”ஆபத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்” – ரவிக்குமார்

( 16.12.2019 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,சிபிஐ,சிபிஐ எம், சிபிஐ எம்எல்,மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் M.P ஆற்றிய உரை)

*

தோழர்களே!

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்தப் போராட்டத்துக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்கும் விதமாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,இடதுசாரிக் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று இரவு முழுவதும் டெல்லியில் மாணவர்கள்மீது போலீஸ் நடத்திய மிருகத்தனமான காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியதைப் பார்த்திருப்பீர்கள்.நிராயுதபாணியாக நூலகத்தில், கழிவறையில் இருந்த மாணவர்கள்மீது மிகக் கொடூரமாகக் காவல்துறை தாக்குதல் நடத்தியது. போலீஸ்காரர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் பேண்ட்டும் டி ஷர்ட்டும் போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டிருந்த ஒருவன் மாணவிகளைக் கட்டையால் அடிக்கும் புகைப்படம் நெஞ்சைப் பதற வைத்தது. பேருந்து ஒன்றின்மீது போலீஸ்காரர் ஒருவர் கேனில் எடுத்துச்சென்று எதையோ ஊற்றுகிற வீடியோவைப் பார்க்க முடிந்தது. படுகாயமடைந்த மாணவர்களைக் கைது செய்து அவர்களுக்கு சிகிச்சைகூட அளிக்காமல் போலிஸ் லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதும் மாணவர்கள் அந்த போலிஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டார்கள். அப்போது அங்கே வந்து தனது ஆதரவைத் தெரிவித்த முதல் அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்கள்தான். அவர் அங்கு மாணவர்களுக்குப் பாதுகாப்பாக, ஆதரவாக வந்து நின்றதற்குப் பிறகுதான் தோழர் பிருந்தா காரட் உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள் அங்கு வந்தார்கள். இரவு முழுவதும் இடைவிடாமல் நடந்த போராட்டத்துக்குப் பிறகு சில மாணவர்கள் விடுவிக்கப்பட்டாலும் பலபேர் இன்னும் லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கொஞ்சமும் அஞ்சாமல் இன்றும் மாணவர் போராட்டம் தொடர்கிறது.

இப்போது நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிற ஒன்றாக இருக்கிறது.பாஜக இப்போது மிகப் பெரும் எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெற்றுள்ளது, அதனால் அது அடக்குமுறையை ஏவுகிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலேயே, பாஜகவின் கடந்த ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். இது 2016ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு எழுந்ததால் அது பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள் மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

2015 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணை மூலமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இப்போது கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். 2015ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் சட்டத்தில் முதலில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்குவந்து குடியேறி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு ஆப்கானிஸ்தானும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த மசோதா முதலில் 2016ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு தன்னுடைய அறிக்கையை 2019 ஜனவரி மாதத்தில் அரசிடம் அளித்தது. அதனால் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரஅவசரமாக மீண்டும் மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள். மக்களவையில் அவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால் அங்கே அது நிறைவேற்றப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில் அவர்களுக்குப் போதுமான பலம் இல்லாத காரணத்தால் அங்கு நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அத்துடன் அந்த ஆட்சியும் முடிந்துபோனது. தேர்தல் வந்துவிட்டது. எனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

இப்போது பொதுத் தேர்தல் முடிந்து முன்பைவிட அதிக பலத்தோடு பாஜகவினர் வெற்றிபெற்ற காரணத்தினாலே முதல் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. எனவே இப்போது குளிர்காலக் கூட்டத் தொடரிலே இது அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் அவசரஅவசரமாக அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு இந்த சட்டம் மக்களவையில் நிறைவேறியது. அதற்குப்பிறகு மாநிலங்களவைக்கு அந்த மசோதா சென்றது. மாநிலங்களவையில் இப்போதும் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடையாது. எனவே மாநிலங்களவையில் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்தது தமிழகம்தான்.

ஜனநாயக சக்திகளும் இத்தகைய நம்பிக்கையோடிருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்குத் தமிழகம்தான் காரணமாகி இருக்கிறது. இது வரலாற்றில் துடைக்க முடியாத பழியாக, கறையாகத் தமிழ்நாட்டின் மீது படிந்திருக்கிறது. மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள அதிமுகவினுடைய 11 உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினர்- இந்த 12 உறுப்பினர்கள் வாக்களித்ததன் காரணமாகத்தான் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. இன்று நாடு முழுவதும் கொந்தளிப்பும், போராட்டமும் ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அதிமுகவும் பாமகவும் தான். இதை நாம் பேசாவிட்டாலும், பேசாமல் புறக்கணித்தாலும் இன்று இந்தியா முழுவதும் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஆட்சியிலே இருக்கின்ற பாஜகவினர் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டுக்கு எதிரானவர்கள், அந்நியமானவர்கள் என்பதைப் போல சித்திரிக்க பார்க்கிறார்கள். இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கிற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அரச மதமாக அறிவித்துக் கொண்ட நாடுகள், அவற்றிலே இருக்கிற சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் இங்கே தஞ்சம் புகுந்திருக்கிறார்கள், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறோம் என்று இந்த சட்டத்துக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவிலே இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இருக்கிறார்கள். அரசியல் தஞ்சம் தேடி வந்தவர்கள் ஏராளமாக இங்கே இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் அந்த நாட்டுக் குடி மக்களும் இருக்கிறார்கள், அங்கு புகலிடம் தேடிவந்த அகதிகளும் இருக்கிறார்கள்.அகதிகள் இல்லாத நாடே இந்த உலகத்திலே இல்லை. இந்த நிலை இப்போது ஏற்பட்டதல்ல, 50ஆண்டுகளுக்கு முன்பாகவே 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் புகலிடம் தேடி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் ஓடினார்கள். ஐநா பொது மன்றம் இதற்காக முதலில் 1951 ஆம் ஆண்டில் ரெஃப்யூஜிஸ் கன்வென்ஷன் என்று ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அகதிகளுக்கான உரிமைகளையும் அவர்கள் தஞ்சம் புகும் நாட்டின் கடமைகளையும் அது வரையறுத்தது. தஞ்சம் புக வருபவர்களையும் ஒரு நாடு தனது குடிமக்களைப் போலக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு 1967 ஆம் ஆண்டில் அகதிகளுக்காக ப்ரொட்டகால் ரிலேட்டிங் டு த ஸ்டேட்டஸ் ஆஃப் ரெஃப்யூஜிஸ் என்று இன்னொரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அகதி என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியதோடு அவர்களுக்கான உரிமைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கான பாதுகாப்புகளை எப்படி ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டும் என்று ஐநா அந்த ஒப்பந்தத்தில் நெறிமுறைகளை உருவாக்கியது. இதுவரை அகதிகளுக்காக இப்படி இரண்டு ஒப்பந்தங்கள் ஐநா மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் உலகின் 145 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்த இரண்டு ஒப்பந்தங்களையும் மதிக்காத, அவற்றில் கையெழுத்திடாத நாடு இந்தியா. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஐக்கிய முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனதா ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியானாலும் அகதிகள் பிரச்சினையில் இந்திய அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான். ’அகதிகளுக்கு எந்தப் பாதுகாப்பையும் கொடுக்க மாட்டோம், அவர்களை நாங்கள் சமமாக நடத்த மாட்டோம், அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுதான் அழைப்போம்’ என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. இதில் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமான நிலைப்பாடும் கிடையாது.

அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத அரசு, சர்வதேச அளவில் அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மதிக்காத அரசு திடீரென்று அகதிகள் மீது எங்களுக்குப் பரிவு வந்துவிட்டது என்று சொன்னால், அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுக்கிறோம் என்று சொன்னால் அது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக சட்டத்திருத்தத்தை ஏற்படுத்துகிற நேரத்தில் மனித உரிமை மீது அக்கறை கொண்டவர்கள் என்கிற முறையிலே அது நல்ல நோக்கத்தோடு இருந்தால் நாம் வரவேற்றிருப்போம். அகதிகளுக்கு இந்த நாட்டிலுள்ள குடிமக்களைப்போலவே உரிமைகள் வழங்கப்பட்டால் அது சரியானதுதான் என்று கூறியிருப்போம். ஏனென்றால் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் நீண்டநாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்அகதிகள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தால் இங்கே வந்தவர்கள்; ஆயுதப் போராட்டம் நடந்த நேரத்தில் வந்தவர்கள்;முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது தப்பித்து வந்தவர்கள் – இப்படி இங்கே வந்த ஈழத் தமிழர்கள் முகாம்கள் என்ற பெயரில் எந்தவித வசதியுமில்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே இருக்கிறவர்கள் உள்ளனர்; இங்கே வந்ததற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். நீண்ட நெடுங்காலமாக இங்கே அவர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லி பல்வேறு தீர்மானங்களைத் தமிழ் நாட்டிலே இருக்கிற அரசியல் கட்சிகள் நிறைவேற்றி இருக்கின்றன. ஈழத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ’டெசோ’ அமைப்பின் மாநாட்டில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந்த ஈழத்தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றுதான் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக நான் மக்களவையில் ஒரு கேள்வியை எழுப்பினேன். ”30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கப்படுமா?”என்ற வினாவை நான் எழுப்பினேன். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அதற்கு எழுத்துப்பூர்வமான பதில் எனக்கு மக்களவையில் அளிக்கப்பட்டது. இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்ரும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அந்த சட்டத்தின் பிரிவு 5இன் படி பதிவுசெய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமையைப் பெற முடியும்.,அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் சட்டவிரோதமான குடியேறிகள் இந்த இரண்டு விதங்களிலும் குடியுரிமையைப் பெற முடியாது” என அந்தப் பதிலில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, வங்கதேசத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லோருமே பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்தவர்களில்லை. இந்தியாவுக்குள் வந்துள்ள அகதிகள் எல்லோருமே இந்த நாட்டின் சட்டப்படி ‘சட்டவிரோதக் குடியேறிகள்’தான். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது பொருந்தும். ஈழத் தமிழர்கள் எப்படி இங்கே வந்தார்களோ அப்படித்தான் பாகிஸ்தானிலிருந்தும் மியான்மரிலிருந்தும் இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு என்ன சொல்கிறதென்றால் அப்படி வந்தவர்களில் இந்துக்கள் சீக்கியர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள்,சமணர்கள், பௌத்தர்கள் இவர்களுக்கு மட்டும் தான் நாங்கள் குடியுரிமைக் கொடுப்போம் என்று சொல்கிறது. குடியுரிமைப் பெறுவதிலிருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்கிறார்கள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் ஒருவர் இந்தியராக இருந்தாலும் சரி, அயல்நாட்டவராக இருந்தாலும் சரி அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று தான் கூறுகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 எல்லோரையும் சமத்துவத்தோடு நடத்தவேண்டும் என வலியுறுத்துகிறது.இந்த சட்டம் அந்த சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக இருக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரமான அடிப்படை அம்சங்கள் எவை என்று உச்சநீதிமன்றம் ஆராய்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அது போலவே சமத்துவம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியிருக்கிறது. நீங்கள் எத்தனை சட்டத்திருத்தத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அண்மையில்கூட 126 ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் திருத்த முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருக்கிற சமத்துவம் என்ற கோட்பாட்டை கெடுக்கும் விதமாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான்,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய இந்த மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அங்கே பாதிக்கப்படுவது அங்குள்ள சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள்தான். எனவேதான் நாங்கள் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லையென்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தானில் அகமதியா முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்களாகவே அங்கே கருதுவதில்லை அவர்களும் அந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள் . வங்கதேசத்தில் இறைமறுப்பாளர்கள், பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றி வருபவர்கள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். அத்தகைய கொள்கை கொண்டவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களும் அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அப்படி வந்தவர்களுக்கு இங்கே குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று இந்த அரசாங்கம் மறுக்கிறது. அதுபோலவே இன அடிப்படையில் தமிழர்களை ஒதுக்கி விட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளைத் தான் நாங்கள் இந்த சட்டத்திலே சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னால் இலங்கையும் அண்டை நாடுதான்.அரச மதமாக ஒரு மதத்தை அறிவித்துக்கொண்ட நாடுகளைத்தான் நாங்கள் சேர்த்திருக்கிறோம் என்றால் இலங்கையிலும் அரச மதம் என்று ஒன்று இருக்கிறது. அரச மதமாக பௌத்தம் அங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்பதற்காகத்தான் இலங்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மத அடிப்படையில் முஸ்லிம்களையும் இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டில் அந்நியர்களாக சித்திரித்து இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

இன்று முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நேற்றிரவு கேரளாவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும்கூட பெரிய அளவில் போராட்டம் எழவில்லை. இந்த சட்டத்தின் காரணமாக இங்கிருக்கிற ஈழத் தமிழர்கள் எல்லாம் ஒன்று இந்த நாட்டை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப் படுவார்கள், அங்கே இருக்கிற இனவாத அரசின் முன்னால் பலி ஆடுகளாக கொண்டுபோய் நிறுத்தப்படுவார்கள். அல்லது, அசாமில் எப்படி சட்டவிரோத குடியேறிகளுக்குத் திறந்த வெளி சிறைச்சாலைகளை உருவாக்கியிருக்கிறார்களோ அதேபோல பெரிய முள்வேலி முகாம்களை உருவாக்கி ஈழத்தமிழர்களை அதிலே கொண்டு போய் அடைப்பார்கள்.

அதிமுகவை உருவாக்கிய திரு எம்.ஜி.ஆர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் வழங்கினார் என்பது நாடறிந்த உண்மை. அவருக்கு அடுத்து அந்தக் கட்சியை வழிநடத்திய செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். அதற்கான தீர்மானங்களையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.திரு எம்ஜிஆரை, ஜெயலலிதா அம்மையாரைத் தமது முன்னோடிகளாக சொல்லிக்கொண்டிருக்கிற இன்றைய ஆட்சியாளர்கள் தமது கட்சியை உருவாக்கிய தலைவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்!

பாட்டாளி மக்கள் கட்சி 1992 இல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்திய காரணத்தால் அந்த கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள். அப்போது அந்த கட்சிக்கு ஆதரவாக நாமெல்லாம் குரல் கொடுத்தோம். ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் உண்மையான ஆதரவாளர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர். அவர்கள் இன்று இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக நாங்கள் வாக்களித்தோம் என்று இப்போது அதற்குக் காரணம் சொல்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக ஒரு இனத்தை அழிப்பதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று சொன்னால் உங்களுடைய அரசியல் எவ்வளவு துரோகத்தனமானது என்பதை இன்று இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளின் துரோகத்தால் இன்றைக்கு நாடே தீப்பற்றி எரிகிறது. இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தோடு இது முடிந்து விடப் போவதில்லை,

இதற்கு அடுத்ததாக ‘என்.ஆர்.சி (NRC) முறையை இந்தியா முழுவதும் கொண்டு வரப் போகிறோம்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.அப்படி வந்தால் நாம் ஒவ்வொருவருமே நம்முடைய பாட்டன் முப்பாட்டன் கால ஆவணங்களைக் காட்டித்தான் நாங்களெல்லாம் பூர்வமாக இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் நம்மையெல்லாம் இந்த நாட்டுக் குடிமக்கள் இல்லை என்று சொல்லி நம்முடைய குடியுரிமையைப் பறித்து விடுவார்கள். எனவே இந்த ஆபத்து முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று நாம் இருந்துவிடக்கூடாது.நம் எல்லோருக்குமே ஆபத்து வரப்போகிறது. ஏற்கனவே தமிழினத்தைக் குறி வைத்து விட்டார்கள். இங்கே இருக்கிற பாஜக எதிர்ப்பாளர்களை, சங்கப் பரிவார அரசியலை எதிர்ப்பவர்களைக் குறிவைத்து அவர்களுடைய குடியுரிமைகளையெல்லாம் பறிப்பதற்கு சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பினார்: “நமது பிரதமர் பட்டப்படிப்பு படித்திருப்பதாகத் தேர்தலின்போது தாக்கல் செய்த தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கான சான்றுகள் எங்கே என்று கேட்டால் இதுவரை அவரால் அளிக்க முடியவில்லை. பிரதமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்று ஆர்.டி.ஐ மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் பதில் அளிக்க முடியவில்லை. பிரதமருடைய கல்விச் சான்றிதழையே தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்முடைய பாட்டன் முப்பாட்டனுடைய ஆவணங்களைக் கொண்டு வரச்சொன்னால் எப்படி நாம் கொண்டு வர முடியும்?” என்று அவர் கேட்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல இப்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன்னும் சிலர்மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இன்றைய ஆட்சியாளர்கள் எதையும் செய்யத் துணிந்துவிட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். நன்றி வணக்கம்.

*

Thanks to : Ravikumar

ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு முகம் – தாஜ்

ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு முகம் : இரண்டு இதழ்களின் தகவல்களும் + நானும்

 – தாஜ்

ஒன்றும் சொல்வதற்கில்லை.

தேடப்பட்டு அழிக்கப்படும்
நக்சலைட்டுகளைவிட
மதவாதிகளின் அட்டூழியம்
இந்நாட்டில் அதிகம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் சுதந்திரம் தொட்டு
இஸ்லாமியத் தீவிரவாதிகள்
இந்த மண்ணில்…
உண்டாக / பெருக
நிர்பந்திக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இஸ்லாமியனது அட்டூழியம்
வெளிப்படையான அராஜகமாக ஆகிவிடுகிறதென்றால்,
அந்த முனைக்கு அவனை கொண்டு நிறுத்தும்
அரசியல் முனைப்புகளும்
மனிதாபிமானமற்ற சூழ்ச்சிகளும்
இன்னும் பலப்பல மறைமுக வஞ்சிப்புகளும்
அராஜகத்தின் அராஜகமாகிவிடுகிறது.
 
நம் மூத்த அரசியல்வாதிகளால்
அலங்கோல சட்டவரைவில்
காஷ்மீர் சிக்கவைக்கப்பட்டதும்.
பாகிஸ்தான்/ பங்களாதேஷ்
தனித்தனி நாடாக்கப்பட்டதும்
இந்திய எல்லைக்குள்ளே வாழ்கிற
இஸ்லாமியர்களின் தவறாக இருக்க முடியாது.
அதையே காரணம் காட்டி
இந்த மண்ணின் இஸ்லாமியர்களின் நிம்மதியை
நாளும் கேள்விக் குறியாக்குவது எந்த வகையில் சரி?
 
பாகிஸ்தானை இந்தியா அழித்துவிட முடியும்
சக்தியும் திறனும் இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு
கொண்டுவந்துவிட முடியும்.
அதற்கான மேதமைக் கொண்டவர்கள்
நம் மண்ணில் உண்டு.

பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டாம் என்றோ
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டாம் என்றோ
இந்திய மண்ணில் வாழும்
எந்தவொரு இஸ்லாமியனும் சொல்ல மாட்டான்.
சொன்னதுமில்லை/ சொல்லவும் முடியாது.
(அந்த அதிகாரமெல்லாம் அமெரிக்காவுக்குத்தான்)
 
அதைவிட்டுவிட்டு
இந்தியச் சுதந்திரம்தொட்டு
திட்டமிட்டு
இங்கே ஓர் இன அழிப்பை….
சொன்னால் கேவலம்,
சிறுபான்மையினரை
பெறும்பான்மையின் சிறுமதியாளர்கள்
அந்த அழிப்பை
விதவிதமான கோணங்களில்
‘ஜாம்ஜாம்’ என்று
நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

வறியவனை வலியவன்
பந்தாடுவது ஒன்றும் புதிதில்லை.
காலம் காலமாய்
உலகப் பக்கங்களில் அறியப்படும்
செய்திதான் அது.

அகண்ட பாரதமும்
ஆரிய வர்த்தனமும்தான்
இந்த மண்ணின் மேட்டுக் குடி
சூழ்ச்சியாளர்களின் கனவென்றால்…
தடையில்லை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
சட்டங்கள் சங்கடப்படுத்தினால்
அவைகளை உடைத்தெறியட்டும்.
அல்லது
ஒற்றைக்காலில் நின்று/ யாகம் வளர்த்து
நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
அதற்கு…
இஸ்லாமியனை ஏன் காவு வாங்கவேண்டும்?
உங்களை தடுக்க முடியுமா?
அதற்கான சக்திதான் அவனிடம் உண்டா?

*

ஒரு கேள்வி…
சாணக்கிய வழிவந்த
இன்றைய ஆரிய வர்த்தன
தளகர்த்தர்களிடம்
ஒரே ஒரு கேள்வி.
உங்களது வியூகத்தின்படிக்கு
இந்த மண்ணில்
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள்
இஸ்லாமியனும்/ கிறிஸ்துவனும்
இல்லாமல் போய்விடலாம்.
அடுத்து…
இன்றைக்கு நீங்கள்
‘பிராக்கெட்’டுக்குள் வைத்திருக்கும்
புத்திஸ்ட்டுக்களையும்/ஜைனர்களையும்/சீக்கியர்களையும்
முடித்துவிடுவீர்கள்.
அப்புறம்??????
கற்ற இன அழிப்பு
ரத்தத்தில் ஊறி அடுத்த காவு கேட்குமே…
அப்போது?
சொல்லுங்கள் ராஜாக்களே
அப்போது?????????
 
***

எச்சரிக்கை
——————-
‘முஸ்லிம்களைத் தாக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்; அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸினர் சிலருக்கு தொடர்பு உண்டு’ என்று காட்டுகிற வகையில் சில ரகசிய வீடியோக்களை, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ டெலிவிஷன் சேனல் ஒளிப்பரப்பியது.

இதையடுத்து அந்த சேனலின் அலுவலகம் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள்  ஆர்.எஸ்.எஸ்.ஸை  ஆதரிக்கிற ‘ப்ளாகட்’களை ஏந்தியவாறு, அந்த சேனலின் அலுவலகத்தில் புகுந்து, எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, அராஜகம் புரிந்திருக்கின்றனர்.

‘ஹெட்லைன்ஸ் டுடே’ ஒளிபரப்பியதும், சுட்டிக் காட்டியதும், உண்மை விவரங்களா  அல்லது இவற்றில் எல்லாம் ஏதாவது தவறுகள் இருக்கின்றனவா என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும். அந்த சேனல் ஒளி பரப்பியது உண்மையே இல்லை என்று வைத்துக்கொண்டால் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் செய்தது கண்டனத்திற்குரியதுதான். பொய்ச்செய்தி, அவதூறு, ஆகியவற்றை எதிர்க்க சட்ட ரீதியான வழிமுறைகள் உண்டு; அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, அராஜகத்தில் இறங்கிய கூட்டம், செய்தது குற்றம், அநாகரீகம்.

நன்றி : துக்ளக் , எச்சரிக்கைப் பகுதி/ ஜூலை,28.2010

***

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ். – இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்
(நன்றி : புதிய ஜனநாயகம் / தலையங்கம், ஆகஸ்ட்,2010)

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என காட்டிக்கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எனினும், ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்ற தனியார் ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டு வெடிப்புகள் தொடர்பாக  போலிசாரிடம் உள்ள சாட்சியங்களை தெஹெல்கா இதழ் (31 ஜுலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும்  ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும்  நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.

‘ஹெட்லைன்ஸ் டுடே’ ஒளிப்பரப்பிய ஒளி – ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார்,  இந்திய இந்திய ராணுவத்தின் லெப்டினெட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே  மாலேகன் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.- வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி  விவாதிக்கின்றனர். மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி.சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத்தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய  இன்னொரு ஒலிப்பேழையில்,  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில்  முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் தேசியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.

துணை அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும், மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய ‘அபிநவ் பாரத்’ அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். -இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு  இடையில்  நெருக்க மான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை அளித்திருப்பதையும் தெஹெல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவை ஒரு புறமிருக்க, இந்தியா பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜெனதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்பு கூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டுவெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

                                                                               
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிக்கு உத்திரப் பிரதேச  மாநிலத்திலுள்ள  கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக்வார் ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங்தள் சட்ட விரோதமாக குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும், நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின் போதே அம்பலமாகியிருக்கிறது. 

மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாய்வில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் பங்கு கொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங்தள்,  விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும்  ஆர்.எஸ்.எஸ். நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியமாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.

எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைந்த முறையில் விசாரணை நடத்த  மறுக்கிறார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்தபோழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத்தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம், இக்குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில்கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர். எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ ‘சிமி’ அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.

சம்ஜெளதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுகிறது. அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விபரங்கள் புலன்விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-ஐத் தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகாரவர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னால் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப்.

இந்திய அரசு இந்துமதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை. இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நடத்திவரும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.

***

எழுத்து/வடிவம்/தட்டச்சு :  தாஜ் | satajdeen@gmail.com
15th Aug, 2010

***

நன்றி : தாஜ், துக்ளக், புதிய ஜனநாயகம்

‘புதிய’ பார்வை : கமல்ஹாசன் Vs இராம கோபாலன்

‘புதிய பார்வை’ இதழில் வெளியான கமல்ஹாசனின் பேட்டியை பிறகு பதிவேன். இப்போது அந்தப் பேட்டி சம்பந்தமாக இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம கோபாலனின் ‘அதிரடி’க் கருத்துக்கள். புதியபார்வை / நவம்பர் 16-30 , 2009ல் வெளியானது. மாற்றுக் கருத்துக்களை தனது திறந்த வெளி மேடையில் இடம் பெற முடிவு செய்திருக்கிறதாம் ‘புதிய பார்வை’. ‘கூர்மையான இடங்களிலே உட்கார்ந்துகொண்டு பஜனை பாட முடியாது, சமன்படுத்துங்கள்’ என்ற வாஜ்பாய்க்கும் விரைவில் இடம் கொடுக்கட்டும். சரி, இராம கோபாலனை சந்தித்தவர் பெயர் : வசீரன். முஸ்லிம் நிருபரா? தெரியவில்லை. ‘ஆயிரம் வாலா சரவெடி போன்று வெடித்துத் தள்ளிவிட்டார் மனுஷன்!’ என்று வியக்கிறார். ‘கலைஞரைப் போன்றே கமல்ஹாசனும் ஒரு இந்து விரோதி’ என்பது ‘புதிய பார்வை’ தந்த தலைப்பு. அப்படியா உலக நாயகா?

**

புதிய பார்வை : கமல் படங்கள், நடிப்புப் பற்றி உங்கள் கருத்து?

இராம கோபாலன் : கமல்ஹாசன் அவருடைய துறையில் அவர் நன்றாகவே விளங்குகிறார். ஆனால் அவரை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிற ஜால்ரா கும்பலின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. அதை அவரும் ரசிப்பதுதான் வேடிக்கை.

சினிமா பார்ப்பீர்களா? எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?

எப்பொழுதாவது பார்ப்பேன். கடைசியாக பார்த்தது கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படம். ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன் போன்றோர் நடித்த, தேசபக்தியை தூக்கலாக காண்பிக்கிற படங்கள், ராணுவம், காவல்துறையை உயர்வாக போற்றுகின்ற படங்களை நேரம் கிடைத்தால் பார்ப்பேன். எந்நேரமும் வாய்ப்பும் கிடைப்பது மிகவும் அரிது.

முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தினார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

கலப்படமில்லாத கம்யூனிஸ்ட் பொய். கோவிலை உடைத்து, மக்களை மதம் மாற்றி, பசுக்களை வெட்டி, பெண்களை தூக்கிக் கொண்டு போய் கற்பழித்து, மதம் மாற மறுத்தவர்களை துண்டு துண்டாக வெட்டி நம் நாட்டை வளப்படுத்தினார்கள் மொகலாய மன்னர்கள். யதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜூம்தார், கே.எம்.முன்சி போன்றவர்கள் எழுதிய புத்தகங்களில் இஸ்லாமியர்களின் கொடூர ஆட்சி அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் உடைக்கப்பட்ட கோவில்கள், இவர்கள் செய்த கொடுமைகளை மேலும் தெரிந்துகொள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ – கே. கே. பிள்ளை என்ற புத்தகமும், எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் நூல்களுமே சான்று. மேலும் தகவல்களுக்கு ‘சௌத் இந்தியா அண்ட் இட்ஸ் முஸ்லிம் இன்வேடர்ஸ்’ என்ற புத்தகத்திலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கோவில் சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை எல்லாம் யாருடைய கை வரிசை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.

மதுரை மீனாட்சிய்யம்மன் கோவில் மாலிக்கபூர் படையெடுப்பின்போது உடைக்கப்பட்டதே. ஸ்ரீரங்கம் கோவில் 42 ஆண்டுகள் மூடிக் கிடந்ததே. இவை எல்லாம் கமலுக்குத் தெரியாதா?

கர்நாடகத்தில் ஹளபேடு, கோவாவில் உள்ள அபூர்வ சிற்பங்களை நாசப்படுத்தியது யார்? என்பதை கமல் மட்டும்தான் அறியமாட்டார்.

மேற்சொன்ன விசயங்களில் சிலதான் கமலின் பார்வையில் முகலாய மன்னர்கள் நம் நாட்டை வளப்படுத்தியதோ!

‘இராமர் பிறந்தது ஆப்கானிஸ்தானில்தான்.. இராமருக்கு ஆபாகானிஸ்தானில் கோவில் கட்ட வேண்டும் என்ற முதல்வர் கலைஞரின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும்’ என்று கமல் சொல்லியிருக்கிறாரே?

சுத்த பேத்தல். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார். நடக்காத சம்பவத்தை நடந்ததாகக் கூறுவதைக் கேட்டு பைத்தியக்காரன் கூட வாய்விட்டுச் சிரித்து விடுவான்.

ராமாயணத்துக்கும் காந்தாரிக்கும் என்ன சம்பந்தம்? காந்தாரி (மஹாபாரதம்) பிறந்ததுதான் காந்தாரத்தில். ஸ்ரீராமர் பிறப்புக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோசல நாட்டின் தலைநகரம் தான் அயோத்தி. இங்குதான் ஸ்ரீமார் பிறந்தார். பெண்கள் பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு போவது என்பது ராஜஸ்தானில் பழக்கமே இல்லை.

கமலுக்கு வரலாறும் தெரியாது. புவியியலும் தெரியாது. நல்ல குரு, நல்ல வழிகாட்டி..

கமல்ஹாசன் இம்சை அரசன் ’25’ஆம் புலிகேசியாக மாறி வரலாற்றை திரித்துக்கூற முயற்சிக்கிறார். அது எக்காலத்திலும் முடியாது.

முதல்வர் கலைஞருக்கு எப்போதுமே குழப்பம்தான். கமல் கலைஞர் கருத்தை ஆமோதிக்கிறார்!

பயங்கரவாத சம்பவங்களை மதத்தோடு சம்பந்தப்படுத்துவது தவறு என்ற கமலின் கருத்துக்கு உங்கள் பதில்?

எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்களாக இருக்கிறார்கள் என்பதை நடுநிலைவாதிகள் எல்லோரும் உணர்ந்து கொள்கிறார்கள். 18/09/2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பொருளாதார நிபுணரும் , பிரபல எழுத்தாளருமான எஸ். குருமூர்த்தி ‘மதநூலும் பயங்கரவாதமும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் பயங்கரவாதிகள் தங்களுடைய செயல்களுக்கு அல்லாவின் கட்டளைதான் காரணம் என்று குறிப்பிட்டிருப்பதை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவில்லை.

டெல்லி, அயோத்யா, மதுரை, மும்பை, அகமதாபாத்..போன்ற பல இடங்களில் குண்டு வைத்தவர்கள் ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் முன் அறிவிப்பு செய்துள்ளார்கள். குரானின் 9 : 123, 9:14 வசனங்கள் ஆகியவற்றை ஆதாரமாக காட்டியிருப்பதை இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட இதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் முஸ்லீம்கள் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல, அதே நேரத்தில் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்பதும் என் நோக்கம் அல்ல என்று கமல் கூறியுள்ளாரே..?

கமல் கூறுவது வேறு. ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவதுதான் அவருடைய உள்நோக்கம் என்பது நடுநிலையாளர்களுக்கு புரியும்.

அவரே ‘ஹே ராம்’ இந்து தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று கூறியிருக்கிறாரே! எனவே அவரும் தி.மு.க தலைவரை போல இந்து விரோதிதான்.

‘ஹே ராம்’ திரைப்படம் இந்துத் தீவிரவாதத்தை எடுத்துக்காட்டிய படம் என்று இப்போது கமல் கூறியிருப்பது ஏன்?

ஹே ராம்! அவருக்கே வெளிச்சம்.

மத வெறியின் காரணமாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணம். இதற்காக வருத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளாரே?

சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியும், வரலாறு தெரியாது. பாபர் அயோத்யா, மதுரா, காசி ஆகிய கோவில்களைத் தவிர ஏறத்தாழ 3000 கோவில்களை இடித்தார்.

அந்த இடங்களில் எல்லாம் மசூதிகளைக் கட்டினார். இன்றைக்கும் காசிக்கும், மதுராவிற்கும் போய் வருகிறவர்கள் இடிபாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களையும் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அயோத்தியில் பாபர் , ராமர்கோவிலை உடைத்து ஒரு கட்டிடம் கட்டினான். அது மசூதியே அல்ல. மசூதி தூண்களில் தெய்வ சிற்பம் இருக்காது.

முகம், , கை கழுவ ஒரு குளம் இருக்கும். வலம் வருவதற்கான ஏற்பாடு இருக்கது.

நீதிமன்ற உத்தரவுப்படி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட போது விக்ரமாதித்யன் கட்டிய கோவிலின் மண்டபங்கள் காணக் கிடைத்தன.

ராமர்கோவிலை காப்பாற்ற 43 போர்கள் நடந்தன, ஏறத்தாழ 3 லட்சம் பேர் பலியானார்கள். இதில் ராஜஸ்தானை சேர்ந்த 3 ஆயிரம் பெண்களும் அடங்குவர்.

இந்த ஆதாரங்கள் எல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் இதனை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாவம், ப. சிதம்பரத்திற்கு அரசியல் பண்ணவே நேரம் சரியாக இருக்கிறது. வரலாற்றை எங்கு படிக்கப் போகிறார்?

எனவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பசை இல்லாத வாதங்களை வெளியிட்டு யாரையோ திருப்திப்படுத்துகிறார்.

மத வெறியின் காரணமாகவே ராமர்கோவில் இடிக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் மன்னிப்பு கோரவேண்டும் என்று இன்று கேட்கவில்லை. நாடு முழுவதும் அமைதியாக இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பரித்து ராமர் கோவிலை நினைவுபடுத்தி வருகிறார்கள். நன்றி. டிசம்பர் 6ஐ மறக்க வேண்டாம்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முதல்வர் கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உரிய காலத்தில் உரிய நடவடிக்கையை எடுப்போம்.

பகவத் கீதையுடன் கோபாலபுரத்துக்கு திடீர்ப் பிரவேசம், கலைஞருடன் அதிரடி சந்திப்பு, திரும்பி வரும்போது உங்கள் கையில் கலைஞர் அளித்த கி. வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ என்ற புத்தகம்… மறக்க முடியாத சம்பவம் இது. நம்முடைய கேள்வி, அந்த கீதையின் மறுபக்கம் நூலை நீங்கள் படித்துவிட்டீர்களா? பகிர்ந்து கொள்ள அதில் விஷயங்கள் எதுவும் இருக்கிறதா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகும் இன்றும் கூட மக்கள் பக்தி சிரத்தையோடு பகவத்கீதையை படிக்கிறார்கள். விளக்கவுரையும் கேட்கிறார்கள். கி. வீரமணி புத்தகத்தை கலைஞராவது படித்திருப்பார் என்பது கூட சந்தேகம்தான்.

தினமும் ஐந்துவேளை தொழுகை, இது இஸ்லாமியர்களின் வழக்கம். ஞாயிறு அன்று தவறாமல் சர்ச்சுக்கு விசிட், பிரேயர்..இது கிறித்துவர்கள். ஆனால் இந்துக்கள் இப்படி இல்லையே? அவர்களிடம் பக்தி குறைந்து விட்டதா?

குறிப்பிட்ட நேரத்தில்தான் குறிப்பிட்ட முறையில்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இந்து தர்மம் கட்டாயப்படுத்தவில்லை.

வழிபாட்டு விசயத்தில் பூரண சுதந்திரம் அளித்திருப்பது இந்து மதத்தில் மட்டும்தான்.

திருவண்ணாமலை கிரிவலத்தில் கூடுகிற கூட்டம்; புதிய புதிய கோவில் கும்பாபிஷேகத்தில் கூடுகிற கூட்டம், பிரதோஷ வேளையில் சிவன் கோவில்களில் கூடுகிற கூட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் கூடுகிற கூட்டம், சபரிமலை, பழனிமலை, திருப்பதிமலை போன்ற புனிதத் தலங்களில் கூடுகிற கூட்டம்… பக்தி அதிகரித்துள்ளது என்பதை காட்டவில்லையா?

***

நன்றி : புதிய பார்வை, வசீரன், தாஜ்

நன்மையின்பால் விழிப்புள்ளவர்கள் அடுத்த மதத்தில் தலையிடுவதில்லை – காந்திஜி

gujarat_victim

‘கோத்ரா நிகழ்ந்ததால்தான் குஜராத் நிகழ்ந்தது’ என்று கோவாவில் அன்று கூறியவர்களுக்கு இன்று ஒரு நினைவூட்டல் (‘ஒரு இயற்கையான எதிர்வினை’) :

“மனிதர்களின் எண்ணிக்கை அளவுக்கு மதங்கள் இருக்கின்றன. ஆனால் தேசத்தின் நன்மையின்பால் விழிப்புள்ளவர்கள் அடுத்த மதத்தில் தலையிடுவதில்லை. இந்தியா ஹிந்துக்களால் மட்டுதான் ஆளப்படவேண்டும் என்று ஹிந்துக்கள் விரும்பினால், அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஹிந்துக்கள், முஹம்மதியர்கள், ஃபார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து இந்நாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களெல்லோரும் இந்நாட்டின் குடிமக்கள். அவர்களது நலன்களுக்காகவே அவர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியிருக்கிறது. ஒரே தேசத்தவரும், ஒரே கருத்தை சொல்கிற மதங்களும் இந்த உலகில் எங்கும் இல்லை, இந்தியாவைத் தவிர” – 1969ல் நடந்த அஹமதாபாத் கலவரம் குறித்த நீதிமன்றக் கமிஷன் அறிக்கையில் ஜக்மோகன் ரெட்டியும், நுஸ்ஸர்வான் ஜி வகிலும்  மஹாத்மா காந்தி சொன்னதாகச் சொன்னது.

குஜராத் இனப்படுகொலை 2002 – மனித இனத்திற்கெதிரான குற்றம் (Crime Against Humanity) நூலிலிலிருந்து… (2002 குஜராத் இனப்படுகொலை பற்றிய விசாரணை அறிக்கை – பாக்ம் 1. வெளியீடு : இலக்கியச் சோலை , 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை – 600 003)

நன்றி : M.S. அப்துல் ஹமீது / இலக்கியச் சோலை, டீஸ்டா ஸெடல்வாட், அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் – குஜராத் 2002 (Concenned Citizens Tribunal – Gujarat 2002),

**

சுட்டிகள் :

The Truth: Gujarat 2002 – Tehelka report
The Truth: Gujarat 2002: Babu Bajrangi (YouTube)