கி.ரா – ஜெயகாந்தன் – பால் ரோப்ஸன்

கதைசொல்லி இதழ் 21 (ஜூன் ஆகஸ்ட் 2007) கி.ரா பக்கங்களிலிருந்து பகிர்கிறேன்…

——-

kira-anthi-wp-ab..ஜெயகாந்தனின் அறையில் இன்னொரு உலகமும் இருந்தது! நிறைய்ய இசைத்தட்டுகள் வைத்திருந்தார். அவ்வளவும் அய்ரோப்பிய சாஸ்திரிய சங்கீதம். “ஒய் பாவி மனுஷா” என்று வியந்து போனேன். இப்படி ஒன்று அவரிடம் அங்கே இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கலை நான்.

பீதோவனின் சிம்பனியைக் கேட்டிருக்கிறீர்களா என்று ஒரு இசைத்தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு கேட்கிறார்.

அவனுடைய நாமத்தைக் கேட்டிருக்கிறேன். இப்பொக் கண்ணால் பார்க்கிறேன் இந்த இசைத்தட்டை.

‘ஜெர்மானிய நாட்டின் தியாகப் பிரம்மம்’ என்று கு.அ. சொல்லுவான். ஆனால் அவனும் கேட்டதில்லை இதை.

நிலைகொள்ளவில்லை எனக்கு; அய்யோ என்று சொல்லி உட்கார்ந்து அவர் சோபா படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

ருஷ்யமொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அலக்ஸாந்தர் குப்ரீன் கதையான ‘மாணிக்கக் கங்கணம்’ தமிழில் படித்ததிலிருந்து இவனைத் தேடிக் கொண்டிருந்தேன். கேக்கணுமெ இவனை இப்பொக் கேட்கிற மனநிலை இருக்கா; தெரியலையே என்ற தவிப்பு வந்துவிட்டது.

“உலகப் பிரசித்தி பெற்ற கறுப்புப் பாடகன் பால்ரோப்ஸன் பாடலைக் கேட்டிருக்கிறார்களா?” என்று இன்னொரு இசைத்தட்டைக் காட்டிக் கேட்கிறார்.!

இத்தாலிய நாட்டின் பிரசித்தி பெற்ற வயலின் இசைநிபுணர் (பெயர் ஞாபகம் இப்பொ இல்லை) இசைத் தட்டைக் காட்டுகிறார். இன்னும் என்னவெல்லாமோ பெயர்கள்; இசைத்தட்டுகள்.

முதல்லெ பீதோவன் என்றேன்.

இசைத்தட்டு சுழல ஆரம்பித்தது.

எனது பிரக்ஞை அங்கே இல்லை. பீதோவனால் என்னைக் கட்டி இழுக்க முடியவில்லை. பயந்தபடியே ஆயிற்று!

பால்ரோப்ஸனைப் போடுங்கள்.

கண்ணாடியில் ஒட்டிக்கொண்ட பல்லியின் கால்களைப்போல என்னில் ஒட்டிக்கொண்டது அவனது குரல். கேவி அழாத ஒரு ஏக்கம் தொனித்த குரல்.

என்ன சொல்லுகிறான்?

தான் ஒரு அநாதையாய் உணர்வதாகச் சொல்கிறான்.

ஏன்?

தங்களுக்கு என்று ஒரு மண் இல்லை தங்குவதற்கு; நாடு நாடாய் அலைந்துகொண்டிருக்கிறோம் அநாதைக் குழந்தைகளாய் என்கிறான் ‘சம்டைம் அய் ·பீல்..’ எனும் அந்தப் பாடலில்.

*

*

அது அவர்களது நாடோடிப் பாடல். இந்த வகைப்பாடல்கள் மனசை அறுக்கும். இங்கே தமிழிலும் இந்த வகைப் பாடல்கள் உண்டு.

முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரித்து, இரை தேடிப்போன ஆக்காட்டிப் பறவை, தொலைந்து போன தனது குழந்தைகளை நினைத்து அழுவது போல உள்ள துயரமான பாடல் (முனைவர் கே.ஏ. குணசேகரன் பாடிக் கேட்க வேண்டும்)

பால் ரோப்ஸன் பாடிய இன்னொரு பாடல் ‘வாட்டர் பாய்‘. தண்ணீர் சுமக்கும் ஒரு கறுப்புப் பையனைப் பற்றியது. அந்தப் பையனுடைய தோற்றத்தையும் பிரியமான குணங்களையும் வர்ணித்து வர்ணித்து அப்பேர்ப்பட்ட பையன் எங்கே, அவன் உங்களுக்குத் தட்டுப்பட்டானா; பார்த்தீர்களா? என்று உருகி உருகிக் கேட்கும் அந்தப்பாடல். அந்தக் குழந்தைத் தொழிலாளி வேலையின் தாளமுடியாத சுமையினால் ஓடிப்போயிருக்கலாம். அல்லது அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.

பால்ரோப்ஸனுடைய தேன் குரலைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்தக் குரல் நம்முடைய பித்துக்குளி முருகதாசின் குரல வகையைச் சேர்ந்தது.

(பாடும்போது உள்ள பால்ரோப்ஸனுடைய குரல் பேசும்போது எப்படி இருக்கும் என்று கேட்க ஆசையாக இருந்தது. பல நாட்கள் கழித்து எனது அந்த ஆசையும் நிறைவேறியது செங்கல்பட்டில் டாக்டர் ஹரி.ஸ்ரீநிவாசன் (‘சார்வாகன்’) வீட்டில் வைத்து.)

*

நன்றி : கி.ரா, கதைசொல்லி, varadero1839

 

யாருக்காக அழுதான்? – ஜெயகாந்தன்

Thanks : MrDearkutti

உள்ளங் கையில் கஞ்சாவைத்து…

நம் ஹனிபாக்கா கொடுத்த ‘கஞ்சா’வை இப்போது கசக்குகிறேன். இந்தவயதிலும் இளமையும் குறும்பும் துள்ளுகிறது மனுசனுக்கு!

***

என் அருமை ஆப்தீனுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் .

நீண்ட நாட்களாக மெயில் அனுப்பவில்லை வாழ்வு இவ்வளவு அவசரமாகப் போனது. நாம் எல்லோரும் எங்கே போகிறோம்? எதுவுமே பிடிபடமாட்டேன்கிறது.     

சின்னவயசிலிருந்தே  சங்கீதத்திலும் பெரும் ஈடுபாடுதான்.  சுன்னத் கல்யாண வீடுகள்தான் என் அரங்கேற்றம். உள்ளுர்காரர்கள்தான் குருநாதர்கள்.

டப்லா ஹார்மோனியம் சதங்கை பளிங்கு கோப்பை  போன்றவைகள்தான். எங்களின்  ஆனானப்பட்ட கருவிகள் . கூடவே கஞ்சா ரொப்பிய சிலிம்பியும். எனதுமைத்துனர்  சிலிம்பி சுற்றுவதில்  கைதேர்ந்த கலைஞர்  அவரிடமிருந்து தான் நான் அந்தக்கலையை கற்றுக்கொண்டேன்.

பின்னாளில்  சென்னையில் நான் ஜெயகாந்தனைச் சந்தித்த போது  அவர் கையிலிருந்த சிலிம்பியின் கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. 

நான் எனது சிலிம்பி பற்றிய அனுபவங்களைச் சொன்னதும்  உடனே அவரின் உதவியாளரை கோல்டன் பீச்சுக்கு அனுப்பிதென்னை ஓலை வரவழைத்தார்.  எனதுகை வண்ணத்தில் சிலிம்பி சிரித்தது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தண்ணீர் நிரப்பிய கிளாசுக்குள் கஞ்சா நிரப்பிய சிலிம்பியை லாவகமாக வைத்து அனாயாசகமாக கஞ்சாவை இழுத்து விட்டேன்.

இருவரும் நாலு ரவுண்ட் வந்தோம்.

உடனே ஜெயகாந்தன் அவர்கள்  ஒருகவிதையே பாடிவிட்டார்.  எங்கும்பிரசுரமாகாத அந்தக்கவிதையை  ஆபிதீன் பக்கஙகளில் இறக்கி விடுகிறேன்.

உள்ளங் கையில் கஞ்சாவைத்து

உருட்டி உருட்டி கசக்கு – அங்கே

ஓடுது பார் உன்னுடைய உள்ளத்தோட அழுக்கு

கள்ளப்புலனை  நாராகச்சுருட்டி –  அந்தக்
 
காலனையும் ஓடஓட விரட்டு.

 இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றித்தான் எழுத வந்தேன். அது ஜெயகாந்தன் தலையில் முடிந்துவிட்டது!

அன்புடன் 

அனிபாக்கா  / 29.11.2010

***

கஞ்சாவில் ஒரு திருத்தம் (பிற்சேர்க்கை (30/11/2010) :

ஹனிஃபாக்கா :

ஆபிதீன்.. (நேற்று) காலையில் அனுப்பிய ஜெயகாந்தனின் கவிதை எனது ஞாபத்திலிருந்து நான் எழுதிய கவிதை. இடையில் இருபது வருடங்கள். இன்று மத்தியானம் அவர் சொல்ல சொல்ல நானெழுதிய அவரின் கவிதை இதோ.

கஞ்சா மகிமை

உள்ளங்கையிலே மருந்தை வைச்சி உருட்டி உருட்டி கசக்கு – அங்கே
ஓடுது பார் நீ இருக்கிற உலகத்தோட அழுக்கு
கள்ளப்புலனை நாரெடுத்து கயிறாகச் சுருட்டு – அதைக்
காட்டி அந்தக் காலனையும் ஓட ஓட விரட்டு

இத்துடன் வரும் ஜெயகாந்தன் புகைப்படம் 19.01.1990-இல் நான் எனது கெமராவில் பதிவு செய்தது.                 

 *

நன்றி : ஜெயகாந்தன், ஹனீபாக்கா, கஞ்சா!

பாட்டும் நானே! பாவமும் நானே!

பாவம் கய்யும்… பஹ்ரைன் பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம் ஓடியிருக்கிறார். ‘ஆக்ஸிடெண்ட்’  ஏற்பட்டுவிட்டது (அவருக்குத்தான்) . இதற்குத்தான் முன்னால் ஓடவேண்டும் என்பது!  இப்போது  ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருக்கிறார் சார். பத்துநாள் ரெஸ்ட்டாம்.  அவருக்காக பிரார்த்திக்கிறேன். கா.மு. ஷெரீஃபிற்காக ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார் –  இந்த நிலையிலும். ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுதியதாக சொன்ன ஞாபகம். இப்போது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்! மேட்டர் ரொம்ப சீரியஸ்… 

*

கா.மு. ஷெரீஃப்

பாட்டும் நானே! பாவமும் நானே!

– அப்துல் கையூம்

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது  கண்ணதாசனா அல்லது  கவி.கா.மு.ஷெரீப்பா?

இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.

இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 

‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

இப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை.

‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

வேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது? நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா?

பெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ?

கவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்?

ஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா?

கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.

இதோ அந்த பாடலின் முழு வடிவம் :

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)

பாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது. 

“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். 

இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.

பாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.

Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.

‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும்  ஒகே ஆகிவிட்டது. அதுதான்  இறைவனின் நாட்டம் போலும். 

‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.

அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.

நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
 
கா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.

கண்ணதாசனுக்கும், தி.மு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.  

வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது. 
 
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு. 

நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ!” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.

ஊஹூம்.. .. ..

***

நன்றி : அப்துல் கய்யும்

***

மேலதிக விபரங்களுக்கு பார்க்க : http://kavikamu.wordpress.com/