சென்ற மாதம் ‘க்ரியா’விலிருந்து வந்த மெயில் மூலமாக , அவர்களின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்புகளில் ஒன்றான ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ நாவலின் மறு அச்சு பற்றி அறிந்தேன். முன்பே வாங்கியிருந்ததால் அபாயம் நீங்கியது! ’தற்காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றை இந்த நாவல் கவனப்படுத்துகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட இந்த ஃப்ளெமிஷ் மொழி நாவல் செர்னோபில் அணுஉலை விபத்து, அண்மையில் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்து போன்ற அழிவுகளை எதிர்நோக்கி எழுதப்பட்டதாக இருக்கிறது.’ என்று ’க்ரியா’ சொல்லும் அந்த நாவலின் சிறுபகுதியை தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். அபாயம் நாவல் பற்றி சகோதரர் R.P. ராஜநாயஹம் எழுதிய பதிவின் சுட்டி கீழே இருக்கிறது. அவசியம் வாசியுங்கள். அபாயம் எப்போதுமே நம் அடியில்தான்! - ஆபிதீன்
***
ஜோஷ் வண்டேலூவின் ’அபாயம்’ நாவலிலிருந்து..
அத்தியாயம் இரண்டு
இரவில் மின்னும் குகைப் பாதை
ஆறாவது நாள் மிக மெதுவாக நகர்கிறது. பகற்பொழுதைப் பின்னிக்கொண்டிருந்த அமைதி அவ்வப்போது ஒரு தையல் கண்ணியைத் தவற விடுகிறது.
‘துபோன், நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். ஷேக்ஸ்பியர் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?’ என்று பென்ட்டிங் கேட்டான்.
’நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்றான் துபோன்.
‘ஹாம்லட் பற்றித் தெரிந்திருந்தால், பயங்கரமாக முற்றிவிட்ட நோய்கள் பயங்கரமான சிகிச்சையால் குணமாகலாம், ஆகாமலும் போகலாம் என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பதும் தெரிந்திருக்கும்.’
பிறகு பல நிமிஷங்கள் மௌனம் ஆதிக்கம் செலுத்துகிறது. துபோனும் பென்ட்டிங்கும் அதிகம் பேசுவதில்லை. களைப்புடன் படுத்திருக்கிறார்கள், காத்திருக்கிறார்கள். அவர்கள் அதிகம் சாப்பிடவில்லை. மார்ட்டினைப் பற்றி நினைக்கிறார்கள். ஒருவரும் அவனைப் பற்றிப் பேசுவதில்லை. பேசத் தொடங்குவதற்குப் பயந்தார்கள். இருவரும் மற்றவர் நினைப்பதுபற்றி பயந்தனர். ஆனால் மார்ட்டின் இப்போது செத்துவிட்டான் என்று நினைத்தார்கள். தொற்றை முறிக்கும் மருந்துகள் அவன் உடலுக்குள் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. அப்புறம் அவன் உடம்பைப் கீறிப் பார்ப்பார்கள்.
கதிர்கள் அவன் உடலில் எவ்வாறு கலந்திருக்கின்றன என்று பார்க்க விரும்புவார்கள். அழிவு எப்படி நிகழ்ந்திருக்கிறதென்று ஊன்றிப் பார்க்க வேண்டும், இயற்கையாக ஏற்படும் பேரழிவுகளை நிபுணர்கள் ஆராய்வதுபோல், பரிசோதனைக்குப் பிறகு எஞ்சியிருப்பதை ஒரு பெட்டிக்குள் வைத்து ஈயத்தால் மூடிவிட்டு, அவன் உடலை ஒரு பாதுகாப்பான ஆழத்தில் உடனே புதைக்க ஏற்பாடு செய்துவிடுவார்கள். கதிரியக்கக் கழிவுகள் பற்றி மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். மார்ட்டின் மோலினார் இப்போது கழிவுப் பொருள். நாம் எல்லோரும் கழிவுகளாகிறோம். நம்மில் பலர் தீங்கற்றவர்கள், நம்மால் எந்த ஆபத்தும் இல்லை. ஒரு சவத்தை உதைக்கலாம், ஒன்றும் நிகழ்வதில்லை. ஆனாலும் சில பிணங்கள் ஆபத்தானவை. ஆபத்தான பிணங்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். அவை பேய்கள் என்று அழைக்கப்பட்டதுண்டு. அது முன்பு. இப்போது அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. கோட்டைகளும் பேய்களும் கடந்த கால விஷயங்கள். நம்முடைய ஆபத்தான பிணங்களை நாம் ஈயப் பெட்டிகளில், அவசியமானால் கான்கிரீட் பெட்டகங்களில்கூட, அவை ஒருபோதும் வெளியில் வந்துவிட முடியாதவாறு வைக்கிறோம். அவை எளிதில் வெளியே நடமாட முடியாது. நாம் அவ்வளவு விஷயம் தெரியாதவர்களில்லை.
பேராசிரியர் வென்ஸ் அறைக்குள் வருகிறார். மிகுந்த முயற்சியின் பேரில் புன்னகையை வரவழைத்துக் கொள்கிறார். ‘உங்களுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்டு வந்திருக்கிறேன்’ என்கிறார்.
‘இன்று எங்களுக்கு என்ன கிடைக்கும்?’ துபோன் கிண்டலாகக் கேட்கிறான்.
‘பி12’ என்கிறார் மருத்துவர்.
‘அப்படியானால் இன்றைக்கு இவ்வளவுதானா?’
‘இல்லை, போகப்போக உங்களுக்கு ஈரல் மற்றும் மால்ட் கிடைக்கும். அப்புறம் இன்னொரு ஊசி.’
‘எங்களை ரொம்பவும்தான் கவனித்துக்கொள்கிறீர்கள்’ என்று பென்ட்டிங் வறண்ட குரலில் கூறுகிறான்.
‘உங்களுக்காக நாங்கள் எல்லோரும் எவ்வளவு செய்கிறோம் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால்,’ என்கிறார் பேராசிரியர்.
பென்ட்டிங்கின் கிண்டல் அவருக்குப் புரியவில்லை. அவன் நல்ல மனநிலையில் இருக்கிறான், சிரிக்கிறான், அது இயற்கைக்குப் புறம்பானதாக இருக்கிறது. கொட்டை எழுத்துகளில், சுவரில் இவ்வாறு அறிவிக்க வேண்டும்.
இங்கு சிரிக்கக் கூடாது
சிரிப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
மீறுபவர் கட்டாய உடலுழைப்புத் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
ஆல்ஃபிரட் பென்ட்டிங் தன்னுடைய இடது கையால் தலையைத் தேய்க்கையில் முடி கட்டையாக வெட்டப்பட்டிருப்பதால் கையில் குத்துகிறது. அவனுக்கும் துபோனுக்கும் தலை கிட்டத்தட்ட மழிக்கப்பட்டது போலிருக்கிறது, குற்றவாளிகளைப் போல. துபோன் இளைமையாக்த் தோற்றமளிக்கிறான். ஆனால் அவனது பழைய கடுமையான முரட்டுத்தனம் அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் பற்றி நினைக்கும்போது அவனுக்கு மிகவும் பற்றிக்கொண்டு வருகிறது. அணு உலையின் அருகில் நேர்ந்த விபத்து, நோய் மற்றும் துன்பம், ஊசிகள், முடி கொட்டுவது (அது இப்போது குறைவதுபோல் தெரிகிறது), ரத்தப் பரிசோதனைகள், களிம்புகள், வயிற்றுப்போக்கு, சிறைவாசம், நம்பிக்கையின்மை. உள்ளக் குமுறலுக்கு ஆட்பட்டுவிடுகிறான். துபோன் கலக மனோபாவத்துடன் கொதித்தெழுவதற்குத் தயாராக இருக்கிறான்.
**
மேலும்..: ஜோஷ் வண்டேலூ எழுதிய ‘ அபாயம்’ - R.P. ராஜநாயஹம்
**
நன்றி : க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
http://www.crea.in/