கவிஞர் காதர் ஒலி

தனது எட்டாம் வயதிலேயே எழுதத் துவங்கி நாகூரின் குறிப்பிடத் தகுந்த கவிஞர்கள் ஒருவராக இன்றும் விளங்கும் காதர் ஒலி பற்றி அவருடைய நண்பர்கள் சொன்னது :

பெயர் :மு.காதர் ஒலி. பெற்றோர் : முஹம்மது தம்பி மரைக்காயர் (குரு முஹம்மது) / ராவியா கனி. பிறப்பு : 1955. முகவரி : 54 சாமுதம்பி மரைக்காயர் தெரு, நாகூர். புனைபெயர்கள் : கவிஞர் கதிர்தாசன், கலைநிலா, கதிரவன். தொழில் : விவசாயம், வியாபாரம். பொழுதுபோக்கு: எழுதுதல்.

இதுவரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பாதி பரிகாசப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள் அடங்கும். இவரது காலம் வாழ்த்துப் பாடல்களின் பொற்காலம் எனலாம். பல்சுவைகளில் பாடல் எழுதி புரட்சியை ஏற்படுத்தியவர். இஸ்லாமிய பாடல்களில் தனக்கென்று தனிபாணியை அமைத்துக்கொண்டு எளியநடையில் புதிய வரிகளைப் போட்டு கருத்தாழமிக்க பாடல்களை இயற்றியவர். தமிழ்நாட்டில் அனேகமாக எல்லா பாடகர்களும் வெளிநாட்டில் வாழும் ஏனைய பாடகர்களும் இவரது பாடலைப் பாடி வருகிறார்கள். இளம் புதிய பாடகர்களை உருவாக்கி அரங்கேற்றம் செய்து வைத்தவர்.

மலேசிய வானொலியில் இவர் எழுதிய 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடகங்கள் இன்றும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அனைத்து தமிழ் பத்திரிக்கைகளிலும் வார இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளது. நாகூர் கௌதியா ஸ்கூல் அண்டு விழாவில் தனது 13ஆம் வயதில் தானே எழுதி, இயக்கிய ‘ஓசி சட்டை’ என்ற நாடகத்தில் இவரது ஆசிரியர்கள் நடித்து அரங்கேற்றம் செய்து அறிமுகப்படுத்தி வைத்தது வாழ்வில் மறக்க முடியாது சம்பவமாகும். அதே சமயம் ‘மனவழி’ என்ற இவரது நாடகமும் அரங்கேறியது.

இவரது பாடல்கள் 25 கேசட்டுகளாகவும், 10 சிடிக்களாகவும் வெளிவந்துள்ளன. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் எல்லா ஆற்றல்களையும் பெற்ற இவர் பல வாய்ப்புகள் தேடிவந்தும் அதில் ஆர்வம் காட்டவில்லை. உடனுக்குடன் கவிதை, பாடல் எழுதும் தனித்திறமை வாய்ந்தவர். மெட்டுக்கு பாட்டு எழுதுவதில் வல்லவர். சுயவிளம்பரத்தை விரும்பாதவர். நற்றமிழ்ப் பேச்சாளராக கவியரங்கம், பாட்டு அரங்கம், பட்டி மன்றங்களில் தற்போது கலந்து சிறப்பித்து வருபவர். தமிழகத்தில் உள்ள பல பைத்து சபாக்களுக்கு பாடல்கள் எழுதி கொடுத்துக் கொண்டிருப்பவர். பஞ்ச் டயலாக், இரட்டை அர்த்தத்தில் நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது இவரது சிறப்பு அம்சம். எழுதுவதை தொழிலாக்கிக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவே எழுதி புகழ் படைத்துக் கொண்டிருப்பவர். இவருடைய கவிதைகள் பாடல்களை தொகுத்து பத்து புத்தகங்களாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

***

‘இரும்பு இதயங்களை
உருக்கி யெடுத்து
இன்மலர் சோலையாக்கிய
பொன்மொழிக் காற்று’ என்று தொடங்கும் ‘அற்புத அண்ணலார்’ என்ற புதுக்கவிதை (280 பக்கம்!),

மற்றும்

‘விண்ணளவில் பொன் பொருளை கண்ணெதிரே குவித்தாலும்
வெண்ணிலவை செங்கதிரை கைகளிலே கொடுத்தாலும்
என் மனது என்றென்றும் இறைவனையே நாடும் -என்
இறுதிமூச்சு உள்ளவரை திரு கலிமா ஓதும்’ என்று ஷைத்தானை எச்சரிக்கை செய்யும் பாடல் உட்பட இவரது அனைத்து ஆக்கங்களும் இங்கே விரைவில், இன்ஷா அல்லாஹ் !