Jesters: The Game Changers – கொரியன் – 2019
தனது போட்டியாக வாய்ப்பு உள்ள உறவினர்கள் அனைவரையும் கொன்று ஆட்சிக்கட்டிலில் அமரும் அரசன்மீது அந்நாட்டு மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். அவன் கொலை செய்த காவியத்தை வேறு புத்தகமாக வெளியிட்டதால் அந்த புத்தகத்தை அரசு தடை செய்கிறது. ஆனாலும் ஆங்காங்கு ஒளித்து வைத்து வாசித்தும் நாடகமாய் நடத்தியும் மக்களிடையே பிரபலப்படுத்துகிறார்கள்.
நடப்பு அரசன் இழந்த பெயரை மீட்டு அவனை தேவதூதனாகக் காட்ட அவனது மந்திரிசபையினர் நாட்டுமக்களிடையே இல்லாத கதைகளை உண்மையென்று சொல்லி ஊர் முழுக்க பரப்பி வாழும் ஒரு கும்பலை தேர்ந்தெடுக்கிறது. அவர்களும் அவர்களது திறமைகளை எல்லாம் வெளிக்காட்டி கடவுள் தேர்ந்தெடுத்த அரசனாகவும், அவன் செல்லும் வழியெல்லாம் அற்புதங்கள் நிகழ்வதாகவும் கதைகளைக் கட்டி விட்டு அதை மக்களை நேரில் காணவைத்து நம்பவும் வைக்கின்றனர். ஆனால் இவர்களது செயல்களினால், மக்களின் வாழிடம் பாதிப்படைய இவர்களது உயிர்களுக்கும் ஆபத்து உண்டாகிறது.
அந்த ஆபத்திலிருந்து தப்பித்தார்களா? கொடுங்கோல் அரசன் மற்றும் அவனது மந்திரிகளின் நிலை என்ன என்பதையெல்லாம் நகைச்சுவையாய் சொல்லிச் செல்லும் திரைப்படம்.
கண்கட்டி வித்தை போல காண்பதையெல்லாம் நிஜமென்று நம்பவைத்து அதற்கு பின்னான விளையாட்டுகளை மிக சுவாரசியமாக காட்டியிருப்பதில் ஜெயித்துள்ளனர். குறிப்பாய் முடிவுக்காட்சியில் தடைசெய்யப்பட்ட புத்தகக்கதையை உயிரோட்டமாக அனைவர் முன்னிலும் நடத்தும் நாடகம் அபாரம்.
நகைச்சுவை திரைப்படமென்றாலும், நம் நாட்டில் தற்சமயம் நடக்கும் மீடியா வெளிச்சங்களை இதனுடன் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ள முடியும். மக்களின் நிராசைகளை விருப்பங்களை ஏக்கங்களை விளம்பரங்களின் மூலமாக மாத்திரம் வென்று ஆட்சியமைத்து தொடரமுடியுமென்பதற்கு நல்லதொரு உதாரணம்.
விடுபட்ட முக்கிய விசயமொன்று: படம் நகைச்சுவைக்காக பெரிதுபடுத்தப்பட்ட சம்பவங்களால் பின்னப்பட்டதென்று தோன்றலாம். ஆனால், உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. அரசனைப்பற்றிய கட்டுக்கதைகளை ஊருக்குள்உலவவிட்டு தெய்வாம்சம் பொருந்தியவனாய் மாற்றியிருக்கிறார்கள் போல. இறுதிக்காட்சியில் கொரியாவில் Joseon வம்ச அரசன் King Sejoவிற்கு புத்தர் தரிசனம்(!!) தந்த இடத்தில் போதி சத்துவாவுக்கு வைக்கப்பட்ட சிலை, எதிரிகளிடமிருந்து அரசனைக் காப்பாற்றிய பூனைகளுக்கு சிலைகள் என்று அனைத்து அதிசயங்களையும் இன்னமும் கொரியாவில் பத்திரமாய் கல்வெட்டுக்களாய் வைத்துள்ளனர் என்று கடைசி காட்சிகளில் காட்டுகிறார்கள்.
*
நன்றி : சென்ஷி