அமீரகத்தின் தாஸ்தோ-விஸ்கியும் சென்றவருடம் சிறந்த படைப்பாசிரியர் விருது பெற்றவருமான எங்கள் அய்யனார் விஸ்வநாத் எழுதிய விஞ்ஞானப் புனைவு இது. தலைப்பு தந்த போதையில் இதையே அமீரகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு டைட்டிலாக வைக்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தார்கள். அப்புறம் ஒருவழியாகத் தெளிந்து, ஒன்றுமில்லாத ஒட்டகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருடைய வலைப்பக்கத்தில் இந்தக் கதையை முழுசாகப் பகிர்ந்திருக்கிறார். ஆனாலும் நாமும் இங்கே கொஞ்சம் போடலாமே, அவருக்குப் பிடித்த ‘தெலுஸா மனஸா‘ பாடலைக் கேட்டுக்கொண்டே. தேங்க்ஸ் அய்ஸ்! – AB

முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத்
லீமா இன்றைக்குள் உறுதிபடுத்தச் சொன்னாள். நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எண்பதாவது தளத்தில் இருக்கும் பறக்கும் கார் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தோம். இருவரின் அலுவலகத்திற்கும் எதிரெதிர் திசையில் பயணிக்க வேண்டும். லீமா அவளது அலுவலகப் பறக்கும் காரில் ஏறியபடியே மீண்டும் சைகையில் நினைவூட்டினாள். காலை ஏழு மணி ஆகியிருந்தது. இந்த உயரத்திலிருந்து பார்க்கும் போது கீழேயும் மேலேயும் வெறும் புகைமூட்டமே சூழ்ந்திருந்தது. வானம் பூமி இரண்டுமே அற்பக் கற்பனைகளாகத் தோன்றின. தொலைவில் இருந்த நூறு மாடிக் கட்டிடங்கள் லேசாய் தென்பட்டன. சூரியன் எப்போதாவது வரும். வெளிச்சத்தைப் பார்த்தே நாட்களாகின்றன. சூரிய ஒளிக்கதிரின் மினுமினுப்பு நினைவிற்கு வந்தது. உடன் மிளாவின் நினைவும். அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டேன். மிளாவின் நினைப்பு வரவே கூடாது. என் அலுவலகப் பறக்கும் கார் வந்தது ஏறிக் கொண்டேன்.
இரண்டரை நிமிடம். அலுவலகத்தின் என் அறைக்குள் இறங்கினேன். இன்றைக்காவது நியூரோ சர்ஜனை சந்தித்து விட வேண்டும். லீமா குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை எப்போது சொன்னாளோ அன்றிலிருந்தே தமிழ் பேசும் நியூரோ சர்ஜனை தேடிக் கொண்டிருந்தேன். நளன் என்கிற ஒரு மருத்துவர் கிடைத்தார். ஆனால் சந்திக்கத்தான் முடியவில்லை. இன்று கிடைத்திருக்கிறது. காலைப் பதினோரு மணிக்கு சந்திக்க வேண்டும். அவரின் அலுவலகத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டேன். வாகனத்தை முன்பதிவு செய்தேன். வேலையில் விழுந்தேன்.
பத்து ஐம்பதிற்கு வாகனம் சன்னலுக்காய் வந்தது. சன்னலைத் திறந்து கொண்டு ஏறினேன். ஐம்பத்தேழிற்கு மருத்துவமனை வரவேற்பரையில் இறங்கிக் கொண்டேன். பதினோரு மணிக்கு உள்ளே அழைக்கப்பட்டேன். மருத்துவர் நளன் எழுந்து கைக்குலுக்கினார். தமிழ் பேசுபவர் என அறிந்ததும் மகிழ்ந்ததாகச் சொன்னார். நல்ல தமிழில் பேசினார்.
எனக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. மிளாவிலிருந்து தொடங்குவது சரியாக இருக்குமென நினைத்து எங்களின் முதல் சந்திப்பிலிருந்து ஆரம்பித்தேன்.
”முள்ளம்பன்றி விடுதியில்தான் நாங்கள் முதலில் சந்தித்துக் கொண்டோம். அங்கு வைத்தா? என்றால், இல்லை. அதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம். அவசரத் தீண்டல்கள், காதலின் தீவிர தாப சமிக்ஞைகள் எல்லாமும் முன்பே இருந்தன. ஏன், இந்த விடுதிக்கு வரும் வரும் வழியில் கூட காரில் ஓட்டுனர் அசந்த நேரம் பார்த்து அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டோம். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்திவிட்டு, வெளியே வருகையில் கிடைத்த யாருமில்லா கணமொன்றில் கூட அவளைப் பின்புறமாய் அணைத்துக் கொண்டு அவளின் மீதிருந்தப் பித்தைச் சொன்னேன். ஆனாலும் விடுதியில்தான் முதல் சந்திப்பெனக் கூறுவேன். இரு உடல்களின் ஆரத் தழுவுதலே உயிரின், ஆன்மாவின் முதல் சந்திப்பாக இருக்க முடியுமல்லாவா, அது இங்குதான் நிகழ்ந்தது. இந்த முள்ளம் பன்றி விடுதி, கடல் மட்டத்திலிருந்து எத்தனையோ ஆயிர அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு மலைத் தொடர்களின் அசல் வசீகரத்தை நாங்கள் தங்கியிருந்த அறையின் விஸ்தாரமான பால்கனியிலிருந்து பார்க்க முடியும். பூச்சிகளின் அடர் பின்னணி இசையோடு இரவு முழுக்க குளிரில் நடுங்கியபடியே அந்தப் பால்கனியில் உடல்கள் புதைந்து கிடந்தோம். அறைக்குள் சென்றால் அனுமதியற்றப் படுக்கைகளை கண்காணிக்கும் கேமிராவிற்குள் விழுந்துவிடுவோம் எனப் பயந்ததை விட தூங்கிவிடுவோமே என்றுதான் அதிகம் பயந்தோம். எங்களுக்கே எங்களுக்காய் அந்த அடர் இருள், குளிர் இரவு இருந்தது. நாங்களும் அதனோடு இருந்தோம். “
பேச்சைத் தொடரமுடியவில்லை. மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டேன். என் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நளன் எழுந்து நின்றான்.
”ஏதாவது அருந்துகிறீர்களா?”
”தேநீர்” என்றேன்.
நளன் கதவிற்காய் மெல்ல நடந்துபோய் அதன் பக்கவாட்டில் இருப்பதே தெரியாமல் இருந்த தொடுதிரையை உயிர்ப்பித்து தேநீருக்குச் சொன்னான்.
திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு
“பிறகு?” என்றான்.
”அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் திட்டம். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் எங்களுக்கானதாய் பாதுகாத்தோம். ஆனால் எங்களால் எங்களிடமிருந்து மீளமுடியவில்லை. நகரத்தில் காத்துக் கிடக்கும் எங்களின் தனித்தனி சொந்த அழுத்தங்கள், வேலைகள், நிர்பந்தங்கள் யாவும் மறந்து போயின. என் நாற்பது வருட வாழ்வில் முதன்முறையாய், இந்த வாழ்வு என்னுடையது, எனக்குப் பிடித்தபடி இருப்பதில் என்ன தவறு எனத் தோன்றியது. அடுத்த நொடியே அவளும் இதை ஆமோதித்தாள். இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் கடந்த மூன்று மாதங்களாக இப்படித்தான் நடக்கிறது. எனக்குத் தோன்றுவது எல்லாமே அவள் காண விரும்பியது. அவள் விரும்புவது எல்லாமும் என் அத்தனை வருடக் கனவாய் இருந்தது. இந்த அபாரமான சங்கமத்தின் ஆச்சரியக் கரைகளைக் காணவே இந்த விடுதிக்கு வந்திருந்தோம். அவள் இதற்கு ஒரு பெயர் வைத்திருந்தாள். ’சோல்மேட்ஸ்’. இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு கூடவே ”இது ஆன்மாவின் இணைப்பு. நீயும் நானும் வெறும் நண்பர்களல்ல, காதலர்களுமல்ல; சோல்மேட்ஸ். இப்படி எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதுதான் விதி.” எனச் சொல்லியபடியே என்னில் இன்னும் அழுந்தப் புதைந்து கொள்வாள். நான்கு நாட்கள் அங்கிருந்தோம். மூன்று நாட்கள்தாம் ஆனதாய் நினைத்துக் கொண்டிருந்ததுதான் விநோதம். விடுதியறையை காலி செய்யும்போதுதான் தேதியைப் பார்த்தோம். எங்களைத் தனித்தனியாய் விழுங்கக் காத்திருக்கும் கடமையெனும் திறந்தவாய் முதலைகளை நினைத்து அப்போதுதான் பயமே எழுந்தது. இருவரும் சில்லிட்ட உள்ளங்கைகளைப் பிணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி, நகரம் வந்தடைந்தோம்.”
அறைக்கதவு திறந்தது. மேற்சட்டை அணிந்திராத ஒரு நாயர் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் தேநீர் கொண்டு வந்து தந்தார்.
”இது ஸோரோ”
என அறிமுகப்படுத்தியபடியே அந்த நாயரின் தலைக்காய் நளன் கையை அசைத்தான். அவருக்கு மேற் சட்டை வந்தது.
ஸோரோ அவசரமாய் பேசியது,
”மன்னித்துக் கொள்ளுங்கள், பக்கத்து அறை அஜிதனுக்கு தேநீர் கொண்டு சென்றேன். அவருக்கு எல்லாவற்றிலும் நீரில் மூழ்கிப் போன அவரின் கேரளம் இருந்தாக வேண்டும். உங்கள் அறைக்கு வரும்போது தவறுதலாக அப்படியே வந்துட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்”
என்றபடியே ஸோரோ தன் வலது கண்ணைத் தொட்டது. நீலநிறத் தொடுதிரை அதன் முன்னால் உயிர்த்தது. எண்ணற்ற அல்கரிதம்கள் அந்த அறையில் மிதந்தன. ஸோரோ ஒன்றை அழுத்தித் திருத்தியது. பிறகு கண்ணை மூடிக் கொண்டது
நளன் புன்னகைத்தான்.
ஸோரோ வெளியேறியது.
எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வெள்ளை நிற அறை. எதிரெதிரே இருந்த இரண்டு மர இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அறையில் வேறெந்தப் பொருளுமில்லை. உரையாடலை ஆரம்பிக்கும்பொழுது என் பின்னங் கழுத்தில் சின்னஞ்சிறு குமிழொன்றை நளன் பொருத்தினான். இது உறுத்தாது, நம் உரையாடலையும் உங்கள் மன உணர்வையும் வெறுமனே பதிவு மட்டும் செய்யும். நம்முடைய சிகிச்சைக்கு அத்தியாவசியமானது எனச் சொல்லியிருந்தான். அந்த சாதனத்தை வைத்த உணர்வு கூட எனக்குத் தோன்றவில்லை.
”சொல்லுங்க”
நளன் என் கவனத்தைத் திருப்பினான். தொடர்ந்தேன்,
“இருவரும் எங்கள் தினசரிகளுக்கு வந்து சேர்ந்தோம். கடந்து போன நான்கு நாட்களுக்கான கேள்விகளைச் சமாளித்தோம். அதற்கு அடுத்த நாள் இயல்பான நாளாக மாறிப்போனது. நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் நாம் இல்லை என்றால் அது இயங்காது என எண்ணியது எத்தனை முட்டாள்தனம் எனப் புரிந்தது. எங்களின் உலகங்களை அவ்வப்போது துண்டித்துக் கொண்டோம். எந்த பயமும் இல்லாமல் அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டோம்.
மலைகள்தாம் எங்களை ஈர்த்தன. குறிப்பாக மேற்கு மலைத் தொடர். மனிதர்கள் போக முடிந்த எல்லை வரை போனோம். காலம், அகாலம் என இலக்கில்லாமல் அதன் மடியில் விழுந்து புரண்டு எழுந்தோம். ஒவ்வொரு பயண முடிவிலும் அவ்வளவு புதிதாய் மலைகளிலிருந்து கீழே இறங்கினோம். அடுத்த முறையோ இன்னும் ஆசையாய் மலைகளின் மீதேறினோம். எங்களுக்கு இயற்கை மீதான அச்சம் இல்லாமல் இருந்தது. வனத்தின் ரகசிய இடங்களைத் தேடித் தேடி அலைந்தோம். மலையருவிகளை, ஓடைகளைத் தொடர்ந்து போய் அதன் ரகசிய ஊற்றுக்களை அறிந்தோம். பகலே எங்களின் கொண்டாட்டப் பொழுது. அடர் வனங்களில், மரச்சரிவுகளில் சூரிய ஒளி அவ்வளவு ஆசையாய் ஊடுறுவும். வெளிச்சமிருந்தாலே மகிழ்ச்சிதான். அதன் உதவியுடன் மலைத்தாயின் ரகசிய அடுக்குகளை கண்டறிந்து, அதன் இடுக்குகளில் எங்களைப் புதைத்தபடி கலவி கொண்டோம். விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், பள்ளத்தாக்குகள், சரிவுகள், கடும் மழை, கொடுங்குளிர் என இயற்கையின் எந்த ஒரு வடிவமும் எங்களைத் தொந்தரவு செய்யவில்லை. இரவில் மட்டும் எங்காவது அடைந்து கொள்வோம். அந்த சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு கானக விலங்கின் இரையாவது குறித்தும் எங்களுக்கு சம்மதமிருந்தது. ஒரு பசித்த புலிக்கு எங்களைத் தின்னக் கொடுக்கவும் தயாராக இருந்தோம். எனவே இயற்கையின் அகண்ட பேரதிசயங்களில் முழுமையாய் திளைத்துக் கிடந்தோம்.
மலைகளையும் காடுகளையும் தவிர்த்து புராதன இடங்களைக் காணுவதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. இயற்கைச் சீற்றங்களால் முற்றிலும் அழிந்து போன தமிழ்நாட்டின் எச்சங்களை அடிக்கடி போய் பார்த்து வருவோம். புத்தகங்கள் வழியாய் அறிந்திருந்த நகரங்களின் எச்சங்களைத் தேடுவோம். உடைந்து விழுந்து கிடக்கும் கோபுரங்கள், சிதைந்த கோவில்கள், சரிந்த மலைகள் என எல்லாவற்றையும் தேடித் தேடிப் பார்ப்போம். அதெப்படி ஒரே இரவில் தமிழ்நாட்டின் அத்தனை வீடுகளும் மண்ணிற்குள் புதைந்தன என ஆச்சரியமாய் பேசிக் கொள்வோம். மரங்களோ பறவைகளோ வேறு எந்த உயிரினங்களோ இல்லாத பிரதேசத்தை பார்ப்பதும் விநோதமானதுதான். எங்களுக்கு இந்த மாதிரியான சாகசங்களும் பிடித்திருந்தன.”
நளன் ஆச்சரியமாய் கேட்டான்.
“தமிழ் நாட்டிற்குள் செல்ல எப்படி அனுமதி வாங்கினீர்கள்? அதன் எல்லைகள்தாம் அடைக்கப்பட்டிருக்கின்றனவே!”
மேலும் வாசிக்க : https://ayyanaarv.blogspot.com/2019/06/blog-post.html
*
Thanks : Ayyanar