அறிவும் அனுபூதி நிலையும் – சூபிசத்தின் தோற்றம் குறித்து எச். பீர் முஹம்மது

’சொல் புதிது’ 10ஆம் இதழில் வெளிவந்த கட்டுரை இது.  பிரியத்திற்குரிய நண்பர் எச்.பீர் முஹம்மதின்  வலைப்பதிவில் –  சூபிஸம் பிரிவில் – தற்போது ‘ஹசரத் இனாயத்கான்’ பற்றிய அறிமுகம் (’ஒலியலை மிதக்கும் வெளி) மட்டும்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரையையும் அவர் இணைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன். இந்தப் பதிவுக்காக வஹாபிகள் என் மேல் கோபம்கொள்ளலாம். நல்லது,  ‘சூபிசம் என்பது கோபதாபங்களை நிராகரிக்கிறது’! தட்டச்சு செய்ததில் தவறிருந்தால் மட்டும் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். நன்றி. – ஆபிதீன்

***

sufism_and_tasawwuf_by_essani666-d464bu6

அறிவும் அனுபூதி நிலையும்

எச். பீர் முஹம்மது

மூலாதாரத்திற்குத் திரும்புவது என்பது அதன் அர்த்தத்தை அறிவதாகும். வெறும் தோற்றங்களைத் தொடர்வது என்பது அதனை நழுவ விடுவதாகும்.

மூலாதாரத்தோடு ஒன்றிவிடுவதே நோக்கமாக இருக்க வேண்டும். வெறும் அறிவு என்பது மனிதனின் வெளித்தோற்றமாகவே இருக்கிறது. அனுபூதி நிலையில் மட்டுமே அதனை அறிய முடியும். நாம் வெறும் உடைகளை மட்டுமே மாற்றி கொள்கிறோம். மூலாதாரம் என்பது இந்த உடைகளுக்கு வெளியே இருக்கிறது. இந்த உள்ளறிவு நிலையைத் தனக்கான தத்துவமாகக் கொண்டார்கள் சூபிகள்.

இவர்களின் தோற்றம் குறித்ததான பல்வேறு விதமான கருத்தாங்கங்கள், வரலாற்று விளக்கங்கள் நிலவுகின்றன. அன்றைய அரேபிய மண்டலத்தில் இஸ்லாமின் வருகையானது சமூக மாறுதல்களுக்கான முக்கிய காலமாக இருந்தது. சமூகம் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்தது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் நபியின் வருகைக்கு பின் ‘இஸ்லாமியக் கோட்பாடு’ தன்னை மதமாக வடிவமைத்துக் கொண்டது. பின்னர் உலகம் முழுவதுமாக அதன் பரவலாக்கம் நிகழ்ந்தது. வலுவான இஸ்லாமிய அரசானது அதன் மூலம் அரேபிய மண்டலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ‘அரசு’ என்பதன் வழியாக சமூகம் வடிவமைக்கப்படும்போது நியதிகள், நடைமுறைகள், சட்டதிட்டங்கள் விதியொழுங்குகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக அரசு என்பதே ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் அரசாகவே இருக்கும். இந்த அரசமைப்பிற்கான சட்ட திட்டங்கள், விதியொழுங்குகள் அரபு சொல்லின்படி ஷரீஆ எனப்பட்டன. (இஸ்லாமிய நாடுகளில் சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடைமுறையாக இந்த ஷரீஆ இருக்கிறது. இந்தியாவில் வெறும் சிவில் நடைமுறையாக இருக்கிறது.) சூபிகள் ஷரீஆ எனப்படும் கட்டமைப்பின் எல்லைக்குள் தங்களைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அதனையும் தாண்டி ‘சுய இருப்பை’ நிர்ணயித்தார்கள். நபிகளின் காலத்தில் கூட அவருடைய தோழர்கள் ஒரு சிலர் மத்தியில் இதற்கான ஆன்மீகத் தேடல் இருந்தது. உதாரணமாக அம்மார்-பின்-யாசின், சல்மான் பார்சி, அப்துல்லா-பின்-மசூத் போன்றோரைக் குறிப்பிடலாம். சில வரலாற்றாசிரியர்கள் உவைசுல்-குரானியை இந்தப் பட்டியலில் இணைக்கிறார்கள்.) ‘இறைவன்’ என்ற கருத்துருவமே சூட்சுமமானதாக அவர்களுக்குத் தென்பட்டது. சுயம் என்ற மனித நிலையானது குறுக்கல் பார்வையாக நம்மிடத்தில் இருக்கிறது. அவர்கள் சுயத்தை இறைவன் அல்லது கடவுள் என்ற அபிரபஞ்ச நிலையோடு இணைத்தார்கள். சூபிகள் முழு வாழ்க்கையை நான்கு நிலையாகப் பிரித்தார்கள்.

1. வாழ்க்கைக்கான நியதி அல்லது ஒழுங்கு (ஷரீஆ)

2 சுயத்தை அறிதல் ( தரீகத்)

3. எதார்த்தத்தை அறிதல் (ஹகீகத்)

4. ஒருமையை அடைதல் (மஅரிபத்)

இதனை யோகிகளின் அபானன், விபானன், உதானன், சமானன் என்ற மூச்சின் நான்கு நிலைகளோடு ஒப்பிடலாம்.

சூபி என்ற சொல்லானது Tasawouf என்ற அரபி சொல்லின் வேர்ச்சொல்லாகும். கம்பளி என்பது இதன் பொருள். இதனை நீட்டித்து சொல்லும்போது ‘சூபிகள்’ என்றறியப்படுவர்கள் கம்பளியால் தன்னைப் போர்த்திக் கொண்டவர்கள். அன்றைய அரபுச் சமூகத்தில் இஸ்லாமின் துவக்க காலத்தில் புனிதர்கள் எல்லாம் கம்பளியால் தன்னைப் போர்த்திக் கொண்டார்கள். இதிலிருந்தே இந்த வார்த்தையாடல் வெளிவந்ததாகக் கூறுகின்றனர் சிலர்.

இன்னும் சிலர் ‘Suf’ என்ற அரபுச் சொல் அரபு இலக்கணப்படிச் சரியானதாக அமையவில்லை, அது Sufateh என்ற சொல்லிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்கள். ‘Sufateh’ என்பதற்கு மெல்லிய செழ் என்பதாகும். காரணம் சூபிகள் தன்னைச் சுயவருத்தம் செய்தார்கள். எடையற்று போதலாக மாற்றி கொண்டார்கள். அகநிலைக்குத் தன்னை உட்சுருக்கம் செய்யும்போது எல்லாமே எடையற்று வீழ்கிறது . இதன் வழி Sufateh என்ற சொல் வந்ததாக அவர்களுடைய கருத்து.

மேற்கண்டவற்றிற்கு மாறாக சில சிந்தனையாளர்கள் ‘Sufi’ கிரேக்க சொல்லான ‘Soph’ என்பதிலிருந்து வெளிவந்தது என்கிறார்கள். ‘Soph’ என்பதற்கு ஞானம் அல்லது அறிவு என்று அர்த்தம். ஆனால் பொருத்தமானதாக இல்லையென்று தோன்றுகிறது. காரணம் சூபிகள் சில காலம் கிரேக்க தத்துவத்தை எதார்த்தைத்தை அறியும் கருவியாகப் பார்க்க மறுத்தார்கள். எப்படிப்பட்ட வேறுபட்ட விளக்கங்கள் சூபிசத்திற்கு எழுந்தாலும் சாராம்சத்தில் உள்ளறிவு நிலையே பிரதானமாக இருந்தது.

Tasawouf என்ற சொல்லை இமாம் சாதிக் தனித்தனி எழுத்தாகப் பிரித்து அர்த்தப்படுத்தினார்.

ஒவ்வொரு எழுத்தும் சூ·பிகளின் பல்வேறு வழிநிலைகளை, தரங்களை வெளிப்படுத்துகிறது. அரபியில் (TSVF) என்ற நான்கு சொற்களில் குறிக்கப்படுகிறது.

T – Tark (துறத்தல், சுய ஒப்படைப்பு)

S – Sabr, Safa (பொறுமை, தூய்மை)

V – Vud (அன்பு)

F – Fana, Fard (தனிமை, நிர்மூலத்தன்மை)

மேற்கண்ட வார்த்தைச் சுருக்கங்களின் நீட்சியானது சூ·பிகளின் இயல்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ஒருவிதமான துறவு நிலையே அவர்களில் இயல்பூக்கமாக இருந்தது.

நபிகளின் மரணத்திற்குப் பின் அன்றைய அரபு மண்டலத்தில் அரசுகளின் நிறுவதலும் பல துண்டுகளாக பிரதேச அடிப்படியில் சிதறுதலும் ஏற்பட்டன. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி, லெபனான், எகிப்து போன்ற நாடுகளில் வலுவான இஸ்லாமிய அரசுகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, இந்த நாடுகளில் அரசு அடிப்படையில் அமைந்த சிந்தனை முறைகளும், செயல்பாடுகளும் ஏற்பட்டன. (தற்பொழுது இது மரபானதாக நீட்டிக்கப்பட்டு வருகிறது) சூபிகள் இந்த நாடுகளில் அன்றைய அரசு முறைக்க்கு எதிராகவே இருந்தார்கள். நபிகளின் காலத்திற்கு பின்னும் அதனை ஒட்டியும் வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளாக சூபி சிந்தனை பிரிய ஆரம்பித்தது. உள்ளறிவு அல்லது அனுபூத நிலைக்குப் பல்வேறு விதமான விளக்கங்கள் சொல்லப்பட்டன. தரீக்கா என்ற அறிதல் களமே அவர்களின் அசலாக இருந்தது. (புத்தரின் பிக்குகள் சங்கத்தைக் குறிப்பிடலாம்) காதிரிய்யா, நக்ஷபந்தியா, ஜிஸ்திய்யா என்பதாக உலகம் முழுவதும் பல்வேறு விதமாக சூபிச சிந்தனைகள் (கிளை) விடத் தொடங்கியது.  சிலர் முழு வாழ்க்கையுமே ஒரு கனவு என்றார்கள். மேற்கத்திய மறுமலர்ச்சிகால தத்துவவாதியான பிஷப் பெர்க்லியும் இந்த நிலைப்பாட்டையே மேற்கொண்டார். ஆனால் அதில் அவர் முழு முற்றாக நம்பிக்கை கொள்ளவில்லை. அதிலும் அவர் கனவு கண்டார். ஒரு தடவை பெர்க்லி தன்னுடைய நண்பர் டாக்டர் ஜான்சனுடன் வெளியில் உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நண்பரிடத்தில் ‘இந்த முழு வாழ்க்கையுமே ஒரு கனவு’ என்றார். இவ்வாறு சொல்லி முடித்தவுடன், இருவரும் சிறிது தூரம் சென்றார்கள். உடனே ஜான்சன் ஒரு கல்லை எடுத்து அவர் மேல் எறிந்தார். உடலிலிருந்து ரத்தம் வழிந்தது. உடனே அலறினார் பெர்க்லி. அவர் சொன்னார் ‘இந்த கல் உண்மையானது’ அதற்கு பெர்க்லி ‘இதுவே ஒரு கனவுதான், நீ கனவில்கூட இதுமாதிரி கண்டிருக்க முடியும். அலறல் சத்தத்தைக் கேட்டிருக்க முடியும். தீக்கனவுகள் காணும்போது நாம் அழுகிறோம். அலறுகிறோம்’.  உலகிற்கு இம்மாதிரிபட்ட விளக்கங்கள் இந்தியத் தத்துவ மரபுகளில் தொடர்ந்திருந்தன. சூபிகளின் ஒரு பிரிவினரின் நிலைபாடு இவ்வாறாக இருந்தது.

சூபிகள் மதம் எனப்பட்ட சதுரமான எல்லையை மீறி அனைவரையும் நேசித்தார்கள். அனைவருக்குமான மனிதநேயமே அவர்களிடத்தில் இருந்தது. மனிதநேயம் என்ற சொல்லாடல் தற்பொழுது மேலாதிக்க வர்க்கத்தின் சொல்லாடலாகவே இருக்கிறது. முதலாளித்துவ மனிதநேயம் அனைவருக்குமான பிரதிபலிப்பு தன்மை கொண்டது. ஆனால் சூபிகளோ இந்த பிரிவினைக்குள் விழவில்லை. இஸ்லாம் என்ற மத நடைமுறையில் அவர்கள் நின்றாலும் அவர்களின் ஆன்மீகத் தேடல் சார்ந்த உள்ளறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தது. காஜா முயினுத்தீன் சிஷ்தியின் சீடரான ஹசரத் ஹமீதுத்தீன் நாகோரி , தான் ஏற்பாடு செய்த விருந்தில் சாதி, மத எல்லைகளைத் தாண்டி அனைவரையும் பங்கேற்க வைத்தார். இமார் ரூமி, பூஷ்ரி, ரபி இப்னு கைஸம், அப்துல்லா போன்றவர்கள் அடிமைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சூபிசம் என்பது கோபதாபங்களை நிராகரிக்கிறது. ஒரு விதத்தில் கோபம் என்பதும் கவலை என்பதும் ஒன்றுதான். இரண்டுமே உடலியல் நடமுறைதான். சூபிசம் இறைநிலையை அடைவதை நோக்கமாகக் கொள்ளும். (மரபான உலக நடைமுறையில் அல்ல).  அது வடிவமற்ற சாரம். அனுபூதியானது. உள்தூய்மை சார்ந்தது. எதார்த்தத்தோடு நெருங்கியது. சூபிகள் அவர்களிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார்கள். நான் / நீ என்ற இருமை எதிர்வுக்குள் சாட்சியாக (Witness)  அவதானித்தார்கள். தியானமும் தியானச் செயல்பாடுகளுமே அவர்களுக்கானது. குறிப்பாக சுழல் தியான முறையே பெரும்பாலானவர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஸகஸ்ரார் நிலையை அடைவது அந்த தியானத்தின் நோக்கமாக இருந்தது.

உலக வரலாற்றில் சூபிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார்கள். அதன் விளைவாக பல்வேறு விதமான ஒடுக்குதலுக்கும் கொடூரங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். ஹல்லாஜ் மன்சூர் என்ற சூபி ‘தானே உண்மை (அனல்ஹக்)’ என்று மொழிந்ததன் காரணமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு அவர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. இஸ்லாமிய மத உலகியலின் விதியொழுங்குகளுக்கு முரணாக அவர்களுடைய தத்துவ தரிசனம் இருந்ததால் அவ்வாறாகச் சித்திரவதை செய்யப்பட்டனர்.  சூபிசம் இஸ்லாமிய மற்றும் பிற அனைத்து பிரிவினருக்குமான தோழமை தரிசனமாகும். இந்த தரிசனமே இன்று உலகம் முழுவதும் பல்வேறு சிந்தனைப் புள்ளிகளாக, பல்வேறு நடைமுறைகளாக வளர்ந்து வருகிறது.

பின் நவீன உலகில் சூபிசத்திற்கான இடம் தனித்தே இருக்கிறது. எல்லாமே வெளித் தோற்றங்கள்தான். (Manifestation).

‘நீ புனித புத்தகத்தின் புறநிலையாக இருக்கிறாய். நீயே கேள். யாரை உற்று நோக்குகிறோம் என்று’ – மௌலானா ஷாமக்சூத்

***

References :

1. Sufi Thought – S.R. Sharda (Manohar Lal Publishers Pvt. Ltd.,)

2. An Introduction to the History of Sufism ( Orient Longman)

3. http://sufism.org/

4. http://ias.org/

5. http://www.naqshbandi.org/

6. Osho : Just like That  (pdf courtesy : Osho Foundation)

***

நன்றி : எச். பீர் முஹம்மது, சொல்புதிது

ஏசுபிரானும் சில சந்தேகிகளும் – சூஃபி கதை

இனிய கிருஸ்துமஸ்  வாழ்த்துகள். ’உயிரோசை’ இதழில், ‘ஈசா நபியும் சில சந்தேகிகளும்’ என்ற தலைப்பில் நண்பர் சஃபி வெளியிட்ட கதையை  நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.

***

04

இஸ்லாமிய மார்க்கத்தின் படி, இயேசு கிறிஸ்துவும் ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளப்படுவார். இஸ்லாமிய மரபுப்படி இயேசு, ஈசா நபி என்றழைக்கப்படுகிறார்.

அந்த ஈசா நபியைப் பற்றி சூஃபி ஞானியான ஜலாலுத்தீன் ரூமியும், பிற சூஃபிகளும் சொன்னதாக சொல்லப்பட்ட கதை :

புனித மரியாளின் மகனான ஈசா, விஷயங்களைஅறியத் துடிக்கும் ஆர்வக் குறுகுறுப்பை கட்டுக்குள் அடக்காத சில நபர்களுடன் ஜெருசலேம் அருகிலிருந்த பாலைவனப் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்,

அம் மனிதர்கள், இறந்தோரை உயிர்ப்பிக்கும் அந்த ரககிய பெயரை தங்களுக்குச் சொல்லித் தருமாறு ஈசாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம், ” நான் அதை உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை துஷ்பிரயோகம் பண்ணுவீர்கள் , என்று ஈசா சொன்னார்.

இல்லை, அது குறித்த அறிவைப் பெறுவதற்கான தகுதியுடன், நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அதைத் தெரிந்து கொள்வது எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்’ என்றனர் அந்நபர்கள் .

நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது உங்க்ளுக்கு தெரியவில்லை’ என்று சொல்லி விட்டு, ஈசா நபி அதை அவர்களுக்குத் தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு அந் நபர்கள் பாலைவனத்தில் தொடர்ந்து சென்றார்கள். சற்று தூரத்தில் வெள்ளையாக எலும்புக் குவியல்கள் கிடந்ததை அவர்கள் கண்டனர்.

நாம் கற்றுக் கொண்ட வார்த்தையை இப்போது பரீட்சித்துப் பார்ப்போம் என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அதன் படி செய்யவும் செய்தனர்.

அந்த எலும்புக் குவியல்கள் ரத்தமும் சதையும் பெற்று, கோரமான,. வெறிபிடித்த மிருகமாகி, அந் நபர்களைக் கடித்து குதறி நார் நாராகக் கிழித்து விட்டது.

இதை அறிவுள்ள விவேகிகள் புரிந்து கொள்ளுவார்கள். குறைந்த அறிவுள்ளவர்கள் இக் கதையைப் படிப்பதன் வழி தன்னை நிறைப் படுத்திக் கொள்வார்கள்.

***

sufi-kathaikal-safi-uyirmaijpg

நன்றி : சஃபி, உயிரோசை

***

மேலும் வாசிக்க..:

(சிலுவை பற்றிய) புரிதல் – Z. ஜபருல்லா

நினைந்து நினைந்து நெஞ்சம்… – Z. ஜபருல்லா

தங்கப் புற்கள் – சிறில் அலெக்ஸ்

சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மாள்

’குணங்குடி மஸ்தானைப் பலரும் அறிவர். ஆனால் சமகாலத்தில் சூஃபி ஞானி , செய்யிது ஆசியா உம்மாவைப் பலர் அறியவில்லை. இவர் எழுதியுள்ள மெய்ஞ்ஞானப் பாடல்கள் எவ்விதமான போலித்தனமும் அற்ற சுயமுத்திரை கொண்ட எளிமையான உயிரோட்டத்தில் பிறந்தவை’ – பிரமிள்  ( பாதையில்லாப் பயணம்)

***

செய்யிது ஆசியா உம்மாள்

– அப்துற் றஹீம் அவர்களின்  ’முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…

இவரின் பாரம்பரியமோ பெருமையுடயது. வள்ளல் சீதக்காதியின் இளவல் பட்டத்து மரைக்காயர் என்னும் முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகன் முகம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகள் சாறா உம்மாவுக்கும் பிறந்த வள்ளல் அவ்வாக்காறு மரைக்காயர் எனப் புகழ்பெற்ற அப்துல்காதிர் மரைக்காயர். இவரே கீழக்கரை ஜூமாப் பள்ளிவாயிலையும் கீழக்கரை புதுப் பள்ளிவாயிலையும் காயல்பட்டணம் புதுப்பல்ளி வாயிலையும் கட்டுவித்தவர். அவரின் மகள் வயிற்றுப் பேரரே இரண்டாம் சீதக்காதி என அழைக்கப்பெறும் ஹபீபு அரசர் எனப் பீடும்புகழும் பெற்ற ஹபீபு முகம்மது மரைக்காயர். அவரின் வள்ளன்மையின் நறுமணம் இந்நாட்டில் மட்டுமின்றி அரபு நாட்டிலும் பரிமளித்துக் கமழ்ந்தது. அங்குள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் அறிஞர்களுக்கும் வாரி வாரி வழங்கியதோடல்லாது புனித யாத்திரிகர்களின் வசதிக்காக ஜித்தாவுக்கும் மக்காவிற்கும் இடையில் கிணறுகளும் தோண்டுவித்தார் அவர். அவரின் இளவல் அப்துல் காதின் மரைக்காயரின் வழிவந்த ஹபீபு முகம்மது மரைக்காயரின் அருந்தவத்துத் திருமகளே செய்யிது ஆசியா உம்மாள்.

கருவிலே திருவாய்க்கப் பெற்ற அம்மங்கை நல்லார் இளமையியே தனித்திருந்து இறைநேசச் செல்வர்களின் துதிப்பாடல்களை மனனம் செய்து பாடிக்கொண்டிருக்கும் இயல்பினைப் பெற்றிருந்தார். இறைத் தியானத்திலேயே இலயித்து இன்புற்று அவற்றைப் பாடிப் பரவினார். பிறரிடம் அதிகமாகப் பேசாது தம் இல்லத்தின் மேல்மாடியில் தம் பெருமாபாலான நேரத்தைக் கழித்துவந்ததன் காரணமாக ‘மேல் வீட்டுப் பிள்ளை’ என்று அழைக்கப் பெற்ற அவர் அக்காலை தாமாகவே பல பாடல்களைப் பாடினார். அத்துடன் நில்லாது அக்காலை கீழைமாநகரின் ஆன்மீகச் செங்கோலோச்சி வந்த இறைநேசச் செல்வர் கல்வத்துநாயகம் அவர்களை அணுகி அவர்களிடம் தீட்சை பெற்றுச் சீடருமானார். அவர் கி.பி 1948-ஆம் ஆண்டில் தம் எண்பதாவது வயதில் கீழக்கரையில் காலமானார்.

அவர் பாடிய பாடல்கள் ‘மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்’ ‘மாலிகா இரத்தினம்’ என இரு பகுதிகளாக இருக்கின்றன. அவற்றில் இறைவனைப் பற்றியும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் பற்பல இறைநேசச் செல்வர்களைப் பற்றியும் அவர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் அரபுத் தமிழில் எழுதப்பட்டுள்ளன.

… …. ….

செய்யிது ஆசியா உம்மாளின் சில பாடல்கள் :

தொண்டியில் அடங்கப் பெற்றுள்ள ஷைகு அபூபக்கர் வலி அவர்கள் மீது பாடியது..

சிந்தையும் நாவையும் ஜெயிக்க முடியவில்லை
ஜெயிக்க வலுதாரும் வலியே!
சித்தி ஆனந்தமெனும் சிவராஜ யோகமென்னில்
தெளிவாக்க அருளும் வலியே!

தன் மூதாதையான சதக்கத்துல்லா அப்பா அவர்களின் அருள் வேண்டி…

எந்தனுக் குள்ளே இலங்கும்உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள் வேதா சதக்வலியே!
பேசமுடி யாதஉயர் பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக்வலியே!
திறமான இம்மல்யகீன் தெளிவுடைய ஐனுல்யகீன்
தரமான ஹக்குல்யகீன் தவமருள் சதக்வலியே

இறைவனை நோக்கி…

தன்னை அறிந்துணர சதானந்த நிஷ்டையருள்
என்னை உன்னில் சேர்த்தே ஏகபராபரனே!
ஆவி அகலுமுன்னே ஆண்டவனே உன்னருளை
ஏவி என்னில் வரச்செய் ஏகபரி பூரணனே!
என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி
என்ன கதிதருவாய் ஏகபரி பூரணனே..

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வேண்டி…

சீமான் தனத்துடடைய செல்வர் முஹம்மதென்னுள்
ஈமானைத் தான் நிரப்பும் இறசூல்நபி நாயகமே!
ஈமான் தனை நிரப்பி என்றென்றும் உம்முடைய
கார்மான மாக்கிஎன்னைக் காரும்நபி நாயகமே!

***

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

ஸமா : சூஃபி இசையும் நடனமும் – நாகூர் ரூமி

நண்பர் நாகூர் ரூமியின் ‘சூஃபி வழி – ஓர் எளிய அறிமுகம்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன் – கிழக்கு பதிப்பகத்தாருக்கு நன்றிகளுடன். பிரியத்திற்குரிய இன்னொரு நண்பரான ஹெச்.ஜி. ரசூலின் ’சூஃபி இசை –  இதயத்திலிருந்து ஒரு செய்தி’ கட்டுரையைப் படித்துவிட்டு மேலே செல்க. ‘ஸமா’ நடனம் காணொளி  காண கீழே செல்க!  Read also :  Sema, Yesterday and Today.   ‘அய்யய்யோ ஷிர்க்!’ என்று உதடு ஒட்டாமல் அலறுவோர்களுக்காக அறிஞர் ஆர்.பி.எம். கனி எழுதிய ‘பாரஸீகப் பெருங்கவிஞர்கள்’ எனும் நூலிருந்து கவிஞானி ரூமியின் ஆத்மீக குரு (ஷம்ஸே தப்ரேஸ்) பற்றிய பகுதியை பிறகு பதிவிடுவேன், இன்ஷா அல்லாஹ்.

***

மௌலவிய்யா தரீக்காவின் ஸமா என்ற இசை தெய்வீக அன்பையும் ஆன்மிக பரவச நிலையையும் குறிப்பதாக உள்ளது. இறைவனோடு இணைதலை அது உணர்த்துகிறது. ஒருவிதமான தியான மன நிலையை உருவாக்க அந்த இசையும் நடனமும் முயல்கின்றன. கிழக்கின் சாஸ்த்ரீய சங்கீதத்தின் உயிரான பல அம்சங்கள் இந்த இசையில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக ரூமி மற்றும் பல சூஃபிகளின் கவிதைகள் பாடப்படும்போது அவற்றுக்கான இசையை அவை வழங்குகின்றன.

இந்த ஸமாவில் முக்கியமானவர் ட்ரம் வாசிப்பவர்தான்.  குடும், சிம்பல் போன்ற  சின்ன தபேலா மாதிரியான இசைக்கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. நே என்னும் ஒருவித புல்லாங்குழல் ராகம் தருகிறது. அதோடு கம்பிக் கருவிகளும் மனிதக் குரலும் இணந்து கொள்கின்றன.

வார்த்தைகளும் கவிதைகளின் அசைகளும்கூட இசையோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. சூ·பி இசைக்கு ஸ்வரம் எழுத முடியாது. ஸ்வரங்களின் சூ·பி ஆன்மா கட்டுப்படாதது.

தர்வேஷ்கள் என்று சொல்லப்படும் சூ·பிகள் நேரமும் முயற்சியும் இன்றி சுழல ஆரம்பிக்கின்றனர். தங்களைச் சுற்றிக் கொண்டும், ஒரு வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டும். அவர்களின் வலது கை இறையருளை பெற்றுக்கொள்வதற்காக மேலே திறந்திருக்கும். அது அவர்களின் கைகள் வழியாக இதயத்துள் நுழைந்து மின்சாரத்தைப் போல பூமியை நோக்கி இருக்கும் இடது கை வழியாக பூமிக்குள் இறங்கும். ஒரு காலை நிலையில் வைத்து இன்னொன்றால் சுழல்வார்கள் அவர்கள். கால்கள் எழுவதும் விழுவதும் “அல்லாஹ் அல்லாஹ்” என்ற முழக்கத்தோடு இயைந்து நடக்கும்.

இறைவனை அறிதல், இறைவனைப் பார்த்தல், இறைவனில் கலத்தல் என்ற மூன்று நிலைகளில் இந்த ஸமா மெல்ல மெல்ல மேலே உயர்த்திச் செல்வதாக நடத்தப்படுகிறது.

ஸமா என்பதென்ன?
உங்கள் மனதில் மறைந்திருக்கும் வானவரின் செய்திதான் அது.
அதன் எழுத்தோடு வருகிறது அமைதி
அலைபாயும் மனதுக்கு
ஞான மரம் பூக்கிறது
இந்த தென்றலுடன்
இருப்பின் உள் துளைகள் திறக்கின்றன
இந்த மெட்டுக்கு
ஆன்மிக சேவல் கூவும்போது
விடிகிறது
முரசு கொட்டப்படும்போது
வெற்றி நமதே

என்றார் ரூமி ஒரு கவிதையில்.

ஒரு சூஃபி இசை கேட்க இருந்த கூட்டத்தில் நுழைந்து அமர்ந்தார். இசை துவங்கி அதைக் கேட்டவுடன் இறந்து விட்டார். அதுதான் சூ·பி இசையைக் கேட்கும் சரியான முறை என்றார் ஞானி ஜுனைதுல் பக்தாதி!

‘ஸமா’ என்பது உள்ளத்தில் எழுப்பும் இறைக்காதலின் மூலமாக மனிதனின் ஆன்மா செல்லும் உயர் ஆன்மிகப் பயணத்தின் குறியீடு. தன்னை இழப்பதன் மூலம் முழுமையை அடைய அது உதவுகிறது. இப்படி முழுமை பெறுபவர்கள் அந்த நிலையில் ஜாதி, மத, இன, குல, நம்பிக்கை இத்யாதிகளுடைய வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனித குலமனைத்தையும் நேசிக்கும் மனம் கொண்டவர்களாவர்.

இந்த தரீக்காவினரின் சுழல் நடனம் வேதகால இந்தியாவில் இருந்த ஒன்றென்று ஒரு கருத்து உண்டு. முதுகுத் தண்டை அடிப்படையாக வைத்து சுழல்வதைத்தான் மேரு மலையை வைத்து பாற்கடலைக் கடைதல் என்று அந்தக்கால இந்திய சூ·பிகள் குறிப்பிட்டனராம். சமஸ்கிருதத்தில் ‘மேருதண்டம்’ என்றால் ‘சுழல்தல்’ என்று பொருளாம்.

திறந்த கண்களோடே சுழல வேண்டும். இந்த சுழற்சியில் மனித உடல் ஒரு பம்பரத்தைப்போல ஆக வேண்டும். சுழற்சியின் மயக்கத்தில் தன்ன இழக்க வேண்டும். இந்த சுழற்சிக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடுவது, குடிப்பது போன்றவற்றை நிறுத்திவிட வேண்டும் என்றும், வெறுங் கால்களுடனும் நெகிழ்வான ஆடைகளுடனும் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சுழல் நடனம் எவ்வளவு நேரத்துப் போகும் என்று சொல்ல முடியாது. பல மணி நேரங்களோ அல்லது பல நாட்களுக்கோகூட போகலாம். ரூமி பல நாட்கள் இவ்விதமாக சுழன்று கொண்டிருப்பாராம். குறைந்தது ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுத்தால்தான் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆற்றலின் புயல் வீச்சை உணர முடியுமாம்.

இடது காலை நிலையாக வைத்து, உடம்பை சுழற்ற வலது காலை பயன்படுத்துவார்களாம். கடிகாரச் சுழற்சிக்கு எதிர் திசையில் சுழலுவார்கள். வலது உள்ளங்கை மேலே வானத்தைப் பார்த்தபடி திறந்தபடி இருக்க, இடது உள்ளங்கை கீழே தரையைப் பார்த்தபடி குப்புற இருக்கும். கண்கள் திறந்தபடி இருந்தாலும் எதையும் உன்னிப்பாக அவர்கள் பார்ப்பதில்லை. முதல் 15 நிமிடங்களுக்கு மெதுவாக சுழல்வார்கள். அடுத்த 30 நிமிடங்களில் வேகம் மெல்ல மெல்ல கூட்டப்படும். சுழல்பவரும் சுழற்சியும் போய் எல்லாமே ஒரு ஆற்றலின் வீச்சாக மாறி இருப்பர். புயலும் அதன் மையத்தையும் போல.

சுழல்பவர் கீழே விழுந்தவுடன் — வேண்டுமென்றே அல்ல — சுழற்சியின் அடுத்த கட்டம் துவங்குகிறது. உடனே அவர் தரையில் சுழன்று தன் தொப்புள் பூமியின் மீது இருக்குமாறு செய்வார். பூமியோடு தன் உடல் இணைவதை அவர் உணர்வார். ஒரு குழந்தை தன் தாய் மார்பில் அழுத்தப்படுவதுபோல. கண்கள் மூடியிருக்கும். குறைந்தது 15 நிமிடங்களுக்காவது அந்த நிலையிலேயே அவர் அமைதியாக இருப்பார். முடிந்த பிறகு பயிற்சியாளர்கள் முடிந்த வரை அமைதியாக இருக்க முயல்வார்கள்.

**

நன்றி : நாகூர் ரூமி , கிழக்கு பதிப்பகம்

**

« Older entries