ஜாஃபர் நானாவின் இந்தக் கட்டுரையை எடிட் செய்தபோது ’கிரேட்டஸ்ட் ட்ராவல்’ செய்தது நானாவா அல்லது இப்னு-பதூதாவா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அத்தனை பின் நவீனத்துவம்! குழப்பத்தை நீக்க , நானாவின் குறிப்புகளை சாய்வெழுத்தில் – அங்கங்கே நானாவுக்குப் பிடித்த நீலக் கலரில் – அமைத்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். ஒரே ஒரு சந்தேகம், இப்னு-பதுதா 75000 மைல்கள் சுற்றியவராக இருக்கட்டும். ‘என்னயும் புள்ளைங்களையும் வுட்டுட்டு ஏன் போறீங்க?’ என்று – ‘The Prefab People’-ல் வரும் மனைவி மாதிரி – என் உயிர் அஸ்மா கேட்கும் கேள்வியின் தூரத்திற்கு நிகராகுமா அது? என்னதான் இப்போதெல்லாம் Skype-ல் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா? (முகத்தைச் சொல்கிறேன் !) . என் துக்கத்தை விடுங்கள்; வெறும் தகவல் திரட்டாக இல்லாமல் சுவாரஸ்யமான பகுதிகளையும் சேருங்கள் என்று சொன்னதால் நானா உழைத்திருக்கிறார் இந்தக் கட்டுரையில் , கூடுதலாகவே. அந்த ’மோதிரம்’ நிகழ்ச்சி உதாரணம். ஒரே ஒரு வருத்தம், இப்னுபதாதா சென்ற இடங்களைச் சொல்லும் svg கோப்புகளை (Maps) இணைக்க இயலவில்லை. பிரமாதமாக விக்கிப்பீடியாவில் செய்திருக்கிறார்கள். சுட்டி மட்டும்தான் கொடுக்க முடிந்தது. அவசியம் அதையும் பாருங்கள். அனைவருக்கும் நன்றி – ஆபிதீன்
***
இப்னு பதூதா – அருட்கொடையாளர் – 10
ஹமீது ஜாஃபர் : ஒவ்வொருவருக்கும் ஒன்றோ பலவோ தனித்திறமை இருக்கும். அது அவனுக்கு தெரிந்தும் இருக்கலாம் இல்லை தெரியாமலும் போகலாம். ஆனால் அது ஒவ்வொரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் பின்-துணை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒருமுறை எங்கள் ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, “உன்னுடைய potentiality என்ன என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும், அது உன் வளர்ச்சிக்கு பெரும் துணை” என்று பேச்சை நிறுத்தி, potentioality என்றால் என்ன என்று தெரியுமா? என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை, அது கேள்வி அல்ல அவர்கள் பேச்சின் வேகம் கேள்வி மாதிரி வரும் அது அவர்கள் பாணி. தொடர்ந்தார்கள், “Potentioality என்றால் உந்து சக்தி, எதற்காக நீ பாடுபடுகிறாயோ அல்லது எது உன் சிந்தனையில் சதா ஓடிக்கொண்டிருக்கிறதோ அல்லது எதற்காக ஊணை மறக்கிறாயோ; தூக்கத்தை தியாகம் செய்கிறாயோ அல்லது எதை எடுத்தாலும் அதனுடன் பின்னிப் பார்க்கிறாயோ அது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்கிற அவசியமில்லை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அப்படி இருக்க நாம் normal ஆக ஏன் இருக்க வேண்டும் என்று கேட்கிறேன், அப்படி இருப்பது தவறு. நம்மிடமுள்ள potentiality-ஐ, latent force-ஐ, dominant force-ஐ develop பண்ணணும். உங்களிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், இவனிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான், அவரிடம் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். இப்படி ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு திறமையை அல்லா கொடுத்திருக்கான். ஆனால் இதில் என்ன unfortunate என்று கேட்டால், யார் யாரிடம் என்னென்ன திறமை இருக்குதென்று அவங்களுக்கே தெரியவில்லை, அதை தெரிந்தவர்கள்தான் மேலே வருகிறார்கள்…. ” என விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆம், இப்படி தன்னை அறிந்து அப்பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஒருவர் ரசவாதத்தில் மோகம் கொண்டு ரசாயனத்தில் வெற்றி கண்டார்; ஒருவர் வீட்டுக் காவலில் இருந்துக்கொண்டே பார்வை தத்துவத்தை படைத்தார்; மார்க்கக் கல்வி கற்று பள்ளிவாசலில் இருக்கவேண்டியவர் மருத்துவத் துறையில் சாதனை படைத்தார். இப்படி மருத்துவம், கணிதம் , வானசாத்திரம், மொழி, தத்துவம் என ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொருவரும் சாதனை படைத்தார்கள். ஆனால் இங்கு ஒருத்தர் ஊர் சுற்றவேண்டும் என்ற ஆசை கொண்டு 75000 மைல்கள் சுற்றித் திரிந்திருக்கிறார். சுற்றியது வேடிக்கைக்காகவுமல்ல, விளையாட்டுக்கமல்ல, நாடு பிடிக்கவேண்டும் என்ற ஆசையினாலுமல்ல. மாறாக தான் சென்ற நாடு/இடத்தின் வாழும் மக்கள், உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, தட்பவெட்பம், மன்னர்கள், ஆட்சிமுறை, வளர்ச்சி அனைத்தையுமே கண்டறிந்து பின்னால் வரும் சமுதாயத்துக்கு அருட்கொடையாகத் தந்தருளியிருக்கிறார் இப்பெரியவர்.

இப்னு பதூதா (1304-1369) The Greatest Arab Traveller
பாகம் 1
மஃக்ரிப் என்று அரபியிலும் மொரோக்கோ என்று பிற மொழிகளிலும் அழைக்கப்படும் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தியை ஒட்டிய தன்ஜித்-طنجة /Tangier என்ற கடற்கரை நகரத்திலிருந்து ஆப்ரிக்கா, ஆசியா மைனர், இந்தியா, இலங்கை என்று சீன தேசம் வரை 75000 மைல்கள்(120,000 k.m) சுற்றிவந்த இப்னு பதூதா, மார்க்கோ போலோவிற்கு ஐம்பதாண்டுகளுக்கு முந்தியவர். ஒரு முறைக்குமேல் மறுமுறை ஒரே வழியில் செல்வதில்லை என்ற கொள்கையுடன் தரை மார்க்கம் வழியாக கழுதை, ஒட்டகம், நடை, குதிரை எனவும் படகு, கப்பல் என கடல், நதி வழியாகவும் மேற்கு ஆப்ரிக்காவில் திம்புக்து, மாலி, நைஜர், Horn of Africa என்று சொல்லப்படும் எரித்ரியா, ஜிபோத்தி, எத்தியோபியா, சோமாலியா மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, சீனா முதலிய நாடுகளையும் சுற்றி வந்த இப்னு பதூதா தன் பயண அனுபவங்களைத் தொகுத்து ‘ரிஹ்லா’-الرحلة(பயணம்/The Journey) என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வாகன வசதி இல்லாத காலத்தில் தனி ஒரு மனிதர் ஏறக்குறைய 44 நாடுகளுக்குமேல் சுற்றி பல்வேறு மக்கள், பல்வேறு அரசர்கள், பல்வேறு மந்திரிப் பிரதானிகள், பல்வேறு சூஃபிக்கள், பல்வேறு இறைநேசர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் என இப்படி இரண்டாயிரத்துக்கும் மேலானவர்களுடன் தொடர்பு வைத்திருவர் வேறு யாரும் இருக்கமுடியாது.
இளமைக் காலம்
அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அல்-லுவாதீ அல்-தன்ஜீ இப்னு பதூதா (أبو عبد الله محمد ابن عبد الله اللواتي الطنجي ابن بطوطة) என்பது இவரது முழுப் பெயர். ஷம்சுதீன் என்றும் அழைக்கப்பட்ட இப்னு பதூதா பிப்ரவரி 25, 1304 ல் தன்ஜித் நகரில் பல நீதிபதிகளை இஸ்லாத்திற்கு அளித்த குடும்பத்தில் பிறந்தார். பெர்பர்(Berber) எனும் இனத்தைச் சேர்ந்தவரான இவர் தனது இளமைக் காலத்தில் பிறந்த நகரிலேயே கல்வி கற்றார். அக்கால கட்டத்தில் வடக்கு ஆப்ரிக்கப் பகுதிகளில் மாலிக்கி மதஹபு பிரிவு இருந்ததால் அம்மதஹபின் சட்டவியலில் நிபுணத்துவம் பெற்றார். இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சிப் பெற்றபின் ஹஜ் செய்யவேண்டும் என்ற ஆவல் உந்தப்பட்டவராக தனது 21ம் வயதில் 1325 ல் மக்காவை நோக்கி ஹஜ்ஜிற்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 18 மாத காலம் பயணம் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றினார். வேறு வார்த்தையில் சொன்னால் நீ…..ண்ட பயணம் செய்து ஹஜ்ஜை நிறைவேற்றிய ஒரே மனிதர் எனலாம். அதன்பின்பும் 24 ஆண்டுகாலம் தன் சொந்த நாட்டிற்கு திரும்பவே இல்லை.
“என் மனதில் தோன்றி மறைந்துக்கொண்டிருந்த அந்த ஆசை சிறிது சிறிதாக வலுப்பெற்று அவ்விரு புனித இடங்களைக் காணவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக என் மனதில் உந்திக்கொண்டிருந்தது, ஆனால் என்னுடன் வருவதற்கு எனது நண்பர்களோ, உறவினர்களோ, பயணிகள் கூட்டங்களோ காணப்படவில்லை, எனவே நான் தனியாகப் புறப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்மீது அன்பு வைத்திருந்த பெற்றோர்கள், நண்பர்களை விட்டுப் பிரிவது துன்பத்தைத் தந்தது; அப்பிரிவாற்றாமையினால் நான் தனிமையில் கண்ணீர்விட்டேன்.” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார். (H. A. R. Gibb)
பயணம் தொடங்கியது…..
’நான், ஹிஜ்ரி 725, ரஜப் பிறை 2 (ஜூன்14,1325) வியாழக்கிழமை என் சொந்த ஊரான தன்ஜீரை விட்டுப் புறப்பட்டேன். அப்போது எனக்கு வயது 22, (ஆங்கில கணக்குப்படி 21 வருடம் 4 மாதம்).
பயணம் மிகவும் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தது. வடக்கு ஆப்ரிக்க கடற்கரையோரமாகப் பயணம் செய்து த்லிம்சன் என்ற நகரத்தை அடைந்தபோது துனிசிய சுல்தானின் தூதுவர்கள் இருவரின் தொடர்பு கிட்டியது. ஆனால் அவர்கள் அன்றே அங்கிருந்து புறப்பட்டனர். நான் மட்டும் அங்கு மூன்று நாட்கள் தங்கி தன் பயணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு என் பயணத்தை துரிதப்படுத்தினேன். மிலியானா என்ற நகரை அடைந்தபோது அங்கு அவ்விரு தூதுவர்களையும் சந்தித்தேன். அது கோடைக்காலமாக இருந்ததால் வெப்பம் தாங்காமல் அவர்கள் இருவருமே நோய்வாய்ப்பட்டிருந்ததால் பத்து நாட்கள் தங்க நேரிட்டது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது நான்கு மைல் தூரத்தில் அவர்களில் ஒருவருடைய நிலமை கவலைக்கிடமாகி இறந்தார் அதனால் மூன்று இரவு அங்கேயே தங்க நேரிட்டது. தூதுவரையும் துணைக்கு வந்தவர்களையும் அங்கே விட்டுவிட்டு தூனிசிலிலிருந்து வந்த ஒரு வணிகக் கூட்டத்துடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.
துனிசியாவை நோக்கி….
அல்ஜீர்ஸை(அல்ஜீரியாவின் தலைநகர்) நெருங்கியதும் நகருக்கு வெளியே மற்ற வணிகக் கூட்டத்தாரின் வரவை எதிர்நோக்கி சில நாட்கள்வரை காத்திருந்தனர். அவர்கள் வந்ததும் மித்திஜா வழியாக ஜுர்ஜுரா எனப்படும் ஓக் மரக்காடுகளைக் கடந்து பிஜயா(Pijaya) நகரை அடந்ததும் துனிசிய வணிகர் ஒருவர் மரணம் அடைந்தார். அல்ஜீர்ஸை சேர்ந்த ஒருவர் துனிசியாவில் இருக்கும் தனது வாரிசு ஒருவரிடம் சமர்ப்பித்துவிடும்படி 3000 தினார் மதிப்புள்ள தங்கத்தை அவரிடம் கொடுத்திருந்தார். அதைக் கேள்வியுற்ற சயிது இப்னு அல்நாஸ் என்ற பிஜயாவின் ஆட்சிப் பொருப்பிலிருந்த துனிஸ் மன்னரின் பிரதிநிதி அதை அபகரித்தார். துனிசிய அரசின் பிரதிநிதி ஒருவர் இப்படி வழிப்பறி செய்வதை முதன்முறையாகக் கண்டேன். இங்கு நான் நோயுற்றேன். என் உடன் வந்தவர்கள் சொன்னார்கள், நீ வேண்டுமானால் இங்கேயே தங்கி சுகப்படுத்திக்கொண்டு வரும்படி , நான் மறுத்துவிட்டேன். ஒரு வேளை நான் பயணிக்கும் வழியில் இறக்கவேண்டும் என இறைவன் நிர்ணயித்திருந்தால், என் முகம் மக்காவை நோக்கி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.
குவாசண்டினா(Constantine) அடைந்தபோது மணல்காற்றும் கூடவே கடுமையான மழையும் எங்களைத் தாக்கியது, எங்கள் கூடாரங்கள் சேதமடைந்தன, நாங்கள் அருகிலிருந்த வீடுகளில் தஞ்சம் புக நேர்ந்தது. இதை கேள்வியுற்ற அந்நகரின் கவர்னர் எங்களை சந்தித்து எல்லா உதவிகளையும் செய்தார், என் தலைப்பாகைத் துணி கிழிந்திருப்பதைக் கண்டு எனக்கு வேறொரு துணி கொடுத்தனுப்பினார், அது நேர்த்தியான சிரியாவின் துணி, அதன் ஒரு முனையில் இரண்டு தங்க நாணயங்கள் கட்டப்பட்டிருந்தன. இது என் பயணத்தில் கிடைத்த முதல் வெகுமதி அல்லது பிச்சை(alms) என்று சொல்லலாம்.
பின் குவாசண்டினாவிலிருந்து போனா(Bone) என்ற நகரை அடைந்து அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு தூனிஸ் புறப்படும்போது மீண்டும் நான் நோயுற்றேன். நீண்ட பயணம் நோய் இவைகளினால் நான் பலவீனம் அடைந்திருந்ததால் எங்கே கிழே விழுந்துவிடுவேனோ என்ற ஐயப்பாட்டில் என் தலைத்துணியை எடுத்து கழுதையுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டேன். இதை தூனிஸ் சென்றடையும் வரை அவிழ்க்கவே இல்லை.
தூனிஸில்….
தூனிஸ் நகரை அடையும் முன்பே அம்மக்கள் எங்கள் வணிகக்கூட்டத்தை வரவேற்று ஒருவரோடு ஒருவர் நலம் விசாரித்தலும், வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளவும் செய்தனர். ஆனால் என்னை யாரும் விசாரிக்கவுமில்லை வாழ்த்து தெரிவிக்கவுமில்லை எனக்கு அறிமுகமானவர் யாரும் இருந்தால்தானே? எனவே நான் தனிமைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தேன். துக்கத்தை அடக்கமுடியாமல் வெளிவந்த கண்ணீரின் சுவையை துடைத்ததைக் கண்ட பயணி ஒருவர் எனக்கு ஆறுதல் சொல்லி அன்பு சொரிய ஆரம்பித்தார். நகரை அடையும் வரை அவருடைய இதமான வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தன.
தூனிஸ் மக்கள் நிறைந்த நகரமாக இருந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் வசிப்பார்கள்; இஸ்லாமிய கலாச்சாரமும் கல்விக்கூடமும் நிறந்த நகரமாக விளங்கியது; வடக்கு ஆப்ரிக்காவின் வணிக நகரமாக இருந்தது; கம்பளி, தோல், தோல்பொருட்கள், துணி, மெழுகு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தானிய வணிகங்கள் நடந்தன; அழகிய பள்ளிவாசல்களும், அரண்மனைகளும், பொதுப் பூங்காக்களும் இருந்தன.
அங்கு இரண்டு மாதகாலம் தங்கியிருந்தேன். கல்லூரி விடுதி(Dormitory)யில் தங்கியிருந்தேன். பல உயர் அதிகாரிகளையும், நீதிபதிகளையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது, அது எனக்கு பயனுள்ளதாகவே இருந்தது, அப்போது அது ரமலான் மாதம், பெருநாள் தொழுகைக்கு மைதானத்தில் அனைத்து மக்களும் கூடினர். துனிசியாவின் சுல்தான் அபு யஹ்யா பின் அபு ஜக்கரியாவும் அவரது பிரதானிகளும் மக்களில் ஒருவராகத் தொழுகையில் கலந்துகொண்டார். தொழுகைப் பேருரைக்குப் பின் ஒருவருக்கொருவர் ஆலிங்கனம் செய்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நோன்பும், நோன்பு பெருநாளும் திருவிழா போலிருந்தது.
பெருநாள் கழித்து சில நாட்களில் ஹஜ்ஜு செய்வதற்காக பயணக்கூட்டம் புறப்பட ஏற்பாடாகியது. பயணத்தின்போது ஏற்படும் சில மனத்தாங்கள்களையும், வழக்குகளையும் தீர்வு செய்யும் பொறுப்பை(judge) என்னிடம் ஒப்படைத்தனர். தூனிஸிலிருந்து (erarly Nov 1325) திரிப்போலியை நோக்கி புறப்பட்டோம். ஸ்ஃபக்ஸ்-Sfax (also Sfaqes or Safaqis) மற்றும் காபிஸ் நகரில் தங்கவேண்டியதாகி விட்டது. பத்துநாட்கள் பெய்த தொடர் மழையால் எங்களால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. எங்களின் பாதுகாப்புக்காக பல நிலைகளில் வீரர்கள் துணையாக வந்தனர்.
ஸ்ஃபக்ஸில் ஒரு துனிசிய அதிகாரியின் மகளை மணமுடிக்க ஏற்பாடாகி திரிப்போலியில் அப் பெண்ணை சந்தித்தேன். ஆனால் திரிப்போலியிலிருந்து புறப்பட்ட பிறகு பெண்ணின் தந்தையுடன் ஏற்பட்ட விவகாரத்தால் அப்பெண்ணைவிட்டு பிரியும் நிலை அவசியமாகியது. பின் ஃபெஜ்(Fez) லிருந்து வந்திருந்த ஒருவரின் மகளை மணந்தேன். அவள் விருப்பத்திற்கிணங்க எங்கள் பயணிக்குழு அனைவருக்கும் ஒரு நாள் விருந்தளித்து மகிழ்வித்தேன்’.
(ஸ்ஃபக்ஸில் முதல் மணம் நடந்ததாக சில தகவல்கள் உள்ளன. பொண்டாட்டியெ கூட கூட்டிக்கிட்டுப் போனாரா இல்லை அங்கேயே விட்டுப்போனாராண்டு யாரும் கேக்கவாணாம். அது எனக்கு தெரியாது – ஜாஃபர்)
அலக்ஸாந்திரியாவை நோக்கி….
பாதுகாப்பை அனுசரித்து பெரும்பாலும் பயணிகள் கூட்டத்துடன்(caravan) பயணம் செய்வதையே இப்னு பதூதா விரும்பினார். அவரது பயணிகள் குழு லிபியா கடற்கரை வழியாக செல்லும்போது திரிப்போலி அருகே கொள்ளையர் கூட்டம் ஒன்று வாளை சுழற்றிகொண்டு தாக்கவந்தது, ஆனால் இறைவன் அருளால்(by Divine will) தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுபக்கம் சென்றுவிட்டனர். அதன் பிறகு எந்த தடங்களும் இல்லாமல் அலக்ஸாந்திரியா பட்டினத்தை அடைந்தனர்.
’ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் சுமார் 2200 மைல்களைக் கடந்து அலக்ஸாந்திரியாவை அடைந்தோம். இடையிடையே பல நகரங்களில் தங்கியதால் அடுத்த ஹஜ்ஜு வருவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் இருந்தன. எனவே நான் கெய்ரோ செல்ல விரும்பினேன்’.
(1326 ஏப்ரல் 5 அன்று அலக்ஸாந்திரியாவை அடைந்த இப்னு பதூதாவுக்கு அத்துறைமுகப் பட்டினம் மிகவும் பிடித்திருந்தது, மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாக இருந்தது. அலக்ஸாந்திரியாவின் ஆட்சி பொருப்பு எகிப்தின் மம்லுக் சுல்தானின் Behri Mamluk empire என்ற பிரிவின்கீழ் இருந்தது. அலக்ஸாந்திரியா தனக்குப் பிடித்திருந்ததாகவும், தான் பார்த்த மிக சிறப்பு வாய்ந்த ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்ததாகவும் பின்னால் குறிப்பிடுகிறார். [we reached Alexandria. It is a beautiful city, well-built and fortified with four gates and a magnificent port. Among all the ports in the world I have seen none to equal it except Kawlam [Quilon] and Calicut in India, the port of the infidels [Genoese] at Sudaq [Sudak, in the Crimea] in the land of the Turks, and the port of Zaytun [Canton?] in China, all of which will be described later ]. – ஜாஃபர்)
கலங்கரை விளக்கம் “wonders of the ancient world”
’பழமை உலகின் அற்புதங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்றேன், சதுரவடிவிலான மிக உயரமான கட்டிடமாக இருந்தது, அதன் ஒரு பகுதி சேதமுற்றிருந்தது. அதன் வாயில் தரை மட்டத்திலிருந்து உயரத்திலிருந்தது. அதன் வாயிலுக்கு நேர் எதிரே வேறொரு காட்டிடம் அதே உயரத்திலிருந்தது. அதற்கு செல்வதற்கு ஒரு பலகையை பாலம்போல் அமைத்திருந்தது, அந்த பலகையை எடுத்துவிட்டால் அக்கட்டிடத்திற்குப் போகமுடியாது. வாயில் கதவுக்குப் பின்புறம் கலங்கரைவிளக்கப் பணியாளர் வசிக்குமிடம் இருந்தது. கலங்கரை விளக்கத்தினுள்ளே பல அறைகள்(Chembers) இருந்தன. அது நகரத்தைவிட்டு மூன்று மைல் தூரத்தில் கடற்கரை ஓரமாக, புறநகர் மதிற்சுவரையொட்டி இருந்தது. நகரிலிருந்து செல்லும் ஒரேயொரு பாதை வழி மட்டுமே அதனை அடைய முடியும், வேறு வழி இல்லை. நான் மீண்டும் 23 ஆண்டுகள் கழித்து வந்தபோது 750(1349) எந்த வகையிலும் போக முடியாதபடி அது இடிந்த நிலையில் காணப்பட்டது. மாலிக் அல்-நாசிர் என்பவர் அதே போல் ஒன்றை அதனருகே கட்டினார் ஆனால் அவர் மரணத்துக்குப் பின் அதுவும் முடிவுபெறாமல் நின்றிருந்தது. அந்நகரில் வேறொரு அற்புதத்தைக் கண்டேன், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரே கல்லிலான பளிங்குத் தூண்(an obelisk) ஒன்று மிகப் பெரிய சதுர மேடையின் மீது நிற்பதைக் கண்டேன். அது யார்காலத்தில் வடித்தது, எப்படி நிலைநிறுத்தினார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை.
நான் சந்தித்த இரு மகான்கள்
அலக்ஸாந்திரியாவில் நான் இரு பெரிய மனிதர்களை சந்தித்தேன், அதில் ஒருவர் நீதிபதி சொல்வன்மையில் வித்தகராக இருந்தார் (a master of eloquence). அவர் அணிந்திருந்த தலைப்பாகை பல சுருள்கள் கொண்ட மிகப் பெரிதாக இருந்தது. அதுபோன்று கீழ்திசையிலும் கண்டதில்லை,மேல்திசையிலும் கண்டதில்லை. மற்றவர் புர்ஹானுதீன் என்ற இறைநேசர். அவருடைய அனுசரனையும் உபசரிப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது, மூன்று நாட்கள் அவருடன் இருந்தேன். ஒரு நாள் அவரது அறைக்குள் நுழைந்தபோது “நீ வெளிநாடுகளில் பயணம் செய்வதை ஆசிக்கிறாய்” என்றார். “ஆம், நான் விரும்புகிறேன்” என்றேன். பின்பு சொன்னார், “நீ இந்தியாவில் என் சகோதரர் ஃபரீதுதீனையும், சிந்துவில் என் சகோதரர் ருக்னுதீனையும், இன்னொரு சகோதரர் புர்ஹானுதீனை சீனாவிலும் கண்டிப்பாக சந்திப்பாய், அவர்களிடம் என் சலாத்தையும் வாழ்த்தையும் தெரிவி” என்றார். அப்போது, அத்தனை தூரமுள்ள இந்தியா, சீனாவுக்குப் போகவேண்டும் என்ற எண்ணமே எனக்கில்லாதிருந்தபோது இம்முன்னறிவிப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அம்மூவரையும் சந்திக்கும் வரை என் பயணம் தடைபடவில்லை.
ஷெய்கும் கனவும்
நான் அலக்ஸாந்திரியாவில் இருக்கும்போது ஒரு முர்ஷித்(pious man)/ஷெய்கைப் [ இமாம் அபுல் ஹசன் ஷாதுலி(ரஹ் என சில குறிப்புகள் சொல்கின்றன.- ஜாஃபர்] பற்றி கேள்விப்பட்டேன், அவர் ஓர் சிறிய அறையில்(Cell) தனிமையில் வாழ்வதாகவும் (lived in solitary retreat in a cell), தன்னைக் காண வருபவர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி விருந்தளிப்பதாகவும், தினமும் மன்னர், மந்திரிகள் முதல் மக்கள் வரை அலையலையாக வருவதாகவும் கேள்விப்பட்டேன். அவரைக் காணவேண்டும் என்ற துடிப்புடன் அலக்ஸாந்திரியாவை விட்டுப் புறப்பட்டேன். அவர் இருக்கும் ஊரான ஃபவ்வா(Fawwa or Fua) வை அடைந்தேன். அது அழகிய சிறிய ஊர், ஒரு தூர்ந்தக் கால்வாயில் அவருடைய அந்த அறை இருந்தது. அது ஓர் மதிய வேளை சலாம் சொல்லியவாறு உள்ளே நுழைந்தபோது அரசருடைய பிரதிநிதி ஒருவர் அங்கே இருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து ஆரத்தழுவி வரவேற்று விருந்தளித்தார். மாலை நேரத்தொழுகையை என்னை தொழவைக்கும்படி சொன்னார். நான் சற்று நேரம் தூங்கவேண்டும் என்ற விருப்பத்தை சொன்னதும் அவர் அறைக்கு மேல் மொட்டைத்தளத்தில் தூங்கச் சொன்னார். அப்போது கடுமையான கோடைக் காலம், நான் தயங்கியதை கண்டு “ஒவ்வொருவருடைய இடத்தை இறைவன் நிர்ணயித்துள்ளான்” என்ற இறைவசனத்தை சுட்டிக்காட்டினார். நான் எதும் பேசாமல் மேலே சென்றபோது அங்கு வைக்கோலினாலானப் படுக்கை, தோல் விரிப்பு, ஒலு செய்ய தண்ணீர், ஒரு குடுவையில் குடிக்க நீர், ஒரு குவளை அனைத்தும் இருந்தன. அவை எனக்காக வைக்கப்பட்டது போல் தோன்றியது.
நான் நன்றாக தூங்கினேன். அன்று இரவு ஓரு கனவு, ஒரு பெரிய பறவை என்னை சுமந்துகொண்டு மக்காவை நோக்கிப் பறக்கிறது, பின் ஏமன், பின் கிழ்திசை, அதன்பின் தெற்கு நோக்கி, பின் மீண்டும் கீழ்திசை நோக்கிப் பறந்து முடிவாக பசுமை நிறைந்த இருண்ட தேசத்தில் இறக்கிவிடுவதுபோல் கண்டேன். மறு நாள் காலை பார்வையாளர்கள் சென்றபின் என்னை அழைத்து கனவின் விளக்கத்தை சொன்னார். “நீ மக்காவுக்குப் புனிதப் பயணம் செய்வாய், மதினா செல்வாய், ஏமன், ஈராக், துருக்கி சென்று பின் இந்தியா செல்வாய். இந்தியாவில் நீண்ட நாள் இருப்பாய் அப்போது அங்கே என் இந்திய சகோதரர் ‘தில்ஷாத்’ ஐ சந்திப்பாய் அவர் உன்னை, நிகழப் போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்” என சொல்லிவிட்டு பயணத்துக்கான ஆகாரமும், பணமும் சிறிது தந்து என்னை வழியனுப்பிவைத்தார். அவர் ஆசியால் என் பயணம் இனிதாகவே இருந்தது.’
(அறிவை வைத்து உரசிப் பார்த்தால் எதோ மந்திரவாதி கதை போல இருக்கும், அதுக்கு நான் பொறுப்பல்ல; அறிவுக்கு அப்பாற்பட்டது எதுவும் நடக்கலாம், இது occult science சம்மந்தப்பட்டது. ஆதாரம் கேக்கிறவங்க உங்களுக்கு நீங்க என்ன ஆதாரம் என்கிறதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்க, விடை கெடச்சா அதான் இதுக்கும் விடை – ஜாஃபர்)
கெய்ரோ(‘Al-Qahirah-the Victorious’)
’பல நகரங்களைக் கடந்து டெமீட்டா என்ற ஊரை அடைந்தேன். யாரும் அங்கு அனுமதி இல்லாமல் நுழைய முடியாது ஊரின் வெளியே நுழைவாயில் உண்டு அங்கே அனுமதிப் பெற்றே செல்லவேண்டும் அதுபோல் அனுமதிப் பெற்றே வெளியேற முடியும். அவ்வூரை விட்டு கடந்த பின் சில குதிரை வீரர்கள் வழியில் என்னை மடக்கி சில நாணயங்களைத் தந்து டெமீட்டாவின் கவர்னர் பரிசாகக் கொடுத்ததாக சொன்னார்கள். அலக்ஸாந்திரியாவிலிருந்து கெய்ரோ வரை அதுபோல் கெய்ரோவிலிருந்து அஸ்வான் வரை அனேக கடைத்தெருக்கள் இருந்தன. எனவே உணவுக்கோ தண்ணீருக்கோ தட்டுப்பாடு ஏற்படவில்லை.
அப்போது சுமார் 6,00,000 மக்கள் வாழும் அரபு மொழிப் பேசும் பெரிய பட்டணமாகவும் பெரிய நகரமாகவும் விளங்குகிறது சீனாவின் நகரத்தைத் தவிர. மம்லுக் சுல்தானின் [Mamluk means “Slave” (மங்கோலியர்களை வெற்றி கொண்டவர்கள்)] 10ம் நூற்றாண்டில் ஃபாத்திமியா(Fathimid dynasty) மன்னர்களால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சுவர் அமைந்த நகரமாக கெய்ரோவில் மக்கள் நெரிசலும் ஆரவாரமும்(frantic) நிறைந்ததாக இருந்தது. குறுகிய தெருக்களில் மக்கள், ஒட்டகம், கோவேறு கழுதைகள் நிறைந்திருந்தன; ஆயிரக்கணக்கான கடைகள் இருந்தன; நடைபாதை மருந்து விற்பனையாளர்களும், வியாபாரிகளும் நெருக்கமாக நிறைந்திருந்தனர் (armies of peddlers and vendors also jammed); அனேக பள்ளிவாசல்களும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும், மடங்களும்(convents) இருந்தன. அவை அமீர்களினால் தயாள சிந்தையுடன் கட்டியவையாகும்.
நெருங்கிய கட்டிடங்களும், தண்ணீர் மற்றும் பொருள்கள் எடுத்துச் செல்ல 12,000 ஒட்டகங்களும், 30,000 கழுதைகளும் கோவேறு கழுதைகளும் இருந்தன. நைல் நதியில் சுல்தானுக்குச் சொந்தமான 36,000 படகுகள் இருந்தன, அவை கெய்ரோவிலிருந்து அலக்ஸாந்திரியாவுக்கும் அஸ்வானுக்கும் சென்றுவர பயன்படுத்தப்பட்டது.
maristan என்று சொல்லப்படும் மருத்துவமனை மிகவும் பிடித்திருந்தது. மருத்துவ மனையின் அமைப்பு, நோயாளி தங்கும் அறை, ஒய்வறை, நூலகம், மருந்தகம் என எல்லாம் நேர்த்தியாக இருந்தன, பணக்காரர் ஏழை என பாகுபாடு இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தின வருமானம் ஆயிரம் தினாருக்குமேல் இருந்தது.
கெய்ரோவிலிருந்து மக்கா செல்ல மூன்று வழிகள் இருந்தன. அதில் மிகவும் விரைவாக செல்லும் வழியான நைல் பள்ளத்தாக்கு வழியாக செங்கடல் துறைமுக நகரமான அய்தாபை அடைந்து கப்பலில் செல்வது. அங்கு சென்றபோது அல் ஹுத்ருபி என்ற இனத்தவர்கள் எகிப்து சுல்தான் படையுடன் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர், எனவே கெய்ரோவுக்கே திரும்பும் நிலை ஏற்பட்டது. முதலில் கெய்ரோ வந்தபோது “நீ, சிரியா வழியாக மக்காவுக்கு செல்வாய்” என்று ஷெய்கு அபுல் ஹசன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் முன்னறிவிப்பு நல்கியிருந்தார்கள்.
சிரியாவை நோக்கி…
கெய்ரோவில் ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு வணிகக்கூட்டத்துடன் சிரியாவை நோக்கிப் பயணமானேன். இது 1326 ஜூலை இரண்டாம் வாரம் நடந்தது. மம்லுக் அரசு வணிகக்கூட்டத்திற்கும் புனித பயணாளிகளுக்கும் பாதுகாப்பான பாதை அமைத்திருந்தது. ஆனால் பல சுங்கச் சாவடிகளைக் கடக்க நேரிட்டது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கடவுச் சீட்டு இல்லாமல் வணிகர்கள் சுங்கவரி செலுத்தாமல் யாரும் உள்ளே போகவோ வெளியே வரவோ முடியாது. ஒவ்வொரு சுங்கச் சாவடி அருகேயும் பயணிகள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்கான அனைத்து வசதிகளும் இருந்தன.
1258 ல் மங்கோலியர்கள் பாக்தாதை சூறையாடிய பிறகு டெமாஸ்கஸையும் கைப்பற்றினர். அவர்களை 1260 முதல் 1300 வரை சிரியாவிலிருந்து விரட்டியடித்த மம்லுக் சுல்தான் மீண்டும் மங்கோலியர்கள் ஊடுருவாதிருக்கவே எல்லைப் பாதுகாப்பில் மிக கவனமாக இருந்ததால் சுங்கச் சாவடிகளை நிறுவியிருந்தனர். மேலும் எகிப்திலிருந்து பாலஸ்தீனம் வரை தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.
டெமாஸ்கஸ், மம்லுக் சுல்தான்களின் இரண்டாவது தலைநகர், டெமாஸ்கஸை அடையும்முன்பு ஹஜ் பயணிகள் கூட்டம்(Caravan) டெமாஸ்கஸிலிருந்து வருவதைக் கண்டேன், அவர்களுடன் சென்றிருந்தால் பாதுகாப்பாக சென்றிருக்க முடியும், ஆனால் நான் செல்லவில்லை. அருகே இன்னும் சில புனிதமான இடங்கள் இருந்தன, அவற்றை காணவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டேன். அல்-கலீல்(Hebron), அல்-குத்ஸ்(Jerusalem), பெத்தலஹம். இவை மூன்றுமே இஸ்லாமியர், கிருஸ்துவர், யூதர்களுக்கு புனித தலமாக இருந்ததால் மூன்று சமயத்தவரும் கூட்டம் கூட்டமாக வந்துபோய்க் கொண்டிருந்தனர்.
ஹெப்ரானில் சதுரவடிவ கல்லினால் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் ஒன்றிருந்தது. அங்கு புனிதக் குகை ஒன்று உள்ளது அதில் மூன்று கல்லறைகள் இருக்கின்றன, அவை இப்றாஹிம் நபி, இஸ்ஹாக் நபி, யாக்கூப் நபியுடைதாகும். அவற்றின் எதிரே வேறு மூன்று கல்லறைகள் இருந்தன. அவை அவர்களின் மனைவிகளுடையதாகும். சற்று தூரத்தில்(2km) லூத் நபி, யூசுஃப் நபியுடைய கல்லறைகளும் இருந்தன. ஹெப்ரானிலிருந்து ஜெருஸலம் போகும் வழியில் இன்னும் சில புனித இடங்களிருந்தன. ஈசா நபி பிறந்த ஊரான பெத்துலஹம் சென்றுவிட்டு ஜெருஸலத்தை அடைந்தேன். இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமான (third sacred mosque after Mecca and Madina) ஜெருஸலம் சுமார் 10,000 மக்கள் வசிக்கும் சிறிய நகரமாக இருந்தது. அதன் பாதுகாப்பு சுவர் இடிந்த நிலையில் காணப்பட்டது. பள்ளிவாசல் முழுவதும் மேற்கூரை இல்லாமலிருந்தது, ஆனால் அல்-அக்சா என்று சொல்லப்படும் நடுப் பகுதி மட்டும் கூறை மிகவும் கலைநயத்துடன் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதன் வெளிப்புறமும் உறுதியான கற்களினால் கட்டப்பட்டு அதன் மேல் தங்கத் தகடுகள் வேயப்பட்டு கம்பீராமாக காட்சியளித்தது, பகலிலும் இரவிலும் மின்னியது. உள்ளும் புறமும் அதன் கலைவேலைபாடுகள் பிரமிக்கவைத்தது.
ஒருவாரம் வரை ஜெருஸலத்தில் இருந்துவிட்டு டெமாஸ்கஸில் நுழையும்போது ரமலான் பிறை 9 (9th Aug 1326) அல்-ஷரபிஷிய என்றழைக்கப்படும் மாலிக்கிய கல்லூரியில் தங்கினேன். டெமாஸ்கஸ் நான் பார்த்த நகரங்களில் மிக அழகானதாக இருந்தது. 24 நாட்கள் நான் தங்கியிருந்த காலத்தில் நான்காம் கலிஃபா உமையா கட்டிய 8ம் நூற்றாண்டு பள்ளிவாசலைக் கண்டேன். மிக அற்புதமான கட்டிடக் கலையுடன் அமைந்த அழகிய பள்ளிவாசலின் சலவைக் கல் தூணின் கீழே அமர்ந்து பலருடைய பிரசங்கங்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பல்வேறு அறிஞர்களையும் நீதிபதிகளையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிட்டியது.
பேராசிரியரின் பரிவு
நான் டெமாஸ்கஸை அடைந்தபின் மாலிக்கிய கல்லூரி பேராசிரியர் நூருதீன் ஷகாவி என்பவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நோன்பு திறப்பதற்கு என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். நான்கு நாள் சென்றிருப்பேன் சுகவீனமாகி செல்லவில்லை, இதை உணர்ந்த அவர் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சகல வசதிகளும் செய்து தந்து மருத்துவரையும் ஏற்பாடு செய்தார். என்னுடைய சங்கடத்தை உணர்ந்து அவர், “இதை உன் வீடுபோல் நினைத்துக்கொள், உன் சகோதரனாக என்னை பாவித்துக்கொள்” என அன்புகட்டளை இட்டார். நோய் குணமாகும் வரை வைத்திய செலவு உட்பட அனைத்தையும் அவரே ஏற்றார். இறைவன் அருளால் பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது நான் குணமாகியிருந்தேன். இதற்கிடையில் என்னிடமுள்ள பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பேராசிரியர் நூருதீன் என் பயணத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வழிச் செலவுக்குத் தேவையான பணமும் உணவும் கொடுத்துதவினார்.

மதினாவை நோக்கி….
ஷவ்வால் மாதம் முதல் நாள்(1-9-1326) அன்று ஹஜ்ஜு காரவான் டெமாஸ்கஸிலிருந்து புறப்பட்டது, அதில் நானும் இணைந்தேன். போஸ்ரா (Buṣrāஅடைந்தவுடன் வழக்கமாக எல்லா காரவான்கள்போல் எங்கள் காரவானும் நான்கு நாட்கள் தங்கி வணிகம் செய்துவிட்டு புறப்பட்டோம். மீண்டும் அல்-கரக்கிற்கு வெளியே நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். சிரியாவின் கடைசி நகரான ‘மஆன்’ ஐக் கடந்து தபூக்கை அடையும்போது எங்களிடமுள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது. நான்கு நாட்கள் தங்கியிருந்து தண்ணீர் முதல் உணவு வரை சேகரித்துக்கொண்டு கொடும் பாலையில் இரவு பகல் பாராது அதிவேகமாகப் பயணத்தைத் தொடர்ந்தோம், காரணம் ‘சமூன்’ என்கிற மணற்புயலிலிருந்து தப்பிப்பதற்காக.
ஐந்து நாள் பயணத்திற்குப் பிறகு அல்-ஹிஜ்ரை அடைந்தோம். எங்களிடமிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது, பெருமானார் அவர்கள் தபூக் செல்லும்போது அவர்களுக்கும் இந்நிலை ஏற்பட்டு இங்கு யாரும் தண்ணீர் அருந்தவேண்டாம் என உத்திரவிட்டு தாகத்துடன் கடந்த வரலாறு நினைவுக்கு வந்தது. இங்கு ‘சமூது’ கூட்டத்தார் வாழ்ந்த குகை வீடுகள் செம்பாறையில் இருந்தன.’
[In the 14th century, the celebrated traveller Ibn Battuta admiringly described the Nabataean tombs of Al-Hijr, cut into the red stone. He did not mention any human activity at the time. – UNESCO] Note: Anyone seeing them would take them to be of recent construction. [The] decayed bones [of the former inhabitants] are to be seen inside these houses]
’ஹிஜ்ரிலிருந்து அரை நாள் பயணத்தில் ‘அல் உலா’ வை அடைந்தோம். பேரீட்சை மரங்களும், சுனைகளும் நிறைந்த பெரிய கிராமம், அதன் மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். அங்கு தங்கி ஆடைகள் முதல் அனைத்தையும் சுத்தம் செய்துக்கொண்டு மூன்றாம் நாள் பயணமாகி புனித நகரமான மதினாவை அடைந்தோம். சமாதானத்தின் வாயிலில் எங்கள் சலாத்தினை சமர்ப்பித்தோம். சங்கைமிக்க பெருமானார் அவர்களின் புனித ரவ்லா ஷரீஃபுக்கும்(Tomb) அவர்கள் நின்று பிரசங்கம் செய்த மேடைக்கும் இடையே அமைந்துள்ள சிறப்புமிகுந்த தோட்டத்தில் தொழுதோம். அவர்கள் நின்று பிரசங்கம் செய்த பேரீச்சை மரத்தின் சிதைந்த பாகங்களை முத்தமிட்டோம். இறைவனின் திருத்தூதர், மக்காவின் மாமன்னர், எங்கள் தலைவர் மாநபி ரசூல்(சல்) அவர்களின் ரவ்லா ஷரீஃபையும் அதனருகே இருக்கும் தோழர்கள் அபு பக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரின் ரவ்லா ஷரீஃபினையும் கண் குளிரக் கண்டுகளித்தோம். நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது ஒவ்வொரு இரவிலும் இறைவணக்கம் புரிவதிலும், வட்டமாக அமர்ந்து குர்ஆன் ஷரீஃபை ஒருவர் மாற்றி ஒருவர் ராகமாக ஒதுவதிலும், புனித ரவ்லா ஷரீஃபை தரிசிப்பதுமாகவே இருந்தோம்.
ஹஜ்ஜு நிறைவேறியது…
’மதினாவிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல் தூரத்திலுள்ள ‘துஅல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் பெருமானார் அவர்கள் செய்தபடி எங்கள் ஆடைகளைக் கலைந்து ‘இஹ்ராம்’ (ஹஜ்ஜுக்கான தைக்கப்படாத ஆடை) அணிந்தோம். பின்பு பதரை( بدر-Badrநோக்கிப் பயணமானோம், பின்பு பஜ்வா, ரபிக்(இது எகிப்து வடமேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வருபவர்கள் இஹ்ராம் அணியுமிடம்) ஐ கடந்து குலயிஸ் வந்தடைந்தோம், இங்கு Bedouinகளின் கடைத்தெரு இருந்தது. இங்கே ஆடு, பழங்கள், உணவுப் பொருட்கள் கிடைத்தன. உஸ்ஃபான் வழியாக காலைப் பொழுது புனிதமிகு மக்காவை அடைந்தோம். தாமதிக்காமல் உடனே ஹஜ்ஜுக்கான கிரியை அனைத்தையும் தொடங்கி இனிதே முடித்தோம். எந்த நோக்கத்தோடு புறப்பட்டேனோ அந்த நோக்கம் பதினெட்டு மாதங்கள் கழித்து நிறைவேறியாது, இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் நான் நிறைய அனுபவங்களைப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
அன்புமிகுந்த மக்காவாசிகள்
அங்குள்ள மக்கள் அன்பும், தயாள சிந்தையும், இரக்க குணம் உடையவர்களாகவும் இருந்தனர். வெளியூர் பயணிகளிடம் காட்டும் பரிவும், அரவணைப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது. அவர்கள் விருந்தளிப்பதாக இருந்தால் முதலில் வறுமையில் வாடும் தொழுகையாளர்களையும் ஆதரவில்லாத ஏழைகளையும் அழைத்து விருந்தளிப்பர். வறுமையில் வாடும் ஏழைகள் ரொட்டிக்கடை (public bakehouses) முன்பாக காத்திருப்பர், ரொட்டி வாங்க வருபவர்கள் அவர்களுக்கும் கொடுத்துவிட்டு தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சென்றனர்.
மக்காவாசிகள் தூய்மையான ஆடை அணிந்து நாகரீகமாக இருந்தனர்; பெரும்பாலும் வெண்மையான(snow white) ஆடையையே அணிந்திருந்தனர்; நல்ல அத்தரும், சுருமா(kohl) உபயோகித்தனர்; மிஸ்வாக்(toothpicks of green arak-wood) சாதாரணமாக உபயோகித்தனர். பெண்கள் மிகவும் அழகாகவும், இரக்க சிந்தையும், நாகரீகமுள்ளவர்களாகவும் இருந்தனர்; அவர்கள் பூசியிருக்கும் வாசனை திரவியம் அவர்கள் சென்றபிறகும் நறுமணம் இருந்துக்கொண்டே இருக்கும் அத்தகைய உயர்வான அத்தர்களை உபயோகித்தனர். உணவுக்காக செலவிடுவதைவிட நறுமணப் பொருளுக்காக அதிகமாகவே செலவழிப்பார்கள். ஒவ்வொரு வியாழன் இரவும் உயர்வான மேலங்கி அணிந்து இறை இல்லத்துக்கு கூட்டமாக வருவார்கள். அவர்கள் வந்தபின் அந்த இடம் முழுவதுமே நறுமணத்தால் கமழ்ந்துக்கொண்டிருக்கும்.
**
(இப்னு பதூதா தன்னுடைய 21ம் வயதில் எந்த எண்ணத்துடன் புறப்பட்டாரோ அதை 18 மாதங்கள் கழித்து நிறைவேற்றினார். தான்னுடைய குறிக்கோள் பூர்த்தியானவுடன் தாய் நாடு திரும்பியிருக்கலாம், அப்படி திரும்பியிருந்தால் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன்பும் பின்பும் ஹஜ்ஜு செய்த மக்களில் அவரும் ஒருவராகத்தான் இருந்திருப்பார். சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கமுடியாது. நிறைவேறிய தனது குறிக்கோளுடன் திருப்தியடைந்துவிடவில்லை. மேலும் பல நாடுகளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்போது உதித்ததோ அல்லது எது அவரை தூண்டியதோ தெரியவில்லை, தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரு மாத காலம் மக்காவில் இருந்துவிட்டு தன் பயணத்தை மீண்டும் தொடருகிறார்.)
***
’17 நவம்பர் 1326 அன்று ஈராக்கை நோக்கி காரவான் ஒன்று புறப்பட்டது அதில் நானும் புறப்பட்டேன், அப்பயணக்கூட்டத்தின் தலைவர் எனக்காக ஒரு ஒட்டகத்தை தன் செலவில் வாடகைக்கு அமர்த்தித் தந்தார். கஃபாவை வலம் வந்துவிட்டு அத்தலைவரின் பாதுகாப்பில் நானும் பயணமானேன். முதலில் எங்கள் பயணக்கூட்டம் மதினாவை அடைந்தது. அங்கு ஆறு நாட்கள் தங்கினோம். தண்ணீர், உணவுப்பொருட்கள் சேகரித்துக்கொண்டு வடகிழக்கு திசையில் பயணமானோம். நஜத்(Najd) பீடபூமியைக் கடந்ததும் அரேபிய தீபகற்பம் எங்களுக்கு விடையளித்தது. இரண்டு வார கால பயணத்துக்குப் பின் நஜஃபை அடைந்தோம். (கலிஃபா ஹாரூன் ரஷீதின் மனைவி, பாக்தாத் மற்றும் நஜஃபிலிருந்து மதினா செல்லும் பயணிகளுக்காக வழி நெடுகிலும் பல நீர் தடாகங்களை தன் சொந்த செலவில் கட்டியிருந்தார்).
நஜஃப் மிக அழகிய நகரம், மிகவும் சுத்தமாக இருந்தது. நாங்கள் கடைத்தெரு வாயில் வழியாக உள்ளே நுழையும் போது முதலில் இருந்தது காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பின் உணவகங்கள், பின் இறைச்சிக் கடைகள், பின் பழக் கடைகள், அதற்கடுத்ததாக தையற்கடைகள் இருந்தன. அதன்பின் கய்சரியா என்ற இடத்தைக் கடந்ததும் நறுமணப் பொருட்களின் கடைத்தெரு வந்தது. அவற்றை எல்லாம் கடந்து வந்தபின் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடங்கியுள்ள இடம் வந்தது. அங்கே மூன்று கல்லறைகள் இருந்தன, ஒன்று ஆதம் நபி, இன்னொன்று நூஹு நபி, மூன்றாவது அலி அவர்களுடையது என்கிறார்கள். இம்மூன்று கல்லறைகளுக்கிடையில் மூன்று வெள்ளி தங்கத் தட்டுகளில் பண்ணீர், கஸ்தூரி(musk), அத்தர் வைக்கப்பட்டிருந்தன. தரிசனத்துக்கு வருபவர்கள் பூசிக்கொள்கிறார்கள். நஜஃபில் ஷியாக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ரஜப் பிறை 27 க்கு முன் தினம் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.
பஸராவை நோக்கி…
இங்கிருந்து எங்கள் காரவான் பாக்தாதுக்குப் புறப்பட்டது, ஆனால் வஸித் வழியாக பஸராவுக்கு புறப்பட்டேன். மூன்று நாள் பயணத்தில் வாஸித் என்ற ஊரை அடைந்தேன். அங்குள்ள மக்கள் போதிய கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். குர்ஆன் ஓதும் முறையைக் கற்றுக்கொள்வதற்காக எங்களிடம் வந்தனர். எங்கள் காரவான் மூன்று நாள் அங்கே தங்கிருந்தபோது ‘அஹமது கபீர் ரிஃபாயி’ அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பின் டைக்ரீஸ் நதி ஓரமாக பஸராவை அடைந்தோம். பஸரா பரந்த நோக்கமுள்ளவர்கள் வாழும் மிக அழகான நகரம், எங்கு பார்த்தாலும் அடர்த்தியான போரீச்சைத் தோட்டம், ஒரு கூடை பேரீட்சைப் பழம் ஒரு ஈராக்கி தினாருக்கு விற்றனர். அங்குள்ள மக்களிடம் தனி குணம் ஒன்றிருந்தது, அங்கு வருகைதரும் அன்னியர்களிடம் அன்பாகப் பேசி பழகும் விதம்; இது அவர்களுக்கு தாங்கள் அன்னியர்கள் என்ற எண்ணம் வருவதே இல்லை. இங்கிருந்து உபல்லா என்ற சிறிய கிராமத்துக்குப் படகின் மூலம் சென்றேன். இது ஒரு காலத்தில் இந்திய பாரசீக வணிகர்களின் நகராக இருந்தது.
எனது நோக்கம் பாக்தாதை அடையவேண்டும் என்று எனவே மலைகளைக் கடந்து இஸ்ஃபஹான் நகரை அடைந்தேன். இஸ்ஃபஹான் ஒரு அழகிய பட்டணம், ஆனால் மங்கோலியர்களின் ஊடுருவலால் நகரம் அழிந்திருந்தது; ஷியா ஸுன்னிகளுக்கிடையேயான விரோதம் நகரம் நகரை முன்னேற்ற பாதையை நோக்கிப் போகவில்லை. இங்கு ஆப்ரிகோட், திராட்சை, மெலன் முதலிய கனிவர்கங்களும், வேறெங்கும் பார்த்திராத சுவை நிறைந்த பதாம்களும் கிடைத்தன. இளம் சிகப்பு கலந்த வெள்ளை நிறத்தில் மக்கள் இருந்தனர். பின் ஜக்ரோஸ் மலைகளைக் கடந்து ஷிராஜ், [http://en.wikipedia.org/wiki/Shiraz] அங்கிருந்து கூஃபா வழியாக கர்பலாவை அடைந்தேன். கர்பலாவில் இமாம் ஹுசைன் அவர்களின் அடக்கத்தலம் நஜஃபில் அலி அவர்களின் அடக்கத்தலத்திலுள்ளது போன்ற அமைப்பு இருந்தது. இங்கேயும் ஷியா ஸுன்னிகளுக்கிடையான விரோதம் இருந்தது. (இது யுக முடிவு வரை மாறாது). பின் அங்கிருந்து புகழ் வாய்ந்த பட்டணமான பாக்தாதை அடைந்தேன்.
பாக்தாதில்…
நான் பாக்தாதை அடையும்போது ஜூன் 1327. பாக்தாது நகரமும் சரி, நான் பயணித்த இஸ்ஃபஹான், ஷிராஜ் நகரங்களும் சரி 1258ல் மங்கோலிய ஆக்ரமிப்பாளன் செங்கிஸ்கானின் பேரன் Hulago Khan என்பவனால் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. பாக்தாதில் பதினோரு பிரதானப் பள்ளிவாசல்கள் இருந்தன. அவற்றில் எட்டு நதியின் வலது கரையிலும் மூன்று இடது கரையிலும் இருந்தன, இவையல்லாமல் நிறைய வேறு பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் இருந்தன. அவை பெரும்பாலும் அழியக்கூடிய நிலையில் இருந்தன. இருந்தன. மருத்துவமனைகளும் இந்நிலையிலேயே இருந்தன. கிழக்கே அனேக கடைத்தெருக்கள் இருந்தன, அவற்றுள் மிகப் பெரியது செவ்வாய் சந்தை என்று சொல்லக்கூடியது.
நான் சென்ற நேரம், மங்கோல் கடைசி அரசர் அபு சயித், தன் பரிவாரங்களுடன் வடக்கு நோக்கிப் புறப்படத் தயார் நிலையில் இருந்தது அதனுடன் நானும் சேர்ந்துக்கொண்டு தப்ரிஜ் வரை சென்றேன். தப்ரிஜ் மங்கோலியர்களின் வணிக மையமாக இருந்தது. நான் இதுவரைப் பார்த்திராத காஜான் பஜார் என்ற மிகப் பெரிய கடைத்தெரு அங்கிருந்தது; அங்கு ஒவ்வொரு வணிகமும் தனித்தனியே இருந்தன. ஆபரணக் கடைகளின் வழியேப் போகும்போது என் கண்கள் கூசின, அத்தனை விலை உயர்ந்த இரத்தினக் கற்களும் ஆபரணங்களும் ஜொலித்துக்கொண்டிருந்தன. ஒரு இரவே தப்ரிஜில் தங்கியிருந்தேன். மறு நாள் காலை நான் சுல்தானை சந்தித்ததால் வேறு எதையும் பார்க்கமுடியவில்லை, என்னை நலம் விசாரித்துவிட்டு ஹஜ்ஜு செய்யவேண்டும் என்ற என் நோக்கத்தைக் கேட்டறிந்து பாக்தாதிலிருந்து புறப்படும் ஹஜ்ஜு காரவானுக்கு ஓலை ஒன்று தந்தார், அதை பெற்றுக்கொண்டு பாக்தாத் திரும்பினேன்.
இரண்டாம் ஹஜ்ஜு…
காரவான் புறப்பட இரண்டு மாதங்களுக்குமேல் இருந்ததால் டைக்ரீஸ் நதியோரப் பட்டணங்களான மசூல், சிஜர், மர்தின், டைக்ரிஸ் நதியின் அரங்கப்பட்டணமான ஜஜிரத் இப்னு உமர் (Jazirat means island city of River), நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கிய இடமான ஜூதி மலையையும் கண்டுவிட்டு பாக்தாத் திரும்பினேன். புறப்படவிருந்த காரவானுடன் ஹஜ்ஜு செய்ய நானும் சேர்ந்துக்கொண்டேன். தப்ரிஜில் சுல்தான் கொடுத்த ஓலையால் என் பயணத்துக்கான அனைத்து வசதிகளும் கிடைத்தன. எங்கள் காரவான் கூஃபா நகரை அடைந்ததும் எனக்கு வயிற்றுப் போக்கு(diarrhoe’a) ஆரம்பித்தது. போகும் வழியெல்லாம் பல இடங்களில் என் ஒட்டகையைவிட்டு இறங்க நேரிட்டது. நாளுக்கு நாள் தளர்ந்துக்கொண்டே வந்தேன். காரவானின் தலைவர் அவ்வப்போது கவனித்துக்கொண்டாலும் பேதி நிற்பதாக இல்லை. மக்கா வந்தடையும் வரை பேதி நிற்கவில்லை. மினாவில் தங்கியபோதுதான் இறைவன் அருளால் நான் சுகமானேன்.’ (இங்கு வந்தபின் மூன்றாண்டுகள் (1327 to 1330) மக்காவிலேயே தங்கிவிவிட்டதாக தன்னுடைய ‘ரிஹ்லா’ வில் குறிப்பிடுகிறார்.)
ஏமன், ஆப்ரிக்கா, ஓமன் பயணம்
’1330 கடைசியில் ஹஜ்ஜை முடித்துவிட்டு ஏமனை நோக்கிப் பயணம் செய்ய முடிவு செய்து ஜுத்தா(ஜித்தா)வை அடைந்தேன். இது கடற்கரை ஓரமாக உள்ள புராதாண நகரம் பாரசீகர்களால் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. அங்கு அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
“யா பின் பதூதா..”
குரல் கேட்டுத் திரும்பினேன், யாரும் தெரியவில்லை.
மீண்டும், “யா பின் பதூதா, இங்கே வா…”
சற்று தூரத்தில் பார்வையற்ற ஒருவர் அழைத்ததைப் பார்த்து அவரிடம் நெருங்கினேன். “என்னை நீங்களா அழைத்தீர்கள்..?”
“ஆம்”, என்று என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாகத் தொட்டுத் தடவிவிட்டு, “எங்கே அந்த மோதிரம்..?” என்றார்.
அதிகாரக் குரல் தொனித்தது, நான் அசந்துவிட்டேன், இவர் யார் என்று தெரியாது, எங்கேயும் பார்த்ததில்லை, எப்படி இவருக்கு என்னைத் தெரியும்? கண்ணும் குருடு நான் மோதிரம் அணிந்திருந்தது இவருக்கெப்படி தெரிந்திருக்கிறது? என்ற கேள்விகள் என்னைத் துளைத்துக்கொண்டிருந்தது. ஆம், நான் ஒரு மோதிரம் அணிந்திருந்தேன், மக்காவை விட்டு புறப்படும்போது ஒரு ஃபக்கீர்(religious mendicant) என்னிடம் கையேந்தினார், அப்போது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை மோதிரத்தைத் தவிர, அதை கழற்றி கொடுத்துவிட்டு வந்தேன். இதை அக்குருடரிடம் சொன்னேன்.
“வேறு பொருள் இல்லையென்றால் மோதிரத்தைக் கொடுப்பதா? திரும்பச் சென்று வாங்கிக்கொள் அதில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ரகசியங்கள் இருக்கின்றன” என்றார். நான் அதிசயத்துப் போனேன். இறைவன் அறிவான் என்ற எண்ணம் மட்டுமே ஓடியது.’
(நம்ம ஆள்கள் உடனே, இதுலெ என்ன அதிசயம் இருக்கு? அவர் கேள்விப்பட்டிருப்பார், யாராவது சொல்லிருப்பாங்க, இது பதூதாவுக்குத் தெரிஞ்சிருக்காது! இதுக்கெல்லாம் அல்லாவை கூப்பிட்டா…? அப்படி இப்படீன்னு காரணம் கற்பிப்பாங்க.- ஜாஃபர்)
’ஜித்தாவிலிருந்து கப்பலில் ஏமனை நோக்கிப் புறப்பட்டேன் என் கப்பலில் நிறைய ஒட்டகங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதுதான் எனக்கு முதல் கப்பல் பயணம்; இரண்டு நாள் வரை சாதகமாக வீசிக்கொண்டிருந்த காற்று சுழல் காற்றாக மாறியது, கப்பல் ஆட்டம் காணத் தொடங்கியது, கப்பல் மேல்தளத்தில் கடல் நீர் புகுந்தது, பலர் மயக்கம்(Sea sick) அடைந்தனர். காற்றினால் திசைமாறியதால் குறிப்பிட்ட இலக்கை நேராக அடையமுடியவில்லை. காற்று ஒய்ந்தும் கப்பலை நேராக செலுத்த முடியாமல் மாலுமி திணறினார். சில இடங்களில் கடல் மட்டம் குறைவாகவும், அடியில் பாறைகளும் இருந்ததால் அவற்றின் மீது மோதாமல் மிக ஜாக்கிரதையாகப் பாய்கள்(Sails) கட்டாமல் கப்பலை செலுத்தினார். ஒரு வழியாக அல்-அஹ்வாபில் கரை இறங்கி சனா(San’a) சென்றேன். அங்கிருந்து ஏமனின் தலைநகரமான தஅஜ் சென்றேன், ஏமன் சுல்தான் நூருதீன் அலியை சந்தித்தேன், சிறிது நாட்கள் அரசு விருந்தினராக தங்கியிருந்தேன், மீண்டும் சனா சென்றுவிட்டு அங்கிருந்து துறைமுக நகரமான ஏடனுக்குச் சென்றேன்.
ஏடனில், இந்தியாவிலிருந்து வந்த பெரிய கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. சில கப்பல்களின் உரிமையாளர்களும், வணிகர்களும் இருந்தனர். எகிப்திய வணிகர்களும் இருந்தனர். ஏடனிலிருந்து சோமாலியா, மொகதீசு, ஜன்ஜிபார், தன்ஜானியா, கென்யா, மொம்பாஸா முதலான இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஏடன் வந்து ஒரு மாதம் பயணம் செய்து ஏமனின் கடைசி மூலையிலிருக்கு தாஃபாரி(Dhofar) வந்தேன். இங்கிருந்துதான் இந்தியாவுக்கு விலை உயர்ந்த அரேபிய குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காற்று சாதகமாக இருந்தால் ஒரு மாதத்தில் அவை இந்தியா சென்றடைந்துவிடுமாம். இங்குள்ள மக்களின் முக்கிய உணவு அரிசி, அது இந்தியாவிலிருந்து இறக்குமதியாகிறது. இதனருகிலுள்ள ஊர்களில் பல்வகை கனிகளும் வாழையும் விளைகின்றன. பாக்கும் வெற்றிலையும் வளர்க்கின்றனர். இவை இங்கும் இந்தியாவிலும் மட்டுமே கிடைக்கின்றன.
பின் இங்கிருந்து ஓமன், ஹர்மூஸ்(Homuz) வந்தேன், இங்கிருந்து இந்தியா சிந்துவிலிருந்து வரும் பொருட்களை ஈராக், பாரசீகம், கொரஸான் நகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்குள்ளவர்களுக்கு பேரீச்சையும் மீனும் ராஜ உணவு. மன்னர் குத்துபுதீன் தாஹாம்தானை சந்தித்துவிட்டு கிஷ் (Kish-ஈரான்), பஹ்ரைன், ஹஜர்(ரியாத்), யமாமா வழியாக மீண்டும் ஹஜ்ஜு செய்வதற்காக (1332) மக்கா வந்தடைந்தேன்.’
பயணம் தொடரும்….
***
Sources:
http://en.wikipedia.org/wiki/Ibn_Battuta
http://www.islamfortoday.com/ibnbattuta01.htm
http://www.answers.com/topic/ibn-battuta
http://www.fordham.edu/halsall/source/1354-ibnbattuta.asp
http://www.absoluteastronomy.com/topics/Ibn_Battuta
http://www.saudiaramcoworld.com/issue/200004/the.longest.hajj.the.journeys.of.ibn.battuta.part.1-from.pilgrim.to.traveler.tangier.to.makkah.htm
Encyclopeadia Britannica
The Travels of Ibn Battuta by H.A.R.GIBB
***
also Refer Places visited by Ibn Battuta (svg files):

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com