Contact : H. Abedeen . E-Mail : abedheen@gmail.com
அக்டோபர் 8, 2008 இல் 12:35 பிற்பகல் (Nagore Writers, அப்துல் கையும், அப்துல் வஹ்ஹாப் பாகவி, ஆபிதீன், இஜட். ஜபருல்லா, இதயதாசன், இஸ்மாயில், கமலப்பித்தன், காதர் ஒலி, குலாம் காதர் நாவலர், சித்தி ஜூனைதா, ஜஸ்டிஸ் இஸ்மாயில், ஜாஃபர் முஹ்யித்தீன், தூயவன், நாகூர் சலீம், நாகூர் பாடகர்கள், நாகூர் புலவர்கள், நாகூர் ரூமி, புலவர் ஆபிதீன், ரவீந்தர், ஹத்தீப் சாஹிப்)
சதாவதானியும் குலாம் காதர் நாவலரும்
அக்டோபர் 12, 2007 இல் 4:19 பிற்பகல் (கட்டுரை, குலாம் காதர் நாவலர்)
சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் மகனார் கே.பி.எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை’யிலிருந்து :
சாற்றுக் கவி…
1833ல் பிறந்து, தம்புகழ் நிறுத்தி 1908ல் மறைந்த மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் குலாம் காதிறு நாவலரை இற்றை நாள் தமிழர் மறந்திருக்கக்கூடும். மகாவித்வான் மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவர் இவர். மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் தாம் எழுதிய மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளை வரலாற்றில் நாவலர் பற்றி இவ்வளவுதான் கூறியிருக்கிறார் :
‘நாகூரில் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதிறு நாவலர் என்ற முஸ்லிம் புலவர் ஒருவரும் நமது மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரே’
இவ்வளவுதான் கூறியிருப்பினும் குலாம் காதிறு நாவலரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகு முழுவதுமாகப் பரவி நின்றிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர் குலாம் காதிறு நாவலவர் பற்றி இவ்வாறு குறிப்பிடிருக்கிறார்.
‘தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபுராணம்
தகையபல பிரபந்தம் வசன நூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பந் தந்திட்(டு)
எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிரல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை…’
தண்டமிழ்க்குத் தாயாக விளங்கிய பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர் பற்றி சித்திரமொன்று நன் முன்னர் தோன்றுகின்றது. பல புராணங்கள், பிரபந்தங்கள், வசன நூற்கள் எழுதித் தந்தவர், பெரும்புலவர் என்ற தோற்றம் மனக்கண் முன் உருவாகின்றது, வண்டமரும் பொழிலுடுத்த நாகூரும் நம் மனத்திரையில் படர்கின்றது.
‘புலவராற்றுப்படை இயற்றிய பெரும்புலவர் நமது நாவலர் எழுதிய இலக்கண இலக்கிய நூற்களுக்குக் குறைவில்லை. ஒற்றைத் தனிநபர் தமது வாணாளில் இத்தனைக் காப்பியங்கள், பாடல்கள் எழுதியிருக்கிறாரா என மூக்கின் மேல் விரல் வைத்து வியப்புறத் தோன்றும். தமிழ் வசனக் குழந்தை தளர்நடைபோடத் துவங்கியிருந்த காலத்தில் குலாம்காதிறு நாவலர் அவர்கள் ஒன்றிரண்டல்ல, பல வசன நூற்களை தமிழில் எழுதியிருக்கிறார். நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம் என்பன போன்ற இலக்கண நூற்கள், சீறாப் புராண வசனம், ஆரிபு நாயக வசனம், நாகூர் ஆண்டகையின் காரண சரித்திரம் என்றெல்லாம் அவர் எழுதிய வசன நூற்களுக்குக் குறைவில்லை.
ஆரிபு நாயகப் புராணமும் அவருடையதே. காவியத் தலைவரான செய்யது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகையின் அருள் வேண்டி நாவலர் இறைஞ்சிப் பாடிய புராணம்தான் இது. இப்புராணத்திற்குத்தான் திட்டச்சேரி முஸ்லிம்கள் ஒருமுகமாக வேண்டிக் கொண்டதன் பேரில் ஆரிபு நாயக வசனம் எழுதினார் குலாம் காதிறு நாவலர் அவர்கள்.
இந்த ஆரிபு நாயக வசனத்திற்கு கோட்டாறு, மதுரைத் தமிழ்ச் தமிழ்ச் சங்கப் புலவர், தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், மகாமதி, சதாவதனி கா.ப.செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் சாற்றுக் கவியொன்று வழங்கியிருக்கிறார்கள். ஐந்து விருத்தங்கள் கொண்ட இந்த சாற்றுக் கவியில் முதலிரண்டு விருத்தங்கள் பாட்டுடைத் தலைவரின் – செய்யது அஹ்மதுல் கபீர் சுல்தானுல் ஆரிபீனாரின் – மஹாத்மியத்தை வியந்துரைக்கிறார்கள். ஐந்தாம் விருத்தம் அய்யம்பேட்டைபதியில் வாழ்ந்த அப்துல் கனி சாஹிப் பொருளுதவி ஆரிபு நாயக வசனத்தை அச்சியற்றி ‘இருஞ்சீர்த்தி’ துளக்குற்ற மாட்சியினை வர்ணிக்கிறது. குலாம் காதிறு நாவலர் அவர்களையும் திருநாகையிருந்தபடி அவர் தமிழ்க் கோலோச்சியிருந்த தன்மையையும் மூன்றாம் நான்காம் விருத்தங்கள் அற்புதமாக சித்தரிக்கின்றன.
சொற்கள் கவிதை வடிவம் பெறும்போது ஒலிநயமும் கவிதைகளின் உள்ளமைந்த பொருள் நயமுமாகச் சேர்ந்து சிறந்த ஒரு சித்திரத்தை அங்ஙனே தத்ரூபமாக நம் மனக்கண்முன் கொணர்ந்து என்றென்றும் அழியாதவாறு நிறுத்திவிடுமேயாகில் இறவா வரம் பெற்று விடுகின்றன.
குலாம் காதிறு நாவலர் அவர்கள், பாஸ்கரப் பண்டித வாப்பு ராவுத்தர் அவர்களின் புதல்வர். கலைமகளோ நாமகளோ, தமிழாய்ந்த அகத்தியரோ என திருநாகைப் பதியிருந்து தமிழ்ப் புலவர் இதயமெனும் இராஜ்யத்தில் கோலோச்சும் குலாம் காதிறு காட்சி தருகிறார்.
‘மாவருத்தும் பெருநிலத்து வாப்புதவ மருண்மகவாய்
வந்தெஞ் ஞான்று
மூவருத்துங் கலைமகளு நாமகளோ கும்பர்குறு
முனியே யென்னத்
தாவருத்துந் திருநாகை யிருந்து தமிழ்க் கோலோச்சித்
தகைமிக் கார்ந்த
மேவருந்து மிணையில்குலாம் காதிறுநா வலனென்னும்
விபுதர் வேந்தன்’
சதாவதனம் செய்கு தம்பிப் பாவலர் அவர்கள், குலாம் காதிறு நாவலர் அவர்களினின்றும் வயதில் இளையவர்கள். எனினும் நாவலர் அவர்களின் சமகாலத்தவர். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களும் நாவலர் காலத்து வாழ்ந்தவரே. நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் புகழையும் கீர்த்தியையும் அவர் வாழ்ந்த மாட்சியினையும் நேரிற் கண்டவர்கள் சொல்ல சொல்லக் கேட்பதில் நமக்கோர் வித தனி மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர், நாகூர் குலாம் காதிறு நாவலரின் இலக்கியச் சேவைகளை நாம் உணருமாறு செய்திருக்கிறார். ஆனால் சதாவதானம் செய்கு தம்பிப் பாவலர் அவர்களோ நாகூர் புலவர் வேந்தர் எவ்வாறு கொலுவீற்றிருந்தார் என்பதை ஒரு அழியாச் சித்திரமாக இன்றைத் தலைமுறையோரின் மனத்திரையில் தீட்டி வைத்திருக்கிறார்கள். ‘தேன்கனியும் பாலமிழ்தும் கற்கண்டும் சர்க்கரையும் சேர்ந்து தான் கனிய, சுற்றி வந்து மொய்த்து நிற்கும் ஓவியத்தின் உள்ளடங்காப் பெருங்காட்சியொன்றை பாவலர் பெருமானார் அவர்கள்தம் சாற்று கவியின் நாலாவது விருத்தப் பாவில் தீட்டியிருக்கிறார்கள். கான்கனியும் செந்தமிழ் கொண்டு உணர்வளிக்கும் ஓர் நூலாம் ஆரிபு நாயக வசனம் தந்த குலாம் காதிறு நாவலரை சாற்றுக்கவி வாயிலாக நாம் பார்க்க முடிகின்றது.
தேன்கனியும் பாலமிழ்துங் கற்கண்டுச் சர்க்கரையுஞ்
சேர்ந்த தென்னத்
தான்கனியப் புலவர்குழாந் தலைகுனிந்து மனமுவந்து
தகைவிற் கொள்ளக்
கான்கனியுஞ் செந்தமிழ்கொண் டுணர்வளிக்கு மோர் நூலாய்க்
கவினச் செய்து
வான்கனிய் மாரிபுநா யகவசனப் பெயர்நிறுவி
வழங்கி னானால்
தமிழ்ப் புலவர் குழாத்திடை குலாம் காதிறு நாவலர் கோலோச்சும் தோற்றத்தை நாம் காண முடிகிறது. நாவலர் கொலுவீற்றிருந்து தமிழ் வளர்த்த மாண்பினையும் மாட்சியினையும் அவர் காலத்து வாழ்ந்த மற்றொரு பெரும் புலவர் வாயிலாக நாம் கேட்கிறோம்; பார்க்கிறோம். சொல்லின்பமும் காட்சியின்பமும் சேர்ந்து மனத்திரை விட்டகலா ஓவியமொன்று அங்ஙனே நம் உள்ளமெங்கனும் நிறைத்து நிற்கின்றது. சாற்றுக் கவியின் இலட்சியம் நிறைவேறுகின்றது.
***
நன்றி : பாவலர் பதிப்பகம்
பதிப்பக முகவரி : 53, நைனியப்பன் தெரு, சென்னை-600 001
