
மத ஒற்றுமைக்கு மகத்தான எடுத்துக்காட்டு நாகூர்தான். சலீம் மாமா, இஜட். ஜபருல்லா, முஹம்மது ரஃபி , ஹத்தீப் சாஹிப், ஆபிதீன், அப்துல் கய்யூம், இஸ்மாயில் போன்றவர்கள் ஒற்றுமையாக இருப்பதே சான்று 😉 . கிண்டல் இருக்கட்டும், ஆபிதீன் பக்கங்களின் தரம் தாழ்ந்து விட்டதாக ‘நாகூர்மாமி’ சொன்னதைக் கேட்டு மனம் தாளவில்லை. அதனால் இந்தப் பதிவு. ‘நாகூர் – ஒரு வரலாற்றுப் பார்வை‘யைத்தான் (முனைவர் ஜெ.ராஜா முகமது எழுதிய கட்டுரை) பதியலாம் மீண்டும் என்று எண்ணினேன். அது பல தளங்களிலும் காப்பி செய்யப்பட்டு விட்டது. எனவே புதிதாக , இந்த ‘நாகூரார் சதகம் நான்கு’ . காலஞ்சென்ற, என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய , சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன் எழுதியது.
கீழ்க்கண்ட கட்டுரையில் இடம்பெறாத சில வரிகள் – ‘சொல்லரசு’ மாமாவின் கையெழுத்தில் – எனக்கு அவர்கள் கொடுத்த மலரில் – இருக்கிறது. அவை :’ 1. நாகூர் நாயகம் அவர்கள் பற்றிய சதகங்களில் காலத்தால் முந்தியது – 1923 – மீரான் சாஹிபு புலவர் பாடிய தரிசன மாலை சதகம் ஆகும். இக்கட்டுரை எழுதிய பின்னர்தான் அந்நூல் கிடைத்தது. 2. இலங்கை தமிழ் முஸ்லிம் புலவரான அப்துல் காதர் லெப்பை அவர்கள் இரண்டு சதகங்கள் பாடியுள்ளார். ஒன்று இரசூல் சதகம், மற்றொன்று தஸ்தகீர் சதகம். அவர் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.’
ஆக, நாகூரார் சதகம் நான்கு அல்ல, ஐந்து!
இஸ்லாமிய இலக்கியக் கழகம்.’ மறுமுறை இந்தக் கட்டுரையை பதிப்பித்தால் தலைப்பை திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படியே, மாநாட்டு மலர்களில் இடம்பெறும் படைப்புகளை ஒரு CD/DVDயில் – யூனிகோடில் – பதிவுசெய்து இலவசமாக விநியோகிக்குமாறும்.
மலரைத் தூக்குவதற்குள் மார்வலி வந்துவிடுகிறது!
கட்டுரை ‘போர்’ என்று நினைப்பவர்கள் கமால்கான் பாடுவதைக் கேட்கலாம். Kamal Khan sings Naina Thag Lein Ge on 22nd October episode of ‘saregamapa’. A song by Rahat Fateh Ali Khan from the movie Omkara, Music by Vishal Bhardwaj.
நன்றி!
ஆபிதீன்
***
நாகூரார் சதகம் நான்கு – சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன்
அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டுச் சிறப்பு மலரிலிருந்து.. (1999)
*
பத்துப் பத்தாக நூறு பாடல்கள் அல்லது தனி நூறு பாடல்கள் கொண்டு பாடப்படுபவை பதிற்றுப்பத்து, பிள்ளைத்தமிழ் ஆகியவனவாகும். சதகம் என்ற சொல் நூறு என்பதைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும்.
‘விழையும் ஒருபொருள் மேலோடு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப’ – (இலக். பாட். 87)
வடமொழியில் தத்துவம் உணர்த்தும் நீதிபோதனைகளைக் கொண்டு நூல்களாக அமைந்தவை சதக நூல்களாக விளங்கின.
அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள்
ஒன்றன் மேலாதல் கற்பித்ததொரு
நூறு செய்யுள் உரைப்பது சதாகமாமென்ப (முத்துவீரி. 1117)
அகப்பொருள் பற்றி அல்லது புறப்பொருள் பற்றி பாடப்பட்டவையாக அமைந்து, வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி, வட்டாரப் பழமொழிகளை வெளிப்படுத்துவனவாக அவை மிளிர்ந்தன; ஒளிர்ந்தன. தமிழில் மாணிக்க வாசகர் பாடிய திருச்சதகம் முதற் சதகமாகும் என்பர். அவிநாசி ஆறைக்கிழாரின் கார்மண்டலச் சதகம் முதற் சதகம் என்பாரும் உண்டு. அதனைத் தொடர்ந்து பாடப்பட்ட சதகங்கள் நீதி நூல்களாக சிறப்பினைப் பெற்றுள்ளன.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து அதன் இன்பத்தில் தோய்ந்த அறிஞர் பெருமக்களின் உண்மையை அடிப்படையாகக் கொண்ட முடிவின்படி இரண்டாயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளைப் பெற்றுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில், சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும். அவற்றில் சதகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இஸ்லாமியச் சதக இலக்கியங்களுள் மேலப்பாளையம் தக்கடி ஷெய்கு பஷீர் லெப்பை கலீபா அவர்கள் இயற்றிய ‘மெய்ஞ்ஞானச் சதகம்’ மிகப் பழமையானது என்றும், அதன் காலம் 1801ஆம் என்றும் கூறலாம்.
மெய்ஞ்ஞானச் சதகம் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பாடப்பட்டுள்ளது. இதுதவிர எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ள சதகங்கள் சில உண்டு. இஸ்லாமியச் சதகங்கள் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், இறைநேசச் செல்வர்களான வலிமார்கள் மீதும் பாடப்பட்டுள்ளன. தவிர இஸ்லாமிய நெறிமுறைகள் அறிவுரைகள் – வழிபாடுகள் உள்ளடக்கியவை மற்றவை. தமிழ் இலக்கிய உலகில் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் புலமைச் செறிவுடன் ஆக்கங்களைத் தந்து புகழ் முகட்டில் நிற்கிறார்கள் என்கிற உண்மை சதகங்களிலும் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. சதகம் பாடுவது முஸ்லிம் தமிழ்ப் புலவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.; சாதனையே புரிந்திருக்கிறார்கள். சமய அடிப்படையில் பாடப்பட்டுள்ள சதகங்களில் சைவத்திற்கு அடுத்த நிலையில், அதாவது எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில், இஸ்லாமியத் தமிழ் சதகங்கள் எண்னத்தக்கவை; ஏற்றம் பெற்றவை. அதே நேரத்தில் மற்ற சதகங்களைப் போன்ற சீரும் சிறப்பும் கொண்டு காலத்தை வென்று நிற்கும் நிலைக்கும் திறனும் தகுதியும் அவை பெற்றுள்ளன. அது தனிச் சிறப்பு, தலையாய சிறப்பு எனில் மிகைப்பட்ட புகழுரை அல்ல.
தமிழ் இலக்கிய வரலாறு என்ற தலைப்பிலான நூல்கள் பல உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்களை இருட்டடிப்பு செய்து, தமிழுக்குச் சேர்க்க வேண்டிய சிறப்பை ஏனோ சேர்க்காமல் தவிர்த்துள்ள உண்மை தமிழறிந்தோர் அறிந்த ஒன்று.. அவற்றைப் புறம் தள்ளிவிட்டு, உண்மையை வெளிச்சத்திற்குக் கொணர்ந்த வேறு சில நூல்கள் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சில நூல்களிலும் சரியான தெளிவான தகவல்கள் தரப்படவில்லை. அதனைத் தவிர்த்து வந்துள்ளது போன்ற தோற்றம் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது.
இஸ்லாமியத் தமிழ் சதகங்களின் எண்ணிக்கையத் தரமுற்பட்ட வரலாற்று நூலாசிரியர் ஒருவர் ஆய்வின்மையின் காரணத்தாலோ ஆதாரங்களைப் பெற முடியாத காரணத்தாலோ இஸ்லாமியச் சதகங்களாக ஐந்து சதகங்களையே குறிப்பிட்டுள்ளார். 1994ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறை வெளியீடான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதி மூன்று, பக்கம் 354) இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தனவாக ஏறக்குறைய இருபத்துமூன்று சதகங்கள் காணப்படுகின்றன என்கிற உண்மையக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை தந்த மூதறிஞர், முனைவர், ம.மு. உவைஸ், முனைவர் பீ.மு. அஜ்மல்கான் ஆகியோரின் அன்றைய முடிவையும் மிஞ்சிவிட்டது இன்று நாம் பெற்றுள்ள சதகங்களின் என்ணிக்கை.
இஸ்லாமியத் தமிழ் சதகங்களாக நாம் பெற்றுள்ள சிறப்பிற்குரிய இலக்கியச் செல்வங்கள் 1. மெய்ஞ்ஞானச் சதகம் – தக்கடி ஷெய்கு பஷீர் லெப்பை, 2. இரசூல் சதகம் – அப்துல் காதர் லெப்பை, 3. சலவாத்துச் சதகம் – மீரான் நயினார் புலவர், 4. சீறாச் சதகம் – முஹம்மது சுல்தான் மரைக்காயர், 5. திரு முகமது நபி சதகம் – பகீர் முஹம்மது, 6. திருநபி சதகம் – பொதக்குடி அப்துல் ரஹ்மான், 7. மஹமூதர் சதகம் – ஹாஜி மீரா ஹூசைன் ஆலிம் சாஹிபு, 8. மதீன மாநகர் தோத்திர சதகம் – கருணை அகமது தாஸ், 9. சல்லல்லாஹு அலைஹிவசல்லமே (சலவாத்துச் சதகம்) – அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா. 10. அகத்தீசர் சதகம் – குணங்குடி மஸ்தான் சாஹிபு. 11. முகையித்தீன் சதகம் – குணங்குடி மஸ்தான் சாஹிபு. 12. எதார்த்த சதகம் – மச்சரேகைச் சித்தர்., 13. காரண சதகம் – மச்சரேகைச் சித்தர், 14. காருண்ய சதகம் – மச்சரேகைச் சித்தர், 15. பூரண சதகம் – மச்சரேகைச் சித்தர், 16. பேரின்பச் சதகம் – மச்சரேகைச் சித்தர், 17. நாதாந்த சதகம் – மச்சரேகைச் சித்தர். 18. சிதானந்த சித்தர் சதகம் – மச்சரேகைச் சித்தர், 19. மெய்ஞ்ஞானச் சதகம் – மச்சரேகைச் சித்தர். 20. மோக்ஷ சதகம்- மச்சரேகைச் சித்தர், 21. வேதாந்த சதகம் – மச்சரேகைச் சித்தர், 22. மெய்ஞ்ஞானச் சதகம் – முகையித்தீன் சாஹிபு, 23. அப்துர்ரகுமான் அரபிச் சதகம் – பவானிப் புலவர்.(எ) செய்யது புகாரிப் புலவர். 24. குதுபு சதகம் – கிலுறு முஹம்மது, 25. முகையித்தீன் சதகம் – பேகம்பூர் அப்துல் காதிர், 26. கௌது சதகம் – வா.அ.. ஷெய்கு முஹம்மது பாவலர், 27. வைத்திய சதகம் – எச்.பி. முகம்மது அப்துல்லா, 28. நாகூர் வாழ் நாகூர்மீரான் சதகம் – புலவர் ஹாஜி.பி. ஷவ்கத் அலி, 29. நாகூரார் சதகம் – வரகவி நாச்சிகுளத்தார் முஹம்மது யூசுப், 30. நாகூர்ப் போற்றிச் சதகம் – கலைமாமணி கவி.கா.மு.ஷெரீப், 31. நாகூர் வாழ் தவ வேந்தே – பேராசிரியர் கா. முஹம்மது பாருக், 32. தரிசனமாலை சதகம் – மீரான் சாகிபு ஆகிய 33 சதகங்களைப் பட்டியல் இட்டுப் பெருமிதமும் கொள்ளலாம். அந்தப் பேறு பெற்றவர்கள் நாம்.
எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டவை எண்ணிக்கையில் அதிகம். அதற்கு அடுத்த நிலையில் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்கள் பற்றிப் பாடப்பட்ட சதகங்கள். அதனை அடுத்து மூன்றாம் நிலையில் நாகூர் நாயகம் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது மீரான் சாஹிப் அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட சதகங்களாகும். அவை முறையே (அ) மலேஷியாவின் பினாங்கு நகர்ப் புலவர் ஹாஜி .பி. ஷவ்கத் அலி எழுதிய ‘நாகூர்வாழ் நாகூர் மீரான் சதகம்’ (ஆ) அதே நகரில் வாணிபம் புரியும் நாச்சிகுளம் வரகவி முஹம்மது யூசுப் பாடிய ‘நாகூரார் சதகம்’, (இ) அண்மையில் கடந்த காலத்தில் நம்மிடையே வாழ்ந்து , நற்றமிழ் பணியாற்றிய கலைமாமணி கவி.மா.மு. ஷெரிப் வழங்கிய ‘நாகூர் போற்றிச் சதகம்’, (ஈ) கல்லூரிப் பேராசிரியர் கவிமணி . கா. முஹம்மது பாரூக் இயற்றிய ‘நாகூர் வாழ் தவ வேந்தே’ ஆகியவனவாகும்.
இவை நான்கும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சில் வந்தவை. ‘நாகூர் வாழ் நாகூர் மீரான் சதகம்’ மலேஷியாவின் பினாங்கில் 1981ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. ‘நாகூரார் சதகம்’ சென்னை திரியெம் பிரிண்டர்ஸில் 1993ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு நாச்சிகுளம் உதயமார்தாண்டபுரத்தில் வெளியிடப்பட்டது. ‘நாகூர்ப் போற்றிச் சதகம் ‘ நாகூர் ஹலரத் ஹாஜி எஸ்.டி. செய்யது ஹஸன் குத்தூஸ் சாஹிபு காதிரி அவர்கள் வெளியீடாக 1993இல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் கவிமணி கா. முஹம்மது பாருக் யாத்த ‘ நாகூர் வாழ் தவவேந்தே சதகம்’ விரைவில் அச்சில் வரவிருக்கிறது. ன்றாலும் அதன் பெரும்பகுதிப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர் சாஹிபு அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மதிநா’ இலக்கிய இதழிலும் , சொல்லரசு மு.ஜாபர் முஹ்யித்தீன் பதிப்பித்த நாகூர் இஸ்லாமியக் கலாச்சாரக் கழகத்தின் வெளியீடான ‘கடல் நாகூர் கருணை வள்ளல்’ சிறப்பு மலரிலும் திருநெல்வேலி பேட்டை முஸ்லிம் மாணவர் கல்வி நிறுவன வெளியீடான மஹான் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவுச்சுடர் இதழிலும் இடம் பெற்றவை. பரவலாகப் படிக்கப் பெற்று புகழ் ஈட்டிய சதகம் அது எனலாம்.
பினாங்குப் புலவர் ஹாஜி. பி. ஷவ்கத் அலி பாடிய ‘நாகூர் வாழ் நாகூர் மீரான் சதகம்’ நூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும் தனியே துணைத்தலைப்புகள் கொடுத்துள்ளார். அவரது எண்ணம், விருப்பம், வேண்டுகோள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ள பாடல்களை ‘அணைப்பீரே இது சமயம்’ ‘அணைத்திடுவீர் இது சமயம்’. ‘காப்பீரே இது சமயம்’ ‘காட்டுவீர் இது சமயம்’ ‘நயம் தருவீர் இது சமயம்’ ‘துணை புரிவீர் இது சமயம்’ என்பன போன்ற ஈற்றடி கொண்டு முடிக்கின்றார். அவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப இறைநேசச் செல்வர் அருளாசி புரிவார்கள். அல்லாஹ்வின் அருள் துணை நிற்கும் என்பது ஆன்றோர் வாய்மொழி. அதனை மெய்ப்பித்த நிகழ்வுகள் புலவரின் வாழ்வில் கண்டிருப்பார் என்கிற நம்பிக்கை மேலோங்கப் பாடல் வரிகள் பளிச்சிடுகின்றன. பாகாய் இனிக்கின்றன.
எம்பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அன்னை பாதிமா நாயகி, ஹலறத் அலி (றலி), ஹலறத் அலி (றலி) ஹலறத் ஹுஸைன்( றலி) ஆகியோரையும் முன்னிலைப்படுத்தி அவரது வேணவாவை வெளியிடுவது நமது முன்னோர்கள் காட்டிய வழிமுறை. அனுமதிக்கப்பட்ட அழகிய செயல்பாடு. அதில் அவர் கொண்டுள்ள பிடிப்பு அழுத்தமான பின்பற்றுதல் ஆங்காங்கே மின்னுகின்றன.
காயினுள் புழுவாழும்
விதம்பார்த்து மலைக்கின்றேன்
வாய்மைள்ள கல்லினுள்ளே
தேரைவாழப் பார்க்கின்றேன்.
தேயமதுள் புகுந்த உயிர்
வாழும்வகை தந்துமெனை
ஆயநபி அன்புப்பேரா
அணைத்திடுவீர் இதுசமயம்.
எளிய எல்லாருக்கும் புரியக்கூடிய வார்த்தைகளால் எழிலார்ந்து கவிதைகள் வழங்கும் ஆற்றல் பெற்றவராக நம்முன் நிற்கும் புலவரின் மற்றொரு பாடல் இப்படி :
கொய்தபூக் கொண்டு வந்து
குவிப்பார் உமதிடத்தில்
நெய்தபட்டும் ஏந்திவந்து
நின்றிடுவார் நின்னடியில்
எய்தநின்று இறைகண்ட
ஏந்தலெங்கள் நாயகரே
செய்தபிழை சார்ந்திடாமல்
அணைத்திடுவீர் இதுசமயம்.
நாகூர் நாயகம் காதிர்வலியின் தர்காவில் கூடிநிற்கும் பெருமக்கள் நாடிவந்த காரியங்கள் நிறைவேறி, நெஞ்சம் நிறைவுபெறுவதைப் பாடிக் காட்டுகிறார். இங்கே கருணைப் பார்வைக்காக ஏங்கி நிற்பவர், காலங்கடந்துவிடுமோ என்று அஞ்சி, பாடும் நேரத்திலே பயண்காணத் துடிக்கின்றார். தேவை ஒவ்வொன்றும் வேண்டும்., ‘இது சமயம்’ என்கிற வார்த்தைகள் உளவேட்கையை உணர்த்துகின்றன..
‘நாகூர் சதகம்’ பாடிய நாச்சிகுளத்தார் முஹம்மது யூசுப் நாடறிந்த பாவலர். எண்ணிக்கையில் ஏராளமான பாடல்களைப் பாடி, எண்ணற்ற நூல்களை அச்சில் கொணர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கவிஞராக வலம் வருகின்றார். நாகூரார் சதகம் என்ற பெயரிலான அவரது நூலில் சதகத்துடன் நாகூரார் வெண்பா, ஆதியும் அந்தமும் ஆகிய தலைப்பிலான கனிச்சுவைக் கவிதைகளும் இடம்பெற்று நூலுக்கு கனம் சேர்ந்துள்ளன. ஆக இந்நூல் இனிய நன்னூல் – ஒன்றில் மூன்று உவக்கும் உயர்நிலைக்குச் சான்று.
நாச்சிகுளத்தார் போற்றும் நாகூர் நாயகம் அவர்கள் பற்றிய பாடல்கள் அனைத்தும் பலாப்பழத்தின் சுளைகளாச் சுவை தருகின்றன. பாடப்பாடச் சுகம் தருகின்றன. இதோ ஒரு பாடல் :
கூடுவீர் நல்லவழி தேடுவீர் இன்பமதைக்
கூட்டாகப் பெற்றுவருவீர்
குணமா யிருந்துபல தர்மங்கள் செய்துமே
குறையாத புகழடைவீர்
பாடுவீர் மங்களம் பண்ணுவீர் தொழுகைபல
பரகதிக் காகுமலவோ
பாவத்தை விட்டுமே பணிவோடு பேசுவீர்
பண்டிதரை யண்டிவருவீர்
நாடுவீர் நல்லகதி நண்ணுவீர் சொர்க்கபதி
நாணாளும் இன்பமலவோ
நாயக வாக்கினை நயமா யறிந்துபிற
நாடெல்லாம் ஓதிவருவீர்
சாடுவீர் புலைநெறியை நம்புவீர்
மறைநெறியைச்
சற்குருவைச் சார்ந்து வருவீர்
தவராஜ சிங்கமே பவம்போக்குந் தங்கமே
சாகுல் ஹமீதரசரே
பாடல் ஒவ்வொன்றும் தவராஜ சிங்கமே பவம் போக்குந் தங்கமே சாகுல் ஹமீதரசரே என்ற ஈற்றில் முடிகிறது. வரகவி நாச்சிகுளத்தார் நாகூர் நாயகம் அவர்கள் மீது கொண்டுள்ள பற்றையும் பாசத்தையும் கூடவே பக்தி உணர்வையும் எடுத்துரைக்கும் ஏற்புடைய வரிவடிவங்களாக் காண்கிறோம்.
நாம் வாழும் காலத்தில் நம்மிடையே நமக்கு முன்னோடியாக நம்மின் முதியவராக நல்லறிவில் முதிர்ந்தவராக வாழ்ந்த கலைமாமணி கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் தம் புலமையின் காரணத்தால் தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கினார்கள். வீறுகொண்ட கவிஞராக விளங்கினார்கள். கலைமாமணி கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் தேடிய நன்மைகள் கூடி வந்ததைக் கண்டவர். களி கூர்ந்து நின்றவர். பாடிய பாடல்கள் நெடிகிலும் புகழ்விரிக்கின்றார். பூரித்து நிற்கின்றார். வல்ல இறைவனின் நல்லருளை முன்வைத்து வள்ளல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பொருத்தத்தை நெஞ்சத்தின் அடித்தளத்தில் நிறுத்திப்பாடும் பாங்கு பக்தி உணர்வை மட்டுமா உணர்த்துகின்றது? இல்லை! பண்பையும் பணிவையும் அல்லவா படம்பிடித்துக் காட்டுகின்றது. இதோ ஓர் இனிக்கும் பாடல்;இதயம் பிணைக்கும் பாடல் :
அழிவிலாஇறைவன் தனிப்பெருந் தூதர்
அஹ்மது நபிதிருப் பேரர்
இழிந்தவர் தாமும் உயர்ந்தவர் ஆக
இடர்பல ஏற்றுமே உழைத்தோர்
பழிபட வாழும் பவவினை யாளர்
பதம் பெற நேர்வழி காட்டும்
பொழில்நிறை நாகூர்ப் பதியுறரை மேலாம்
புனிதரை வாழ்த்துவோம் போற்றி.
நாகூர் நாயகம் அவர்கள் வாழ்ந்து வல்ல இறைவன் நாட்டம்போல் மறைந்த இடம் புனித இடமாகக் கருதப்படுகிறது. அது பொருளுடைய பொருத்தமான மதிப்பீடு என்று உணர்பவர்கள் – ஒப்புக்கொள்பவர்கள் உண்மை தெரிந்தவர்கள், உள்ளம் தெளிந்தவர்கள் என்போம். அந்த நல்லார்களிடையே தன்னை ஒருவராக அடையாளம் காட்டும் கலைமாமணி கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் பாடிய பாடல்களில் மற்றொன்று இங்கே இடம் பெறுகிறது. படித்துப் பாருங்கள். பிடித்து ஈர்க்கும். பெரும் பயன் தரும்.
எண்ணத்தினாலும் செயல்களி னாலும்
எவரையும் நேசித்த லாலும்
உன்னதப் பண்பாடு டையவர் வாழும்
ஊரதாம் புகழ்மலி நாகூர்
அன்னநல் லூரின் சிறப்புகட் கெல்லாம்
அடிப்படை காதர் மீரா
என்னுமா ஒலிகள் ஆவராம் அந்த
ஏந்தலை வாழ்த்துவோம் போற்றி!
பேராசிரியராக அடையாளம் காட்டப் பெற்று, புலமைமிக்க பாவலராக அங்கீகாரம் பெற்றவர் கவிமணி. கா. முஹம்மது பாரூக். நாகூர் நாயகம் அவர்களின் வழிமுறையையும் வாழ்வியலையும் விவரித்து, அவர்களின் அறப்பணியை அழகிய திருப்பணியை வைரவரிகளில் துளிரச் செய்துள்ளார். பேராசிரியர் முஹம்மது பாரூக் பாடுகின்றார் இப்படி.
கற்பனையைக் காலத்தைக் கடந்துறையும்
இறையருளால்
நற்கலைகள் நிறைந்திலங்கும் நன்னாடாம்
பாரதத்தின்
பொற்பதியாம் மாணிக்கப் பூர்தன்னில்
வந்துதித்த
நற்குணத்தின் நாயகரே! நாகூர்வாழ்
தவவேந்தே!
கரைகண்டு
பெற்றவரின் ஆசியுடன் பேரூராம்
குவாலியரை
உற்றங்கே ஞானமென்னும் உயர்கல்வித்
துறைதேர்ந்த
நற்றவத்து நாயகரே! நாகூர்வாழ்
தவவேந்தே!
பேரொளியே! வையத்தைப் பேணவரும்
பேரொலியே
சீரொளியே! சிந்தைகவர் ஷாஹுல்ஹ
மீதொலியே!
ஆரொளியே! அழகொளியே! அப்துல்கா
தீரொலியே!
பாரொளியே! நாயகரே! பதிநாகூர்
தவவேந்தே!
பாரூக்கின் பாடல்கள் என்றால் அவை யாருக்கும் இளைத்ததல்ல. வேருக்கு நீர்பாய்ச்சி விளைச்சலை எதிர்பார்ப்பவர் அவர். மாணிக்கமான கருத்துக்களைக் கடல் நாகூர் கருணை வள்ளல் அவர்களுக்கு காணிக்கையாக்கிக் கசிந்துருகியுள்ளார். கற்கண்டாக, கன்னல் சாறாகக் கவிதைகள் இனிக்கின்றன.
இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள நாகூரார் சதகம் நான்கு. இவற்றுள் கலைமாமணி கவி கா.மு.ஷெரீப் அவர்களின் நாகூர்ப் போற்றிச் சதகப் பாடல்களில் அரபிமொழிச் சொற்கள் விரவிக் காணப்படுகின்றன. அவை தமிழக முஸ்லீம்களின் அன்றாட வாழ்க்கையில் வழங்கப்படுபவை. ஆனால் முஸ்லிம் அல்லாத .தமிழர்கள் பொருள் புரியாமல் தவிப்பர் என்கிற உண்மை, கவிஞர் அவர்கட்கு நன்றாகத் தெரியும். என்றாலும் அவற்றைத் தவிர்க்காமல் பயன்படுத்தியிருக்கின்றார் எனில் இடம் பெற்றுள்ள திசைச் சொற்களுக்கு நேரடியான வார்த்தைகளாக நாம் நினைப்பவை முழுமையான பொருள் தரக்கூடியவையாக அமையாது போகலாம் என்ற அச்சம் காரணம் ஆகலாம். முந்திய இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் பாடி வைத்துள்ள இலக்கியங்களிலும் இப்படி அரபி பார்ஸி மொழிச் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. நமது முன்னோர் மரபு நடைமுறையில் ஆக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு பாடியிருப்பார் என்று நம்பலாம்.
கலைமாமணி அவர்கள் பாடி நமக்கு அளித்த சதகத்தில் அவரது பன்முகத்திறன், புலமை, மார்க்கப் பற்று அனைத்தும் ஒருசேரக் காணமுடிகிறது. என்ற உண்மை மறுக்கவொண்ணாதது. அதில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய தனிச்சிறப்பு, வழிகாட்டும் வான்மறை, குர்ஆனின் வாழ்வு, அளிக்கும் வளமார் அல்ஃபாத்திஹா, சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் பலக், சூரத்து நாஸ் ஆகிய சூறாக்களுக்கு தமிழ்க் கவிதை உருக்கொடுத்து அவற்றின் நூலின் ஆரம்பப் பக்கங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அருள் பொழிவுக்கு அடித்தளம் இட்டுள்ளார்.
சதகங்கள் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் – நெஞ்சில் உறைந்தவற்றை நாவு உரைக்க முற்படும்போதெல்லாம் – அண்மைக் காலத்தில் அச்சுருப்பெற்ற ஹாஜி மீராஹூஸைன் ஆலிம் சாஹிபு (ஓதுகிற அப்பா) அவர்கள் பாடி, புகழ் குவித்த மஹ்மூதர் சதகம் நிழலாடுகிறது. 1901ஆம் ஆண்டில் பாடப்பெற்ற அந்தச் சதகம் முதன்முதலாக 1927இல் அச்சிடப்பட்டது. அதன் புதிய பதிப்பு அச்சிலும் அமைப்பிலும் அழகொளிர, பாடல் ஒவ்வொன்றுக்கும் குறிப்பு, பொருள் ஆகியவற்றை உடையதாக, கூடவே உரைவிளக்க அகராதி (பாடல்களின் எண்களை)யும் இணைப்பாகக் கொண்டு கடந்த 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கென கட்டிமேட்டில் வெளியிட்டு விழாவும் எடுத்தார்கள். அந்தச் சாதனையை நிகழ்த்தி, வெளிவரவிருக்கும் நூல்களுக்கு முன்மாதிரியைத் தந்தார் பேராசிரியர் முனைவர் சௌ. மதார் மைதீன் ஆவார். அவர் பணி பாராட்டத்தக்கது.
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் பாடி வைத்துள்ள சதகங்கள் சாகாவரம் பெற்றவை. முத்திக்கு வித்தாகும் சத்தனைத்தும் கொண்டவை. பாடுபொருளாகக் கொண்ட அவை பேரருள் பொழிவுக்கு உரியவையாக, பாடியோர்க்கும், படிப்போர்க்கும் பொலிவைத் தருபவையாக மிளிர்கின்றன.

– சொல்லரசு மு. ஜாபர் முஹ்யித்தீன் –
*
நன்றி : இஸ்லாமிய இலக்கியக் கழகம்