பிணத்தின் தீயில், பீடிக்கு நெருப்பெடுத்தவன் – கென் சிறுகதை

கத்தாரில் வசிக்கும் தம்பி கென் எழுதிய இந்த அருமையான சிறுகதையை பிரபல எழுத்தாளர் ஒருவர் படித்து வியந்து, ‘ஆஹா.. என் வாரிசு’ என்றவுடன் பயந்துபோய் உடனே எழுதுவதை நிறுத்திக்கொண்டார் கென். அவர் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிறுகதைத் தொகுதியாவது போடுங்க சார்… – AB

*

ken - fb2

பிணத்தின் தீயில், பீடிக்கு நெருப்பெடுத்தவன் – கென்

சுடுகாடுன்னா என்னன்னு எப்போவாவது யோசிச்சி இருக்கீங்களா ?
பாதி எரிஞ்சிட்டு இருக்கிற பிணத்தை பயம் இல்லாமல் ,கண்ண மூடாமல் பார்த்து இருக்கீங்களா?

அது சரி..,
சாவு பத்தி யோசிச்சாலே இப்போவே கண்ணக்கட்டுற ரகமா நீங்க

அப்போ மேற்கொண்டு படிக்காதீங்க

ஊருக்கு வெளில இருக்கும் சுடுகாடு, பகல்ல அதைதாண்டி போகனும்னாலே அடிவயித்துக்குள்ள அருவாமனையை வச்ச மாதிரி இருக்கும் , சாயங்காலம்னா கேக்கவே வேணாம் ,சரபுரன்னு ஏதேதோ ஓடற சத்தமும் மரம் மட்டை அசையற காட்சியும் , எப்போவோ கேட்ட பேய்க்கதையெல்லாம் விசுக்குன்னு நெனவுக்கு வந்து வேர்த்துக்கொட்ட, அடிமேல அடியாய் எப்போட நகர்ந்து போவோம்னு போவையில.

இன்னும் கொஞ்ச தூரம்தான் , கொஞ்ச தூரம்தான்னு ,உள்ளுக்குள்ள தடக் தடக்குன்னு ரயிலு ஒன்னு பொட்டி இடிச்சிக்கிட்டு ஓடற மாதிரி இருக்கும்.

காத்தும் சும்மா உய் உய்ன்னு உன்ன விடமாட்டேண்டானு வம்புக்கு வரமாதிரியே அடிக்க , ஆத்தா மகமாயி, அச்சிஸ்ட்ட அந்தோணியாரேன்னு கெடச்ச சாமிய துணைக்கு கூப்பிட்டுக்கும் மனசு.

பொழுதுக்கும் திட்டித்தீத்த அப்பனுக்கு இப்போதான் பழயபாக்கி நெனா வந்து நொட்டனுமான்னு கெட்ட வார்த்தையெல்லாம் எட்டிப்பாத்துக்கிட்டே எப்போடா தாண்டி போவேம்னு போகையில முழு முக்காடா வாயில நெருப்போட , சுடுகாட்டு கொட்டாய்க்குள்ள இருந்து ஒரு உருவம் அசைஞ்சி வந்தா எப்படியா இருக்கும்.

சும்மா கீழ ரெண்டும், மேல வந்து கண்ணா முழி வழியா பிதுங்கிடும், இருந்த தகிரியம் எல்லாம் உன்னப்பிடி, என்னப்பிடின்னு ஓடியே போயிடும்.

நடுங்கி நடுநடுங்கி உயிர்க்கொலை அந்து போற நேரத்துல ஏம்பா யார் வூட்டுப்புள்ள அது, தனியா மசானத்தைத்தாண்டி போறதுன்னு ஆடி அமரக்கேட்டா போன உசிரு திரும்ப வந்து ஓடிப்போயி அவன் அக்குளுக்குள்ள சேந்துக்கிட்டு நிதானமா பேசனும் போல இருக்கும். இப்படித்தான் எனக்கு தெரியும் மண்டையன

ஊருக்குள்ள எப்போவுமே கண்டுக்கப்படாத ஆளுன்னா அது மண்டையந்தான், எவன் வூட்டு விசேசம்னாலும் பந்தியில உக்காரவிட மாட்டானுங்க, அவ்ளோ வயசான மனுசன பேரச்சொல்லி கூப்பிட ,குஞ்சுக்குளுவானுக்கெல்லாம் எவந்தான் சொல்லிக்கொடுக்கிறான்னு எனக்கு பல நாள சந்தேகம்.

சாவுன்னா முத ஆளா மண்டையனத்தான் தேடுவாங்க, புதைக்கனும்னா குழி வெட்டவும் , எரிக்கனும்னா ராட்டி, விறகுன்னு வாங்கவும் . சாவு மட்டும்தான் அவன வாழ வச்சிது.

மொத பொணத்த எரிக்கிறத நான் பத்தாம்பு படிக்கிறப்போதான் பாத்தேன். ஊருக்கே பெரிய மனுசன்னு இருந்தவன் செத்துப்போயிட்டான்னு சுடுகாடு முழுக்க ஒரே கூட்டம், சின்ன பயலுவல எல்லாம் தொரத்தி அடிக்கிறானுங்க.

முளைக்காத மீசைய தடவிக்காட்டிக்கிட்டே பேயெயல்லாம் நாங்க பாத்திக்கிறோம் நீ பொத்திட்டு போன்னு சலம்பல போட்டுக்கிட்டு அங்கேயே நின்னோம்.

மண்டயந்தான் பரபரப்பா காரியம் பண்ணிக்கிட்டு இருந்தான் , சாராய நாத்தம் சகட்டு மேனிக்கு வீச்சமா இருந்திச்சி. பெரிய மனுசன் சின்ன மனுசன் எல்லா பயலுமே ஓசி சாராயத்த ஒண்ணுக்கு கணக்கா குடிச்சி இருந்தானுங்க.

உற முற காரியம் எல்லாம் முடிஞ்சி, புள்ள அப்பனுக்கு கொள்ளிய வச்சிட்டு போயிட்டான்யா, மொத்த சாதி சனமும் , செத்தவ இருந்தப்போ பண்ணின அட்டூழியத்த எல்லாம் மறந்துட்டு , ரொம்ப நல்லவருன்னு வெறும் வாயிக்கு அவலா மென்னுட்டி போனாங்க.

ஆளாளுக்கு போனப்பின்னாடி நானும் , சாதிக்கும் பொணத்துக்கு பக்கமா வந்தோம், அடிக்கிற காத்துக்கு வர நாத்தம் , குடலப்பிடுங்குது, முடியெல்லாம் பொசுங்கி எரியுது பொணம்.

அங்கங்கே ஒரு நிறமா , நெஞ்சாங்கூடு பக்கமா நீல நிறம், வயித்துக்குப்பக்கமா மஞ்சள்ன்னு , நாத்தம் ஒரு பக்கம் ஆராச்சி மறு பக்கம்னு எரியுது சும்மா சொக்கப்பனை கணக்கா என்னமோ ஆசயில வந்திட்டோம், இதென்னடா நிக்க முடியாத அளவுக்கு இருக்கு நாத்தம் , தண்ணி தாகம் வேறடா, கொடலப்புடுங்குதுன்னு சாதிக்குக்கிட்ட சொன்னேன்.

இளநீ சாப்டுரீயான்னு கேட்டான், டேய் நட்ட நடு ராத்திரில எங்க மரம் ஏறப்போறன்னு கேட்டேன்.

அதெல்லாம் உனக்கெதுக்கு இருன்னு போனவன் வரப்போ ரெண்டு இளநீ எடுத்துட்டு வந்தான், மண்டயன்கிட்ட அருவாள வாங்கி பெருசு இளநீ உனக்கும் வேணுமான்னு கேட்டான்,

அவரோ வேணாம்பா நீங்க சாப்பிடுங்கன்னு இன்னொரு பாக்கெட்டு சாராயத்தை பீய்ச்சிக்கிட்டார்.

இளநீ வாயில அண்ணாந்து குடிச்சிட்டு எதேச்சயா பொணத்த பாக்கிரேன்

பாதி உடம்பும், கையும் மேல தூக்கின மாதிரியே எரிஞ்சக்கிட்டு இருந்த பொணம் எழுந்துக்கிட்டு இருக்கு,

டேய்ன்னு கத்தினேன் சத்தம் வரல , நடு மண்டையில எதோ விட்டு சொருகின மாதிரி இருந்திச்சு.

சாதிக்கும் தாவிக்குதிச்சி என் பக்கம் வந்து என் கைய இறுக்கிப்பிடிச்சிக்கிட்டான். யோவ் அங்க பாருயா பாருயான்னு கத்தினேன் .

நின்னு நிதானமா பாத்த பெருசு, ஒக்காலி செத்தும் கெடுத்தான் சீதக்காதின்னு இவன் எரியறப்பையும் எந்திரிச்சு புள்ளகள பயமுறுத்துறான் பாருன்னு சொல்லிட்டே ,

தம்பி பயப்படாதீங்க கொரக்கலி பொணம் , லேசு பாசா தட்டி படுக்க வச்சிடுவோம்னார்.

சும்மா தடிக்கம்பால எரியற பொணத்து மண்ட மேலேயே போட்டு சாத்தினார் அதும் நகர்ர வழியாக்காணோம் , சாதிக்கும் வீரம் வந்து அவன் பங்குக்கு நாலு போட்டான், நான் அந்த பக்கமே போகல , அடிக்கிற காத்துக்கு, எழுந்துக்கிட்ட பொணத்த பாக்கவே, படு கோரமா இருந்திச்சு.

ஆச தீர அடியப் போட்டும் ஆகிற வழியக்காணோம்னு பெரிசு இன்னொரு பாக்கெட்ட வாயிக்குள்ள விட்டுக்குச்சி, சும்மா நொங்கு அருவா கணக்கா கூர் தீட்டின அருவால கையில எடுத்துக்கிட்டே தம்பிகளா இந்த பக்கமா வந்திடுங்கன்னு சொன்னிச்சு.

ஒரு ஓரமா தள்ளி நின்னுக்கிட்டோம், ஏதோ மூங்கி மரத்த வெட்ற மாதிரி தலயத்தனியா , கையத்தனியான்னு சட சடன்னு வெட்டி ஏற்கனவே வேகமா எரியர நெருப்புல மண்ணென்ன கொஞ்சம் ஊத்தி கிளறி விட்டுக்கிட்டே பீடிய பத்த வச்சிக்கிட்டு பெருசு

வானத்துக்கும் பூமிக்குமா எரியுது நெருப்பு , டேய் போலாம்டா எனக்கு மயக்கமா இருக்குன்னு சொன்னேன், மச்சான் இன்னொரு இளநீ வேணுமான்னு கேட்டான்

ஆமாம் ஏதுடா இளநீ அதை சொல்லுடான்னு கேட்டா, முக்குட்டுக்கு முக்குட்டு, பச்ச மட்டையும் இளநீயும் வச்சிருந்தாங்க அதான் எடுத்துட்டு வந்தேன்னு சொன்னான்,

அடப்பாவி அது செத்தவன் ராத்திரி தாகத்துக்கு குடிக்க வச்சதுடான்னேன்

போடா அவன , கூறு நூறா போட்டு குப்பையா எரிச்சத நாமளே பாத்தோம் இதுல அவனும் வந்திட்டாலும்னான்.

ஒரு வாரத்து சுரத்துக்கு முனீஸ்வர கோவில்ல தாயத்து வாங்கி தலைமாட்டில வச்சிட்டு படுத்துக்கிட்டேன்.

பேய்ப்பயம் போச்சோ இல்லையோ ,வேலை கிடைக்கிலேன்னா வெட்டியானதாண்டா போகனும்னு என் அப்பன் திட்டரப்போ எல்லாம் அதெல்லாம் அவ்ளோ ஈஸி இல்ல சும்மா தெரியமா பேசாதீங்கன்னு சொல்லிட்டே இருப்பேன்.

அஞ்சி வருசத்துக்கு முன்னாடி மண்டயன் சாவுக்கு , நானும் , சாதிக்கும் ஆளுக்கொரு பக்கமா பாடைக்கு முன்னாடி நின்னு அவரத்தூக்கிட்டு போனோம்.

ஊர்க்காரங்க எல்லாம் கேவலாம சிரிச்சாங்க , எனக்கு நிஜமா அழுகை வந்திச்சி , மண்ணள்ளி போட்டப்போ ..,

(25-Jun-2008)

**
நன்றி : கென் , சென்ஷி

‘அகம் பிரம்மாஸ்மி’ – கென் கவிதைகள்

மழைக் கால தவளைகளின்
குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது
பாம்புகளுக்கு

வாயிடுக்கில் இருந்தும்
தப்பிடும் வழியேதுமின்றியும்
குரல் எழுப்பிக்கொண்டேதான்
இருக்கின்றன

வாழ்தல் இறத்தல்
என்றெல்லாம் மாறும்
சூழலிலும் பெய்திட்ட
மழைக்கு
குரல் எழுப்ப மறப்பதில்லை
அவை

மழையாய் குரலெழுப்பி
சாகின்றன தவளைகள்
குவியத்துவங்கிடுகின்றன
மேகங்கள்
ஆகாயத்தில்

****

பொழுதின் முடிவுகளில்
மசமசக்கிறது இரவின் நிறம்
கரிய சிறகுகளில்
மூடி மறைக்க முயல்கிறது
ஏதோ அங்கொன்றின்
மினுமினுப்புகளில் தெரிகிறது
விர‌விட‌ இயலாத‌து
கூகையின் அல‌ற‌லில்
திடுக்கிடுகிறது

உச்சிக்கிளைக‌ளுட‌ன் ராட்ஷ‌ச‌னாய்
தூர‌த்தெரிவது
எச்ச‌த்தில் விளைந்ததாம்
வேர்க‌ளின்
விய‌ர்வைக் குளிய‌ல்க‌ள்
கூர்நாக்குக‌ளுக்கு தெரிவ‌தில்லை
எல்லாம் ம‌றைத்த‌
அக‌ங்கார‌ க‌ருமையை
கிழ‌க்கின் வெளுப்பு
உடைக்குமாம்
ப‌ரிகசித்து எழுந்தோடுகிறது
கொண்டைச்சேவ‌ல்

****
உரசலில் நனைதலில்
இருக்கலாம்
அலைகளின் ஓலம்
வெண்மையின் கரிப்பில்
கரைதலில் இருக்கலாம்
கடலின் கண்ணீர்
தீராத வாழ்தலின் ருசி
தனித்திருப்பவனோடு
சேர்த்து வைக்கிறது
சிலநினைவுகளை
சில முத்தங்களை
பிரிதலின் பிரக்ஞை
இற்றுப்போகையில்
சொல்லப்படாத வார்த்தைகளின் முனைகள்
கோட்டையின் பாழடைவில்
வெளவால்களோடும்
புழங்கத் துவங்குகின்றன‌

தாய்மையின் முலைக்காம்புகளில்
பூசப்படும் வேம்பின் கசப்பு
தெரிவதில்லை
பால்குடி மறக்கவியலா
மழலைக்கு

****

புதிதான உலகை சிருஷ்டித்திருந்தான் அவன்
ஒற்றைக் கண் காகம் , நொண்டிப்பூனை என
இருவர் மட்டுமிருந்தனர்

நான் மட்டுமே மனிதனாயிருக்கிறேன்
நானே பிரம்மம் என்றபடியே
காகத்தை கல்லெறிந்துக் கொன்றான்
நொண்டிப்பூனை பிடித்துக்கொண்டோடியது

மூவரின் உலகம் ஒரு கொலையோடு
இருவராய் மாறியது
எக்கணமும் ஒற்றையாய் தொடங்கலாம்
நானே பிரம்மம் என்றான்

விறைத்த காகம் மூடிடாத
கண்ணோடு பூனையுடன்
கெஞ்சிக் கொண்டிருந்திருக்கலாம்

குருதிப் படிந்த கல் இப்போது
பூனையை குறிப்பார்க்கிறது
அகம் பிரம்மாஸ்மி என்றான்

****

நன்றி: கென், வார்த்தை, புதுவிசை, சென்ஷி & பண்புடன் குழுமம்