக்கு போய் தங்கநேரும் காலங்களில் கூட, அந்த ஒட்டக் குட்டியை தனது பிரத்தியேக விமானத்திலேயே உடன் அழைத்து செல்பவராகவும், தான் தங்கும் இருப்பிடத்தின் அருகில் அதற்கு இடவசதிகளை அமைத்துத் தருபவராகவும் அறிய வந்தேன்.

நிஜத்தில் அந்த ஒட்டகக் குட்டிக்கு கால் முறிவு ஏற்பட்டிருக்காத பட்சம், என்றைக்கோ அது அவர்களுக்கு உணவாகியிருக்கும். அதற்கு நேர்ந்த சிறியதோர் விபத்து அதன் தலைவிதியையே மாற்றிவிட்டது. தவிர, மேன்மைக்குரிய அல் நவுவ்ராத் பின்அப்துல் ரஹ்மான் பின்சௌதின் மனதில் வாழும் மனிதாபிமானத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. எதிர்மறையான இந்த மனிதாபிமானத்தை நினைக்கும் தோறும் எனக்கு வியப்பைத் தருவதாகவே இருந்து வருகிறது!

பின்குறிப்பு:

1984-ல் இருந்து 1991-வரை, நான் சௌதி ரியாத்தில் இருந்தேன். அங்கே, மன்னர் குடியிருப்புகளின் ஒண்ணரை கிலோ மீட்டர் அளவிலான பக்கம்தான் நான் தங்கி இருந்த குடியிருப்பு இருந்தது. மன்னர் வீடுகளில் எடுபிடிகளாகப் பணிபுரியும் நம்ம பக்கத்து தமிழர்கள், இந் நிகழ்வுக்கு நேரிடை சாட்சிகள். தினைக்கும் இந்தக் கூத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். இவர்களின் அழைப்பின் பேரில்
அந்த டெண்டிற்கு, இரண்டுக்கும் மேற்பட்ட முறை சென்றிருக்கிறேன். கால் ஊனமான அந்த ஒட்டகத்தையும் கண்டிருக்கிறேன்.

செளதி – இராக் போர் முடிந்த 1991 வாக்கில், உயிரோட்டமான இரண்டு கவிதைகளை தீர எழுதி பத்திரமாய் எடுத்துக் கொண்டு, தி கிரேட் கிங்டம் ஆப் சௌதி அரேபியாவுக்கு ‘மா சலாமா’ சொல்லிவிட்டு, சந்தோஷமாக ஊர் வந்துவிட்டேன். அதன்பின், மேற்சொன்ன ‘ஷேக்–ஒட்டகக் குட்டி’ சினேகிதத்தின் தொடர்ச்சியை நான் அறியேன்.

*

taj-photo-nagaichuvai

Thanks to : Tajdeen (fb)

« Older entries Newer entries »