‘வலம்புரி’ விரும்பிய ‘தக்கலை’

விழுதுகளுக்கும் எடுப்போம் விழா – ஞானபாரதி வலம்புரி ஜான்
அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச்  (1999) சிறப்பு மலரிலிருந்து, நன்றிகளுடன்

***

இவர் (தக்கலை ஹலீமா) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கவிஞராகக் கண்விழித்த இவர் பாடலாசிரியராகவும் பரிணமித்திருக்கிறார். இவரது புதுக்கவிதைகளுக்குக் கோலங்களாக நிலைத்துவிட்ட சில புள்ளிகளை மாத்திரம் உதாரணமாக எடுத்து வைக்கிறேன்.

‘சொத்தென்றும் சொர்ணமென்றும்
நட்டென்றும் நகையென்றும்,
உன் அப்பனை
நிச்சயதார்த்தத்தின் போதே
நிர்வாணமாக்கிவிட்டுக்
கல்யாண தினத்தன்று
அவன் வாங்கி வருவது
காஞ்சிப்பட்டல்ல கண்மணி
உன்
கனவுகளின் பிணம் பொதியும்
கபன் துணி’

‘இந்தத் தேசத்தின்
எல்லைக்கோடுகளைத் தாண்டி
இராணுவ ரகசியங்களைக்
கொண்டு செல்லத்
துட்டுவாங்கிய விரல்களைவிடத்
தொழுநோயாளியின்
தொலைந்துபோன விரல்கள்
மரியாதைக்குரிய மகத்துவ விரல்கள்’

‘கடத்திவரப்பட்ட
வீடியோ கேசட்டுகளில்
போனியம் குழுவினரின்
ரஸ்புடீன் பாடலை
ரசிப்பவனின் குழந்தைகளுக்கே
சரஸ்வதியின் வரங்கள்
சாத்தியமாகின்றன’

‘பிறைமுடியைத் தரித்திருக்கும் சிவபெருமான்
பிட்டுக்கு மண்சுமந்து உழைத்ததுண்டு
கறைபடியா மேரிமகன் ஏசுகூடக்
காலெமெல்லாம் மேய்த்தலையே
தொழிலாய்க் கொண்டார்
மறைவிளக்காய் வந்துதித்த மாநபியும்
மாடாடு பால்கறந்தார்
மன்பதைக்கு ஏவல் செய்தார்
ஆனால் இன்று
அரைகுறை நாம் அவ்வுழைப்பை மறந்துவிட்டோம்
கடவுளென்றும் மதமென்றும் பிரித்துப்பேசி
நம் கலைப்பூமி இந்தியாவைப் பிரிக்கப்பார்க்கும்
அடவுமுறை தெரிந்துகொண்டு புறப்படுவோம்.
அழிந்தாலும் இம்மண்ணில் அழிந்துபோவோம்.’

‘எத்தனைபேர் செத்தார் ஒரு கணக்குமில்லை
எத்தனைநாள் வாழ்ந்தார் அது புரியவில்லை
புத்தனையே கொண்டாடும் பூமி எங்கும்
போதிமரம் பிடிபோட்ட கோடாரிகள்’

‘மதம் வளர்க்கும் இறையில்லம் கட்டுதற்கு
மானுடத்தின் அஸ்திவாரம் பெயர்த்தெடுத்தால்
வரம் கொடுக்கக் கடவுளிங்கே வருகும்போது
வாழ்ந்திருப்பார் யாரிங்கே பிணங்களன்றி’

இந்தக் கவிதைகள் தாங்களாகவே நின்று கொள்ளுகிற திறம் படைத்தவை. ஆகவே இவைகளைப்பற்றி நான் ஒன்றும் எழுதி முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டில் கவிதைகளில் எல்லாம் இருக்கும். எழுதியவர் மாத்திரம் இருக்க மாட்டார். அதாவது கவிதை அவரைப் பிழிந்ததாக இருக்காது. கவிஞர் தக்கலை ஹலீமா எழுதிய கவிதைகளில் அவர் இருக்கிறார். அவரது எழுத்துக்களுக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை என்பதே அவருக்குப் பெருமை. அண்மையில் ‘அவ்வல்’ என்கிற ஒலிப்பேழையை நான்தான் வெளியிட்டேன்.

‘காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
வாசமுள்ள தாழம்பாயாம்
வண்ணவண்ண தாழம்பாயாம்
காஸிம்பீ பாய்மொடஞ்சா
கண்டசனம் வாய்பொளக்கும்
ஆயிரம் மணவறையில்
அவமொடஞ்ச பாய்விரியும்
பாய்விரிஞ்ச பறக்கத்திலே
பதினாறும் கூடிவரும்’ ##

என்று ஒரு பாடல். இதைப்பாடுகிற உதடுகளில் ஒருவகை ஈழ மின்னல் ஈரமும், இதயத்தில் ஒரு சுயமான சோகமும் உண்டாகும். சாதாரண முஸ்லிம்களின் வாழ்வுக்கோலங்களைப் படம்பிடிப்பதில் இந்தப்பாடல் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. இதைப் போலவே ‘ஸபர்’ என்கிற தலைப்பில் வருகிற பாடலில்,

சின்னச்சின்ன பிராயத்தில
சிங்கப்பூரு தேசத்தில
என்னெயிங்க தவிக்கவிட்டு
வியாபாரம் செய்யப்போன
நீங்க வருவீகளாமாட்டீகளா
ரஜூலா கப்பலிலே
தூங்க முடியாம முளிச்சிருக்கேன்
தொழுகப் பாயினிலே
காட்டுவாசா மலப்பள்ளிக்குக்
கால்கடுக்க நடந்ததுவும்
கல்லுருட்டாம் பாறையிலே
கைபிடிக்கக் கேறினதும்
வட்டப்பாற இளப்பாறி
கட்டுச்சோறு உண்டதுவும்
திட்டுத்திட்டா மனசுக்குள்ளே
தீராமப் பதிஞ்சிருக்கு

என்கிற வரிகள் கண்கள் உலர்ந்துபோன காய்களாக இருந்தாலும் உப்பு நீர்ப்பூக்களை உருவாக்கும்..

*

நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம், தக்கலை ஹலீமா

***

## ‘THE SONG “‘KAASIMBI PAAI…”‘ IS FROM THE AUDIO CASETTE ”AWWAL”‘.IT IS NOT ”MOWWAL”.AWWAL IS AN ARABIC WORD MEANS ”BEGIN OR START OR FIRST”‘.IT IS AN MUSIC ALBUM ABOUT THE CULTURE AND THE LIFE OF MIDDLE CLASS PEOPLE OF SOUTH DISTRICTS.THE “‘PAAI” MENTIONED THE POEM IS THE ONE USED DURING MARRIAGES. – Thakkalai Haleema

எட்டும் அறிவினில்…- தக்கலை ஹலீமா

முன்பு நான் ரொம்பவும் சிலாகித்திருந்த ‘காசிம்பீ பாய்முடைஞ்சா’ பாடலை எழுதியவர் கவிஞர் தக்கலை ஹலீமா என்று தெரிந்து கொண்டேன். பின்னூட்டத்தில் அந்த தகவலைச் சொல்லியவர்களுக்கு நன்றி. கூடவே அவர்கள் ஹலீமாவின் கவிதை ஒன்றையும் இணைத்திருக்கலாம். சரி, ஹலீமாவின் மின்னஞ்சலை தொடர்புகொண்டு அந்த ‘மௌவ்வல்’, மன்னிக்கவும், ‘அவ்வல்’ கேசட்டை அனுப்பச் சொன்னேன். இதுவரை பதிலில்லை. எனவே ‘காணாமல் போன ஒட்டகம்’ தொகுப்பிலிருந்து அவருடைய பாடல் ஒன்றை இங்கே பதிகிறேன். வாழ்க்கையின் வேட்கையே வாருங்கடி…!

*

எட்டும் அறிவினில்…

 தக்கலை ஹலீமா

பெண்ணுக்குள் ஞானத்தின் திறனையே வைத்தான்
அன்னை நம் ஆயிஷா சாட்சியடி
விண்ணுக்கும் சாடிய வீரத்தின் வாரிசே
விரிகின்ற ஞானத்தைத் தேடிப்படி.

அறிவினைத் தேடிட ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசம உரிமையைத் தந்தார் நபி
கறிபுளி சமையல்கள் காரியம் கிடக்கட்டும்
கைகளில் புத்தகம் ஏந்திப்படி.

‘றாபியத் துல்பஸ்ரி’ போலொரு சூரியன்
தோன்றிய துன்குலம் சொல்லிப்படி
காரியம் எல்லாமே கைகூடி வரவேண்டும்
காலத்தின் ஏக்கத்தை எண்ணிப்படி.

கல்வியில்லாத பெண் களர்நிலம் என்றானே
சொல்லிலே சூடுள்ள புரட்சிக்கவி
நெல்லிலே மணியின்றி போனால் நிலையென்ன
நிறையுமா களஞ்சியம் படித்துக்குவி.

சீனத்தில் சென்றேனும் சீர்கல்வி கற்றிட
செப்பிடும் நபிமொழி கேட்டுப்படி
வானத்துச் சூரியன் வசப்படும் நிச்சயம்
வாழ்க்கையின் வேட்கையே வாருங்கடி.

*

நன்றி : தக்கலை ஹலீமா, I.C.O. அறக்கட்டளை

*

Thakkalai Haleema’s E- Mail : thuckalayhaleema@gmail.com