‘சொல்லரசு’ மாமா நினைவுகள் – கபீர்

Jafer Mohiyudeen1

அன்பிற்கினிய ஆபிதீன் அண்ணன் அவர்கட்கு …

ஜாபர் முஹ்யித்தீன்  மாமாவைப் பற்றி மிக முக்கியச் செய்திகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். நான் 80-களில் சிங்கையில் இருந்தபோது எனது தகப்பனாரின் இனிய நண்பர் என்ற முறையில் அவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்று இருந்தேன்.

சிங்கப்பூரில் தமிழ் முரசு பத்திரிக்கையில் அவர்களுடைய கட்டுரை, இலக்கியப் படைப்புகள் வாரந்தோறும் வரும். நம்மூர் ஜனாப் L.S.M. தாஹா மாமா அப்பத்திரிக்கையில் பணி புரிந்துள்ளார்கள்.

மேலும் நாகூரில் இன்று அதிகமாக இஸ்லாமியப் பெண்கள் இளங்கலை, முதுகலை என பட்டங்கள் பெறுகிறார்கள். இதில் ஜாபர் மொஹைதீன் மாமாவின் பங்கு மிக முக்கியமானது. நாகூரில் கிரசண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் மாமா. ஒவ்வொரு வீடாகச் சென்று “நான் தகப்பன்போல் உங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன், வயதுக்கு வந்த பிள்ளைகளாக இருந்தாலும் தயக்கம் வேண்டாம்” என்று கெஞ்சிக் அழைத்துச் சென்று இந்த அளவுக்கு பட்டதாரிகள் முஸ்லிம் பெண்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள்.

கீழக்கரையில் நடைபெற்ற 5-வது இஸ்லாமிய உலகத்தமிழ் மாநாட்டு நிர்வாகிகளில் ஒருவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு அந்த மாநாடு சிறக்க பாடுபட்டவர்கள் என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அன்புடன்
S.கபீர் அஹ்மது / பஹ்ரைன்

***

சுட்டிகள் :

‘சொல்லரசு’  மு.  ஜாஃபர் முஹ்யித்தீன்

நாகூர் தந்த நற்றமிழ் புலவர்கள் – ஜாஃபர் முஹ்யித்தீன்
இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு (15-16 பிப்ரவரி 1992 புதுக்கோட்டை) சிறப்பு மலரிலிருந்து

சித்தி ஜூனைதா பேகம்   ஒரு நேர்காணல் -  சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன்  (முஸ்லிம் முரசு ( பொன்விழா மலர் / 1999 )

 

செந்தமிழ்: சிறந்த தாய் – ஏ.ஹெச்.ஹத்தீப்

‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் (Nov’09) வெளியான கட்டுரை…

***

adhimoolam-a

செந்தமிழ்: சிறந்த தாய்

ஏ.ஹெச்.ஹத்தீப்

தமிழனால் தமிழுக்குப் பிரச்னையா அல்லது தமிழால் தமிழனுக்குப் பிரச்னையா என்பது மோனலிஸாவின் புன்னகை மாதிரி; அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து ஒரு முதுமொழிக்குத் தன் குழந்தைகள் செய்யும் அடாவடித்தனத்தைவிட வேறு சோதனை எதுவும் இருக்க முடியாது.  செம்மொழி என அடையாளமிடுவது, அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பையையுமே பொறுத்து அமைகிறது. தொன்மை, ஒழுக்கம், நேசபாவம் போன்ற அணிகலங்களுடன் தனது இனத்தையும் அணைத்துச்செல்லும் மனப்பாங்கு ஆகியவைதான் செந்தமிழனின் அடையாளங்கள் என்று வானளாவ யாராவது புகழ்ந்தால் தமிழால் தமிழன் செம்மையாகச் செப்பனிடப்பட்டிருக்கிறான் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஆனால் நிலைமை அப்படியில்லை. ‘என் தமிழ்’ என்று இறுமாப்பும் பெருமிதமும் கொள்வதற்கு எந்தத் தமிழனும் எந்தத் தமிழனையும் விடமாட்டான் போலிருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. சரியான இலக்கணமோ நெடிய வரலாறோ இல்லாத மொழி பேசும் மக்கள்கூட தனது தாய்மொழிக்குப் புகழ் சேர்க்கிறார்கள். கிரேக்கம், சீனா, அரபி, ஆங்கிலம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய செம்மொழி சார்ந்த மக்கள் அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செந்தமிழ் மட்டுமே தனது மக்களைச் சீராகச் செதுக்கவில்லையோ என்ற ஐயமும் அச்சமும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

‘தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்’ என்று மேடைகளில் வீராவேசம் பொங்க உரையாற்றுகிற சில தீவிரத்தமிழர்கள், “உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்?”என்று தீப்பந்தம் ஏந்தலாம்-அதுவே ஆதாரம் என்று உணராமல்.தர்க்க சாஸ்திரத்தின் துணையோடு விவாதம் புரிபவர்கள் வேண்டுமென்றே நிஜத்தைக் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழை வளர்ப்பதற்கும் பரவச்செய்வதற்கும் வாய் வலிக்கக் கத்துவதற்குப் பதிலாக அன்பொழுக அறைகூவல் விடுக்கலாம். அதை விடுத்துவிட்டுப் புறக்கணிப்பதற்கும் பகிஷ்கரிப்பதற்கும் தமிழொன்றும் ‘தவறிப் பிறந்த குழந்தையல்ல’. கிரேக்கம் இந்த உலகத்துக்கு அரிய அறிவாற்றலை வழங்கியதுபோல், சீனா ஒழுக்கத்தின் உன்னதத்தையும் உழைப்பின் மகத்துவத்தையும் உணர்த்தியதுபோல் தமிழ் தனது மக்களைச் சிறப்பாகச் செப்பனிடவில்லை என்று கூறுபவர்கள், நம்மிடையே மலிந்து கிடக்கும் மனக்கசப்பையும் தீவிர விரோதப்போக்கையும் தெளிவாக உணர்ந்திருப்பார்கள் போலும். அவர்களது வாதத்தை மறுப்பதற்குத் தமிழனிடம் வேறென்ன ஆதாரம் இருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பெருமைக்கும் போற்றுதலுக்கும் முற்றிலும் தகுதி படைத்த தமிழனுக்கு இந்த இழிநிலை யாரால் வந்தது என்ற அமிலப்பரிசோதனையில் இறங்கினால், நிச்சயம் அரசியல்வாதிகளின் முகங்கள்தான் நிழலாடுகிறது. ‘அன அரப்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அராபியர்கள் கூறும்போது, ‘நாங்கள் உலகத்தை ஆளப் பிறந்தவர்கள்’என்ற ஆணவம் தொனிக்கும்.’அரபுக்காரன் மடையன்’ என்று அங்கே பிழைப்புத் தேடிச் சென்றவர்கள், ஆற்றாமையில் பிதற்றுவதையெல்லாம் ஆதாரங்களாக ஏற்க முடியாது. ஆங்கிலேயர்கள் உலகத்துக்கே நாகரிகம் போதித்தவர்கள். ஆங்கிலம் இந்தத் தேசத்தை ஆளவில்லையெனில் ரொம்பப்பேர் மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலம் நம்மைச் செம்மைப்படுத்தியதை நினைவு கூர்வதற்காகச் சொல்லப்பட்டதை வைத்துக்கோண்டு வெள்ளையன் நம்மை ஆண்டதை நியாயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

வீரியத்திலும் சரி; ஆளுமையிலும் சரி; தமிழ் பிற எம்மொழிக்கும் சளைத்ததோ இளைத்ததோ அல்ல. ஆனால் தமிழர்கள் மற்றவர்களால் அடி படுகிறர்கள். அடிமைப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சிதறுகிறார்கள். தமிழனின் இயல்புகளை விளக்குவதற்காக ஒரு பிரசித்தமான தவளைக்கதை சொல்வது நீண்டநாளைய தமிழ் மரபு. ஒரு தமிழன் சொல்வான். ஆயிரம் தமிழன் சற்றும் லஜ்ஜையின்றிச் சிரிப்பான். மேலே ஏற முடியாமல் ஒருவன் காலை இன்னொருவன் கீழே இருந்து இழுப்பது உலகத்துக்கு நாகரீகம் கற்றுத் தந்த தமிழனின் பரம்பரைக்குணம் மாதிரிச் சித்தரிக்கப்படும். எந்த தமிழறிஞனும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான். ஏனெனில் அதுதான் தமிழ்ப்பற்று.இது உலகலாவிய நித்யக்காட்சி.

மராட்டியர்கள் தனது மொழியால் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தேசியத்தையே துறக்கத் தயாராக இருப்பதைச் சமீபகாலமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். மளையாளிகள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் வேறொரு நாட்டவர்கள்போல் நடந்துகொள்வது தெரியும். “நீங்கள் எந்த நாடு” என்று கேட்கப்பட்டால், பதில்: “ஞானு மலையாளியாக்கும்.” இந்தி பேசுபவர்கள், இந்தி பேசாதவர்களை இந்தியர்கள் என்றே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தமிழன் மட்டும்தான் தங்களுக்கிடையில் தமிழல்லாத வேறொரு பொருளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துத் தங்களைப் பல்வேறு கூறுகளாக்கிக் கொள்கிறான். ‘இல்லை’என்று மறுப்பவர்களுக்கு யதார்த்தம் புரியவில்லை என்றே அர்த்தம்.

பதச்சோற்றைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை: தமிழ் செம்மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு விரும்புகிறது. தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமோ தகுதியோ இல்லை என்றுரைப்பது, வானத்தை நோக்கிக் காறித் துப்புவதற்குச் சமம். இ.பி.கோ. 302 பிரிவின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல அது. கலைஞரின் அறிவிப்பில் சுயநலம் இருக்கலாம். அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி கலந்திருக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தனது அரசியல் எதிரிகளைப் புறந்தள்ளுகிற ராஜத்தந்திரத்தை முற்றிலுமாகப் புறக்கணிப்பதற்கில்லை.இதே இழிகாரியத்தைத் தமிழகத்தை ஆண்ட எல்லோரும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஏதோ கடல் கடந்த நாடு ஒன்றில், கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க்குழு ஒன்றுதான் மாநாட்டை நடத்த வேண்டுமென்று சத்தமிடுவதும் சட்டமிடுவதும் ஏற்புடையதல்ல. தமிழகத்துத் தமிழர்களை அன்னியராக்கும் இத்தகைய எதிர்ப்பும் ஆட்சேபனையும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; கேலிக்குரியதும்கூட.

“இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகக் கிடக்கிறார்கள். மலேசியாவில் தமிழினம் ஒடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிக் கிடக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உலகத் தமிழ் மாநாடு ஒரு கேடா?”என்ற பாணியில் விலாசித் தள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் விசனத்திலும் அக்கறையிலும் அரசியல் கலப்பு இல்லையென்றால் ஆட்சேபனை எதுவுமில்லை. மரத்தமிழன் வைகோவும் அதே உச்சஸ்தாயில் “ம.தி.மு.க.வும் புறக்கணிக்கிறது” என்று கத்துகிறார்கள். ஏற்கனவே கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டதால் மருத்துவர் ராமதாஸ் மட்டும் வாயைத் திறக்கவில்லை. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் தேவலாம்.ஆனால் மாநாட்டை தமிழக அரசியல் கட்சிகள் பகிஷ்கரிப்பதாலும் தடுத்து நிறுத்துவதாலும் அல்லல்படும் உலகத் தமிழர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடப்போகிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறிவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கிடைப்பதற்கும் சமவாய்ப்பு அளிப்பதற்கும் அந்த அரசைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ராஜபக்க்ஷேயைக் கொடுங்கோலன் என்றும் இனத்துரோகி என்றும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு ஈழத்தமிழர்களுக்கு எப்படி நன்மை செய்ய முடிமென்று தோன்றவில்லை. தமிழகம் வருகை புரிகின்ற மலேசிய எழுத்தாளர் குழுவினர், “நாங்கள் சமமரியாதையுடன் நடத்தப்படுகிறோம். மலேசிய அரசு எங்களிடம் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை” என்று பிரமாண வாக்குமூலம் அளித்த பின்னரும் அதை ஒரு பிரச்னையாக்குவது மலேசியத் தமிழர்களுக்கு நாம் உதவுகிறோம் என்ற போர்வையில் அவர்களது இருண்ட எதிர்காலத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறோம் எனப் பொருள். அமெரிக்காவிலாகட்டும் அல்லது ஐரோப்பாவிலாகட்டும் தமிழர்கள் நிம்மதியாகவும் செழிப்பாகவும் வாழ்கிறார்கள் என்பது தெள்ளிய புள்ளிவிவரங்கள். தவிர, தமிழினத்தின் செயற்கையான துயரத்திற்காகத் தமிழக இனத்தலைவர்கள் தங்களது கொண்டாட்டங்களை நிறுத்திக்கொண்டதாகவோ அல்லது தத்தமது ஆதரவாளர்களுக்கு அவ்வாறு அறைகூவல் விடுத்ததாகவோ தெரியவில்லை. ஆக, செம்மொழி மாநாட்டை ரத்து செய்யக்கோரும் கோரிக்கைக்குப் பின்னால் புலன்களுக்குப் புலப்படாத வேறு ஏதோ காரணமிருக்கிறது. ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம் மட்டுமே மாநாட்டை நடத்தத் தகுதி படைத்தது’ என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடிப்பதிலிருந்து இதை உணர முடிகிறது.

தமிழுக்கு மகுடம் சூட்டும் இத்தகைய விழாக்களின்போது குழாயடிச் சண்டையைத் தவிர்ப்பதும், நிகழ்வுகளில் உளச்சுத்தியோடு பங்கேற்பதும் தமிழ் தமது சமுதாயத்தை நன்கு செம்மைப்படுத்தியிருக்கிறது என்பதற்கான சான்றுகள். தங்களது மொழி மாநாடு நடந்தால்-அவர்கள் கன்னடத்துக்காரர்களோ தெலுங்குக்காரர்களோ அல்லது இந்திக்காரர்களோ- அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று திரளும்போது, தமிழனுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினை ஏன் கிடைக்க மாட்டேனென்கிறது?ஒருவேளை மற்றவர்களைக் காட்டிலும் தமிழன் மட்டும் தமிழின்பால் பற்றற்றவனோ?

தமிழ் ஒரு தாய். அவள் பல குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கலாம். அவர்களுக்குள் கருத்துமோதல்களும் சச்சரவுகளும் தவிர்க்க முடியாதவை. என்றாலும் அன்னையைக் கொண்டாடுவதிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்குவது எப்படிச் சாத்தியம்? குழந்தைகள் புரியும் தவறுகளுக்கு தாயின் வளர்ப்பு சரியில்லை என்று இக்காலமும் எதிர்காலமும் பழிக்காதா?

தமிழ் செம்மொழி என்றால் தனது குழந்தைகளையும் செம்மைப்படுத்தட்டும்.

***

நன்றி : சமநிலைச் சமுதாயம் ,  ஏ.ஹெச்.ஹத்தீப்

« பழைய வரவுகள்