ஒன்றிவிடு! – நீதிபதி மு.மு. இஸ்மாயில்

நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் பற்றி ’நாயகன் குரல்’ என்ற தலைப்பில் , விகடன் தீபாவளி மலரில் (1970) வெளியான பகுதி இது. மீள்பிரசுரமாக (பொக்கிஷம் பகுதியில்?) 22/10/2008 விகடனில் இதழில் வெளீயானது. ’அனுஷ்டானம்’, ‘நியம நிஷ்டை’ என்றெல்லாம் ஜஸ்டிஸ்மாமா சொல்வதால் இஸ்லாமியர்கள் பயப்படவேண்டாம். பிராமண நண்பர்களுடன் அவ்வளவு நெருக்கம் அவர்கள்; அவ்வளவுதான். நண்பர் பி.கே. சிவகுமார் கேட்டதற்காக எழுதிய ‘கிணறு’ சிறுகதையில் (அதே 70 பக்கம்! ) கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ‘ஏன் கதையே எழுதலே?’ என்று என்னைக் கேட்பவர்கள் முதலில் எழுதியதை வாசித்தார்களா என்று தெரியவில்லை. போகட்டும், ’எம்.எஸ்.ஸின் தகப்பனார் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் படத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பரிசளித்தவர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். 1990-ல் கம்பராமாயணப் பாடல்களைப் பதிவு செய்தார் நீதிபதி இஸ்மாயில். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய பிறகு அவரின் பெரிய புகைப்படத்தை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.எஸ்ஸுக்குக் கொடுத்தாராம். வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதை எம்.எஸ்.மாட்டி வைத்தாராம்!’ ( நூல் : ’எம்.எஸ். அன்ட் ராதா’; செய்தி : தினமணி).

அதெல்லாம் இருக்கட்டும், தம்பி இஸ்மாயில்  ‘ஜட்ஜப்பா’ என்ற தலைப்பில்  மு.மு. இஸ்மாயில் பற்றி எழுதும் பதிவுகளைப் படிக்கிறீர்களா? இதுவரை 8 பகுதிகள் வலையேற்றியிருக்கிறார். அபூர்வமான செய்திகளும் புகைப்படங்களும் அதில் உள்ளன. மறைந்த என் சீதேவி மாமனார் – பாங்காக்-ல் இருந்த  ‘நாகூர் ஸ்டோர்’  கடை வாசலில் – நிற்கும்  புகைப்படத்தை (வலது ஓரத்தில், தொப்பியோடு நிற்பவர்தான் என் மாமனார்) அங்கேதான் பார்த்து கண் கலங்கினேன். சரி, ஒன்றுங்கள்… – ஆபிதீன்

***

‘யார் வெளிப்படையான அனுஷ்டானங்களையும் நியம நிஷ்டைகளையும் தவறவிடுவது இல்லையோ, அவர்களைச் சமயப்பற்று மிக்கவர்கள் என்றும் தெய்வ பக்தி மிக்கவர்கள் என்றும் பொதுவாக நாம் சொல்கின்றோம். ஆனால் எந்த அனுஷ்டானமும் நியம நிஷ்டையும் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்குமேயன்றி அதுவே ஓர் இலட்சியமாக அமைந்துவிட முடியாது. ஓர் இலட்சியம் அல்லது குறிக்கோளை அடைவதற்குச் செய்கின்ற முயற்சிக்கு அவை பயிற்சிகளாகத்தான்  இயங்க முடியும். இந்தப் பயிற்சிகளுக்கு அப்பால், முயற்சியின் முடிவாக அந்தப் பரம்பொருளை அடைந்து , அவனோடு ஒன்றிவிடுவது  என்பதுதான் இலட்சியமாகும்.

உலகிலுள்ள பல்வேறு சமயங்களின் அனுஷ்டானங்களும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன. இப்படி அனுஷ்டானங்கள் வெவ்வேறாக இருப்பதன் காரணமாக இறைவனுடைய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதில்  மயக்கமும் குழப்பமும் உண்டாகத்தான் செய்யும். ஆனால், எப்பொழுது ஒருவன் இந்த அனுஷ்டானங்களை எல்லாம் கடந்து உணர்வுபூர்வமாக தன்னுடைய இறைவனோடு ஒன்றிவிடுகிறானோ, அப்பொழுது இந்த மயக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடமில்லாமல் போய்விடும்’ – நீதிபதி மு.மு. இஸ்மாயில்

***

நன்றி : ஆனந்த விகடன்

***

சுட்டிகள் :

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்! – தினமணி ( மீள்பதிவு : ANUSHAM)

 நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் – நாகூரி

நாவல் எழுதுகிறார் இஸ்மாயில்

ismail2”இஸ்மாயில்லாம் நாவல் எழுதுறார்’ண்டு போடுங்க நானா’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் தம்பி இஸ்மாயில் நாகூர் நகைச்சுவைக்காகவே ஒரு ஒரு தளம்  இப்போது தொடங்கியிருக்கிறார். அதிலுள்ள சேத்தநானாவின் ‘வெடை’ பிரமாதம். சேத்தநானா நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் ‘சோடா கலர், சோடா கலர்..” என்று திரும்ப திரும்பக் கூறி விற்றுக் கொண்டு வந்தாராம். சேத்தநானா அவரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் : “சோடா கலர் இல்லை தம்பி ; அது வெள்ளை!”

‘தொடரும் முடிவுகள்’ என்ற இஸ்மாயிலின் முதல் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பதிகிறேன். ‘சுட்டுவிட’ மாட்டேன் என்ற தைரியத்துடன் அனுப்பிய அவர் அன்புக்கு நன்றி.

– ஆபிதீன் –

***

தொடரும் முடிவுகள்

1

சென்னை வரை காரில் சவாரிக்கு போய் விட்டு ராத்திரி 11 30 மணிக்கு வந்து அப்படியே துணி கூட மாத்தாமல் அசந்து தூங்கிய அஸ்லத்தை அவனுடைய ம்மா அவசரமா எழுப்பிய போது 1 30 மணி இருக்கும்

‘என்ன்னம்ம்மாமா..” அசதியில் கண்களை கூட திறக்காமல் வாய்க்குள்ளேயே முனங்கினான்

‘செத்த (சற்று) எந்திரிம்மா புள்ளக்கி வலி வந்துடுச்சு.. ஒடனே ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போவணும்’ என்று சொன்ன ஐசாம்மாக்கு பதட்டம் முகத்துல அந்த மை இருட்டுலேயும் அப்பட்டமாய் தெரிந்தது.

அஸ்லம் ஒடனே எழுந்து விட்டான். ‘டாக்டர்ட்ட் டெலிபோன் போட்டு சொல்லிடுங்கம்மா நான் போய் கார எடுத்துட்டு வந்துடறேன்..”  – கால் வாசல் பக்கம் ஓடியது – அசதி உடம்பை விட்டு ஓடியது

“நான் சொல்லிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி இருந்த கூடத்தறைக்குள் மறைந்தார் ஐசாம்மா, பக்கத்து அறையில் ஜமீலா வலி பாதி பயம் பாதியில் “ம்மா.. ” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

“இந்தோ இங்க தாம்மா இருக்கேன்.. டாக்டர்ட்ட போன்ல சொல்லிட்டு .. ஹலோ மேரியாம்மா.. நான் தான்ம்மா ஐசா பேசுறேன்..” – ஐசாம்மாவின் குரல் ஜமிலாவுக்கு கேட்டுக் கொண்டிருந்தது.

ஐசாம்மா எப்படி இருப்பார் என்று எழுதி விட்டால் ஜமிலாவை பற்றி தனியாக ஒரு வரி கூட எழுத வேண்டிய தேவை இருக்காது. ரெண்டு பேரும் ஒண்ண பாத்த மாதிரி தான் இருப்பார்கள். குரல் கூட கிட்டதட்ட கிணத்துலேந்து பேசுற மாதிரி ஒரே மாதிரியா தான் இருக்கும்.

அஸ்லம் காரை ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் ஐசாம்மா ஜமிலாவை அழைத்து கொண்டு வாசலுக்கே வந்து கொண்டிருந்தார். ‘போற வெட்டியில முத்துகனியை கூப்டுக்கலாம்” என்று சொல்லி மெதுவாக காரில் ஏறி “அல்லா தவக்கல்..” என்றதும் கார் புறப்பட்டது.

தெருமுனையில் முத்துகனி வீட்டில் காரை நிறுத்தி அஸ்லம் மட்டும் இறங்கி ஓடி போய் வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்தான். முத்துகனி துப்பட்டியை கையில் எடுத்துக் கொண்டே “புள்ளக்கி நோக்காடு வந்துடுச்சா..” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

அஸ்லத்தின் ஆச்சர்யத்தை பொருட்படுத்தாது, “எங்க (எங்கே?) புள்ள..” என்று தான் தூக்கி வளர்த்த ஜமிலா எனும் புள்ளையை நோக்கி ஓடி போய் காரில் ஏறிக் கொண்டார். அந்த ஜமிலா எனும் பிள்ளையின் வயிற்றில் இன்னொரு பிள்ளை பிறப்பதற்கு தயாராக இருந்தது.

“அஞ்சாமை முத்துகனியின் உடைமையடா..” என்று பாட்டு கூட படிக்கலாம், அந்த அளவுக்கு தைரியம், எதற்கும் பயப்பட மாட்டார், வீட்டிற்கு வந்த ஒரு மகா திருடனை வெறவு (விறகு) கட்டையால அடிச்சு புத்தூருக்கு கட்டு போட குத்துயிரும் குலையிருமா அனுப்பி வச்ச வீராங்கனை தான் அவர். இதனால் இவருக்கு ஊர்ல “வெறவு கட்டை அவுலியா (இறை நண்பர்)” என்று கூட ஒரு பெயர் உண்டு.

நாகப்பட்டினம் சுகம் மருத்துவமனையில் ஜமிலாவை கொண்டு வந்து சேர்த்த போது 2 20 மணி இருக்கும். குறிப்பிட்ட நாளைக்கு முன்னதாகவே நோக்காடு வந்து விட்டதால் அப்படியே துப்படியோடு வந்தது தான், அவசரத்தில் தேவையான எந்த ஒரு பொருளும் எடுத்து வரவில்லை.

இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு எதிரே உள்ள அறையில் விளக்கு போடப்பட்டு கதவு திறக்கப்பட்டது.

வெளியே எட்டிபார்த்த சபுரா என்பவர், “என்னம்மா, புள்ள பேறா..?” என்றார்

முத்துகனி “ஆமாம்மா” என்றார்

“அவசரத்துல சாமான்லாம் சரியா எடுத்துட்டு வந்திருக்க மாட்டீங்க” என்று கூறியதுடன் நில்லாமல் உள்ளே சென்று “பாய், தலையணையிலிருந்து பாத்திரங்கள் முதலான பொருளையும் எடுத்து வந்து கொடுத்தார்.

கொண்டு வந்து கொடுத்த பொருள்களிலிருந்தும் அவர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களிலிருந்தும் அவர் பெரிய பணக்காரர் என்று விளங்கியது

ஐசாம்மா “ஏன்ம்மா இருக்கட்டுமே.. தம்பி (அஸ்லம்) போய் இப்ப எடுத்துட்டு வந்துடுவாரு..” என்று இழுக்க

“நல்லதும்மா.. இப்ப தானே போ முடியும்.. சும்மா இருக்கட்டும்..”

முத்துகனி கேட்டார், “யாருக்கு.. என்னா செய்தும்மா..?”

“எங்க ம்மாக்கு தான்ம்மா ரொம்ப நாளா உடம்பு சரியில்ல.. ஹார்ட்ல பிராபளம்.. நெஞ்சுல அடிக்கடி வலி வந்துடுது.. அதான்..”
 
ஐசாம்மா, “டாக்டர் என்னா சொல்றாங்க..” என்று அவர் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டார்.

சபுரா அலுத்து கொண்டார், “என்னா சொல்றாரு.. அல்லா தான்..” என்று முடிக்காமல் முடித்தார்

முத்துகனி, “உங்க பேருமா..?” என்று பேச்சை மாற்றினார்

பேச்சு குடும்ப உறுப்பினர்கள் பக்கம் தாவியது. அவர் பேர் சபுரா என்றும் கணவர் சவுதியில் தொழில் சொந்தமாக வைத்து நடத்தி வருவதும் நிஷா என்று ஒரு பெண் பிள்ளை இருப்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்

இப்பொழுது சபுராவின் டர்ன், “உங்க மாப்ள எங்க பயணத்துலயாம்மா..?” என்றார்

எங்க ஊரை பொறுத்த வரை வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்க வில்லை என்றால் அவன் மனுசனே கிடையாது.

சில சாதாரண கேள்விகளும் பதில்களுக்கு பதிலாக ரணங்களை வரவழைக்கும். நாம் தெரிந்தோ தெரியாமலோ அப்படியாபட்ட சில கேள்விகளை சில சம்யங்களில் கேட்டு தொலைத்து கேட்கப்பட்டவரை காயப்படுத்தி விடுவோம்.

அப்படி தான் ஐசாம்மாக்கு சபுராவின் அந்த கேள்வி மிகுந்த சங்கடமாக இருந்தது ஐசாம்மாவுக்கு, அந்த ஒரு கேள்வியில் மனதில் உறைந்து போன பழைய நினைவுகள் சட்டென்று வந்து விட்டு மறைந்து போனது.

“இல்லம்மா எஹ மௌத்தா போயிட்டாஹா..” என்று அவர் சொல்லி விடுவதற்குள் முத்துகனி மட்டும் அறிந்திருந்த அவரின் மனதில் தோன்றி மறைந்த வேதனைகளை மனதில் உறைய வைக்க தொடர்ந்து வருகிறது அடுத்த ஒரு அத்தியாயம்

முடிவுகள் தொடரும்..

***

‘வாப்பாக்காக… ‘ – இஸ்மாயிலின் கதை

ismail2.jpg

நீதிபதி மு.மு. இஸ்மாயில் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அ.மு.இஸ்மாயில் , ஹஜ்ரத் வஹ்ஹாப் சாபுவின் சீடர்களுள் ஒருவர். சிங்கையில் வசித்து வருகிறார்.

இவருடைய வலைப்பக்கம் : அமைதி இல்லம்

திண்ணை’யில் அவர் எழுதிய ‘வாப்பாக்காக… ‘ என்ற கதை முக்கியமானது. அது பற்றி  நாகூர் ரூமி  ‘திண்ணை’யில் சொன்னது:

‘கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய ‘வாப்பாக்காக ‘ என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. நாகூர் பக்கம் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பிரதி நிதித்துவப்படுத்துவதாக இருந்தது. வாழ்த்துக்கள்’