‘நெஞ்சமெலாம் பதறுதடி மகளே’

சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை!
——————————————————
அஷ்ரஃப் சிஹாப்தீன்

நெஞ்சமெலாம் பதறுதடி மகளே
நெடு துயிலுக் குனையாக்கி விட்டார்
அஞ்சாமல் நொந்தோர்க்கு உதவும்
அருமந்த மகளுன்னைக் கொன்றார்
வஞ்சகர்க்குத் தர்மமிலை என்னும்
வார்த்தையினை மீளெழுதிச் செல்வோர்
எஞ்சார்கள் என்பதனை மட்டும்
எதிர்கால வரலாறு பேசும்!

ஆயுதத்தில் அதிகாரம் வைத்து
ஆடியவர் கதைகளினை அறிவாய்
பேயுலவும் காடுகளைப் போலிப்
பெரு நிலத்தை ஆளவந்தோர் அழிந்தார்
தாயுமென ஆனமகள் உன்னைத்
தரையினிவே வீழ்த்தி மகிழ்ந்திட்ட
நாயுமென அலைகின்ற கூட்டம்
நாசமுறும் நாளொன்றைக் காண்போம்

என்நெஞ்சு தீய்கிறது மகளே
எத்தனை நாள் துயரிலே துவள்வோம்
பொன் பொருளை விடப் பெரிய செல்வப்
பிள்ளைகளை இழப்பதுவே விதியா
உன்னைப்போல் ஆயிரம்பேர் எழுவர்
உள்ளதொரு ஆறுதல்தான் மீதம்
முன்னாலே முகங்காணா போதும்
சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை!

Razan al Najar -1

(காஸா எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவத் தாதி ரஸான் நஜ்ஜாருக்கு..)

*

Thanks to : Ashroff Shihabdeen (fb)

‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

கிறுக்குனாப் புலவர் கிறுக்கியது :)

Thanks to : ashroff shihabdeen.

மற்றவன் செய்வதெல்லாம் மயிரென்பர் நாளெல்லாம்
வெற்றாணி புடுங்கு பவர்!
– கிறுக்குனாப் புலவர்

அப்படிப் போடுங்க அஷ்ரஃப்..!

‘உங்களைப்போலவே நானும் அரைலூசுதான்’ என்று கவிஞர் அஷ்ரஃப் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது கடுங்கோபம் வந்தது. வராதா பின்னே, முழுலூசை எப்படி அரைலூசு என்று சொல்லலாம்? என்னச் சொன்னேன்!

தனது இரு புத்தகங்களையும் அனுப்பி வைத்தார் நண்பர். ஒன்று ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை‘ . பயணக் கட்டுரை, முத்தாரம்  வடிவில். இன்னொன்று மொத்தாரம். 216 பக்கங்கள். அரசியலைத் தவிர எதை வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற அனுமதியோடு (பின் எதைத்தான் எழுதமுடியும் இலங்கை இஸ்லாமியர்கள்?) அஷ்ரஃப் சிஹாப்தீனால் எழுதப்பட்ட பத்திகளின் தொகுப்பு. தினகரன் வாரமஞ்சரியில் பதினாறு மாதங்களாக எழுதியிருக்கிறார் – ‘தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பில். எதைத் தீர்க்க? அது முக்கியமில்லை, கண்ணீர்க் கோடுகள் வரைந்த கார்ட்டூனிஸ்ட் நஜி-அல்-அலி பற்றி, ‘என் கண்ணீரை மறைப்பதற்காகத்தான் நகைச்சுவையாக நடிக்கிறேன்’ என்று சொன்ன மேதை சாப்ளின் பற்றி, பங்களாதேஷின் ஷம்ஷூர் ரஹ்மான் பற்றி, குப்பை மேட்டுக் குடிகளான பர்மிய ஏழைகள் பற்றி, தேசம் இழந்த ஈராக் அகதிகள் பற்றி , அமெரிக்க உளறுவாயன் ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் பற்றி, மலையாளப் படைப்பாளி பாறக்கடவு பற்றி, மனித உரிமைப்போராளி மாயா ஏஞ்சலோ பற்றி… லிஸ்ட் பெரியது. மொத்தம் 68 பத்திகள். சில கட்டுரைகளில் அஷ்ரஃப் குறிப்பிடும் இலங்கை எழுத்தாளர்களை – முக்கியமாக ஓடையூரான், நாகூர் கனி, வாழைச்சேனை அமர் – நான் அறிந்திராதது வாசிப்பின் குறைவைச் சுட்டுகிறது. ஆஃபீஸில் படித்தால் அரபி அடிக்கிறானே..!

விமர்சனமல்ல, இணையத்தில் எடுக்கப்பட்ட நிறைய தகவல்களோடு நகைச்சுவை கலந்து தயாரிக்கப்பட்ட அஷ்ரஃப் பிராண்ட் அகர்பத்திகளின் சுகந்தத்தைக் கொஞ்சம் சொல்கிறேன்.

அ.முத்துலிங்கத்தின் ‘வியத்தலும் இலமே’ குறித்த கட்டுரையின் முடிவில் எழுத்தாளர்கள் பற்றி ஒன்று சொல்கிறார் அஷ்ரஃப். எனக்கான அட்வைஸாகத்தான் தெரிகிறது அது. ‘எழுதுவதைத் தள்ளிப் போடுவதற்குரிய வேலைகளில் அடிக்கடி ஈடுபடுவதாக வெற்றிகரமான ஒரு மேல்நாட்டுப் படைப்பாளி சொல்கிறார். தமிழில் எழுதுவோரும் இந்த முறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்!’

‘அடைதல்’ என்று ஒரு கட்டுரை. மெபிக்கோமா என்ற ஆப்பிரிக்க அரசன் வருகிறான். நீர்ப்பஞ்சமுள்ள நாடு அவனுடையது. கடவுளின் அருளை நாடுகிறான். அவர் ஒரு ஆற்றைப் பரிசாக கொடுக்கிறார். கரைபுரண்டு ஓடுகிறது ஆறு , ஆனால் நீர்வளமுள்ள வேறு பகுதிக்குப் பாய்கிறது. அதை  பஞ்சம் நிலவிய பகுதிக்கு திருப்பிவிடுவதிலேயே காலம் போகிறது. ஆறும் வற்றிவிடுகிறது. கடவுளிடம் கதறுகிறான் அவன்.

‘நீ தந்த ஆற்றை நீயே எடுத்துக்கொண்டது ஏன்?’ என்று கடவுளிடம் கேட்டான். கடவுளோ ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்றார். ‘அப்படியானால் எனக்குத் தந்த ஆறு எங்கே?’ என்று அரசன் கேட்டான். ‘நீதான் அதைப் பாலைவனத்துக்குப் பருகக் கொடுத்தாய். அந்தப் பிரதேசம் நீரின்றி வரண்டு கிடந்ததை  நான் அறிவேன். நீ அறிந்திருக்கவில்லை’ என்று கடவுள் பதில் சொன்னார். ‘பாலைவனம் அத்தனை நீரையும் உறிஞ்சிவிடப் போகிறது என்று தெரிந்திருந்தும்  நீ ஏன் எனக்கு எச்சரிக்கை செய்யவில்லை. உனக்கு யாவும் தெரிந்திருந்தும் எனக்கு ஏன் அதுபற்றிச் சொல்லவில்லை” என்று அரசன் கடவுளிடம் கேட்டான். கடவுள் உற்றுப் பார்த்தார்.  முழுநாடும் ஒருமுறை அதிர்ந்தது. அவர் சொன்னார் : ‘மெபிக்கோமா, இதுதான் மனிதர்களாகிய உங்களோடு உள்ள பிரச்சனை. நீங்கள் எதையும் சரியாகப் பெற்றுக் கொள்வதில்லை!’

இதே ‘அடைதல்’ கட்டுரையில் வேடிக்கையான இன்னொரு கதை இருக்கிறது. உண்மையாக நடந்ததாகத்தான் இருக்க வேண்டும். மேலுலகத்தில், ஒரு மதகுருவுக்கு வெறும் வெண்கலப் பதக்கம்தான் கிடைக்கிறது. இலங்கையின் தனியார் பஸ் டிரைவருக்கோ தங்கப்பதக்கம்! மதகுருவின் ஆட்சேபணைக்கு இறைவனின் பணியாள் பதில் சொல்கிறார்: ‘உமது உபதேசங்களின்போது மக்கள் தூங்கி வழிந்தார்கள். ஆனால் அந்த டிரைவர் பஸ்ஸில் ஏறிவிட்டாலோ எல்லோருமே நடுநடுங்கி மனமுருகிப் பிரார்த்தார்கள்!’

ஆலிம்ஷாக்கள் ‘கவனிக்க’ வேண்டும்!

அஷ்ரஃபின் ‘சீசன் சிறுகதைகளை’யும் படித்து சிரித்தேன். இதில் மூன்று கதைகள் இருக்கிறது. இன்னும் ஒரு நாள் கழிந்தால் தீபாவளி என்று அனுசூயாவும், இன்னும் ஒரு நாள் கழிந்தால் பெருநாள் என்று அனீஸாவும் இன்னும் ஒரு நாள் கழிந்தால் கிறிஸ்துமஸ் என்று அனீட்டாவும் ஒரேநேரத்தில் கவலைப்படுகிறார்கள். மலர்களுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதும் மட்டிகள் கவனிக்க!

‘ராஜா மகளின் ரோஜா இதழ்’ கட்டுரையில் ஒரு தென்கச்சி ஜோக். தென்கச்சி சொல்கிறார் :

ஒரு நாள் பஸ்ஸில் நான் நின்று கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். ஒருவன் என்னைப் பார்த்து விட்டான். மற்றவனை தட்டிச் சொல்கிறான். ‘அவரைப் பார்த்தால் வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ சொல்பவர் போலிருக்கிறார்’ என்று. அதுக்கு மற்றவன் சொல்றான் – ‘போடா அவர் எப்பேர்ப்பட்ட விஷயமெல்லாம் சொல்றார். இந்த மூஞ்சியைப் பார்த்தா அப்படித் தெரியலடா’

‘இலவச இறக்கைகள்’ என்று ஒரு கட்டுரை. ‘பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதற்காக அதில் உண்மையில்லை என்று எப்படிச் சொல்வது?’ என்று முடிக்கிறார் அஷ்ரப். அஸ்மாவிடம் இதை சொல்லிச் சிரித்தபோது ‘அந்த ஆளு ஒரு அரலூஸு போலக்கிது – ஒங்களப்போல’ என்றாள். இவளும் பாதிதான் என்னைப் புரிந்திருக்கிறாள்!

அஸ்மாவை சமாதானப்படுத்த ‘அரசனும் செம்படவனும்’ கட்டுரையில் வரும் கிளி-நாய்-பூனை கதையைச் சொன்னேன். ‘ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை’ என்று கேட்டதற்கு ஒரு பெண் பதில் சொன்னாளாம், நான்தான் ஒரு கிளியையும், ஒரு நாயையும், ஒரு பூனையையும் வளர்க்கிறேனே என்று. அதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? ‘இவை மூன்றுமே ஆண்களின் வேலைகளைத்தானே செய்கின்றன. கிளி ஆண்களைப்போல அவ்வப்போது ஆணையிடுகிறது. நாய் அவ்வப்போது ஓய்வின்றி குரைக்கிறது. பூனை கால நேரம் பார்க்காமல் ஊர் சுற்றித் திரிகிறது’

அஸ்மாவுக்கு திருப்தி. ‘அப்ப நீங்க மட்டுதான் லூஸு’ என்று உதைத்தாள். அஷ்ரஃப் பாணியில் சொன்னால் , இன்பமாய் இருக்கிறது!

வில்லங்கமான ஒரு ‘தபாற்காரர் கதை’யை கொஞ்சம் இங்கே குறிப்பிடவா? வேண்டாம், நேற்று காலை ஆறரை மணியிலிருந்து நான் ஆபாசக்குறிப்புகள் எதுவும் எழுதுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அஷ்ரஃப் என்னைப் போலல்ல. நகைச்சுவை பிரமாதமாக வருகிறது அவருக்கு. அந்த ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ நூலில் ஒரு சம்பவம். கேரளாவின் படகுவீட்டுக்குள் நண்பர்களோடு காலடி எடுத்துவைக்கும்போது படகோட்டியிடம் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஷ்ரஃப் நடுங்கியபடி கேட்கிறார்: ‘உங்களுக்கு நீச்சல் தெரியும்தானே?’

பதிவின் தலைப்புக்கு வரவேண்டும்…’பொன் செய்யும் மருந்து’ கட்டுரையில் ‘யாரோ’ ஒருவர் சொன்னதைப் படித்து நெகிழ்ந்துவிட்டேன். இதல்லவா குடியரசு தின செய்தி!

என்னிடமுள்ள பெருமையை நீக்கி விடும்படி  இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். அது நான் எடுத்துக் கொள்வதற்கானது அல்ல; நீயாகவே துறந்து விடுவதற்கானது என்று சொன்னான். மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருமாறு இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். நான் உனக்கு ஆசிகளை வழங்குகிறேன்; அதிலிருந்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்வது உன்னைப் பொறுத்தது என்று சொன்னான். எனக்குப் பொறுமையைத் தரும்படி இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். அது பெருந்துன்பங்களின் வழித் தொடர்புடையது. அது வழங்கப்படுவது அல்ல; அடைந்து கொள்ளப்படுவது என்று சொன்னான். வாழ்வின் இன்பங்களையெல்லாம் அடைவதற்கான சகலத்தையும் தருமாறு இறைவனைக் கேட்டேன். அவன் மறுத்தான். நான் உனக்கு வாழ்க்கையைத் தந்திருக்கிறேன்; இன்பங்களை அடைவது உன்னைப் பொறுத்தது என்று சொன்னான்.

இறைவன் என்னில் வைத்திருப்பதைப் போல மற்றவர்களில் அன்பு செய்ய உதவுமாறு இறைவனைக் கேட்டேன். இறைவன் சொன்னான்: “அப்படிப் போடு!”

***
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன் | ashroffshihabdeen@gmail.com

அஷ்ரஃப் பற்றி மேலும்

*

அஷ்ரஃப் ஷிஹாப்தீன் கதைகள் :

‘அது’ – உயிரோசை

செய்னம்புவும் சின்ன மாமாவும் –  கீற்று

பட்டாக்கத்தி மனிதர்கள் – கீற்று

பூனைக் காய்ச்சல் – திண்ணை

***

பதிவிறக்கம் செய்க (pdf) : ‘யாத்ரா’ இதழ் 1  & ‘யாத்ரா’ இதழ் 8

***

‘தீர்க்க வர்ணம்’ (விலை : 250) பெற :

Yaathra Publication
37, Sri Sidhartha Mawatha, Mabola, Wattala
Sri Lanka
Cell : 0777 303 818
yaathra@hotmail.com