என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்

‘பதிவுகள்’ ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரனின் முகநூலில் ஹனீபாக்காவின் இந்த வரிகளைக் கண்டேன். பகிர்கிறேன்.

நன்றி : எஸ்.எல்.எம்.ஹனீபா, வ.ந. கிரிதரன், தமயந்தி

கலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் (யாழ்ப்பாணம்)

‘ பெருநாள் கழித்து போட்டால் போதும். இதுவும் ஒரு வகை தியாகம்தான். நமது தியாகத் திருநாளில் ஒரு தமிழ் இளைஞனின் மனத்தின் தியாகம் கலைந்து போன கனவு ராஜ்யமாக ஆப்தீன் பக்க வாசகர்களை ஆட்கொள்ளட்டும். எல்லோர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்’  என்று சொல்லி சிவகுமாரின் சிறுகதையை அனுப்பிய நம் ஹனீபாக்கா அவர்களின் குறிப்பு முதலில்:

கணையாழி ஜனவரி 1992 இதழில் வெளியான இந்தக் கதை அன்றும் இன்று இருபது வருடங்களுக்குப் பிறகும் அதே சூட்டோடு திகழ்கிறது. சிவகுமார் இலங்கை அரச ஒளி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் ஆளுமை மிக்க கலைஞன். தான் சார்ந்த மக்களின் விடுதலைக்காக ஒரு தோளில் துப்பாக்கியும் மறு கையில் பேனாவும் ஏந்திய மனுஷ்யன். அவன் எழுதிய முதற்கதையே இலக்கியச் சிந்தனையின் பரிசை வென்றது. ஒரு கதை எழுதி தன்னை சிறுகதை ஆசிரியன் என நிறுவிக் கொண்டவன். இந்தக் கதையைப் பற்றி பொன் தனசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“இலக்கிய நூலொன்றில் அரசியல் கொள்கைகள் குறுக்கிடும் போது அது சங்கீதக் கச்சேரியின் நடுவில் துப்பாக்கி சுடப்பட்டது போல் ஒலிக்கிறது. இதிலும் அரசியல் அலசப்படுகிறது. ஆனால் கோஷமாகவோ கொச்சையாகவோ அல்ல. இதில் அடி நாதமாக வெளிப்படுவது பரஸ்பர மனித நேயமே” என்கிறார்.

***

கலைந்து போன கனவு ராஜ்யம்

சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் சொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது?

பெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்று அழகான முகங்களுக்குத் தாவியது மனம். ஆண் மக்கள் எல்லோரையும் ‘இளமையில் கொல்’ என்று சொல்லி யார் படைத்து விட்டது இவர்களை! இளமையின் அழகு பற்றி சற்று அதீதமான வியப்புணர்வுகள் என்னுள் உண்டாவதாய்த் தோன்றியது. ஒருவேளை இளமைப் பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும என் வயதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

இயல்புக்கு மாறானதாய் பல்லவன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆட்களை மட்டுமே சுமந்து ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஞாபகம் கொண்டாற் போல் நான் ஆண்கள் பக்கம்தான் அமர்ந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் என் அம்மா வயதுப் பெண்மணிக்குப் பக்கத்தில் ஸ்வாதீனமாய் போய் அமர்ந்து கொண்டதும், அந்தம்மா தன் கற்புக்காகப் போட்ட கூச்சலும்  நான் பட்ட அவமானமும், தமிழகம் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு. அப்புறம் ‘இன்னாபா ஆட்டோ வடபயனி வருமா… இந்தா லெப்டில ஒடிச்சி ஸ்ட்ரெயிட்டா போய்க்கிட்டே இரு… எவ்ளோபா மீட்டர்லே சூடு வெச்சிருக்கே… நம்மகிட்டயே பேஜார் பண்றியே நைனா…’ எங்கிற அளவுக்குத் தேறியிருக்கிறேன். சந்தேகமில்லை.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைக்காரி ஒருத்தி பின்னாலிருந்த தோழிகளுக்கு எதையோ கீச்சிட்ட குரலில் சொல்லிச் சிரித்தாள். என்னை மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கக்கூடிய இரண்டு சின்னச் சமுத்திரங்கள் அவள் முகத்திலிருந்தன. திரும்பும் போது எல்லாக் குறும்புக்காரிகளையும் போல் ஆயிரம் வோட் மின்சாரத்தை என் மீது பாய்ச்சி ஒரு கண நேர அதிர்ச்சியைத் தந்து விட்டே தோழிகளோடு சிரித்தாள். என்னைப் பற்றித்தான் ஏதேனும் சொல்லியிருப்பாளோ? இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது? இளம் பெண்கள் எல்லோரும் அடக்கிக் கொள்ள மாட்டாத ஆர்வத்தோடு அடிக்கடி என்னைக் கள்ளமாகவேனும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதில் எனக்கு போதை இருந்ததால், அலட்சியமாகத் தீவிரமாக சிந்தனையிலிருப்பது போன்ற பாவனையிலிருந்தேன். அவர்களைப் பார்க்க விரும்பி மனம் குறுகுறுத்தாலும் அப்படிப் பார்ப்பது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் வியப்பு நிறைந்த ஈடுபாட்டிற்கு பங்கம் நேர இடம் கொடுத்து விடும் என்று பட்டது. வெறுமனே அழகை ஆராதனை செய்கிற ரசிக உணர்ச்சிதான் என் பாரவையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். இன்னும் சற்றுப் பெரிய மனிதத் தோரணையோடு ‘எனக்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டில்லை’ என்ற பாவனையில் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

“ராஜன்!”

மிகச் சமீபமாய்க் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். திடுக்கிடக் காரணம், அது பெண் குரல்… மாலினி!

“மாலினி என்ன இது? surprise, எப்ப இங்க வந்தனீ?”

“அங்க பின்னுக்கிருந்து பாத்தே உங்களை நான் அடையாளம் கண்டிட்டன்… எங்க போறீங்கள்… அவசரம் ஒண்டுமில்லைதானே?”

“இல்லை நீ எப்படி இருக்கிறாய்?”

“அடுத்த ஸ்டொப்பில இறங்குவம். நிறையக் கதைக்க வேணும்”

***

“வாராய் என் தோழி வாராயோ உன் மாப்பிள்ளை காண வாராயோ…” என்று பாடி வரவேற்றான் லோகு.

வந்தவள் தயங்கி நின்றாள். மிரட்சியோடு நோக்கினாள்.

“வலது காலை எடுத்து உள்ள வாறதுக்கு முந்தி மேல நிமிர்ந்து போர்டைப் படிச்சுச் சொல்லம்மா. நாங்கள் வந்திருக்கும் இடத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே” என்று பணிவாக அபிநயித்துச் சொன்னான் ஜெயக்குமார்.

“வந்த இடம் நல்ல இடம், வர வேண்டும் தோழி வர வேண்டும்” என்று மதில் சுவரில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்த படி பாடுவதாகக் காட்டிக் கொண்டான் தயா.

“ஏய் வாசி” – உறுக்கினான் ரட்ணம்.

“ஜவ்னா யூனிவர்சிற்றி” நடுங்கிய குரலில் சொல்லித் தலை கவிழ்ந்து நின்றாள் அவள்.

“அடி சக்கை! இங்கிலீசில படிக்கிறாடா… தமிழ் தெரியாதாடி உனக்கு?”

“கொழும்பு ரமிலா? அப்ப நல்ல கொழுப்பாய்த்தான் இருக்கும்…”

“வாம்மா மோதகம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சொல்ல வாய் சுளுக்குதா?”

“டேய்! இங்க வாம்மா” – மிரட்சிப் பார்வையை எனக்குத் தந்தாள்.

“உன் பேர் என்ன?”

“மாலினி!”

“என்ன படிக்கப் போறாய்?”

“Medical Faculty” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, “மருத்துவ பீடம்” என்றாள்.

“கொப்பர் என்ன செய்யிறார்?”

தமிழ் அரசியல்வாதி ஒருத்தரின் பெயர் சொன்னாள்.

“அடடடே! தமிழ்க் கடலின் முத்து” என்றான் ரகு.

“முத்து எங்கள் சொத்து” என்றான் தயா.

“வீட்டில் எப்பிடிப் பொழுதைக் கழிக்கிறாய்?” என்றேன். முழித்தாள்.

“கோழி வளர்க்கிறியா?” என்றேன் நெஞ்சுக்கு நேரே பார்த்துக் கொண்டு.

தயங்கியவாறே ஆமென்பதாய் தலையாட்டினாள்.

கூட்டம் பேரொலியாகச் சிரித்தது.

“நான் தனியே வந்தா காட்டுவியா?”

குழப்பத்தோடு என் கண்களைப் பார்த்தவள், தலையைக் குனிந்து அழுவதற்கு ஆயத்தமானாள்.

கூட்டம் கெக்கட்டமிட்டுச் சிரித்தது.

***

நான் கென்டீனிலிருந்து வெளியே வந்த போது, மாலினி வந்து கொண்டிருந்தாள். தோழிகளைத் தவிர்த்து விட்டு தனியாக வரும் போதே, “என்ன இங்க நிக்கிறிங்கள், பந்தல் போடுமிடத்தில் உங்களைத் தேடுறாங்க” என்றபடியே மூச்சுவிட்டாள்.

“உண்ணாவிரதமிருக்கப் பேர் குடுத்திருக்கிறவர்கள் உங்களில் எத்தனை பேர்?”

“நாலு பேர், போய்ஸ்ல அஞ்சு பேர். மொத்தம் ஒன்பது பேர், லிஸ்ட் குடுத்தாச்சு”

“ஒரே முறையில் இவ்வளவு பேரும் இருக்க வேண்டாம் எண்டு படுது… தொடர்ச்சியா பிறகும் ஆட்கள் இருக்கலாமெல்லே… அதுதான் யோசிக்கிறேன்…”

“இன்னும் நிறயப் பேர் தயாராய்த்தானிருக்கிறம்… இருக்கட்டுமேன், சுலோகங்களெல்லாம் ரெடியா?”

“ம்… கமலனை விடுதலை செய், தரப்படுத்தலை நீக்கு, ராணுவ அடக்குமுறைச் சட்டங்களை வாபஸாக்கு எண்ட ரீதியில கொஞ்சம் எழுதியிருக்கு. மிச்சம் எல்லோரோடையும் கதைச்சு இரவுக்கும் எழுதலாம்”

“இப்ப எங்க போறீங்கள்?”

“பந்தலடிக்குத்தான்… ஏன்?”

“இல்லை ராஜன், எனக்கு கன நாளாய் சந்தேகம் ஒண்டு….”

“என்ன?”

தயக்கம், நாணம் என்ற கலவையை வெளிப்படுத்த, கைக்குட்டையால் மோவாயைத் துடைத்தபடி எனக்கருகில் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளை வெகு தீவிரமாக உற்றுப் பார்த்தாள்.

“மோதகம் எண்டு நீங்கள் யாரைச் சொல்றனீங்கள்?”

“சரியான வெயிலா இருக்கு. எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டிட்டு ஓடலாம் போல…”

“ச்சீ… டேர்ட்டி!” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“அ… இதுதான்!” என்றேன்.

புரிந்திருக்க வேண்டும். மேலும் அழகானாள்.

“இன்னுமொண்டு…” என்று தயங்கினாள்.

“என்ன?”

“கோழி எண்டது ஏதேனும் கெட்ட வார்த்தையா… என்னது?”

“சேச்சே! கெட்ட வார்த்தையெல்லாம் இல்லை…” என்ற என் மீது நேர்ப்பார்வையோடு நின்றாள்.

“அப்ப அடிக்கடி உங்களுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிறீங்களே!”

“பெண்களின் அப்பாவித்தனமோ, அல்லது அது மாதிரியான பாவனையோ எல்லாச் சமயங்களிலும் எரிச்சல் உண்டாக்குவதில்லை. என் கண்ணில் விஷமத்தைத் தவிர்க்க பிரயாசை எடுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.

“இல்லைக்கிடைக்குறை, இலையாமெனில் முல்லைக்கிடைக்குறை அதுவாகுமே…” அவள் புரிந்து கொள்வதற்குள் விலகி நடந்தேன்.

***

“அடிச்சாங்களா, ராஜன்?”

“ம் என்றேன்” இதென்ன அசட்டுக் கேள்வி என்ற பரிதாபப் பார்வையுடன்.

“உங்களைப் பிடிச்சுக்கொண்டு போனதிலிருந்து எங்கள் யாருக்கும் சாப்பாடே வேண்டியிருக்கேல்ல… எப்படி ராஜன் விடுதலை செய்தாங்கள்?” அவள் முகத்திலிருந்த வேதனையும் கோபமும் எனக்கு மிதப்புத் தருவதாய்த்தான் இருந்தது.

“எங்களைப் பயமுறுத்தி அடக்கிறதெண்டால், அதிலிருந்து எழுச்சி ஏற்பட்டு விடாமலும் தடுக்கிறதெப்படி எண்டதில் எல்லாம் அவர்களுக்கு இன்னம் குழப்பம் இருக்கலாம் போலத் தெரியுது”

“உங்களைக் கைது செய்த பிறகு இங்க ஒரே பதட்டம். சரியான சித்திரவதை செய்யிறாங்கள் எண்டும், திரும்பி வரமாட்டீங்கள் எண்டும் கதை பரவி, நாங்கள் எல்லாரும் ஒரே அழுகைதான்…!”

நான் முதன் முதலில் என்னை ஒரு போராளியாக உணர ஆரம்பித்தேன்.

***

“என்ன ராஜன், இந்தப் பக்கம் பார்க்காமலே போய்க் கொண்டிருக்கிறீங்கள்?”

“அ… இல்லை மாலினி. ஏதோ யோசனை, உன்ர வீடு இதில இருக்கெண்ட ஞாபகமே வரேல்ல. இருட்டிப் போச்செல்லே. அதான் நீ வாசல்ல நிண்டதும் தெரியேல்லே…”

“சென்ரி முடிச்சு வாறீங்கள் போலை… உள்ள வாங்கோ”

“இல்லை மாலினி… இப்ப…”

“அஆ… அதெல்லாம் வரலாம் வாங்கோ” என்று கொண்டே திரும்பி வீட்டினுள் நுழைந்து விட்டாள். தோளில் மாட்டிய ஏ.கே. 47 உடன் வீட்டினுள் போகக் கூச்சமாய் உணர்ந்தேன் நான். அவள் பெருமிதத்தோடு அழைத்ததாய்த்தான் தோன்றியது. மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்து இறக்கி விட்டுக் கொண்டு, பவ்வியத்தை வரவழைத்துக் கொண்ட முகத்துடன் மெல்ல அவளைப் பின்தொடர்ந்து போனேன்.

நான் எதிர்பார்த்தது போலவே முன்னறையிலேயே அவள் தந்தை சாய்மனைக் கதிரைக்குள் கிடந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து, “வாருங்கோ தம்பி” என்றார் வெகு மரியாதையாக. எதற்கு அந்த மரியாதை என்றிருந்தாலும் கூசிக்கொண்டு ஒடுக்கமாய் அவர் முன்னால் அமர்ந்தேன்.

“அப்பாவோட கதைச்சுக் கொண்டிருங்கோ, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் போனாள் மாலினி. சம்பிரதாயத்துக்கெல்லாம் மறுப்புச் சொல்லிக் கொண்டிராதே என்ற மாதிரி அவள் நடந்து கொண்டதை அதிசயித்து முடிவதற்குள் உள்ளே சமையலுக்கான ஆயத்தங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தின் பின்னணியில் அவள் தந்தையுடன் அவரை நான் வென்றெடுப்பதாக எண்ணியிருந்த ஒரு நீண்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன். மிருக நோக்கமெதுவுமில்லாத எங்கள் ஆயுதப் போராட்டத் தனித்துவ அவசியம் குறித்து அவர் சரிவரப் புரிந்து கொண்டு விட்டாரா என்று நான் தீர்மானிப்பதற்குள் மாலினி வந்து நின்றாள்.

“சாப்பிடலாம் எழும்புங்கோ. அப்பா நீங்களும் வாங்கோ!”

“இல்லைப் பிள்ளை, தம்பிக்குக் குடு. நான் கொம்மா வரட்டும். பிறகு சாப்பிடுறன்…” என்றவர் என்னைப் பார்த்து “தம்பி நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் பரிவு ததும்ப.

கையைக் கழுவும் போதே கோழிக் கறி மணத்தது. தட்டின் முன்னால் அமர்கையில் ஏதாவது பேச வேண்டும் என உந்தப்பட்டேன்.

“மாலினி, அம்மா எங்க காணல்ல” அனேகமான அல்லது எல்லா உரையாடல்களின் துவக்கத்தையும் போல அபத்தமானதும் அவசியமற்றதுமான முதல் கேள்விக்கு அவள் என்ன சொன்னாள் என்பது மனதில் செல்லவில்லை.

“ஏன் ராஜன், ஒரேயடியா இயக்க வேலை எண்டு மாறிட்டியள்… படிச்சுக் கொண்டே உதெல்லாத்தையும் செய்யலாந்தானே! இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது?”

“ராணுவம் நினைச்ச நினைச்சவுடன் பொடியன்களைக் கைது செய்யுது… சுட்டுக் கொல்லுது… அவைக்குப் பணிஞ்சு எதையும் கேட்டுக் கொள்ள வேண்டுமெண்ட அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ள இப்ப யாருக்குப் பாதுகாப்பிருக்கு? வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது? எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி?”

ஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீர் குடித்தேன். பிறகும் அவளைப் பேச விடாமல் நானே தொடர்ந்தேன்.

“எதிர்காலம், சந்ததி எல்லாத்தையும் விடு, இப்ப படிச்சுக்கொண்டு உயிரோடயும் இருக்கலாமெண்டதை உத்ததரவாதப்படுத்திறது யார்? கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா?”

மாலினி மௌனமாக இருந்தாள். நான் பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அக்கறையும் காரணமாயிருக்கலாம்.

“மாலினிக்கு தேர்ட் இயர் எக்ஸாம் முடிஞ்சிருக்கோணுமெல்லே… ரிசல்ட் எப்படியெண்டு சொல்லவேயில்லையே!”

“குண்டுதான்” என்றான் நிஷ்களங்கமுடன் சிரித்து, பிறகு அவளாகவே சொன்னாள்:

“எல்லாம் நல்லாய்த்தான் எழுதினனான்… எதுக்கு ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு தெரியேல்லே…”

“………………………..”

“ஏன் சிரிக்கிறீங்கள்?”

“டொக்டர்கள் சொல்லியிருக்கிறத நினைச்சேன்”

“எதைப் பத்தி?”

“நான் பிரமாதமா எழுதியும் என்னை ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு சொல்றது… அருள் வந்து சாமியாடுற மாதிரியான ஒரு மன நிலையை அடிப்படையாகக் கொண்டது எண்டு அவை சொல்லுகினம். தனக்குத்தான் அதிகம் பக்தி, தன்னோடு கடவுள் பேசுறார் எண்டு தன்னைத்தானே நம்ப வைச்சுக் கொள்கிற சாமியாடல். இந்த தோய்க்கு ஒட்டோஹிப்னோசிஸ் எண்டு பெயர் சொல்லுகினம்…” பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் காட்டும் தந்திரமான சிணுங்கலுடன் கூடிய முகச்சுளிப்பொன்றை வெளிப்படுத்தினாள்.

“கறியெல்லாம் எப்பிடியிருக்கு?”

“எல்லாமே அட்டகாசமாயிருக்கு… இத்தனை வேகமா… அதேசமயம் எப்படி இவ்வளவு ரேஸ்ற்றா சமைக்கிறாய்?”

“அஆ… சும்மா புளுக வேண்டாம். கேட்டதுக்குப் பிறகுதானே சொல்றீங்கள்…” அவளது செல்லமும் சிணுங்கலும் மிக நெருக்கமாய் உணர்த்தியது. எனக்குள் ‘சைரன்’ கேட்டது. எச்சரிக்கையாகும் படி சகல தூண்டல் நிலையங்களிலிருந்தும் செய்தி பிறந்தது. பெண்ணின் சகலவிதமான படைக்கலங்களோடும் வருகிறாள். உன் சுவரை உடைத்து விட அனுமதிக்காதே. பெண் போகப் பொருள் அல்ல; பொம்மை அல்ல; மனசை மயக்குகிற மாயப் பிசாசு அல்ல; சக மனுஷி; உன்னோடு போராட்டத்தில் கைகோர்க்க வேண்டிய சக தோழி என்ற அறிவின் விளக்கங்கள் அனைத்தும் பொசுங்கிப் போகக் கூடிய அதிசய ஈர்ப்புகளோடு வருகிறாள். தளர்ந்து போகாதே, அதற்கு இது காலமல்ல, மனசை இறுக்கி வைத்துக் கொள். அலைக்கழிக்கிற நினைவுகளுக்கென்று உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்து விடாதே! உன் பாதை தடுமாறி விடக் கூடும். உன் பயண நோக்கம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகள் உன்னிடம் தடை போட வரக் கூடாது.

“ராஜன்”

“ம்…”

“எனக்கு இதெல்லாம் சரியெண்டு படேல்லை…”

“எதெல்லாம்”

“இயக்கங்களெல்லாம் தனித்தனியா பிரிஞ்சிரிக்கிறதாலதான் பிரச்சினை தீரக் கஷ்டம். ஒரே இயக்கமாய் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்தா, ராணுவத்தைத் துரத்திப் போடலாம். எல்லா இயக்கங்களுக்குமே நோக்கம் ஒண்டுதானே, பிறகேன் தேவையில்லாமல் நூற்றெட்டுப் பேர்களில் இயக்கங்கள்?”

“இப்ப இருக்கிற இயக்கங்களெல்லாம் எப்படி ஒரே இயக்கமாகலாம் எண்டு நீ சொல்றாய்?”

“எல்லா இயக்கங்களும் தங்களைத் தாங்களே கலைச்சிக் கொண்டு ஒரு புதுப்பேரில் எல்லாரையும் உள்ளடக்கினதா பெரிய ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என்றவள் சிறிது யோசித்து விட்டு, “இல்லாட்டி, எல்லா இயக்கங்களும் இப்ப இருக்கிற பெரிய இயக்கத்தில் சேர்ந்து ஒண்டாயிடலாம்” என்றாள்.

“பெரிய இயக்கத்தை எப்படி தீர்மானிக்கிறது? பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா?”

“ம்… அதிலே என்ன?”

“அப்படியெண்டால் அரசு ராணுவத்துடன்தான் எல்லாரும் சேர வேணும்…”

“உங்களோட கதைச்சு எனக்கு வெல்ல ஏலா” செல்லச் சிணுங்கலோடு சரணாகதி ஆகிவிடுகிற அவளது எளிமை மிகு ஆயுதம்.

“இல்லை மாலினி. நோக்கம் ஒண்டாயிருந்தாலும் செயற்படுகிற முறைகளில் ஆரம்பத்திலிருந்தே குறிக்கோளை சிதைத்து விடக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளேலும். முடிஞ்சா அவற்றைத் திருத்தித்தான் சேர்த்துக் கொள்ளவோ சேர்ந்து கொள்ளவோ முடியும். எங்கட மக்களது நலமான வாழ்க்கை எங்கிறதுதான் நோக்கம். பிறகு ஒரு கட்டத்தில நாங்கள் விரும்புகிற முறையிலதான் மக்களுக்கு நல்லபடியான வாழ்க்கை அமைய முடியும் என்ற வெறியா மாறியிடக் கூடாது”

அவளுக்குப் புரிகிற வகையில்தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் உண்டாயிற்று. இடையில் அவளைப் பார்த்தேன். மாலினி என்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொல்லும் விஷயங்கள் பற்றியதுதானா இந்த ஆர்வம் என்பது குறித்துச் சந்தேகம் மீண்டும் கிளம்பிற்று. எனது தரப்பில் நான் பேசிக் கொண்டே சாப்பிடுவதுதான் தற்காப்பானது என்ற உணர்வுடன் அவள் பார்வையைத் தவிர்த்தபடி தொடர்ந்தேன்.

“தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கெண்டொரு நாடுமில்லை” என்பது மாதிரியான காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல. நாங்களும் உண்மையாகவே பயங்கரவாதிகளாய் மாறிக் கொண்டு அரசைப் பணிய வைக்க நினைக்கிறதும் சிங்களப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறதுமான வழிமுறைகளில் எல்லாம் நாம் உடன்பட்டுப் போக முடியாது. இது எங்களை நாங்களே கொன்று கொள்கிற வரைக்கும் போகக் கூடியது. பிடிக்காதவர்களையெல்லாம் கொலை செய்துவிட வேண்டும் என்றாகி விடும். தமிழ் மக்களால் தவிர்க்க முடியாமல் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பிழையான பாதையில் போய் சீரழிந்து விட விட்டுடக் கூடாது மாலினி. அதுதான் முக்கியமானது…”

“ஒருத்தருக்கொருத்தர் முகத்தைத் திருப்பிக் கொண்டே வளர்ந்து எப்படி இதைச் சாதிக்கப் போகிறீர்கள்?”

“அப்படியரு விரோதமும் இன்னும் வளரல்ல மாலினி. முதல்ல இப்ப மூண்டு இயக்கங்கள் ஒன்றுபட்டு ஒரே அமைப்பாய் இயங்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கினம். சரிவந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரும் ஒண்டு சேர்ந்து போராடி வெல்லும் காலம் வரும்” பிறகு மௌனமாகச் சாப்பிட்டு முடித்தேன். கடைசியாக மாலினிதான் பேசினாள்.

“நீங்களும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் ராஜன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.

கையைக் கழுவிவிட்டு எழுந்தேன்.

***

“எவ்வளவு காலமாச்சு…?” அவளைத் திடீரென்று சந்திக்க நேர்ந்த வியப்பு வடிந்து விடாமல், வள்ளுவர் கோட்ட நிழலொன்றில் அமர்ந்திருந்த போதும் வெளிப்பட்டது.

“முதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க ராஜன். எங்க தங்கியிருக்கிறீங்கள், என்ன பண்றீங்கள்…”

“இங்கதான் கோடம்பாக்கத்தில நண்பன் ஒருத்தன் வீட்டில தங்கியிருக்கன். என்ன பண்றதெண்டு தெரியாததுதான் இப்ப இருக்கிற பிரச்சினை” என்னை அறியாமலே என் பேச்சில் விரக்தி வெளிப்படுவது தெரிந்தது. அவள் முகபாவத்தைக் கவனித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“இதில இனி யோசிக்க என்ன இருக்கு… நாட்டு நிலைமைய உங்களால எல்லாம் திருத்த முடியாது. இன்னும் நிறைய அழியப் போகுது. விடாப்பிடியா அதில தலையிட நினைச்சு இன்னும் ஏன் உங்களை அழிச்சுக் கொள்ள நினைக்கிறீங்கள்?”

“சேச்சே, விடாப்பிடியெல்லாம் ஒண்டும் கிடையாது மாலினி. என்ர பலம் எனக்குத் தெரியும். நாங்கள் ஆசை ஆசையாகக் கனவு கண்ட தேசம் அழிஞ்சு கொண்டிருக்கிறதை கையாலாகாத்தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கே எண்ட கவலைதான். வேறொண்டுமில்லை இப்ப” யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத என் பழக்க தோஷத்தில் மேலும் அவளுக்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.

“மக்களுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கக் கூடிய யுத்தம் தேவைதான். அப்படித்தான் நினைச்சு ஆரம்பிச்சம். ஆனால், யுத்தத்தின் பலன் மேலும் மேலும் யுத்த அழிவுகள்தான் எண்டாக்குகிற பராக்கிரமசாலிகளின் பிடியில்தான் எங்கட மக்கள். அவர்களுடைய போராட்டம் எல்லாமே போயிட்டுது. என்னால இதை ஒப்புக் கொள்ளவும் முடியல்ல. எதிர்த்து வாழவும் பலமில்ல. இங்க வேற இப்ப சொல்கிறார்கள்; நீங்கள் உங்கட நாட்டுக்கே திரும்பிப் போயிர்ரதுதான் நல்லதெண்டு“.

“இன்னும் ஏன் அரசியல்ல ஈடுபடுறதையே நினைக்கிறீங்கள்?”

“அரசியல் எது மாலினி? ஒரு சாதாரண ஈழத்துக் குடிமகனா, நமக்கு எது வேணும் எண்டு தீர்மானிக்கிற உரிமை எனக்கில்லையா? எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறதே. ஒரு கற்கால வீரத்தமிழனாக அர்த்தமற்ற யுத்தத்தை பார்த்துக் கைதட்ட மட்டும்தானே நமது நாட்டில் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கு”

“முதல்ல உங்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படுறதை வைச்சுக் கொள்ளலாமே ராஜன்”

“ஏதோ நம்மட தேசத்தின் ஒரு பக்கத்தை என்ர தோளில தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் நான் விட்டுட்டா தேசம் விழுந்து நொறுங்கிப் போகும் எண்டெல்லாம் பிரமையில் நான் இல்லை மாலினி… மனசாட்சித் தொந்தரவுதான். தேசம் எக்கேடு கெட்டால் என்ன, நம்மால ஒண்டும் ஆகாதெண்டு சட்டெண்டு தனிமைப்படுத்திக் கொள்ள முடியல்ல, கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு, இதுவும் இல்லாட்டித்தான் நீ நினைக்கிற மாதிரி சாமியாராகி இருப்பேன்”

சிரித்தது நான் மட்டும்தான் என்பதைக் கவனித்துக் கொண்டே கேட்டேன்.

“உன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே மாலினி?”

“ஓம் ராஜன்! மூண்டு வயசில குழந்தை இருக்கு. ப்ரமிளா. அவ அப்பா பிஎச்டி முடிச்சிட்டு லண்டனிலே இருக்கிறார். உங்களுக்குத் தெரியும் ராஜன், ரவியை…. ரவீந்திரன் எங்களுக்கு ரெண்டு வருஷம் சீனியர். நானும் பாப்பாவும் கூட லண்டனுக்குப் போயிடப் போறம்… ம்.. அவ இனிப் படிக்கவும் வேணும்”

“கோப்பாய் ரவிதானே மாலினி?”

“ஓமோம். தயா, ரட்ணம், லோகு, பாமா, நந்தினி எல்லோருமே லண்டனில இவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலதானாம். அடிக்கடி சந்திக்கிறவையெண்டும் இவர் எழுதியிருக்கிறார்”

“ரவி நல்ல அமைதியான ஆளெல்லே…. உன்னைப் பூப்போல நேசிப்பார். நீ லக்கி!”

“நான் மட்டும்தானா லக்கி, அவரில்லையா?” வெள்ளையாகச் சிரித்தாள். அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்.

“ஜெயக்குமார், விஜி, குகா, செல்வி எல்லோருக்கும் கனடாவில் அகதிகளுக்கான அடையாள அட்டைகள் கிடைச்சிட்டுது… கடிதம் போடுவினம்” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டுக் கேட்டாள்.

“இங்கயும் இப்ப பிரச்சினைதானே, ஏன் ராஜன், நீங்க கொஞ்ச காலம் வெளிநாட்டுக்குப் போய் இருந்திட்டு வரக்கூடாது?”

மனம் எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்திருந்ததால், எனக்கு அவள் கேள்வியை வாங்கிக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அவள் கவலைப்படும் அளவுக்கு எனது பத்திரமான எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்துதான் ஆக வேண்டும் என்பது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது. எரிச்சல் என் இயலாமை, அல்லது தோல்வி. எதனிலும் இருந்துதான் வருகிறதா என்றும் தேட முயன்றேன். அவளுக்கு என் மனநிலையை விளக்கி விட முடியுமா என்ற சந்தேகத்துடனேயே பதில் சொன்னேன்.

“தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”

“இங்க தனிய இருந்து என்ன செய்யப் போறீங்கள்?”

“எதுவும் செய்ய முடியாது” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னேன். “…. ஆனால் தனிய இல்லை. அகதிகளாய் இங்க ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறம்”

“உங்களை எனக்கு விளங்கக் கொள்ளேலாமல் இருக்கு ராஜன்”

“எனக்கும்தான்!”

வள்ளுவர் கோட்டத்திலிருந்து நாமிருவரும் வெளியே வந்தபோது, எனக்கு எதையோ இழந்திருப்பது போன்ற உணர்வு இருந்தது. இப்போதைக்கு அது என்னவென்று என்னால் நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாதென்றும் தோன்றியது.

***

நன்றி : சிவகுமார் ( aayanan@hotmail.com )  ,   கணையாழி  , எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

இலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு! – ’துக்ளக்’ கட்டுரை

அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் திரு. ஏ.பி. மணிகண்டன் எழுதிய கட்டுரை. துக்ளக்-ல் ( 7.9.2011 இதழ்) வந்திருக்கிறது. தனக்குப் பிடித்திருக்கிறதென்று தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். பதிவிடுகிறேன். தாஜின் பின்குறிப்பு கட்டுரைக்குப் பின் வருகிறது.  ‘சோவின் துக்ளக் அரசியல்’ கட்டுரையைப் படித்துவிட்டு இதை வாசிக்கலாம். மாற்றுக்கருத்துடைய நண்பர்கள் தாஜை தூக்கிலும் போடலாம்!

***

இலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு!

ஏ.பி. மணிகண்டன்

‘ஐ.நா. குழு அறிக்கையின்படி இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா உடனடியாகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் முன்னிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்பு இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து இருப்பதும் நாம் அறிந்ததே.

இறையாண்மை பெற்ற ஒரு நாட்டின் மீது, மற்றொரு நாட்டின், மாகாணத்தைச் சேர்ந்த முதல்வரோ அல்லது ஆளுநரோ கருத்து தெரிவிப்பதோ, அல்லது எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதோ சரியான அணுகுமுறைதானா என்பது விவாதத்துக்கு உரியது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாகாணத்தைச் சார்ந்த ஒரு ஆளுநர், நமது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா? எனினும் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழக முதல்வரின் அணுகுமுறையும், ஏனைய எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுப்பட்டது.

போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் முதல்வருக்கு இருக்க துளியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வேறு, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு என்பதை மிகத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு, இன்றும் பயங்கரவாத விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்த்து வருபவர் நமது தமிழக முதல்வர். சமீப காலமாக இலங்கைத் தமிழர்களின் நலனிற்காக அவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் பயங்கரவாதிகளைத் துளியும் ஆதரித்தது இல்லை. எனவே, அவருக்கு வேறு எந்த மறைமுக நோக்கமும் நிச்சயம் இல்லை.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகவே அவதரித்த தலைவர்களான வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், போன்றோரும், நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களாக இருந்துவரும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களும் ‘முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பாரீர், ஐயோ ஈழத் தமிழர்க நிலை பாரீர்’ என்று கூறுவதற்கும் நிறைய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.

மேற்கண்ட தலைவர்களுக்கு ஈழத் தமிழர்களின் துயர், போர்ப் படுகொலைகள் இவற்றைப் பற்றிய அக்கறையை விட, இறுதிக் கட்டப் போரில் நடந்த துன்பியல் சம்பவத்திற்குத்தான் வருந்துகின்றனர் (பிரபாகரன் கொல்லப்பட்டது). இதை வெளிப்படையாகவும் கூற முடியாது. ஏனெனில், பிரபாகரன் கடவுள் அவதாரத்திற்கு இணையானவர், அவரை உலகில் யாராலும் அழிக்க முடியாது என்ற ‘பில்டப்’ அழிந்து விட்டதை  எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையே வசதியாக மறைத்துவிட்டு, ‘இதோ வருகிறார்’ விரைவில் வந்து விடுவார்’ ‘வந்து கொண்டே இருக்கிறார்’ என்று மக்களின் முன்பு நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் மேற்கூறியவர்கள்.

எனவே, ‘ஈழத் தமிழர் நலன், போர்ப் படுகொலை, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்’ என்று இவர்கள் கூப்பாடு போடுவது என்பது அப்பட்டமான பகல் வேஷம். அவர்களின் உண்மையான ஆத்திரம், இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார், அதற்குக் காரணமான இலங்கை அதிபரைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.

ஐ.நா.சபை அறிக்கை என்ன இலங்கையை மட்டுமா குற்றம் சாட்டியது? விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா? கண்டித்தாரா? விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை வசதியாக மறைத்துவிட்டு, ‘அயோ இலங்கையில் போர்க் குற்றம் பாரீர், ஈழத் தமிழரின் அவலநிலை பாரீர்’ என்று அனைத்து பத்திரிகைகளும் சிறிதும் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டன.

போர் குற்றங்களில் மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல், யாரை ஏமாற்ற நாடகம் நடத்துகின்றனர் இந்த வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள்?

சரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றகளுக்காக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிறுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்? அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது மரண தண்டனை கூடவே கூடாது என்பார்களா?

இந்திய நாட்டின் இளம் தலைவரை, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஒரு முன்னால் பிரதமரை துடிதுடிக்கக் கொலை செய்ய உதவிய குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கூடவே கூடாதாம். மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதாம்.

இந்திய நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற விடுதலைப் புலிகளை தூக்கில் போடக் கூடாது. உலக பயங்கரவாதியான பிரபாகரனை வீழ்த்திய இலங்கை அதிபரை மட்டும் 1000 முறை சாகும் வரை தூக்கில் போட வேண்டுமாம். ராஜீவ் காந்தியின் உயிர் என்ன விடுதலைப் புலிகளின் உயிர் போல மதிப்பு வாய்ந்ததா? அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா? விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம்! அட சர்வேசா!

– ஏ.பி. மணிகண்டன்,
கழக வழக்கறிஞர்,
அ.இ.அ.தி.மு.க. – சேலம். 

*

பின் குறிப்பு – தாஜ்:

இந்தக் கட்டுரையின் பார்வை, எனக்கு ஏற்புடையது.  இதில் மறைப்பு வாதங்கள் உண்டு. எழுதி இருப்பவர் ஓர் வழக்கறிஞர் மற்றும், அரசியல் சார்ந்தவராயிற்றே! சென்ற பாராளுமன்ற தேர்தலில், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்று ‘ஈழத் தமிழர்களுக்கு அவர்களது மண்னை மீட்டுத் தருவேன். அது என்னால்தான் முடியும்’ என்பதானது. தவிர, ஈழ மக்கள் மீது என்றும் இல்லாத அளவுக்கு ஜெயிடம் பிரியம் கரைபுரள்கிறது. அவரது மேடையில் அமர்ந்திருந்த வை.கோ., ஐயா வைத்தியரெல்லாம் பின்னுக்குப் போய்விட்டார்கள். இக்கட்டுரையாளர் அந்த நிகழ்வையே துடைத்தெறிந்த மாதிரி வசதியாக மறந்துவிட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரே முகம்தான்.

ஈழத் தமிழ்ப் பிரச்சனை இத்தனைத் தூரம் சோகம் கப்பி போனதற்கு பல காரணங்கள். அதில் வீரியமான ஒன்று, இந்திய அரசியல்வாதிகள் அதில் சுயநலத்துடன் பங்கெடுத்ததுதான். இதனை சத்தியம் செய்து சொல்வேன். இதில், நம் மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் காரியம் ஆற்றியது. நாட்டின் பாதுகாப்பிற்காக என்றும் ஈனக் குரலில் ஒப்புக் கொண்டது. இங்கே மத்திய அரசு என்பது பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசையும் சேர்த்துதான். இவர்களுக்கு தமிழன் என்றாலே ஆகாது. தமிழனின் கச்சாதீவை தாரைவார்ப்பதில் ஆகட்டும்/ காவிரி நீர் வரத்து சிக்கலை கண்டுக் கொள்ளாததில் ஆகட்டும்/ சேது சமூத்திரத் திட்டம் முடங்கிப் போவதை கண்டுக் கொள்ளாதில் ஆகட்டும்/ தமிழக மீனவர்களை சிங்கள ரணுவம் கொல்வதை பெரிசுப் படுத்தாததில் ஆகட்டும் மத்திய அரசு தொடர்ந்து தமிழனுக்கு எதிராக வில்லன் வேஷம் கட்டுவதில்தான் எத்தனை இன்பம் அதற்கு!

அன்றைக்கும் இன்றைக்கும் ‘தமிழ் ஈழத்தின்’ வரைப்படம் கூட தெரியாத நம் அரசியல் தலைவர்கள் அதன் பிரச்சனையில் பங்கெடுக்கும் வேகம் அபாரமானது! மிச்சம் மீதி இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு பரலோகம் அனுப்பாதவரை ஓயமாட்டார்கள். கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஈழத் தமிழனே தமிழ் ஈழத்தை மறந்தாலும், நம் அரசியல்வாதிகள் மறக்க மாட்டார்கள். இங்கே இவர்கள் அரசியல் செய்ய வேறு ஆயுதமே இல்லை. ஒரு பெரிய போருக்குப் பிறகு நீண்ட ஓய்வு என்பது புத்திசாலித் தனமான போர் தந்திரமாக கணிக்கப்படும் யதார்த்தம் கூட இவர்களுக்கு புரிவதில்லை. நிஜத்தில் ஈழ மண் என்னவோ இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். இடையிடையே ‘பிரபாகரன் வருவார்’ முழக்கம் வேறு.

அண்டை (நாட்டு முன்னால்) பிரதமரை, தமிழ் ஈழ இயக்கம் திட்டமிட்டு படுக் கொலை செய்கிறது. அது நிரூபணமாகி, அந்த இயக்கமும் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டப் பிறகும், இந்திய அரசு அந்த மூவரையும் இருபது வருடம் ஜெயிலில் வைத்துவிட்டு, இப்போதுதான் தூக்குக்கு அனுப்ப முனைகிறது. இதுதான் சாக்கென்று, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்வர்களும் ‘தூக்கு கூடாது’ தென அநியாயத்துக்கு கூக்குரல் இடுகிறார்கள். எப்படி யோசித்தாலும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இந்தக் கட்டுரை, தமிழக பத்திரிகைகளில் இருந்து மாறுப்பட்ட கோணத்தில், அதே நேரத்தில் திறம்படவும் கருத்துக்களை வைத்திருக்கிறது. அதனாலேயே… என் பார்வையில் இது சிறப்பாக தெரிகிறது. இன்னும் பெரிய அளவில் இங்கே நான், என் பக்க செய்திகளை வைக்க வேண்டிய முக்கியம் இருக்கிறது. என்றாலும் போதும். உணர்ச்சிகளை மழுங்கடிக்க உண்மைகளால் முடியாது.

***

நன்றி:  துக்ளக் / ஏ.பி. மணிகண்டன் , தாஜ்

***

ஆபிதீன் தரும் ஒரு சுட்டி :

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

ரிஷான் ஷெரீபின் புத்தகங்கள்…

சென்ற வருடம் , சரியாக இதே ஏப்ரல் 7ஆம் தேதி , சகோதரர் ரிஷான் ஷெரீப் ஒரு பதிவு எழுதியிருந்தார்.  ‘எழுத்தாளர் அ.முத்துலிங்கம், நான் மற்றும் விகடன்‘ என்ற பதிவு. மனம் கனக்கச் செய்த பதிவு அது.  எனது கூகுள்பக்கங்கள் காலாவதியாகி விட்டதால் அங்கிருந்தவற்றை மீண்டும் இங்கே பதிய வேண்டிய சூழலிலும் (முக்கியமாக , நண்பன் நாகூர் ரூமியின் பல படைப்புகள், அப்புறம் என்னுடைய ஃபேவரைட் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் பத்து செட்டி சிறுகதை etc..) இந்த இளைஞருடைய எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கே இடுகிறேன்.

*

புத்தகங்கள்…

எம்.ரிஷான் ஷெரீப்

அது 2005 ம் வருடம். கொழும்பில் தங்கியிருந்து மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எமது வகுப்பு வியாழக்கிழமை மட்டும் பாதிநாள் நடக்கும். வகுப்பு முடிந்ததும் மொறட்டுவை, கடுபெத்த நகர் சந்திக்கு வந்து கொழும்பு நோக்கிவரும் பஸ் எடுத்துப் பயணித்து இடையில் உள்ள வெள்ளவத்தையில் இறங்குவேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தது.

வெள்ளவத்தையில் இறங்க மிக முக்கியமான காரணமொன்று இருந்தது. அங்கு எனது அபிமான பழைய புத்தகக் கடையொன்றுள்ளது. இப்பொழுது இருக்கிறதா எனத் தெரியவில்லை. வெள்ளவத்தையில் குண்டு வெடித்ததாகப் பத்திரிகையில் புகைப்படம் பார்த்தபோது அதன் மூலையில் இக் கடையையும் கண்டதாக ஞாபகம். ரொக்ஸி சினிமா தியேட்டருக்கும் ஆர்பிகோ ஷோரூமுக்குமிடையில் இக்கடை அமைந்திருந்ததென நினைக்கிறேன். வெற்றிலை சாப்பிட்டு உதடெல்லாம் சிவந்த ஒரு அண்ணா (வயது 40 இருக்கும் ) உரிமையாளராக அதில் இருந்தார். சற்றுப்பெரிய கடைதான்.ஆங்கிலம், சிங்களம், தமிழென பல கிடைப்பதற்கரிய பழைய புத்தகங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்டு அங்கு நிறைந்திருந்தன.

சிறுவயதிலிருந்தே புத்தகங்களும், அதன் வாசனையும், வாசிப்பும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மதியம் ஒரு மணிக்கு அந்தப் புத்தகக் கடைக்குப் போனால் புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிவர எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும். ஒவ்வொரு கிழமையும் இப்படியாக மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக உருட்டிப் பிரட்டிப் புத்தங்களை அள்ளுவதால் அந்த அண்ணாவுக்கும் நான் நல்ல அறிமுகம் ஆகிவிட்டேன். இடையிடையே என்னைக் கடையில் விட்டுவிட்டு சாப்பிடவும், தேனீர் குடிக்கவும், வெற்றிலை வாங்கவுமென அவர் வெளியே போய்விடுவார்.

நான் வாசித்திராத பழைய மல்லிகை, மூன்றாவது மனிதன், யாத்ரா, ஆனந்தவிகடன் இதழ்கள், அம்மா, சகோதரிக்கு அவள் விகடன்,மங்கையர் மலர் இதழ்கள், Readers digest, இன்னும் நல்ல பழைய தமிழ்,ஆங்கிலப்புத்தகங்கள் என எப்படியும் கிழமைக்கு 20,25 புத்தகங்கள் வாங்கிவிடுவேன். புது ஆனந்த விகடன் ஐம்பது ரூபாய் என்றால் இரு வாரங்களுக்கு முந்தி வந்த விகடன் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும். அந்த அண்ணா எனக்காகவென்றே எப்படியும் சமீபத்திய இதழ்களை எடுத்துவைத்திருப்பார்.

இப்படியாக ஒருநாள் ஏறத்தாழ 4 மணித்தியாலங்கள் தேடி , பொக்கிஷங்களெனக் கண்ட, சொல்லிவைத்து நீண்ட காலத் தேடலின் பின் கிடைத்த (கல்கியின் படைப்புகள், ஆயிரத்தொரு இரவு கதைகள், பழைய ஆனந்தவிகடன், மங்கையர் மலர்கள், Readers digest, இன்னும் சில ) புத்தகங்களை பெரியதொரு கறுப்புப் பையில் கஷ்டப்பட்டு அடுக்கி நிரப்பி எடுத்து, கடையை விட்டு வெளியே வர மாலை 5 மணிக்கும் மேலாகிவிட்டது. நடந்து தூக்கிவருகையில் நிலத்தில் இழுபடுமளவுக்கு பெரிய பை. அவ்வளவு கனம்.

இப்பொழுது வெள்ளவத்தையிலிருந்து எனது அறையிருந்த மருதானை எனும் இடத்துக்குப் போக வேண்டும். உட்கார்ந்து போகலாமெனக் காத்திருந்து சனம் குறைந்துவந்த 100 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி அமர்ந்து நீண்ட நாள் வேண்டுதலின் பின்னர் கிடைத்த குழந்தையைத் தாய் மிகுந்த கவனத்தோடு பத்திரப்படுத்துவது போல பையையும் அணைத்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன்.

காலி முகத்திடலெனத் தமிழில் அழைக்கப்படும் Galle face எனும் கடற்கரைப் பிரதேசம் தாண்டும்போது கொழும்பு நோக்கி வரும் எல்லா பஸ்களையும் படையினர் சோதனையிடுவது தெரிந்தது. ஏதோ ஓர் திடீர் சோதனை. நீண்ட துவக்குகளை நீட்டிவந்தவர்கள் நான் வந்த பஸ்ஸையும் நிறுத்தி எல்லோரிடமும் அடையாள அட்டையைக் கேட்டுவாங்கிச் சோதனையிட்டார்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள், அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டை இருந்தும் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தவர்கள் மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் எனப் பலரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்தார்கள். நிறுத்தப்பட்டவர்கள் ஒருவித உதறலுடனும் பதற்றத்துடனும் அச்சத்துடனிருப்பதைக் கண்டேன். எப்பொழுதும் பதற்றமான, அச்சங்கள் நிரம்பிய சூழல்களை சக மனிதர்களே உருவாக்குகிறார்கள்.

பரிசோதித்துக் கொண்டிருந்தவர்கள் எனதும் அடையாள அட்டையைப் பரிசோதித்துப் பார்த்துப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பவும் என்னை நிறுத்தி எனது கையிலிருந்த, பையின் வாய்ப் பகுதியால் தன்னொரு மூலையை விட்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தார்கள். தமிழ் மொழியிலான புத்தகங்கள் அவர்கள் தோண்டத் தோண்ட அப் பையிலிருந்து வந்துகொண்டே இருந்தன. அவர்களுக்குச் சந்தேகம் முளைத்திற்று.

என்னைப் பார்த்தார்கள். ஏதோ ஒரு விசித்திரத்தைத் தேடுவது போல என் முகத்தை உற்றுப்பார்த்தார்கள். புத்தகப்பையைப் பார்த்தார்கள்..அடையாள அட்டையை மீண்டும் மீண்டும் வாங்கிப் பார்த்தார்கள். மீண்டும் என்னைப் பார்த்தார்கள். இப்படியே நிமிடங்கள் கரைந்தன.

அடுத்தது விசாரணை. எனக்குச் சிங்கள மொழி தெரியும்.

எங்கிருந்து வருகிறாய்? கொழும்பில் என்ன செய்கிறாய்? உனக்கெதற்கு இவ்வளவு புத்தகங்கள் ? அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் ? எங்கே வாங்கினாய்? யாருடன் நீ தங்கியிருக்கிறாய்? யாருக்காக இந்தப் புத்தகங்கள் ? இந்தப் புத்தகங்களில் என்ன இருக்கின்றன? இவற்றை வைத்து என்ன செய்யப்போகிறாய் ?

ஒரு குறிப்பிட்ட மொழியினைக் கொண்டிருப்பதால் மட்டுமே, வாசிப்பதற்கெனக் காவிச் செல்லப்பட்ட புத்தகங்கள் பொறுமையைச் சோதிக்கும் படியாக இப்படிப் பல கேள்விகளை அன்று கண்டன. பல்கலைக்கழ்கத்திலிருந்து வருவதாகவும், இவற்றையெல்லாம் வாசிக்க மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், பல்கலைக்கழக அடையாள அட்டை காட்டிப் பலமுறை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டியிருந்தது. இருந்தும் அவர்களது சந்தேகம் மட்டும் தீரவில்லை என்பது அவர்களது முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

என்னை நிறுத்திவைப்பதா? அனுப்பிவிடுவதா? புத்தகங்களையும் என்னையும் என்ன செய்வதென்று அவர்களுக்கு விளங்கவில்லை. இவ்வளவுக்கும் நன்றாக இருட்டிவிட்டது. அழகான சமுத்திரவெளி சூரியனைத் தின்றுவிட்டிருந்தது.

வீணாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம், வகுப்புப் பகிஷ்கரிப்புக்கள் எனப் பல இருந்த நாட்களவை. எதுவும் செய்ய முடியாமல் எனது புத்தகங்களைத் திரும்பத் தரவும் முடியாமல் அந்தப் படைவீரர்கள் தானாக வலையில் சிக்கிய அபூர்வமான விலங்கொன்றை மீண்டும் வனாந்தரத்தில் விட்டுவிடுவது எப்படியென்பதைப் போலத் தவித்தார்கள். தூரத்தில் நின்றுகொண்டிருந்த இன்னுமொரு உயரதிகாரிக்குத் தகவலனுப்பி அவரை வரவழைத்தார்கள். அதே கேள்விகளை அவரும் கேட்டார். ஏதேனும் ஆயுதங்களை அல்லது புத்தகங்களை நான் ஒளித்துவைத்திருக்கிறேனா என என் உடல் முழுதும் தடவிப்பார்த்தார். எனது கைபேசியை வாங்கி அதிலுள்ளவற்றைச் சோதனையிட்டார்.

இப்பொழுது சோதனையிடப்பட்டு சந்தேகங்களில் சிக்காத பயணிகள் பஸ்ஸினுள் அமர்ந்து எனக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வெக்கையான காலநிலை கிளப்பிய வியர்வையாலோ, பசியாலோ உள்ளிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் வெளியெங்கும் பரவ ஆரம்பித்திருந்த இருளோடு அலைந்தன. பஸ் சாரதியும், கண்டக்டரும் பஸ் வாயிலருகில் நின்றவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

அதிகாரிகளது அடுத்த கேள்விகள் கண்டக்டரை அழைத்து அவரை நோக்கி ஏவப்பட்டன. நான் எங்கிருந்து ஏறினேன்? என்னை அவருக்கு முன்பே தெரியுமா? போன்ற இன்னும் பல கேள்விகள். அவன் சொன்ன பதில்களும் எனது பதில்களும் ஒன்றுக்கொன்று சரியாகிப் போனதில் சிறு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். எனது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், ஐ.டி. கார்ட் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக்கொண்டு போகச் சொன்னார்கள்.

“மகே பொத் டிக – எனது புத்தகங்கள்?” எனக் கேட்டபடி நான் அங்கேயே நின்றிருந்தேன். எனது புத்தகப்பை அவர்களது காவலரணில் ஒரு அமைதியான செல்லப்பிராணியைப் போல அல்லது இரை விழுங்கிய மலைப்பாம்பினைப் போல மூலையில் கிடந்தது.

“அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்.”

 “ஐயோ அவங்க சொல்றப்பவே வாங்க..புத்தகங்கள பிறகு பார்த்துக்கொள்ளலாம்..”-  கண்டக்டர் எனது கைப்பிடித்து இழுத்தபடி கெஞ்சிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இறுதியில் பொக்கிஷங்களென அதிக நாட்கள் பட்டியலிட்டுக் காத்திருந்து தேர்ந்தெடுத்து வாங்கிய எல்லாப் புத்தகங்களும் அக் கடற்கரைத் தடுப்புச்சாவடியோடு என்னிடமிருந்து விடைபெற்றன. இப்படியாக அந்த அதிகாரிகளுக்கு பல விதப் பதற்றங்களை ஏற்படுத்திய ஆனந்த விகடன்களும், ஆயிரத்தொரு இரவுகளும், அக் கறுப்புப்பையை நிரப்பிய மற்ற புத்தகங்களும்  இன்று வரை எனக்கு வந்துசேரவில்லை. கடலின் ஆழத்துக்குள் அழிந்தோ, எரிந்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பற்றியெரிந்தோ அல்லது தாண்டி வந்திருக்கும் ஆயிரத்தொரு இரவுகளுக்கும் மேற்பட்ட இரவுகளில் தினமொரு கதையெனப் பேசியபடி அதிகாரக் கட்டிடங்களின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கின்றனவோ…

தெரியவில்லை !

*

நன்றி : எம்.ரிஷான் ஷெரீப்

« Older entries