ஜீவனம் (கவிதை) – அமுதன் இஸ்மாயில்

நண்பர்கள் சிலரின் கவிதைகளைப் படித்திருப்பார் போல, ‘புதுக்கவிதை குப்பை குப்பையாக வந்து கொண்டே இருக்கும். சட்டென்று ஒரு மாணிக்கம் தென்படும்’ என்று சொல்லியபடி சுஜாதா தேர்ந்தெடுத்த கவிதை இது. கணையாழி கடைசிப் பக்கங்களில் (ஜூலை 1993) கண்டேன். ஞானியின் நிகழ் சிறப்பிதழில் வந்த கவிதையாம்.  கவிஞரைப் பற்றி கூடுதல் விபரங்கள் தந்தால் மகிழ்வேன். தவளைகளைப் பற்றியும் தரலாம்! – ஆபிதீன்

***
ஜீவனம் (கவிதை) – அமுதன் இஸ்மாயில்

நேற்றைய தூறல் கிடக்கும்
அடிதளக் குழியில்
சவ்வுக்கால் பரப்பி
குதித்துக் கொண்டிருந்தது தவளை.
கான்க்ரீட் கலக்கியாயிற்று.
அந்த சின்ன ஜீவனை
எடுத்து வெளியே போட
பத்தரையடிக் குழியில் இறங்கப்போன
வேலைமெனக்கெட்ட சுப்பிரமணியை
நேரம் கடத்துவதாய்
கெட்ட வார்த்தையாடினான்
கடன்கார மேஸ்திரி.
ஒவ்வொரு சட்டி
திருட்டு கான்க்ரீட் வந்து விழும் போதும்
தாவிக் குதித்து
ஒதுங்கி ஒதுங்கி இறுதியாய்
சப்பாத்தித் தோல் நசுங்க
புதைந்து அமைதியானது
வேலையாகிக் கொண்டிருக்கிறது
வேகவேகமாய்.

***
நன்றி : அமுதன் இஸ்மாயில், உயிர்மை பதிப்பகம்