நன்றி : ஆசிப் மீரான்
*Moko Kahan – Sherdil: The Pilibhit Saga
22/08/2022 இல் 13:30 (கபீர்தாஸ், சினிமா, Soumya Murshidabadi)
Singer – Soumya Murshidabadi, Lyrics – Saint Kabir
Thanks : T-Series & SenShe
உளவியல் தெரிந்தவர் முல்லா – சஃபி
10/08/2020 இல் 13:00 (சஃபி, முல்லா, Mulla Nasrudin)
நண்பர் முஹம்மது சஃபியின் முகநூல் பதிவிலிருந்து, நன்றியுடன்…
**
கொஞ்சம் உளவியல் தெரிந்தவர் முல்லா – சஃபி
மனமானது தாங்கமுடியாத கனமான, கசப்பான, நெருக்கடியான சம்பவங்களைச் சந்திக்கும் போது, சில தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்தி, தனக்குத்தானே அமைதி தேடிக்கொள்ளும். சமநிலையில் வைத்துக் கொள்ளும். அந்தத் தற்காப்பு உத்திகள், உளவியலில் ‘Defense Mechanisms‘ என்ற கருத்தாக்கத்தின் கீழ் சொல்லித் தரப்படும். அந்த உத்திகளில்ஆரோக்கியமானவையும் உண்டு. ஆரோக்கியமற்றவைகளும் உண்டு.
நான் இளங்கலை உளவியல் படிக்கும்போது தனிமனித அளவில் உருவாகும் அந்தத் தற்காப்பு உத்திகளை, சமூக அளவில் எதிரியைச் சாமாளிப்பதற்காக ஒரு நாடு உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புப் படைகளோடு சம்பந்தப்படுத்தி ஒரு பேராசிரியர் பேசுவார்.
‘ஒரு நாட்டுக்கான ‘எதிரி‘ உண்மையானதாக இருக்கலாம். அல்லது கற்பனையானதாக இருக்கலாம். பாதிநேரம் கற்பனையானதாகவே இருக்கும். மக்கள் நலனைக் கணக்கிலெடுக்காமல். ராணுவத் தளவாடங்களுக்காக அதிகச் செலவிட்டு குடிமக்களை வறுமைக்குள்ளாக்கி நாட்டைச் சீரழித்து குட்டிச்சுவராகுக்குவது சமூக அளவில் ஆரோக்கியமற்ற பாதுகாப்பு உத்தி. அதேபோல தனிமனித அளவில் அதீத சுயமோகமும், எதார்தத்தில் கால்பாவாமல் அதீத கனவில் கற்பனையில் சிக்கிக்கொள்ளுவதும் மனதை வறுமையாக்கிவிடும். தடம்புரட்டி பிறழ்வாக்கிவிடும். நகைச்சுவை மனதின் சுவாதீனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆரோக்கியமான முதிர்ச்சியான உத்தி‘ என்று தனிமனிதனையும் சமூகத்தையும் தொடர்புபடுத்தி அழகாக விளக்கி வகுப்பெடுப்பார் அப்பேராசிரியர்.
நகைச்சுவைக்கு தனிமனித அளவிலும், சமூக அளவிலும் பயன்பாடுண்டு. நகைக்சுவையின் பிரதிநிதியாக கதைகளில் முல்லா நஸ்ருத்தீன் நிற்கிறார். லேசில் அணுகமுடியாத கடும் கர்வியாக நடந்து கொள்ளும் முல்லா, பெரும்பாலான கதைகளில் மனிதனுக்கு சுலபத்தில் வாய்க்காத அரிதான சுய எள்ளலுக்கு தன்னையே உட்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். சிலகதைகளில் இறுகிப்போன மதிப்பீடுகளுக்கு எதிராக நிற்கிறார்.
இக்கதைகளில் முல்லா எப்படியெல்லாம் பல்டி அடித்து சேட்டைகள் செய்து தனது ‘சுயத்தைக்‘ காப்பாற்றிக் கொள்கிறார் பாருங்கள்.
முதல் கதையில் முல்லா கற்றதை இடம் பொருள் ஏவல் அறிந்து, அவ்வப்போது கழற்றி வைக்கத் தெரியாமல் அவதிப்படுகிறார். முதல் முட்டைக்கதையில் முல்லா கூமுட்டையாக இருக்கிறார். இரண்டாவது முட்டைக் கதையில் வெற்றியைக் கொக்கரிக்கும் சேவலாக இருக்கிறார். கம்பியை கடன்கொடுக்க விரும்பாத கதையில் முல்லா முல்லாவாக நிற்கிறார். வெள்ளிக்கிழமையில், வெள்ளி அல்லாத நாட்களில் முல்லா என்ன செய்து கொண்டிருப்பார் என நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசித் துணுக்கில் முல்லாவின் கற்பனை எதிரி புலி..
1.கற்றதைக் கைவிடு
சுல்தான் தங்கள் பகுதிக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்த முக்கியஸ்தர்கள் பலர் அவரைப் பார்க்க தகுந்த பரிசுகளுடன் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் முல்லா நஸ்ருத்தீனும் இருந்தார். அவருக்கு அரசவை நடைமுறைகள் எதுவும் சரிவரப் புரிபடவில்லை. ஒரு பிரதானி அவசரம் அவசரமாக முல்லாவுக்கு சுல்தான் வழமையாக என்னவெல்லாம் விசாரிப்பார் என்று சுருக்கமாகச் சொல்லிக்கொடுத்தார்
‘எவ்வளவு நாள் இங்கிருக்கிறீர்கள்? முல்லாவாக எவ்வளவு நாள் படித்தீர்கள்? போடப்படும் வரிகள் சம்பந்தப்பட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பொதுவாக மக்கள் திருப்தியாக உள்ளார்களா? என்ற கேள்விகளைச் சுல்தான் கேட்பார் என்று முல்லாவுக்குச் சொல்லப்பட்டது.
முல்லாவும் கேள்விகளுக்கான பதில்களை நன்றாகக் குருட்டு மனனம் செய்து கொண்டார்.
ஆனால் கேள்விகள் முறைமை மாறி வேறாரு வரிசைப்படி கேட்கப்பட்டன.
‘எவ்வளவு காலம் படித்தீர்கள்?‘
‘முப்பத்தைந்து வருஷம்“
அப்படியானால் உங்களது வயது என்ன?“
‘பன்னிரண்டு வருடம்’‘
‘அப்படி இருக்கவே முடியாது ! நம்மில் யார் பைத்தியம்?‘ என்று சுல்தான் கோபத்தில் கர்ஜித்தார்.
‘நாமிருவரும்தான்…மேன்மை தங்கிய சுல்தானே‘ என்றார் முல்லா.
‘என்னைப் பைத்தியம் என்று சொல்கிறாயா? உன்னை மாதிரியே?‘ என்று கோபம் குறையாமல் சுல்தான் தொடர்ந்தார்.
‘நிச்சயமாக நாம் பைத்தியங்கள்தான். ஆனால், வேறொரு வரிசையில் மேன்மை தங்கிய மாண்புமிகு சுல்தானே !‘ என்று மரியாதை குறையாமல் சொன்னார் முல்லா.
2. என்னவென்று யூகி?
ஒரு கோமாளி முல்லாவைப் பார்த்தான். அவன் பையில் ஒரு முட்டையை வைத்திருந்தான். அப்போது கோமாளி இருந்த பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார்.
கோமாளி முல்லாவிடம்‘ முல்லா, நீங்கள் யூகிப்பதில் வல்லவரா?‘ என்றான்.
‘ரொம்ப மோசமில்லை“ என்று கேள்விக்குப் பதில் சொன்னார் முல்லா.
‘அப்படியானால் என் பையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்?“ என்றான் கோமாளி.
‘ஒரு துப்புக் கொடுங்களேன். சொல்கிறேன்‘ என்று கேட்டார் முல்லா.
‘முட்டை வடிவத்திலிருக்கும். அதனுள்ளே மஞ்சளும் வெள்ளையும் இருக்கும். முட்டை மாதிரி இருக்கும்‘ என்று கிட்டத்தட்ட முட்டையின் எல்லா அடையாளங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டான் கோமாளி.
‘அப்படியானால் அது நன்றாகக் கடித்துத் தின்னக்கூடிய, இனிப்பான தின்பண்டமாகத்தான் இருக்கும்‘ என்று கேள்வி வந்த வேகத்தியே பதில் சொன்னார் முல்லா.
3.முட்டைகள்
முல்லா நஸ்ருத்தீன் தனது தேஜஸைக் கூட்டிக் கொள்ள துருக்கி பாணியிலைமைந்த ஒரு குளிப்பிடத்திற்கு அடிக்கடிச் செல்வார். ஒரு நாள் முல்லா குளிக்க போனபோது, அங்கே சில விடலைப் பையன்கள் முட்டைகளுடன் இருந்தனர்.
இளைஞர்கள் இருந்த நீராவிக் குளியலறைக்கு முல்லா வந்தவுடன் அவரைச் சீண்டிப் பார்க்கும் நோக்கத்துடன் ,‘ நம்மை கோழியாகக் கற்பனை பண்ணிக் கொள்வோம். நம்மால் முட்டை இட முடியுமா?‘ என்று முயற்சித்துப் பார்ப்போம். அப்படி முட்டை போட முடியாதவர்கள் யாரோ குளியலுக்கான காசை அவர் எல்லோர்க்கும் மொத்தமாகச் சேர்த்து தரவேண்டும்‘ என்று அந்த இளைஞர்கள் சொன்னார்கள்.
முல்லாவும் அதற்கு ஓத்துக் கொண்டார்.
அந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் முக்கிமுக்கி, சிறு முனகல் சத்தத்திற்குப் பிறகு, தன் பின்னாலிருந்து ஒரு முட்டையை எடுத்து அது நன்றாகத் தெரியும்படி உயர்த்திக் காண்பித்தார்கள்.
இளைஞர்கள் குறும்புடன் நஸ்ருத்தீன் பக்கமாகத் திரும்பி அவருடைய முட்டையைக் கேட்டனர்.
‘பல கோழிகளுக்கு மத்தியில், ஒரு சேவல் கூட இருக்காதா, என்ன?‘ என்று அவர்களிடம் பதில் கேள்வி கேட்டார் முல்லா.
4.ரொம்பக் கஷ்டமில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் துணி காயப்போடும் கம்பியை இரவல் கேட்டார்.
‘மன்னிக்கவும். நான் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதில் மாவு உலர்த்திக் கொண்டிருக்கிறேன்‘ என்றார் முல்லா.
‘உலகத்தில் யாராவது கொடிக்கம்பியில் மாவைக் காயப்போடுவார்களா?‘ என்று இரவல் கேட்டவர் திருப்பிக்கேட்டார்.
‘ஓசியில் கொடுக்க வேண்டாமென்று நினைக்கும் போது, துணி உலர்த்தும் கம்பியில் மாவை உலர்த்துவதென்பது ரொம்பக் கஷ்டமான காரியமாக இருக்காது‘ என்று பதில் சொன்னார் முல்லா.
5. வெள்ளிக்கிழமை
முல்லா நஸ்ருத்தீனும் அவர் மனைவியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுதோறும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதெனத் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். முல்லாவின் மனைவிக்கு அந்த உடன்பாடு பெரிதும் திருப்தியளித்தது.
முல்லா தன் மனைவியைப் பார்த்து, ‘அந்த உடன்பாட்டைக் குறிப்பதற்கு நமக்கிடையில் ஒரு சமிக்ஞையை உருவாக்கிக் கொள்வோம். அந்த சமிக்ஞையைப் பார்க்கும்போது என் கடமையைச் செய்ய நேரம் நெருங்குகிறது என்பதை அது எனக்கு நினைவு படுத்தும்“ என்றார்.
அதைக்கேட்டுவிட்டு,“ ஒவ்வொரு வெள்ளி இரவு வரும்போதும் உங்களை தலைப்பாகையை படுக்கையறையின் மேலிருக்கும் கம்பியின் மீது தொங்கவிடுகிறேன். அதைப் பார்த்து வெள்ளி வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளுங்கள்‘ என்று முல்லாவிடம் அவர் மனைவி சொன்னார்.
‘நல்லதாகப் போய்விட்டது. அந்த ஏற்பாடு நல்ல விஷயம். எனக்குக் கூட தோணாமல் போய்விட்டது‘ என்று பலமாக ஆமாதித்து தலையாட்டினார் முல்லா.
ஒரு நாளிரவு – அது வெள்ளி இரவு அல்ல- தாம்பத்தியத்துகாக ஏங்கிய முல்லாவின் மனைவி தான் படுக்கைக்குப் போகு முன்பு தலைப்பாகையைக் கம்பியில் தொங்கவிட்டு உள்ளே போனார்.
அதைக்கண்டு, “ மரியாதைக்குரிய மனைவியே, இன்று வெள்ளி இரவு அல்ல‘ என்று சத்தம் போட்டுக் கத்தினார் முல்லா.
‘இன்று வெள்ளி இரவுதான்“ என்று மனைவி விடாமல் பதிலுக்குக் கத்தினார்.
அதைக்கேட்டு,‘ மனைவியே, இவ்வீட்டின் போக்கை ஒன்று வெள்ளி இரவு தீர்மானிக்கட்டும். அல்லது நான் தீர்மானிக்கிறேன்‘ என்று முனகினார் முல்லா.
6. மனம்
நஸ்ருத்தீன் தன் வீட்டைச் சுற்றி ரொட்டித் துண்டுகளை வேகமாக வீசியடித்துக் கொண்டிருந்தார்.
‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முல்லா“ என்று அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவர் கேட்டார்.
‘புலிகளை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறேன்“ என்று சொன்னார் முல்லா.
“ இங்குதான் புலிகளே இல்லையே?. அவை வந்து போன தடயங்களையும் காண முடியவில்லையே?“ என்றார் கேள்வி கேட்டவர்.
“ ஆஹா ! அப்படியா ! எனது செயலால் புலிகள் பயந்து ஓடி விட்டன போலிருக்கிறது. எனது செயல்முறை சிறப்பாகச் செயல்படுகிறது, இல்லையா, நண்பரே?‘ என்றார் முல்லா.
*
Thanks to : Mohamed Safi
*
Related Links :
Inimitable Mulla Nasrudin – Idries Shah
சூஃபியின் மிதியடி – சஃபி
திருவாசகத் தேன் – குன்றக்குடி அடிகளார்
16/05/2020 இல் 13:30 (குன்றக்குடி அடிகளார், திருவாசகம்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எழுதிய ’திருவாசகத் தேன்’ எனும் நூலில் உள்ள ’அறியாது கெட்டேன்!’ என்ற கட்டுரையை இங்கே பகிர்கிறேன். ’திருவாசகத் தேன்’ என்றே ஒரு தனிக்கட்டுரை அந்த நூலில் உண்டு. அது பிறகு வரும், இன்ஷா அல்லாஹ்! ஆமாம், இன்ஷா அல்லாஹ்தான். ’ஒளி, ஞானத்தின் சின்னம்! முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் ‘ஒளியை என் உடலில் நிரப்பு’ என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார். இத்தகு ஒளியால் உடலின் எடை குறைகிறது. உடல் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.’ என்று ’புறம் புறம் திரிந்த செல்வம்’ கட்டுரையில் எழுதும் அடிகளார் கட்டுரை பற்றி அப்படித்தான் சொல்ல வேண்டும் – இந்தப் புனித ரமலான் மாதத்தில்.
நன்றி : தமிழிணையம் – மின்னூலகம் & வானதி பதிப்பகம்
*
அறியாது கெட்டேன்!
நோய்!! புதிய புதிய நோய்கள் ! உடல் நோய்! ஆன்மாவின் நோய்! ஏன் நோய்? எதனால் நோய்? காரணங்களைத் தேடின் மூச்சு வாங்கும்! – ஓர் உண்மை புலனாகிறது! நோய்க்குரிய காரணங்களில் பழையன மட்டுமல்ல! புதியனவும் உண்டு! பழைய காலத்தில் அழுக்காறு என்ற நோய்க்குக் காரணம் உடைமைச் சார்புடையதாகவே அமைந்திருந்தது. இன்றோ புகழும் காரணமாக அமைந்திருக்கிறது! நோய் இயற்கையன்று! நோய்க்குப் பழ வினைகள் காரணமல்ல. நோய் செயற்கை, நோய் வரவேற்றுக்கொள்வது! நோய்க்கும் இவன் புதியவனே! சுவை நாடி உண்டமை, உழைப்பில்லாத வாழ்க்கை, தூய்மையற்ற உடல், தூய்மையற்ற மனம், கெட்டபுத்தி , அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஆன்மா இவையெல்லாம் நோய்க்குக் காரணங்கள்!
உலகம் முன்னேறுவது, நொடிகள் தோறும் முன்னேறுவது. ஒரு நொடிப் பொழுது அயர்ந்தாலும் உலகம் நெடுந்தொலைவு போய்விடும் ! நாம் பின்தங்கி விடக்கூடாது! துறைதோறும் முன்னேற்ற நிலை பராமரிக்கப் பெறுதல் வேண்டும். அறிவில் பிற்பட்டிருந்தால் – அறிவிருந்தாலும் உலக அறிவை நோக்க அறியாமையாகவே கொள்ளப்பெறும்! அறிவு வளர்வது; இடையீடின்றித் தொடர்ந்து வளர்வது! ‘அறிதோறும் அறியாமை’ என்று திருக்குறள் பேசும்! இன்றைய அறிவே அறிவு; வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் அறிவு; உழைப்பு. உழைப்புத் திறன் வளரும் இயல்பினது. உடலியக்கத்திற்குரிய உணவு, உழைப்பின் வழியே தான் படைக்கப் படுகிறது! உழைத்து உண்பது அறம்! உழைத்து உண்பது ஒழுக்கம்! அறிவின் ஆக்கத்தில் பின்னடைவு; உழைப்பில் பின்னடைவு! இங்ஙனம் துறைதோறும் பின்னடைவுகள் தோன்றின் நோய்க்கு ஆளாவது இயற்கை !
நோய்வாய்ப்பட்ட பிறகு நெஞ்சில் கவலை பிறக்கும்; துன்பமும் துயரமும் வருத்தும்; அமைதி விடைபெறும்; இன்பம் விலைப்பொருளாகி விடும்; வாழ்க்கை கசக்கும். ஆதலின் பிற்படா நிலையில் நொடிகள் தோறும் துறை தோறும் முன்னேற்றத் துடிப்புடன் உழைக்க வேண்டும். பெற்ற முன்னேற்றத்தைப் பராமரிக்க வேண்டும். மாணிக்கவாசகர் நோய்க்கு எளிதில் இரையாகக்கூடிய அமைச்சுப் பதவியில் இருந்தார், அமைச்சுப் பதவி “கடினமான பதவி. ஆன்ம நலன்களைக் கெடுக்கும். அதிகாரம் அமைச்சுப் பதவிக்கு உண்டு! இருக்கும் இடம் உயரமானது! பெரிய இடத்தில் சின்னப் புத்தி தலைகாட்டும். ஆனால், உடலும் ஆன்மாவும் எளிதில் நோய்வாய்ப்படும் நிலை, ஆன்ம நலன்களில் பிற்பட்ட நிலை!
பிற்பட்ட நிலை மாற்றப் படுதல் வேண்டும். முன்னேற்றம் தேவை. முன்னேற்றம் கருதிய வாழ்க்கைக்கு முதலில் உரிய சுற்றம் அமைய வேண்டும்! நல்ல பழக்கங்கள் வேண்டும்; வழக்கங்கள் வேண்டும். ஒருவருக்குக் கெட்ட பழக்கங்கள் எளிதில் விலை இல்லாமலே கூடக் கடை வீதியில் கிடைக்கும்! ஆனால் நல்ல பழக்கங்கள் எளிதில் கிடைக்கா. வழக்கங்கள் சொல்லவே வேண்டாம்! நல்ல பழக்கங்கள்தான் நல்ல வழக்கங்களாக மாறுகின்றன, ஆன்மா சிறந்த நலன்களைப் பெற்று முன்னேற வேண்டுமாயின் நல்லோர் கூட்டு வேண்டும். நல்லோர் இணக்கம் வேண்டும். நல்லோருடன் பழக வேண்டும். அங்ஙனம் தேர்ந்தெடுத்துப் பழகும் நல்லோரும்கூட வழி வழி நல்ல மரபினராயிருந்தால் காலம், தேசம், வர்த்தமானம் அவர்களை மாற்றா. அவர்களே பழ அடியார்கள்; என்றும் நல்லவர்கள்! தற்காலிகமாக இன்று பிழைப்புக் கருதி அடியார்களானவர்கள் பிச்சைக்காரர்கள்! இவர்களில் நடிப்பவர்களும் இருக்கலாம். பழைய அடியாரொடுப் பழுத்த மனத்தடி யாரொடும் கூட்டு இருந்தால் அவர்கள் நம்மை வளர்ப்பார்கள். நம்மைப் பாதுகாப்பார்கள். காலைக் கதிரவன் ஒளியில் தோயும் இமயம் பொன்னொளி பெற்று விளங்கும். அப்போது அந்த இமயத்தைச் சார்ந்த காக்கையும் பொன்னொளி பெற்று விளங்கும். இமயம் சார்ந்த காக்கை பொன்னிறம் பெறும் என்பார் விபுலானந்தர். பழைய அடியாரொடும் கூடி வாழாமல் அரசன், அமைச்சர்கள் படைத் தளபதிகள் ஆகியோருடன் கூடி வாழ்ந்து கழிந்த காலத்தை மாணிக்கவாசகர் எண்ணி வருந்துகிறார்: பழைய அடியாருடன் கூடி வாழ்ந்தால் நோய் வராது. பிற்படுத்தலுக்குரிய சூழலும் தோன்றாது. ஆதலால், மாணிக்கவாசகர் பழைய அடியாருடன் கூடி வாழ்தலை விரும்புகின்றார்..
பழைய அடியாருடன் கூடி வாழ்தல் எப்போது கிடைக்கும்? பழைய அடியார்கள் பழுத்த அடியார்கள்! புளியம்பழம் போல் வாழ்கிறவர்கள்! அவர்கள் கூட்டத்தில் சேர்வது கடினம்! அவர்களுடன் கூடி வாழ்வது கடினம்! நெய், வேப்பெண்ணெய் என்று வேறு பாடு கருதாது சுவையுணர்வு கெட்டு உண்ணும் பழக்கம் வேண்டும். நான் எனது’ என்ற செருக்கறுதல் வேண்டும். காய் கதிர்ச்செல்களின் கதிரொளிக் கற்றைகளும் மழை வழங்கும் புனலும் மரத்தின் வேர்களும் தாழ்ந்து தாழ்ந்து செல்லுதல் போலத் தாழ்வெனும் தன்மையுடன் வாழ்தல் வேண்டும். இறைவனிடம் பிறந்து மொழி பயின்ற நாள் தொடங்கி இடையீடின்றித் தொடர்ந்து பத்திமை செலுத்த வேண்டும். பெருமிதமும் வீரமும் செறிந்த அடிமைப் பண்பு வேண்டும்! அன்பிலும் அன்பின் திட்பத்திலும் அன்பின் ஆற்றலிலும் நம்பிக்கை வேண்டும். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்று வாழ்தல் வேண்டும். அச்சம் அன்புக்குப் பகை ; உறவுக்கு எதிரி. அச்சம் பத்திமைக்கு எதிரிடையானது. அச்சம் தவிர்த்தவர்களே அடியார்கள்! பழ அடியார்கள்! மாணிக்கவாசகருக்கு அச்சமில்லை ! ”எங்கு எழில் என் ஞாயிறு” என்றார். ஞாயிறு திரியும் திசை மாறினால் துன்பம் வரும். அத்துன்பமும் தன்னைத் தீண்டாது! இது மாணிக்கவாசகரின் திட்டம்! உறுதி! மாணிக்கவாசகர் அச்சமின்றி வாழ்ந்தார். மாணிக்கவாசகர் ” அச்சம் தவிர்த் தாண்ட” சேவனாகிய திருப்பெருந்துறையுறை சிவனுக்கு உடைமையானார். உலகியல் வாழ்க்கையில் உடைமை மிகுதியும் பேணப்படுகிறது. உடைமைக்கு உள்ள மதிப்பு மனிதனுக்குக்கூட இல்லை. காரணம் உடைமை வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. அருளியல் வாழ்க்கை யிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் – உடைமையாதலுக்கு. மதிப்பு உண்டு. பங்கமில்லாத உரிமைக்கு உடைமையாதல் அவசியம். அதாவது நம்முடைய தோழனுக்கு நாம் உடைமையாதல், நட்பியல் வாழ்க்கையில் உடைமையான வழி உறவுகள் வளரும்; உரிமைகள் அமையும். நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்; இருபாலும் கிடைக்கும்… ஆன்மிக வாழ்க்கையில் இறைவனுக்கு நாம் உடைமையாகிவிட்டால் அவன் நம்மை வளர்ப்பான்; காப்பான்! நாம் கவலையின்றி வாழலாம்! நாம் உலக உடைமைகளுக்கும் உரிமைக்காரராக விளங்கும் வரையில் இறைவனுக்கு உடைமைக்காரராதல் அரிது. கடவுளுக்கும் சைத்தானுக்கும் ஒரே நேரத்தில் தொண்டு செய்ய முடியாது. இரண்டு எஜமானருக்கு ஒரே நேரத்தில் சேவை செய்தல் ஒல்லுமோ? மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தவரை அவர், அரசருக்கு உடைமையாக இருந்தார். அமைச்சுப் பதவியை உடைமையாகப் பெற்றிருந்தார். அதுவும்கூட உடைமையாக அல்ல. உடைமையாகப் பெற்றிருந்தால் குதிரைகள் வாங்காததை, திருக் கோயில் கட்டியதைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டிருப்பான். வரலாறே திசை திரும்பியிருக்கும். பாண்டியனுக்கு மாணிக்கவாசகர் உடைமைக்காரராகவும் இல்லை. அடிமைக்காரராகவே இருந்தார்.
மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையை அடைகின்றார். அறிவு நிலை மாறுகிறது; உணர்வு நிலை மாறுகிறது. திருப்பெருந்துறையுறை சிவனுக்குத் தாம் உடைமைப் பொருள் என்பதை உணர்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமையாய் – அடிமையாய் வாழ விரும்புகின்றார். திருப்பெருந்துறைச் சிவனைக் கூவி அழைக்கின்றார். திருப்பெருந்துறைச் சிவனுக்கு உடைமைக்காரராய். வாழாது கழித்த நாளை நினைந்து இரங்குகின்றார். இதனால், திருப்பெருந்துறைச் சிவன் தன்னைத் தன் உடைமைக்காரன் என்று ஏற்பானா? அங்கீகரிப்பானா? புறத்தே தள்ளி விடுவானே என்று எண்ணி அழுதரற்றிப் பாடிடும் பாடல்கள் என்பையும் உருக்குந்தகையன. பழைய அடியார் நின்பால் வந்தார் நானும் நோயும் புறமே போந்தோம் என்று பாடுகின்றார். இறைவனை, திருப்பெருந்துறைச் சிவனைக் காண நாணி நிற்பதாகப் பாடுகின்றார். “இறைவனுக்கு உடைமைப் பொருளாகிவிட்டால் அவன் வாழ்விப்பான்! பாரம், தோள் மாறும்!” “என்ன குறையும் இலோம்” என்று வாழலாம். மாணிக்கவாசகரின் துன்பம் நீக்க, திருப்பெருந்துறைச் சிவன் குதிரைச் சேவகனாக, கொற்றாளாக வந்தருளிய பாங்கினை அறிக.
இறைவன் உறவே பழைய உறவு! இருள் மலத்துள் முலையில் முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கருவி, கரணங்களுடன் இணைத்துப் பிறப்பில் ஈடுபடுத்தி அறிவொளிக் கதவைத் திறந்ததே இறைவன்தானே! இறைவன் நமக்கு நன்றே செய்தான்! யாதொரு பிழையும் செய்தானில்லை! இறைவன் ஆன்மாவுக்கு மானுடம் என்ற மதிப்புயர் வாழ்க்கையைத் தந்தருளினான். மானுடம் என்ற நிலை, வரலாறு படைப்பது. மானுடம் ஆற்றல் மிக்கது; படைப்பாற்றலுடையது. அறிவுப் பலன்கள்! படைப்பாற்றல் உடையது உடல்! படைப்பாற்றலுக்குரிய உலகம் ! அன்பு சுரக்கும் இதயம்! அம்மம்ம! இந்த மானுடப் பிறவியின் ஆற்றலை வியந்து எழுத ஏது சொற்கள்! அற்புதமானது! அற்புதமானது! மானுடமாகிய வாழ்நிலையை ஆன்மாவுக்கு இறைவன் தந்தருளினன். இறைவனால் யாதொரு குறையும் இல்லை! நமக்குத்தான் இறைவன் அளித்த மானுடப் பிறப்பின் அருமை புரியவில்லை! உலகம் பற்றிய அறிவு இல்லை ! பொறிபுலன்களை ஆட்சி செய்யத் தெரியவில்லை. வண்டிக்காரன் மாடு இழுத்த வழிக்கு வண்டியை விட்டு விடுவது போல, நமது வாழ்க்கையை மனம் என்ற குதிரை இழுத்த வழி விட்டுவிட்டுத் துன்பத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு அழுகின்றோம்; புலம்புகின்றோம்! இந்த உலகம் துன்பமானது என்று முகாரி ராகம் பாடுகின்றோம். வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொண்டு ஒன்று கொலை செய்கின்றோம். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றோம்! ஏன் இந்த அவலம்?
இன்பமாக வாழ இறைவன் மானுடம் என்ற பதத்தை அருளினன். இறைவன் பால் குறையில்லை என்றும் இன்பமாக வாழலாம். ஆனால் நாம் மானுடத்தின் இயல்பு அறியாது கெடுத்தோம்! கெட்டுப்போனோம்! இம்மையையும் இழந்தோம் ! மறுமையையும் இழந்தோம்! இறைவனுக்கு உடைமைக்காரனாகாமல் பொறிகளுக்கே உடைமையானோம். . நம்மை உடைமையாகப் பெற்ற பொறிகளும் புலன்களும் இச்சைக்கு ஆளாக்கி அடிமையாக்கி இந்த வாழ்க்கையை சொத்தையாக்கி விட்டன. நன்னெறிப்படுத்தும் பழைய அடியாரொடும் கூடுவதில்லை . மாறாக நகர் திரிதரு நம்பியருடன் கூட்டு! வறுமொழியாளரொடு கூட்டு! வம்பப் பரத்தரொடு கூட்டு! இதனால்’ வாழ்நிலை பின் தங்கிவிட்டது! என்னை ஒத்தார் எங்கோ சென்று உயர்ந்து விட்டனர். நமது நிலை பின் தங்கிய நிலை. வாழ்வு பின் தங்கியது மட்டுமா? நோய்க்கு விருந்தானோம்!
இதிலிருந்து தப்ப என்ன வழி! மானுடம் என்ற பதந்தந்த வாழ்முதலை, இறைவனை நினைந்து நினைந்து அவனுக்கு உடைமைப் பொருளாக எண்ணி அருள் பாலிக்கும் பணிகளைச் செய்து வாழ்தலே வழி! இந்த வழியில் செல்வதற்குத் திருவாசகம் துணை!
என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங் கூடாது
என் நாயகமே பிற்பட்டிங்கு
இருந்தேன்! நோய்க்கு விருந்தாயே!
(ஆனந்தமாலை- 2)
*
Download (pdf) : திருவாசகத் தேன்