இறைவனின் நாட்டமும் கடவுளின் கழுதையும்

இரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி?’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே! அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால்,  எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான்  என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா?” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…

இயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.

‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கேட்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.

ஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம் மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.

***

நன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய நாள் – ஒன்றாம் தொகுதி)

***

கடவுளின் கழுதை

ஜீ.முருகன்

பரிதாபமாக நடந்து போகிறது
ஒரு கழுதை
ரத்தமும் சீழும் வடிகிற
கால்களை ஊன்றி
எல்லோருடைய பாவங்களையும்
சுமந்தபடி

நான் என் மனைவிக்கும்
நீ உன் கணவனுக்கும்
நான் என் காதலிக்கும்
நீ உன் காதலனுக்கும்
நான் உனக்கும்
நீ எனக்கும் இழைக்கும்
துரோகங்கள் அதன் முதுகில்
மூட்டையாக கனத்துச் செல்கின்றன

ரட்சிப்பற்ற காலவெளியில்
கழுதை மெல்ல நடக்கிறது
அதன் பின்னால் நடந்து போகிறான்
ஒரு நொண்டி வண்ணான்

***

நன்றி : ஜீ.முருகன், பன்முகம்

முருகனோடு கொஞ்ச நேரம்…

கொள்ளை அழகனான ‘கோவணாண்டி’ முருகன்  அல்ல இவர்.  ’கூளமாதாரி’ நாவல் எழுதிய பெருமாள்முருகனோ ’ஏழ மாதிரி’ எழுதும் நண்பர் இரா. முருகனோ அல்ல. இது ஜீ. முருகன். அதான் குறிச்சொல்லிலேயே தெரிகிறதே, சஸ்பென்ஸ் எதற்கு பாய் என்று கேட்கிறீர்களோ? சரி.   ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது!) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை.  திருவண்ணாமலையில் இருக்கும்  முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்?’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல!’ என்று பதில் வந்தது!

’ஓய், ஒம்ம அட்ரஸ் என்னா?’ என்று செய்மீரான் என்பவரைக் கேட்டதற்கு ‘செய்மீரான், நாகூர் பஸ் ஸ்டாண்ட்’ என்று அலட்டலாக பதில் சொன்னார்; அதுமாதிரி அல்லவா இருக்கிறது!

எப்படியோ , வந்து சேர்ந்தார்  முருகன். இலக்கியம் பேசினோம். அலுத்துக்கொண்டபடி ’பேஜ்மேக்கர்’  நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார். ‘இடம்’ அட்டை மட்டும் வந்திருந்தது. காட்டினேன். ‘பெரிய காஃப்கான்னு நெனைப்போ?’ என்று கிண்டல் செய்தார்.  காஃப்கா தெரியுமாம்! பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டேன். எனக்குப் பிடித்த முருகனின் கதையில் அந்தக் கடைசி பத்திகள் தேவைதானா என்று மட்டும் கேட்டேன். ‘அதுதான் ரொம்ப முக்கியம்’ என்றார். இப்போது மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். முன்பு வெப்துனியா தளத்தில் இருந்த ஞாபகம். இப்போது கீற்று தளத்தில் இருக்கிறான் ’அதிர்ஷ்டமற்ற பயணி’. டிக்கெட் எடுக்காத பயணி முருகனை மாட்டிவிடுவது பிரமாதம். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள்!

ஒரு சந்தேகம்,  http://gmuruganwritings.wordpress.com/  ஜீ.முருகன் நடத்தும்  தளம்தானா? அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா? இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே….  எதற்குக் கேட்கிறேன் என்றால்…  சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள்?’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை! இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’  இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது! இருக்கட்டும்,  இங்கேயுள்ள  ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும்  எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை!) என்பதால் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள் எல்லாரையும் – கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன். (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).

மாய யதார்த்தத்தை வலிய இழுத்து நம் மண்டைகளை சிலர் உடைக்கும்போது மிக எளிமையாகத் தாண்டும் ஜீ. முருகன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.  என்ன, பாலியல் சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் முழுதாக ( சாயும் காலம் , கறுப்பு நாய்க்குட்டி ) முருகனின் தளத்தில் இருக்கின்றன. வாசித்தால் , நிச்சயம் ’அஞ்சாம் நம்பர் கடைக்கு’ அருகில் போகலாம்!

’மரம்’ நாவல் இன்னும் நான் வாசிக்கவில்லை.

அதிர்ஷ்டமற்ற பயணி,
ஆபிதீன்

***

மேலும்…

ஜீ. முருகன் படைப்புகள் – கீற்று இணையதளம்

விளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன் – இரத்தின புகழேந்தி

ஜீ.முருகன் கதைகள் ஓர் விவாதம் (காணொளி)

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… – ஜெயமோகன்

கதை சொல்லி – ஜீ. முருகன்   / தமிழ்ஸ்டூடியோ

வனம் – சிற்றிதழ்