படிப்பதற்கு முன்பே பயந்து கொள்ளுங்கள்; நாளை நண்பர் தாஜ்-ன் அதி கம்பீரப் ‘பாம்பு’ வெளி வருகிறது. அதுவும் , இரட்டைத் தலைப் பாம்பு! இன்று மாலை மெயிலில் அனுப்புவதாக பயமுறுத்தியிருக்கிறார். அட்டகாசமான அங்கதக் கதையாம். அங்கதம் என்றால் தூய நாகூர் தமிழில் ‘வெடை’ என்று அர்த்தம். இந்தப் பக்கத்தில்தான் பதியவேண்டுமாம். ஓகே தாஜ். எனக்கு பிரச்சனை வராமல் நீங்கள் எழுதினால் சரிதான். சரி, இப்போது என் பாம்பைப் பாருங்கள். அதாவது பாம்பு பற்றிய பதிவு!
நல்லபாம்பு கடிக்காத ஊரா?!
வேறு எந்த ஊர்? எங்கள் நாகூரேதான்! ‘மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலமான இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது’ என்கிறது ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வெளியிட்ட ஸ்தல வரலாறு. நாகூர் புராணம். ஐயப்படும் இஸ்லாமியர்கள் அர்த்த ஜாம பூஜை கமிட்டி உறுப்பினர்களைத் தீண்டிப் பார்க்கலாம்!. அதற்கு முன் , நாகலிங்கேசர் துதியையும் சம்புபத்தன் என்னும் பிராமணன் முக்தி அடைந்த கதையையும் பார்க்கவும். ‘எப்போது பார்த்தாலும் அதென்ன அல்லா, அவுலியா என்று பதிவு போடுகிறீர் ? ஊரில் மற்றவர்கள் இல்லையா என்ன?’ என்று என்னை மின்னஞ்சலில் கொத்தி மகிழ்ந்த சில நண்பர்களுக்காக பதிகிறேன். அழகு கொஞ்சும் சிவன்கோயிலின் ஸ்தல புராணம் தேடிக்கொடுத்த அன்பு ராஜேந்திரனுக்கு (வினோ டைலர்) நன்றிகள். பெரிய sizeல் பார்க்க புகைப்படத்தை சொடுக்குங்கள் என்று சொல்லனுமா தனியாக?
உலகில் வளர் சராசரப்பல் லுயிர்க ளாகி
உலகமுந்தா னாகிஅந்த உலகுண் டாக்கும்
மலரயனு மாகிஅதைப் புரக்கும் மாலாய்
மற்றதனை மாய்க்கும் அரன் வடிவுமாகி
நிலைமைபெறு விந்தியுமாய் நாதமாகி
நித்தபரி பூரணமுடமாகி நின்றோர்
நலமிகு புன்கைவன மாடும் நாகூர்
நாகேசர் பாதம் பணிவோம் நானும் தானே
முக்தி
சம்புபத்தன் என்னும் பிராமணன் தன் மனைவியுடனும் ஐந்து வயது மகனுடனும் காட்டில் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அச்சிறுவன் நண்பர்களுடன் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பாம்புகளுக்கு அரசனா தக்கன் என்பவன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை அச்சிறுவன் கண்டுவிட்டானே அன்பதை உணர்ந்த நாக அரசன் தன்முன் வினைப்பயன் காரணமாக, சீறிப்பாய்ந்து அவனைக் கடிக்க, அப்பிள்ளை இறந்து போனான். நெடுநேரமாகியும் மகன் வரவில்லையே என்று தாய் கணவரிடம் கேட்க , உடன் சம்புபத்தன் காட்டில்தேடி ஓரிடத்தில் தன் மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டான். அந்த அந்தணன் தன் ஞான திருஷ்டியினால் பாம்பு அரசனால்தான் தன் மகனுக்கு இப்பழி வந்தது என்பதை உணர்ந்து கோபமுற்று நாகராசனை சபிக்கலானான். நீ நாகர் உலகை விட்டு நீங்கி அறிவும் வலிமையும் நீங்கி தனிப்பட்டவனாய் இப்பூலோகத்தில் திரியக்கடவாய் என்று சாபமிட்டான். நாக அரசன் நடுநடுங்கி அந்தணன் காலில் வீழ்ந்து வணங்கி தான் செய்த தவறை உணர்ந்து தன் சாபம் நிறைவேறும் காலத்தைக் கேட்டான். அதற்கு அந்தணன், ஆயிரம் வருடங்கள் சென்ற பிறகு உன் தந்தை காசியபனை நீ காண்பாய் அப்போது சாபம் தீரும் என்றார். அதன்படி நாகராஜா தன் தந்தையைக் கண்டு வணங்கி தன் சாபம் தீர மகாசிவராத்திரி நாளில் முதற்காலம் கும்பகோணம் வில்லவனத்திலும், இரண்டாம் காலம் திருநாகேஷ்வரம் சண்பகாரணியத்திலும் மூன்றாம்காலம் திருபாம்புறம் வன்னி வனத்திலும், நான்காம் காலம் புன்னாக வனத்திலும் உங்கள் நாகநாத சுவாமிகளை சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டு தன் சாபவிமோசனம் நீங்கி நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமியின் திருவடிகளைச் சேர்ந்து முக்தி அடைந்தார்.
*
அவ்வளவுதான். இருபக்கத்தாரும் இனி நல்ல பார்சல் BOMBபுகளுடன் என்னைத் தேடி வருக! ‘பயான்’ பெறுக!
