பா.ம.க. தொண்டரின் 2011 கனவு!! – தாஜ்

 Ramadoss_Taj

‘மருத்துவர் அய்யாவின் ஆட்சி!’
பா.ம.க. தொண்டரின் 2011 கனவு!!

- தாஜ்
அன்புடன்
ஆபிதீன்…

இந்த மடலின் கடைசித் தொங்கலில்
பா.ம.க.தொண்டர் ஒருவர்
தலைமைக்கு எழுதிய
கடிதமொன்றை
இணைத்திருக்கிறேன்.
கவனம்!

நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில்
தனது கட்சிக்கு ஏற்பட்ட
தோல்வி குறித்த ஆதங்கத்துடன்
எதிர் வரும்
சட்டசபைத் தேர்தலில் திட்டமிட்டு வென்று
தமிழகத்தில்
பா.ம.க. ஆட்சி அமைய
விவேகமான சில கருத்துக்களை
முன்வைத்து பேசுகிறது
அந்தக் கடிதம்!

யோசிக்கிறபோது…
அந்தக் கடிதம்
உங்களுடைய பார்வையில்
எந்தச் சலனத்தையும்
நிகழ்த்தப் போவதில்லைதான்.
உங்களுக்கு இதெல்லாம்
ஒட்டுறவு இல்லாத சங்கதி!
கிட்டத்தட்ட எனக்கும் அப்படித்தான்!
ஏன் அப்படி?
நாம் திருகிக் கொண்டிருக்கிறோமா?
விளங்கவில்லை!
சரி… குறைந்த பட்சம்
என்ன ஜென்மம் நாம்?
வேற்றுக் கிரகத்து வாசிகளா?

இந்தப் பாராளுமன்றத் தேர்தலின்
முடிவுகள் வெளியான தருணம்….
மொத்த இந்தியாவும்
காங்கிரஸ் / பாரதிய ஜனதாவின்
வெற்றி தோல்விகள் மீது
கவனம் கொண்ட நேரம்
தமிழகப் பார்வையாளர்களின்
ஒட்டு மொத்த அழுத்தமும்
வேறு திக்கில் குத்திட்டிருந்தது.
மகிழ்ச்சி கொண்டு….
என்றும் சொல்லலாம்.

இரக்கம் கொண்ட
ஓரிரண்டு நெஞ்சங்களைத் தவிர
அந்தப் பார்வையாளர்களில் 
அத்தனை பேர்களும்
பா.ம.க.வின் தோல்விக்கு
விழா எடுக்காத குறையாய்
‘லோட்டா’ கணக்கில் பாயாசத்தை
செய்திகள் காதில் விழுந்த தருணத்திலேயே
குடிக்காமல் குடித்தார்கள்!

தேர்தலையொட்டிய
அரசியல் கணக்கில்
பா.ம.க.
பலவித குளறுபடிகளை
நிகழ்த்தி இருந்தாலும்….
தமிழக அரசியலுக்கோ
இந்திய அரசியலுக்கோ
அதெல்லாம் புதிதல்ல.
பாட்டாளி மக்கள் கட்சி
தேர்தல் தோறும்
அணி மாறுவதையே
மீடியாக்களும், மக்களும்
மிகைப்படுத்தி குறையாகப் பேசுகிறார்கள்.
எல்லா அரசியல் கட்சிகளின்
அங்கீகரிக்கப்பட்ட
பாடதிட்டத்தில் அது ஏற்கப்பட்டுள்ளது!

வேண்டுமானால்…
அதன் தோல்விக்கு
அந்தக் கட்சியின்
‘விசேச குதி’களை
குறிப்பிட்டு சொல்லலாம்.
வாக்காளர்களை அது
முகம் சுழிக்கவே வைத்தது நிஜம்.
சிகரெட் புகைக்காதே…
சாராயம் குடிக்காதே…
மரம் நடு…
என்ன வேண்டிக் கிடக்கிறது
இந்தவகை புத்திமதிகள்?
கோடி கோடியாய் மக்கள் பணத்தை
சுரண்டும் அரசியல்வாதிகள் எவர்க்கும்
ஏது அந்த தார்மீக உரிமை?

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து
தெரு முனைப் பிரச்சாரம்வரை
இறங்கிவந்து
மருத்துவர் அய்யாவும்
அவரது மகனும்
எத்தனை கத்து கத்தினாலும்
இவர்களை
இன்றைய காந்தியாகப் பார்க்க
பொதுமக்கள் தயாராக இல்லை!

அவர்களது மேலுமான….
“அய்யய்யோ தமிழீழம் பற்றி எரிகிறது….!”
கோஷத்திற்கு
புரட்சித் தலைவியை கூட்டாக அழைக்க…
முன் அனுபவம் இல்லாத
அவரது பின்பாட்டு
கொஞ்சமும் சேரவில்லை.
தேர்தல்கால மேடை வசனமாகவே
அந்தக் கோஷம் முடிந்தது!
ஓட்டு தர மக்களும் மறுத்துவிட்டார்கள்.

இன்றைக்கும்…
மருத்துவர் அய்யா
தனது தோல்வியை
ஒப்புக் கொண்டார் இல்லை.
ஓட்டுப் போடும் இயந்திரத்தையும்
ஓட்டுக்கு எதிரிகள் பணம் தந்ததையும்
காரணமாக்கிக் கொண்டிருக்கிறார்.

சில நேரம்…
“பாட்டாளிக் கட்சியை
தோற்கடிக்க வேண்டுமென
கங்கணம் கட்டி
தோற்கடித்துவிட்டார்கள்!” என்றும்
பொருமுகிறார்.

அரசியல் பயிற்றுவிப்பில்
உலகப் புகழ் பெற்ற
தைலாபுரம் சர்வகலாசாலையில்
இது குறித்தெல்லாம்
முன்கூட்டியே யோசித்து
அலசி ஆய்வு செய்திருக்க வேண்டாமா?
தைலாபுரம் சர்வகலாசாலைக்கு வேறு
பங்கம்!

அந்த சர்வகலாசாலையின்
பயிற்றுவிப்பு
போதவில்லை என்பதாலோ என்னவோ
அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர்
தலைமைக்கு கடிதமெழுதியிருக்கிறார்.
அசாத்தியமான சில கருத்துகளுடன்!
கடிதத்தில் அது
பளிச்சிடவும் பளிச்சிடுகிறது.

அந்தத் தொண்டரின் கடிதத்தில்…
‘எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில்
எந்த அரசியல் கட்சிகளோடும்
கூட்டணி வேண்டாம்’ என்பது
முக்கியமான செய்திகளில் ஒன்று.

அந்தக் கடிதம்
எனக்கு தெரிந்து
கூரியரில் அனுப்பப்பட்டு
தலைமைக்கு கிடைத்த
ஒரு சில நாட்களுக்கெல்லாம்…
‘எதிர் வரும் தேர்தலில்
பா.ம.க. எந்த அரசியல் கட்சிகளோடும்
கூட்டணி வைக்காது!’ யென
மருத்துவர் அய்யா அறிக்கைவிட,
எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம்.
சாதாரண தொண்டர் ஒருவரின் கடிதம்
ஒரு கட்சியின் தலைமையை
அல்லது
தைலாபுரம் சர்வகலாசாலையின் மூலவரை
பாதித்திருக்கிறதென்பது
சாதாரணமானது அல்லதான்!

இன்றைக்கு வாராந்தரிகளும்
அந்தச் செய்தியை ஒட்டி
சர்ச்சிக்கத் தொடங்கி இருக்கிறது.
கீழே அந்தப் பிரசித்திபெற்ற கடிதம்!

சரி….
அந்தக் கடிதம்
உங்களது கைக்கு எப்படி?
நீங்கள் கேட்கலாம்.
வெரி சிம்பிள் ஆபிதீன்…
எனக்குள் இருக்கும் நிரூபரின்
குயுக்தியான பக்கமொன்று
திடுமென
விழித்துக் கொண்டதுவே காரணம்!

***

கடிதம் :

From:
M.S. அன்சாரி
நாகை மாவட்ட சிறுபான்மைத் தலைவர்.
பா.ம.க. / சீர்காழி.

*
உயிரினும் மேலான
அய்யா அவர்களுக்கு…..

அய்யா…
நான் சீர்காழியைச் சேர்ந்தவன்.
என் பெயர் முகம்மது அன்சாரி.
உங்களின் உயர்ந்த சமூக நோக்கும்
அரசியல் நேர்மையும் ஈர்க்க
கட்சியில்
இணைத்துக் கொண்டவன்!
நான்கு வருட காலமும் ஆகிவிட்டது!

இணைந்தது முதலே…
ஆர்வமாய் களப்பணியில்
செயல்படுபவனாக
என்னை நான்
முன் நிறுத்திக் கொண்டேன்.
எனது சமூகம் சார்ந்த மக்களிடம்
நம் கட்சியின் மாட்சிமைகளை
எடுத்துச் சொல்லி…
நம் பக்கம் அவர்களை
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறேன்
வைத்துக் கொண்டும் இருக்கிறேன்.
 

இந்தப் பாராளுமன்றத் தேர்தலில்
நாம் எதிர் கொண்ட தோல்வி
யாரும் எதிர்பாராதது!
நமது கட்சித் தோழர்கள்
மனமுடைந்தவர்களாக
கைசேதப்படுபவர்களாக
ஆறா மனத்துயர் பீடிக்க
இன்னும் மீண்டார்கள் இல்லை!
என் நிலையும் அப்படிதான்.

தேர்தல் முடிவு
வெளியான வாரம் முழுக்க
உணவு / உறக்கம்
பிடிக்காது போய்
நண்பர்களைச் சந்திக்க
வெட்கப்பட்டவனாய்….
வீட்டிலேயே முடங்கி
கிட்டத்தட்ட…
சித்தப் பிரமைக் கொண்ட நிலை!

இந்தத் தோல்வி
அலைக்கழிக்கும் கணமெல்லாம்…
உங்களை யோசித்தவனாகவும் இருக்கிறேன்.
உங்களுக்கும்தான்
எத்தனை எத்தனை
மனத்துயர் கிளர்ந்திருக்கும்?

இந்த மண்ணின்
தாழ்த்தப்பட்ட/ ஒடுக்கப்பட்ட/
சிறுபான்மை மக்களுக்காக…
ஈழச் சகோதரர்களுக்காக…
உரிமைக் குரல் எழுப்பி
தமிழ்ப் போராளியாக
வலம் வந்த உங்களை
இந்த மக்கள்…
புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டார்களே!
அடிப்படை
நன்றியுமற்று
தோல்வியை அல்லவா
கைமாறு செய்திருக்கிறார்கள்!!
உங்களை அவர்கள் நிஜமாகவே
புரிந்துக் கொள்ளவில்லையா?
யோசிக்கும் தோறும்
மகா உறுத்தல்!
கண்ணில்…. கசிகிறது இரத்தம்!

இன்னொரு யோசிப்பில்…
நம் மக்கள்
இந்த அளவில்
நன்றி மறந்தவர்களாக…
இருக்கவே முடியாது.
அவர்களின்
அடிப்படை குணத்தை முன் வைத்து
இதை நிச்சயமாக சொல்லலாம்!

இந்தத் தேர்தலில்…
அரசியல் சூழ்ச்சிதான்
நம்மை வெற்றிக் கொண்டிருக்கிறது.  
அதை அரங்கேற்றத்
தேவையான
பணபலம்/ படைபலம்/ அதிகார பலம்
என்று எல்லாமும்
நம் எதிரிகளிடம்
அநியாயத்திற்கு தாராளம்!

தோல்விதான்…
வெற்றியின் படிக்கட்டுகள் என்பார்கள்!
இந்த முழுத் தோல்விதான்…
நமக்கு முழு வெற்றியைத் தேடித்தரப் போகிறது.
எனக்கு சிறிதும் அய்யமில்லை!

2011-ல் நமது ஆட்சியென்று
என்றோ…
நாம் சொல்லி இருக்கிறோம்!
அதுதான் நடக்கவும் போகிறது!

மன்னிக்கனும்…
அய்யாவின் பார்வைக்கு
எனது சிறிய விண்ணப்பம்.

வரும் சட்டசபைத்தேர்தலில்
நமது தேர்தல் அனுகுமுறையை
மாயாவதியின் ‘ஃபார்முலா’வை யொட்டி
மாற்றி அமைக்கலாம்!
அது அர்த்தமுடையதாகவும் அமையும்!

அரசியல் கட்சிகளின்
கூட்டணிகளை நம்புவதை விட
தலித் + இஸ்லாமிய + கிருஸ்துவ + பிராமண +
கொங்கு வேளாளர் + தேவர் + நாடார் என்கிற
சமூதாயங்களின் ஒருங்கிணைப்பில்…
‘மகா கூட்டணி’ காண்போம்.
இரண்டு திராவிடக் கட்சிகளையும்
புறந்தள்ளுவோம்.
தேர்தல் காலங்களில்
கூட்டணி பேசிக் கொண்டு
வரும் / போகும்
தரவுக்காரர்களைத் தவிர்ப்போம்

நேற்று முளைத்தக் கட்சிகள் எல்லாம்
தனித்து நிற்கிற போது….
நம்மால் முடியாதா என்ன?

நம் தலைமையில்
நாம் அமைக்கும் மகா கூட்டணியில்
அந்தந்தக் இனத்திற்குரிய
பிரதிநிதித்துவத்துவ அடிப்படையில்
M.L.A. சீட்டுகளை
கணிசமாக முன் கூட்டியே வழங்கி…
அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்
உறுதி மொழிகளையும் தந்து
தேர்தலில் வெல்லும் தருணம்
அவர்களுக்குத் தக்க மந்திரி பதவிகளை 
நாம் வழங்குவோம்…

அப்படியொரு கட்டமைப்பு
சரிவருமென தாங்களும் யோசிக்கும் பட்சம்
அதை நோக்கிய நம் செயல்பாடுகளை
தீர்க்கமாக/ செயல் திறனோடு
இன்று தொட்டே
துரிதப் படுத்துவோம்.
சந்தேகம் வேண்டாம்
கோட்டையில் நாளை…
பறக்கும் நமது கொடி!

நிச்சயமாக
சத்தியமாக…
2011 நமக்குதான்!

பணிவுடன்…
அன்சாரி / சீர்காழி

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
Web : http://tamilpukkal.blogspot.com/
E- Mail : satajdeen@gmail.com

தேர்தல்-2009: ஜாக்பாட் யாருக்கு ? – தாஜ்

அன்புடன்….
ஆபிதீன்….

தேர்தல் பொருட்டு
உங்களை ரொம்பவும்
வருத்திவிட்டேன்.
அநியாயத்திற்கு எழுதி
படி படியென்கிற
தொல்லைதான் நான்!
இனி பயப்பட வேண்டாம்..
தேர்தல்தான் முடியப்போகிறதே!
சரியா….

ஆகிவிட்டது…
அவ்வளவுதான்!
விடியப் போகிறது!
தேர்தல் கூத்து….
முடியப் போகிறது!

அரைத் தூக்கத்திலும்
மக்களது கேள்வியெல்லாம்…
யார் ஜெயிப்பார்கள்?
யாருக்கு அந்த ஜாக்பாட்?

கூத்தில் பங்கெடுத்த
அத்தனை பேர்கள்
கட்டிய வேஷமும்
உத்தமர் வேஷம்!
அந்தஸ்து கொண்டது!
பாத்திரக் கீர்த்திகளின்
அபார வெளிப்பாடு!
இதன் பொருட்டு
அவர்கள் கொண்ட
அவஸ்தைகள்
சாதாரணமானது அல்ல!

அரிதாரம் பூசியவர்களாக
மாநிலம் மாநிலமாகப் போய்
ஆட்டமாய் ஆடி…
திறமையை நிரூபிக்க
சளைக்காமல் நடித்தார்கள்!
மேடைகளில்
கத்தோ கத்தென்றுக் கத்தி
மனப்பாடமாய்
அவர்கள் பேசிய வசனம்
அந்தக் கால…
சக்தி நாடக சபா
‘ராஜபார்ட்’ தோற்றான்!

தேர்ந்தெடுக்கப்படும்
நாடக சபா நடிகர்களுக்கு
இப்போது கிட்டப் போகும்
ஜாக்பாட்….
‘ஏக இந்தியாவின் அதிகாரா பீடம்!’
‘ஐந்து வருட
பட்டா பாத்தியத்தோடு முழுசாய்!’

இனி…..
நாடும்  மக்களும்
அவர்களின் சொல்லுக்கு ஆடவேண்டும்!
சுதந்திர அமைப்புகளும்
மறைமுகமாய் பணிய வேண்டும்!

யாரை வேண்டுமானாலும்
அவர்கள்….
சிறைப் பிடிக்கலாம்!
கேள்விகளற்று!

அவர்கள் விரும்பினால்…
தனது சின்ன வீட்டுக்காரிகள்/காரன்களை
ஒரே ராத்திரியில்
குபேர அந்தஸ்தாக்கலாம்!

கூத்திற்கான
சன்மானம்…
இத்தனைக்காக…!?
நாம் மலைத்தாலும்
வென்ற சபாக்காரர்களின்
அபிலாசைகளுக்கு முன்
இவைகள் அத்தனையும்
ஒன்றுமே இல்லை!

ஐந்து வருட காலமும்
கும்பிட்டு முடங்கிக்கிடந்த
சொந்த அடிமைகளிடம்
கூத்தை நடத்தி….
பரிசைப் பெறுவதில்
அவர்களுக்கு முகச்சுளிப்பு உண்டு!
சொல்ல முடியாத அளவில்!
மீண்டும்
ஐந்து வருடம் கழித்து….
கூத்து கட்டியேயாகனும்!
கஷ்டம்!

தேர்தல் சீர்திருத்தங்களென
கொடி நாட்டியிருக்கிற
தேர்தல் கமிஷன்….
இந்தக் கூத்தை கொஞ்சம்
சீர்தூக்கிப் பார்க்கலாம்!

கூத்துக்கட்டுவதால்
சம்பந்தப்பட்டவர்களுக்கு சிரமம்
ஒரு புறமென்றால்…
தவிர்க்க முடியாது
அதைக் கண்டும் / கேட்டும்
மண்டை காய்வதில்
மக்களுக்குதான்…
எத்தனையெத்தனை சிரமம்!

தேர்தல் கமிஷன்
தாராளமாக யோசிக்கலாம்!
தேர்தல் தோறும்….
ஜெயிப்பது
அரசியல்வாதிகளாகவும்
தோற்பது மக்களாகவுமே இருப்பதால்
இந்தக் கூத்துக்கு
மாற்று காண்பதில்
பெரிய தவறாகாது.

எப்படி என்றாலும்…
இந்த ஜாக்பாட்
அவர்களில்…
எவரோ ஒருவரிடம் போய்
சேரவேண்டிய ஒன்றே!
நிஜத்தில்…
இது அவர்களின் நாடு!

அவர்கள் எல்லோரையும்
இரண்டு அணிகளாகப் பிரித்து
அந்த அணிகளின் பெயரை
சீட்டெழுதிப் போட்டு குலுக்கி
அதில் ஒன்றை எடுத்து
நிர்ணயிக்கப்பட்ட ஜாக்பாட்டை
அவர்களுக்கு வழங்கலாம்!

கூத்து கட்டும் சபாக்களுக்கு
இந்த சீர்திருத்தம்…
சந்தோசம் தருவதாக இருக்கும்.
இன்னொரு பக்கம்
காலம்/ சிரமம்/ மக்கள் பணம்/
வீண் செலவழிப்பு என்று
எத்தனை எத்தனையோ மிச்சம்!
கண்களை மூடி
ஒருதரம் யோசிக்க முடியுமென்றால்…
நான் குறிப்பிடும்
‘மிச்சம்’ தரும் மகிழ்ச்சி
கிளர்ச்சி தருவதாக இருக்கும்!

சீட்டெழுதிப் போட்டு
ஜாக்பாட் வழங்குவது
அநியாயத்திற்கு
மலிவான யுக்திதான்!
தேர்தல் கமிஷன்
இன்னும் கொஞ்சம் மேலே போய்…
மாற்றியமைக்கும்
வேறுபல வழிமுறைகள் குறித்தும்
யோசிக்கலாம்…!

உயரம் தாண்டுதல்/ நீளம் தாண்டுதல்/
சாக்குப் பைக்குள் ஓடுதல்/ கபடி…
என்பன போட்டிகளை
மாற்றாய் ஏற்பாடு செய்யலாம்.
பெண்களாக இருக்கும் பட்சம்
மியூசிக்கல் சேர்/
ஊசியில் நூல் கோர்த்தல்/
கோலம் வரைதல்/
ஃபேஷன்ஷோ…
என்று ஜமாய்க்கலாம்.

இதெல்லாம் சரிபட்டு வராதென்றால்…
எம்.பி. தொகுதிகளை
டெண்டருக்கு விடலாம்!
ஒவ்வொரு தொகுதியும்
நூறு கோடிக்கு குறையாமல் போகும்!
இதை நான்….
‘சன்’ குரூப்
சௌகரியத்துக்காகவென்று சொல்லவில்லை!
எல்லோரின் சௌகரியத்திற்காகவும்தான்!

தேர்தலால் நாட்டுக்கு
செலவென்பது போய்…
எத்தனையெத்தனை
நூறு நூறு கோடிகள் லாபம்!
சுவிஸ் பேங்கில் இருந்து
இந்தியர்களின் பணத்தை
மீட்டுக் கொண்டு வருவதைவிட
அதிகத் தொகையாக
இது இருக்கும்!
 
தேர்தல் சீர்திருத்தம் என்றால்
இதுதான்….
சரியான சீர்திருத்தம்!!
ஏன் யோசிக்கக் கூடாது?
யோசிக்கலாம்…
பேஷாய் யோசிக்கலாம்!

போதும்….   
நிஜத்திற்கு வருவோம்.

கூத்து கூத்து…
என்றெழுதிக் கொண்டிருக்கும்
என் கூத்து…
வாசகர்களுக்கு
பெரும் கூத்தாகப் போயிருக்கும்.
இனி கூத்து வேண்டாம்!
யதர்த்தப் பார்வையோடு
நேராய் எழுதலாம்!

மே13 – 2009 தோடு
இந்திய பாராளுமன்றத்திற்கான
தேர்தல்கள் முடிவடைகிறது.

அடுத்த மூன்றாம் நாள் விடியலில்…..
யாருக்கு வெற்றி?
தெரிந்து போகும்!

தேர்தல் – 2009
பாரளுமன்ற ஜனநாயகத்திற்கு
உதவும் என்று தோன்றவில்லை.

காங்கிரஸ் / பாரதிய ஜனதா
கூட்டணிகள் சிறுத்து விட்டன!
மூணாவது / நாலாவது என
புதிய புதிய கூட்டணிகள்!
விட்டேனா பார்? என்ற
அவர்களது செயல்பாடு.

மூணாவது / நாலாவது
கூட்டணிகளுக்கு
கணிசமான எம்.பி.க்கள் நிச்சயம்!
அவர்களுக்குள்
ஒற்றுமை என்பதுதான்…
நிச்சயமின்மை!

புதிய பாராளுமன்றத்தில்
பிரதமர் ஆகவேண்டும்
அந்த சிம்மாசனத்தில்
உட்கார்ந்து பார்த்துவிட வேண்டுமென
விருப்பம் கொண்டவர்களின்
கியூ…….
டெல்லியில் இருந்து
உத்திரப் பிரதேசம் வரை
நீண்டுகொண்டிருக்கிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு
இவர்கள் அநியாயத்துக்கு
ஜரூராவார்கள்!
அத்தனை பேர்களும்
ஆளாளுக்கு
பத்து அல்லது
பதினைந்து எம்.பி.க்களை
வீட்டுக் காவலில்
வைத்துப் பூட்டிவிட்டுத்தான்
இந்த கியூவை தொடர்வார்கள்!

அவர்களின் ஆசையும்
வெட்கம் அறியாது!
தாங்கள் எண்ணியதை அடைய
எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நம்ம ஜெயலலிதாவுக்கு
40க்கு 40 என்றாகிப் போனால்…..
வேறு எந்த தகவலும் கிட்டாமலேயே
‘டெல்லியில் பூகம்ப’மென
உலகுக்கு…
B.B.C. தாராளமாக செய்தி வாசிக்கலாம்!

தவிர…
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு…
இத்தனை ஆண்டுகள் கழித்து
வயசு போன காலத்தில்
கம்யூனிஸ்ட்டுகளுக்கும்
சிம்மாசன ஆசை!
வரவேற்கத்தக்க
ஆசையே என்றாலும்…
கம்யூனிஸ்டுகள்…
எதை எதை
எப்பொழுது? எப்படி?
காவு வாங்குவார்கள் என
இப்பொது சொல்ல முடியாது.
சொல்லப் போனால்…
அது இப்பொழுது
அவர்களுக்கே தெரியாது.

16.05.2009-க்குப் பிறகு
கிட்டத்தட்ட…
சிம்மாசனத்திற்கான
ஓர் யுத்தத்தை
நாம் பார்க்கப் போகிறோம்!
ஜனநாயகத்தின் பெயரால்
அந்த யுத்தம் என்பதுதான் சோகம்!

காங்கிரஸ் / பி.ஜே.பி.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
பழைய எண்ணிக்கை கிட்டாது!

என் யூகத்தை
காங்கிரஸ் வேண்டுமானால்
பொய்யாக்கலாம்…
நிச்சயம் பி.ஜே.பி.
பொய்ப்பிக்காது!

பி.ஜே.பி.யின் கூட்டாளிகள்
அவர்களை விட்டு
போய்விட்டார்கள் என்பதாலோ…
அவர்களது
ஓட்டு வங்கி மாநிலங்களில்
பழைய ‘கெத்து’ இல்லை
என்பதினாலோ
என் யூகிப்பை
நான் சிலாகித்து கூறவில்லை!
அதற்கு 
வாழும் காரணங்கள்….
வேறு சில உண்டு!
 
1. பி.ஜே.பி.
மக்களிடத்தே ஊட்டிய
மதத்துவேச போதை
அடங்கித் தெளிந்திருக்கிறது.

2. பி.ஜே.பி.யை
சரியான கோணத்தில்
தலித்மக்கள்
நிறம் கண்டு கொண்டிருக்கிறார்கள்

3. பி.ஜே.பி. பெற்ற
பழைய வாக்கின்
கெலிப்புகளில்….
அதன் முந்தைய பிரதமர்
வாஜ்பேயிக்கும் பங்குண்டு.
அந்தக் கட்சியின்
இன்றைய ‘பிரதம’ வேட்பாளராக
அறியப்படும் அத்வானி…
ஒருகாலும் வாஜ்பேயி அல்ல!

4. இன்றைய நிலையில்
பிரதமருக்குத் தகுதியானவர்….
மன்மோகன் சிங்கா?
அத்வானியா? என்றால்… 
இந்தியாவில்
ஆனா… ஆவன்னா…
படிக்கத் தெரிந்த
அத்தனைப் பேர்களும்
ஒட்டு மொத்தமாக
மன்மோகன் சிங்கையே சுட்டுவார்கள்!
யதார்த்தம் இது!
செயற்கையால் எல்லாம்
யதார்த்தத்தை…
மிஞ்சிவிட முடியாது!

16.05.2009  சனிக்கிழமை
காலை 8.30க்கு
தெரியத் தொடங்கும்
இந்தியாவின் ‘தலையெழுத்து!’

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
விழுந்து கும்பிட்டு
வேண்டிக் கொள்வது நலம்!

ஜாக்பாட்….!
யாருக்கு வேண்டுமானாலும்
கிடைத்து விட்டுப் போகட்டும்.
ஆபிதீன்,
இந்தியா என்று கொஞ்சம் மண்
நமக்காக….
மீதம் இருந்தால் சரி!
என்ன சரிதானே?
 
****

நன்றி : தாஜ் /தமிழ்ப் பூக்கள்
satajdeen@gmail.com

***

சரிதான் !

« பழைய வரவுகள்