‘குடும்பம் ,வீட்டுவேலை,பாடசாலை,பத்திரிகைப்பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என்போன்ற இல்லத்தரசிகளுக்கெல்லாம் கவிதையென்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணறடிக்கும் பாரச்சுமையாகவோதான் அமைந்து விடுகிறது.ஆனாலுங்கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதனால்தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோணுகிறது.’ என்று சொல்லும் சகோதரிஃபாயிஸா அலியின் புதிய கவிதையைப் பதிவிடுகிறேன். அவருடைய மற்ற ஆக்கங்களைப் பார்க்க ’முத்துச் சிப்பி’ தளத்திற்குச் செல்லவும்.
அன்பின் ஃபாயிஸா, உங்கள் தொகுப்பு ஒன்றை சீக்கிரம் அனுப்புங்கள். கவிஞர் தாஜைப் பிடித்து விமர்சனம் எழுதவைத்து விடுகிறேன். என்ன ஒரு சிக்கல், அவர் கவிதையொன்றை இங்கே பதிவிடவேண்டி வரும்! பரவாயில்லையா?
***
முளைத்தெழும் கவிதை
பேரழகைச் சுமந்தபடி
சூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.
நலம் விசாரிக்க வரும் காற்றோடு
கைகுலுக்கியவாறே
குளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.
மஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும்
வண்டுகளின் ரீங்காரங்களுக்குள்
கண்விழிக்கும் அரும்புகளில்தான்
எத்தனை பரவசம்.
பசிய மென்கொடிக்கயிறுகளில்
தளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய்
அடிமரத்தில் வாய்பிளக்கும் சாம்பல்பூனை.
அட, முதல்மரத்தோடுதான் முளைத்திருக்கும்
கவிதையும்.
***
நன்றி : கிண்ணியா எஸ். பாயிஸா அலி | sfmali@kinniyans.net