நண்பர் முஹம்மது சஃபியின் முகநூல் பதிவிலிருந்து, நன்றியுடன்…
**
கொஞ்சம் உளவியல் தெரிந்தவர் முல்லா – சஃபி
மனமானது தாங்கமுடியாத கனமான, கசப்பான, நெருக்கடியான சம்பவங்களைச் சந்திக்கும் போது, சில தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்தி, தனக்குத்தானே அமைதி தேடிக்கொள்ளும். சமநிலையில் வைத்துக் கொள்ளும். அந்தத் தற்காப்பு உத்திகள், உளவியலில் ‘Defense Mechanisms‘ என்ற கருத்தாக்கத்தின் கீழ் சொல்லித் தரப்படும். அந்த உத்திகளில்ஆரோக்கியமானவையும் உண்டு. ஆரோக்கியமற்றவைகளும் உண்டு.
நான் இளங்கலை உளவியல் படிக்கும்போது தனிமனித அளவில் உருவாகும் அந்தத் தற்காப்பு உத்திகளை, சமூக அளவில் எதிரியைச் சாமாளிப்பதற்காக ஒரு நாடு உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புப் படைகளோடு சம்பந்தப்படுத்தி ஒரு பேராசிரியர் பேசுவார்.
‘ஒரு நாட்டுக்கான ‘எதிரி‘ உண்மையானதாக இருக்கலாம். அல்லது கற்பனையானதாக இருக்கலாம். பாதிநேரம் கற்பனையானதாகவே இருக்கும். மக்கள் நலனைக் கணக்கிலெடுக்காமல். ராணுவத் தளவாடங்களுக்காக அதிகச் செலவிட்டு குடிமக்களை வறுமைக்குள்ளாக்கி நாட்டைச் சீரழித்து குட்டிச்சுவராகுக்குவது சமூக அளவில் ஆரோக்கியமற்ற பாதுகாப்பு உத்தி. அதேபோல தனிமனித அளவில் அதீத சுயமோகமும், எதார்தத்தில் கால்பாவாமல் அதீத கனவில் கற்பனையில் சிக்கிக்கொள்ளுவதும் மனதை வறுமையாக்கிவிடும். தடம்புரட்டி பிறழ்வாக்கிவிடும். நகைச்சுவை மனதின் சுவாதீனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆரோக்கியமான முதிர்ச்சியான உத்தி‘ என்று தனிமனிதனையும் சமூகத்தையும் தொடர்புபடுத்தி அழகாக விளக்கி வகுப்பெடுப்பார் அப்பேராசிரியர்.
நகைச்சுவைக்கு தனிமனித அளவிலும், சமூக அளவிலும் பயன்பாடுண்டு. நகைக்சுவையின் பிரதிநிதியாக கதைகளில் முல்லா நஸ்ருத்தீன் நிற்கிறார். லேசில் அணுகமுடியாத கடும் கர்வியாக நடந்து கொள்ளும் முல்லா, பெரும்பாலான கதைகளில் மனிதனுக்கு சுலபத்தில் வாய்க்காத அரிதான சுய எள்ளலுக்கு தன்னையே உட்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். சிலகதைகளில் இறுகிப்போன மதிப்பீடுகளுக்கு எதிராக நிற்கிறார்.
இக்கதைகளில் முல்லா எப்படியெல்லாம் பல்டி அடித்து சேட்டைகள் செய்து தனது ‘சுயத்தைக்‘ காப்பாற்றிக் கொள்கிறார் பாருங்கள்.
முதல் கதையில் முல்லா கற்றதை இடம் பொருள் ஏவல் அறிந்து, அவ்வப்போது கழற்றி வைக்கத் தெரியாமல் அவதிப்படுகிறார். முதல் முட்டைக்கதையில் முல்லா கூமுட்டையாக இருக்கிறார். இரண்டாவது முட்டைக் கதையில் வெற்றியைக் கொக்கரிக்கும் சேவலாக இருக்கிறார். கம்பியை கடன்கொடுக்க விரும்பாத கதையில் முல்லா முல்லாவாக நிற்கிறார். வெள்ளிக்கிழமையில், வெள்ளி அல்லாத நாட்களில் முல்லா என்ன செய்து கொண்டிருப்பார் என நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசித் துணுக்கில் முல்லாவின் கற்பனை எதிரி புலி..
1.கற்றதைக் கைவிடு
சுல்தான் தங்கள் பகுதிக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்த முக்கியஸ்தர்கள் பலர் அவரைப் பார்க்க தகுந்த பரிசுகளுடன் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் முல்லா நஸ்ருத்தீனும் இருந்தார். அவருக்கு அரசவை நடைமுறைகள் எதுவும் சரிவரப் புரிபடவில்லை. ஒரு பிரதானி அவசரம் அவசரமாக முல்லாவுக்கு சுல்தான் வழமையாக என்னவெல்லாம் விசாரிப்பார் என்று சுருக்கமாகச் சொல்லிக்கொடுத்தார்
‘எவ்வளவு நாள் இங்கிருக்கிறீர்கள்? முல்லாவாக எவ்வளவு நாள் படித்தீர்கள்? போடப்படும் வரிகள் சம்பந்தப்பட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பொதுவாக மக்கள் திருப்தியாக உள்ளார்களா? என்ற கேள்விகளைச் சுல்தான் கேட்பார் என்று முல்லாவுக்குச் சொல்லப்பட்டது.
முல்லாவும் கேள்விகளுக்கான பதில்களை நன்றாகக் குருட்டு மனனம் செய்து கொண்டார்.
ஆனால் கேள்விகள் முறைமை மாறி வேறாரு வரிசைப்படி கேட்கப்பட்டன.
‘எவ்வளவு காலம் படித்தீர்கள்?‘
‘முப்பத்தைந்து வருஷம்“
அப்படியானால் உங்களது வயது என்ன?“
‘பன்னிரண்டு வருடம்’‘
‘அப்படி இருக்கவே முடியாது ! நம்மில் யார் பைத்தியம்?‘ என்று சுல்தான் கோபத்தில் கர்ஜித்தார்.
‘நாமிருவரும்தான்…மேன்மை தங்கிய சுல்தானே‘ என்றார் முல்லா.
‘என்னைப் பைத்தியம் என்று சொல்கிறாயா? உன்னை மாதிரியே?‘ என்று கோபம் குறையாமல் சுல்தான் தொடர்ந்தார்.
‘நிச்சயமாக நாம் பைத்தியங்கள்தான். ஆனால், வேறொரு வரிசையில் மேன்மை தங்கிய மாண்புமிகு சுல்தானே !‘ என்று மரியாதை குறையாமல் சொன்னார் முல்லா.
2. என்னவென்று யூகி?
ஒரு கோமாளி முல்லாவைப் பார்த்தான். அவன் பையில் ஒரு முட்டையை வைத்திருந்தான். அப்போது கோமாளி இருந்த பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார்.
கோமாளி முல்லாவிடம்‘ முல்லா, நீங்கள் யூகிப்பதில் வல்லவரா?‘ என்றான்.
‘ரொம்ப மோசமில்லை“ என்று கேள்விக்குப் பதில் சொன்னார் முல்லா.
‘அப்படியானால் என் பையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்?“ என்றான் கோமாளி.
‘ஒரு துப்புக் கொடுங்களேன். சொல்கிறேன்‘ என்று கேட்டார் முல்லா.
‘முட்டை வடிவத்திலிருக்கும். அதனுள்ளே மஞ்சளும் வெள்ளையும் இருக்கும். முட்டை மாதிரி இருக்கும்‘ என்று கிட்டத்தட்ட முட்டையின் எல்லா அடையாளங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டான் கோமாளி.
‘அப்படியானால் அது நன்றாகக் கடித்துத் தின்னக்கூடிய, இனிப்பான தின்பண்டமாகத்தான் இருக்கும்‘ என்று கேள்வி வந்த வேகத்தியே பதில் சொன்னார் முல்லா.
3.முட்டைகள்
முல்லா நஸ்ருத்தீன் தனது தேஜஸைக் கூட்டிக் கொள்ள துருக்கி பாணியிலைமைந்த ஒரு குளிப்பிடத்திற்கு அடிக்கடிச் செல்வார். ஒரு நாள் முல்லா குளிக்க போனபோது, அங்கே சில விடலைப் பையன்கள் முட்டைகளுடன் இருந்தனர்.
இளைஞர்கள் இருந்த நீராவிக் குளியலறைக்கு முல்லா வந்தவுடன் அவரைச் சீண்டிப் பார்க்கும் நோக்கத்துடன் ,‘ நம்மை கோழியாகக் கற்பனை பண்ணிக் கொள்வோம். நம்மால் முட்டை இட முடியுமா?‘ என்று முயற்சித்துப் பார்ப்போம். அப்படி முட்டை போட முடியாதவர்கள் யாரோ குளியலுக்கான காசை அவர் எல்லோர்க்கும் மொத்தமாகச் சேர்த்து தரவேண்டும்‘ என்று அந்த இளைஞர்கள் சொன்னார்கள்.
முல்லாவும் அதற்கு ஓத்துக் கொண்டார்.
அந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் முக்கிமுக்கி, சிறு முனகல் சத்தத்திற்குப் பிறகு, தன் பின்னாலிருந்து ஒரு முட்டையை எடுத்து அது நன்றாகத் தெரியும்படி உயர்த்திக் காண்பித்தார்கள்.
இளைஞர்கள் குறும்புடன் நஸ்ருத்தீன் பக்கமாகத் திரும்பி அவருடைய முட்டையைக் கேட்டனர்.
‘பல கோழிகளுக்கு மத்தியில், ஒரு சேவல் கூட இருக்காதா, என்ன?‘ என்று அவர்களிடம் பதில் கேள்வி கேட்டார் முல்லா.
4.ரொம்பக் கஷ்டமில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் துணி காயப்போடும் கம்பியை இரவல் கேட்டார்.
‘மன்னிக்கவும். நான் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதில் மாவு உலர்த்திக் கொண்டிருக்கிறேன்‘ என்றார் முல்லா.
‘உலகத்தில் யாராவது கொடிக்கம்பியில் மாவைக் காயப்போடுவார்களா?‘ என்று இரவல் கேட்டவர் திருப்பிக்கேட்டார்.
‘ஓசியில் கொடுக்க வேண்டாமென்று நினைக்கும் போது, துணி உலர்த்தும் கம்பியில் மாவை உலர்த்துவதென்பது ரொம்பக் கஷ்டமான காரியமாக இருக்காது‘ என்று பதில் சொன்னார் முல்லா.
5. வெள்ளிக்கிழமை
முல்லா நஸ்ருத்தீனும் அவர் மனைவியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுதோறும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதெனத் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். முல்லாவின் மனைவிக்கு அந்த உடன்பாடு பெரிதும் திருப்தியளித்தது.
முல்லா தன் மனைவியைப் பார்த்து, ‘அந்த உடன்பாட்டைக் குறிப்பதற்கு நமக்கிடையில் ஒரு சமிக்ஞையை உருவாக்கிக் கொள்வோம். அந்த சமிக்ஞையைப் பார்க்கும்போது என் கடமையைச் செய்ய நேரம் நெருங்குகிறது என்பதை அது எனக்கு நினைவு படுத்தும்“ என்றார்.
அதைக்கேட்டுவிட்டு,“ ஒவ்வொரு வெள்ளி இரவு வரும்போதும் உங்களை தலைப்பாகையை படுக்கையறையின் மேலிருக்கும் கம்பியின் மீது தொங்கவிடுகிறேன். அதைப் பார்த்து வெள்ளி வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளுங்கள்‘ என்று முல்லாவிடம் அவர் மனைவி சொன்னார்.
‘நல்லதாகப் போய்விட்டது. அந்த ஏற்பாடு நல்ல விஷயம். எனக்குக் கூட தோணாமல் போய்விட்டது‘ என்று பலமாக ஆமாதித்து தலையாட்டினார் முல்லா.
ஒரு நாளிரவு – அது வெள்ளி இரவு அல்ல- தாம்பத்தியத்துகாக ஏங்கிய முல்லாவின் மனைவி தான் படுக்கைக்குப் போகு முன்பு தலைப்பாகையைக் கம்பியில் தொங்கவிட்டு உள்ளே போனார்.
அதைக்கண்டு, “ மரியாதைக்குரிய மனைவியே, இன்று வெள்ளி இரவு அல்ல‘ என்று சத்தம் போட்டுக் கத்தினார் முல்லா.
‘இன்று வெள்ளி இரவுதான்“ என்று மனைவி விடாமல் பதிலுக்குக் கத்தினார்.
அதைக்கேட்டு,‘ மனைவியே, இவ்வீட்டின் போக்கை ஒன்று வெள்ளி இரவு தீர்மானிக்கட்டும். அல்லது நான் தீர்மானிக்கிறேன்‘ என்று முனகினார் முல்லா.
6. மனம்
நஸ்ருத்தீன் தன் வீட்டைச் சுற்றி ரொட்டித் துண்டுகளை வேகமாக வீசியடித்துக் கொண்டிருந்தார்.
‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முல்லா“ என்று அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவர் கேட்டார்.
‘புலிகளை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறேன்“ என்று சொன்னார் முல்லா.
“ இங்குதான் புலிகளே இல்லையே?. அவை வந்து போன தடயங்களையும் காண முடியவில்லையே?“ என்றார் கேள்வி கேட்டவர்.
“ ஆஹா ! அப்படியா ! எனது செயலால் புலிகள் பயந்து ஓடி விட்டன போலிருக்கிறது. எனது செயல்முறை சிறப்பாகச் செயல்படுகிறது, இல்லையா, நண்பரே?‘ என்றார் முல்லா.
*
Thanks to : Mohamed Safi
*
Related Links :
Inimitable Mulla Nasrudin – Idries Shah
சூஃபியின் மிதியடி – சஃபி