Click Image to Download :
Thanks to : சாவி பப்ளிகேஷன்ஸ் , tamilvu.org & Vasu Balaji
20/04/2010 இல் 07:52 (சாவி)
சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சிறுவயதில் படித்து ரொம்ப சிரித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தின் கதை மாதிரி இருக்கும். முழுக்க ஞாபகம் இல்லை. சும்மா அவர் பெயரை இன்று கூகிளிட்டபோது கீழ்க்கண்ட சுவாரஸ்யமான தகவல் வந்தது. எழுத்தாளர் சாவி பற்றி ராணி மைந்தன் எழுதிய புத்தகத்தின் பகுதிகள் – அப்புசாமி டாட் காமிலிருந்து. பதிகிறேன். நீங்கள் பாட்டுக்கு எதையாவது தொடர்புபடுத்திக்கொண்டு சிரிக்காதீர்கள். சீரியஸான விஷயங்களுக்கும் சிரித்தவர்கள் நீங்கள். இன்னொரு சீரியஸான விஷயம் : நாளை கவிஞர் தாஜ் கதை ஒன்று வெளியாகும்!
*
சாவி நடத்திய மல்யுத்தம்
ஒருநாள் கிங்காங்கை சாவியும் சின்ன அண்ணாமலையும் சென்னை மவுண்ட் ரோட் அம்பாஸிடர் ஹோட்டலில் – இப்போது இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி உள்ள இடம் – சந்தித்தார்கள். அன்று மாலை சென்னையில் நடக்க இருந்த நிகழ்ச்சி பற்றி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.
அதன்படி, ஐந்தாவது ரவுண்டில் தாராசிங்கை கிங்காங் வலுச்சண்டைக்கு இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். தாராசிங் ஆவேசமாக மீண்டும் மேடை ஏறி மாமிச மலை போன்ற கிங்காங்கைத் தன் இரு கைகளாலும் தலைக்கு மேலே தூக்கி மூன்று முறை தட்டாமாலை சுற்றிக் கீழே போட வேண்டும். கிங்காங் ஒன்றும் இயலாதவராக மல்லாந்து கிடப்பார். அவர் மீது தாராசிங், கம்சன் மீது கிருஷ்ணன் போலப் பாய்ந்து அமர்ந்து அவர் நெற்றில் ரத்தம் கசியும் அளவுக்கு ஓங்கி அடிக்க வேண்டும்.
கிங்காங் நெற்றியில் இயற்கையிலேயே மூன்று மடிப்புகள் உண்டு. அந்த மடிப்புகளுக்கிடையே வரிவரியாக ஆழமான மூன்று கோடுகள். அந்தக் கோடுகளை முன்கூட்டியே ரேஸர் பிளேடால் லேசாக ரத்தம் கசியும் அளவுக்குக் கீறி, பவுடர் போட்டுத் துணியால் ஒற்றி விட்டுவிடுவார் கிங்காங். சண்டை நடக்கும்போது தாராசிங், கிங்காங் நெற்றியில் பட்பட் என்று ஓங்கி அடிக்க, அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியாகும்.
அந்த ரத்தத்தை தாராசிங் தன் வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்து குறுக்கே வரும் ரெ·பரியின் – அவர் பெயர் வாங்பக்லி – பனியன் மீது அப்பிவிடுவார். ரெ·பரியின் அந்த வெள்ளை வெளேர் பனியன் மீது படிகின்ற ரத்தம் சூரிய ஒளி போன்ற இரவைப் பகலாக்கும் ‘·ப்ளட் லைட்’ வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிய, இரண்டு பேரும் உண்மையிலேயே கடும் ஆவேசத்தில் சண்டை போட்டுக் கொள்வதாகவே ரசிகப் பெருமக்கள் நம்பி விடுவார்கள்.
திட்டமிட்டபடியே அன்று மாலை ரெ·பரி பனியனில் ரத்தம் அப்பப்பட்டபோது ரசிகர்கள் நரம்புகள் முறுக்கேற கூச்சலிட்டார்கள். கிங்காங் தன் பங்கிற்கு ரெ·பரி மீது பாய்ந்து அவரது பனியனைப் பிடித்திழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அவ்வளவுதான். ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது. ”கிங்காங், பனியனையே கிழித்து விட்டார். உண்மையாகவே இது அசல் சண்டைதான்’ என்று ரசிகர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.
பனியன் விலை வெறும் எட்டு ரூபாய்தான். ஆனால் அன்று ஆன வசூலோ முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! கிங்காங் அத்துடன் விட்டுவிடவில்லை. தாராசிங்கைப் பார்த்து ‘நாளை உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சவால் சண்டைக்கு அழைத்தார். தாராசிங்கும் சவாலுக்கு ஒப்புக் கொள்ள மறுநாள் வசூல் இரண்டு மடங்கு!
இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு தினுசுமாய் ‘புதுப் புது உத்தி’களைக் கையாண்டு மக்களைப் பைத்தியமாய் அலைய வைத்தார்கள். நாளடைவில் ‘கிங்காங் – தாராசிங் சண்டை பொய்யானது; போலியானது; என்று தெரிந்தும்கூட மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அசல் சண்டை போல் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு மேலும் மேலும் குஸ்தி பார்க்கக் குவிந்தார்கள்.
தமிழ்நாட்டில் முதல் ரவுண்ட் சண்டை முடிந்தது. பின்னர் சின்ன அண்ணாமலையும் சாவியும் கிங்காங்குடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டு மீண்டும் சென்னையிலும், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் இரண்டாவது ரவுண்ட் போட்டிகளை நடத்தினார்கள். திருச்சியில் மழை வந்து வசூலைக் கெடுத்த போதிலும் மொத்தத்தில் நல்ல லாபம் கிடைத்தது.
*
நன்றி : அப்புசாமி டாட் காம்