உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ரோம், பாரசீகப் பேரசுகள் எல்லாம் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. ஜெருசலத்திற்கு ஒருமுறை உமர்(ரலி) விஜயம் செய்தார்கள். கிறித்துவப் பாதிரிமார்கள் அவர்களுக்கு வரவேற்பு அளித்து புகழ்மிக்க சர்ச் ஆப் ரிசரக்சன் என்ற மாதாக் கோயிலைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான பாங்கு ஒலி கேட்கிறது. “நீங்கள் உங்கள் தோழர்களுடன் இம்மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழுதுகொள்ளுங்களேன்’ என்று பாதிரிமார்கள் வேண்டினார்கள்.ஆனால் உமர் (ரலி) மறுத்து விட்டார்கள். தனது தோழர்களுடன் மாதாக் கோயிலின் வெளியே தொழுகையை நிறைவேற்றினார்கள்.
பாதிரிமார்கள் ‘உங்களைத்தான் மாதாக் கோயிலுக்குள்ளேயே தொழச் சொன்னோமே, ஏன் மறுத்தீர்கள்? என்று கேட்டபோது உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :’பிற்காலத்தில் இஸ்லாமியர் யாராவது இது எங்கள் கலீ·பா தொழுத இடம் என்று உரிமை கொண்டாடினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனால்தான் பிற்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் மாதாக்கோயிலுக்குள் தொழ மறுத்தேன்’ – பேரா. எம். அப்துஸ் ஸமது அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…
எப்பேர்ப்பட்ட ஜாக்கிரதை உணர்வும் புரிதலும்!
சமய நல்லிணக்கத்துக்கு சான்றான இந்த கதையை செல்லமகன் நதீமுக்கு இன்று இரவு சொல்ல வேண்டும். ‘மன்மதன்’ சிம்புவின் விசிறியான அவர் மல்லிகார்ஜூன் மன்ஸூரின் விசிறியான நான் சொல்வதைக் கேட்பாரா? கேட்கவேண்டும். நாளை அவருக்கு பிறந்த நாள் (20/2/2009) . பதினாறு நிறைகிறது. வழக்கம்போலவே ஏதோ ஒரு ‘தலக்கட்டு’ நாட்டில் இருந்துகொண்டு வாழ்த்த வேண்டியிருக்கிறது. நதீமை வாழ்த்த நினைக்கும் சகோதரர்கள் நன்றாக அவரை படிக்கச் சொல்லுங்கள் (சொல்லாமலேயே நன்றாக படிக்கும் ரகம்தான், தன் ‘லாத்தா’வைப் போல).
நதீம் , கண்டிப்பாக நீ ‘ஸஃபர்’ கதைகள் மட்டும் எழுதக்கூடாது…!