அமரந்தாவின் பழைய பேட்டி இது. ‘தோழி’யில் வெளியானது. அமரந்தா – சிங்கராயர் ஆகியோரின் தமிழாக்கத்தில் உருவான ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (கூகி வா தியாங்கோ (Ngugi wa Thiong’o) வின் ‘Devil on the Cross’ நாவல்) வந்த சமயத்தில் வெளியானது என்று நினைக்கிறேன்.
***
‘வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும்
இடைவெளி ஏற்படாமல்… ‘ : அமரந்தா
சந்திப்பு : ரவிக்குமார்
உலக மொழிகளிலிருந்தோ அல்லது ஆங்கிலத்திலிருந்தோ நம் மொழியில் மொழி பெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலரில் அமரந்தாவும் ஒருவர். பெண்ணியம் தொடர்பான கருத்துகளில் அதிகம் ஈடுபாடு காட்டி வருபவர். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் தனித்துவத்துடன் திகழ்கிறார்.
‘அமரந்தா என்ற பெயர்,’ வித்தியாசமாக அதிகம் கேள்விப்படாத பெயராக இருக்கிறதே …..
”லத்தீன் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாவல் ‘காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்‘சின் ‘ஒரு நூறு வருடத் தனிமை’ என்ற நாவல். இது 1982-ஆம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றது. அந்த நாவலில் அதிகம் பேசாத ஒரு பெண் கதாபாத்திரத்தின் பெயர்தான் அமரந்தா. அதற்கு முன்னால் என் நிஜமான பெயர் விசாலாட்சி.”
உங்களின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தவை எவை ?
” அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நான் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டே தில்லியில் கல்வியியல் துறையில் வேலை பார்த்து வந்த நேரம். 1982ல்தான் பயனுள்ள தீவிர கருத்துகளை உள்ளடக்கிய சிறுகதைகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருந்த ‘படிகள்’, ‘இலக்கு’, ‘ஞானரதம்’ போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த பத்திரிகைகளை நான் பார்க்க நேர்ந்தது. அதன் விளைவே, தீவிரமான கருத்துக்களை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்கக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.”
நீங்கள் சொல்ல நினைத்த கருத்துகளை நேரிடையாக உங்கள் படைப்புகளின் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கலாமே ?
” இந்தியாவின் 200 ஆண்டு கால காலனி ஆட்சியின் வரலாற்றைப் பாடநூல்களில் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம், தென் அமெரிக்காவில் குறுகிய காலமாக இருந்தாலும் நிஜமாக நடந்த சுதந்திரப் போராட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிய வைப்பது என் கடமை. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளை உள்வாங்கி என்னுடைய படைப்புகளில் சொல்லக்கூடிய அளவுக்கு, நேரிடையான அனுபவங்கள் எனக்குப் போதுமான அளவுக்கு ஏற்படவும் இல்லை.”
நீங்கள் முதலில் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதை எது ? அதை யார் வெளியிட்டார்கள் ?
” மார்க்வெஸ்ஸின் No One writes to the colonel – சிறுகதைத் தொகுப்பிலிருந்து Tuesday siesta என்ற சிறுகதையை ‘ஒரு செவ்வாய் பகல் தூக்கம்’ என்னும் தலைப்பில் 1982 இல் மொழி பெயர்த்தேன். அது 83 இல் ‘படிகள்’ இதழில் வெளிவந்தது.
மொழிபெயர்ப்புக்கு உகந்த கதைகளை எத்தகைய ஊடகத்தின் மூலம் தேர்ந்தெடுத்தீர்கள்?
”ஆங்கிலம் தவிர, அன்னிய மொழிகள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் மொழி பெயர்க்கும் மூலக்கதைகள் எல்லாமே லத்தீன், ஸ்பானிஷ் மொழிகளில் இருப்பவை. என்னுடைய முதல் சிறுகதை வெளிவந்த உடனேயே நண்பர்களும், உறவினர்களும் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்கள். நண்பர் ஒருவரின் மூலம், ‘கியூபா’விலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப் பத்திரிகையான, ‘கிரான்மா’ (Granma)கிடைத்தது. ஒன்று, இரண்டு அல்ல கிட்டத்தட்ட இரண்டு வருட சேகரிப்பு! வாரத்திற்கு ஒருமுறை இலக்கிய இணைப்புடன் வருவதுதான் ‘கிரான்மா’ பத்திரிகையின் விசேஷம்.
அந்த இணைப்புகளில் வெளிவந்தவைகளில் பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து நான் மொழி பெயர்த்தேன். என்னுடைய இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத்தினர், ‘அன்று செவ்வாய்க்கிழமை அதை நான் எப்படி மறக்க முடியும் ?’ என்னும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டனர்.
இதைத் தவிர ‘மீட்சி’ , ‘சிதைவு’ , ‘ஆய்வு’ , ‘1/4’ , ‘ங்’ போன்ற இலக்கியப் பத்திரிகைகளிலும் என்னுடைய மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ‘ங்’ வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுதியில் என்னுடைய ‘லிமோன் துறைமுகம்’, ‘பனியும் நெருப்பும்’ சிறுகதைகள் இடம் பெற்றன. கோணங்கியின் ‘கல் குதிரை’ இதழ் வெளியிட்ட உலகச் சிறுகதைகளின் தொகுப்பில், ‘கைதி’, ‘சாவும் அமைதியும்’ ஆகிய உரண்டு சிறுகதைகள் வெளி வந்தது. பொதியவெற்பனின் ‘பறை’யில் ‘சந்திப்பு’ வெளியானது. ‘கிரணம்’ பத்திரிகையில் ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் வெர்னர் ஹெர்ஸாக்கின் பேட்டி வந்திருக்கிறது.
சே குவாராவின் ‘பொலிவிய நாட்குறிப்பு’ மற்றும் ‘நிழல்களின் உரையாடல்’ (Mothers And Shadows – by MARTA TRABA) நாவல் இந்த இரண்டையும் தாமரைச் செல்வி பதிப்பகம் 97-ஆம் ஆண்டு முறையே நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியிட்டது.
எந்த ஒரு படைப்பும், பாமரனையும் சென்றடைவதில்தானே அந்தப் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்ததாகக் கொள்ளப்படும். நீங்கள் சொல்லும் இலக்கியப் பத்திரிகைகளை எல்லோரும் படித்திருக்க வாய்ப்பில்லையே ? அவர்கள் பெரும்பாலும் படிக்கும் வெகு ஜனப் பத்திரிகைகளில் நீங்களும் எழுதலாமே?
”நாங்கள் எழுதுவதைக் குறைக்காமல், மாற்றாமல் அப்படியே வெளியிடுவதற்கு வெகு ஜனப் பத்திரிகைகளிலும் சரி, அதை நடத்துபவர்களின் மனத்திலும் சரி, இடம் எங்கே இருக்கிறது ? கொடுப்பதை முழுமையாகப் போடுவதற்கு அவர்களுக்கும் விருப்பமில்லை. அவர்களின் ‘கமர்ஷியல்’ கத்தரிக்கோலுக்கு எங்கள் படைப்புகள் இரையாவதில் எங்களுக்கும் உடன்பாடில்லை. நல்ல விஷயங்களைத் தேடித்தான் போக வேண்டும். அப்படி தேடலுடன் வரும் குப்பன், சுப்பன்களுக்காகத்தான் நாங்கள் எழுதுகிறோம். நல்ல படைப்புகளை வெளியிடும் அளவுக்கு வெகு ஜனப் பத்திரிகைகளின் தரம் உயர வேண்டுமே தவிர, ‘எப்படியாவது எங்கள் படைப்புகள் வந்தால் சரி…’ என்று எங்களால் தாழ்ந்து போக முடியாது.”
பிரச்சினைக்குரிய போராட்டக் கருத்துக்களை கொண்ட படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதில் ஆபத்து குறைவு. அதன் மூலத்தைக் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம். இதைப் போன்ற செளகரியங்கள் மொழி பெயர்ப்பில் இருக்கிறது இல்லையா?
”அப்படியெல்லாம் தீர்மானமாகச் சொல்லி விட முடியாது. ஆபத்தில்லாமல் எதுவுமில்லை. பின் விளைவுகளின் தன்மையில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக விளைவுகளே ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் விஷயம் என் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.”
பாரதியார், தன்னுடைய சொந்தக் கருத்துகளைத் திரெளபதியின் கூற்றாகப் பாஞ்சாலி சபதத்தில் சொல்லி இருப்பது போல, எந்தப் படைப்பிலாவது உங்களின் குறுக்கீடு (Interpretation) இருந்திருக்கிறதா?
”மகாபாரதம் வாய் வழிக்கதை. நான் மொழிபெயர்ப்பது வெவ்வேறு நாடுகளின் அரசியல் இலக்கியம் (Political Literature). இன்னும் சொல்லப் போனால், அது மூலக் கதாசிரியர்களின் Idiological Statement. அதற்கு 100% உண்மையாக என்னுடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்று முயற்சிப்பேன். ஸ்பானிஷ் மொழியை யாராவது சொல்லித் தந்தால், கற்றுக் கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.”
‘படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை, பழக்க வழக்கங்களோடு அவனுடைய படைப்பு சொல்லும் கருத்துகள் முரண்பட்டிருக்கலாம். படைப்பையும், படைப்பாளியையும் ஒப்பீடு செய்யக்கூடாது’ என்பது ஒரு சிலரின் கருத்து. ‘வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்பவனே படைப்பாளி’ என்பது ஒரு சிலரின் கருத்து. இதில் நீங்கள் எந்தப் பக்கம்?
” ஒரு தனி மனிதன், மனிதத் தன்மையை இழக்காத வரைதான், அவனுடைய திறமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
சிறந்த படைப்புக்கான அடிப்படை எது ?
”படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் சமூக பிரதிபலிப்பு மட்டுமே படைப்பின் நோக்கமாக இருக்கக் கூடாது. மாறாக, அதிலிருந்து விடுபடவும், மேன்மைப்படுத்தவும், அல்லது ‘இதை விட சிறந்த வழி என்ன?’ என்று மக்களைச் சிந்திக்க வைப்பதும்தான் சிறந்த படைப்புக்கான அடிப்படையாக நான் நினைக்கிறேன்.”
**
நன்றி : அமரந்தா, ஆறாம்திணை (தோழி), ரவிக்குமார்
**
தொடர்புடை சுட்டி :
மறுமொழியொன்றை இடுங்கள்