அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் திரு. ஏ.பி. மணிகண்டன் எழுதிய கட்டுரை. துக்ளக்-ல் ( 7.9.2011 இதழ்) வந்திருக்கிறது. தனக்குப் பிடித்திருக்கிறதென்று தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். பதிவிடுகிறேன். தாஜின் பின்குறிப்பு கட்டுரைக்குப் பின் வருகிறது. ‘சோவின் துக்ளக் அரசியல்’ கட்டுரையைப் படித்துவிட்டு இதை வாசிக்கலாம். மாற்றுக்கருத்துடைய நண்பர்கள் தாஜை தூக்கிலும் போடலாம்!
***
இலங்கைத் தமிழர் பிரச்னை வேறு; பயங்கரவாதம் வேறு!
ஏ.பி. மணிகண்டன்
‘ஐ.நா. குழு அறிக்கையின்படி இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளன. எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை மீது இந்தியா உடனடியாகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் முன்னிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதன் பின்பு இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து இருப்பதும் நாம் அறிந்ததே.
இறையாண்மை பெற்ற ஒரு நாட்டின் மீது, மற்றொரு நாட்டின், மாகாணத்தைச் சேர்ந்த முதல்வரோ அல்லது ஆளுநரோ கருத்து தெரிவிப்பதோ, அல்லது எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவதோ சரியான அணுகுமுறைதானா என்பது விவாதத்துக்கு உரியது. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாகாணத்தைச் சார்ந்த ஒரு ஆளுநர், நமது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ அல்லது இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றியோ கருத்து தெரிவித்தால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா? எனினும் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழக முதல்வரின் அணுகுமுறையும், ஏனைய எதிர்க் கட்சிகளின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுப்பட்டது.
போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் உரிய பாதுகாப்பும், நிவாரணமும் பெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர, வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் முதல்வருக்கு இருக்க துளியும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது வேறு, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது வேறு என்பதை மிகத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு, இன்றும் பயங்கரவாத விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்த்து வருபவர் நமது தமிழக முதல்வர். சமீப காலமாக இலங்கைத் தமிழர்களின் நலனிற்காக அவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர் பயங்கரவாதிகளைத் துளியும் ஆதரித்தது இல்லை. எனவே, அவருக்கு வேறு எந்த மறைமுக நோக்கமும் நிச்சயம் இல்லை.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகவே அவதரித்த தலைவர்களான வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், போன்றோரும், நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் பிரச்சாரகர்களாக இருந்துவரும் பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்களும் ‘முள்ளிவாய்க்கால் சம்பவத்தை பாரீர், ஐயோ ஈழத் தமிழர்க நிலை பாரீர்’ என்று கூறுவதற்கும் நிறைய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.
மேற்கண்ட தலைவர்களுக்கு ஈழத் தமிழர்களின் துயர், போர்ப் படுகொலைகள் இவற்றைப் பற்றிய அக்கறையை விட, இறுதிக் கட்டப் போரில் நடந்த துன்பியல் சம்பவத்திற்குத்தான் வருந்துகின்றனர் (பிரபாகரன் கொல்லப்பட்டது). இதை வெளிப்படையாகவும் கூற முடியாது. ஏனெனில், பிரபாகரன் கடவுள் அவதாரத்திற்கு இணையானவர், அவரை உலகில் யாராலும் அழிக்க முடியாது என்ற ‘பில்டப்’ அழிந்து விட்டதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையே வசதியாக மறைத்துவிட்டு, ‘இதோ வருகிறார்’ விரைவில் வந்து விடுவார்’ ‘வந்து கொண்டே இருக்கிறார்’ என்று மக்களின் முன்பு நாடகமாடிக் கொண்டிருப்பவர்கள் மேற்கூறியவர்கள்.
எனவே, ‘ஈழத் தமிழர் நலன், போர்ப் படுகொலை, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்’ என்று இவர்கள் கூப்பாடு போடுவது என்பது அப்பட்டமான பகல் வேஷம். அவர்களின் உண்மையான ஆத்திரம், இறுதிக்கட்டப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார், அதற்குக் காரணமான இலங்கை அதிபரைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.
ஐ.நா.சபை அறிக்கை என்ன இலங்கையை மட்டுமா குற்றம் சாட்டியது? விடுதலைப் புலிகள் புரிந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய அவலம், இளம் சிறார்களைப் போரில் ஈடுபடுத்தியது… என்று அவர்களின் அட்டூழியங்களையும் பட்டியல் போட்டது. தமிழகத்தில் யாராவது ஒரு அரசியல்வாதியாவது இதைப் பற்றிப் பேசினாரா? கண்டித்தாரா? விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை வசதியாக மறைத்துவிட்டு, ‘அயோ இலங்கையில் போர்க் குற்றம் பாரீர், ஈழத் தமிழரின் அவலநிலை பாரீர்’ என்று அனைத்து பத்திரிகைகளும் சிறிதும் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டன.
போர் குற்றங்களில் மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறாமல், யாரை ஏமாற்ற நாடகம் நடத்துகின்றனர் இந்த வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள்?
சரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றகளுக்காக நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிறுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்? அப்போது இந்த மனித உரிமை காவல் தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது மரண தண்டனை கூடவே கூடாது என்பார்களா?
இந்திய நாட்டின் இளம் தலைவரை, அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஒரு முன்னால் பிரதமரை துடிதுடிக்கக் கொலை செய்ய உதவிய குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கூடவே கூடாதாம். மரண தண்டனை மனித நேயத்திற்கு எதிரானதாம்.
இந்திய நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற விடுதலைப் புலிகளை தூக்கில் போடக் கூடாது. உலக பயங்கரவாதியான பிரபாகரனை வீழ்த்திய இலங்கை அதிபரை மட்டும் 1000 முறை சாகும் வரை தூக்கில் போட வேண்டுமாம். ராஜீவ் காந்தியின் உயிர் என்ன விடுதலைப் புலிகளின் உயிர் போல மதிப்பு வாய்ந்ததா? அல்லது குறைந்த பட்சம் அவர் இலங்கைத் தமிழரா? விடுதலைப் புலிகளை வேறோடு ஒழித்த ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொலை செய்த, கொலைக்கு உதவிய மனிதப் புனிதர்களான, விடுதலைப் புலிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். புலிகளுக்கு ஒரு மனித நேயம் என்றால், மனிதர்களின் மகா புனிதர்களாக விளங்கும் அஃப்சல் குரு, கஸாப் போன்றவர்கள் இந்த நாட்டின் மாட்சிமை பொருந்திய விருந்தினர்களாக நடப்பட வேண்டும். வாழ்க ஜனநாயகம்! அட சர்வேசா!
- ஏ.பி. மணிகண்டன்,
கழக வழக்கறிஞர்,
அ.இ.அ.தி.மு.க. – சேலம்.
*
பின் குறிப்பு – தாஜ்:
இந்தக் கட்டுரையின் பார்வை, எனக்கு ஏற்புடையது. இதில் மறைப்பு வாதங்கள் உண்டு. எழுதி இருப்பவர் ஓர் வழக்கறிஞர் மற்றும், அரசியல் சார்ந்தவராயிற்றே! சென்ற பாராளுமன்ற தேர்தலில், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்று ‘ஈழத் தமிழர்களுக்கு அவர்களது மண்னை மீட்டுத் தருவேன். அது என்னால்தான் முடியும்’ என்பதானது. தவிர, ஈழ மக்கள் மீது என்றும் இல்லாத அளவுக்கு ஜெயிடம் பிரியம் கரைபுரள்கிறது. அவரது மேடையில் அமர்ந்திருந்த வை.கோ., ஐயா வைத்தியரெல்லாம் பின்னுக்குப் போய்விட்டார்கள். இக்கட்டுரையாளர் அந்த நிகழ்வையே துடைத்தெறிந்த மாதிரி வசதியாக மறந்துவிட்டார். நம் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரே முகம்தான்.
ஈழத் தமிழ்ப் பிரச்சனை இத்தனைத் தூரம் சோகம் கப்பி போனதற்கு பல காரணங்கள். அதில் வீரியமான ஒன்று, இந்திய அரசியல்வாதிகள் அதில் சுயநலத்துடன் பங்கெடுத்ததுதான். இதனை சத்தியம் செய்து சொல்வேன். இதில், நம் மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுக்கு சளைக்காமல் காரியம் ஆற்றியது. நாட்டின் பாதுகாப்பிற்காக என்றும் ஈனக் குரலில் ஒப்புக் கொண்டது. இங்கே மத்திய அரசு என்பது பாரதிய ஜனதா ஆண்ட மத்திய அரசையும் சேர்த்துதான். இவர்களுக்கு தமிழன் என்றாலே ஆகாது. தமிழனின் கச்சாதீவை தாரைவார்ப்பதில் ஆகட்டும்/ காவிரி நீர் வரத்து சிக்கலை கண்டுக் கொள்ளாததில் ஆகட்டும்/ சேது சமூத்திரத் திட்டம் முடங்கிப் போவதை கண்டுக் கொள்ளாதில் ஆகட்டும்/ தமிழக மீனவர்களை சிங்கள ரணுவம் கொல்வதை பெரிசுப் படுத்தாததில் ஆகட்டும் மத்திய அரசு தொடர்ந்து தமிழனுக்கு எதிராக வில்லன் வேஷம் கட்டுவதில்தான் எத்தனை இன்பம் அதற்கு!
அன்றைக்கும் இன்றைக்கும் ‘தமிழ் ஈழத்தின்’ வரைப்படம் கூட தெரியாத நம் அரசியல் தலைவர்கள் அதன் பிரச்சனையில் பங்கெடுக்கும் வேகம் அபாரமானது! மிச்சம் மீதி இருக்கும் ஈழத் தமிழர்களையும் கூண்டோடு பரலோகம் அனுப்பாதவரை ஓயமாட்டார்கள். கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஈழத் தமிழனே தமிழ் ஈழத்தை மறந்தாலும், நம் அரசியல்வாதிகள் மறக்க மாட்டார்கள். இங்கே இவர்கள் அரசியல் செய்ய வேறு ஆயுதமே இல்லை. ஒரு பெரிய போருக்குப் பிறகு நீண்ட ஓய்வு என்பது புத்திசாலித் தனமான போர் தந்திரமாக கணிக்கப்படும் யதார்த்தம் கூட இவர்களுக்கு புரிவதில்லை. நிஜத்தில் ஈழ மண் என்னவோ இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. இவர்கள்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். இடையிடையே ‘பிரபாகரன் வருவார்’ முழக்கம் வேறு.
அண்டை (நாட்டு முன்னால்) பிரதமரை, தமிழ் ஈழ இயக்கம் திட்டமிட்டு படுக் கொலை செய்கிறது. அது நிரூபணமாகி, அந்த இயக்கமும் ‘ஆம்’ என ஒப்புக் கொண்டப் பிறகும், இந்திய அரசு அந்த மூவரையும் இருபது வருடம் ஜெயிலில் வைத்துவிட்டு, இப்போதுதான் தூக்குக்கு அனுப்ப முனைகிறது. இதுதான் சாக்கென்று, தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்வர்களும் ‘தூக்கு கூடாது’ தென அநியாயத்துக்கு கூக்குரல் இடுகிறார்கள். எப்படி யோசித்தாலும் இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இந்தக் கட்டுரை, தமிழக பத்திரிகைகளில் இருந்து மாறுப்பட்ட கோணத்தில், அதே நேரத்தில் திறம்படவும் கருத்துக்களை வைத்திருக்கிறது. அதனாலேயே… என் பார்வையில் இது சிறப்பாக தெரிகிறது. இன்னும் பெரிய அளவில் இங்கே நான், என் பக்க செய்திகளை வைக்க வேண்டிய முக்கியம் இருக்கிறது. என்றாலும் போதும். உணர்ச்சிகளை மழுங்கடிக்க உண்மைகளால் முடியாது.
***
நன்றி: துக்ளக் / ஏ.பி. மணிகண்டன் , தாஜ்
***
ஆபிதீன் தரும் ஒரு சுட்டி :