‘ஒரு உருக்கமான செய்தியை நான் சொல்லவேண்டுமென்றால்… நாகர்கோயில் பக்கம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. கோட்டாற்றுப் புலவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என்று ஒரு பெருந்தகை இருந்தார். அவர் ஒரு தமிழினுடைய கடல். சதாவதானி அவர்கள் வாய் திறந்தால் வண்ணம் பாடுகிறவர். விரல்கள் எழுதினால் வெண்பா தானாகவே வந்து பிறக்கும். தமிழ்மீது அவர் கொண்ட காதல்.. ஆனால் தன்னுடைய மார்க்கத்தின் மீது தணியாது அவர் கொண்டிருந்த விருப்பம் அவரை எல்லாவகையிலும் தமிழ் உலகத்தில் அனைவரையும் அரவணைக்க வைத்தது. ஒரு நிகழ்ச்சி சொல்லுகிறேனே.. பாவலர் , ராமாயணம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாமாம். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் கிண்டலாகப் பார்த்து ,பாவலரை கொஞ்சம் மடக்கலாம் என்று நினைத்து , ‘பாவலர் ஐயா அவர்களே.. ஒரு வெண்பா சொல்லமுடியுமா’ என்று கேட்டார். ‘பிள்ளை.. கேளுங்கள்’ என்று சொன்னாராம். எப்படியாவது பாவலரை மடக்க வேண்டும் என்று நினைத்து அவர் , ‘துருக்கருக்கு ராமர் துணை’ண்டாராம். பாவலர் முகத்திலே ஒரு மாற்றம் இல்லை. ‘கேளுங்கள்’ என்று ஒரு வெண்பா சொன்னாராம்: ‘அந்த நாள் அயோத்திதனை ஆண்ட லட்சுமண பரதசத் துருக்கருக்கு ராமர்துணை’ண்டாராம்! எனக்குத் துணையில்லேப்பா.. பரதசத்துருக்கருக்கு ராமர் துணை என்றாராம். அந்த அவை அப்படியே – ஒரு பத்தாயிரம் மக்கள் இருந்த அவை அப்படியே – குலுங்கியதாம். ராமாயணத்திலே பற்றிருக்கிறது என்பது உண்டு.. ஆனால் இஸ்லாமியத்தில் எனக்கிருக்கிற ஊற்றம் என்பது எதற்கும் ஈடு இல்லாதது என்பதை ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டியதை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்’
- அவ்வை நடராசன் / தமிழன் டி.வி./ 20th Jul’09
***
நன்றி : அவ்வை நடராசன், அமீர் ஜவ்ஹர் B.A.B.L, தமிழன் டி.வி
***
குறிப்பு : ‘பால்ஸ்’ தமிழ் மின் அகராதியில்.. ’ஊற்றம் 1′ = பற்றுக்கோடு, நிலைத்த தன்மை, வலிமை, மன எழுச்சி, பழக்கம். ‘ஊற்றம் 2′ = இடையூறு, தீங்கு, தொடு உணர்வு
‘ஊற்றம் 1′ஐ எடுத்துக்கொள்வதே உசிதம்!