இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

மறக்கவியலாத ‘முஸல்(மான்) வேட்டை’யை ‘விவாதிக்கும்’ சமயம் கண்டிப்பாக இதுவல்ல. எனவே இந்தப் பதிவு. மக்கள் தொலைக்காட்சியின் (15/2/2009) ‘சங்கப்பலகை’யில் , மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் திரு புரூஸ் ஃபெயினுடன் தோழர் தியாகு நடத்திய உரையாடல். அந்த அமெரிக்கர் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘ம.தொ.கா’ தந்த தமிழாக்கத்தைப் பதிகிறேன். தகவல் பிழையிருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்துகிறேன். நன்றி.

**

brucefein_4wp

இனப்படுகொலைக்கு எதிராக ஒரு வழக்கு

தியாகு : சங்கப்பலகை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரு புரூஸ் ஃபெய்ன் அவர்களே !

புரூஸ் ஃபெய்ன் : என்னை அழைத்தமைக்காக மிகவும் நன்றி!

சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் எதிராக நீங்கள் தொடுக்க எண்ணியிருந்த இனக் கொலை வழக்கு பற்றி எங்கள் நேயர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். தமிழர்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி குறித்து நாம் பேச வேண்டும். நீங்கள் விடைதர வேண்டிய முதல்வினா , சட்டவகையிலும் அரசியல் வகையிலும் ‘இனக்கொலை’ என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் இலக்கணம் அல்லது வரையறை என்ன?

இனக்கொலை என்றால் என்ன என்பதை சட்டவகையில் விளக்குவதற்கு இரு ஆவணங்கள் உள்ளன. முதலாவதாக , 1948ஆம் ஆண்டின் இனக்கொலை தொடர்பான உடன்படிக்கை. அது ஒரு ஒப்பந்தம். 1994ல் அமெரிக்கா இதற்கு…  இஸ்ரேல் ஸ்ரீலங்கா ஆகிய அரசுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இதில் இனக்கொலை என்பதற்கான பொது இலக்கணம் உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி ஒவ்வொருநாடும் இனப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும். இனக்கொலையை தண்டிக்க வேண்டும். கோத்தபய, பொன்சேகா ஆகியோரை கூண்டிலேற்றும்படி நாம் அமெரிக்க அரசைக் கூறுகிறோம் என்பதால் அமெரிக்க நாட்டின் சட்ட நடைமுறையை தெரிந்து கொள்வோம். இனக்கொலை என்பது ஒரு மக்கள் இனத்தை அம்மக்களின் இனம், இனக்குழு, மதம் அல்லது தேசீய இனத்தைக் காரணமாக வைத்து முழுமையாகவோ பெருமளவிலோ அழிக்க முயல்வதாகும். இதற்காகவே நீதியியலுக்கு புறம்பாக கொலை செய்தல், சித்திரவதை, காணமல் போகச் செய்தல் ஆகிய வழிகளிலோ பட்டினி போடுதல் , மருந்து கிடைக்காமல் செய்தல் , உறைவிடம் கிடைக்காமல் செய்தல் , ஓயாமல் புலம்பெயரச் செய்தல் , தலைக்குமேல் கூரையின்றி திறந்தவெளியிலும் மரத்தடியிலும் வசிக்கச் செய்தல் போன்றவழிகளிலோ மக்களைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்ட முயல்வதாகும். இனக்கொலை என்பதற்கான இந்த விளக்கத்தின் அடிப்படையில் கால வரிசைப்படியான ஒரு நிகழ்ச்சித் தொகுப்பை வரைந்துள்ளோம். இலங்கையில் 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சே வகையறா ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றை இதில் பட்டியலிட்டுள்ளோம். இந்தக்  காலத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முதல் 6 பேர்வரை கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது காணாமல் போயுள்ளார்கள். அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் இனக்கொலை நடைபெறாத நாளே இல்லையெனலாம். இந்த கொலைபாதகச் செயல்களுக்கும் தமிழ்ப் புலிகளுடன் நடைபெறும் போருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். இவ்வாறு கொல்லப்படுபவர்களெல்லாம் எப்படிப் பார்த்தாலும் போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட சாமான்ய குடிமக்களே. வகுப்பறைகளிலும் தேவாலயங்களிலும் கோயில்களிலும் புலம்பெயர்ந்தோர் முகாம்களிலும் இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கொலைகளை எதை தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையென்று விளக்க வழியில்லை.

இவ்வகையிலான கொலைகளை போர்நடத்துவதன் ஒரு பகுதியென்று சொல்ல முடியாதா?

முடியவே முடியாது.  வேறு ஒரு நாட்டில் நடந்த இனக்கொலை பற்றிச் சொல்வதானால் சூடான் நாட்டின் அதிபர் பஷீர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனக்கொலை குற்றம் சுமத்தப்பட்டபொழுது அவர் இப்படித்தான் தன்னைக் காத்துக் கொள்ள வாதிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிராகவே போர்புரிவதாக அவர் சொன்னார். வழக்கு தொடுத்தவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு என்று சாக்கு சொல்லி இனக்கொலை செய்வதே உண்மையான உள்நோக்கம் என்று எடுத்துக் காட்டினார்கள். பயங்கரவாதம் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இது ஒரு சிறந்த முன்னுதாரணம். நான் தொடுக்கிற வழக்கிலும் இந்த வாதம் , இந்த சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஊதியாக நம்புகிறோம்.

இந்த வழக்கிற்கு முன்னுதாரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.

கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனக்கொலை பொறுப்புச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் முதல்வழக்காக நம் வழக்கு அமையும். இனக்கொலை என்பது அன்றாடம் நிகழக்கூடிய வாடிக்கையான குற்றமன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மிகச்சிலரே இக்குற்றம் புரிய வாய்ப்புள்ளது. மிகச்சிலரே இந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கின்றனர். இனம், மதம் போன்ற காரணங்களுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்படும்போதே இந்த வழக்கிற்கான தேவை வருகின்றது. நாம் தொடுக்கவிருக்கின்ற வழக்கு ஒரு முன்னோடியாக அமையும். கோத்தபய ராஜபக்சே ஒரு அமெரிக்க குடிமகன். சரத் பொன்சேகா அமெரிக்காவின் ‘பச்சை அட்டை’ வைத்திருப்பவர். அமெரிக்க குடிமக்கள் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறையாக இருக்கும். அமெரிக்க நீதிமன்றங்களின் மேலுரிமைக்கு இவர்களை உட்பட்டவர்களாக்குவது இதுவே. ஸ்ரீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சேயும் இனக்கொலை குற்றவாளிதான் என்று கருதுகிறோம். ஆனால் இப்போதைக்கு நாம் அவர்மீது வழக்குத் தொடர விரும்பவில்லை. ஏனென்றால் அவர் அமெரிக்க குடிமகன் அல்லர். செய்நுட்ப வகையில் அவர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும் என்றாலும் கூட அவருக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்பதால் விட்டுவிடுகிறோம்.

இந்த வழக்குகளின் தனித்துவம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை இருவகைகளில் வேறுபட்டதாகும். முதலாவதாக மற்றநாடுகளில் இனப்படுகொலை என்பது வழக்கத்திற்கு மாறான வழக்கத்திற்கு மாறான ஒரு பிறழ்வாகவே நடைபெற்று வருகிறது. அது காலத்தின் பொதுவான போக்கிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தது. எடுத்துக்காட்டாக ஹிட்லருக்கு முந்திய ஜெர்மனியில் யூதர்கள் மற்றநாடுகளைக் காட்டிலும் சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்திருந்தார்கள். ஆகவே 60 லட்சம் யூதர்கள் ஜெர்மனியில் இனப்படுகொலைக்கு ஆளானது ஒரு விதிவிலக்காக நிகழ்ந்தது. ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இனப்படுகொலை வித்துக்கள் பொதிந்திருப்பதை நாம் கண்டுபிடித்தோம். ஸ்ரீலங்கா என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் மகாவம்சத்தின் கதைகளும் தர்மபாலாவின் போதனைகளும் இனக்கொலைக்கே வழிகாட்டுபவையாக உள்ளன. சிங்கள பௌத்தர்களின் இயேசு கிருஸ்துவும் மோசஸ¤ம் நபிகள் நாயகமும் எல்லாமே இந்த தர்மபாலாதான். அவரது கருத்துக்கள் இலங்கைத்தீவின் இனத்தூய்மையை வலியுறுத்துகின்றன. ஒவ்வொருநாளும் பௌத்த பிக்குகள் மக்களிடையே சிங்கள பௌத்த வெறியை ஊட்டி வளர்க்கிறார்கள். இவ்வாறு , இனப்படுகொலை வழிபாட்டுக்கு உரியதாக்கப் படுகிறது. ஆகவேதான் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுவதற்கு ஒருவகையில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் பங்காளியாக ஆகிறார்கள். இது முதலாவது தனித்தன்மை. இரண்டாவதாக , இதற்கு முன் நடைபெற்றுள்ள இனப்படுகொலைகளைப் பார்த்தால் மிகக் குறுகிற காலத்திற்குள்  பெருந்தொகையினர் கொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.  ஜெர்மனியில் குறுகியகாலத்திற்குள் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இலங்கையில் இப்படியில்லை. இங்கே இனப்படுகொலை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஐந்தாறு பேர் கொல்லப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இப்படியே பல்லாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. 1982, 1983ல் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் பத்தாயிரக்கணக்கான இல்லங்களும் கடைகளும் அழிக்கப்பட்டதுமான நிகழ்வுகளும் உண்டு. இந்த நீண்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் ராஜபக்சே அரசாங்கத்தின் இனக்கொலை குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுதான் இப்போது நடைபெறும் இனப்படுகொலையின் பின்னணி .  இந்த ஆட்சியின் கடந்த மூன்றாண்டு காலத்தில் கொலை , சித்திரவதை , ஆள்கடத்தல் போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிகளோடு வந்து சுட்டுத் தள்ளுவதும் வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்வதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவ்விதம் கடத்திச் செல்லப்படுபவர்கள் திரும்பி வருவதே இல்லை. இது புதுவிதமான இனப்படுகொலை. ஆனால் கொடுமையில் மற்ற இனப்படுகொலைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல. இதுவும் கொடிய குற்றமே. குறிப்பாகச் சொன்னால் இது பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நீட்டித்து விடுகிறது.

நீங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர என்ணியுள்ளீர்கள். இதற்கு உறுதியான சான்றுகள் தேவைப்படுமே..நீங்கள் எவ்வாறு அவற்றை திரட்டப் போகிறீர்கள்?

உண்மைதான். வழக்கு விசாரணை என்று வரும்போது முழுமையான சான்றுகள் தேவைப்படும். நாம் இன்னும் அந்தக் கட்டத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு நாம் தொகுத்துள்ள சான்றுகளிலேயே சில வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக , ராஜபக்சே, பொன்சேகா படையினரால் திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தகப்பனார் அளித்துள்ள வாக்குமூலம் நம்மிடம் உண்டு. அவர் இப்போது இலங்கையில் உள்ளார். இனப்படுகொலை வழக்கிற்கான அறிக்கையை அடுத்தவாரம் வெளியிடுவோம். மேலும் பலர் சாட்சியமளிப்பதற்கு முன்வருமாறு ஊக்கப்படுத்துவோம். ராஜபக்சே அரசாங்கத்தின் அத்துமீறலை கண்டித்துப் பேசுகின்றவர்கள் யாரானாலும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையம் ஆனாலும் , படையினரை குற்றம் சொல்கின்றவர் ஆனாலும்…. எல்லாவற்றையும் மறுதலிப்பதும் திருப்பி அடிப்பதும்தான்  ராஜபக்சேயின் வழக்கமாக உள்ளது. எல்லோரையும் அவர்கள் புலிகள் என்கிறார்கள். நாங்களெல்லாம் வெள்ளைப் புலிகளாம். அவரது பரப்புரை எவ்வளவு நச்சுத்தன்மை கொண்டது என்பதை அறிந்துள்ளோம். சாட்சியம் அளிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் தேவைப்படுகிறது என்பதும் புரிகிறது. என்றாலும் அவர்களையெல்லாம் அமெரிக்கா வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்படி ஊக்கப்படுத்துவோம். கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்றவர் ஆனாலும் இதே தமிழ்நாட்டில் அகதி முகாமில் இருப்பவரானாலும் வேறு இடங்களின் வாழ்ந்து வருகின்றவர் ஆனாலும் அவர்கள் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இனக்கொலை குற்றவாளிகள் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களையெல்லாம் கொன்று போடுவோம் என்ற அச்சுறுத்தல் நிலைதான் உள்ளது. சட்டத்தில் சுற்றுச் சான்று என்ற ஒன்று உள்ளது. அந்த அடிப்படையிலும் இனக்கொலை குற்றச்சாட்டை மெய்ப்பிக்க முடியும். நேரடிச் சான்று கிடைக்காதபோது சுற்றுச்சான்றை அடிப்படையாக வைத்து குற்றத்தீர்ப்பை வழங்கலாம். சாட்சிகள் கொல்லப்படும் ஆபத்து இருப்பதாகச் சொல்லி விளக்கமளிக்க முடிந்தால் சுற்றுச் சான்றே முக்கியமானதாகிவிடும். ஏனென்றால் நமக்குத் தெரிந்ததுதான் , இலங்கையில் எல்லாச் செய்திகளும் திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. தமிழ் பகுதிகளிலிருந்து உண்மை அறிய வழியேதுமில்லை. பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் , அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் , மனிதாபிமான உதவி அமைப்புகள் எதுவும் இப்பொழுது அங்கே இல்லை. எல்லாவற்றையும் அரசு வெளியே அனுப்பி விட்டது. கண்காணிப்புக் குழு எதுவும் இல்லாத நிலையில் அங்கே நடக்கிற உண்மை நிலைகளை அறிய வழியில்லை. எல்லா தகவல் வழிகளையும் அடைத்துவிட்டு அரசு அங்கே என்ன செய்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏதோ கெட்டது நடக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் இவ்வாறு வழக்கு தொடர்வதற்கு உங்களுக்கு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று நினைக்கிறேன். அல்லது அரசியலால் வழக்கு தொடர வேண்டும்.

வேறு பல நாடுகளைப் போலவே அமெரிக்காவில் கூட அரசுதான் குற்றவழக்கு தொடரமுடியும். ஆகவே நாங்கள் அரசின் நீதித்துறையிடமிருந்தும் அயலுறவு துறையிடமிருந்தும் ஒப்புதல் வாங்க வேண்டியிருக்கும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊக்கமும்கூட தேவைப்படுகிறது. இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அமெரிக்க குடிமகன் மீது நடவடிக்கை எடுக்க அரசின் ஒத்துழைப்பைப் பெற்றாக வேண்டும். ஸ்லோபோதான் மிலோஸ்விக் (Slobodan Milosevic) , பஷீர்  …  போன்றவர்கள் மீது  இனக்கொலைக் குற்றத்திற்கான வழக்கு தொடுக்கிறோம். ஆனால் குற்றவாளி அமெரிக்க குடிமகனாக இருக்கும்போது அலட்சியமாக இருந்து விடுகிறோம். அமெரிக்காவில் இன்னொரு வழியிலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். தனிப்பட்டவர்கள், திரிகோணமலையில் கொல்லப்பட்ட ஐவரின் குடும்பத்தினர் அல்லது, பாதிக்கப்பட்ட  எவரும் இழப்பீடு கூறி உரிமையியல் வழக்கு தொடுக்கலாம். பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவில் இல்லையென்றாலும் குற்றம் புரிந்தவர் அமெரிக்கராக இல்லாத போதும் கொடுமை நிகழ்ந்த இடம் அமெரிக்காவில் இல்லையென்றாலும் இவ்வாறு உரிமையியல் வழக்கு தொடர முடியும். இதற்கு அரசிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.  நாம் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம். முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யலாம். ராஜபக்சே மீதும் பொன்சேகா மீதும் வழக்கு தொடரலாம். கலிபோர்னியாவில் இருக்கும் அவர்கள் வீட்டை விட்டு இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கலாம்.

ஆகவே இரண்டு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறீர்கள். குற்றவியல், உரிமையியல் இருவகையிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படித்தானே?

ஆமாம், அப்படித்தான்.

நீங்கள் இதற்காக நீண்ட நாட்களாய் உழைத்துள்ளீர்கள். அரும்பாடுபட்டு ஏராளமான ஆவணங்களைச் சேகரித்து உள்ளீர்கள். ஆயிரம் பக்கத்திற்கு மேல் வரக்கூடிய இந்த ஆவணங்களை எப்போது அரசிடம் தரப்போகிறீர்கள்? அல்லது ஏற்கனவே தந்து விட்டீர்களா?

அடுத்த வாரம் தந்து விடுவோம். அதனை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். இதனை மூன்று நான்கு மாதங்களாக தயாரித்து வருகிறோம். இனக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுகளை நீட்டிப்பதற்கான மிக விரிவான சான்றாக அது அமையும். இது 1948லிருந்து ஆரம்பமாகும். தமிழ் மக்களின் வாக்குரிமை குறைப்பு, குடியுரிமை குறைப்பு ஆகியவற்றிலிருந்து இது ஆரம்பமாகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் சட்டக் கண்ணோட்டத்திலும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு இது மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக அமையும் என்று நம்புகிறோம். இன அழிப்புக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு தமிழனின் கையிலும் இந்த ஆவணம் இருக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு அடிப்படையான இனச்சிக்கல் தீர்வதற்கு உங்கள் முயற்சி எவ்வகையில் பயன்படும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வழக்கு தொடுப்பது மட்டுமே இனச்சிக்கலுக்கு தீர்வாகி விடாது என்பதை நன்கு அறிவோம். இதனால் அவர்கள் எதையும் கைவிடப் போவதில்லை. உண்மை நிலவரத்துக்கு ஏற்ப செயலுக்கு உகந்த ஒரு இலக்கையே  நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். சர்வதேசிய சமுதாயத்தையோ வேறு ஒரு நாட்டையோ ஐநா அமைப்பையோ அணுகுவதால் இப்போது எந்தப் பயனுமில்லை. எத்தனையோ ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்கள் இந்த துயரத்தை உலகுக்கு உணர்த்துவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். அது எவர் செவியையும் எட்டவில்லை.  ஆகவே இந்த இனக்கொலை வழக்கை மக்களுக்கு அறிவூட்டும் கல்விப்பணியாகவும் கருதுகிறோம். கோத்தபய ,ராஜபக்சே , பொன்சேகா ஆகிய மூவரையும் தண்டிப்பதற்காக மட்டுமே நாம் இதைச் செய்யவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் சிங்கள பவுத்த இனவெறி மனப்போக்கு எப்படி இயங்குகிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கும் இந்த இனக்கொலை வழக்கு துணை செய்யும். இந்தோனேஷியவிலிருந்து கிழக்கு திமோரும் எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியாவும் செர்பியாவிலிருந்து கொசோவாவும் பிரிந்து சென்றது போன்ற ஒரு தீர்வு ஏன் தேவைப்படுகிறது என்பதை இது விளங்கச் செய்வதற்கான அடித்தளமாக இவ்வழக்கு அமையும். இவையெல்லாம் அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவை. இங்கு ஓயாமல் நிகழும் இனப்படுகொலையைப் பார்த்து இதயம் வெடிக்கிறது. கொத்து குண்டுகள் வீசப்படுகின்றன. தினமும் பத்து பதினைந்து பேர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அகதி முகாம்களின் மீது குண்டு வீசப்படுகின்றன. அதே நேரத்தில் நாம் உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் உடனே நின்று விடப்போவதில்லை. இலங்கையிடம் பெட்ரோல் இல்லை. அணு ஆயுதங்களும் இல்லை. அமெரிக்காவின் கவனத்தைக் கவரக்கூடிய எதுவும் இல்லை. அதன் கவனமெல்லாம் இப்போது காஸாவிலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளது. யுரேனியம் அணு ஆயுதங்கள் ஆகியவற்றைப் பற்றித்தான் அதற்குக் கவலை. ஈராக், ஆ·ப்கானிஸ்தான் அதற்கு முக்கியம். எப்படியானாலும் ஸ்ரீலங்காவிற்கு அதனால் முதல் முக்கியத்துவம் தர முடியாது. ஆகவேதான் நமது பணியை செய்வதற்கு ஒரு ஆயத்த காலம் தேவைப்படுகிறது. இந்த முயற்சியிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

தியாகு : நன்றி திரு ·பெய்ன் அவர்களே! எங்களுக்கு நீங்கள் தந்த அறிவு வெளிச்சத்திற்காக நன்றி. கோத்தபய, பொன்சேகா ஆகியோரை இனக்கொலை குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி அவர்களின் உண்மை நோக்கத்தை உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட நீங்கள் மேற்கொண்ட பாடுகளுக்காக உலகத் தமிழர் சார்பில் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டதிற்கு இது பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். நன்றி.

புரூஸ் ·பெய்ன்: நன்றி!

***

நன்றி : மக்கள் தொ.கா, தியாகு, திரு. புரூஸ் ·பெய்ன்

**

* ‘முஸல்(மான்) வேட்டை’ – சேரனின் ஒரு கட்டுரை

**
தொடர்புடைய சில சுட்டிகள்:

1 லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம் : தமிழ் | ஆங்கிலம்

2. ‘ஈழம், இனி தடுப்புமுகாம் – அகதிமுகாம் வடிவத்தில் ?’ – நாகார்ஜூனன்

3. நண்பர் H. பீர்முஹம்மது அனுப்பிய ஒரு சுட்டி (வீடியோ) :

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

முனைவர் பர்வீன் சுல்தானா

**

தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி..!

நோன்புப் பெருநாளன்று (14-10-2007) , மக்கள் தொலைக்காட்சியின் ‘சங்கப்பலகை’ நிகழ்ச்சியில் , தோழர் தியாகுவுடன் முனைவர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடலை இங்கே பதிகிறேன். சித்தி ஜூனைதா ஆச்சியைப் பற்றி , ‘இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால்’ என்று பர்வீன் சுல்தானா சொன்னது மட்டும் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ஏனெனில் அப்போது ஜூனைதா ஆச்சி பிறக்கவே இல்லை! அதை திருத்தியிருக்கிறேன். அவர் சொன்ன மற்ற தகவல்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எதற்கும் நீங்கள் ‘இஸ்லாமும் தமிழிலக்கியமும்’ என்கிற முனைவர்.பீ.மு. அஜ்மல்கான் அவர்களின் கட்டுரையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சித்தி ஜூனைதாவைப் பற்றி சொல்லும்போது மட்டும் மகிழ்ந்து போகிற இஸ்லாமிய இலக்கியவாதிகளிலிருந்து மாறுபட்டு,  ‘சல்மா’வின் மறுக்கமுடியாத பங்களிப்பையும் சேர்த்துச் சொல்லும் அந்த ஒரு விஷயத்துக்காகவே பர்வீன் சுல்தானாவைப் பாராட்டுவேன்.

மக்கள் தொலைக்காட்சிக்கும் தியாகுவுக்கும் முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கும் நன்றிகள்.

- ஆபிதீன் -

***
பர்வீன் சுல்தானா : …பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அதாவது பதினான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் , பல்சந்த மாலை என்கின்ற ஒரு நூல் கிடைப்பதாக களவியற்காரிகை நமக்குச் சொல்கிறது. ஆனால் அது முழுமையான நூல் வடிவத்தில் கிடைக்கவில்லை. ஒரு  எட்டுப் பாடல்கள் மட்டுமேதான்
கிடைக்கின்றன. ஆக , எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னமேயே தமிழகத்திற்கு இஸ்லாமியர்களுடைய வருகை இருந்திருக்கிறது; அல்லது அரேபியர்களுடைய வருகை இருந்திருக்கிறது. அரேபியர்களுக்கே இஸ்லாம் அறிமுகமானதற்குப்  பிறகு – அவர்கள் வணிகம் பொருட்டு தமிழகத்திற்கு வருகின்றபோது -  அந்த  இஸ்லாத்தை பற்றி அவர்கள் இங்கே சொல்லி இங்கே இருக்கின்றவர்களும் இஸ்லாமாகியிருக்கிறார்கள்; அவர்களும் இங்கே குடும்பத்தை விருத்தி செய்திருக்கிறார்கள்.

தியாகு : அதனால்தான் இவங்க இஸ்லாம் ‘ஆனவர்கள்’?

ப : ஆமாம்.. இஸ்லாமியர்கள் என்று சொல்லுகின்ற வார்த்தையை விட தமிழகத்தில் பரவலாக நாம் கேட்கின்ற சொல் – ‘இஸ்லாம் ஆனவர்கள்’ – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்கின்ற பொருளில். ஆனால் ஒரு குறிப்பு என்னவென்றால் , இஸ்லாத்தைப் பரப்புகின்ற பொருட்டு அரேபியர்கள் தமிழகத்திற்கு வரவில்லை. அவர்கள் வணிகத்தின் பொருட்டுத்தான் வந்தார்கள். இவர்களுடைய மார்க்கத்தினுடைய செய்திகளைக் கேட்டு – எப்பொழுதும் ஒரு மாற்று விசயத்திற்காக தயாராகக்கூடிய சமூகச் சூழல் – இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது; அப்படித்தான் பார்க்க முடியும்.
பதினான்காம் நூற்றாண்டின் நடுவிலே கிடைத்த நூல் (பல்சந்த மாலை) முழுமையாக கிடைக்காதபோது , முழுமையாக கிடைக்கக்கூடிய முதல் இஸ்லாமிய இலக்கியம் எது என்றால்… 1572ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நூல். ‘ஆயிரம் மஸ்லா’ என்ற அந்த நூலுக்குப் பெயர். இந்த மஸ்லா என்ற சொல்லடைவு தமிழுக்குப் புதியது. இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள்..- இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, வேறு எந்த மார்க்கத்திற்கு உரியவர்களாக இருந்தாலும் -  அந்த மார்க்கம் மூலமாக அவர்களுக்கு ஒருமொழியானது கொடையாக கிடைக்கிறது.  அப்படி கொடையாக கிடைத்த அந்த மொழிதான் இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி. அது மட்டுமல்லாமல் பாரசீக (ஈரான்) மொழி அவர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த பாரசீக மொழியிலும் அரேபிய மொழியிலும் கவித்துவம் பெற்ற அளவுக்கு பாண்டியத்தியம் பெற்றவர்களாக இஸ்லாமியப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் புலமைகளை தமிழுக்குக் கொண்டு வருவதற்காக தமிழிலும் அவர்கள் பாண்டியத்தியம் பெற்று , தமிழிலே அவர்கள் பல சிந்தனைகளை கொண்டு வருவதன் மூலமாக இஸ்லாத்தினுடைய கொடையாக தமிழுக்குப் பல புதுவகை இலக்கியங்களை தந்து சென்றிருக்கிறார்கள். தமிழுக்கு இத்தனை பிரபந்த வகை என்று பண்ணிருபாட்டியல் நமக்கு ஒரு பட்டியல் தருகிறது. 96 வகை பிரபந்தங்கள் என்று நமக்கு பல இலக்கண நூல்கள்.. தண்டியலங்காரமும் அதைச் சொல்கிறது. 96 வகை பிரபந்தங்களைக் கடந்த நிலையில் , நூற்றுக்கும் மேற்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் படைத்திருப்பதாக நமக்கு அறிய வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய வடிவங்களை , ஆயிரக்கணக்கான இலக்கியங்களை தமிழுக்கு அவர்கள் தந்திருக்கிறார்கள்.

தி : அரபிமொழி கற்று அரபி மொழிப் புலமையோடு தமிழுக்கு வருகிறார்கள்; தமிழையே அரேபியில் எழுதுவதாகச் சொல்கிறார்களே. அரபித்தமிழ் இலக்கியம்..அதைப்பற்றிச்  சொல்லுங்கள்

ப : குர் ஆன் என்ற வேதநூல் அரேபிய மொழியில்தான் வாசிக்கப்படுகிறது. அந்த அரேபிய மொழி என்பது இறைவனோடு அளவளாவக்கூடிய ஒரு மொழியாக, ஒரு மொழியிலேயே மிக அதிகபட்ச மரியாதைக்குரிய மார்க்கமொழியாக , இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். புனித மொழியாகக் கருதுகிறார்கள். புனிதமாக அந்த மொழியைக் கருதுவதன் விளைவாக இஸ்லாமிய செய்திகளை எழுதுகின்றபோது – இவர்களுக்கு அரபியை வாசிக்கத் தெரியும்;எழுதத் தெரியும்; பேசத் தெரியாது – இந்த பிரச்சனை உண்டு. தமிழகத்திலே எல்லா இஸ்லாமியக் குழந்தைகளும் குர் ஆன் ஓதும். எல்லோருக்கும் அரபி வாசிக்கத் தெரியும். இதைப் போல எழுத்து லிபியும் தெரியும். ஆனால் பேசத் தெரியாது. எழுத்தை வாசிக்கவும் எழுதவும் மட்டுமே அறிந்திருப்பவர்கள் , இஸ்லாமிய எழுத்துக்களை இலக்கியமாக தமிழில் எழுதுகின்றபோது அரேபிய லிபியைப் பயன்படுத்துகிறார்கள். Ttransliteration என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; ஒலிபெயர்ப்யாக – மொழி பெயர்ப்பாக அல்ல -  அரேபிய இலக்கியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல கையெழுத்துப் பிரதிகள்.. ஆனால் பிற்காலங்களில் அது குறைந்து போனது. சிலர் இதிலேயே உயில் எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அரேபியிலெ வாசிக்கிறதுக்காக எழுதுகின்றபோது , புனிதமாக விசயத்தை எழுதுகிறோம்; தன்னுடைய சந்ததிகளுக்காக எழுதுகிறோம் என்று.. அப்படி எழுதிவச்ச பிரதிகளும் காணக் கிடைக்கின்றன.

தி : சிற்றிலக்கியங்கள்..

ப: சுவையான விசயம் இதுலெ என்னவென்றால்..பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமக்கு இஸ்லாமிய இலக்கியங்கள் அறிமுகமாகின்றன – தமிழகத்தில். ஆக, அரேபியர்கள் இங்கே வேரூன்றி, தமிழ் கற்று, அல்லது தமிழகத்தில் இருக்கக்கூடியவர்கள் இஸ்லாத்தை ஏற்று, கல்வி பெற்று மேலே போவதற்கு ஒரு நான்கு ஐந்து நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிலே அவர்கள் எழுதத் தொடங்குகின்றபோது – அந்தக் காலகட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய ஓட்டம் என்பது சிற்றிலக்கிய காலமாகத்தான் இருந்திருக்கிறது. காப்பிய காலம் அப்போது இல்லை. காப்பிய காலத்ததை நாம் கடந்திருக்கிறோம். பக்தி இலக்கிய காலத்தையும் கடந்து , அந்த சிற்றிலக்கிய காலக்கட்டத்தில் இஸ்லாமியப் புலவர்கள் எழுதுகோலை கையில் எடுத்தபோது பலவிதமாக இஸ்லாமிய இலக்கியங்களை அவர்கள் எழுதுகிறார்கள். கோர்வை, அந்தாதி, கீர்த்தனை, இசைப்பாடல்கள், ஞான நூல்கள், தூது, குறவஞ்சி என்று பல இலக்கிய வடிவங்களை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய இலக்கியங்களாக படைக்கிறார்கள். படைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்களுக்கு இயல்பாக வாசிக்ககூடிய பிறமொழி அறிவை, சிந்தனையைப் பயன்படுத்தி புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்கிறார்கள். இதில் ஐந்து புதுவகை வடிவங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த ஐந்தில் ஒன்றைத்தான் என்னுடைய ஆய்வுத் தலைப்பாக நான் எடுத்தேன். அந்த ஐந்து என்பதில்,  ஒன்று : ‘மஸ்லா’, மஸ்லா என்பது புதிர். கேள்விகள் கேட்டு பதில் வரக்கூடிய இலக்கியம் – விடுகதை போல. அடுத்தது : ‘நாமா’. ‘நாமா’ என்றால் பெயர். இறைவனுடைய பெயர்களைச் சொல்லி பல பாடல்கள் எழுதப்பட்ட ஒரு இலக்கியம் – ‘நாமா’. அடுத்ததாக கிடைக்கும் இலக்கியம் : ‘கிஸ்ஸா’. கிஸ்ஸா என்றால் கதை. கதை வடிவம். பழையான கதை வடிவங்கள் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டவை இந்த கிஸ்ஸாக்கள். பிறகு வருவது : ‘முனாஜத்’. முனாஜத் என்பது இறைவேட்கை பாடல்கள். முழுமையாக இறைவனிடத்தில் வேட்கை நிகழ்த்துகிற பாடல்கள். வழிபாடு வேறு, வேட்கை வேறு. இறைவனிடத்தில் மன்றாடுதல். அடுத்ததாக வந்த இலக்கியம்தான் ‘படைப்போர் இலக்கியம்’. படையும் போரும். போர்க்கதைப் பாடல்களாக பல இலக்கியங்கள் கிடைக்கிறது. இதில் செவ்வியல் இலக்கியமும் கிடைக்கிறது, நாட்டார் இலக்கியமும் கிடைக்கிறது – பரணி இலக்கியம் மாதிரி. ஆனால் பரணி இலக்கியத்திற்குப் பிறகு தமிழகத்தில் எந்தப் போரும் தோன்றவில்லை என்பதனை மாற்றி அமைக்கும் பொருட்டு இவர்கள் இந்த இலக்கிய வகையை அறிமுகப்படுத்தினார்கள். பரணியிலிருந்து இதை ஒப்பிட்டுப் பார்த்தால் படைப்போர் இலக்கியம் தனித்த வகை. இதன் இலக்கண வடிவமைப்புகள் எல்லாம் வேறு வேறு. தமிழுக்கு இவைகள் புதுவரவு. இஸ்லாம் தந்த கொடையாக அதை சேர்த்துக் கொள்ளலாம்

தி : நீண்ட இலக்கியங்கள்… உமறுப்புலவருடைய சீறாப்புராணமெல்லாம் நெடுங்காப்பியத்தினுடைய தன்மைகளில் இல்லையா?

ப: ஆமாம், படைப்போர் இலக்கியத்தை பார்த்திர்கள் என்றால் சிற்றிலக்கிய வகை. அளவால் சின்னது; அதுதான் சிற்றிலக்கியம்டு சொல்ல முடியாதபடிக்கு வகைகள் வருகிறது. படைப்போர் இலக்கியங்களிலேயே சல்ஹா படைப்ப்போர், சைதத்து படைப்போர் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் ‘சல்ஹா படைப்போர்’ என்பது காப்பியம்.  படைப்போர் இலக்கிய வகையை புதுவகை இலக்கியமாக, கண்ணிகளாக , பாடல்களாக எழுதியிருக்கிறாகள். முழுக்க விருத்தங்களால் ஆன செவ்வியல் இலக்கியமாக அது இருக்கிறது. நாட்டார் பாடல்களாகவும் எழுதியிருக்கிறார்கள். பலவகையான வடிவங்களில் இந்த பாடல்கள் நமக்கு கிடைக்கிறது. நீண்ட இலக்கியங்களாகவும் அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள்.

தி : இதனுடைய காலம் எப்படி..உமறுப்புலவருடைய..

ப: அது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். முதல்லே கிடைக்கிற இலக்கியமென்று – மஸ்லாவை – 1572ஐ சொல்லிட்டோம். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது (சீறாப்புராணம்) கிடைக்கிறது.

தி : சீறாப்புராணம் அனைவரும் அறிந்து பெயரென்று வைத்துக் கொள்ளாலாம். அதே போல பெயர் தெரியாமல் போன இலக்கியங்கள்..

ப: என்னுடைய வேதனையான இன உணர்வுகளை இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள். என்னவென்றால், இஸ்லாமிய இலக்கியங்கள் என்று பார்த்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான இலக்கியங்கள்.. பதிப்பிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே இருக்கின்றன இன்னும்.. இந்த இலக்கியங்களையெல்லாம் வாசிக்கும் தோறும் அந்த இலக்கியத்தினுடைய செழுமை வசீகரிக்கிறது. செம்மொழியாக இருப்பதற்கு அவ்வளவு தகுதிப்பாடுகளும் இந்த இலக்கியத்திற்கு உண்டு.  சீறாப்புராணம் போல அனைத்துத் தகுதிகளும் பெற்ற பல (இஸ்லாமிய) இலக்கியங்கள் இருந்தாலும் வாசிப்புப் பயிற்சி இல்லாத காரணத்தால் அல்லது அவைகள் அறிமுகம் செய்யப்படாத காரணத்தால் அவை மக்களைப் போய்ச் சேரவில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து

தி : சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தினுடைய வரலாறுதானே?

ப: சீரத்து வரலாறு என்பதுதான் பொருள்.

தி : அதை எழுதுவதற்கு சீதக்காதியின் கொடை துணையாக இருந்தது இல்லையா?

ப: ஆமாம். நிச்சயமாக.

தி: சீதக்காதி ஒரு புரவலர். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல், உமறுப்புலவருக்கு ஒரு சீதக்காதி. சரி, அச்சு வடிவம் பெறாத இலக்கியங்களும் ஏராளமாக இருக்கிறது என்கிறீர்கள்

ப: என்னுடைய ஆய்வுக் களத்திற்காக நான் தேடித்திரிந்தேன். கள ஆய்விலே படைப்போர் இலக்கியத்திற்காக தேடி அலைகின்றபோது …’இபுறாஹிம் படைப்போர்’ என்கின்ற ஒரு நூல் கீழ்த்திசை சுவடி நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. மூவாயிரம் கண்ணிகள் இருக்கக்கூடிய அந்த நூலை நான் வாசிக்க நேர்ந்தபோது… ஏர்வாடியில் இருக்கக்கூடிய அந்த இபுறாஹிம் பாதுஷாவைப் பற்றிய வரலாறு – தீன் விளக்கம்டு ஏற்கனெவே ஒரு நூல் வந்திருக்கிறது – அதை அடியொட்டி படைப்போர் இலக்கியமாக இந்த இபுறாஹிம் படைப்போர்  இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நூல் இன்னும் பதிக்கப் படவில்லை. என்னுடைய தனித்த முயற்சியின் காரணமாக , நான் சேகரித்த அத்தனை நூல்களையும் – அது மிகப் பழமையாக , xerox என்கிற நகலெடுத்தபோது உதிர்ந்து விழுந்த காரணத்தால்  பொடிப்பொடியாகப்போன அந்த நிலையில்கூட – நான் பதிப்பித்திருக்கிறேன் -  பார்க்கர் பதிப்பகம் என்ற என்னுடைய பதிப்பகத்தின் மூலமாக. தமிழியல் ஆய்வு நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் அடிப்படையில் இதை நான் முழுக்க பதிப்பித்திருக்கிறேன். ஆனால் இன்னும் பதிக்கப்படாமல் இன்னும் சற்றுவேலை பாக்கியிருக்கூடிய ஒரு..

தி: அதெல்லாம் தாள் சுவடிகள்தான், இல்லையா?

ப: இல்லையில்லை. ஓலைச் சுவடிகள்!

தி: எழுத்து முறையிலே அதில் வேறுபாடு இருக்கிறதா?

ப: ஆமாம். புள்ளி வைத்திருக்காது. இஸ்லாமிய இலக்கியங்களை வாசிப்பதென்பது சற்று சிரமமான விஷயம். நான் சுவடி இலக்கியத்தைத் தேடித்தான் என்னுடைய ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். இஸ்லாமிய இலக்கியத்திற்கு வந்து நின்றேன்.  என்ன காரணம் என்றால்,  இதை நான் செய்யாமல் யார் செய்வது என்கிற பெரிய கேள்வி எனக்குள் எழுந்து விட்டதுதான் காரணம். என்னவென்றால் நீங்கள் வாசிக்கும்போதும் – இப்படி இருக்குமென்று வைத்துக்
கொள்ளுங்களேன் ஒரு வார்த்தை – ‘அவன் சபுர் செய்து கொண்டிருந்தான்’, ‘மக்ரிப் நெருங்கிக் கொண்டிருந்தது’… ‘சபுர்’ என்றால் என்னவென்று தெரியாமல் வாசிப்பைத் தொடர முடியாது. இஸ்லாமிய இலக்கியங்களில் இருக்கக்கூடிய வாசிப்புச் சிக்கல்களில் இஸ்லாமிய இலக்கியங்கள் புகழ்பெறாமல் போவதற்கு , அல்லது மற்றவகளுடைய வாசிப்பிற்கு  காரணாமாகாமல் இருப்பதற்கு இதைக் கூடச் சொல்லலாம். ‘மக்ரிப்’ என்பது தொழுகைக்கான நேரம் , அது ஆறு மணிக்கு மேல் தொழக்கூடிய நேரம், ‘சபுர்’ என்பது பொறுமையாக இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடு.. இதைப் புரிந்தால்தான் சரியாக வாசிக்க முடியும்.

தி: சமயம் என்றில்லை, மீனவர்கள் குறித்து ஒரு புதினம் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்; அந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய சொற்களில் பரிச்சயமில்லையென்றால் அதைப் படிக்க முடியாது.

ப: ‘ஆழி சூழ் உலகு’ என்கிற புத்தகம் படித்தேன்.

தி: அதைத்தான் சொல்ல வருகிறேன். ஜோ.டி. குரூஸ¥டைய அந்த நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது நிறைய அவர்களின் புழக்கச் சொற்கள்… அவங்க தனியா பெயர் வச்சிருக்காங்க!

ப: ஆமாம்…’நீவாடு’ண்டு ஒரு சொல் வரும்…நமக்குத் தெரியாது.

தி: அதுபோல கடல் நீரோட்டங்களுக்கு அவர்கள் வைக்கிற பெயர்கள்.. இதெல்லாம் தெரியாம நாம  வாசிக்கவே இயலாது.

ப: ஆனால் ஒரு உள்ளன்போடு, இது நம்ம தமிழ் சார்ந்ததென்று அக்கறையோடு வாசிக்க ஆரம்பித்தால் புரிந்து விடும்.

தி: நிச்சயமாகப் புரியும். போகிற போக்குல படித்துவிட முடியாது. முயற்சி தேவை.

ப: வாசிப்பு முயற்சி

தி: எழுதுகிறவனுக்கு முயற்சி தேவைப்படுகிறமாதிரி வாசிப்புக்கும் ஒரு முயற்சி தேவை

ப: இந்த முயற்சி இருந்தா இஸ்லாமிய இலக்கியங்கள் பிரபலமாவதற்கும் மற்றவர்கள் கையில் அது தவழ்வதற்கும் அதிக காலம் கிடையாது.

தி: வாசகன்  வசதிக்காக வேண்டி இந்த தனித்தன்மைகளை விட்டுடக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தனித்தன்மையை பாதுகாத்துக்கொண்டுதான் வாசகனை பழக்கிக்கிட்டு வரணும். அந்த வார்த்தைகளை நீர்த்துப்போக விடக்கூடாது. சரி, நவீன இலக்கிய வடிவங்களிலே இஸ்லாத்திண்டைய பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

ப:  ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது எது? நிறைய பேர்கள் என்ன சொல்கிறார்கள், ‘இது இஸ்லாமியப் புலவர் எழுதினார்; அதற்காக அது இஸ்லாமிய இலக்கியம்’ என்று. அப்படியல்ல. எழுதப்படக்கூடிய பொருள் , அது இஸ்லாமுடைய வாழ்வியல் நெறிமுறைகளுக்கும், அந்த கோட்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கின்றபோது அது இஸ்லாமிய இலக்கியமாக பெயர் பெறுகிறது. இப்படிப் பெயர் பெறுகிற நேரத்தில் உலகியல் விசயங்களை நிறைய பாடக்கூடிய வாய்ப்பில்லாமல் பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தினுடைய குறிக்கோள்களாக சில விசயங்களை காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நிகழ்த்துதல்கள், நிகழ்த்துக் கலைகள்..இவைகள் இஸ்லாத்தில் இல்லை; ஆனாலும் வாழ்வியல் நிலையிலே நம்முடைய மண்ணிற்குரிய விசயமாக நிகழ்த்துதல் இருக்கின்றபோது அதைத் தவிர்க்க முடியாமல் போகின்ற சூழலையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக, மார்க்கம் சொல்கின்ற ஒரு விசயம் இருக்க , உலகியலோடு ஒத்துவாழக்கூடிய பண்பாட்டு ரீதியான ஒரு விசயம் இருக்க , இரண்டு நிலையிலும் இஸ்லாமியர்கள் தன் நிலையை வழுவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தி: செயற்கையாக இல்லாமல் இயற்கைப் போக்கிலேயே ஒரு மண்ணின் பண்பாடும், மதத்தின் பண்பாடும் கலந்துவிடுகிறது. நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தமிழ் பேசுகிறவர்கள் தமிழரல்லாதவராகவும் அரேயியர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள். எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் சந்தனக்கூடு என்பதற்கும் கோயில் திருவிழாவிற்கும் பெரிய வேறுபாடு இருக்காது. எல்லோரும் போய் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்கள். இதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்கிறார்போல் அதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ப: சந்தனம் நிறைந்த கூடு இருக்கும்.

தி: அதேபோல் இங்கே ஒரு கோயில் திருவிழா என்றால் ஒருநாளைக்கு மண்டகப்படி – மாமா வீட்டு மண்டகப்படிண்டு சொல்வார்கள் – மாமா மச்சான் என்று பழகுவார்கள். ஒன்னும் வேற்றுமை இருக்காது; எல்லோரும் மண்ணின் மக்கள் என்கிற உறவுமுறையிலே பழகுவார்கள்.

ப: இன்றைக்கும் வேற்றுமை இல்லே.  வேற்றுமை என்பது அவர்களுடைய வாழ்வியலோடு இல்லாமல் இருக்கிறது. அது ஏதோ அரசியல் தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் வாழ்வியலோடு அது ஒன்றுகலக்கவே இல்லை என்பதுதான் தமிழகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

தி: மதம், அந்த மதத்தைப் பேசுகிற பிறந்த ஒரு பகுதி, அந்த மதம் அதிகப்பேர் கடைப்பிடிக்கிற ஒரு பகுதி என்றால் அந்த பகுதிக்குரிய தேவைகளுக்கேற்ப உடைகள் , அந்த பழக்க வழக்கங்கள் வருது. ஒரு மணல் வீசுகிற பாலைவனத்தில் உடுத்துகிற அந்த உடையையே வெயில் கொளுத்துகிற இன்னொரு நாட்டிலேயோ வேறொரு இடத்திலேயோ போய் பயன்படுத்த முடியாது. அதனாலேயே அது மத உடை ஆகிவிடாது. மண்ணின் தேவைக்கேற்பத்தான் உடை மாறுபடுகிறது. அதிலேயே சில வேறுபாடுகள் – சமயத்துக்கு சமயம் – இருக்கலாம். அந்த முறையில் பார்க்கிறபோது இஸ்லாத்திற்கென்று , இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் , மார்க்கத்தைப் பரப்புவதற்கென்று உருவான பல்வேறு இலக்கியங்கள் – அவை இந்த மண்ணுக்குரிய இந்த மொழிக்குரிய தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஒரு பண்பாட்டுப் பங்களிப்பை செய்திருக்கிறது. நான் என்ன கேட்கிறேன் என்றால், அப்படி வரும்போது – இஸ்லாத்தினுடைய தாக்கத்தினால் – இஸ்லாம் அல்லாதவர்கள் படைத்திருக்கிற இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கலாம் இல்லையா?

ப: நிச்சயமா இருக்கும். நீங்க கேட்ட இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லிட்டு அப்புறம் நவீன இலக்கியங்களுக்கு  வருகிறேன். இஸ்லாம் என்கின்ற மார்க்கத்தின் அடிப்படையான விசயங்களை உள்வாங்கிக்கொண்ட பிறமார்க்கத்து சகோதரர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்கிறேன்: ‘நபிநாதர் பிள்ளைத்தமிழ்’ என்கிற நூலை மு. சண்முகனார் என்கிற ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார். அற்புதமான ஒரு நூல். இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளையோ கோட்பாடுகளையோ ஒழுகலாறுகளையோ முழுக்க உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட ஒரு இலக்கியமாக அது திகழ்கிறது. அதே போல ‘கோட்டாற்றுக் கலம்பகம்’ என்கின்ற ஒரு நூலை கருத்தையா பாவலர் என்பவர் எழுதியிருக்கிறார். இவருடைய தமிழ் பங்களிப்பு என்பது இஸ்லாத்தினுடைய உலகத்தில் மிக அருமையான ஒன்றாக கருதப்படுகின்றது.

தி: இதை இஸ்லாமிய வாசகர்கள் மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள்?

ப: நிச்சயமாக. நான் ஒரு விசயத்தை தெளிவாக்குகிறேன். இஸ்லாமிய இலக்கியம் என்பது எழுதப்படுபவர்களைப் பொறுத்து பெயர் பெறுவதல்ல. எழுதப் படுகின்ற பொருளை வைத்து பெயர் பெறுவது. அடுத்ததாக, நவீன இலக்கியங்கள் என்று வரும்போது இஸ்லாமிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு , இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கையையோ அல்லது மனிதர்களுடைய மேம்பாட்டு நிலையையோ சொல்லக்கூடிய வகையில் மீட்டுருவாக்கத்தையோ அல்லது மறு வாசிப்பிற்கோ உட்பட்ட பல இலக்கியங்கள் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறன.  அதை இல்லையென்றே சொல்லிவிடமுடியாதபடி பல நவீன இலக்கியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நவீன இலக்கியங்கள் இஸ்லாமியர்களுடைய வாழ்வியல் நிலைகளை நவீன நோக்கோடு பார்க்கக்கூடிய சூழலை இன்றைக்கு நாம் காணமுடிகிறது. இன்னும் ஒரு விசயம் என்னவென்றால் , பல விசயங்கள் பேசக்கூடாது என்கின்ற நிலை இருந்தது; இதற்கு மதப்பூச்சு வைத்திருந்தார்கள்; ஆனால் , மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதனை இன்றைய நவீன இலக்கியங்கள் சொல்லிக் காட்டுகின்றன. ஏனென்றால் ஒருவர் எழுத வருகின்றபோது – அது நவீன இலக்கியமாக இருக்கின்றபோது – சமயமும் மதமும் எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்படாது என்பதனைப் புரிந்துகொண்ட படைப்பாளிகள் இன்றைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஒரு மிக நல்ல விசயமாகத்தான் எனக்குப் படுகிறது.

தி: அவர்கள் உலகியல் அரங்கிலும் பங்களிப்பு செய்கிறார்கள்..

ப: நிச்சயமாக. இதுவே பெரிய உலகியல் பங்களிப்புதானே.. ஒரு சாதாரண இஸ்லாமியனுக்கும் வேற்று மார்க்கத்தவருக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் , காலையில் எழுந்திருப்பதிலிருந்து ராத்திரி தூங்கும் வரைக்கும், முழுக்க முழுக்க இஸ்லாமியராகவே இருக்கிறார்கள். எப்படி? நாட்களைத் தொடங்குகின்றபொழுது, யாரேயேனும் சந்திக்கிறபொழுது , சாப்பிடுகின்றபொழுது, படுக்கின்றபொழுது, பேசுகின்றபொழுது… எங்கே போனாலும் அவர்கள் இறைவனை மறப்பதில்லை. இறைவார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கல்யாணத்திற்கு கூப்பிடுங்கள், ‘இன்ஷா அல்லாஹ். வருகிறேன்’ என்பார்கள்.  ‘இறைவன் நாடினால் வருகிறேன்’ என்று அர்த்தம். ‘இந்தப் பொருள் நல்லாயிருக்கா?’ என்றால் , ‘மாஷா அல்லாஹ். நல்லாயிருக்கே’ என்பார்கள். ‘இறைவன் படைப்புக்கு நன்றி’ என்று சொல்வது அது. சாப்பிடுவதற்கு ஏதாவது நீங்கள் கொடுங்கள், ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள் – ‘இறைவன் பெயரால் தொடங்குகிறேன்’ என்று. ஆக, அவர்கள் முழுக்க முழுக்க இறைவேட்கையோடும் இறை எண்ணங்களோடும் வாழக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். அவர்களின் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள்ளாக நடக்கின்ற சிக்கல்களை பேசுகிற இலக்கியம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது வந்திருக்கிறது ‘ரெண்டாம் ஜாமத்துக் கதைகள்’ மாதிரி. சல்மா அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் சமூகத்தின் உள்ளேயிருக்கக்கூடிய விடயங்களை அந்தப் பெண் தைரியமாக எழுதியிருக்ககூடிய ஒரு நூலாக அது இருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கும் இதற்கும் முரண்பாடு இருக்கிறதா என்றால் ஒண்ணும் கிடையாது. ஏனெனில் மார்க்கக்கருத்துகளுக்கு எதிராக எதுவும் அதில் பேசப்படவில்லை. பதிலாக , அந்த சமயத்தைச் சார்ந்த மக்களுடைய
சிக்கல்களை அந்த நூல் பேசுகிறது. இப்படிப் பார்த்தால் நிறைய கவிதைகள்.. இன்றைக்கு பல கவிதைகள் வருகின்றன..ஏன், இலங்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் , இப்போது அங்கே முஸ்லீம்கள் காணும் பிரச்சனைகள் என்று பல கவிதைகள், பல இலக்கியங்கள், பல புதினங்கள்.. இன்றைக்கு வந்துகொண்டேயிருக்கின்றன… அதையும் நாம் இஸ்லாமிய இலக்கியங்களிலே சேர்க்கலாம்.

தி: கடைசி கேள்வி.. தமிழுக்கு இஸ்லாத்தினுடைய பங்களிப்பு என்பதில் சமூகத்தில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

ப: என்னைப்பார்த்து தொடுக்கப்படும் பழகிப்போன கேள்விகளில் இதுவும் ஒரு கேள்வி! எப்போதும் பெண்களுக்கு இரண்டாம் நிலையான பார்வைதான் சமூகம் தந்திருக்கிறது. அதில் நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்வதற்கு பெருமைப்படுகிறேன். என்ன காரணம் என்றால், இஸ்லாம் ஆண்-பெண் என்கின்ற வித்தியாசத்தை எப்போதும் பேணவில்லை. கல்வி , இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. எனக்கு நிரம்பப் பிடித்த ஒரு ஹதீஸ் : ‘தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி’. ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்திருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு கல்வி என்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடியது. அந்தக் கல்வித் தளத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பெண்கள் , எழுதுவதற்காக வருகின்றபொழுது தன்னுடைய உள்ளக்கிடக்கை படைப்பாளியாக நின்று எழுதுகின்றபொழுது , அதை வாசிப்பதற்கான பயிற்சியோ ஏற்றுக்கொள்வதற்கான பயிற்சியோ இன்னும் சமூகத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. (1917ம் ஆண்டு நாகூரில் பிறந்த) சித்தி ஜூனைதா பேகம் என்கின்ற ஒரு பெண்… அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு போனது கிடையாது; மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறார்கள்; வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்து தனக்குக் கிடைத்த தாள்களிலெல்லாம் எழுதியெழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் தேடிப்பார்த்தீர்கள் என்றால் பெண்களுடைய ஆக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் கூட அது இருக்கலாம், சொல்ல முடியாது. ஆனால், பெண்கள் எழுதுகிறார்கள். என்னுடைய உள்ளக்கிடைக்கையும் வேட்கையும் என்னவென்றால் அந்தப் பெண்களுடைய எழுத்துக்களை அவர்களுடைய மொழியை புரிந்துகொண்டு வாசிப்பதற்கான பயிற்சி வந்தால் பெண்கள் இன்னும் எழுத ஆரம்பிப்பார்கள். நிறைய பெண்கள் வருவார்கள்.

தி: எழுத்தைக்கூட இறுதியாக தீர்வு செய்வது சமூகம்தான். சமூகம் எந்த அளவுக்கு தகுதி படைத்ததோ அந்த அளவுக்குத்தான் அதற்கு இலக்கியங்கள் கிடைக்கும். ‘சங்கப்பலகை’யின் சார்பாக உளமார்ந்த நன்றி.

***

தொடர்புடைய சில சுட்டிகள்:
1 : இஸ்லாமும் தமிழிலக்கியமும் / முனைவர்.பீ.மு. அஜ்மல்கான் -

2 : சித்தி ஜூனைதா பேகம்

3 : சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ பற்றி நாகூர் ரூமி

4. நாகூர் ரூமி மொழிபெயர்த்த ஹோமரின் ‘இலியட்’ பற்றி பர்வீன் சுல்தானா

5. தமிழில் சிறுபான்மை இலக்கியம் – ஜெயமோகன்

6. பல்சந்தமாலை பற்றி – நாகார்ஜுனன்