முன்னையனுக்கு எட்டு ஒம்பது வயசிருக்கும். தன் தகப்பனாருடைய சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தான். அது அவனுக்கு, வேதக்கோயில் சாமியாரின் அங்கிமாதிரிப் பெரிசாய் இருந்தது. எண்ணெய் அறியாத செம்பட்டை ரோமம் கொண்ட பரட்டைத் தலை. அந்த தலையின்மேல் ஒரு கோழிக்குஞ்சுவை வைத்துக்கொண்டு அந்தக் கிராமத்தின் இடுக்காட்டமுள்ள ஒரு தெருவில் அந்தக் கடேசிக்கும் இந்தக்கடேசிக்குமாக
‘லக்கோ லக்கோ’
‘லக்கோ லக்கோ’ என்று சொல்லிக்கொண்டே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தான்,
‘லக்கோ’ என்ற சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று அவனுக்கும் தெரியாது; யாருக்கும் தெரியாது! அது, அவனால் சந்தோஷம் தாளமுடியாததினால் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து வந்த ஒரு வார்த்தை அந்தமாதிரியான வார்த்தைகளுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்’ என்பதைத் தவிர வேறு அர்த்தம் கிடையாது.
அவன் தலையில் வைத்துக்கொண்டிருந்த அந்தக் கோழிக்குஞ்சு ரொம்ப அழகாக இருந்தது. பிரகாசமான ஒரு அரக்குக் கலரில் கருப்புக் கோடுகளும் வெள்ளைப்புள்ளிகளுமாகப் பார்க்கப் பிரியமாக இருந்தது. அதனுடைய கண்களின் பின்பக்கத்தில் மிளகு அளவில் ஒரு சின்ன வட்டவடிவக் கோடு அதன் அழகை இன்னும் அதிகப் படுத்தியது.
முன்னையனுடைய தகப்பன் அந்தச் ‘சாதிக்கோழி’க் குஞ்சுவுக்காகத் ‘தபஸ்’ இருந்து, மேகாட்டில் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி வைத்து, இரண்டு ‘சாதிக்கோழி முட்டைகளுக்கு நடையாய் நடந்து, எத்தனையோ நாட்கள் காத்திருந்து, கொண்டுவந்து தனது அடைக்கோழியில் வைத்துப் பொரிக்கப்பட்ட குஞ்சு அது.
வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் பருத்திக்காட்டுக்குப் பருத்தி எடுக்கப்போயிருந்தார்கள், தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. தூளியில் தூங்கும் சிறுகுழந்தையைப் பார்த்துக்கொள்ள அவன் மட்டும் இருந்தான், கோழிக்குஞ்சுவை வைத்துக்கொண்டு இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
முன்னையனுக்குக் குஷி பிடிபடவில்லை. கோழிக்குஞ்சுவுக்கு பயம், அது அவனது தலைமயிற்றைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டது. அவனும் அதனுடைய கால்விரல்களைத் தலையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘லக்கோ லக்கோ’ என்று சொல்லிக்கொண்டு, மறுக்கி மறுக்கி ஓடிவந்தான்.
அந்தவேளையில் அங்கே வந்த மூக்கன் இந்தக் காட்சியைப் பார்த்தான். அவன் மனசையும் அது தொட்டது. சிரித்துக்கொண்டே பார்த்தபடி நின்றான்.
மூக்கனுடைய சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. கடவுள் அவனை அவன் அம்மாவின் வயிற்றுக்குள் அனுப்புமுன் அப்பொழுது தான் அவன் செய்து முடிக்கப்பட்டிருந்தான். இன்னும் சரியாகக்கூடக் காயவில்லை. பச்சை மண்ணாக இருந்தான். அப்பொழுது அவன் மரியாதையில்லாமல் கடவுளைப் பார்த்துச் சிரித்தானாம். அவருக்குக் கோவம் வந்துவிட்டது. லேசாக மூக்காந் தண்டில் ஒரு இடி வைத்தாரம். உடனே மூக்கின்மேல் மத்தியில் பள்ளம் விழுந்துவிட்டதாம். மூக்கன் அப்படியே பிறந்தான். பிறந்த உடனேயே அவனுக்கு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது. இப்பொழுதுகூட அவன் யாரையாவது பார்த்துச் சிரித்தாலும் மூக்காந்தண்டில் ஒரு குத்துவிடணும்போலத்தான் இருக்கும்; இந்த அழகில் அவனுக்கு முகம் நிறையச் செம்பட்டை மயிர் கிருதா மீசைவேறு.
மூக்கன் மீசைக்குள்ளேயே சிரித்துக்கொண்டு முன்னையனைத் தன் அருகே இழுத்து நிறுத்திப் பிரியத்தோடும் அதிசயத்தோடும், ‘ஏது இந்தக் கோழிக்குஞ்சு? ரொம்ப நல்லா இருக்கு?”, என்று கேட்டான்.
முன்னையன் சந்தோஷ மிகுதியால் இப்படிக்கூடி இந்தக் கோழிக் குஞ்சை ஒரு பெரிய்ய பிறாந்து தூக்கிட்டுப் போச்சி நான் அதைத் துரத்திக்கிட்டே ஓடுனேன். அது கீழே போட்டுட்டுப் போயிருச்சி, என்று சொன்னான்.
‘ஐய்யோ இது என் குஞ்சுமாதிரி இருக்கே; இந்தக் குஞ்சைத் தேடித் தான் அலையுதேன்.பிறாந்தா தூக்கிட்டு போனது; நீ நல்லாப் பாத்தியா?” என்று அவனும் அந்தக் கோழிக்குஞ்சைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு பொய் சொன்னான்.
‘..கண்ணாணை சொல்லுதேன். செத்த மிந்திதான் தூக்கீட்டுப் போனது. எம்புட்டு ஒசரம் அந்தப் பிராந்து பறந்ததுண்ணு நினைக்கே! கல்லைக் கொண்டியும் கட்டியைக் கொண்டியும் எறிஞ்சேன். ஒரு கல்லு அதந்தலையில் உரசிக்கிட்டுப்போனது. ‘சரி, இவன் இனி விடமாட்டா’ண்ணு கீழே போட்டுட்டது. அப்படியே பிடிச்சிக்கிட்டேன்’, என்று இறைத்துக்கொண்டே சொன்னான்.
மூக்கன் குஞ்சை வாங்கிப்பார்த்தான். அது பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தது. இடதுகையில் அதை வைத்துக்கொண்டு வலதுகையால் பிரியத்தோடு தடவிவிட்டுக்கொண்டே, யாராவது வருகிறார்களா என்று நோட்டப்பார்வை பார்த்தான்.
முன்னையனும், யாராவது வருவதற்கு முன்னால் அதை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைத்து, ‘இது ஒங்குஞ்சா. சரி; கொண்டுபோ’ என்று சொல்லி மூக்கனுடைய கைகளைக் குஞ்சோடு சேர்த்துத் தள்ளினான். அது, “சீக்கிரம் கொண்டு போய்விடு’ என்று சொல்லுவது போலிருந்தது.
மூக்கன் மடியில் குஞ்சைப் பதனமாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.
முன்னையனுக்கு இப்பொழுதுதான், தன்னுடைய சந்தோஷம் நிறைவுபெற்றதாகப்பட்டது.
மூக்கனுக்குத் தொழிலே கோழி பிடிப்பதுதான். இதைத் தெரிந்து முன்னையன் அவனுக்குக் கொடுக்கவில்லை. யார் வந்து அந்த சமயத் தில் கேட்டிருந்தாலும் அவன் கொடுத்திருப்பான்.
மூக்கன் வேலைக்கே போகமாட்டான். பேருக்கு ஒன்றிரண்டு கோழிகளை விலைக்கு வாங்குகிறதுமாதிரி வாங்கிக் கோழிக் கூடையில் போட்டு மூடிக் கோவில்பட்டிக்குக் கொண்டுபோய் விற்பான். ஆனால் அவன் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு கள்ளத்தனமாகத் திருட்டுக்கோழிகளைப் பிடித்து விற்றுச் சம்பாதிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான்.
கிராமத்தில் மக்கள் காட்டுவேலைக்குப் போனபின்தான் மூக்கன் எழுந்திருந்து தன் குடிசையைவிட்டே வெளியே வருவான். ஆள் நட மாட்டம் இல்லாத இடமாகவும் கோழிகள் குப்பையைக் கிளறிக் கொண்டு மேயும் இடமாகவும் பார்த்துத் தன்னுடைய வேட்டையைத் தொடங்குவான்.
ஒரு வெங்காயத்தில் முள்ளைக் குத்திப் போடுவான். அதற்கு முன்பாக முள்ளைக் குத்தாத ஒன்றிரண்டு வெங்காயத்தையும் போடுகிறதுண்டு. முள்ளைக் குத்திய வெங்காயத்தை எறிகிறதிலும் ஒரு சாமர்த்யம் வேணும். முள் ஒருச்சாய்ந்து அது ஓடிவந்து ஆவலோடு கொத்தும்போது அதன் உள்மேல் அண்ணத்தில் குத்துகிறாப்போல் அமையவேண்டும். மூக்கனுக்கு இதெல்லாம் சாதாரணம்.
வாய்க்குள் நிரம்பிய வெங்காயமும் குத்திய முள்ளுமாக இருக்கும் போது கோழி, அதிர்ச்சியாலோ அபாயக்குரல் எழுப்ப முடியாமலோ போய்விடுகிறது. கோழி செயலற்றுப்போய் அப்படியே இருக்கும். ஒரு சிரமமும் இல்லாமல் எடுத்துக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு மறைத்துக் கொண்டு வந்துவிடவேண்டியதுதான்.
இது பகல் வேட்டை ..
மூக்கன் ராவேட்டைக்கும் போவான், ராவேட்டைக்கு முள்ளும் வெங்காயமும் வேண்டியதில்லை. ஒரு ஈரத்துணியே போதும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், கோழிகள் நெருக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து நிற்கவேண்டும். திடீரென்று அதன்மேல் ஈரத் துணியைப் போட்டதும் அது சப்தம் எழுப்புவதில்லை. அப்படியே சுருட்டிக்கொண்டு வந்துவிடவேண்டியதுதான்.
மூக்கன் அந்தக் குஞ்சைத் தன் குடிசைக்குக் கொண்டுவந்து தண்ணீரும் உணவும் வைத்தான். தாயைக் காங்காத குஞ்சு ‘கிய்யா, கிய்யா’ என்று கத்திக்கொண்டே இருந்தது.
மூக்கனின் பெஞ்சாதி மாடத்தி பருத்திக்குப் போய்விட்டு வந்தாள். குடிசைக்கு முன்னாலுள்ள பானையடிக்குப் போய், மாராப்பை நீக்கி விட்டு ஒரு அரைக்குளிப்புக் குளித்துவிட்டு வந்தாள். அன்று அவள் ஏழு தரத்துக்கு பருத்தி எடுத்திருந்தாள். அதுவும் தண்ணீரின் குளுமையும் சேர்ந்து ஒரு கெந்தளிப்பான மனநிலையில் குடிசைக்குள் வந்தாள்.
பொங்கிப்போயிருந்த புருஷனையும் தீனி வைத்துக்கொண்டிருந்த கோழிக்குஞ்சுவையும் பார்த்தாள். அவனை இடித்துத் தள்ளிவிட்டு அந்த அழகான குஞ்சை ஆச்சரியமும் ஆனந்தமும் பொங்க எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். மனித வெதுவெதுப்பை அனுபவித்த குஞ்சு தன் அனாதரவான நிலைமாறி இனிமைக் குரல் கொடுத்து அவளோடு ஒட்டிக்கொண்டது.
‘ஏது இது?’ என்று தலையை மட்டும் அசைத்து மூக்கைச் சுரித்துப் புருவத்தை வளைத்துத் தலையாலேயே கேட்டாள்.
“மேலூர் சின்னக்கருப்பன், இது பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மண் எடுத்துக் கொண்டாந்து அடைகாக்க வச்ச குஞ்சு; கட்டாயம் நீ இதை வச்சிக்கிடனும்ண்ணு குடுத்தான்’ என்றான்.
அவள், தான் அவனிடம் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக வேண்டி அவன் சொன்ன அந்த வார்த்தைகளை அங்கீகரித்தாள்! பிறகு அவள் சொல்லுவாள், ‘என் உடன்பிறந்தான் ஒரு சாவல் வச்சிருந் தான் நல்ல பச்சை நிறம். இந்தச் சில்லாவிலேயே அதுக்குச் சோடி கெடையாது. அது பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை மண்ணை எடுத்து கிட்டு வந்து, நல்ல அக்கினி நட்சத்திரத்திலே அடைகாக்க வச்சிப் பொரிச்ச குஞ்சாக்கும் அது. அதோடகூட வச்ச அம்புட்டு முட்டைகளும் கூ முட்டையாப் போச்சு. அது ஒண்ணுதான் குஞ்சானது. சீமைச் சஜ்ஜு பொஞ்சாதி வந்து ஆயிரம் ரூவாய்க்கு அந்தச் சாவலை ஆசைப்பட்டுக்கேட்டா. தலை ஒசரம் பவுனாக் குவிச்சாலும் நாந் தர முடியாதுண்ணு சொல்லீட்டான், என்று பொங்குதலாகச் சொன்னாள்.
அவள் சொல்லுகிறது பொய் என்று மூக்கனுக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும். ஆனால் அதை நிஜம்மாதிரியே நினைத்து இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்! இரண்டு மனித வெதுவெதுப்பில் மூழ்கி, தனது அடைக்கலக்குரல் முனகலைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பைய்ய நிறுத்தி, கண்களை மூடி அந்த இதமான வெப்பத்தில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தது அந்த அழகிய சின்னக் கோழிக்குஞ்சு.
*
கணையாழி ஜூலை , 1972
Thanks : https://archive.org/