பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

கல்கி இதழில், ஏப்ரல் 1964-இல் வெளியான சிறுகதை இது. காலச்சுவடு பதிப்பகத்திற்காக கவிஞர் சுகுமாரன் பதிப்பித்த முழுத்தொகுப்பில் கிடைத்தது. நன்றியுடன் பகிர்கிறேன். – AB

**

thi janakiraman - tamilwiki 2

பாஷாங்க ராகம் – தி. ஜானகிராமன்

… ‘என் தாயாருக்கு நீங்கள் அனுப்பிய அனுதாபச் செய்தி கிடைத்தது. ‘நிறைந்த சங்கீத அறிவுடன், ரசிக சிரோமணியாகத் திகழ்ந்தார் தங்கள் கணவர் ஸ்ரீபலராமன். பயமின்றியும் பாரபட்சமின்றியும் அவர் சங்கீத விமர்சனம் செய்து வந்ததே, சங்கீதமே மூச்சாக அவர் வாழ்ந்த லட்சிய நோக்குக்குச் சான்றாகும். அவர் மறைவைச் செவியுற்று இசையுலகம் துயரில் ஆழ்ந்து கிடக்கிறது. அன்புக் கணவரைப் பிரிந்து துயரெனும் இருளில் தவிக்கும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தை எங்கள் பிருங்கி சங்கீத சபை தெரிவித்துக்கொள்கிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள்.

அம்மா அதைப் படித்துவிட்டுச் சிறிது நேரம் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். “நன்றி, என்று ஒரு வார்த்தை பதில் எழுதிப் போட்டுவிடட்டுமா?” என்று கேட்டேன். “இத்தனை தப்பு இருக்கிற கடுதாசுக்கு விவரமாகத்தான் எழுதிப் போடேன்” என்று சொல்லிப் போய்விட்டாள். போய் முன்வாசல் படியில் நின்று, “இந்தக் கடுதாசு உனக்கு சரியாகப்படறதா?” என்று கேட்டாள்.

மறுபடியும் படித்து, ஒவ்வொரு வார்த்தையாக எடை போட்டுப் பார்த்தேன். அநேகமாக எல்லாமே தவறு என்று தோன்றிற்று. அம்மாவிடம் அதைச் சொல்லியும்விட்டேன். “அப்படீன்னா பொய்யைக் கழுத்தை முறிச்சுப் போடு” என்று சொல்லிவிட்டு வாசற்படி இறங்கிப் போனாள்.

மறுபடியும் உங்கள் கடிதத்தைப் படித்தேன். அப்பாவின் கெட்டிக்காரத்தனத்தை நினைத்துச் சிரிப்பு வந்தது. முரட்டு ரசிகர்களான பிருங்கி சபையார் கண்ணில் மண்ணைப் போட்டு விட்டாரே என்று தோன்றிற்று. அப்பா ரசிகரும் இல்லை. சிரோமணியுமில்லை. பயந்து பயந்துதான் பொழுதைப் போக்கினார் அவர். அவருடைய லட்சியம் சங்கீதமல்ல. பக்ஷ்யம்தான். காலட்சேப பாகவதர்கள் அடுக்குகிற ஏழு ஸ்வரங்களுக்குச் சுத்தம், சாதாரணம், அந்தரம், சதுச்ருதி, த்ரிச்ருதி, ஷ்ட்ச்ருதி, கோமளம், தீவிரம் என்றெல்லாம் அடைமொழிகளுடன் வேறுபாடுகள் இருப்பதுபோல் ஒவ்வொரு சுவைக்கும் பன்னிரண்டு வகைகள் உண்டு என்று அவர் கட்சி. உண்டி வகைகளை உண்பதுதான் அவருடைய பரம புருஷார்த்தம். அம்மாவுக்கும் அவருக்கும் இடையே எந்தவித அன்பும் மலர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இருந்தால் மொட்டிலேயே கருகியிருக்க வேண்டும். துயரெனும் இருளில் அம்மாவோ நாங்களோ தட்டித் தடவி நடக்கவில்லை. நான் மனையியலையும் சங்கீதத்தையும் விசேஷ பாடமாக எடுத்துக்கொண்டு ஆனர்ஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். என் தம்பி கெமிஸ்டாக ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அவனும் வில்லி பார்லாவில் குடியிருக்கிறோம். அம்மா – கோரேகானில் அன்புக் கணவரோடு – இந்த நாள் கணவரோடு – சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அப்பாவின் மனைவியாக அல்ல. போலீஸ்காரர்கள் வந்து அவரைப் பைத்திய ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய்ச் சேர்த்த பிறகுதான் அம்மாவுக்கு ஆறுதல் கிடைத்தது. மூன்று வருஷங்கள் கழித்துச் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டுவிட்டாள்.

மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே என்பார்கள். அந்தப் பாவத்தை என் அப்பா தன் தலையில் சுமந்துகொண்டு அலைந்தார். கடைசியில் அது அவர் தலைக்குள் இருப்பதையே பாதித்துவிட்டது. அவருடைய பிதா (என் தாத்தா) செய்த பாவம் பிள்ளைக்குச் சங்கீதம் கற்பிக்க முயன்றது. மாதா (என் பாட்டி) செய்த பாவம் அதைத் தடுத்து நிறுத்தாமல் போனது. அதனால் சிலவேளை அப்பாவை நினைக்கும்போது வருத்தமாயிருக்கும்.

தாத்தாவுக்கு மூன்று பிள்ளைகள். முதல் இரண்டு பிள்ளைகளும் திவ்வியமாகப் பாடுவார்களாம். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா, சங்கீதத்திலும் கரை கண்டவர். கரையைக் கண்டுவிட்டாலும் எப்போதும் அதிலேயே நீந்திக் கொண்டிருப்பாராம். பிள்ளைகள் பாடுவதைப் பார்த்து உடம்பே வெடிக்கும்போல் பூரித்துக் கொண்டிருப்பாராம். தக்க வயது வந்ததும் சங்கீத இலக்கண இலக்கியங்களையெல்லாம் கரைத்துப் புகட்டிவிடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் அவர் இதயமே வெடிக்கிற சம்பவம் நிகழ்ந்தது. அந்த முதல் இரண்டு பிள்ளைகளும் ஒரு சாதாரண ஆற்றில் நீந்தப் போய், உயிரை ஆற்றிடம் தந்து, உடம்பாக எங்கோ அகப்பட்டார்களாம். தாத்தாவுக்குத் துயரம் தாங்கவில்லை. தம் சங்கீத சொத்தை அவர் இனி மேல் யாருக்கு எழுதி வைப்பார்? மூன்றாவது பிள்ளைக்குத்தானே? வேறு வாரிசு ஏது? எனவே, என்னுடைய அப்பாவுக்கு ஏழு வயதிலிருந்தே சங்கீதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். வாழ்வில் அநித்தியத்தை எண்ணி, சங்கீத இலக்கண சாஸ்திரங்கள் வரலாற்று நூல்கள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாகப் பாடம் சொன்னார். என் அப்பாவுக்குப் பாட்டு வராவிட்டாலும் கடம் நன்றாக வரும். எத்தனை பெரிய புத்தகமானாலும் கடம் போட்டுவிடுவார். கேட்ட இடத்தில் தலையில் பிரம்ம தண்டத்தை வைத்தாற்போல் கடகடவென்று ஒப்பிப்பார். பாடத்தான் வரவில்லை. தாத்தா அவரை அடியோ அடி என்று அடித்தார். உள்ளங்கை என்ன, முஷ்டி என்ன, பாக்குவெட்டி என்ன, புத்தகம் என்ன, டம்ளர் என்ன, டபரா என்ன- இப்படிப் பல ஆயுதங்களை அவர் மீது கண்ணை மூடிக்கொண்டு பிரயோகம் செய்வார். இப்படி வெகு காலம் வரையில் இந்த சிட்சை நடந்தது. இதற்கிடையில் என் அப்பாவுக்குக் கல்யாணமும் நடந்தது. ஆனால் இசைப் பயிற்சியும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. அதனுடைய பிரிக்க முடியாத அங்கமான வசவுகளும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தன. எத்தனை பொழிந்தும் விளைச்சலில்லை. கட்டாந்தரையில் எப்படி முளைக்கும்? அப்பா சங்கீத சாஸ்திரங்களை நெட்டுருப் போட்டதனைத்தும் பாத்தியில் எருவாகக் குவிந்திருந்தது. ஆனால் பாத்தி கருங்கல். பாட்டு வரவில்லை. தாத்தா அடிக்கடி பெருமூச்சுவிட்டு ஓய ஆரம்பித்தார். “அட, பாஷாங்க சனியனே!” என்று அடிக்கடி பிள்ளையை ஒரு புதுமுறையில் விரக்தியுடன் திட்ட ஆரம்பித்தாராம். “நீ எங்கேடா இங்கே வந்து பிறந்தே?” என்று பெருமூச்சு விடுவாராம்.

இதை என் அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் சின்னப் பெண். சாந்தி கல்யாணம் ஆகவில்லை. ஆகாவிட்டாலும் புருஷன் வீட்டுக்குப் பெண்ணை ஒரு மாசம் கொண்டுவிடுவதும் அழைத்துப் போவதும் அந்தக் காலத்து வழக்கம். “பாஷாங்க சனியனே!” என்றால் என்ன என்று அவளுக்கு அப்பொழுது புரியவில்லை. பாஷாணம் என்பதை அப்படித் தவறிச் சொல்கிறாரோ என்று தோன்றுமாம். கடைசியில் ஒரு நாள், “பாஷாங்க ராக ராக்ஷசப் பயலே ஒழி” என்று ஆசீர்வாதத்துடன் சங்கீதப் பயிற்சிக்கு மங்களம் பாடி முடித்துவிட்டாராம் தாத்தா.

தாத்தா பிறகு அதிக காலம் ஜீவித்திருக்கவில்லை. ஒருநாள் இகவாழ்வை நீத்தார். நீக்கும்போது அவரால் பாட முடியவில்லை. பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாராம்.

அவர் போனதும் என் அப்பா ‘கூகூ’ என்று பச்சைக் குழந்தை மாதிரி அழுதாராம். தம் தந்தையார் கடைசியில் பார்த்துப் பார்த்துப் பேச முடியாமல் கண்ணீர் விட்டதன் அர்த்தத்தை ஆராய முனைந்தார். கண்டுபிடித்துவிட்டார். “என் கோட்டையெல்லாம் தகர்ந்துவிட்டதே” என்றுதான் அவர் வெம்பியிருக்க வேண்டும் என்று அப்பாவுக்குப் புரிந்துவிட்டது. அந்தக் கணமே, இனி வேலைக்குப் போவதில்லை, சங்கீதத்துக்கே உழைப்பது என்று தீர்மானம் செய்துவிட்டார்.

சங்கீதத்தைப் பற்றியே பேச ஆரம்பித்தார் என் தந்தை. வீட்டில் பேசுவார். வெளியில் பேசுவார். ஹோட்டலில் பேசுவார். ரயிலடியில் பேசுவார். நண்பர்களோடு பேசுவார். சங்கீதக் கச்சேரிக்கு யாராவது நிர்பந்தமாகக் கூப்பிட்டுப் போனால், வெளியே உட்கார்ந்து சங்கீதத்தைப் பற்றிப் பேசிவிட்டு வந்துவிடுவார். அதனால் அவரைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தார்கள். ‘வலமோ இடமோ போகட்டும். மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்று சங்கீத வித்துவான்கள் ஓடி ஒளிந்தார்கள். அதற்காக அவருக்கு நண்பர்களில்லாமல் போய்விடுவார்களா? அவரைப்போலவே நாலு பேர்கள் சேர்ந்து கொண்டார்கள். காசுள்ள ஆசாமி என்றால் விடுவார்களா? அவரோடேயே சாப்பாட்டுக்கும் வந்துவிடுவார்கள். இரண்டு கறி, கூட்டுகள், பிட்ளை, ஆமவடை, பாயஸம் இப்படி அம்மா சாப்பாடு பண்ணிப் போடுவாள். அந்தச் சிரமங்களைக் கூட அவள் சட்டை செய்யவில்லை. கூடத்திலிருந்து அப்பா பேசுகிற மாவு மிஷின் குரலையும் நண்பர்களின் குரலையும் தான் அவளால் சகிக்க முடியவில்லை. சில சமயம் குஷி தாங்காமல் அப்பா பாடிக்கூடக் காட்ட ஆரம்பித்துவிடுவார். அம்மாவின் முகத்தில் அப்போது ஒரு பேயறைந்த கிலி வந்து படர்வதைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நண்பர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அப்பாவுக்கு நாலு கறியில்லாமல் சாப்பிடத் தெரியாது. அப்பளத்தைச் சுட்டால் பிடிக்காது. காலையில் இட்டிலி அல்லது பொங்கல் காப்பி, எட்டு மணிக்கு ஒரு காப்பி, பத்து மணிக்கு இரண்டு பிஸ்கட் காப்பி, பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு, இரண்டு மணிக்குக் காப்பி, நான்கு மணிக்கு டிபன் காப்பி, ஆறு மணிக்குக் காப்பி, எட்டு மணிக்குச் சாப்பாடு, பத்து மணிக்கு டீ, பன்னிரண்டு மணிக்கு ஓமப்பொடி, கீமப் பொடியோடு இஞ்சி இடித்த கொத்தமல்லிக் காப்பி. நடுநடுவே ஹோட்டல் டிபன் வேறு. எப்படி இந்த மாதிரி சாப்பிட முடிகிறதென்று அம்மா பயந்து போய்விட்டாள். வர வர அந்தப் பயம் எப்படி இனிமேல் இத்தனையும் பண்ணிப் போடப் போகிறோம் என்ற மலைப்பாக மாறிவிட்டது. ஏனென்றால், அப்பாவின் சொத்து எப்பொழுதும் குட்டிபோட்டுக் கொண்டேயிருக்கிற பணக்காரச் சொத்து இல்லை. தாத்தாவின் பிராவிடண்ட் பணம், ஊரிலிருந்த வீடு, சாப்பாட்டு நிலம் – எல்லாம் இந்தச் சாப்பாட்டிலேயே கரைந்து போய்விட்டன.

இப்போது சங்கீத வித்தவான்களுக்கு அப்பா கடிதம் எழுத ஆரம்பித்தார். உங்களைப்போல் பாடுகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று ஒரு நூறு பேருக்குக் கடுதாசு போட்டுவிட்டார். சிலர் நன்றி தெரிவிக்க நேரிலேயே வந்தார்கள். சிலரிடம் இவரே போனார். எதற்கு? கடன் வாங்க. ஓர் இருபது பேரிடம் பலித்தது. ஆனால் அதற்குள் சங்கீதக்காரர்களுக்கு அடிக்கடி கூடிப் பேசுகிற சந்தர்ப்பங்கள் இருப்பதால், “எனக்கு மட்டும் எழுதியிருக்கிறார்” என்று அவர்கள் குடுமியில் அப்பா சுற்றியிருந்த பூ வாடிவிட்டது. பயந்து கொண்டிருந்தவர்கள் இப்போது சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாலுகறி, கூட்டு பச்சடி, ஒரு கறியாகவும் வற்றல் குழம்பாகவும் குறைந்துவிட்டன.

“என்னடீ! உங்க அப்பாவாத்துச் சமையல் மாதிரி ஆயிட்டுது!” என்று ஆரம்பித்தார் அப்பா.

உண்மையில் அம்மா இப்போது அவள் அப்பா அம்மா வீட்டிலிருந்து தான் சாமான் சஜ்ஜாவெல்லாம் வரவழைத்துக் கொண்டிருந்தாள். அதுதான் எத்தனை நாட்கள் நடக்கும்? அவள் அப்பா அம்மா மட்டும் என்ன சிரஞ்சீவிகளா? அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். அம்மாவின் அண்ணன் தம்பிகள் சும்மா இருந்தால் அவர்களுடைய மனைவிகள் சும்மா இருப்பார்களோ?

“உங்க அப்பன் மாதிரின்னு நெனச்சிண்டியோன்னேன்” என்று அம்மாவைப் பார்த்து அடிக்கடி குத்தி நெருடிக்கொண்டேயிருப்பார் அப்பா.

“உங்கப்பாவுக்கு நானும் அவர் மாதிரி பணம் பணம்னு பறக்காம இருக்கேனேன்னு குறை! பணம்னு சம்பாதிக்காவிட்டாலும் வரவா போறவா குறைச்சல் இல்லை. பத்து பணக்காரனுக்குச் சமமா காய்தா பண்றானே மாப்பிள்ளை அப்படீன்னு வேறே ஆதங்கம். செத்துப் போகிற வரைக்கும் திரிசமனும் ஜாடையுமா இதைச் சொல்லிக் காமிச்சிண்டேயிருந்தார். இப்பதான் அவர் ஆத்மா சாந்தியடைஞ்சிருக்கும். இப்பதான் நிஜமாவே நான் இல்லாமல் கஷ்டப்படறேனோல்லியோ?’ என்றார் அப்பா ஒரு நாள். அதைக் கேட்டு அம்மா பிழிந்து பிழிந்து அழுதாள். வெகுநாட்கள் பொறுத்துக் கொண்டேயிருந்தாள். கடைசியில் ஒரு நாள் திடீரென்று ஆவேசம் வந்தாற்போல் ஒரு கூச்சல் போட்டாளே பார்ப்போம். “போரும், அப்பாவைப் பத்தி இனிமே பேச வாண்டாம்!’ என்று பீறின அந்தக் கூச்சல் ஏழு வீட்டுக்குக் கேட்டது. அப்பா அப்படியே வெலவெலவென்று தொய்ந்து போனார். சற்று நேரம் பேசாமல் நின்றார். பிறகு வாசல் பக்கம் போய்விட்டார் அவர்.

அம்மா இப்போது சாதாரண மனுஷியாகிவிட்டாள். இதுவரை பார்யா தர்மம், ஸ்திரீ தர்மம், இல்லாள் கடமை என்று புத்தகங்களில் எழுதியிருக்கும் பெண்மணி மாதிரி இருந்தாள். இப்போது திடீரென்று நினைத்துக்கொண்டு சாதாரண மனுஷியாகிவிட்டாள்.

அப்போதுதான் விஜயராகவன் அப்பாவுக்குச் சிநேகிதம் ஆனார். அப்பா மாதிரி அவர் அழுக்காக இருக்க மாட்டார். அழுக்கு வேட்டி கட்ட மாட்டார். சுருக்கு சுருக்கென்று பேச மாட்டார். சும்மாச் சும்மா தின்றுகொண்டேயிருக்க மாட்டார். சிநேகிதமாயிருந்தார். அவர் ஒரு நாள் கூடத்தில் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீங்கள் எத்தனை நாட்கள் சார், இப்படியே இருக்கப் போறேள்? ஏதாவது சம்பாதிக்க வழி பண்ணிக்க வேண்டாமா?”

“எனக்கு என்னய்யா, இப்ப குறை? நான் சந்தோஷமாகத்தான் இருக்கேன்.”

“சம்பாத்தியம் ..?’

“அதுதானே? நான் உண்மைக்காகப் பாடுபடறேன் இந்த மாதிரி மனுஷாள்ளாம் பட்டினி கிடந்துதான் செத்துப் போயிருக்கா. கலையோட சரித்திரத்தை எடுத்துப் பார்த்தீர்னா தெரியும்.”

“கலியாணத்தைப் பண்ணிண்டு, ஒரு குடும்பத்தை உண்டாக்கிப் பிட்டு -”

“அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவாளுக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற பலமில்லேன்னா நான் என்ன செய்யகிறது?”

“நீ வாழ்ந்தே” என்றாள் உள்ளே காப்பி போட்டுக் கொண்டிருந்த அம்மா. இருபது பலம் காப்பிப் பொடியை அன்று காலையில்தான் விஜயராகவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தார்.

“கடனுக்கு லாயர் நோட்டீஸ் நாலஞ்சு பேர்கிட்டேயிருந்து வந்துட்டுதே.”

“வரட்டுமே. இருந்தால்தானே கொடுப்பேன் . . .”

“கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சி பண்ண வாண்டாமா?”

“திருப்பித் தரும் யோசனையோடு நான் வாங்கலியே விஜயராகவன்! பணம் வாங்கினால் திருப்பிக் கொடுத்துடணும் என்கிற நேர்மை எல்லாம் பாமர மனுஷாளுக்கு ஏற்பட்ட சட்டமில்லையோ?”

“உவா” என்று உள்ளே குமட்டினாள் அம்மா.

“பெரிய கலைஞர்கள், மேதாவிகள் எல்லாம்தான் இதெல்லாம் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லுகிற வழக்கம்.”

“அப்படி இங்கே ஒண்ணும் இல்லேன்னு சொல்றீமாக்கும்! ஒப்புக்காட்டா என்னய்யா? நான் கலைஞன் இல்லேன்னு ஆயிடுமா?” என்றார் அப்பா.

“இதைக் கொண்டு மாமாகிட்ட கொடுத்துட்டு வா” என்று காப்பியைக் கொடுத்தாள் அம்மா. கொடுத்துவிட்டு வந்தேன்.

“ஐயோ, ரதீ! சர்க்கரையே போடலியே!” என்று அப்பாவின் குரல் கத்திற்று. சர்க்கரை டப்பாவை எடுத்ததும், “வைடீ, கீழே!” என்று உருட்டி விழித்தாள் அம்மா. உடனே கூடத்து நிலையண்டை போய் நின்று கொண்டாள். “கலைஞருக்குச் சர்க்கரை என்னத்துக்கு?” என்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். இதைச் சொல்லச் சிரிப்பானேன் என்று குழம்பிய எனக்கு அந்தச் சிரிப்பைக் கேட்டு நடுநிசியில் இருட்டின நிசப்தத்தில் ஏதோ உறுமலைக் கேட்பதுபோல் இருந்தது. அம்மா உள்ளே போய்விட்டாள்.

ஒரு நாள் நான் சமையல் அறைக்கு அப்பால் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். விஜயராகவ மாமாவோடு அம்மா கூடத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அரை மணி கழித்து அப்பாவின் குரல் கேட்டது. அம்மா உள்ளே வந்தாள்.

“கழுகுக்கு மூக்கிலே வேர்க்கிறாப்பல இருக்கே இது?” என்று அப்பாவின் குரல் கேட்டது.

“என்ன?” – விஜயராகவ மாமாவின் குரல்.

“நான் இல்லாத சமயம் பார்த்தே வறீமேன்னேன்?”

“வந்தா என்ன?”

“வந்தா என்னவா! . . . கெட் ஔட்.” – அப்பாவின் குரல். அம்மா நிலையண்டை விரைந்தாள். நானும் போய் நின்றேன். விஜயராகவ மாமா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்பாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். மரவட்டையையோ, எட்டுக்கால் பூச்சியையோ பார்க்கிற மாதிரி இருந்தது. அப்பா அம்மாவைப் பார்த்தார். விறுவிறுவென்று செருப்பைக்கூட மாட்டிக் கொள்ளாமல் வாசலில் இறங்கிப் போய்விட்டார். விஜயராகவ மாமா படத்தில் எழுதின சமுத்திர அலை மாதிரி உட்கார்ந்திருந்தார். ஐந்து நிமிஷங்கள் கழித்துச் சமுத்திர அலை அசைந்தது. எழுந்து வெளியே போய்விட்டது.

ஆறு மணிக்கு அப்பா வந்தார். சமையல் அறைக்கு வந்தார். “ஓகோ நான் வருவேன்னு தெரிஞ்சு போயிட்டுதாக்கும்?” என்று பொதுவாகச் சுவரைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.

“இந்தக் கிறுக்குப் பேச்செல்லாம் வாண்டாம். இன்னிக்கு ரண்டிலே ஒண்ணு தீரணும்” என்றாள் அம்மா.

“அப்படியா? . . . என்னத்துக்கு விஜயராகவன் வெறுமனே நான் இல்லாதபோது வர்றான்?”

“என்னத்துக்கா? சொல்லட்டுமா?” – என்று ஒரே ஒரு வாய்க்கடையால் சிரித்தாள் அம்மா.

“பயமுறுத்தறியே.”

“அது உங்க வேலைன்னா. நான் பாடகன் இல்லை. உங்களைக் கண்டு பயப்படறதுக்கு. நீங்கதான் இப்ப பயப்படப் போறேள்.”

“சும்மா மிரட்டாதே. அவன் எதுக்கு வரான் அதைச் சொல்லு, கிடக்கட்டும்.”

“பாஷாங்க ராகத்துக்கு வேற ஸ்வரம் எதுக்கு வரும்?”

” – “

“எதுக்கு வரும்னு கேட்டால் சொல்லுங்களேன்.” அப்பா நிமிர்ந்து ஒரு நிமிஷம் பார்த்தார். பார்த்துக்கொண்டேயிருந்தார்.

“சொல்லுங்களேன்.”

“ரக்திக்கு” என்று மெதுவாகச் சொன்னார் அப்பா.

“இப்ப புரிஞ்சுதா? அந்நிய ஸ்வரம் எதுக்கு வரும்? ராகத்துக்கு ரக்தி கொடுக்க வரும். அதை இன்னும் போஷிக்க வரும். இப்ப நாலு மாசமா குடும்ப போஷணை விஜயராகவன்னாலேதான் நடக்கிறது. நாலு மாசமா நீங்க திங்கிற அரிசி, குடிக்கிற காப்பியெல்லாம் அவன் வாங்கிப் போட்டுதுன்னேன். இத்தனை சாஸ்திரம் படிச்சும் வீட்டிலே இருக்கிற ராகமே புரியலெ” என்று அம்மா தோளில் கன்னத்தை இடித்துக்கொண்டாள்

அப்பா முகத்திலும் தலையிலும் ஓங்கி ஓங்கிப் போட்டுக்கொண்டார். நான் தடுக்கப் போனேன். “நில்லு” என்று அதட்டினாள் அம்மா. அப்பா நோக நோகப் போட்டு கொண்டுவிட்டு, “நீ உன் பொண்ணு எல்லாம் பாஷாங்கம் தாண்டி, கிராதகி” என்று பல்லைக் கடித்துவிட்டு மறுபடியும் வாசலுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. “பாஷாங்க ராகம் பாடாதேள். குடும்பத்துக்குக் கெடுதல் – கெடுதல்” என்று வாசலில் நின்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டியைக் கிழித்தும் கொள்ளத் தொடங்கிவிட்டார். தற்செயலாக வடக்கேயிருந்து வந்திருந்த அப்பாவின் அத்தான் வீட்டில் இருக்கிற நிலைமையைப் பார்த்தார். அவரை வடக்கே தாம் வேலை பார்க்கிற ஊருக்கே அழைத்துப் போய்விட்டார். மந்திரவாதிகளைக் கூப்பிட்டுப் பார்த்துப் பயனில்லாமல் பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்குத் தெளியவில்லையாம். பைத்திய ஆஸ்பத்திரியிலேயே ஐந்து வருடங்கள் இருந்து அவர் அங்கேயே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. அப்பாவின் அத்தானுக்கு அவர் மேல் மிகவும் பிரியம். அத்தை பிள்ளைகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்தான் பத்திரிகைக்கு – அவர் காலமான செய்தியைக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. எங்களுக்குக்கூட அப்படித்தான் சேதி தெரிந்தது. நீங்கள் போட்ட அனுதாபக் கடுதாசு எங்கெங்கோ சுற்றித் தாறுமாறாக முத்திரை வாங்கிக் கொண்டு முந்தாநாள்தான் வந்தது. அப்பாவை அவர் அத்தான் அழைத்துப்போன அடுத்த மாசமே நாங்கள் பம்பாய் வந்துவிட்டோம்.
இத்தனை நீளமாகக் கடுதாசி எழுதினதற்கு மன்னிக்க வேண்டும். மேதைக்கும் பைத்தியத்துக்கும் இடையே உள்ள வரம்புக் கோடு மிக மெல்லியது என்று சொல்லுகிறது வழக்கம். ஆனால் கோடே இல்லாத மாதிரி நீங்கள் குழம்பிவிட்டதால் அம்மாவின் உத்தரவுப்படி எழுதினேன்.

பெற்ற அப்பாவைப் பற்றி இத்தனை கேவலமாக எழுதக்கூடாது. என்ன செய்கிறது? வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த அப்பாவிடம் நானும் தம்பியும் பட்ட வேதனை..

இப்படிக்குத் தங்கள்,

ரதிபதிப்ரியா

பின்குறிப்பு: அம்மா கோரேகானிலிருந்து இன்று காலை வந்தாள். இந்தப் பதிலைக் காட்டினேன். அவளும் இரண்டு வார்த்தை எழுத விரும்புகிறாள்.

நமஸ்காரம்… குழந்தை சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் பலராமனுக்குச் சித்தம் கலங்குவதற்கு முன்னால் ஒன்று நடந்தது. என்மேல் அவ்வளவு சந்தேகப்பட்டுக் கோபமும் கலக்கமுமாகப் போனவர் சாப்பாட்டுக்கு மட்டும் வேளா வேளைக்கு வந்துகொண்டிருந்தார். பிறகுதான் நான் எழுதி அவருடைய அத்தானை வரவழைத்தேன் . . குழந்தை சொன்னது ரொம்ப சரி. என் மாமனார் செய்த பாபத்தை அவர் தலையில் சுமந்து கொண்டு அலைந்தார். அதற்கு நாங்கள் எவ்வாறு பிணையாக முடியும்?

தங்கள்,

விஜயா விஜயராகவன்.

**
நன்றி : கல்கி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம்

துஆ (பிரார்த்தனை)

நன்றி : ஆசிப் மீரான்

*
Zainulahbudeen Hussain · Dua – Asif Meeran – Ramadan 2023

ரமலான் சிந்தனைகள் – நூருல் அமீன்

noorulameen-fb

“எத்தனை விவேகம் கைவந்த பின்னும் நம் கீழ்மை நம்மை விட்டு போகவில்லையே” என மகத்தான அறிஞர்கள் எல்லாம் வருந்தியிருக்கிறார்கள். ஏன் இத்தகைய மனோநிலைக்கு ஓரளவு நாமே நமக்கு ஆதாரமாக இருக்கின்றோம். இந்த நிலை ஏன்?

அறிவு என்பது நம்மை பாவ காரியங்களை விட்டும் காப்பாற்றாது. பாவம் செய்யும் போது மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைத் தான் சொல்லிக் கொடுக்கும். ஞானம் என்பது தான் நம்மை நேர்வழியில் செலுத்தும். அது என்ன ஞானம்?.

ஞானம் என்பது மூளையிலிருந்து வரும் ஆளை வளைத்துப் போடும் அறிவுப் பூர்வமான கருத்துகள் அல்ல. அது இதயத்தை சென்றடைந்து இறையச்சத்தை உண்டாக்கும் அறிவு. இறைவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என குர்ஆனில் கூறும் அறிவைத் தான் ஞானம் என குறிப்பிடப்படுகின்றேன். உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அறிந்தவனும் நான் தான் அதனால் அவனுக்கு அதிகமாக அஞ்சுபவனும் நான் தான் என பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்களே அந்த அறிவு தான் ஞானம். அதை அடைவதுதான் ஆன்மீகத்தின் முந்திய பகுதியாக கருதப்படுகின்றது.

அந்த ஞானத்திற்கு தடையாய் இருப்பதே உலக வாழ்வில் நாம் கற்று தேர்ந்த, மூளையால் மட்டுமே சேகரித்த, இதயத்தை தொடாத பல வகை அறிவுகளும் அதனால் தன்னை பெரிதாக விளங்கும் ஆணவமும் அகம்பாவமும் தான். எது சரி எது தவறு என எச்சரிக்கும் மனசாட்சி என்பதெல்லாம் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற ஆணவத்தினால் வலுவிழந்து போய் விடுவதால் மனம் என்பது வெறும் இச்சைகளின் பால் அழைக்கும் கருவியாக மட்டுமே செயல்படுகின்றது.

மனோஇச்சைகளை பற்றிய படிப்பினையூட்டும் இந்த குதிரை கதையை படியுங்கள். ஒரு குதிரையொன்று இருந்தது. அது எப்போது சாணம் போட்டாலும் அங்கே நின்று அதை முகர்ந்த பின்னர் தான் மீண்டும் வண்டியை இழுக்கும், பிரியமான குதிரை என்பதால் அதை பொறுத்து பொறுத்து பார்த்த குதிரை வண்டிக்காரன் ஒரு நாள் வேறு வழியில்லாமல் சாட்டையை எடுத்தான். எப்போதெல்லாம் சாணத்தை முகர குனிகிறதோ அப்போதெல்லாம் ஒரு அடி கொடுத்தான். சில முறை அடிகள் வாங்கியவுடன் குதிரை சாணத்தை முகறுவதை நிறுத்தியது. சிறிது தூரம் இப்படி ஒழுங்காக சென்ற குதிரையை பார்த்த வண்டிக்காரனுக்கு தன் பிரியமான குதிரை மீது இரக்கம் வந்தது அதனால், “என் செல்லம் உன்னை அடிச்சிட்டேன்ல, இனிமே அடிக்க மாட்டேன்”என குதிரையை கொஞ்சியவனாய் சாட்டையை விட்டெறிந்தான். குதிரைக்கு அவன் கூறியது விளங்கியாதோ இல்லையோ அவன் கையில் இப்போது சாட்டை இல்லை என்பது மட்டும் விளங்கியது. அவ்வளவு தான் குதிரை அந்த வண்டியை அப்படியே திருப்பி பின் சென்றது இது வரை எந்த இடத்திலெல்லாம் சாணத்தை முகராமல் வந்ததோ அத்தனையும் சேர்த்து வைத்து முகர்ந்தது. குதிரைவண்டிக்காரன் கைசேதத்துடன் செய்வதறியாமல் திகைத்து நின்றான். மனதின் மிருக இச்சைகளை கட்டுபாடின்றி விட்டால் ஒரு பாவத்தையும் அது விட்டு வைக்காது என்பதுடன் இது வரை செய்யாமல் கட்டுபடுத்தி வைத்த அனைத்து பாவங்களையும் செய்ய வைத்துவிடும் என்பதை விளக்கும் கதையிது.
ரமலான் முடிந்தவுடன் நமது குதிரை நமக்கு பிரியமான பாவ சாணங்களை முகர துவங்கிவிடும் என்பதற்கு நாமே நமக்கு சாட்சியாய் இருக்கின்றோம். அதே நேரத்தில் பாவம் செய்வதை விட்டு நிரந்தமாக மீள வேண்டும் என்ற ஆசையும் நமக்கு இல்லாமல் இல்லை.

ஆற்றிலே ஒரு காலும் சேற்றிலே ஒரு காலுமாக வாழும் இந்த இரட்டைநிலையிலிருந்து மீள வழி என்ன?

நாமாக நல்லவர்களாய் இருக்க முடியாது. நாமாக மனோ இச்சைகளை ஜெயிக்க முடியாது. எந்த நன்மையையும் சுயமாக செய்யவோ, இல்லை எந்த பாவத்தை விட்டும் சுயமாக தப்பிக்கவோ முடியாது இறைவனின் கருணை இருந்தாலே தவிர. இந்த நம் பலகீன நிலையை உளப்பூர்வமாக உணர்ந்து “யாஅல்லாஹ்! நானாகவே நான் இல்லை ஒவ்வொரு வினாடியும் உன் ரஹ்மத்தான கருணையால் இருக்கின்றேன்” என அல்லாஹ்விடம் தன்னை(நப்ஸை) ஒப்படைத்து அல்லாஹ்வைக் கொண்டு வாழும் நிலையை நோக்கி நமக்கு வழி நடத்துகிறது பெருமானாரின் இந்த பிரார்த்தனை:

“இறைவா உன் கருணையில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அபுதாவுது, அஹ்மது)

சொர்க்கத்தின் கருவூலங்களிலுள்ள ஒரு வார்த்தையை உமக்கு நான் கற்றுத் தரட்டுமா? (அது) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது தான்” என பெருமானார் கற்றுத் தந்துள்ளார்கள் ( புகாரி).

தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நப்ஸ், ஷெய்தானின் தீங்கை விட்டுஅல்லாஹ் பாதுகாப்பான் என என் சங்கைக்குரிய ஷெய்கு ஃபைஜிஷாஹ் நூரி அவர்கள் எங்களுக்கு கற்று தந்தார்கள்.

இறைவனின் எல்லை இல்லா ரஹ்மத்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் இந்த ரமலானில் “இறைவா உன் ரஹ்மத்தில் ஆதரவு வைக்கின்றேன். கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என்ற பெருமானாரின் துவாவுடன் தினமும் 700 முறை “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என ஓதி நப்ஸ், ஷெய்தானுடைய தீங்கை விட்டு பாதுகாப்பு பெற இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் செய்வானாக!

*
நன்றி : நூருல் அமீன்
http://onameen.blogspot.com/
https://www.facebook.com/noorul.ameen.7355

வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன் – முபாரக் கவிதை

mubarak-abed-wp1
வெற்றிலைக் கொடிகள் பயிரிடும் இறைவன்
கவிஞர் முபாரக்
————————
எல்லோருக்கும் என ஓர் இறைவன்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
எல்லாருக்கும் உண்மையாக
மனப்பூர்வமாக ஏதாவது இருக்குமா
எனத்தெரியவில்லை
ஆனால்
எனது உம்மம்மாவுக்கு என
ஓர் இறைவன் இருக்கிறான்
அவன் நிச்சயமாக இருக்கிறான்
யாருக்காகவும் அவன் இருக்கிறானோ இல்லையோ
அவளுக்காக அவன் இருக்கிறான்
அவளுக்கான வெற்றிலைகள்
பயிரிடப்படும் இடங்களில் தேவையான
மிதமான மழையை அவனே பொழிவிக்கிறான்
மிதமான வெப்பத்தையும் அவன் பார்த்துக் கொள்கிறான்
அவனைப் பற்றிச் சொல்வதற்கு
அவளிடம் எப்போதும் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும்
அவளது சொற்களில்
அவன் நமக்கு அருகில் வருவது போலவே இருக்கும்
அவளது இறைவனைப் பற்றிய நினைவுகள் இல்லாது
அவளது ஒரு நாளும் தொடங்குவதுமில்லை முடிவதுமில்லை
*
எப்போதும்
நடுவீட்டில் நடுநாயகமாக அமர்ந்திருப்பாள்
அது
அர்ஷில் அமர்ந்திருப்பதைப் போலவே இருக்கும்
எப்போதும்
அவளது இதயத்தில் அரியணையிட்டு
அவளது இறைவன் அமர்ந்திருப்பான்
கால்நீட்டி அமர்ந்து
பேரக்குழந்தைகளுக்கு கதைகள்
சொல்லத்தொடங்கினால்
பெரும்பாலும் இறைத்தூதர்களைப் பற்றிய
கதைகளாகவே இருக்கும்
அப்போது அவர்கள் உயிர்பெற்று நமக்குள் நடமாடத்தொடங்குவார்கள்
அப்போது அவளது கதைகளைக் கேட்பதற்கு
வாசலுக்கு வானவர்கள் வரத்தொடங்குவார்கள்
*
அவளை நோக்கி ஏவப்படும்
கோபங்களையும் அவமதிப்புகளையும்
ஏச்சுக்களை எல்லாம் தனது
தஸ்பீஹ் மணியை இடைவிடாது
எண்ணுவதன் மூலம் கடந்து செல்வாள்
*
பயணம் செல்லும் முன்
விடைபெறுவதற்காகச் சந்திக்கையில்
வெற்றிலை வாசத்தோடு
நெற்றியிலொரு முத்தமும்
கைப்பைக்குள்ளிருந்து எடுத்த
கசங்கிய வெற்றிலையில்
நூறு ரூபாய்த்தாளைச் சுற்றித்தருவாள்
நீண்ட ஆயுளையும் நிலையான செல்வத்தையும்
நமக்குத் தரச்சொல்லி
அவளது இறைவனுக்கு உத்தரவிடுவாள்
நம் வாழ்வு மாறும் வசதிகள் மாறும்
ஊர் மாறும் உறவுகள் மாறும் உலகம் மாறும்
எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும்
அவளது ஆசீர்வாதமும் பிரார்த்தனைகளும்
நூறு ரூபாய் அருளும்
வெற்றிலை வாசமும் மாறவே இல்லை
தடைபட்டதும் இல்லை
*
தன் நினைவு முழுதும் தனது இறைவன் மட்டுமே இருந்தால் போதும் என நினைத்துவிட்டாள் போலும்
கொஞ்சம் கொஞ்சமாக
தனது கதைகளை மறக்கிறாள்
மனிதர்களை மறக்கிறாள்
உறவுகளை மறக்கிறாள்
உலகத்தோடு அவளைப் பிணைக்கும்
கண்ணிகளை அறுக்கிறாள்
இறைவைனின் நினைவோடு மட்டுமே
மிஞ்ச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்
*
ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்
சோலைவனமான சொர்க்கத்தில்
கஸ்தூரியின் வாசமடிக்கும் என
யாரோ சொல்லியிருக்கிறார்கள்
*
உம்மம்மாவின் சொர்க்கச் சோலைகளில்
பேரீச்சை மரங்களைச் சுற்றிலும்
அவளுக்குப் பிடித்த வெற்றிலைக் கொடிகள் படரவிட்டு
அவளது இறைவன் காத்திருப்பான் என்றே நினைக்கிறேன்
என்னிடம் கேட்டால்
நானும் வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்கும்
சொர்க்கத்திற்கே செல்லவே விரும்புவேன்
அங்கேதான்
அவளிடம் பயணம் சொல்லிவிட்டு
விடைபெற வேண்டிய அவசியம் இருக்காது.
**
நன்றி : முபாரக்
*
Read also :
உப்பூறிய நெல்லிக்காய் – முபாரக்

« Older entries