’படிங்க நானா’ என்று தம்பி பஃக்ருதீன் முந்தாநாள் சுட்டி அனுப்பிய உடனே – படித்துவிட்டு – முழுக்க இங்கே மீள்பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். இதற்கொரு வக்கீல்நோட்டீஸ் வரப்பெற்றால் எங்கே ஓடி ஒளிவது? சபரிலிருந்து வந்தாலே , ’கோர்ட் கோர்ட்’ என்று அலையாய் அலைந்த என் சீதேவி வாப்பா அந்தக் கட்டுரையைப் பார்த்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்தான். கொடுத்து வைக்கவில்லை. சரி, ’ வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! ’ என்று கடுமையாக விளாசும் சட்ட ஆராய்ச்சியாளர் , சகோதரர் ’வாரண்ட் பாலா’வின் முழுக் கட்டுரையையும் வாசிக்க ‘இந்நேரம்’ தளத்திற்குச் செல்லுங்கள். பெரியார் விளாசியதும் அங்குண்டு. எனக்கு பயமுண்டு. நன்றி. – ஆபி..
***
’ மகாத்மா காந்தி தனது 40 -வது வயதான 1909 ஆம் ஆண்டில் எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’* என்ற நூலின் 11 -வது கட்டுரையில் வக்கீல்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் விரிவாக தெரிவிக்கும் கருத்தை, விரிவஞ்சி மிக முக்கியமான கருத்துக்கள் மாறாமல் கீழ்கண்டவாறு தொகுக்கிறேன். (* இந்நூலைக் காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020, மலிவு விலை வெளியீடாக ரூ 10 க்குத் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.) - வாரண்ட் பாலா . ***
***
வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டைப் போதிக்கிறது.
இத்தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை.
பணக்காரர் ஆவதற்கான வழிகளில் வக்கீல் தொழிலும் ஒன்று.
மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.
இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள்.
இவர்கள் தெய்வப் பிறவியோ ஏன்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளுகின்றனர்.
இவர்களால் குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன.
கோர்ட்டுகளுக்கு போகத் தலைப்பட்ட பிறகே அவர்கள் மனிதத்தன்மையில் குறைந்தவர்களாகவும், கோழைகளாகவும் மாறினர்.
மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு.
தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்த வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது.
எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிட போவதில்லை என்பது நிச்சயம்.
முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர், அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைக் குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் மிகப் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கு பலப்படுத்தி இருப்பதாகும். விபச்சாரத்தைப் போல இத்தொழிலும் இழிவானது என்று கருதி விட்டால், ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும்.
வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒவ்வொருக்கொருவர் பக்க பலமாக இருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்தக் கூற்றும் பாசாங்காகும்.
***
வாரண்ட் பாலா வலைப்பூ : http://warrantbalaw.blogspot.com/ | Cell : +919842909190 | E-Mail : warrantbalaw@gmail.com

