எல்லோருடனுடம் வலியச் சென்று பேசுவார் தாஜ். உரசிப் பார்க்கிறாராம்! பாருங்கள், நேற்று கூட ஒபாமாவுடன்தான் ஒய்யாரமாக பேசிக்கொண்டிருந்தார். அத்தனை முக்கிய நபரான இந்த தாஜ் என்னுடன் மட்டும் ஏனோ பேசுவதில்லை. வாய்ப்ப்பு கொடுத்தால்தானே, அவர் வாயைத் திறந்ததுமே விழுந்தடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவேன். வராது, அறிவுக்கும் அஸ்மாமாப்பிள்ளைக்கும் ஒத்துவராது. சரி, பதட்டமான இந்த சமயத்தில் தமாஷ் வேண்டாம் . சென்றமாதம் 25-ம் தேதி நண்பர் தாஜ் தன் ஃபேஸ்புக்கில் போட்டதை பதிவிடுகிறேன் . நண்பர் கிரிதரனின் பதிலையும் சேர்த்து. இருவருக்கும் நன்றி. – ஆபிதீன்
***
உதயகுமாருடன் ஓர் உரையாடல்
கூடங்குளம் அணு மின்சாரப் பிரச்சனையில் தலைமை தாங்கி நடத்தும்தோழர் திரு.S.P.உதயகுமார் அவர்களது ஓர் பதிவை படித்ததின் விளைவாக அவரோடு சின்ன உரையாடலை நிகழ்த்தினேன். கீழே அதனை பார்வைக்கு பதிந்திருக்கிறேன். திரு.S.P.உதயகுமார் அவர்களுக்கு நன்றி. – தாஜ்
Taj Deen : தோழர் உதயகுமார் ஒன்றை எனக்குத் தெளிவுப் படுத்தணும். கூடாங்குளம் பிளஸ் நியூக்கிளர் பிரச்சனை ஓகே. இந்திய அரசு தயாரிக்கும் நியூக்ளியர் வெப்பன்ஸ் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன? நீங்களோ உங்களது நண்பர்களோ அதனை எதிர்ப்பதாகத் தெரியவில்லையே? தெளிவு செய்யணும் நீங்கள். பிளீஸ்.
S.p. Udayakumar : Of course, we oppose the bombs. We oppose anything and everything nuclear and we are very clear on that.
Taj Deen : சந்தோஷமாக இருக்கிறது உங்களது பதில். ஆனால்… உங்களது போராட்டத் தொடரில் இதனை நீங்கள் குறிப்பிட்டதாக அறியவில்லை நான். அதனால்தான் சந்தேகத்தை எழுப்பினேன். மீண்டும் நன்றி.
S.p. Udayakumar : Thozhar Taj Deen, we are all fighting for a Nuclear-Free India that has No Deals, No Mines, No Reactors, No Dumps, and No Bombs. Our struggle has just started.
Taj Deen : 1998-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி நியூக்ளியர் பாமை வெடித்து டெஸ்ட் செய்ய நம் அரசியல்வாதிகளும், பத்திரிக்கைகளும் இந்தியா வயசுக்கு வந்துடுச்சின்னு சொல்ற மாதிரி ‘இந்தியா வல்லரசு’ ஆயிடுச்சுன்னு சொல்லி கூக்குரல் கொண்டாட்டம் போட்டாங்க, அப்ப நான் மலேசியாவில் பணி நிமிர்த்தமா இருந்தேன். அங்கிருந்தப்படியே யாருக்கும் தெரியா அந்த இரவுகளில் அழுது தீர்த்தேன். அன்றைக்கு அப்படி வெற்றிக் கூச்சல் போட்ட அரசியல்வாதிகள் சிலர் இன்றைக்கு உங்களது கருத்தின் பக்கம் இருந்து குரல் கொடுக்கிறார்கள். இது என்னால் புரிந்து கொள்ள முடிந்ததாலும்தான் உங்கள் முன்னால் கேள்வி வைக்கும்படி ஆணது. நன்றி தோழர் உதயகுமார்.
***
Comments :
Giritharan Navaratnam : மனித நாகரிக வளர்ச்சியில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகையில், அது கூடவே ஆக்கபூர்வமானதும், எதிர்மறையானதுமான இரு விளைவுகளையும் உருவாக்கித்தான் வருகிறது. இயற்கை வாயுவை ஆக்கபூர்வமான விதத்தில் பாவிக்கின்றோம். மின்சாரத்தைப் பாவிக்கின்றோம். கணினித் தொழில்நுட்பத்தினைப் பாவிக்கின்றோம். GPS தொழில் நுட்பத்தினைப் பாவிக்கின்றோம். ஆகாயவிமானங்கள் போன்ற பறக்கும் ஊர்திகளைப் பாவிக்கின்றோம். இது போல் கூறிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் மானுட அழிவுக்கும் பாவிக்கின்றோம். யுத்தங்களில் இவை அனைத்தையும் பாவிக்கின்றோம். அழிவுகளை உண்டாக்குகின்றோம். ஆனால் இத்தொழில்நுட்பங்களைப் பாவிக்கக் கூடாதென்று யாரும் போராடுவதில்லை. போர்களுக்கெதிராக, மானுட உரிமைகளுக்காகப் போராடும் மானுடர் மேற்படி தொழில்நுட்பங்கள் அழிவுகளைத் தருகின்றனவென்பதற்காக அவற்றைப் பாவனையிலிருந்து தவிர்க்கவேண்டுமென்று குரல்கொடுப்பதில்லை. அதுபோல்தான் இந்த அணுசக்தியும். இந்த அணுசக்தியினை ஆக்கபூர்வமான வழிகளில் பாவித்தால் மானுடகுலம் மிகுந்த பயனை அடையும். அணுசக்தியின் பாவனையை ஒருபோதுமே தடுக்க முடியாது. அணுசக்தியினை அழிவிகளுக்குப் பாவிப்பதைத்தான் தடுக்கக் குரல்கொடுக்க வேண்டுமே தவிர, அணுசக்தியினைப் பாவிப்பதைத் தடுக்க வேண்டுமென்று குரல்கொடுப்பது என்னைப் பொறுத்தவரையில் சரியானதல்ல. விபத்துகள் எற்படுவதை முற்றாகத் தடுக்க முடியாது. விபத்துகள் ஏற்படுமென்பதற்காக அணுசக்தியினைப் பாவிக்கும் அணு உலைகளை எதிர்ப்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இன்று மருத்துவநிலையங்களிலெல்லாம் ‘நியூக்கிளியர்’ தொழில்நுட்பத்தைப் பல்வேறு வகைகளில் ஆக்கபூர்வமான வழிகளில் பாவித்து வருகின்றோமென்பதை ஒருமுறை நினைவுகொள்ளுங்கள்.
Taj Deen : திரு.S.P.உதயகுமாருடன் என் உரையாடல் தொடர முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அவர் திடுமென முடித்துக் கொண்டார் என்று குறை சொல்லவில்லை. உரை நிகழ்ந்து கொண்டிருக்கிற போது மின்வெட்டு வந்துதொலைந்துவிட்டதால்… உரையாடலும் நின்று போனது. அது தொடர்ந்திருக்கும் பட்சம்… தோழர் கிரிதரன் இங்கே எழுதி இருக்கும் ஆக்கபூர்வமான சங்கதிகள் குறித்து அவரிடம் கேட்கத்தான் இருந்தேன். மின்வெட்டு எல்லாவற்றையும் கலைத்து போட்டுவிட்டது. குறிப்பாக அவருடன் இருக்கும் பல அரசியல் தலைவர்கள் அன்றைக்கு, இந்திய அணுகுண்டுவெடிப்பு பரிசோதனைக்கு கரவொலி எழுப்பியவர்கள். அவர்களை அவருக்கு நிறம்காட்ட முயற்சிக்கையில்… மின்வெட்டி பழிதீர்த்துவிட்டது. தவிர, மாற்றுமின்சாரத்திற்கு பொருந்தி போகும் சரியான திட்டம் குறித்து… அதனை முன்வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு திரு.S.P.உதயகுமாருக்கு உண்டு. இதனையும் அவரிடம் சொல்ல முடியாமல் போனதில் வருத்தம்தான்.
Giritharan Navaratnam : மேலும் வெளியினூடு மணிக்கு 65,000 மைல்கள் வேகத்திலென்று நினைக்கின்றேன், அந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் சிறியதொரு கோளினுள் வாழ்ந்துகொண்டு விபத்துகளைப் பற்றி அஞ்சுகின்றோம். மானுட இருப்பென்பது நிலையானதொன்றல்ல. இருக்கும் சிறியதொரு காலத்தில் அறிவு கொண்டு இருப்பை வளமாக்கிச் செல்வதுதான் சரியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாடு பின்னோக்கிச் செல்லமுடியாது. அறிவைப் பாவித்து அழிவுகளைத் தடுக்க வேண்டுமேதவிர அதற்காக ஆக்கபூர்வமானதொரு தொழில்நுட்பத்தையே வேண்டாமென்று ஒதுக்குவது புத்திச்சாலித்தனமான காரியமல்ல.
Taj Deen : கைத்தட்டவேண்டும் போல் இருக்கிறது. சமீப காலத்தில் நான் வாசித்த அறிவார்ந்த பதில். கிரிதரனுக்கு என் சந்தோஷங்கள்.
Giritharan Navaratnam : இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சூரியன் தரும் ஒளியின் மூலம்தான் எமது இருப்பே இங்கு சாத்தியமாகியுள்ளது. அந்தச் சூரியனோ மாபெரும் ‘ஹைட்ரஜன் குண்டு’. இன்னுமொரு வகையான அணுக்குண்டு.அணுக்களைப் பிளந்தும் அணுக்குண்டு உருவாக்கலாம்; அணுக்களைச் சேர்த்தும் இன்னுமொரு வகையில் அணுக்குண்டுகளை உருவாக்கலாம். சூரியன் இரண்டாவது வகை. ந்மது இருப்பையே சூரியன் என்றொரு மாபெரும் ஹைட்ரஜன் குண்டு நிர்ணையிக்கின்றது. இந்தக் குண்டு கூட ஒரு கட்டத்தில் அது ‘சிவப்பு அரக்கன்’ என்னும் நிலையினை அடையும்பொழுது சூரியமண்டலத்தையே கபளீகரம் செய்துவிடும். அதற்குள் நாம் தப்பவேண்டுமானால் இன்னுமொரு சூரிய மண்டலத்தில் பூமியையொத்த கோளொன்றினைக் கண்டுபிடித்துக் குடியேறவேண்டும். இல்லாவிடில் நாம் அனைவரும் அழிந்துவிட வேண்டியதுதான். அதற்கு இன்னும் ஐந்து பில்லியன் வருடங்கள் வரையில் உள்ளதால், தற்போதைக்கு ஆபத்தில்லை. எனவே நாம் அணுத்தொழில்நுட்பத்தினைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. எம்மிருப்பை உருவாக்கிக் காப்பாற்றுமொரு சக்தியது.
***
தோழர் சுப. உதயகுமாரன் நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ் :
அன்பார்ந்தத் தமிழ் சொந்தங்களே:
முற்றுகைப் போராட்டத்துக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறோம். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சற்று முன் வெளியிட்டிருக்கும் ஒரு பத்திரிக்கைச் செய்தியில் “அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கு அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்” என்று தெரிவித்திருக்கிறார். தி-லி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் சுமார் அறுபது குழந்தைகள் அண்மையில் இறந்தார்கள். இதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? சிவகாசியில் சுமார் நாற்பது பேர் கருகிச் செத்திருக்கிறார்களே? இதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் ‘நான் பொறுப்பு’ என்று ஆட்சித் தலைவரோ அல்லது அரசியல் தலைவர்களோ, அதிகாரிகளோ பொறுப்பேற்கிறார்களா? “பொறுப்பு ஏற்பது” என்பது ஒரு சிறந்த ஆளுமைச் சித்தாந்தம். பிரதமரிலிருந்து ப்யூன் வரை யாருக்குமே கிடையாதே இந்த நாட்டில். இந்த இழிநிலைக்கு என்ன பதில்? பல்லாயிரகணக்கான மக்கள் குடும்பங்களுடன், குழந்தைகளுடன் தெருவில் கிடக்கப் போகிறோம். எங்களுக்கு, எங்கள் வாழ்வாதாரத்திற்கு, வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு, எதிர்காலத்துக்கு, அருமைத் தமிழ் சொந்தங்களே, தமிழ் ரத்தம் ஓடுகிற உடன்பிறப்புக்களே, நீங்கள்தான் பொறுப்பு. விரைந்து வாருங்கள் இடிந்தகரைக்கு. ஆதரவுக் கரம் நீட்டுங்கள் நம் அனைவரின் ஒட்டுமொத்த விடியலுக்கு. வணக்கம்.
அன்புடன்,
சுப. உதயகுமாரன்
***
Visit :
http://www.facebook.com/tajdeen.sa
http://www.facebook.com/giritharan.navaratnam
http://www.facebook.com/spudayakumar1
தாஜ் said,
11/09/2012 இல் 16:44
நன்றி…, ஆபிதீன். திரு.உதயகுமார் அவர்களோடு அன்றைக்கு என் உரையாடலை தொடர முடியாமல் போனதில் இன்றைக்கும் வருத்தமுண்டு. இன்றைக்கு இடிந்தகரையில் மக்களை கூடியிருக்கும் அரசியல் சக்திகள் மாதிரி, இந்தியா அணுகுண்டு பரிசோதனை செய்த போது, இந்தியா அளவில் வாழும் அரசியல் சக்திகள் நாடுதழுவி மக்களை அணுவுக்கு எதிர்ப்பு காட்ட ஆவணம் செய்யவில்லையே என்பதுதான் என் சோகமெல்லாம்.
அணு உலையால் மட்டுமல்ல, அணுகுண்டை பாக்கிஸ்தான்காரன் இங்கே கொண்டுவந்து போட்டு வெடித்தாலும்…, இந்தியா அங்கே கொண்டு போய் போட்டு வெடித்தாலும், அதனால் நிகழும் அத்தனை அவலங்களையும் எதிர்கொள்வது பொதுமக்களாகத்தான் இருக்கும். எது எப்படியோ, இன்றைக்காவது நம் மக்களுக்கு அணுவின் அழிச்சாட்டியம் குறித்த, அழிவு குறித்த புரிதல் வந்திருக்கிறதே! அதுவரை நிம்மதி.
இரண்டாவது இப்படியான படு தீவிரமான புரிதல்… மொத்த இந்தியாவில் தமிழத்தில்தான் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தோஷம்.
இத்தனைக்குப் பிறகும், அணு ஆராச்சி இந்தியாவுக்குள் இந்திரா காலத்தில்தான் வந்தது. அப்போது அவர் சொன்னார், “இது இந்தியாவில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு த்தான் பயன்படுத்தப் படும்” என்று. கூடங்குளம் அணு உலையை அப்படியொன்றாகத்தான் நான் கருதுகிறேன். பெருகிவரும் மின் தேவைகளை கணக்கில் கொள்கிற போது
கூடங்குளங்களை இன்றைக்கு இல்லாவிட்டாலும், வருங்காலங்களில் தவிர்ப்பதென்பது இயலாதென்றே தோன்றுகிறது.
மஜீத் said,
11/09/2012 இல் 18:53
இந்த விஷயத்தில் எனது பார்வை எழுத எழுத வளர்ந்து, பெரிதானதால் தனியாக அனுப்பியிருக்கிறேன்.
அணு உலையை ஆதரிப்பதில் தவறில்லை என்று நிறுவுவதில் கிரிதரன் வைக்கும் வாதம் வலிமையானது. யூகங்களை வைக்காமல் உண்மைகளைக் கொட்டியிருக்கிறார்.
முடிவெடுப்பதில்தான் முடிச்சுக்கள் நிறையவே உள்ளன, அவிழ்க்கப்பட.
மஜீத் said,
11/09/2012 இல் 19:55
கூடன்குளம் அணு உலை அமைப்பது சரியா?
அல்லது
கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா?
எல்லோர் தலையயும் உருட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் எந்தக் கேள்வி சரி என்று தெளிவிப்பதே மோதலுக்கு வழிவகுத்துவிடும் நிலையில் அதற்கான பதிலளிக்க எல்லோரும் அவரவர் வசதிற்கேற்ப, பல அடிப்படைகளைப் பற்றிக் கொண்டு பேசுகிறார்கள்.
கல்வியாளர்கள்/பொறியாளர்கள் தொழில்நுட்ப அறிவை,
சமூக ஆர்வலர்கள் பேரழிவு, சுற்றுச்சூழல், வெப்பமயமாதல் போன்றவற்றை,
ஆளுங்கட்சியினர் அரசுக்கொள்கையை,
எதிர்கட்சியினர் எதிர்க்கட்சியாய் இருப்பதாலேயே,
துக்கடா கட்சிகள் அரசியலில் ஜொலிக்கமுடியாமையை,
சிறிய கட்சிகள் கூட்டணி தர்மங்களை,
அதிகாரிகள் தங்களது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை,
பொதுமக்கள் தங்கள் குறுகியகாலப் பயன் மற்றும் சிரமங்களை,
அதிலும் ஏழைகள் பயத்தை,
இடைத்தரகர்கள் நீண்டகால வருமானத்தை,
மொக்கைகள் வெறும் பிரபலமாதலை,
ஊடகங்கள் பரபரப்பு மற்றும் தற்காலிகச் சுரண்டல்களை (exploitation),
தொழிலதிபர்கள் தங்கள் சுயநலன்களை,
போலி அறிவுஜீவிகள் அறிவுரையாற்றக் கிடைத்த வாய்ப்பால் வந்த அரிப்பை,
பொதுவுடைமை பேசுவோர் தம் சார்புக்கொள்கையால் வந்த தடுமாற்றத்தை,
இன்னும் சில உண்மையான பொதுநலன்விரும்பிகள் தாம் தம் அறிவால் அறிந்தது சரி என்ற நம்பிக்கையை,
ஒவ்வொருவரும் பற்றிக்கொண்டு பேசுகிறார்கள்.
இவர்கள் எல்லோராலும் அணு முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா?
அணுவின் ஆக மிகச்சிறிய பகுதியாக தற்போது சொல்லப்படும் பகுதி மீண்டும் பிளக்கப்பட சாத்தியமில்லை என்று சொல்லமுடியுமா? அதேபோல,
அணுஆற்றலின் பிரம்மாண்டம் இத்தனைதான் என்று வரையறுக்கப்பட்டு விட்டதா? அதிகபட்சமாக இப்போது சொல்லமுடிந்தது பூமியை வெறும் புகையாக மாற்றி, அண்டத்தில் சிறிதேசிறிதான அளவில் அசுத்தப்படுத்த முடியும் என்பதே.
அணுமின்சாரம் என்பதும் அணு உலைப்பாதுகாப்பு என்பதும் விபரம் அறிந்தவர்களால் பாமரனுக்கு புரியவைத்துவிட முடியுமா என்பது இருக்கட்டும், நன்கு படித்தவர்களால் கூட அதைப் புரிந்துகொள்ளமுடியுமா என்பதும் விவாதத்துக்குட்பட்டதே.
( நாராயணசாமி என்று பெயர்வைக்கப்பட்டவர்களால் வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அணு உலைப்பாதுகாப்பு பற்றியும் ஒரே நாளில் நாட்டின் 100வது ராக்கெட் ஏவுதல் திட்ட வரையறைகளையும் அறிந்துகொள்ளமுடியும். அவர்களாலும் மற்றவர்களை அறியவைக்க முடியவில்லை )
நமது மக்களின் மின் உபயோகப் பழக்கவழக்கங்களை இனி மாற்றவே முடியாத அளவுக்கு மாற்றிவைத்துவிட்டோம். ஆக தேவை அதிகரிப்பு என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது.
தேவைக்கேற்ற உற்பத்திக்கு இப்போது ஆபத்தில்லாத முறையாக அறியப்படும் நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரிப்புக்குத் தேவையான நீர் கிடைக்கும் என்றே வைத்துக் கொண்டாலும் புதிய அணை கட்டவோ, இருக்கும் அணைகளின் நீர் மட்டத்தை உயர்த்தவோ மேற்சொன்ன வகையினர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா? மாட்டார்கள். அதற்கு வேறு பெயரில் போராட்டங்கள் உருவாகும்.
அனல்மின்சாரத்தில் பூமியின் நிலக்கரி இருப்பு, செலவு, சுற்றுச்சூழல் இத்தியாதிகள் நல்லமுடிவைக் காட்டவில்லை.
இவைபோக, குப்பையிலிருந்து, கடலலையிலிருந்து என்பது போன்ற இன்னபிற முறைகள், இன்றளவும், உருப்படாத திட்டங்கள் என்ற நிலையைத் தாண்டவில்லை.
சூரியமின்சக்தி நல்லதென்று இப்போது சொல்லப்பட்டாலும் அதிக உற்பத்திக்கான இன்றைய சாத்தியக்கூறுகள் நல்ல அறிகுறியைக் காட்டவில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு தனி விவாதம் தேவை. எவ்வளவு நவீனமான மின்னணுசாதனமும் ஒன்று அல்லது இரண்டே வருடங்களில் 50-75% வரை விலை குறையும்போது சோலார் பேனலும் பேட்டரியும் விலை குறைய தொழில்நுட்பம் இல்லையென்பது (சாதாரண ஜலதோஷத்திற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது போலவே) பெரிய புதிரான விஷயமல்ல.
ஆக, பூமியின் கச்சா எண்ணெய் இருப்பு முழுமையாகத் தீராதவரையிலும், குறிப்பிட்ட முதலாளித்துவ நாடுகளிடம் மட்டுமே உள்ள கதிரியக்க உலோகங்களை நல்ல விலைக்கு விற்று, பணம்பெருக்கும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்யும் வகையில், அணுமின் சக்தி மட்டுமே ஆதிக்க சக்திகளால் முன்நிறுத்தப்படுகிறது. வேறு வழியே இல்லை என்னும் பிரமையும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
உண்மையில், வளரும் நாடுகளிடம் அபரிமிதமாக உள்ள வேறு எந்த மூலப் பொருளிலிருந்தும் மின்சக்தி எடுக்கும் தொழில்நுட்பம் இப்போதைக்கு வெளிவராது. வளர்ந்த நாடுகளை எதிர்க்கும் ஒன்றிரண்டு தென்அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளும்கூட அவைகளின் எண்ணெய்வளம் பாதுகாக்கப்படுவது மற்றும் விலையாக்குவது என்ற அளவிலேயே எதிர்க்கின்றன.
இந்த நிலையில் கூடன்குள போராட்டக்குழு சாதிப்பதென்பது கஷ்டமே. உதயகுமார் சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியின்போதுகூட அவரது 3-4 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் எனக்கு இந்த உலை செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை என்ற ரீதியிலேயே பேசினார். அதில் முக்கியமானது இழப்பீடு சம்மந்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு நினைத்தால் அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து வரப்போகும் பிரச்சினைகளுக்காக ஒப்பந்தத்தில் சில அம்சங்களை நியாயமாகவோ ஏமாற்றும் திட்டத்துடனோ சேர்த்து, பிரச்சினையை முடித்து உதயகுமாரை மதிக்கப்படும் நபராக்க அரசின் ஈகோ ஒத்துக்கொள்ளாது. தன்போக்கிலேயே முடிப்பதில் பெரிய சிரமம் இருப்பதாக ஒரு அரசு கருதாது. அப்படியே முடித்துவைத்தாலும் இவர் வேறு பிரச்சினைகளை முன்வைத்து திட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது எனவும் அரசு கருதலாம்.
இன்னொரு அம்சமாக கழிவுப்பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பற்றி உதயகுமார் கிளப்பும் சந்தேகம் பீதி கிளப்புவதாகவும் அதற்கு அரசின் விளக்கம் என்னவோ இந்த சந்தேகம் முற்றிலும் வேற்றுகிரகத்திற்கானது என்கிற ரீதியிலும் இருக்கிறது. இதில் தெளிவிக்க வேண்டிய விஞ்ஞானிகளோ அரசு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பதிலும் அரசின் கூற்றுசார்ந்தே இருக்கிறது. அவர்கள் உண்மைதான் சொல்கிறார்களா என்பதை தெளிவிப்பது யார்? அப்படியே தெளிவித்தாலும் புரிந்துகொள்வது யார்? புரிந்தாலும் சரியாகப் புரிந்துகொண்டதை எப்படி அறிவது?
இது, முற்றாக, தொழில்நுட்பமும் சர்வதேச நுண்ணரசியலும் பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு சிக்கலான விஷயம். இப்போதைய நமது அரசியலமைப்பில் அரசியல் ரீதியாக வேண்டுமானால் பொதுமக்கள் எதிர்ப்பால் சில மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். அணுஉலை விவகாரத்தில் பொதுமக்களின் விருப்பம் வெற்றிபெறுவது குதிரைக்கொம்புதான்.
போராடும் மக்களின் உணர்வுகளையும் போராட்ட குணத்தின் உன்னதத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக இப்படிச் சொல்லவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்தும் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையாலும் வந்த ஆதங்கம் அது.
இவைபோக, இன்னும் சில லோக்கல் சந்தேகங்களும் உண்டு. அரசுகளின், அரசியல்வாதிகளின் சுயநல நடவடிக்கைகள் வியப்பளிக்கின்றன. தமிழக மக்களை முழுமுட்டாள்களாக நடத்தும் விதமும் அதில் ஓரளவு வெற்றி அடைந்திருப்பதும் வேதனையளிக்கிறது.
முந்தைய திமுக அரசு தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மின்வெட்டு. சென்னையில் மின்வெட்டே இல்லாமலும் மற்ற நகர்ப் பகுதிகளில் ஒருநாளைக்கு வெறும் இரண்டுமணி நேரம் மட்டுமே இருந்ததும் பெரிய பிரச்சினையாக அப்போது தெரிந்தது. நாங்கள் வந்தால் மின்வெட்டு உடனே விலகும் என்று சொன்ன அதிமுக வின் ஆட்சி வந்தபின் சென்னை உள்பட தமிழகம் முழுதும் மிகக் கடுமையான 12 மணிநேர அளவுக்கு மின்வெட்டு வந்தது. வேறு எந்தப் புதிய பிரச்சினையோ, மிகப்பெரிய தொழில் திட்டங்களோ வரவில்லை. ஆனாலும் மின்வெட்டு அதிகமானது. மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இதற்கு திமுக தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்புப் பிரச்சாரமோ, போராட்டங்களோ இல்லை. ஆச்சர்யமான அம்சமாகும் இது. ஆட்சியையே தட்டிப்பறித்த ஒரு பிரச்சினை மேலும் மோசமடைந்தும், திமுக இதைக் கையில் எடுக்காதது உள்ளடி அரசியல் தவிர வேறென்ன? கூடன்குளம் மின்சாரம் இல்லாமலேயே, மின்கட்டணத்தைப் பல வருடங்கள் உயர்த்தாமலேயே, திமுக அரசு அதிமுக அரசைவிட பிரமாதமாக மின்விநியோகத்தைக் கையாண்டது என்ற குறைந்தபட்ச உண்மையை வைத்து அதிமுக அரசைக் கண்டித்து, பொதுமக்கள் போராடவில்லை.
மாறாக, கூடன்குள மின்சாரம் தமிழகத்துக்கு முழுதுமாகக் கிடைக்காது என்று தெரிந்தும், அப்படியே கிடைத்தாலும், இருக்கிறதாகச் சொல்லப்பட்ட பற்றாக்குறை தீராது என்பது நன்கு தெரிந்தும், மின்வெட்டுப் பிரச்சினை தீர்வதற்காக, கூடன்குளம் திட்டம் செயல்படவேண்டும் என்று ஆதரவாகப் போராடினார்கள். என்ன ஒரு விந்தை? என்ன ஒரு அசட்டுத் தனம்? இப்போது முதல்வர் ஒருபடி மேலே போய், கூடன்குளம் மின்சாரம் முழுதும் தமிழகத்துக்கு வேண்டும் என்று கடிதங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்!
வேறு பரபரப்புச் செய்திகள் வரும்போது ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்துவிடும். இருக்கவே இருக்கிறது மக்களின் மறதிக் குணமும் புதிது புதிதாய் பரபரப்புத் தேடும் மனப்பான்மையும்.
சில நாட்களாய் நான் அவதானித்த இன்னொரு விஷயம். அணு உலை விபத்து பாதிப்புகளைச் சொல்லும் ஒவ்வொருவரும் இப்போது காட்டும் ஒரு உதாரணம் – பொகுஷிமா. காலங்காலமாக அணுஉலை விபத்துக்கு உதாரணமாய் சொல்லப்பட்ட, பொகுஷிமா பாதிப்பைவிட பலமடங்குகள் பாதிப்புத் தந்த, செர்னோஃபில் விபத்தைச் சொல்வதை ஓல்டுஃபேஷனாக்கி விட்டார்கள்.
இறுதியில் மிஞ்சப்போவது, சாமானியர்களான கூடன்குளம் பகுதி மக்களின் மனதில் இருக்கும் அணு உலை விபத்து பற்றிய தீராத அச்சமும் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அடிப்படைக் கவலையுமே.
சுமார் 20 ஆண்டுகளில் ஒவ்வொரு இலையாக வெளிவந்து 15 ஆயிரம் கோடிகளை விழுங்கி இன்று விருட்சமாக நிற்கும் கூடன்குளம் உலையை தற்போது ஆதரிப்பது தவிர வேறு வழி இல்லை. இந்த ஒருவருடமாகக் காட்டும் அளவுக்கு எதிர்ப்பை 15 வருடங்களுக்கு முன்போ அல்லது குறைந்தது 10 வருடங்களுக்கு முன்போ இதே முனைப்போடு காட்டியிருந்தால் விளைவு வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதாக உதயகுமார் இப்போது சொன்னாலும் பழைய பத்திரிக்கை கட்டிங்குகளைக் காட்டி நிரூபித்தாக வேண்டிய நிலையில்தான் எதிர்ப்பு இருந்திருக்கிறது.
கூடன்குளம் ஒரு பாடமாக இருக்கப் போகிறது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்க்காவிட்டால் எத்தனை அரசுகள் மாறிமாறி ஆட்சியேறினாலும் நடக்கக் கூடாதது நடந்தே தீரும்.
எதிர்ப்பை வெறும் அணுமின் நிலைய எதிர்ப்பாக மட்டும் நடத்தாமல், அணு உலை எதிர்ப்பாக, அணுகுண்டுப் பிரயோகத்திற்கு எதிராகவும் நடத்தவேண்டும்.
மேலும் அதிகரித்து வரும் மின்தேவைக்கு என்ன செய்வது என்பதுதான் விஞ்சி நிற்கும் விடை தெரியாக் கேள்வி……
ஒ.நூருல் அமீன் said,
11/09/2012 இல் 20:01
கூடங்குளத்தை சேர்ந்த நணபர் ஒருவர் சொன்னார். 500 கோடியில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை அரசு தொடங்கி இருந்தால் இந்த எதிர்ப்பே வலுவிழந்து போய்விடும் என்று. மேலும் யாருடைய நிலமெல்லாம் இந்த திட்டத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டதோ அவர்கள் குடும்பதினர் ஒருவருக்கு அனுமின் நிலயத்தில் வேலை தருவதாக சொன்னார்களாம். எல்லாவற்றிற்கும் நாமம் போட்டுவாரோ அம்மா என்பது அவர்களின் அடிப்படை பயமாக உள்ளது.
ஹமீது ஜாஃபர் said,
11/09/2012 இல் 21:58
இப்படி ஒவ்வொரு திட்டத்துக்காக ஒரு நலத்திட்டத்தை அல்லது பல நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டிருந்தால் எந்த திட்டமும் நிறைவேறாது. ஒரு திட்டம் நிறைவேற்றப்படும்போது பல பாதிப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. பலன் ஏற்படும்போது பாதிப்பைவிட பலனே அதிகமாக இருக்கும்.
சும்மா ஓடிக்கொண்டிருந்த வைகை நதியில் காமராஜ் அணைக் கட்டும்போது எத்தனை கிரமங்களை அழிக்கவேண்டியிருந்தது. அப்படி அழிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் பிறந்தவர்தான் கவிஞர் வைரமுத்து. ஒரு சில கிராமங்கள் அழிந்ததினால் எத்தனை கிராமங்கள், விவசாய நிலங்கள், மக்கள் பயனைடைகின்றனர் இன்று. ஆனால் யாரும் காமராஜை நினைத்துப் பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அணையை திறப்பதற்கு முன் எங்கள் கிராமங்களைத் திருப்பிக்கொடு என்று கேட்டாலோ அல்லது அணையைத் திறக்கவிட மாட்டோம் என்று ஒரு புதியக்குமார் போராட்டம் நடத்தியிருந்தாலோ எப்படி இருந்திருக்கும்?
இடிந்தகரையில் போராட்டம் நடத்தினால் நடந்துக்கொண்டிருக்கட்டும். ஆனால் போலிஸ் வரும்போது உதயகுமாரெல்லாம் ஓட்டம் பிடிக்காமல் இருக்கவேண்டும். அதுதான் போராட்டக்காரருக்கு அழகு. இனி எந்த சலுகையும் அரசு அம்மக்களுக்கு கொடுக்கக்கூடாது. அணு மின்நிலையத்தில் வேலையும் கொடுக்கக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் அப்பகுதிக்கு செல்லும் அனைத்தையும் நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். “கோலெடுத்தால்தான் குரங்கு ஆடும்” என்பதும் “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டான்” என்பதும் உதயக்குமாரைப் பொருத்தவரை சரியாக இருக்கும்.
abedheen said,
11/09/2012 இல் 22:14
நானா, இரா.எட்வின் அவர்கள் தன் ஃபேஸ்புக்கில் (http://www.facebook.com/eraaedwin ) எழுதியிருப்பதைப் பாருங்கள் :
***
எனக்கு ஏறக் குறைய ஐம்பது ஆகிறது. இதில் எனக்கு விவரம் தெரிந்த முப்பது ஆண்டு காலத்தில் நான் இப்படி ஒரு செறிவான, நேர்மையான, அப்பழுக்கில்லாத ஒரு அறப் போராட்டத்தை நான் பார்த்ததில்லை. என் பார்வைக்கு எட்டிய தூர வரலாறுகளிலிருந்தும் இப்படி ஒரு நேர்த்தியான அறப்போராட்டத்தை காண இயலவில்லை.
இதை நசுக்குபவனைக் கூட ஒருக்கால் போனால் போகட்டும் என்று வரலாறு மன்னிக்கக் கூடும். ஆனால் கொச்சைப் படுத்தும் யாரையும் சத்தியமாய் காலம் மன்னிக்காது.
“நான்கைந்து பேர் போராடினால் அரசு கேட்க வேண்டுமா?” என்று கேட்கும் ஞானத்தின் ஊற்றுக் கால்களைக் கேட்கிறோம்,
நான்கைந்து பேர்தானா?
சரி நான்கைந்து மக்கள்தான் போராடுவது என்றால் அவர்களிடம் இருக்கும் நியாயம் இல்லையென்றாகிப் போகுமா?
Mohammed Nazir Sulaiman said,
12/09/2012 இல் 14:16
S.Majeed, i have gone thru.Mr Giridar and u are in the same state and include me also in that. We can’t boycott the whole project which is very much advanced in “TECHNOLOGY”and very much essential to all India, in particular to TN to reduce our stress in our homes/towns.
ஒ.நூருல் அமீன் said,
12/09/2012 இல் 19:59
இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை (தமிழ் வடிவம்).
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்துப் போராடும் இடிந்தகரை மக்களோடு நான் முழு நல்லாதரவோடு நிற்கிறேன். ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன். அந்த பேரழிவுக்கு பிறகு அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள போவதாக அறிவித்தன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தன. அன்றாடக் கழிவுகளை கூட அகற்றுவதற்கு வக்கற்றது நமது அரசாங்கம். தொழில் கழிவுகளையும் நகரக கழிவுகளையும் பற்றி சொல்லவே வேண்டாம். அணு உலைக் கழிவுகளை கையாளத் தெரியும் என்று அது தைரியமாகச் சொல்வதை எப்படி நம்புவது? இந்தியாவில் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்வதையும் எப்படி நம்புவது? போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த யூனியன் கார்பைடோடு (இப்போது டௌ கெமிக்கல்) கை கோர்த்த அரசு இது என்று நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அணு பேரழிவை எப்படிப்பட்ட நிவாரணமும் சரிப்படுத்திவிட முடியாது. கூடங்களத்தில் நடந்து கொண்டிருப்பது வளர்ச்சியின் பெயரால் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நம்புகிறேன் – அருந்ததி ராய்
நன்றி: நிஷா மன்சூரின் பேஸ்புக் பக்கத்திருந்து :http://www.facebook.com/nisha.mansur
அணு பேரழிவை எப்படிப்பட்ட நிவாரணமும் சரிப்படுத்திவிட முடியாது. கூடங்களத்தில் நடந்து கொண்டிருப்பது வளர்ச்சியின் பெயரால் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நம்புகிறேன் – அருந்ததி ராய்
http://www.facebook.com/nisha.mansur
abedheen said,
13/09/2012 இல் 10:10
நன்றி அமீன்பாய்.
ஹமீது ஜாஃபர் said,
12/09/2012 இல் 22:33
முப்பதாண்டு கால போராட்டம் ஆபத்து நிறைந்தது என்று ஆலோசித்துக்கொண்டிருந்தால் உலக நாடுகளுடன் போட்டிப்போட முடியாது. வல்லரசு நாடுகளுக்கு ஈடு கொடுக்கவேண்டுமென்றால் இத்தகையத் திட்டங்கள் அவசியம் வேண்டும்.
அறவழியில் போராட்டம் என்று பெருமைப் பட்டுக்கொண்டிருந்தால் அண்டை நாடு நம் தலையில் மிளகாய் அறைப்பான்.
ஆபத்து ஆபத்து என்றால் எதில் ஆபத்து இல்லை? உண்ணும் உணவிலிருந்து சுவாசிக்கும் காற்று வரை மாசு பட்டிருப்பதால் அவற்றிலும் ஆபத்து இருக்கிறது.
காற்றாலை மின் உற்பத்தி என்பது சொல்வதற்கு அழகாக இருக்கும் நடைமுறையில் நிறைவைத் தராது. Solar Power என்றால் ஒவ்வொரு வீட்டின் மேற்கூறையில் solar pannel வைத்தாலும் charge ஆகும் பேட்டரியிலிருந்து வெளிவரும் உணரமுடியாத சல்ஃபூரிக் வாயும் நச்சுத்தன்மை உள்ளதுதான். நச்சுத்தன்மையின் அளவு வேண்டுமானால் கூடுதல் குறைவாக இருக்கலாம். நச்சுப்பொருள் எல்லா வகையிலும் இரண்டரக் கலந்துக்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் எதுவுமே செய்ய இயலாது.
அணு சக்தி ஆபத்தானது அதை தடுக்கவேண்டும் என்றால் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் ஓஜோனையும் துளைத்துக்கொண்டு பூமியைத் தாக்கும்போது யாரால் தடுக்கமுடியும்?
ஆக காலம் மாறும்போது நாமும் மாறவேண்டும். மக்கள் பெருக்கத்திற்கேற்ப தேவைகள் அதிகரிக்கும்போது, அத்தேவைகளை ஈடு செய்ய மின் உற்பத்தியின் அவசியம், அதற்கு தேவையான மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவு குறைவு இவைகளுக்கு அணுசக்தி அவசியம் என்றால் அதை செய்துதான் தீரவேண்டும். அறவழிப் போராட்டம் அராஜகவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒடுக்கியே ஆகவேண்டும். மக்களாட்சி என்பதால்தானே போராட்டம், மன்னராட்சியாக இருந்தால்…. எங்கே போராடிப் பார்க்கட்டுமே.!
அரபு அமீரகத்தில் 1020 ல் அணுமின் நிலையம் செயல்படும்போது நாம் மூக்கின்மீது விரல் வைக்கக்கூடாது.
abedheen said,
13/09/2012 இல் 09:49
ஞாநி : ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு
http://gnani.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/
இதன் PDF கோப்பு (நன்றி : தமிழன்) :
http://www.mediafire.com/?gr4e3cqe2wwqeqv
தாஜ் said,
13/09/2012 இல் 15:36
இந்தப் பகுதியில், ஜஹஃபர் நாநா வலுவான கருத்துகளை வைத்துக் கொண்டிருக்கிறார். பிறர் எல்லோரும் மீடியாக்கள் ஏற்றிவைக்கும் பயத்தை இங்கே கொண்டுவந்து இறக்கிவைக்கிறார்கள்.
நாம் உபயோகிக்கும் ‘செல்’லினாலான கதிர் வீச்சை கிட்டத்தட்ட தெரிந்தே நாம் அசட்டை செய்து விட்டதினால்தான் செல் உபயோகம் இந்த அளவில் ஜரூர் நடைப் போடுகிறது.
அதையொட்டிய வளர்ச்சியும் நமக்கும் நாட்டிற்கும் பயன் விளைவிக்கிறது. பயத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்தால் இந்த வளர்ச்சியை தொட்டிருக்க முடியாது..
கட்டுரையில் நான் மையப்படுதியிருப்பது, அணுவால் நேரடி பாதிப்பை விளைவிக்கும் அணுகுண்டு தயாரிப்பை நாம் இருகரம் நீட்டி வரவேற்கிறோம். ஆனால், அணுவால் ஆக்கப் பூர்வமான மின்சாரம் தயாரிப்பை தடுக்க குரல் எழுப்புகிறோமே ஏன்? என்பதைதான்.
அணுகசிந்து நம் மக்கள் பாதிக்கப்பட கூடாது… ஆனால், அதனை அடுத்த நாட்டின் மீது வீசி அந்த மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கலாம். இல்லையா? இது என்ன நியாயம்? சரி, அந்த அடுத்த நாட்டுக்காரன் நம்மீது அப்படியான ஒன்றை வீசக்கூடுமெனில் நம் மக்கள் கொத்துக் கொத்தாக பாதிப்பை எதிர் கொள்ள மாட்டார்களா?
நாட்டை ஆளும் இந்த அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களின் உயிரை அவஸ்த்தைக்குள்ளாக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது? இவர்கள் தொடர்ந்து சுகபோகமாக ஆள்வதற்கு எந்த உயிரையும் எப்படியும் துன்புறுத்தலாமா?
அணுவே வேண்டாம் என்று சொல்லுங்கள் புரிந்து கொள்ள முடியும். கூடங்குளத்தை முன்வைத்து அந்தப் பகுதிக்கு மட்டுமான அணு எதிர்ப்பை நீங்கள் பேசுவதென்பது பாதிக்கிணறு தாண்டுவதாகத்தான் முடியும்.
தவிர, ஆக்கப் பூர்வமானப் பணிகளுக்கு அணு என்பது குறித்து பிரித்தறியவும் வேண்டும். நாட்டின் மின் தேவையை நீங்கள் நன்கு உணரவும் வேண்டும். நாட்டின் அத்தனை இயக்கங்களும் ஸ்தம்பித்து போகும். நாடு இயங்க சக்கரம் சுழல வேண்டும். சக்கரம் சுழல சக்தி வேண்டும்.
ஹமீது ஜாஃபர் said,
13/09/2012 இல் 23:12
நன்றி தாஜ். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திருக்கிறீர்கள். புகுஷீமா, புகுஷீமா என்று கூக்குரல் இடுகிறார்களே. விபத்து எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. சுனாமி வந்தபின்தானே புகுஷீமா தெரியவந்தது.
கடலுக்கடியில் பூகம்பம் ஏற்பட்டபிறகு சுனாமி உண்டாகி கடலின் அடியிலுள்ள பொருட்களையும் சேர்த்து பூகம்ப சாம்பல் குழம்பாக நீரில் அடித்துவந்தவை அணு உலையை குளிரூட்டும் குழாய்களை அடைத்துக்கொண்டது. வேறு வார்த்தையில் சொன்னால் Reactor cooling system filters completely chocked எனவே உலைக்குச் செல்லும் நீர் தடைப்பட்டது. அதனால் அணு உலையை அணைத்தபின்பும் அதில் நிலைத்திருந்த உஷ்ணம் குளிரமுடியாமல் அழுத்தம் அதிகரித்து உலை வெடித்து சிதறியது.
மேலும் சுனாமி பேரலையால் கடல் நீர் சூழ்ந்துக்கொண்டதால் Emergency cooling system இயக்கமுடியாமல் போய்விட்டது. சுனாமி அணு உலைக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை மாறாக பல சதுர மைல்கள் நிலப்பகுதியை கபளீகரம் செய்தது.
உண்மை நில அறியாமல் புகுஷீமாவை கூடன்குளத்துடன் ஒப்பிடக்கூடாது. புவி இயல் ரீதியாக கூடன்குளம் பகுதியில் நில நடுக்கமோ சுனாமியோ வர வாய்ப்பில்லை. 2004 ல் இந்தோனேசியாவில் உருவான சுனாமி தென் கடலோரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது இலங்கை அரணாக அமைந்திருப்பது. இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது பெருமையளிப்பதல்ல.
Jamalan said,
14/09/2012 இல் 00:50
இந்த உரையாடலை வெளியிட்டிருப்பது நல்ல முயற்சி. உரையாடலின் மையமான இழை அணுஉலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு நிலைப்பாட்டில் கவனிக்கப்பட வேண்டிய அல்லது பேசப்பட வேண்டிய அம்சம் ”வளர்ச்சிக் கோட்பாட்டின் அரசியல்”. மனித குலம் எதற்கு வளர வேண்டும் அல்லது வளர வேண்டுமா? வாழ வேண்டுமா? என்பதே அடிப்படை அறம் சார்ந்த கேள்வி. அப்புறம் நாகரீகம் காட்டுமிராண்டித்தனம் என்கிற இருமை எதிர்வு அடிப்படையிலான சிந்தனை.. இப்படி இதற்குள் உள்ள தத்துவ கோட்பாட்டு சிக்கல்கள் முக்கியமானவை. மூதாதைகள் வாழ்ந்ததைப்போல நாம வாழ முடியுமா? என்பது ஒரு எதேச்சதிகார சிந்தனைதான். உடல் இரண்டு அம்சங்களைக்கொண்டது. ஒன்று வாழ்தல் மற்றது உயிர்த்தல். வாழ்வதற்கு உயிர்ப்புடன் இருப்பது அடிப்படை. சூரியன் அழிவதோ மற்றவையோ உடனடி உயிர் அச்சத்தை உருவாக்ககூடியவை அல்ல. மரணம் நம்மை சுற்றி உள்ளது. எப்படியும் நடக்கலாம் என்பதற்காக ஊரெங்கும் சுடு-இடு காடுகளை கட்டி வாழ முடியுமா? அப்புறம் விஞ்ஞானம் என்பதும் தொழில்நுட்பமும் ஒன்றல்ல. விஞ்ஞானம் என்பதில் அணுவின் பயன்பற்றிய பேச்சு வேறு. ஆனால், தொழில்நுட்பத்தில் அணுவை கட்டுப்படுத்தமுடியாதபோது அதை ஏன் உருவாக்க வேண்டும். இப்படி பல கேள்விகள் உள்ளன..
அலுவலக வேலை.. பிறகு உங்களுக்கு விரிவாக இதை எழுதி அனுப்புகிறேன். நன்றி.
Jamalan said,
14/09/2012 இல் 01:03
உரையாடலுக்கு உரிய பல கருத்துக்களை இங்கு தொகுத்து உள்ளீர்கள். ஆனால் தாஜ் முன்வைக்கும் கேள்வியும், ஹமீது ஜாபர் வைக்கும் வாதமும; சராசரி பொது புத்திமனநிலை தாண்டதவையாக உள்ளன. இப்போ மின்சாரத்தேவையை நிறைவு செய்வது முக்கியமா? அல்லது அனுஉலையால் ஏற்படும் ஆபத்திலிருந்து மனிதகுலத்தை பாதுகாப்பாது முக்கியமா? அனுஉலை என்பது வெறும் மின்சாரம் மட்டுமே தயாரிக்க பயன்படுகிறது என்கிற புரிதலில் தாஜ்மற்றும் ஜாபர் நானாவின் விவாத்கள் இருந்தால்.. அது பொதுபுத்தியை தாண்டாதவை என்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.புகிஷிமா இயற்கை பேரழிவு சரி..செர்ணோபில் அழிந்தது எப்படி? இதில்அறிவாளிகள் அறிவுசீவிகள் மீது வேறு வெறுப்பை உமிழ்கிறார்கள் மென்மைனயாக. ஏனிந்த கொலைவெறி. மத்தியதரவர்க்க சுகபோகங்கள தாண்டத மனங்கள் மட்டுமே மின்சாரம் பற்றி கவலையுறும்.மின்விளக்கு இல்லாத எத்தனை குடிசைகள் இந்தியாவில் உள்ளது.இந்திய மக;களின் தேவைய நிஜஜறைவு செய்யத்தான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா? இப்போ 17 அணு உலைகளை மூடிய ஜெர்மன் தனது மினதேவையை நிறைவு செய்ய சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இப்போ சூழல் மாசுவை தவிரிக்கஅனல்மின்சாரத்தைக்கூட நிறுத்த முயற்சிக்கிறார்கள் அவர்கள்.
ராஜன்குறையின் முக்நூல் பதிவை வாசிக்கலாம் நண்பர்கள்.
அனு உலை மின்சாரம் சாதரண மின்சாரத் தயாரிப்பைவிட அதிக செலவு கொண்டது. உருப்படியான பல மாற்று வழிகள் பற்றி சிந்திப்பதே முக்கியம் மின்தேவைகளுக்கு. அதை விட்டுஅனுஉலையை ஒரு வளர்ச்சியாக பார்ப்பது வீழ்ச்சியின் உச்சமத்தான். நண்பர்களின் இந்த நிலை மிகவும் வருந்ததக்கது.
பிறகு….
நன்றி
ஜமாலன்.
Jamalan said,
14/09/2012 இல் 01:32
http://chaikadai.wordpress.com/2012/09/12/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/
Jamalan said,
14/09/2012 இல் 03:58
http://chaikadai.wordpress.com/2012/09/12/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/
தாஜ் said,
14/09/2012 இல் 19:03
தோழர் ஜமாலன்…
உங்களது கருத்துகளுக்கு நன்றி. என் பதிவில், கூடங்குள அணுமின் ஆதரிப்பு என்பது, எதிர்ப்பவர்கள் அதனை யோசிக்க வேண்டும் என்கிற தொனி
மட்டும்தான். உதயகுமாரோடு நான் உரையாட நினைத்தது வேறு வகைப்பட்டது.
இந்தியா அணு ஆயுதங்களை தயாரிக்கிற நாடுகளில் ஒன்று. அதனை அது வெடித்தும் பரிசோதித்திருக்கிறது. ஒட்டுமொத்த அணுவினாலான தீமைகளை
சுட்டிக்காட்டி, அதற்கெல்லாம் எதிர்பைக் காட்டாமல், கூடங்குள அணு உலைக்கு மட்டும் எதிர்ப்பு காட்டும் திரு. உதயகுமாரிடம் அது பற்றி விரிவாக பேசவும்,
இந்தியா அணு ஆயுதங்களை வெடித்த போது, சந்தோஷம் கொண்டாடிய சிலர் இன்றைக்கு அவருடன் இந்த அணுமின் திட்டத்தை எதிர்க்கும் விந்தையை
விசாரிக்கவும்தான், அவருடனான என் உரையாடலை நான் வடிவமைத்திருந்தேன். இடையில் எங்களது உரையாடல், திடுமென அறுபட்டுவிட்டது.
இங்கே குறிப்பிடும் இந்த அத்தனையையும் கூட, அந்த உரையாடல் கொண்ட கட்டுரையில் குறிப்பிட்டும் இருக்கிறேன். ஜமாலன் இதனை கண்டு
கொண்டதாகவே தெரியவில்லை. பரமானந்த நிலையில், பரவெளியில் திரியும் அவரது சொற்களையும் அதன் அர்த்தப் பாங்கினையும் கூட்டிக் கூட்டி அருத்தம்
காணுபவன் நான், ஆனால் பாருங்கள்.. என் எளிய… ஏழ்மைப்பட்ட மொழி ஜமாலனுக்கு பிடிப்படாமல் அன்னியமாகிவிட்டது!
ஜமாலன், தன் கருத்துக்களின் வழியே அணு உலை எதிர்ப்பாளராக முன் நிறுத்திக் கொண்டிருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது, அவருக்கு
ஆதரவாக அவர் சுட்டி இருக்கும், தோழர் ராஜன்குறையின் இரண்டு பதிவுகளையும் படித்தேன்.
ரரஜன்குறை, தனது ஒரு பதிவில் கூடங்குளத்தின் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் அணு உலையினால் ஆகும்
அபாயத்தையும் தீர விளக்கியிருக்கிறார். அவரது இரண்டாவது பதிவில், மின்சாரத்தை முன்வைத்து அணுமின் உலை தவிர்க்க முடியாது என்பவகளுக்கும்,
ஆபத்து இல்லாத அணு உலையிது என்று கூறிய டாக்டர். அப்துல் காலமின் கூற்றுக்கும் ‘கேள்வி பதில்’ வடிவில் தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறார்.’லாஜிக்’
ரீதியான, வலுவான வாதங்களுமாக தன் பதில்களின் மேலும் தன்னை அவர் நிறுவியிருக்கிறார். நல்லது. மீடியாக்களும் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து தேவைபடும் மின்தேவையை ராஜன்குறை பேச முற்படுகிற போது, ‘நாட்டின் முன்னேற்றம் ஏன் நமக்கு!’ என்றும்,
‘முன்னேறிய நாடுகள் இன்றைக்கு கடன் தொல்லைகளால் அவஸ்தைப் படுகிறபோது, அப்படியானதோர் முன்னேற்றம் நமக்கு அவசியமா?’ என்றிருக்கிறார்.
இது புதிய ‘இஸமாக’ இருக்கிறது. புரிந்துக் கொள்வதில் சிரமம் கொள்கிறேன். ஜமாலன்தான் விளக்க வேண்டும்.
ஜமாலனும் சரி… ராஜன்குறையும் சரி.. ஒட்டுமொத்த அணு எதிர்ப்பை… அதாவது இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதற்கும் எதிர்ப்பை வழிமுறையாக
செய்துவிட்டு, கூடங்குள அணுமின் உலை எதிர்ப்பை கையில் எடுப்பதென்பது சரியாகவும் அர்த்தம் கொண்டதுமாக இருக்கும்.
***
ஜமாலன் said,
15/09/2012 இல் 17:28
தோழர் தாஜ் அவர்களுக்கு…
இப்பொழுதுதான் பார்க்கிறேன். ஆபிதின் பதிவுக் கமெண்ட்கள் எனக்கு வருவதில்லை. ஆபிதினிடம் ஓரிரமுறை இதை சுட்டினேன். அவர் ஏதோ செய்யச் சொன்னார். அது மறந்துவிட்டது. அதனால் நானாக வந்து வந்து “திறந்து” பார்க்க வேண்டி உள்ளது. ))
// பரமானந்த நிலையில், பரவெளியில் திரியும் அவரது சொற்களையும் அதன் அர்த்தப் பாங்கினையும் கூட்டிக் கூட்டி அருத்தம் காணுபவன் நான், ஆனால் பாருங்கள்.. என் எளிய… ஏழ்மைப்பட்ட மொழி ஜமாலனுக்கு பிடிப்படாமல் அன்னியமாகிவிட்டது!//
இது நன்றாக உள்ளது. சத்தும் சித்தும் கூடி ஆனந்த பெருவெளியில் சஞ்சிரிக்க எண்ணும் அந்தராத்மாவின் கண்களில் இப்படி விடுபடுவது சகஜமே…)))
சரி அனுகுண்டு உள்ளிட்ட அனைத்து அணு சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் நாங்கள் (நண்பர் ராஜன்குறையும்) எதிர்ப்பவர்கள் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம். இராணுவமயமாகிவிட்ட விஞ்ஞான சிந்தனை மற்றும் வளர்ச்சிக்கோட்பாட்டின் அரசியலால் உருவாகும் பேரழிவுகள் எப்படி மேலோட்டமாக புரிந்துகொண்டு உள்வாங்கப்படுகிறது என்பதுவே எங்கள் கவனத்திற்குரிய ஒன்று. உதயகுமார் குறித்த உங்கள் கேள்விகள் சரியானவை விவாதிக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சந்தடி சாக்கில் சந்தமுனையில் சிந்துபாடுபவர்களுக்கான ஒரு இடைவெளியை தாங்கள் தந்துவிடக்கூடாது என்பதே எனது கவனம்.
உங்களை நான் அணுஉலை ஆதரவாளராக கணிக்கவில்லை. அணுஉலை எதிர்ப்பும், அணுஆயுத எதிர்ப்பும், சூழலியல் பாதுகாப்பும்.. உள்ளிட்ட அனைத்தும் இத்தோடு இணைத்து போராடவேண்டிய ஒன்றே. உதயகுமார், இப்போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிசார்ந்ததாக எடுத்திருப்பதிலும், அதற்காக ஒரு அரசியல் தன்னுணர்வுமிக்க ஒரு அமைப்பை கட்டமைக்காததிலும், தமிழக. இந்திய அளவில் பிரச்சாரத்தை கொண்டு சென்று ஒரு நாடு தழுவிய அமைப்பாக, போராட்டமாக அதை முன்னெடுக்க முடியாததும் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம். இதெல்லாம் விமர்சிப்பதற்கான நேரம் போய்விட்டது. இப்போதைய பிரச்சனை மக்களின் இந்த எதிர்பபை அரசியன் இந்த அடக்குமுறையை எப்படி பார்ப்பது கையாள்வது என்பதே?
மற்றபடி திரும்ப திரும்ப அதை கையில் எடுத்தபின்தான் இதனை பேசுனும் என்பது எப்படி சரியாகும்? இந்திய அணுகுண்டு சோதனை நடத்தியபோது அதனை ஆதரிக்கவில்லை. அதற்கும் எதிர்ப்பு பதியவைக்கப்பட்டதே. ஆனால் அதை ஆதரித்த அரசியல் கட்சிகள் இன்று உதயகுமாரோடு கைாகோர்ப்பது என்பது அறமற்ற செயலே என்கிற உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதேவேளை, சில முன்னணிகள் இப்படித்தான் அமையும் அமையமுடியும். அணுகுண்டு தேசபக்தி என்கிறரீதியில் எண்ணுவதே ஓட்டுவங்கி அரசியல் கட்சிகளின் நிலை. இப்பவும் மக்களுக்காக அல்ல வாக்குகக்காவே அக்கட்சிகள் இப்பிரச்சனையில் உதயகுமாரை (அல்லது இடிந்தகரை மக்களை) ஆதரிக்கிறார்கள். இதெல்லாம் கவுண்டமணி சொல்வதைப்போல அரசியலில் சகஜமப்பா… )) என்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே நமது நிலை. அவர்களது அறமற்ற செயலை அரசியலாக கருதிக்கொள்வதும் அம்பலப்படுத்துவதும் அவசியம். அதற்காக போராடுபவர்கள் எல்லாம் இப்படி ஒரு சரிநிலைபாடு எடுத்து போராடுவது சாத்தியமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிகழும் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடவதாக அமைந்துவிடக்கூடாது என்பதே எனது பின்னோட்டுத்தின் நோக்கம்.
நன்றி
அன்புடன்
ஜமாலன்
தாஜ் said,
15/09/2012 இல் 20:02
தோழர் ஜமாலனுக்கு…
என் மிகப் பெரிய நன்றி.
அணுவை ஆக்கப் பூர்வமானப்
பயன் பாட்டிற்கு
உபயோகப்படுத்துவதைப் பற்றி
நீங்கள் இன்னொருமுறை யோசிக்கணும்.
ராஜன்குறையிடம்
இந்த கோரிக்கையை வைக்க முடியாது.
‘நாட்டின் முன்னேற்றமா? அது எதுக்கு!’
என்கிற பெருவழிப்பாதையைப் பற்றி
நடப்பவராக
தன்னை காமித்துக் கொண்டிருக்கிறார்!
அதனால்தான் உங்களிடம் மட்டும்.
மின் பற்றாக்குறையால்
தொழில் இழந்திருக்கும்
நம் தொழிலாளர்களை/
அவர்களது குடும்பங்களை
மனதில் கொண்டேணும்…
யோசிக்கணும்.
மீண்டும் நன்றியோடும்
வாழும் அன்போடும்…
-தாஜ்
ஜமாலன் said,
16/09/2012 இல் 10:00
அன்புள்ள தாஜிற்கு…
அணுவை ஆக்கபுர்வமாக பயன்படுத்துவதற்கான கட்டப்பாட்டு தொழில்நுட்பம் இதவரை வளரவில்லை. அணுவின் ஆக்கபூர்வ செயல்பாட்டைவிட அழிவுபூர்வ செயல்பாடே அதிகமாக உள்ளது. தொழில் வளர்ச்சி என்று நீங்கள் குறிப்பிடுவதில் பேச நிறைய உள்ளது. நுகர்விற்கான பண்டங்களை உற்பத்தி செய்வதும், அதில் லாபம் ஈட்ட முனைவதும்தான் தற்போதைய தொழில் வளர்ச்சியாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒருவாகனம் ஒருகார் துவங்கி நுகர்வதே வாழ்வின் உன்னத லட்சியம் என்பதை தவிர மற்ற எதுவும் தற்போதைய தொழில் வளர்ச்சியில் சாத்தியமாகவில்லை. நுகர்வை உற்பத்தி செய்வது (அதில் நமது பிளாக் செயல்பாடுகளுக்கும் பங்கு உண்டு) அதை பெருக்குவது, அதை பரவலாக்கி, அடையமுடியாத வேட்கையை உருவாக்கி அதற்கு அடிமையாக்குவது. உடலை அதன் விளைபொருளாக மாற்றியமைப்பது. இதுதான் இன்றைய முதலாளித்துவ பொருளுற்பத்திக்கு தேவை.
அடிப்படையான சமூக கட்டுமான தொழில்களுக்கு பயன்படும் மின்சாரத்தைவிட, நுகர்வுப்பொருட்களுக்கும், ஆடம்பர, அலங்காரங்களுக்கும், மினவிளக்கு பொழியும் மால்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும்தான் மின்சாரம் முற்றாக பயன்படுத்தப்படுகிறது. தேசப்பற்று என்பது நம் வீட்டில் தெருவில் அனாவசியமாக விரயமாகும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை சேமிப்பதில்தான் உள்ளது. ”ஜனகனமன” பாடுவதிலோ, கிரிக்ககெட் விளையாடுவதிலோ, அல்லது முகத்தில் மூவர்ணக்கொடி வரைந்துகொண்டு கேமிராவின் முன் இளிப்பதிலோ அல்ல. கிரிக்கெட்டிற்கு பயன்படுத்தும் மின்சாரத்தை தொழில்வளர்ச்சிக்கு பயன்படுத்தலாமே?
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அணுவின் ஆக்கபூர்வ தொழில்நுட்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது குறித்து நிறைய கட்டுரைகள் வந்து உள்ளது. பூவுலகின் நணப்ர்கள் ஒரு விரிவான கட்டுரை எழுதி உள்ளனர். குறிப்பாக கு்ண்டு பல்பை ஒழித்தாலே பல மெகாவாட் மின்சாரம் சேகரமாகும். மொபைல்போன்களின் ரிசார்ஜ் மின்சாரம் என்பது ஒரு கணிசமான மின்சாரத்தை சாப்பிடுகிறது. மொக்கை எஸ்எம்எஸ்களை அனுப்புவதும், போனில் மணிக்கணக்கில் பேசுவதும்கூட மின்தட்டுப்பாட்டை உருவாக்கும். ஆனால் இதெல்லாம் குறைவு. பண்ணாட்டு பகாசுர நிறுவனங்கள் பய்னபடுத்தும் மின்சாரம்தான் அதிகம். அதற்குதான் அணுஉலை மின்சாரம் எல்லாம். ஒளிவெள்ளத்தில் வாழும் கண்களை பழக்கிவிட்ட நம்மால், இனி தேசத்திற்காக அரையிருட்டில் வாழமுடியுமா? உண்மையில் மின்பயன்பாட்டின் நுகர்வு அளவீடுகள் பற்றி எந்த புள்ளிவிபரங்களும், மக்கள் பயன்பாட்டினால் விரயமாவதாக சொல்வதில்லை. அணுமின்சாரம்கூட தொழிற்கூடங்களின் பப்பளக்கும் கார்கள் தயாரிக்கத்தானே தவிர,, உள்ளுரில் குடும்பங்களில் பயன்படும் சிலிண்டர்களையோ மின் அடுப்புகளையோ அதிகரிக்க அல்ல.
ஒளிமயமான இந்தியாவில் ஒளிமயமாக வாழப்போவது யார்? என்கிற கேள்வி உங்களுக்கு புரியாதது அல்ல..
நன்றி.
அன்புடன்
ஜமாலன்.
abedheen said,
16/09/2012 இல் 10:37
அன்பின் ஜமாலன், அடிக்கடி நீங்கள் இங்குவந்து ’தூக்கிப்பார்ப்பது’ ஆனந்தம் தருகிறது (எனக்கு மின்னஞ்சலில் வரும் பின்னூட்டங்களை நானாக உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால்தான் உண்டு . வேறு செட்டிங்ஸ் தெரியவில்லை, பார்க்கிறேன் – தூக்காமலேயே). மன்னியுங்கள், அரபிஉலைக்குள் விழுந்து கிடப்பதால் விவாதத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. தகவல் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறேன் என்ற நிஜத்தையும் சொல்லவேண்டும். நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.
ஜமாலன் said,
16/09/2012 இல் 16:03
அன்புள்ள ஆபிதீன்… இப்போ சரியாகிவிட்டது. நேரடியாக “திறந்து பார்க்காமலேயே” போடலாம் கமெண்ட்டுகளை. )) நன்றி உங்கள் பின்னொட்டத்தில் இப்படி நீண்ட உரையாடலை நிகழ்த்தியதற்கு. உங்கள் பதிவகிளன் சப்ஸ்கிரைபர் நான். அதனால் எல்லா பதிவுகளும் வந்த விழுந்தவிடும் எனது பெட்டியில்.))
தாஜ் said,
16/09/2012 இல் 17:32
//ஒளிமயமான இந்தியாவில் ஒளிமயமாக வாழப்போவது யார்? என்கிற கேள்வி உங்களுக்கு புரியாதது அல்ல..//
அன்புடன் ஜமாலன்.
இங்கே எல்லாவற்றிற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. நீங்கள் சுட்டுக்காமித்திருப்பது சரி. காலாத்திற்கும் அதையொட்டிய நமது போராட்டம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. நாளையும் அது தொடர்ந்து இருக்கும். சரியாகச் சொன்னால் அதுதான் என்றைக்குமான நமது முக்கியப் பணி. இது குறித்தான அரசியலை தெரிந்தே விடுவோம். இப்போது அணுவைப் பற்றி பேசுவோம்.
அணுவின் பாதகம் என்பது ஓர் அரிச்சுவடிப்பாடம். ஹிரோசிமா/ நாகசாகி காலத்தியப் பழசு. இருபது வருடத்திற்கு முன்னால் நான் எழுதிய அணு எதிர்ப்பு கவிதை ஒன்றின் தலைப்பு ‘கியாமத்து நாள்’. /அதை கண்டு வளர்த்தவர்களும், வைத்து காப்பவர்களும் அதன் வீச்சில் இருந்து தப்பவே முடியாது/. என்பதாக அந்தக் கவிதை முடியும். அணுவை அறியவந்த காலம் தொட்டு அதன் மீதான என் வெறுப்பு இன்றும் பசுமையாகவே இருக்கிறது.
யு.என்.ஏ. வழியாக ‘அணு ஆயுத ஆய்வுகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வந்த போது, பெரும்பாலான நாடுகள் அதற்கு உடனடி சம்மதம் தெரிவித்தது. சில நாடுகள் இரண்டு வருட, மூன்று வருட அவகாசம் கேட்டு அதன் படிக்கு நடக்கவும் நடந்தது. அன்றைய வளர்ந்த நாடுகளில் இந்தியாவும்/ பாக்கிஸ்தானும்தான் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டேவே மட்டேன் என்று முரண்டுப் பிடித்தது. இன்றுவரைகூட அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக தெரியவில்லை. இந்த இருபது வருடக் காலமாக, சில வளர்ந்தப் பத்திரிகைகள் தவிர்த்து, பிற பத்திரிகைகளோ/ வேறு வடிவ மீடியாக்களோ/ மூத்த, புதிய அரசியல் தலைவர்களோ அவர்களது கட்சிகளோ ஏன் என்று இந்த மத்திய அரசை கேட்டதில்லை.
இன்றை அளவில், வடகொரியாவும்/ ஈரானும் அணு ஆயுதப் பரிசோதனைகள் செய்வதாகவும், அது வேண்டாம் என்றும், அணுமறுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள் என்றும் யு.என்.ஏ.வின் குரலாக அமெரிக்காவும், மேலைநாடுகளும் தொடர்ந்து வலியுறுத்த, இங்கே அதனை வரவேற்று யாருமே பேசியதாகவோ எழுதியதாகவோ தெரியவில்லை. மாறாக அமெரிக்காவையும் மேலைநாடுகளையும் நாம் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறோமே தவிர அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று ந்ம் புத்தி ஜீவிகள் கூட ஆதரவாகவோ/ அதையொட்டியோ குரல் தருவதில்லை.
யு.என்.ஏ. கூட ‘அணு ஆயுத ஆய்வை’ தான் தடை செய்யச் சொன்னது. அணுவைக் கொண்டு ஆக்கப் பூர்வமான பணிகள் செய்ய தடையேதும் சொல்லவில்லை. இன்றைக்கு நாம் பயம் கொண்டு பேசுவதென்பதெல்லாம்…, சுனாமி மாதிரியான/ நிலநடுக்கங்கள் மாதிரியான பேரிடர்களினால் சில நாடுகள் எதிர்கொண்ட விளைவுகளைப் பற்றிதான். இந்தப் பேரிடர் இன்னும் கொஞ்சம் விசாலமாக நிகழ்ந்திருக்கும் பட்சம் இந்த பூமியென்ற கோளமே சிதையவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் நினைக்கத் தவறக் கூடாது. பேரிடர் இங்கே உதாரணமாக வைப்பது அத்தனை உசிதமில்லை என்றே தோன்றுகிறது.
இந்திரா காலத்தில், இந்தியா அணுவில் தன் அடுத்தக்கட்ட வளர்ச்சியை காண்கிறது. அதன் ஆராய்ச்சி மையம், ‘பாபா ஆட்டோமிக் செண்டர்’ என்கிற பெயரில், இந்தியாவிலேயே மக்கள் அதிகம் வாழும் பம்பாயில் அமைந்திருக்கிறது. பம்பாயுக்கு அந்தப் பக்கமும், இந்தப்பக்கமும், நிலநடுக்கம் பலதடவைகள் நடந்தேறி இருக்கிறது. என்றாலும் ‘பாபா ஆட்டோமிக் செண்டர்’ விபத்துக்கு உள்ளானதாக தகவல் இல்லை. அங்கே வழும் மக்களும் அணு என்கிற பூதத்தின் சூழை மடியில் கட்டிக் கொண்டப்படிக்குத்தான் அதீத முன்னேற்றங்களை கண்டுக் கொண்டு இருக்கிறார்கள். கூடங்குளத்தில் பயத்தை விதைப்பவர்கள் யாரேணும் அங்கே பயத்தை விதைப்பார்களே ஆனால்… அதையும் அவர்கள் நம்பக் கூடுமென்றால்… அந்த மக்கள் அங்கே ஒரு நாள்கூட நிம்மதியாக வாழமுடியாது.
மின்சாரத்தை பணக்காரன் உபயோகித்தாலும் பரிதேசி உபயோகித்தாலும் அவனுக்கு மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் கடமையாக போகிறது. மின்சாரத் தேவைக்கு வேண்டுவதெல்லாம் மின்சாரமே அன்றி வேறு எதுவும் இருக்க முடியாது. குண்டு பல்பை நொறுக்கிப்போட்டால் மின்சாரம் நமக்கு மிச்சமாகி பிற சங்கதிகளுக்கு உபயோகிக்கலாம் என்கிற காந்திய சித்தாந்தமெல்லாம் இன்றைய நடைமுறைக்கு ஒத்துப் போகுமா என்பதை தீர சொல்லமுடியாது. தவிர, வளரும் மின் தேவை இங்கே பூதகரமாக பெருத்துக் கொண்டே இருக்கிறது. அதன் முன்னால் நாம் காமடியெல்லாம் அடிக்கக் கூடாது.
நீர் மிசாரத்தை அதிகப்படுத்தலாம் என்றால்… இன்னும் கொஞ்ச காலத்தில் கால்கழுவக்கூட நீர் இல்லாத நிலை என்கிற நிலை. அனல் மின்சாரம் என்றால்… நலகரிக்காக வெளிமார்கெட்டை எப்பவும் எதிர்ப் பார்க்கவேண்டிய நிலை/ காற்றாலை என்றால்… வாயுபகவானை நம்பிக்கிடக்கும் நிலை. அதுவும் ஓர் மூன்று மாதம் மட்டும் என்கிற நிலை/ இந்த அணு மின் நிலையத்தை இந்திய அரசு சொல்லக் கூடிய சொல்லக்கூடாத பல காரணகாரியத்தை கொண்டுதான் நிறுவுகிறது என்றாலும்… மின்சாரத்தில் பஞ்சப்பட்டு நிற்கும் நமக்கு அது தேவையாகத்தான் இருக்கிறது.
கூடாங்குள அணுமின் உற்பத்தியை தடைசெய் என்று நிற்பவர்கள் முன்னால்… ஜமாலனையு சேர்த்து, ஓரே ஒரு கேள்வி மட்டும். கூடங்குளத்தை சுற்றியுள்ள அறுபது மையில் சதுரப்பரப்பு மக்களுக்காக கருணை கொள்கிற நீங்கள்… மின்சாரம் இன்றி தவிக்கும் மொத்த தமிழ்நாட்டின் மக்கள் மீது சற்று கருணைகொள்வீர்களா மாட்டீர்களா?
எழுத வாய்ப்பளித்த ஜமாலனுக்கு
நன்றியுடன்
-தாஜ்
***
ஜமாலன் said,
17/09/2012 இல் 12:18
அன்புள்ள தாஜ்….
கட்டக்கடைசியில் உங்கள் நிலைபாடை ஒழிவுமறைவின்றி முன்வைத்ததற்கு நன்றி. இதைதான் நான் முன்பே பொதுபுத்தி தாண்டிய சிந்தனை இல்லை என்றேன். அதற்கு காதை வளைத்து மூக்கை தொட வேண்டியதில்லை. மின்சாரம் மட்டுமின்றி ஒருவேளை உணவிற்கு வழியற்ற மக்கள் மின்சார வேண்டும் மக்களைவிட அதிகம். முதலில் மின்சாரத்தைவிட வயிற்றிற்கான உணவு பற்றி சிந்திப்பது முக்கியம் உங்கள் தர்க்கப்படி. நான் கனவு காண்பவன் இல்லை. மின்தேவை முக்கியம் என்பதைவிட, அதை அழிவிலிருந்தா பெறவேண்டும் என்பதே என் கேள்வி? அணுஉலை வேண்டாம் என்பவர்கள் மின்சாரம் இல்லாமல் வாழும் “காட்டுமிராண்டி காந்தியவாதிகள்“ என்கிற எள்ளல்தான் நான் சொன்ன பொதுபுத்தி என்பது.அனஉலை எதிர்ப்பும் மின்சார துவையும் அரசால் இணைக்கப்பட்டது. அதை அப்படியே பிரதிபலிப்பதில் என்ன பயன்? அதான் அரசாக செயல்படுவது என்பது.
வளர்ச்சிதான் வாழ்க்கை என்று முடிவெடுத்தால், விவசாயம் உள்ளிட்ட பலவற்றை வளர்க்க வாய்ப்பு உள்ளதை மறுக்க மாட்டீர்கள். அனுஉலை மின்சாரம்கூட ஒரு கட்டத்தில் தோரியம் யுரேனியம் உள்ளிட்ட அனுக்கதிர் தனிமங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள். வாயுபகவானைப்போல அனு பகவானும் அள்ளஅள்ள குறையாத அட்சயப்பாத்திரம் அல்ல. மின்தேவை மட்டும்தான் கூடங்குள திட்டத்தின் உட்கிடை மற்ற எந்த தேவையும் இல்லை என்று அறிதியிட்டு சொல்ல முடியுமா? பேரிடர்களால் மக்கள் இறந்துபோவதை இத்தோடு நீங்கள் ஒப்பிடுவது. கல்லில் அடிபட்டாலும் சாவான் மனிதன் என்பதை போல உள்ளது. எல்லோரும் சாகத்தான் போகிறோம் என்கிற உங்கள் தர்க்கப்படி, எதற்கு பிறகு வாழ்க்கை வளர்ச்சி எல்லாம். அப்படியே சாகலாமே? எதற்கு காத்திருந்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து பிறகு சாகவேண்டும்.
அனுஉலை என்பது அதிகாரத்தின் குறியீடு. அது மின்தேவைக்கு மட்டுமல்ல. அது உலக அரசியலில் தன்னை முன்னிருத்தும் வல்லரசு அரசியலின் அல்லது வல்லூறு அரசியலின் குறியீடு. காந்திய வழி என்கிற உங்கள் மென்மையான எள்ளல் எனக்கு புரிகிறது. ஆனால், தொழில்நுட்பத்தின் கேட்டை முதலில் உணர்ந்தவர் காந்தி என்பது முக்கியம். மிகவும் சாதரணமான கேள்வி இது? அணு உலை சம்பந்தப்பட்ட அல்லது அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்தும் ஏன் ராணுவ ரகசியமாக, இறையாண்மைக்கு எதிரான தேசத் துரோக குற்றமாக கருதப்படுகிறது. ஏன் அரசு வெளிப்படையாக எதையும் அறிவிப்பதோ செய்வதோ இல்லை.
அணுவை பிளக்கவும் இணைக்கவும் ஆன ஆய்வையும், அணுகுண்டிற்கான விதிமுறைகளையும் உருவாக்கிய ஐன்ஸ்டைன சொன்னார் ஒரு நிருபரின் ”மூன்றாவது உலன யுத்தம் வந்தால் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?” என்ற கேள்விக்கு. ”மூன்றாவது யுத்தம் வந்தால் என்ன பயன்படுத்தப்படும் என்று எனக்கு தெரியாது. நான்காவது யுத்தம் வந்தால் அதில் பயன்படுத்தப்படம் ஆயுதங்கள் தெரியம். அது கல், மண் மற்றும் கற்கால கருவிகள் என்றார்.” இதன்பொருள் உங்களுக்க புரியும் என நினைக்கிறேன். சுணாமி வந்து அழிவதும் ஆண ஆயதங்களால் அழிவதும் ஒன்றா? புவி 2012-ல் நாஸ்டர்டாமோஸ் சொல்வதைப்போலவோ அல்லது கியாமத் நாளின் 7 அடையாளங்களால் அதன் பேரழிவுகளால் அழிவதும், நாமே குழிதோண்டி புதைத்துக்கொள்வதும் ஒன்றா?
மற்றொரு கதையும் சொல்கிறேன். அணுவிஞ்ஞானத்திற்கு அடித்தளமிட்ட விஞ்ஞானி ருதர்போர்டிடம் அவரது மாணவர் நீல்ஸ் போர் ஒரு ஆய்வு முன்னோட்டத்தை எழுதி தருகிறார் 1912-ல். (நினைவிலிருந்து எழுதுவதால் சரிபார்க்கவேண்டும் வருடத்தை) அதில் அவர் அணுவிற்கான முன்மாதிரியை வடிவமைத்து, அதை பிளக்கவும் முடியும் என்பதைற்கான கோட்பாடுகளை எழுதி தருகிறார். அதை வாங்கிய ருதர்போர்ட் அதை கிழித்து எறிந்துவிடுகிறார். காரணம் அது பேரழிவை உருவாக்கும் என்று. அதன்பின் அவரிடமிருந்த பிரிந்து சென்ற நீல்ஸ்போர்- தான் அனுவின் இன்றைய மாதிரியை வடிவமைத்தவர். ஆக, அணுவிஞ்ஞானம் என்பது ஆக்கத்தையும் அழிவையும் உள்ளடக்கியது என்றாலும், அதன் ஆக்கக்கூறைவிட அழிவிற்கான கூறுகளே அதிகம். ஒருவேளை அணுவை அதன் ஆற்றவை நம்மால் கட்டுப்படுத்தி, அதன் கதிர்வீச்சிலிருந்து மனித குலத்தை காப்பாற்ற முடியுமெனில் பிரச்சனையில்லை. அதற்கான உத்தரவாதம் இல்லை. எல்லாவற்றையும்விட, அரசின் அதிகாரத்தோடு அதற்கு உள்ள உறவே இங்கு முக்கியமானது. அணைகளை அதிகம் கட்டுவதும் அல்லது நீர்தேக்கங்ளை உருவாக்கும் இன்னும் பல ஆக்கப்பணிகளை செய்வதை விட்டு பலகோடி ருபாய்களில் எதற்கு அணுஉலை என்றால் அதான் அதிகாரம். அணு ஆற்றலே இன்றைய உலகின் வல்லாண்மையை நிருபிப்பது.
அணுஆயுதத்தை ஒழிப்பது என்பது. அணு ஆயுதத்திற்கான மூலப்பொருளை உருவாக்கும் அணுஉலை -மின்சாரத் தொழில்நுட்பத்துடன் உறவு கொண்டது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இடிந்தகரை 60 கி.மி மக்கள் சாவா வாழ்வா என்பதாக இதனை நீங்கள் சுருக்கி பார்ப்பதாக இருந்தால், இந்த உரையாடலை தொடர்வதில் அர்த்தமில்லை. அப்புறம் எவன் செத்தால் எனக்கென்ன எனக்கு தேவை மின்சாரம்தான் என்பது என்னவிதமான அரசியல்? இதெல்லாம்தான் பொதுஜன மனநிலை என்பது. பொதுபுத்தி என்பது ஒரு ஆளுகை தொழில்நுட்பம். அதை அரசு உருவாக்கி, பரவலாக்கி, பெருக்கும். நம் ஒவ்வொருக்குள்ளும் அது அரசாக செறிவடையும். அதை நாம் உணர்ந்தால் நாம் அரசாக இருப்பதிலிருந்து நம்மை விலக்க முடியும். அரசு என்பது டெல்லியில் இல்லை. அது நமக்குள்ளும் உள்ளது. அதன் பலவெளிப்பாடுகளே இத்தகைய போராட்டங்களில் வெளிப்படும். இன்னும் விரிவாக எழுதினால் கட்டுரையாகிவிடும். நுகர்வின் வெறியும் அணஉலை ஆதரவும் அரசாங்கத்தின் இரண்டு நுட்பங்கள் என்பதையும் இரண்டிற்கமான உறவை ஒரு கட்டுரையாக எழுதலாம் என உள்ளேன்.
உங்கள் நிலைபாடு வருந்ததக்கது என்பதை மட்டும் பதிய வைக்கிறேன். அணுஉலை எதிர்ப்பாளர்களை அரசும் மின்சார விரும்பி பொதுமக்களும் விரொதியாக துரோகியாக பார்ப்பதைப்போல நீங்கள் என்னை பார்க்க மாட்டீர்கள் என நம்பகிறேன்.
அணுஆயத எதிர்ப்பு பற்றிய உங்கள் நெடிய வரலாற்றுக் குறிப்புகளில் எனக்கு ஆட்சேபனைகள் இல்லை. இந்திய அரசு கையொப்பம் இடாததை யாரும் தட்டியோ எழுதியோ கேட்காததால், இந்த போராட்டத்தை நடத்த தகுதி இல்லை என்பதைப்போலவே நீங்கள் எழுப்பும் பல கேள்விகளும் உள்ளது. அதை செய்யாததால் இதை செய்யாதே என்பதைப்போல. அதாவது செய்தால் முழுமையாக செய்? இல்லாவிட்டால் செய்யாதே? என்பதைப்போல. பகுதிகள்தான் முழமையை உருவாக்கும். அதனால் இத்தகைய போராட்டங்கள்தான் ஒரு முழுமையான போராட்டத்தை கட்டமைக்கும். அரசு அதிகாரத்தை குவிப்பதில்லை. பரவாலாக்கி வைத்து உள்ளது. அதனால் அந்தந்த மட்டங்களில் மட்டுமே அதை எதிர்க்கமுடியும். அப்படித்தான் இந்த போராட்டமும். இவ்வளவுக்க பிறகும் யார் செத்தாலும் எங்க வீட்டில் குண்டு பல்போ ஒல்லி பல்போ எரிவதே முக்கியம் என்று வாதிட்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நன்றி தொடர்ந்து உரையாடியதற்கு.
அன்புடன்
ஜமாலன்.
தாஜ் said,
17/09/2012 இல் 14:05
நன்றி
ஜமாலன்……
நான் என் பக்கத்து செய்திகளை
சொல்லிவிட்டதாக கருதுகிறேன்.
தொடர்ந்து சொல்லவும்
என்னிடம் எதுவுமில்லை.
தவிர,
இனியும் நான்
அதையும் இதையும் தொடர்ந்தால்…
நீங்களும் நானும் கலந்துரையாடல் அழகில்
கருத்துக்களை முன்வைத்ததென்பது…
விவாதம் மாதிரியான சாயல் கொண்டுவிடும்.
வாசகர்கள்தான்
இனி
தங்கள் பக்கத்து கருத்துக்களை வைக்கணும்.
மீண்டும் நன்றியுடன்
-தாஜ்
அனாமதேய said,
18/10/2012 இல் 20:07
அருமையான ஒரு விவாதத்தை, மிக தாமதமாகவேனும் பங்கேற்கின்றேன்.நன்றி.
கல்பாக்கம் மற்றும் அதைச் சுற்ற்யுள்ள பகுதிகளில் பிறக்கும் மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைந்த குழந்தைகளே, கூடங்குள எதிர்ப்பிற்கு முக்கிய காரணி.