மதிப்பிற்குரிய SLM ஹனீபா அவர்களைப் பற்றிய ‘மக்கத்துச்சால்வை மண்ணும் மணமும்’ சிறப்பு மலரில் நான் எழுதியது:
***
‘… அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா? உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன். இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது’ என்று இந்தப் பீத்த எழுத்தாளனுக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார் மரியாதைக்குரிய ஹனீபாக்கா – பத்து வருடங்களுக்கு முன்பு. நண்பர்கள் மூலம் முன்னரே அவரைப் பற்றி கேள்விப்பட்டு, ‘நூலகம்’ தளத்தில் ரசித்துப் படித்து, ’எத்தனை நாளைக்கு ‘மக்கத்து சால்வை’யையே போர்த்திக் கொண்டிருப்பது? அல்லது பக்கத்து ‘பஷீர்’-ன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பது?’ என்றொரு வரியை ’இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்!’ கதையில் குறிப்பிட்டிருந்தேன். என்றாலும், மெயில் அனுப்பியது அவராக இருக்காது என்ற சந்தேகத்தில் இருந்தேன். சந்திக்கிற நண்பர்களிடத்தில் எல்லாம் இவனுடைய வாழைப்பழத்தை பிடித்துப் பாருங்கள் என்றே கிண்டலாக சிபாரிசு செய்பவர் இவரேதான் என்று அப்புறம்தான் தெரிந்தது, நண்பர் உமா வரதராஜனும் ’அவர் வம்பளப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில் தன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயணைனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.’ என்று எழுதியிருந்தார். உண்மைதான்.
என்னுடைய ’ச்சோட்டா’ இணையதள வாசகர்களுக்காக இலங்கை எழுத்தாளர்கள் பலரை காக்கா அறிமுகப்படுத்தியிருக்கிறார். நானாக ‘உருவுஉருவுண்டு உருவி’ (சாதாரண அர்த்தம்தான்..) வாங்கிய கதைகளும் (உம்.: எஸ்.பொ அவர்களின் ’ஆண்மை’) உண்டு. காக்காவின் ’சிவப்புக்கல்லு மூக்குத்தி’ என்ற காதல் கதை வந்து தளத்தில் கண் சிமிட்டும். ’ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும்’ , ’புலவர் மாமா’ என்று தொடர்கள் எழுதுவார் – நளீமின் ஓவியத்தோடு. தான் ரசித்த கட்டுரைகளை அவ்வப்போது அனுப்பிவைப்பார். என் பக்கங்களை எந்த வகையிலும் மலினப்படுத்தி விடக் கூடாது என்பதில் என்னைவிட அவருக்கு அக்கறை அதிகம் இருந்தது. அனார், அறபாத் , ஸபீர் ஆகியோரின் அன்பும் அவர் மூலம்தான் கிடைத்தது,
எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னைப் புத்தக விழாவுக்குச் சென்றபோது புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரை சந்தித்துவிட்டு (அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை – ஜெயமோகன்) அப்படியே நாகூரும் சென்று என் மனைவி மக்களைப் பார்த்து வந்ததைக் குறிப்பிட வேண்டும். ’அரசரை (ஷாஹூல் ஹமீது பாதுஷா) காணாமல் அஸ்மாவை தரிசித்தேன்’ என்று என் ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் பின்னட்டையில் அவர் குறிப்பிட்டதற்கு நான் ஏழு ஜன்மம் தவம் செய்திருக்க வேண்டும்.
அஸ்மாவைக் கிண்டல் செய்து முகநூலில் பதிவு எழுதினால் மட்டும் இந்த மனுசனுக்குப் பிடிக்காது. ’ எண்ட தம்பிக்கு உங்கையாலேயே ஒரு சொட்டு பொலிடோல கொடுத்து இந்தக் கிழட கைகழுவி விடு.. கவனம் கை பத்திரம்’ என்று அவளுக்கு அறிவுரை போகும். வாட்ஸப்பில் எனக்கும் திட்டு வரும்! அவ்வளவு கரிசனம் என் உயிர் மேல்!
நாகூர் சென்றுவிட்டு அவர் அனுப்பிய மெயில் இது :
நாகூர் நகரத்தையும் அந்த வீடுகளின் அமைப்பையும் எந்நாள் மறக்க முடியவில்லை. அத்தனை வீடுகளிலும் நமது மூதாதையர்களின் இரத்தமும் வீரமும் பாரம்பரியமும் ஊடுருவியிருப்பது போல் உணர்கிறேன். ஐம்பதுகளின் இறுதியில் எனது வாப்பாவுக்கு நாகூரிலிருந்து கொடியேற்றத்திற்கான அழைப்பிதழ் தபாலில் வரும். வாப்பா, எங்களின் தலையைச் சுற்றி விட்டு, எப்பாடுபட்டாவது ஐந்து ரூபா பணத்தை காணிக்கையாக தபால் மூலம் நாகூருக்கு அனுப்பி வைப்பார். அப்படியானவொரு காலம் இருந்தது. வாழைச்சேனை ரயில்வே நிலையத்திலிருந்து நாகூருக்குச் செல்வதற்கான டிக்கட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் போர்ட் வீசா என்ற பிரச்சினையெல்லாம் மனிதன் மனிதனாக வாழ்ந்த போது இருக்கவில்லை. நான் நம்புகிறேன். இன்னும் 25 வருடங்களில் அந்தக் காலம் திரும்பி வரும். அந்த நாளில் நாங்கள் இருக்க மாட்டோம்.
இடையிடையே, ’உன்னைப் பயம் காட்ட விரும்பவில்லை; என் உடல்நலம் சரியில்லை’ என்று சமயத்தில் அவர் குண்டு போடும்போதுதான் பகீர் என்கிறது. அந்த நிலையிலும், ’உன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், நமது பிரார்த்தனைகள்தான் படச்ச ரெப்புவின் காதுக்கு எட்டுவதில்லையடா!’ என்றுதான் எழுதுவார்.
நிச்சயமாக எட்டும். காக்காவின் நலத்திற்கு – இந்த நினைவுக் கொறிப்புகளுடன் – துவா செய்கிறேன்.
அவருடைய ஆசிகளுக்கு ஏங்கும்,
ஆபிதீன் *. மலரின் பிரதிகளுக்கு: மக்கத்து சால்வை வாசகர் வட்டம்
No. 159, MPCS Front Road, Mavadichenai, Valaichenai – 30400, Sri lanka. arafathzua@gmail.com