அன்பிற்குரிய ஹனீபாக்காவின் பழைய முகநூல் பதிவு, நன்றியுடன்..
*
2017ஜனவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அதிகாலை தொழுகைகளை முடித்துக் கொண்டவனாக பனி படர்ந்த மதின மாநகரின் எங்கள் நெஞ்சில் நிறைந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு முன்பாக அமர்ந்திருந்து அவர்களின் பெயரில் சோபனங்கள் சொல்லிக் கொண்டிருந்தேன்.
எனக்கருகே 50 மீற்றர் தூரத்தில் ஒரு இளம் தம்பதியினர் என்னைப் போல் முன்னோக்கி அமர்ந்திருந்தனர். நான் அவர்களின் அருகே சென்றேன். எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது நான் முதல் நாள் சந்தித்து உரையாடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் வந்து கொண்டிருந்தார்.
-நீங்கள் எவடம்?
-நாங்கள் துருக்கி இஸ்தான்புல்.
இஸ்மாயிலுக்கு துருக்கி மொழியும் தண்ணிபட்டபாடு. எனக்கு வசதியாக போய்விட்டது.
முதல்நாள் இரவு எனது உறவினர் மதீனாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள துருக்கி தேசத்தின் ரெயில்வே நிலையத்தைக் காண்பித்து வந்தார். துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக்குள் இருந்த 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் கட்டப்பட்ட ஒரு கலைக்கூடம்தான் அந்த ரெயில்வே ஸ்டேசன். சுற்றிவளைத்து பாதுகாப்பு வேலி அமைத்திருந்தனர்.
இந்த பத்தியைப் பதிவு செய்யும்போது மிகவும் பதற்றப்படுகிறேன்.
துருக்கியைச் சேர்ந்த அந்த சகோதரனிடம் நான் உரையாடுகிறேன். நாங்கள் மூவரும் அந்த பட்டுத் தரையில் ஒரு பக்கமாகப் போகிறோம்.
துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அந்த மகோன்னதமான நாட்களை அவன் நினைவுகளில் படர விடுகிறேன். எனது உரையாடலை இஸ்மாயில் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். எங்களை விட்டும் சற்றுத் தொலைவில் எங்களின் உரையாடலை கேட்டவராக அந்த சகோதரனின் துணைவியார் அமர்ந்திருக்கிறார். அந்த முகத்தின் தேஜஷூம் அழகும் என் நெஞ்சில் இப்பொழுதும் சுடர் விடுகிறது. நான் பேச்சை முடிவுக்கு கொண்டுவருகிறேன்.
-ஷபீக், நோபல் பரிசு பெற்ற உங்கள் தேசத்தவரான ஒரான் பாமுக் இனை தெரியுமா? எனக்கேட்டேன். அவரின் புகழ் பெற்ற நாவல்களின் பெயர்களை எல்லாம் சொல்லி அது தமிழ் மொழியில் மாற்றம் பெற்ற வரலாற்றையும் சொன்னேன். எனது பேச்சை மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.
நாங்கள் இருவரும் நிறைய உரையாடினோம். அவற்றைப் பதிவு செய்ய இது களமல்ல.
-ஷபீக், எனது பயணம் ஆரம்பமாகப் போகிறது. இந்த புனித பூமியிலிருந்து நான் விடைபெறப்போகிறேன். இஸ்தான்புல்லில் இருந்து மீண்டும் அந்த ரயில் மதீனா நகரத்தை நோக்கி வரும் காட்சி என் கண்களில் மிதக்கிறது. அந்த நாளில் நீங்களும் நானும் இருப்பது நிச்சயமில்லை. நமக்கு விதிக்கப்பட்ட மறுமைநாளில் நானும் நீங்களும் துருக்கியிலிருந்து மதீனாவிற்கு பயணிப்போமாக.
எழுந்த ஷபீக் என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு மாய்ந்துபோனார். 50 மீற்றர் தூரத்தில் ஷபீக்கின் வருகையை அவரின் மனைவி பார்த்துக் கொண்டிருந்தார்.
எனது கரங்களிலிருந்து காம்பிலிருந்து பூ தழுக்கென்று கழன்று விழுவதுபோல் ஷபீக்கின் கரங்கள் நழுவியது. மனைவியின் அருகே சென்ற ஷபீக் என்னைக் கூவி அழைத்தார்.
“Sir, Oran Famuk Problem Muslim.”
*
Thanks : Slm Hanifa
மறுமொழியொன்றை இடுங்கள்