கல்கியின் ‘சங்கீத யோகம்’ பற்றி க.நா.சு

ka.na.su-by-adimoolamநான் செவிடன். அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச்செவிடு, கால்செவிடு கூட இல்லை; முழுச் செவிடுதான், ‘அப்படியிருந்தும் கல்கியின் தமிழ் இசை விவாதக் கச்சேரிகளை – அதாவது அது பற்றிய கட்டுரைகளை – என்னால் படித்து வெகுவாக ரஸிக்க முடிகிறது. சங்கீத யோகம் என்கிற இந்தப் புஸ்தகத்தில் தமிழிசை இயக்கத்தைப்பற்றி கல்கி எழுதிய கட்டுரைகள் பலவும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. பதினைந்து பதினாறு வருஷங்களுக்கு முன் தொடங்கி, ஒரு நாலைந்து வருஷங்கள் தமிழனின் தினசரிப் பேச்சிலும் வாழ்க்கையிலும் அடிபட்ட விஷயம் இது. கல்கியின் எழுத்தின் சிறந்த அம்சங்கள் பலவற்றிற்கும் உதாரணமாக அந்தக் காலத்து ‘எரியும் பிரச்சினை’க் கட்டுரைகள் உதவுகின்றன.

ஆசிரியர் முகவுரையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறார். ‘சங்கீத யோகம்‘ முதலிய தமிழிசை இயக்கக் கட்டுரைகளை ஒரு புஸ்தகமாகப் போட்டால் என்ன?’ என்று சின்ன அண்ணாமலை ஒரு போடு போட்டார்.

‘போட்டால் என்ன? போடலாம்! அதனால் பூகம்பமோ யுகப் புரட்சியோ ஏற்பட்டுவிடாது. ஆனால் எதற்காகப் போடவேண்டும்?’ என்று கேட்டேன்.

‘உலகப் புரட்சியையும் உலக மகா யுத்தத்தையும் தடுப்பதற்காகத்தான்’ என்று சொன்னார் சின்ன அண்ணாமலை.

‘சங்கீத யோகத்துக்கும் உலகப் புரட்சிக்கும்  என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன்.

‘அது என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அச்சகத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போனால் அவர்கள் ஸ்டிரைக் செய்வார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கும் பெருகும்; உலகப் புரட்சி ஏற்படும்; ருஷ்யாவின் தலையின் அணுகுண்டைப் போடுவார்கள்; மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பமாகும். இதையெல்லாம் தடுப்பதற்காகத்தான் சொல்கிறேன். சங்கீத யோகத்தைப் புத்தகமாகப் போட்டால் அச்சகத் தொழிலாளிகள் சிலருக்கு வேலை கிடைக்குமல்லவா? அதனால் அவர்கள் ஸ்டிரைக்செய்யாமல் இருப்பார்கள் அல்லவா? அதன்மூலம் உலகப்புரட்சி ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லவா?’ என்றார் சின்ன அண்ணாமலை.

‘ரொம்பசரி; அப்படியானால் அவசியம் சங்கீத யோகத்தைப் போடுங்கள்! உலகப் புரட்சியின் தலையிலேயே அதைப் போட்டுவிடுங்கள்’ என்றேன்.

‘எந்த நல்ல இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வேகம் கொடுப்பது, அதற்கு ஏற்படும், எதிர்ப்புகள்தான்’ என்று ஒரு இடத்தில் கூறுகிறார் கல்கி. அந்த எதிர்ப்புகளைச் சமாளித்து விவாதம் செய்து தன் கட்சியை நிலைநாட்டும் வன்மை பெற்றவர் கல்கி. அவர் எழுத்திலே
உள்ள தெளிவும் வேகமும் இந்த விவாதக் கட்டுரைகளிலே தொனிக்கின்றன. ஒரு விஷயத்தை நேராக சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கிண்டல்செய்து, தன் கட்சியை, அதாவது எழுத்தளவிலாவது நிலைநிறுத்தும் சக்தி கல்கிக்கு ஏராளமாக இருந்தது.ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களில் தமிழ்நாட்டில் எழுந்த எந்த இயக்கத்திலும் கல்கிக்குப் பங்குண்டு. அவர் இந்தமாதிரி இயக்கங்களில் எடுத்துக்கொண்ட பங்குதான் அவரைத் தமிழனுக்கு அறிமுகம் செய்து வைத்தது என்று சொல்ல வேண்டும். இந்த வகையில் கவனிக்கும்போது கல்கியின் சங்கீத யோகத்துக்கு அவருடைய எழுத்துக்களிலே ஒரு தனி மதிப்புண்டு.

…. … ….

கல்கியின் எழுத்து வன்மைக்கு இதோ (இன்னொரு) உதாரணம்.  kalki“சென்னை நகரில் சமூக வாழ்க்கையின் டிசம்பர் கடைசியில் நடக்கும் சங்கீதவிழாக்கள் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்கின்றன. இந்த விழாக்களை திறந்துவைப்பதற்குச் சங்கீதம் தெரியாத பிரமுகர்களை ஒவ்வொரு வருஷமும் அழைப்பதும் வழக்கமாயிருந்து வருகிறது. இந்தத் திறப்புவிழக்களை நடத்துகிறவர்கள் சாதாரணமாக, எனக்கு சங்கீதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவையடக்கம் சொல்லிக்கொண்டுதான் ஆரம்பிக்கிற வழக்கம். ஆனால் இந்த வருஷம்.. விழாவைத் திறந்துவைத்த…போல் அவ்வளவு அழகாக யாருமே தங்கள் பிரசங்கத்தை ஆரம்பித்ததில்லை. முதல் வாக்கியத்திலேயே இவர் தம்மை ‘இக்னாரமஸ்’ என்று தெரிவித்துக்கொண்டார். ‘இக்னாரமஸ்’ என்னும் அழகிய கம்பீரமான வார்த்தைக்குத் தமிழில் சரியான பிரதி பதம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்த சில நண்பர்களைக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ‘அஞ்ஞான இருட்குன்று’, ‘மௌடீகமலை’, ‘மடசாம்பிராணி’ முதலில் சொற்றொடடர்களை கூறினார்களே தவிர, ‘இக்னாரமஸ்’ என்பதைப் போல் கம்பீரமான தனிப்பதம் ஒன்றைக் குறிப்பிட முடியவில்லை’ என்று தொடங்கி விழாவைத் துவக்கிவைத்த பெரிய மனிதர் உண்மையிலேயே இக்னாரமஸ்தான் என்று நிரூபிக்கிறார் கல்கி! படித்து அனுபவிக்க வேண்டிய எழுத்துத்தான் இது. –

க.நா.சு

**

மேலும் வாசிக்க க.நா.சு எழுதிய ‘படித்திருக்கிறீர்களா?’வை தேடுங்கள். 1957ல் ‘அமுதநிலையம்’ வெளியிட்ட நூல் (விலை ரூ 2 – 75).  இதே கட்டுரையில் சங்கீத உலகில் எத்தனையோ சாஹித்திய கர்த்தாக்கள் இருந்திருக்கும்போது தியாகராஜ ஸ்வாமிகளிடம் மட்டும் வித்துவான்களுக்கு இவ்வளவு பக்தி சிரத்தை ஏன்?  அவருடைய ஆராதனை உற்சவத்தில் இவ்வளவு ஊக்கம் ஏன் காட்டுகிறார்கள்? என்பதற்கு கல்கி அளிக்கும் சூப்பரான விளக்கம் இருக்கிறது. தியாகராஜஸ்வாமிகளின் கீர்த்தனைகளைத்தான் ரொம்ப அதிகமாக வித்துவான்கள் சின்னாபின்னப்படுத்துகிறார்களாம். அதற்குப் பரிகாரமாக திருவையாற்றில் ஸ்வாமிகளின் சமாதிக்கு உற்சவம்!

முதன்முதலாக  தமிழ்நாட்டில் பணம்கொடுத்து (தமிழிசையில்) பாட்டுகேட்டவர் சாட்சாத் பரமசிவனேதான் என்ற தகவல் சொல்வதும் கல்கிதான்.

கல்கியின் கிண்டலை எடுத்துச் சொல்வது  இருக்கட்டும், ஒருவரைப் பாராட்டும்போது கனகச்சிதமாக ஓரிரு வாக்கியங்களில் அழகாகச் சொல்லும் கலை க.நா.சுவுக்கு மட்டுமே சொந்தம்போல. ஏ.கே.செட்டியாரைப் பற்றிச் சொல்லும்போது ‘உலகம் பூராவையும் சுற்றிவந்த செட்டியாருக்கு எல்லா இடங்களையும் பற்றி 96 பக்கங்கள் மட்டும்தான் எழுத முடிந்தது; இதுவே ஒரு பாராட்ட வேண்டிய விசயம்’ என்கிறார். நாகூர் பற்றியே நாலாயிரம் பக்கங்கள் உளறும் ‘அஞ்ஞான இருட்குன்று’ ஆபிதீன்கள் கவனிக்கவேண்டிய செய்தி.

தி.ஜ. ரங்கநாதானின் ‘பொழுதுபோக்கு’ என்ற நூலில் தூக்கமருந்து என்றொரு கட்டுரையாம். சீரியஸான இலக்கியப் பத்திரிகையைப் படித்தால் காலே நிமிஷத்தில் தூக்கம் வந்துவிடும் என்று சொல்கிற தி.ஜ.ராவை ‘பொழுதுபோக்கு’ம் நல்ல தூக்கத்திற்கு உத்தரவாதம் என்று வெடைக்கிறார் க.நா.சு.  குசும்பு புடிச்ச நம்ம பாட்டையாவின் மாமனாராயிற்றே!

புதுமைப்பித்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா., பற்றி க.நா.சு  எழுதியவற்றை (மீண்டும்) படித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவி  ‘அய்யா’ ஏற்படுத்தியிருக்கும் கலவரங்களிலிருந்தும் அழகி அஸ்மாவின் புடுங்கல்களிலிருந்தும்  தப்பிக்க இதுவே அழகிய வழி. ‘அன்பு வழி‘யும் கூட.

இலக்கியம் நீடூழி வாழ்க!

***

குறிப்பு ; க.நா.சு கோட்டோவியம் : ஆதிமூலம் ; கல்கி ஓவியம் : ம.செ

***

தொடர்புடையவை :

உ யி ல் -க. நா. சு. கவிதைகள்

கல்கியின் படைப்புகள்  : http://www.chennailibrary.com/kalki/kalki.html

பாரதிமணி ஐயாவுக்கு ஒரு பூச்செண்டு

எங்களின் ’எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் தெரிவித்தேன் இப்படி :

என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஹனீபாக்கா அவர்களிடமிருந்து இன்று வந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார் : ’க.நாசுவின் மருமகன் பாரதிமணியின் கட்டுரைகளோடு (உனக்கு) பரிச்சயமா? மனிசன் தன்னுடைய டில்லி வாழ்வின் கோலங்களை ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கின்றார். உயிர்மையில் வெளிவந்த கட்டுரைகள் இப்பொழுது நூல் வடிவில் வந்திரு்க்கின்றது’

அந்த குசும்பு புடிச்ச மனுசனோடு பழக்கமில்லை என்று சொல்லலாம் என்று இருக்கிறேன்.

***

’பாட்டையா’ என்று நண்பர் சுகாவால் பிரியமாக அழைக்கப்படும் பாரதிமணி சாரிடமிருந்து உடன் மெயில் வந்தது :

அன்புள்ள ஆபிதீன்:

எனக்கும் அந்தாளெ சுத்தமா பிடிக்காது, பாத்துக்கோ! கெளட்டு மனுசனுக்கு தலயிலருந்து காலு வரெ நாஞ்சில் குசும்பு! சும்மாவே கெடக்கமாட்டங்கான். அந்தாளு எளுதினதிலெ இது புதிசு. படிச்சிட்டியா? தாஜுக்கு அனுப்பிக்கொடுத்தேன்.
சுட்டி இங்கே :  எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. — பாரதி மணி

***

மேலுயுள்ள சுட்டியை அழுத்திப் படியுங்கள். கட்டுரைக்கு அவரே கொடுத்த கமெண்ட் எப்படி? மஹா குசும்பு புடிச்சவர், இல்லையா? அது போகட்டும், ’என்னடா இது…  தாத்தாக்களுடன் நம்ம சகவாசம் ஜாஸ்தியாயிடிச்சே..’ என்று முணுமுணுத்துக்கொண்டே முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். சரிதான்….!

***

மேலும்…

அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! – பாரதி மணி

பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி : தாஜ்

பல நேரங்களில் பல மனிதர்கள் – ஸிந்துஜாவின் விமர்சனம்

***

நன்றி : பாரதிமணி ஐயா | bharatimani90@gmail.com

ஸ்… ஆ… ஓ…! – ‘கநாசு’ தாஜ் கவிதைகள்

அன்புடன்….

நவீன இலக்கியத்தின் ஆதர்ச புருஷர்களில் ஒருவரான மறைந்த க.நா.சு.வைப் பற்றியும்/ அவரது கவிதை திறனைப் பற்றியும் சென்ற வாரத்தில் ‘ஆபிதீன் பக்கங்களில்’ கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில், அவரது ‘உயில்’ கவிதையை பிரசுரித்து அது எனக்கு இஷ்டமான கவிதை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். அந்த ‘உயில்’  கவிதையின் முடிவில் ‘என் பெயரை யாருக்கு இஷ்டமோ அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’ என்று க.நா.சு.எழுதியிருந்ததை  சுட்டி, ‘நான் ரெடி! அவரது பெயரை எடுத்துக் கொள்வதில்  எனக்கு  இரட்டை  சந்தோஷம்!  அவரது உறவுகளும் சம்மதித்தால் அந்த மஹா கலைஞனின் பெயரை எடுத்துக் கொள்ள கசக்குமா என்ன?’ என்று என் பேராவலையும் வெளிப்படுத்தி இருந்தேன்.

க.நா.சு.வின் மருமகனும்/ மஹா நாடக கலைஞனும்/ தற்போது தமிழ்த் திரைப்படத்தில் தோன்றும் நடிகருமான/ ப்ரியத்திற்குரிய திரு.பாரதி மணி அவர்கள், அந்தக் கட்டுரையை வாசித்த நாழிக்கு என்னை டெலிபோனில் அழைத்து ‘க.நா.சு.வின் பெயரை நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கோ/ என குடும்பத்தில் வேறு யாருக்கோ எந்த  ஒரு தடையுமில்லை’யென  முழு சம்மதம் சொன்னார்.

எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. என்னால் அப்போதைக்கு முடிந்தது, அந்த மகிழ்ச்சியை அப்படியே வெளிக்காட்டவும்/ நன்றி சொல்ல மட்டும்தான். அவர்  நெகிழ, அதை அழுந்தமாகவே செய்தேன்.

இன்று தொட்டு நான் எழுதும் கவிதைகள்/ பிற்காலத்தில் வர இருக்கிற என் கவிதைத் தொகுப்புகள்/ என் கட்டுரைகள்/ விமர்சனக் கட்டுரைகள் முதலானவற்றில்  என்  பெயரை  ‘கநாசு’ தாஜ்  என்றே குறிப்பிடுவேன். இங்கே அதை பிரகடனமாகவே செய்கிறேன்.

க.நா.சு.வின் குடும்பத்தார்களுக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்.

*

சென்ற பதிவில் க.நா.சு.வின் கவிதைகளைத் தந்திருந்தபோது, கவிதை வாசிப்பை, ரசனைக்கொண்டதாக மாற்றிக்கொள்ள குறிப்புகள் வைத்திருந்தேன். இந்தக் கவிதை பதிவில், ஓர் ஆங்கில கவிதை ஒன்றை திரு.சுந்தரராமசாமி வாசித்து ரசித்ததைப் பற்றிய குறிப்பை வைக்கிறேன். ஜெயமோகன் தனது பதிவொன்றில்  அது குறித்து குறிப்பிட்டிருந்ததை அவருக்கான  நன்றியோடு இங்கே எடுத்து ஆள்கிறேன். ஜெ.மோ….. நன்றி.

கீழே உள்ள ஆங்கில கவிதை ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’டுக்கு சொந்தமானது!  கீழே….  இன்னும் கீழே…  உள்ள தமிழ்க் கவிதைகள் ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’ கவிதைகளோ/ சுந்தர ராமசாமி படித்து ரசித்தக் கவிதைகளோ கிடையாது. அந்தக் கவிதைகள் என்னுடையது. உங்களுக்காக…  உங்களது  கவிதை  ரசனைக்காக உங்கள் முன் வைக்க விரும்பி எழுதிய புத்தம் புதிய புதுக் கவிதைகள்!

//

Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.

Robert Frost

– நான் படித்து முடித்தேன்.  மீண்டும் படிக்கச் சொன்னார்.  அவருக்கு கவிதையைக் காதால் கேட்டால் ஏறாது. தானே வாங்கிக் கண்ணாடி போட்டு மீண்டும் படித்தார். கவிதை படிக்கும் சுந்தர ராமசாமி ஒரு அபூர்வமான ஓவியம் போல, முதன் முதலாக ஆனா ஆவன்னா எழுதும் குழந்தையின் அதிதீவிரம், கண்டடைதலின் பரவசம், மூடிவைத்து என்னைப் பார்த்து மென்மையாகப் புன்னகை செய்தார். காற்றில் வரைந்தார். உதட்டை அழுத்தியபடி ‘ஆமாம் அது சரிதான்’ என்பதுபோல தலையாட்டினார். பெருமூச்சுடன் ‘என்னமா எழுதியிருக்கார்…. இல்லையா?’ என்றார். ‘பார்த்தா ரொம்ப சாதாரணமான கருத்து. சாதாரணம்னா மதிப்பில்லாததுன்னு அர்த்தமில்லை. பெரிய மகத்தான விஷயங்களுக்கெல்லாம் ஒருமாதிரி freshness இருக்குமே… அது மாதிரி….. ஆத்துத் தண்ணி மாதிரி, காத்து மாதிரி அவ்வளவு நேச்சுரலான ஒரு உண்மை…. ஆனா அதை எவ்ளவு அழகான வார்த்தைகளில் சொல்றார் பாருங்க…..  Nature’s first green is gold. அவ்வளவே போதும். அருமையான கவிதை ஆயிடுது. ஒரு மந்திரம் மாதிரி ஆயிடுது. கூடவே கடைசி வரியையும் சேத்துண்டா போறும்.  Nothing  gold  can stay…. பெரிய வேதமந்திரங்களுக்குச் சமம். குரு சிஷ்யனுக்கு வாழ்நாள் முழுக்க சொல்ல வேண்டிய மந்திரமா உபதேசம் பண்ணிடலாம்…..’ அவ்வரிகள் வழியாக அவர் நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்வது தெரிந்தது. // 

– ஜெயமோகன் (நினைவின் நதியில்/ Page: 196 & 197)

மீண்டும் நன்றி…. ஜெ.மோ! 

தாஜ் / 05th Sep – 2010   

***

‘கநாசு’ தாஜ் கவிதைகள் :

ஸ்… …

பார்த்துப் பார்த்து பாய்ச்சலாய்
எனக்கு நான் கட்டிய கட்டிடம்
வடிவம் கொண்ட நுழைவாயில்
பார்வை படுமிடமெல்லாமும்
கண்கள் மலரும் நேர்த்திகள்
அடியெடுத்து வைக்குமிடமோ
பாதம் நோகாத பளிங்குத் தரை!
வெவ்வேறு புழக்கத்திற்கு
அடுத்தடுத்து அறைகள்!
அமர்ந்து பேச கூடி உண்ண
விசாலமான கூடம்!
அங்கே தவழ்ந்த தென்றலில்
கால நதி பிரிந்தோடிய
கவனம் விட்டு சாகச 
இயற்கை எழுத்தை
படிக்கவும் மறந்தேன்.

காற்று வரும்
சன்னல் கம்பிகளில் தொடங்கி
அழகாண்ட அத்தனையிலும் துரு!
நுழைவாய் வண்ணம் சிதைய
நேர்த்திகள் சிதில மயம்!
கால் வைக்குமிடமெல்லாம்
வழுக்கின அழுக்கு!
சமையல் அறை கரிப்புகை
படுக்கை அறை வெட்கை
பிற அறைகளில் கருகிய நெடி!
கூடம் மாற்றமற வீட்டுக்
குரலில் சுருதியில்லை!
தேடி ரசித்து வாங்கிய
கட்டிலும் சோபாவும்
சோபித்த கணத்தின் கனவில்
பின்னல் தொட்டில்
அந்தரத்தில் தொங்குகிறது!
பளிச்சிட்ட விளக்குகள் தடுமாற
இசை கொப்பளித்த சாதனம்
இடம் விட்டு மாதங்கள் ஆகிறது.
தோட்டம் கொள்ளாப் பூச்செடிகள்
இருந்ததும் பூத்ததும்
நினைவில் அசைகிறது.
கொல்லைப்புற பெருத்த மரங்கள்
காய்த்து நிழல் காத்ததை 
ஒரு போதும் மறக்க இயலாது
கடந்த திங்கள்தான் காசானது!

***

அ…… !

கருத்த மேகங்கள் கிழிபட
ஒளி பரவும் கவிதை வானைக்
கண்டுகொள்ள
இறக்கை நோகப்
பறந்த போதும்
சில சிட்டுக்கள்
இன்னும் உயரத்தில்
சாகசப் பறவைகளாய்
களிக் கூச்சலிட விரைகின்றன!

***

ஆ….

வலியின் அலறல் நம் செவிக்குள்
குத்துயிரும் குலையுயிருமாக
கிடக்கிறது நிலமும் மொழியும்!
எல்லா அரசியல்வாதிகளின் கையிலும்
இரத்தம் சொட்ட கட்டாரிகள்!
ஒருவரை ஒருவர் வீசியெறிந்துக் கொல்ல
கைகளில் எடுத்த ஆயுதம்தான் அது!

***

ஓ….

கூர்மையான நகங்கள்
வெட்ட வெட்ட முளைக்கிறது
கோரைப்பல் விழுந்த இடத்தில்
பொய்ப்பல் பொருந்தி கொண்டது
நாக்கின் கூர்மை
எதிராளியின் முகத்தில் பார்க்கிறேன்
வேகம் காட்டிய விபத்தில்
முறிந்த எலும்பும் ஒட்டிக் கொள்ள
மங்கிய முகக்கோரம் ஜொலிக்கிறது.
ஓயாத மிருகம் மூளையில் மேய
விட்டு விடுதலையேது!

***


காந்தி தேசத்தில்
பீறிட்ட மஹாத்மா குருதியோடு
ஜனநாயக வரிகள்
உறைந்துவிட இன்றும்
ஆயுத எழுத்தால்
தீர்ப்பு எழுதுகிறார்கள்
எல்லோரும்.

***

நன்றி : ‘கநாசு’ தாஜ் | satajdeen@gmail.com

க வ ன ம் : க. நா. சு. – தாஜ்

புதுக் கவிதைக்கு, புதுக்கவிதை என்று பெயரிட்டவர் க.நா.சு.! பாரதி காலத்தில் ‘வசன கவிதை’யென அறியப்பட்ட கவிதை வடிவத்திற்கு பட்டுத் தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர் க.நா.சு.! நவீன இலக்கியத்தின் மாட்சிமைகளை தமிழ் இலக்கிய உலகுக்கு இவரை விஞ்சி எவரும் சொன்னதில்லை! தன் வாழ்வை நவீன இலக்கியம் பொருட்டு அழித்து  கொண்டவர்க ளில் இவர் முதன்மையானவர்! சரியாகச் சொன்னால், வெறும் வாழ்வை மட்டுமல்ல தனது பூர்வீகச் சொத்துகளையும் இழந்தவர். இன்னும் கூடுதலாக தன் மனைவியின் சொத்துமெனக் கேள்வி. கவிதைக்கென்றும்/ நாவலுக்கு என்றும்/ மொழி மாற்ற நாவலகளுக்கென்றும் புத்தகங்கள் பல பிரசுரித்து, பிரசுரித்தே….  இல்லாமல் ஆனார் என்பது சோகமென்றால், அந்தப் புத்தகங்களை கொள்வார்கள் யாருமில்லாமல் போனது ஜீரணிக்க இயலாத சோகம்.  

க.நா.சு. வை எனக்குப் பிடிக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் பிடித்த சில பெருசுகளில் அவரும் ஒருவர். இலக்கியம் குறித்த அவரது உலகலாவிய வியாபாகமும்/ அதனின் உன்னதங்களை அவர் தொட்டுக் காட்டிய பாங்கும்/ தயவு தாட்க்ஷண்ணியமற்ற அவரது இலக்கிய விமர்சனங்களும் குறிப்பிடத் தகுந்த சிறப்புகள். நீங்கள், நவீனத்தின் அழகியலைக் காண விரும்புகிறது  உண்மையானால்/ அதன் நுட்பத்தை கண்டுத் தெளிய ஆசைப் படுவதும் நிஜமானால்/ உலக – இந்திய அளவிலான இலக்கியப் பரிச்சியம் குறித்த அடிப்படை  தகவல்கள் தேவைதானென உள்ளப்படியே நீங்கள் உந்தப் படுவீர்களேயானால், கட்டாயம் நீங்கள் க.நா.சு. என்கிற க.நா.சுப்ரமணியத்தின் எழுத்துகளை அள்ளி அணைத்து கொள்ளாமல் இயலாது. அத்தனைக்கு அவர் எழுதியிருக்கிறார்! கட்டுரை கட்டுரையாக அவர் இலக்கிய ஆவலர்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார்.

இலக்கியம் என்கிற பெயரில், இன்றைய எழுத்து வியாபாரிகள் கடைத் திறந்து வைத்து கொண்டு, வாசகர்களுக்கு ஈ-மெயிலில் கடிதம் எழுதி கொண்டு அல்லது பதில் எழுதி கொண்டு, அதனூடே தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு, தங்களது அதீத எழுத்துக்களின் வியாபாரத்தை விருத்தியாக்கிக் கொள்கிறார்கள். இன்றைய ஆரம்பகால வாசகர்கள் எல்லாவற்றையும் வெள்ளாந்தியாய் நம்பி, அவர்களின் குழம்பிய குட்டையில் ஆர்வமாய் இறங்கி – பின்னர் தவிக்கவும் தவிக்கிறார்கள்.

இலக்கிய ரசனையை கண்டுக் கொள்வதென்பது நீண்ட நெடுநாள் பயிற்சி! தேடித்தான் அடையணும்! மந்திரத்தில் மாங்காயையோ/ மாங்கன்றையோ வரவழைத்துக் காட்டுபவர்களிடம் ஏமாந்துவிடக் கூடாது. தேடுங்கள்… தேடுங்கள்…. இன்னும் இன்னுமென்றுத் தேடுங்கள்.

புத்தகம் புத்தகமாக வாசித்தப்படியே தேடுங்கள். உன்னதமான எழுத்துக்கள் உங்கள் கைகளில் வந்து அமரும்வரை/ உங்களது அனுபவச் சிந்தனை அதனை கண்டுக் கொள்கிறவரை தேடுங்கள். உன்னதத்தைக் உறுக்கித்தரும் எழுத்துக்களுக்கு தமிழில் பஞ்சமில்லை! சலசலப்பில் மயங்கித் தேங்கிவிடாதீர்கள். நம்பித் தேடுங்கள். தட்டுங்கள் திறக்கும். அப்படி நீங்கள் தேடத் துவங்கும் போது க.நா.சு.வை சந்திக்காமல் இருக்க முடியாது. சரியான வழிகாட்டியாகவும் அவரே முன் நிற்பார்.   

க.நா.சு.வின் புதுக்கவிதைகள், ஆரம்பக்கால புதுக் கவிதைகளின் அடையாளம் கொண்டவை. மேற்கத்திய கவிகள் பலரை அவர் வியந்து வாசித்து, அதைத் ஒட்டி தமிழில் புதுக்கவிதைகள் படைத்தவர். அவர் குறிப்பிட்டு இருக்கிறபடிக்கு, ஷெல்லி/ கீட்ஸ்/ வால்ட் விட்மன்/ டி.எஸ். எலியட்/ பாடலேர்/ மல்லார்மே/ ரிம்போ/ வில்லியம் கார்லாஸ் வில்லியம்ஸ்/ எஸ்ரா பவுண்டு போன்ற மேற்கத்திய கவிகள் அவரது ஆதர்ச புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிய ‘Free Verse’ கவிதையினை ஒட்டி, அதில் காணக்கிடைத்த ‘லிரிகல்/மெடாபிஸிகல்/ சடையரிக்/ ரொமாண்டிக்’ போன்ற தளங்களில் அவரும் தனது கவிதை முயற்சியை மேற்கொண்டவர்.

இன்றைக்கு புதுக் கவிதை வளர்ந்திருக்கிறது. அதை அன்றைக்கு காமித்து தந்த, பாரதி/ கு.ப.ரா./ புதுமைப் பித்தன்/ க.நா.சு. வகையறாக்களின் கவிதைகளைவிட இன்றைக்கு அது நேர்த்தியான வளர்ச்சியை கண்டிருக்கிறது. குறிப்பாய், பிரம்மராஜன்/ பெண் கவிஞர்களில் உமா மஹேஸ்வரி கவிதைகள் மஹா கீர்த்தி கொண்டது! இன்றைய ‘Free Verse’ கவிதைகளின் வளர்ச்சியை உலகுக்கே  உணர்த்துபவை!

க.நா.சு.வின் கவிதைகளில் இந்த ‘உயில்’ என்னை மிகவும் கவர்ந்த கவிதை. வாசிக்கும் நேரமெல்லாம் மனதை என்னவோ செய்கிற கவிதை. எத்தனையோ தரம் இந்தக் கவிதையை வாசித்திருப்பேன், அத்தனைத் தரமும் நெகிழவே செய்கிறேன். நான் ஏன் அப்படி நெகிழ்கிறேன் என்பதை வாசகர்கள் அந்தக் கவிதையை வாசிக்கும் தருணம் அறியக்கூடும். வாசகர்களே, கவிதை வாசிப்பை, வாய்ப்பாடு மாதிரி வாசித்து முடித்து விடாதீர்கள். ஒவ்வொரு சொல்லும்/ ஒவ்வொரு வரியும்/ சொல்லோடு அடுத்த சொல் சேர்கிற போதும்/ ஒரு வரி அடுத்தவரியோடு சங்கமிக்கிற போதும்/ மொத்தக் கவிதையும்/ அதன் தலைப்பும்கூட நமக்கு முக்கியமானதாக இருக்கும். கவனமும்/ உள்வாங்கிக் கொள்வதும்/ உணர்தலுமே கவிதையை நம்மில் கொண்டு வந்து சேர்க்கும். கவிதை என்பதே உணர்தலில் விடியும் உலகம்தானே!

இங்கே வாசகர்களின் பார்வைக்கு நான் தந்திருக்கும் க.நா.சு. கவிதைகளில் ‘காசியும் பம்பாயும்’ என்கிறத் தலைப்பில் எட்டு பத்து வார்த்தைகள் கொண்ட கவிதையொன்றும் உள்ளது. சாதாரண வாசிப்பில், வேடிக்கையான அல்லது ஒன்றுமே இல்லாத கவிதையது. என்றாலும், அது நிஜமா? என்றால் இல்லை. கவிதையை படித்த நாழிக்கு, உணர்தல் நிலையில் அந்தக் கவிதையினை உட்படுத்துவோமேயானால், அது காமிக்கும் நிறமே வேறு.

காசி என்பது ஓர் புனித ஸ்தலம். பம்பாய் என்பது பல இந்திய இன மக்கள் கொண்ட/ பாலியல் அனுமதிக்கப்பட்ட/ அதற்காகவே ஆன தொழில் புரியும் பெண்களும் கொண்ட நகரம். காசியில் கணவனை இழந்த/ மறு மணத்திற்கு மறுக்கப்பட்ட அல்லது மறு மணத்தை வெறுக்கிற பெண்களும் கொண்ட நகரம். குறிப்பாய், பால்ய விவாகம் புரிந்த சிறார்களும் கூட விதவையாகி, சிலர் பாலியல் தொழிலிலும் சிக்கி காலம் கழிக்கிற இடம்! காமம் என்பதும் ஒருவகைப் பசிதானே! பாலியலைத் தொழிலாக கொண்ட பெண்களைவிட, அதை அனுபவிக்க வழி அத்துப் போன பெண்களிடம் அப்பசி கூடுதலாக எதிரொலிப்பதென்பது யதார்த்தமும் கூட!

க.நா.சு. இங்கேதான் தன் எழுத்து வழியே இன்னொரு சங்கதியையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். பம்பாய் விலை மாதர்களிடம் காண முடியாத இன்பத்தை, பக்தி தளமான காசியில் வாழும் கூடுதல் மேன்மைக் கொண்ட பெண்களிடம் கிடைக்கிறது என்கிற அவரது கூற்றில் ‘பக்தி நகரமும், கூடுதல் மேன்மை கொண்ட பெண்களும்’ அவரது வியப்புக்குரியவர்களாகிப் போகிறார்கள்.

இன்னொரு தளத்தில், இன்னொரு கோணத்தில் உணரத் தலைப்பட்டோமேயானால், பட்டறிவு இருந்தாதொழிய க.நா.சு.வால் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்க முடியாது. ஆக, இந்தக் கவிதையின் வழியே, க.நா.சு. நமது நமுட்டுச் சிரிப்பிற்கும்/ உள்ளார்ந்தக் கேள்விக்கும் ஆளாகிறார். அவருக்கு பம்பாய் சுகமும் தெரிந்திருக்கிறது/ காசியின் சுகமும் தெரிந்திருக்கிறது! அது இல்லாமல் இந்தக் கவிதையும்தான் அவருக்கு ஏது?

இதனையெல்லாம் விவரிக்காமல்தான் பத்து வார்த்தைகளில் அந்தக் கவிதையை எழுதி முடித்திருக்கிறார் அவர். இன்னும் கூட இந்தக் கவிதைக் கிளறினால், நம் உணர்தலில் பலப்பல சங்கதிகள் மேலோங்கி வரக்கூடும்! கவிதை விரும்பிகளே முயற்சி செய்யுங்கள்.      

‘என் பெயரை யாருக்கு இஷ்டமோ அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’ என்று, உயில் கவிதையில் க.நா.சு. அறிவித்திருக்கிறார். நான் ரெடி! அவரது பெயரை எடுத்துக் கொள்வதில் எனக்கு இரட்டை சந்தோஷம்! அவரது உறவுகளும் சம்மதித்தால் அந்த மஹா கலைஞனின் பெயரை எடுத்துக் கொள்ள கசக்குமா என்ன? ‘கநாசு’ எஸ்.ஏ.தாஜுதீன்! நன்றாகத்தானே இருக்கிறது! அவரது பெயர் மாதிரி, அவரது வித்தைகளும் இவ்வளவு சுளுவில் கிடைக்க வேண்டுமே?

தாஜ்  / 27th August – 2010  

***

க. நா. சு. கவிதைகள் :

உ யி ல்


என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்
வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம்.
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமைக் கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குக் தந்து விடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.

யேட்ஸ் என்கிற
ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து
நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்று வட்டத்தில், இந்தியாவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
பட்டு விட்ட கடன்களை யெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாக திருப்பி
விடுகிறேன். தங்களுக்கு தாங்களே வரவு
வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்து வைத்து உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியாதவர்களுக்குத் திரும்பவும்
தந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.

நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்
வாரி அளித்து விடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்து விடுகிறேன். இந்திரன்,
சந்திரன், காற்று, வெளி, நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடக்கட்டும்.
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக் கொள்ளட்டும்.
என் வீணாகிப் போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டு முட்டு சாமான்களை, கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக் கூட பாத்தியமில்லாமல்
தந்து விடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகளை எல்லாம்
கிடைக்கின்றன.

வேறு ஒன்றும்
எனது என்ற சொல் சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக் கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவர் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்து விடுகிறேன் – என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக் கொள்ளட்டும்.

***

ஏன்?


நீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்
நானும் பார்க்கிறேன்
உன் பார்வை மட்டும்
வேறாக இருக்கிறதே
ஏன்?

***

காசியும் பம்பாயும்


காசியிலும்
கூலிக்கு இன்பம்
தரும் பெண்கள்
உண்டு உண்டு.

பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
தராத பெண்கள்
உண்டு உண்டு.

***

இக்காலம்


தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது
ஒரு காலம்.

மனிதனேயல்ல, அசுரனேயுண்டு
மண் உண்டு, விண் பொய்,
தாழ்வு உண்டு உயர்வு இல்லவே இல்லை என்பது
இக்காலம்.

***
நாலடி பாய


நாலடி பாய எட்டடி பதுங்கி
இருபதடி பின்வாங்க நூறடி முன்னேறி
முன்னும் பின்னும் இறுக்கி முரண்பட்டு
நேர்படுத்தி முடிச்சில் சிக்கித் தவிப்பவன்
மனிதன்.

***
மரம்

வனத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து-மத்து ஆடுகிறது
என் நிழல்

வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என் பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன் என் நிழலை மட்டும்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன்-
ஒன்பதாய்ப் பெருகுவேன்.

என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும்-

முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட?

*
நன்றி: புதுக்கவிதைகள்/ க.நா.சு/ ஞானச்சேரி/
Date of Publication: 10th April,1989

*

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள் | E-Mail : satajdeen@gmail.com