ஜி. நாகராஜன் , கோபி கிருஷ்ணன் குறிப்புகள் (தேர்வு : ஆசிப்)

துபாயில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்ற அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நூல் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்த ஆசிப்மீரான் கையில் இந்தக் குறிப்புகள் இருந்தன. ஏதாவது மேலும் சொல்லலாம் என்று எடுத்து வந்திருப்பார்! எழுத்தழகைப் பார்த்துவிட்டு நாளை பதிவிடுகிறேன் என்று அப்பிக்கொண்டேன். பைத்தியக்காரன் பத்தும் செய்வான், போகட்டும் விட்டுவிடு! – AB

gn-2

ஜி. நாகராஜன் :

சமுதாயம் தன்னுடைய நலனுக்காக தனிமனிதன் மீது சுமத்தும் கட்டுப்பாடுகளில் திருமணமும் ஒன்று. இதைக் காதலில் தோன்றச் செய்து, காதலில் நிலை பெற்றிருப்பதாக ஆக்கும் அளவுக்கு மனிதன் ஒரு கட்டுப்பாட்டினை தன்னுடைய சுதந்திரமான ஒரு இச்சையின் மறுபுறமாக மாற்ற முடியும்.

மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்

இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.

*

gopi-ays

கோபி கிருஷ்ணன் :

“மன நோயாளி என்பவன் குறுக்கிடும் குடும்பத்தின், பைத்தியக்காரச் சமூகத்தின் பலிகடா. பைத்தியக்காரன் சுவாதீனமுள்ளவன். அவனைப் பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தும் சமுதாயம்தான் பைத்தியக்காரத்தனமானது” – Thomas Szasz

கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத Samoaவில் வாழும் தொல்குடிகள் மன ஆரோக்கியத்தின் உச்சநிலையில் வாழ்கிறார்கள் என்று மானிடவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மன இயல்பின் செழுமையான பாதையில் குறுக்கும் நெடுக்குமாக முளைகளை நட்டு, முட்களைப் பரப்பி கூரான கற்களை ஆங்காங்கு போட்டுவிட்டால், ஓட்டம் எப்படி சீராக இருக்கும்?

நாகரீக வளர்ச்சி என்பதே ஆத்ம நிர்மாணத் தூய்மை மீது மடத்தனமாக அணிவிக்கப்பட்ட சாணியில் தோய்த்த சட்டை. சள்ளை பிடித்த விவகாரம். இதற்காகச் சந்தோசப்பட்டு வேறு தொலைய வேண்டுமா என்ன?

“பண்பாட்டையும் பாலியல் பிறழ்வுகளையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. உணர்வுபூர்வமான உண்மையான காதலோடு கணவன் அல்லது பிற ஆடவனுடன் பாலுறவு கொள்ளும் பெண்ணைச் சித்தரிக்கும் சாமர்செட் மாமின் ‘த பெயிண்டட் வெல்ஸ்’ஐ எப்படிப் புறக்கணிக்க முடியும்? சாமர்செட் மாமின் இன்னொரு படைப்பான ‘Rain’ பாதிரியார் ஒருவரின் பாலிச்சையைச் சாடுவதாக அமைகிறது. “எல்லா ஆண்களும் பன்றிகள்” என்று ஒரு பரத்தை சொல்லும் வாசகத்துடன் முடியும் இந்தப் படைப்பத்தான் தூக்கி எறிய முடியுமா?”

“பக்திப் பரவசத்துக்கும் விஸ்கிப் பரவசத்துக்கும் அதிக வித்தியாசமில்லை”

“கீர்க்ககார்டின் ‘பயம் எனும் கருத்தாக்கம்’ என்ற புத்தகத்துக்கு எழுதப்பட்ட முன்னுரையில் : ‘இது சுவாரஸ்யமான புத்தகம். ஆசிரியர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏனென்றால் ஆசிரியர் ஒரு மனநோயாளி எனக் கொள்ளப்படுவதற்கான ஆதாரங்கள் புத்தகத்திலிருந்து கிடைக்கின்றன”

சமூகமே ஒன்றை ஆரம்பிக்கும். அதுவே கண்டிக்கும். களைய எத்தனிக்கும். சீர்திருத்தும். பிள்ளைக்குச் சரியான கிள்ளல். பிறகு ஆதுரத்துடன் தொட்டில் ஆட்டுதல். பம்மாத்து.

சமுதாய அமைப்பு நாறிக்கிடைக்கில் ஒரு தனி நபரைக் குறைகூறுவதில் யாதொரு பயனும் இல்லை.

நமது கலாசாரம் சீரான சிந்தனையத் தூக்கி எறிந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளில் ஒரு பெரிய அழுக்கு மூட்டை.

இப்பொழுதுள்ள சமுதாயம் பாலுணர்வின் அடிப்படையில் தோன்றும் பொறாமையை அடியொற்றித்தான் தோன்றி இருக்க வேண்டும்.

இது முனிபுங்கவர்களுக்காகவோ, துறவிகளுக்காகவோ, சன்னியாசிகளுக்காகவோ, செக்ஸை பாவம் என்று கருதும் மனநோயாளிகளுக்காகவோ எழுதப்பட்டதல்ல. உள்ளங்களிலும் உணர்வுகளிலும் இயல்பான நம்பிக்கை வைத்திருக்கும், எளிதில் கசிந்துருகிவிடும் இளகிய மனது படைத்தவர்களுக்காக எழுதப்பட்டது. பாலுணர்வும் பரவசமும் காதலும் எத்தனை ரம்மியமானவை?

asif-gopi1.jpg

asifmeeran-IMG_2999

நன்றி : ஆசிப்மீரான்

மகான்கள் – கோபிகிருஷ்ணன்

தலைப்பை சரியாகப் படித்தீர்களா? மாக்கான்கள் அல்ல, மகான்கள் – நம்மைப்போல! அவல நகைச்சுவைக்கு அசல் சொந்தக்காரரான கோபிகிருஷ்ணனின் சிறுகதை இது. ‘இடாகினிப் பேய்களும், நடைப் பிணங்களும் சில உதிரித்தரகர்களும்’ நூலில் இணைப்பு-3யாக இருக்கிறது. தமிழினி வெளியீடான இந்நூலை  ’அமீரக அண்ணாச்சி’ கொடுத்து பல மாதங்கள் ஆகின்றன. திருப்பிக் கொடுப்பது மஹா தவறு என்று – பின்னே சரியோ? – பத்திரமாக வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு கதையை எடுத்து வெளியிடவேண்டுமென்று நினைத்தபோது பாழாய்ப்போன இந்த சோம்பல் வேறு தொல்லை கொடுத்தது. கோபிகிருஷ்ணனின் வேறு சில சிறுகதைகள் ‘அழியாச்சுடர்களில்’  (எஸ்.ராவின் கட்டுரைகளுடன்) வெளியாகியிருப்பதால் அங்கே தோன்றாத மகான்களை (இந்த மகான்கள் இருக்காங்களே… லேசுல எங்கேயும் வரமாட்டாங்க..)  இங்கே வரவழைக்கலாம் என்று நினைத்து டைப் செய்துகொண்டிருக்கும்போது… நம்ம கூகிள்ஹஜ்ரத்திடம் மன்றாடினால் என்ன என்றொரு உதிப்பு தோன்ற, கிடைத்தார் ‘காவிரிக்கரையில் பிறந்து ரியோ க்ரேண்ட் கரை ஒதுங்கிய’ சகோதரர் வாசன். அவர் மூலம் ’மகான்களும்’ கிடைத்தார்கள். தரிசியுங்கள். கோபிகிருஷ்ணன் பற்றி நண்பர்கள் எழுதிய முக்கியமான பதிவுகளின் சுட்டி கதையின் அடியில் இருக்கிறது. அதையும் வாசியுங்கள்.

நேரம் கிடைக்கும்போது ‘அம்மன் விளையாட்டு’ விளையாடலாம், இன்ஷா அல்லாஹ்! – ஆபிதீன்

***

Gopi

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

    நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

    இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் பாட்டி வீட்டில்     புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன     என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.

    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.

    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.

    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

***

நன்றி : தமிழினி, ஆசிப்மீரான்வாசன்

***

தொடர்புடைய பதிவுகள் :

கோபி கிருஷ்ணனின் கதையுலகம் அல்லது நரம்புநோய் பற்றிய கதையாடல்கள். – ஜமாலன்

கோபி கிருஷ்ணன் – இறப்பு,எழுத்து மற்றும் வாழ்வு – அய்யனார்

கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை – அவர் வார்த்தைகளில்  (மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல். ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவில்) : பகுதி 1 , பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 (நிறைவு)