தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எழுதிய ’திருவாசகத் தேன்’ எனும் நூலில் உள்ள ’அறியாது கெட்டேன்!’ என்ற கட்டுரையை இங்கே பகிர்கிறேன். ’திருவாசகத் தேன்’ என்றே ஒரு தனிக்கட்டுரை அந்த நூலில் உண்டு. அது பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்! ஆமாம், இன்ஷா அல்லாஹ்தான். ’ஒளி, ஞானத்தின் சின்னம்! முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் ‘ஒளியை என் உடலில் நிரப்பு’ என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார். இத்தகு ஒளியால் உடலின் எடை குறைகிறது. உடல் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.’ என்று ’புறம் புறம் திரிந்த செல்வம்’ கட்டுரையில் எழுதும் அடிகளார் கட்டுரை பற்றி அப்படித்தான் சொல்ல வேண்டும் – இந்தப் புனித ரமலான் மாதத்தில்.
நன்றி : தமிழிணையம் – மின்னூலகம் & வானதி பதிப்பகம்
*
அறியாது கெட்டேன்!
நோய்!! புதிய புதிய நோய்கள் ! உடல் நோய்! ஆன்மாவின் நோய்! ஏன் நோய்? எதனால் நோய்? காரணங்களைத் தேடின் மூச்சு வாங்கும்! – ஓர் உண்மை புலனாகிறது! நோய்க்குரிய காரணங்களில் பழையன மட்டுமல்ல! புதியனவும் உண்டு! பழைய காலத்தில் அழுக்காறு என்ற நோய்க்குக் காரணம் உடைமைச் சார்புடையதாகவே அமைந்திருந்தது. இன்றோ புகழும் காரணமாக அமைந்திருக்கிறது! நோய் இயற்கையன்று! நோய்க்குப் பழ வினைகள் காரணமல்ல. நோய் செயற்கை, நோய் வரவேற்றுக்கொள்வது! நோய்க்கும் இவன் புதியவனே! சுவை நாடி உண்டமை, உழைப்பில்லாத வாழ்க்கை, தூய்மையற்ற உடல், தூய்மையற்ற மனம், கெட்டபுத்தி , அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஆன்மா இவையெல்லாம் நோய்க்குக் காரணங்கள்!
உலகம் முன்னேறுவது, நொடிகள் தோறும் முன்னேறுவது. ஒரு நொடிப் பொழுது அயர்ந்தாலும் உலகம் நெடுந்தொலைவு போய்விடும் ! நாம் பின்தங்கி விடக்கூடாது! துறைதோறும் முன்னேற்ற நிலை பராமரிக்கப் பெறுதல் வேண்டும். அறிவில் பிற்பட்டிருந்தால் – அறிவிருந்தாலும் உலக அறிவை நோக்க அறியாமையாகவே கொள்ளப்பெறும்! அறிவு வளர்வது; இடையீடின்றித் தொடர்ந்து வளர்வது! ‘அறிதோறும் அறியாமை’ என்று திருக்குறள் பேசும்! இன்றைய அறிவே அறிவு; வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் அறிவு; உழைப்பு. உழைப்புத் திறன் வளரும் இயல்பினது. உடலியக்கத்திற்குரிய உணவு, உழைப்பின் வழியே தான் படைக்கப் படுகிறது! உழைத்து உண்பது அறம்! உழைத்து உண்பது ஒழுக்கம்! அறிவின் ஆக்கத்தில் பின்னடைவு; உழைப்பில் பின்னடைவு! இங்ஙனம் துறைதோறும் பின்னடைவுகள் தோன்றின் நோய்க்கு ஆளாவது இயற்கை !
நோய்வாய்ப்பட்ட பிறகு நெஞ்சில் கவலை பிறக்கும்; துன்பமும் துயரமும் வருத்தும்; அமைதி விடைபெறும்; இன்பம் விலைப்பொருளாகி விடும்; வாழ்க்கை கசக்கும். ஆதலின் பிற்படா நிலையில் நொடிகள் தோறும் துறை தோறும் முன்னேற்றத் துடிப்புடன் உழைக்க வேண்டும். பெற்ற முன்னேற்றத்தைப் பராமரிக்க வேண்டும். மாணிக்கவாசகர் நோய்க்கு எளிதில் இரையாகக்கூடிய அமைச்சுப் பதவியில் இருந்தார், அமைச்சுப் பதவி “கடினமான பதவி. ஆன்ம நலன்களைக் கெடுக்கும். அதிகாரம் அமைச்சுப் பதவிக்கு உண்டு! இருக்கும் இடம் உயரமானது! பெரிய இடத்தில் சின்னப் புத்தி தலைகாட்டும். ஆனால், உடலும் ஆன்மாவும் எளிதில் நோய்வாய்ப்படும் நிலை, ஆன்ம நலன்களில் பிற்பட்ட நிலை!
பிற்பட்ட நிலை மாற்றப் படுதல் வேண்டும். முன்னேற்றம் தேவை. முன்னேற்றம் கருதிய வாழ்க்கைக்கு முதலில் உரிய சுற்றம் அமைய வேண்டும்! நல்ல பழக்கங்கள் வேண்டும்; வழக்கங்கள் வேண்டும். ஒருவருக்குக் கெட்ட பழக்கங்கள் எளிதில் விலை இல்லாமலே கூடக் கடை வீதியில் கிடைக்கும்! ஆனால் நல்ல பழக்கங்கள் எளிதில் கிடைக்கா. வழக்கங்கள் சொல்லவே வேண்டாம்! நல்ல பழக்கங்கள்தான் நல்ல வழக்கங்களாக மாறுகின்றன, ஆன்மா சிறந்த நலன்களைப் பெற்று முன்னேற வேண்டுமாயின் நல்லோர் கூட்டு வேண்டும். நல்லோர் இணக்கம் வேண்டும். நல்லோருடன் பழக வேண்டும். அங்ஙனம் தேர்ந்தெடுத்துப் பழகும் நல்லோரும்கூட வழி வழி நல்ல மரபினராயிருந்தால் காலம், தேசம், வர்த்தமானம் அவர்களை மாற்றா. அவர்களே பழ அடியார்கள்; என்றும் நல்லவர்கள்! தற்காலிகமாக இன்று பிழைப்புக் கருதி அடியார்களானவர்கள் பிச்சைக்காரர்கள்! இவர்களில் நடிப்பவர்களும் இருக்கலாம். பழைய அடியாரொடுப் பழுத்த மனத்தடி யாரொடும் கூட்டு இருந்தால் அவர்கள் நம்மை வளர்ப்பார்கள். நம்மைப் பாதுகாப்பார்கள். காலைக் கதிரவன் ஒளியில் தோயும் இமயம் பொன்னொளி பெற்று விளங்கும். அப்போது அந்த இமயத்தைச் சார்ந்த காக்கையும் பொன்னொளி பெற்று விளங்கும். இமயம் சார்ந்த காக்கை பொன்னிறம் பெறும் என்பார் விபுலானந்தர். பழைய அடியாரொடும் கூடி வாழாமல் அரசன், அமைச்சர்கள் படைத் தளபதிகள் ஆகியோருடன் கூடி வாழ்ந்து கழிந்த காலத்தை மாணிக்கவாசகர் எண்ணி வருந்துகிறார்: பழைய அடியாருடன் கூடி வாழ்ந்தால் நோய் வராது. பிற்படுத்தலுக்குரிய சூழலும் தோன்றாது. ஆதலால், மாணிக்கவாசகர் பழைய அடியாருடன் கூடி வாழ்தலை விரும்புகின்றார்..
பழைய அடியாருடன் கூடி வாழ்தல் எப்போது கிடைக்கும்? பழைய அடியார்கள் பழுத்த அடியார்கள்! புளியம்பழம் போல் வாழ்கிறவர்கள்! அவர்கள் கூட்டத்தில் சேர்வது கடினம்! அவர்களுடன் கூடி வாழ்வது கடினம்! நெய், வேப்பெண்ணெய் என்று வேறு பாடு கருதாது சுவையுணர்வு கெட்டு உண்ணும் பழக்கம் வேண்டும். நான் எனது’ என்ற செருக்கறுதல் வேண்டும். காய் கதிர்ச்செல்களின் கதிரொளிக் கற்றைகளும் மழை வழங்கும் புனலும் மரத்தின் வேர்களும் தாழ்ந்து தாழ்ந்து செல்லுதல் போலத் தாழ்வெனும் தன்மையுடன் வாழ்தல் வேண்டும். இறைவனிடம் பிறந்து மொழி பயின்ற நாள் தொடங்கி இடையீடின்றித் தொடர்ந்து பத்திமை செலுத்த வேண்டும். பெருமிதமும் வீரமும் செறிந்த அடிமைப் பண்பு வேண்டும்! அன்பிலும் அன்பின் திட்பத்திலும் அன்பின் ஆற்றலிலும் நம்பிக்கை வேண்டும். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று வாழ்தல் வேண்டும். அச்சம் அன்புக்குப் பகை ; உறவுக்கு எதிரி. அச்சம் பத்திமைக்கு எதிரிடையானது. அச்சம் தவிர்த்தவர்களே அடியார்கள்! பழ அடியார்கள்! மாணிக்கவாசகருக்கு அச்சமில்லை ! ”எங்கு எழில் என் ஞாயிறு” என்றார். ஞாயிறு திரியும் திசை மாறினால் துன்பம் வரும். அத்துன்பமும் தன்னைத் தீண்டாது! இது மாணிக்கவாசகரின் திட்டம்! உறுதி! மாணிக்கவாசகர் அச்சமின்றி வாழ்ந்தார். மாணிக்கவாசகர் ” அச்சம் தவிர்த் தாண்ட” சேவனாகிய திருப்பெருந்துறையுறை சிவனுக்கு உடைமையானார். உலகியல் வாழ்க்கையில் உடைமை மிகுதியும் பேணப்படுகிறது. உடைமைக்கு உள்ள மதிப்பு மனிதனுக்குக்கூட இல்லை. காரணம் உடைமை வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. அருளியல் வாழ்க்கை யிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் – உடைமையாதலுக்கு. மதிப்பு உண்டு. பங்கமில்லாத உரிமைக்கு உடைமையாதல் அவசியம். அதாவது நம்முடைய தோழனுக்கு நாம் உடைமையாதல், நட்பியல் வாழ்க்கையில் உடைமையான வழி உறவுகள் வளரும்; உரிமைகள் அமையும். நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்; இருபாலும் கிடைக்கும்… ஆன்மிக வாழ்க்கையில் இறைவனுக்கு நாம் உடைமையாகிவிட்டால் அவன் நம்மை வளர்ப்பான்; காப்பான்! நாம் கவலையின்றி வாழலாம்! நாம் உலக உடைமைகளுக்கும் உரிமைக்காரராக விளங்கும் வரையில் இறைவனுக்கு உடைமைக்காரராதல் அரிது. கடவுளுக்கும் சைத்தானுக்கும் ஒரே நேரத்தில் தொண்டு செய்ய முடியாது. இரண்டு எஜமானருக்கு ஒரே நேரத்தில் சேவை செய்தல் ஒல்லுமோ? மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தவரை அவர், அரசருக்கு உடைமையாக இருந்தார். அமைச்சுப் பதவியை உடைமையாகப் பெற்றிருந்தார். அதுவும்கூட உடைமையாக அல்ல. உடைமையாகப் பெற்றிருந்தால் குதிரைகள் வாங்காததை, திருக் கோயில் கட்டியதைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டிருப்பான். வரலாறே திசை திரும்பியிருக்கும். பாண்டியனுக்கு மாணிக்கவாசகர் உடைமைக்காரராகவும் இல்லை. அடிமைக்காரராகவே இருந்தார்.
மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையை அடைகின்றார். அறிவு நிலை மாறுகிறது; உணர்வு நிலை மாறுகிறது. திருப்பெருந்துறையுறை சிவனுக்குத் தாம் உடைமைப் பொருள் என்பதை உணர்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமையாய் – அடிமையாய் வாழ விரும்புகின்றார். திருப்பெருந்துறைச் சிவனைக் கூவி அழைக்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமைக்காரராய். வாழாது கழித்த நாளை நினைந்து இரங்குகின்றார். இதனால், திருப்பெருந்துறைச் சிவன் தன்னைத் தன் உடைமைக்காரன் என்று ஏற்பானா? அங்கீகரிப்பானா? புறத்தே தள்ளி விடுவானே என்று எண்ணி அழுதரற்றிப் பாடிடும் பாடல்கள் என்பையும் உருக்குந்தகையன. பழைய அடியார் நின்பால் வந்தார் நானும் நோயும் புறமே போந்தோம் என்று பாடுகின்றார். இறைவனை, திருப்பெருந்துறைச் சிவனைக் காண நாணி நிற்பதாகப் பாடுகின்றார். “இறைவனுக்கு உடைமைப் பொருளாகிவிட்டால் அவன் வாழ்விப்பான்! பாரம், தோள் மாறும்!” “என்ன குறையும் இலோம்” என்று வாழலாம். மாணிக்கவாசகரின் துன்பம் நீக்க, திருப்பெருந்துறைச் சிவன் குதிரைச் சேவகனாக, கொற்றாளாக வந்தருளிய பாங்கினை அறிக.
இறைவன் உறவே பழைய உறவு! இருள் மலத்துள் முலையில் முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கருவி, கரணங்களுடன் இணைத்துப் பிறப்பில் ஈடுபடுத்தி அறிவொளிக் கதவைத் திறந்ததே இறைவன்தானே! இறைவன் நமக்கு நன்றே செய்தான்! யாதொரு பிழையும் செய்தானில்லை! இறைவன் ஆன்மாவுக்கு மானுடம் என்ற மதிப்புயர் வாழ்க்கையைத் தந்தருளினான். மானுடம் என்ற நிலை, வரலாறு படைப்பது. மானுடம் ஆற்றல் மிக்கது; படைப்பாற்றலுடையது. அறிவுப் பலன்கள்! படைப்பாற்றல் உடையது உடல்! படைப்பாற்றலுக்குரிய உலகம் ! அன்பு சுரக்கும் இதயம்! அம்மம்ம! இந்த மானுடப் பிறவியின் ஆற்றலை வியந்து எழுத ஏது சொற்கள்! அற்புதமானது! அற்புதமானது! மானுடமாகிய வாழ்நிலையை ஆன்மாவுக்கு இறைவன் தந்தருளினன். இறைவனால் யாதொரு குறையும் இல்லை! நமக்குத்தான் இறைவன் அளித்த மானுடப் பிறப்பின் அருமை புரியவில்லை! உலகம் பற்றிய அறிவு இல்லை ! பொறிபுலன்களை ஆட்சி செய்யத் தெரியவில்லை. வண்டிக்காரன் மாடு இழுத்த வழிக்கு வண்டியை விட்டு விடுவது போல, நமது வாழ்க்கையை மனம் என்ற குதிரை இழுத்த வழி விட்டுவிட்டுத் துன்பத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு அழுகின்றோம்; புலம்புகின்றோம்! இந்த உலகம் துன்பமானது என்று முகாரி ராகம் பாடுகின்றோம். வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொண்டு ஒன்று கொலை செய்கின்றோம். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றோம்! ஏன் இந்த அவலம்?
இன்பமாக வாழ இறைவன் மானுடம் என்ற பதத்தை அருளினன். இறைவன் பால் குறையில்லை என்றும் இன்பமாக வாழலாம். ஆனால் நாம் மானுடத்தின் இயல்பு அறியாது கெடுத்தோம்! கெட்டுப்போனோம்! இம்மையையும் இழந்தோம் ! மறுமையையும் இழந்தோம்! இறைவனுக்கு உடைமைக்காரனாகாமல் பொறிகளுக்கே உடைமையானோம். . நம்மை உடைமையாகப் பெற்ற பொறிகளும் புலன்களும் இச்சைக்கு ஆளாக்கி அடிமையாக்கி இந்த வாழ்க்கையை சொத்தையாக்கி விட்டன. நன்னெறிப்படுத்தும் பழைய அடியாரொடும் கூடுவதில்லை . மாறாக நகர் திரிதரு நம்பியருடன் கூட்டு! வறுமொழியாளரொடு கூட்டு! வம்பப் பரத்தரொடு கூட்டு! இதனால்’ வாழ்நிலை பின் தங்கிவிட்டது! என்னை ஒத்தார் எங்கோ சென்று உயர்ந்து விட்டனர். நமது நிலை பின் தங்கிய நிலை. வாழ்வு பின் தங்கியது மட்டுமா? நோய்க்கு விருந்தானோம்!
இதிலிருந்து தப்ப என்ன வழி! மானுடம் என்ற பதந்தந்த வாழ்முதலை, இறைவனை நினைந்து நினைந்து அவனுக்கு உடைமைப் பொருளாக எண்ணி அருள் பாலிக்கும் பணிகளைச் செய்து வாழ்தலே வழி! இந்த வழியில் செல்வதற்குத் திருவாசகம் துணை!
என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங் கூடாது
என் நாயகமே பிற்பட்டிங்கு
இருந்தேன்! நோய்க்கு விருந்தாயே!
(ஆனந்தமாலை- 2)
*
Download (pdf) : திருவாசகத் தேன்