மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்

மதிப்பிற்குரிய SLM ஹனீபா அவர்களைப் பற்றிய ‘மக்கத்துச்சால்வை மண்ணும் மணமும்’ சிறப்பு மலரில் நான் எழுதியது:

***

‘… அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா? உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன். இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது’ என்று இந்தப் பீத்த எழுத்தாளனுக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார் மரியாதைக்குரிய ஹனீபாக்கா – பத்து வருடங்களுக்கு முன்பு. நண்பர்கள் மூலம் முன்னரே அவரைப் பற்றி கேள்விப்பட்டு, ‘நூலகம்’ தளத்தில் ரசித்துப் படித்து, ’எத்தனை நாளைக்கு ‘மக்கத்து சால்வை’யையே போர்த்திக் கொண்டிருப்பது? அல்லது பக்கத்து ‘பஷீர்’-ன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பது?’ என்றொரு வரியை ’இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்!’ கதையில் குறிப்பிட்டிருந்தேன். என்றாலும், மெயில் அனுப்பியது அவராக இருக்காது என்ற சந்தேகத்தில் இருந்தேன். சந்திக்கிற நண்பர்களிடத்தில் எல்லாம் இவனுடைய வாழைப்பழத்தை பிடித்துப் பாருங்கள் என்றே கிண்டலாக சிபாரிசு செய்பவர் இவரேதான் என்று அப்புறம்தான் தெரிந்தது, நண்பர் உமா வரதராஜனும் ’அவர் வம்பளப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில் தன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயணைனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.’ என்று எழுதியிருந்தார். உண்மைதான்.

என்னுடைய ’ச்சோட்டா’ இணையதள வாசகர்களுக்காக இலங்கை எழுத்தாளர்கள் பலரை காக்கா அறிமுகப்படுத்தியிருக்கிறார். நானாக ‘உருவுஉருவுண்டு உருவி’ (சாதாரண அர்த்தம்தான்..) வாங்கிய கதைகளும் (உம்.: எஸ்.பொ அவர்களின் ’ஆண்மை’) உண்டு. காக்காவின் ’சிவப்புக்கல்லு மூக்குத்தி’ என்ற காதல் கதை வந்து தளத்தில் கண் சிமிட்டும். ’ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும்’ , ’புலவர் மாமா’ என்று தொடர்கள் எழுதுவார் – நளீமின் ஓவியத்தோடு. தான் ரசித்த கட்டுரைகளை அவ்வப்போது அனுப்பிவைப்பார். என் பக்கங்களை எந்த வகையிலும் மலினப்படுத்தி விடக் கூடாது என்பதில் என்னைவிட அவருக்கு அக்கறை அதிகம் இருந்தது. அனார், அறபாத் , ஸபீர் ஆகியோரின் அன்பும் அவர் மூலம்தான் கிடைத்தது,

எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னைப் புத்தக விழாவுக்குச் சென்றபோது புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரை சந்தித்துவிட்டு (அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை – ஜெயமோகன்) அப்படியே நாகூரும் சென்று என் மனைவி மக்களைப் பார்த்து வந்ததைக் குறிப்பிட வேண்டும். ’அரசரை (ஷாஹூல் ஹமீது பாதுஷா) காணாமல் அஸ்மாவை தரிசித்தேன்’ என்று என் ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் பின்னட்டையில் அவர் குறிப்பிட்டதற்கு நான் ஏழு ஜன்மம் தவம் செய்திருக்க வேண்டும்.

அஸ்மாவைக் கிண்டல் செய்து முகநூலில் பதிவு எழுதினால் மட்டும் இந்த மனுசனுக்குப் பிடிக்காது. ’ எண்ட தம்பிக்கு உங்கையாலேயே ஒரு சொட்டு பொலிடோல கொடுத்து இந்தக் கிழட கைகழுவி விடு.. கவனம் கை பத்திரம்’ என்று அவளுக்கு அறிவுரை போகும். வாட்ஸப்பில் எனக்கும் திட்டு வரும்! அவ்வளவு கரிசனம் என் உயிர் மேல்!

நாகூர் சென்றுவிட்டு அவர் அனுப்பிய மெயில் இது :

நாகூர் நகரத்தையும் அந்த வீடுகளின் அமைப்பையும் எந்நாள் மறக்க முடியவில்லை. அத்தனை வீடுகளிலும் நமது மூதாதையர்களின் இரத்தமும் வீரமும் பாரம்பரியமும் ஊடுருவியிருப்பது போல் உணர்கிறேன். ஐம்பதுகளின் இறுதியில் எனது வாப்பாவுக்கு நாகூரிலிருந்து கொடியேற்றத்திற்கான அழைப்பிதழ் தபாலில் வரும். வாப்பா, எங்களின் தலையைச் சுற்றி விட்டு, எப்பாடுபட்டாவது ஐந்து ரூபா பணத்தை காணிக்கையாக தபால் மூலம் நாகூருக்கு அனுப்பி வைப்பார். அப்படியானவொரு காலம் இருந்தது. வாழைச்சேனை ரயில்வே நிலையத்திலிருந்து நாகூருக்குச் செல்வதற்கான டிக்கட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் போர்ட் வீசா என்ற பிரச்சினையெல்லாம் மனிதன் மனிதனாக வாழ்ந்த போது இருக்கவில்லை. நான் நம்புகிறேன். இன்னும் 25 வருடங்களில் அந்தக் காலம் திரும்பி வரும். அந்த நாளில் நாங்கள் இருக்க மாட்டோம்.

இடையிடையே, ’உன்னைப் பயம் காட்ட விரும்பவில்லை; என் உடல்நலம் சரியில்லை’ என்று சமயத்தில் அவர் குண்டு போடும்போதுதான் பகீர் என்கிறது. அந்த நிலையிலும், ’உன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், நமது பிரார்த்தனைகள்தான் படச்ச ரெப்புவின் காதுக்கு எட்டுவதில்லையடா!’ என்றுதான் எழுதுவார்.

நிச்சயமாக எட்டும். காக்காவின் நலத்திற்கு – இந்த நினைவுக் கொறிப்புகளுடன் – துவா செய்கிறேன்.

அவருடைய ஆசிகளுக்கு ஏங்கும்,

ஆபிதீன்
*.
மலரின் பிரதிகளுக்கு:
மக்கத்து சால்வை வாசகர் வட்டம்

No. 159, MPCS Front Road, Mavadichenai, Valaichenai – 30400,
Sri lanka.
arafathzua@gmail.com

***

தொடர்புடைய பதிவுகள் :

மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்
மல்லியப்புசந்தி திலகர்

படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
முருகபூபதி

இஸ்தான்புல்லில் ஒரு மகன் – S.L.M. ஹனீபா

அன்பிற்குரிய ஹனீபாக்காவின் பழைய முகநூல் பதிவு, நன்றியுடன்..

*

2017ஜனவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அதிகாலை தொழுகைகளை முடித்துக் கொண்டவனாக பனி படர்ந்த மதின மாநகரின் எங்கள் நெஞ்சில் நிறைந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு முன்பாக அமர்ந்திருந்து அவர்களின் பெயரில் சோபனங்கள் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனக்கருகே 50 மீற்றர் தூரத்தில் ஒரு இளம் தம்பதியினர் என்னைப் போல் முன்னோக்கி அமர்ந்திருந்தனர். நான் அவர்களின் அருகே சென்றேன். எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது நான் முதல் நாள் சந்தித்து உரையாடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் வந்து கொண்டிருந்தார்.

-நீங்கள் எவடம்?

-நாங்கள் துருக்கி இஸ்தான்புல்.

இஸ்மாயிலுக்கு துருக்கி மொழியும் தண்ணிபட்டபாடு. எனக்கு வசதியாக போய்விட்டது.

முதல்நாள் இரவு எனது உறவினர் மதீனாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள துருக்கி தேசத்தின் ரெயில்வே நிலையத்தைக் காண்பித்து வந்தார். துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக்குள் இருந்த 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் கட்டப்பட்ட ஒரு கலைக்கூடம்தான் அந்த ரெயில்வே ஸ்டேசன். சுற்றிவளைத்து பாதுகாப்பு வேலி அமைத்திருந்தனர்.

இந்த பத்தியைப் பதிவு செய்யும்போது மிகவும் பதற்றப்படுகிறேன்.

துருக்கியைச் சேர்ந்த அந்த சகோதரனிடம் நான் உரையாடுகிறேன். நாங்கள் மூவரும் அந்த பட்டுத் தரையில் ஒரு பக்கமாகப் போகிறோம்.

துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அந்த மகோன்னதமான நாட்களை அவன் நினைவுகளில் படர விடுகிறேன். எனது உரையாடலை இஸ்மாயில் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். எங்களை விட்டும் சற்றுத் தொலைவில் எங்களின் உரையாடலை கேட்டவராக அந்த சகோதரனின் துணைவியார் அமர்ந்திருக்கிறார். அந்த முகத்தின் தேஜஷூம் அழகும் என் நெஞ்சில் இப்பொழுதும் சுடர் விடுகிறது. நான் பேச்சை முடிவுக்கு கொண்டுவருகிறேன்.

-ஷபீக், நோபல் பரிசு பெற்ற உங்கள் தேசத்தவரான ஒரான் பாமுக் இனை தெரியுமா? எனக்கேட்டேன். அவரின் புகழ் பெற்ற நாவல்களின் பெயர்களை எல்லாம் சொல்லி அது தமிழ் மொழியில் மாற்றம் பெற்ற வரலாற்றையும் சொன்னேன். எனது பேச்சை மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவரும் நிறைய உரையாடினோம். அவற்றைப் பதிவு செய்ய இது களமல்ல.

-ஷபீக், எனது பயணம் ஆரம்பமாகப் போகிறது. இந்த புனித பூமியிலிருந்து நான் விடைபெறப்போகிறேன். இஸ்தான்புல்லில் இருந்து மீண்டும் அந்த ரயில் மதீனா நகரத்தை நோக்கி வரும் காட்சி என் கண்களில் மிதக்கிறது. அந்த நாளில் நீங்களும் நானும் இருப்பது நிச்சயமில்லை. நமக்கு விதிக்கப்பட்ட மறுமைநாளில் நானும் நீங்களும் துருக்கியிலிருந்து மதீனாவிற்கு பயணிப்போமாக.

எழுந்த ஷபீக் என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு மாய்ந்துபோனார். 50 மீற்றர் தூரத்தில் ஷபீக்கின் வருகையை அவரின் மனைவி பார்த்துக் கொண்டிருந்தார்.

எனது கரங்களிலிருந்து காம்பிலிருந்து பூ தழுக்கென்று கழன்று விழுவதுபோல் ஷபீக்கின் கரங்கள் நழுவியது. மனைவியின் அருகே சென்ற ஷபீக் என்னைக் கூவி அழைத்தார்.

“Sir, Oran Famuk Problem Muslim.”

*

Thanks : Slm Hanifa

என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்

‘பதிவுகள்’ ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரனின் முகநூலில் ஹனீபாக்காவின் இந்த வரிகளைக் கண்டேன். பகிர்கிறேன்.

நன்றி : எஸ்.எல்.எம்.ஹனீபா, வ.ந. கிரிதரன், தமயந்தி

‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

« Older entries