”இஸ்மாயில்லாம் நாவல் எழுதுறார்’ண்டு போடுங்க நானா’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடும் தம்பி இஸ்மாயில் நாகூர் நகைச்சுவைக்காகவே ஒரு ஒரு தளம் இப்போது தொடங்கியிருக்கிறார். அதிலுள்ள சேத்தநானாவின் ‘வெடை’ பிரமாதம். சேத்தநானா நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஒருவர் ‘சோடா கலர், சோடா கலர்..” என்று திரும்ப திரும்பக் கூறி விற்றுக் கொண்டு வந்தாராம். சேத்தநானா அவரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் : “சோடா கலர் இல்லை தம்பி ; அது வெள்ளை!”
‘தொடரும் முடிவுகள்’ என்ற இஸ்மாயிலின் முதல் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தைப் பதிகிறேன். ‘சுட்டுவிட’ மாட்டேன் என்ற தைரியத்துடன் அனுப்பிய அவர் அன்புக்கு நன்றி.
– ஆபிதீன் –
***
தொடரும் முடிவுகள்
1
சென்னை வரை காரில் சவாரிக்கு போய் விட்டு ராத்திரி 11 30 மணிக்கு வந்து அப்படியே துணி கூட மாத்தாமல் அசந்து தூங்கிய அஸ்லத்தை அவனுடைய ம்மா அவசரமா எழுப்பிய போது 1 30 மணி இருக்கும்
‘என்ன்னம்ம்மாமா..” அசதியில் கண்களை கூட திறக்காமல் வாய்க்குள்ளேயே முனங்கினான்
‘செத்த (சற்று) எந்திரிம்மா புள்ளக்கி வலி வந்துடுச்சு.. ஒடனே ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போவணும்’ என்று சொன்ன ஐசாம்மாக்கு பதட்டம் முகத்துல அந்த மை இருட்டுலேயும் அப்பட்டமாய் தெரிந்தது.
அஸ்லம் ஒடனே எழுந்து விட்டான். ‘டாக்டர்ட்ட் டெலிபோன் போட்டு சொல்லிடுங்கம்மா நான் போய் கார எடுத்துட்டு வந்துடறேன்..” – கால் வாசல் பக்கம் ஓடியது – அசதி உடம்பை விட்டு ஓடியது
“நான் சொல்லிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி இருந்த கூடத்தறைக்குள் மறைந்தார் ஐசாம்மா, பக்கத்து அறையில் ஜமீலா வலி பாதி பயம் பாதியில் “ம்மா.. ” என்று கத்திக் கொண்டிருந்தாள்.
“இந்தோ இங்க தாம்மா இருக்கேன்.. டாக்டர்ட்ட போன்ல சொல்லிட்டு .. ஹலோ மேரியாம்மா.. நான் தான்ம்மா ஐசா பேசுறேன்..” – ஐசாம்மாவின் குரல் ஜமிலாவுக்கு கேட்டுக் கொண்டிருந்தது.
ஐசாம்மா எப்படி இருப்பார் என்று எழுதி விட்டால் ஜமிலாவை பற்றி தனியாக ஒரு வரி கூட எழுத வேண்டிய தேவை இருக்காது. ரெண்டு பேரும் ஒண்ண பாத்த மாதிரி தான் இருப்பார்கள். குரல் கூட கிட்டதட்ட கிணத்துலேந்து பேசுற மாதிரி ஒரே மாதிரியா தான் இருக்கும்.
அஸ்லம் காரை ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் ஐசாம்மா ஜமிலாவை அழைத்து கொண்டு வாசலுக்கே வந்து கொண்டிருந்தார். ‘போற வெட்டியில முத்துகனியை கூப்டுக்கலாம்” என்று சொல்லி மெதுவாக காரில் ஏறி “அல்லா தவக்கல்..” என்றதும் கார் புறப்பட்டது.
தெருமுனையில் முத்துகனி வீட்டில் காரை நிறுத்தி அஸ்லம் மட்டும் இறங்கி ஓடி போய் வாசலில் இருந்த அழைப்பு மணியை அடித்தான். முத்துகனி துப்பட்டியை கையில் எடுத்துக் கொண்டே “புள்ளக்கி நோக்காடு வந்துடுச்சா..” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.
அஸ்லத்தின் ஆச்சர்யத்தை பொருட்படுத்தாது, “எங்க (எங்கே?) புள்ள..” என்று தான் தூக்கி வளர்த்த ஜமிலா எனும் புள்ளையை நோக்கி ஓடி போய் காரில் ஏறிக் கொண்டார். அந்த ஜமிலா எனும் பிள்ளையின் வயிற்றில் இன்னொரு பிள்ளை பிறப்பதற்கு தயாராக இருந்தது.
“அஞ்சாமை முத்துகனியின் உடைமையடா..” என்று பாட்டு கூட படிக்கலாம், அந்த அளவுக்கு தைரியம், எதற்கும் பயப்பட மாட்டார், வீட்டிற்கு வந்த ஒரு மகா திருடனை வெறவு (விறகு) கட்டையால அடிச்சு புத்தூருக்கு கட்டு போட குத்துயிரும் குலையிருமா அனுப்பி வச்ச வீராங்கனை தான் அவர். இதனால் இவருக்கு ஊர்ல “வெறவு கட்டை அவுலியா (இறை நண்பர்)” என்று கூட ஒரு பெயர் உண்டு.
நாகப்பட்டினம் சுகம் மருத்துவமனையில் ஜமிலாவை கொண்டு வந்து சேர்த்த போது 2 20 மணி இருக்கும். குறிப்பிட்ட நாளைக்கு முன்னதாகவே நோக்காடு வந்து விட்டதால் அப்படியே துப்படியோடு வந்தது தான், அவசரத்தில் தேவையான எந்த ஒரு பொருளும் எடுத்து வரவில்லை.
இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு எதிரே உள்ள அறையில் விளக்கு போடப்பட்டு கதவு திறக்கப்பட்டது.
வெளியே எட்டிபார்த்த சபுரா என்பவர், “என்னம்மா, புள்ள பேறா..?” என்றார்
முத்துகனி “ஆமாம்மா” என்றார்
“அவசரத்துல சாமான்லாம் சரியா எடுத்துட்டு வந்திருக்க மாட்டீங்க” என்று கூறியதுடன் நில்லாமல் உள்ளே சென்று “பாய், தலையணையிலிருந்து பாத்திரங்கள் முதலான பொருளையும் எடுத்து வந்து கொடுத்தார்.
கொண்டு வந்து கொடுத்த பொருள்களிலிருந்தும் அவர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களிலிருந்தும் அவர் பெரிய பணக்காரர் என்று விளங்கியது
ஐசாம்மா “ஏன்ம்மா இருக்கட்டுமே.. தம்பி (அஸ்லம்) போய் இப்ப எடுத்துட்டு வந்துடுவாரு..” என்று இழுக்க
“நல்லதும்மா.. இப்ப தானே போ முடியும்.. சும்மா இருக்கட்டும்..”
முத்துகனி கேட்டார், “யாருக்கு.. என்னா செய்தும்மா..?”
“எங்க ம்மாக்கு தான்ம்மா ரொம்ப நாளா உடம்பு சரியில்ல.. ஹார்ட்ல பிராபளம்.. நெஞ்சுல அடிக்கடி வலி வந்துடுது.. அதான்..”
ஐசாம்மா, “டாக்டர் என்னா சொல்றாங்க..” என்று அவர் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டார்.
சபுரா அலுத்து கொண்டார், “என்னா சொல்றாரு.. அல்லா தான்..” என்று முடிக்காமல் முடித்தார்
முத்துகனி, “உங்க பேருமா..?” என்று பேச்சை மாற்றினார்
பேச்சு குடும்ப உறுப்பினர்கள் பக்கம் தாவியது. அவர் பேர் சபுரா என்றும் கணவர் சவுதியில் தொழில் சொந்தமாக வைத்து நடத்தி வருவதும் நிஷா என்று ஒரு பெண் பிள்ளை இருப்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்
இப்பொழுது சபுராவின் டர்ன், “உங்க மாப்ள எங்க பயணத்துலயாம்மா..?” என்றார்
எங்க ஊரை பொறுத்த வரை வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்க வில்லை என்றால் அவன் மனுசனே கிடையாது.
சில சாதாரண கேள்விகளும் பதில்களுக்கு பதிலாக ரணங்களை வரவழைக்கும். நாம் தெரிந்தோ தெரியாமலோ அப்படியாபட்ட சில கேள்விகளை சில சம்யங்களில் கேட்டு தொலைத்து கேட்கப்பட்டவரை காயப்படுத்தி விடுவோம்.
அப்படி தான் ஐசாம்மாக்கு சபுராவின் அந்த கேள்வி மிகுந்த சங்கடமாக இருந்தது ஐசாம்மாவுக்கு, அந்த ஒரு கேள்வியில் மனதில் உறைந்து போன பழைய நினைவுகள் சட்டென்று வந்து விட்டு மறைந்து போனது.
“இல்லம்மா எஹ மௌத்தா போயிட்டாஹா..” என்று அவர் சொல்லி விடுவதற்குள் முத்துகனி மட்டும் அறிந்திருந்த அவரின் மனதில் தோன்றி மறைந்த வேதனைகளை மனதில் உறைய வைக்க தொடர்ந்து வருகிறது அடுத்த ஒரு அத்தியாயம்
முடிவுகள் தொடரும்..
***
மறுமொழியொன்றை இடுங்கள்