ஒரு குடும்பம் போனால் இன்னொரு குடும்பம்; தெரியாமல்தான் கேட்கிறேன், இதில் சந்தோஷம் என்ன வேண்டியிருக்கிறது? சரி, வலையுலகம் சார்பாக ஒரு ஸ்பெஷல் ‘அம்மா’ பாட்டை பகிர்வதற்குமுன் என் குடும்பப் பெருமையையும் சொல்லிவிடுகிறேன். ‘எல்லா வூட்டுக்கும் பணம் கொடுத்தாஹலாமே.. வாங்குனீங்களா?’ என்று எலக்சன் டயத்தில் உம்மாவிடம் கேட்டதற்கு, ‘ வோட்டுபோடுறதுக்கு முன்னால கொடுக்க வந்தாஹாதான். நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு அந்திஸு (அந்தஸ்து) இக்கிதே.. வாங்குவோமா வாப்பா? ச்சீ’ என்றார்கள்.
‘வெரிகுட்மா. அப்படித்தான் இக்கினும்’
‘வோட்டு போட்டபொறவு வாங்கிக்கிட்டோம்!’
இப்போதுதான் தெரிகிறது, போடாத கட்சிக்கு வாங்கியிருக்கிறார்கள் என்று. என் உம்மாவின் சாமர்த்தியம் வாழ்க. நம் ’அம்மா’வின் சாதனையும் வாழ்க.
’அம்மா’ முதல்வராக இருந்தபோது வெளிவந்த அதிமுக பாடலை இப்போது பார்க்கலாமா? அசனா கொடுத்தார் – ’போடுங்க’ என்று. கோவை இஷாக் என்பவர் பாடியதாம். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக இந்த இருவருமே இப்போது ’ம.ம.க’வில் இருக்கலாம். விசாரிக்க வேண்டும். கிளியனூர் அப்துல் ஸலாம் அவர்கள் இயற்றி எல்லா சகோதர மதங்களைச் சேர்ந்த அன்பர்களின் உள்ளத்தையும் கொள்ளைகொண்ட ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலின் மெட்டு இது. அண்ணன் ஈ.எம். ஹனிபா இதை கேட்டால் என்ன நிலைக்கு ஆளாவார் என்ற பதட்டத்துடன் பகிர்கிறேன். பாடலின் வரிகளையும் சேர்த்திருக்கிறேன். அட்டகாசமான ரிகார்டிங். அவசியம் கேட்டு, படித்து, ’அம்மா’வை வாழ்த்துங்கள். நன்றி!
கேட்க :
’பாட்டு’ :
அன்னை முகம் காண வாருங்கள் – நம்மை
ஆதரிக்க மறுப்பதே இல்லை
நெஞ்சமதை திறந்து பேசுவார் – அவர்
வஞ்சகமாய் வாழ்ந்ததே இல்லை
(அன்னை முகம்)
கபட மனம் எள்ளளவும் இல்லாதவர்
கண்ணியத்தை விட்டுப் பிரிந்து செல்லாதவர்
உள்ளபடி புரட்சித்தலைவர் உயிரானவர் – இந்த
உலகத்திலே புதுமைப்பெண்ணாய் பிறந்தார் அவர்
(அன்னை முகம்)
பாசமுடன் கழகத்தொண்டன் வீட்டைக் காப்பவர்
பெருமையோடு பாரதத் திருநாட்டைப் பார்ப்பவர்
ஆசையோடு அனைவரையும் அணைத்துச் செல்பவர்
பெரியார் அண்ணாவை நினைத்து வாழ்பவர்
துன்பப்படும் ஏழைகளே துவளாதீர்கள் – தூய
அண்ணா திமுகவை நீங்கள நாடி வாருங்கள்
இன்பமான வாழ்வு பெற எண்ணிப் பாருங்கள் – நம்
இதயதெய்வம் புரட்சித்தாயை நம்பி வாருங்கள்
(அன்னை முகம்)
இந்த நாடு ஏற்றம் பெற திட்டம் தீட்டுவார் – நம்
எல்லோருக்கும் இன்னல் தீர சட்டம் போடுவார்
வந்த செல்வம் ஏழைகளக்கு வாரி வழங்குவார் – நம்
சிந்தை குளிர அறிவுரைகள் தினம் முழங்குவார்
அனைவரையும் ஓரினமாய் கருதி பார்ப்பவர்
அருமையாக தமிழகத்தை ஆண்டு வருபவர்
அலைபோல் எழும் எதிர்ப்புகளை வென்று நிற்பவர் – மக்கள்
அம்மா என்று அழைக்கும்படி என்றும் வாழ்பவர்
(அன்னை முகம்)
