மனசு சரியில்லை தலைவரே…. – தாஜ்

அன்புடன் ஆபிதீன்…
மனசு சரியில்லை தலைவரே….
மனம்விட்டு பெரிய கடிதம்
எழுதணும் எழுதணுமென்று
எழுதாது இருக்கிறேன்.

ஏதாவது இரவில் கிறுக்குவது ஒண்ணுதான்
இப்போதைக்கு ஆறுதல்.

எப்படி ஆபிதீன் வாழ்க்கையை
சமாளிக்கிறீங்க?
காசுபணத்தை முன்வச்சி இந்த கேள்வியை கேட்கலே..
என்னமோ போங்க.

- தாஜ் / 28th Oct’2010

*

கவலைப்படாதீர்கள் தாஜ்..

உங்கள் நிலையில்தான் நான் இருக்கிறேன். ஒன்றும் உருப்படியாகச் செய்ய வழியில்லை. உங்களுக்கு கிறுக்குவது ஆறுதலென்றால் அதைப் பதிவதுதான் எனக்கு ஆறுதல். ‘நான் சுட்ட அப்பத்தை நீங்களும் வலைச்சட்டியில் சுட்டுவைத்து அசத்திவிட்டீர்கள். நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி’ என்று தம்பி அறபாத் போன்றவர்கள் எழுதும்போது கொஞ்சம் சிரிப்பு. அவ்வளவுதான். நித்தமும் தொடரும் பிரச்சனைகள் என்னை அலைக்கழிக்கிறது. என்ன செய்வேன், எல்லாம் சரியாகும் என்று ‘அவனிடம்’ பாரத்தைப் போடுவதைத் தவிர? எழுதுங்கள். அது ஒன்றுதான் வழி – நாம் நினைக்கப்பட.

ஆபிதீன் / 30th Oct’2010

*

அன்புடன் ஆபிதீன்…

தமிழ்ப்பூக்கள் (மார்ச் -1982) இதழில் நண்பர் ஹாஜா அலி கைப்பட எழுதிய வடிவத்தை அனுப்புகிறேன். எழுத்துச் சிதறலான இந்த வடிவத்தை – முடிந்தவரை அப்படியே உபயோகிக்கலாமெனத் தோன்றுகிறது.
- தாஜ் / 30th Oct’2010

***

ஹாஜா அலி : மேலும் சில குறிப்புகள் – தாஜ்

பெயர்: ஹாஜா அலி / புனைப்பெயர்: ‘ராவுத்தன் ஹாஜா அலி’ / ஊர்: கூத்தாநல்லூர் / அத்தா: திருவாரூர் / அம்மா: ஜாவா (இந்தோனேசியா) / கணீர் தமிழ் பேசும் ஜாவா அம்மா! / பையனை தமிழ்ப் படிக்கவைத்த ஜாவா அம்மா! / ஆமாம்.. ஹாஜா அலி தமிழ் படித்தவர் / மதுரைப் பக்கம் கருத்தவாப்பா கல்லூரி / தமிழ் ஆசிரியர் : கவிஞர்(?) நா. காமராசன் / வயதில், நவீன இலக்கிய ஈடுபாட்டில்… என்னில் மூத்தவர் / சௌதி-அல்கோபர்-துத்பாவில் வைத்துப் பழக்கம் / புத்தகம் படிப்பதும், சிகரெட் புகைப்பதும் – அவர் விழித்திருக்கும் வேளையில் – அதிக நேரம் விழுங்கும் வேலை.

ரொம்ப வித்தியாசமான மனிதர்/ ‘ஹாஜாவா , யார்?’ – சொந்த ஊர் / தெருக்காரர்களே விழிக்க விளங்கிய மனிதர் / ஒருதரம், நானும் அவரும் புகைபிடித்தபடி பேசிக் கொண்டிருக்க, அவர் அடுத்த சிகரெட்டை பற்றவைத்துப் புகைத்தபடி, புகை எத்தனைக் கேடு என்றும், அது வேண்டாமென்றும் எனக்கு தீர அறிவுரை வழங்கினார்! / அவரது பொழுதுபோக்கு வேடிக்கையானது / சக நண்பர்களை, அவரது பார்வைக் குத்த பேசித் திரிபவர்களை (குறிப்பாய், தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சகோதரர்களை) கூர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் அது. பல நேரம், அவர்களிடமிருந்து அவர் தள்ளிப்போய் முகம் மலர நமூட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு திரும்புவதை கண்டிருக்கிறேன் (நிஜத்தில், நம் சகோதர்கள் அத்தனைக்கு அப்படியா?).

அவருக்கு பொருளீட்டும் வித்தைக்காரர்களைப் பிடிக்கும் / அமெரிக்கர்களையும்,அமெரிக்காவையும் கேள்வியறப் பிடிக்கும்/ அவர்களது பரிபூர்ண சுதந்திரம்… ரொம்பப் பிடிக்கும் / ‘இஸ்லாம் , கேப்பிடலிசம் சார்ந்த மதம்’ என்பதைச் சுட்டிக்காட்ட ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற சிகப்புத் தலைவர்களை வரிசையாக அவர் அறிவார். அந்த இயக்கத்தின் எந்தவொரு பொலிட்பீரோ உறுப்பினரையும் தாண்டி, அவர்களின் சித்தாந்தங்களை அறிவார். அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் படித்தவர்.

என்றாலும்… புரட்சிகர சிந்தனைகளுக்கு… ‘நோ’!. ஜனநாயகம்தான் ‘எஸ்’! / அதுதான் சுதந்திரத்தின் திறவுகோல்/ சுதந்திரமே உரிமைகளின் கண்ணி / உரிமைகள்தான் உயிரின் உயிர் / அது அற்ற உயிர், உயிர் வாழ்வது வேஸ்ட் / இந்திய இடதுசாரிகள்? கடுமையான வேஸ்ட் / பெரியார்? கேள்வியே வேஸ்ட், முகத்தை திருப்பிக்கொள்ளத் தகுந்த வேஸ்ட் / தொடர்ந்தால்… கதவைச் சாற்றும் வேகமும், இரட்டைத்தாள் இடும் ‘கிறீச்’… ‘கிறீச்’சும் கேட்கும் / அவருக்கு அவர் விபரமானவர் / கொண்டதை மாற்றிக்கொள்ள மாட்டார் / வயதுக்கு மீறிய அறிவு அப்படித்தான் நர்த்தனமாடும்!

கொண்டதை, மாற்றிக் கொள்ள மாட்டார் என்பது நிஜமானாலும், ஓரேடியாய் தீர்மானமாய் அப்படிச் சொல்லிவிட முடியாது / எனக்குத் தெரிந்து துக்ளக் சோ, அவரது வெகுக்கால செல்லம் / தீர்மானமான அரசியல் விமர்சகர் , தீரர், மஹா புத்திசாலி , சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நேர்மை / அப்படித்தான் நம்பினார் / அப்படியே பேசினார்/ சோவை கேள்வியாக்கி அவரிடம் பலமுறை வாதாடி இருக்கிறேன் / ம்… ஹும் / அவர், தனது வட்டத்தை விட்டு வந்தது கிடையாது.

சோ குறித்த, அவரது இன்னொரு மதிப்பீடு அவரிடம் தகைத்தது / அது பிற்காலச் சங்கதி/ துக்ளக்கோடு எங்கே எப்போது மோதி காயம்கொண்டாரெனத் தெரியாது / நான் அவரைச் சந்தித்த ஓர் சந்திப்பில், சோ பற்றிய தடித்தச் சொல் அவரிடமிருந்து தெறித்தது / இடியட்! / தமிழில் முட்டாள் எனச் சொல்லலாம்/ தான் கொண்டதை, அவர் மாற்றிக்கொள்ள லேட்டானாலும்…. லேட்டஸ்ட் ‘ரைட்’!

வைத்தீஸ்வரன்கோயிலில் நாடிஜோசியம் பார்க்க, ஊரிலிருந்து அவர் நேரே சீர்காழி வந்து, வைத்தீஸ்வரன்கோயில்போக அழைத்தார் / நாடிஜோசியம் பார்க்கவேண்டிய அளவுக்கு வாழ்வில் அவருக்கு என்ன கஷ்டமோ, என்ன நஷ்டமோ/ அல்லது, எந்த அழுத்தத்திலான மனச் சங்கடமோ… எனக்குத் தெரியாது / அவர் பார்க்கணும் என்று கருதிவந்த நாடிஜோசியம் பார்க்கப்பட்டிருக்கும் பட்சம், அது அவருக்கு நிஜமாலுமே ஆறுதலை தந்திருக்கலாம் / புரிந்தே அவரை நான் மறுத்தேன் / அவரும் தன்னை மாற்றிக்கொண்டு ஊர் திரும்பிவிட்டார்/ இது எனக்குத் தெரிந்த இன்னொரு ‘ரைட்’!   

மறக்க முடியாத அவரது வித்தியாச சம்பவங்களும், நினைவுகள் ஏராளம் / கொஞ்சகாலமாக அவரே கூட, என்னில் வெறும் நினைவாக மட்டுமே வாழ்கிறார்! / எஸ்…/ அவர் இறந்து, அல்லது தற்கொலை செய்துக்கொண்டு (நிஜம் மறைக்கப்படுகிறது) பத்து வருஷம் ஆகிவிட்டது / 1.அவர் இப்படி திடுமென இறந்துப் போனதும், 2.பெரிதாக எதுவும் எழுதாது மறைந்துப்போனதும், அவர்மீது கோபத்தையே தருகிறது.

அபூர்வமாக எழுதக் கூடியவர் / கோடைக்காலத் தூறல் மாதிரி/ ‘எழுதணும் என்றில்லை தாஜ்…. நல்ல எழுத்தை தேடிப் படித்தாலே போதும், அதுவும் இலக்கிய ஈடுபாடுதான்’ என்பார் / தனக்குப் பிறகு, தான் கற்ற… வளர்த்தெடுத்த…. எழுத்து வாழணுமென அவர் நினைக்கவில்லை / இப்போது, அவரைக் காண… அவர் எழுதியதை தேடினால், சிலச்சில எழுத்துக்கள்தான் கிடைக்கிறது / அது கடுகு என்றாலும் வசீகரம் / கீழே அவரது கடுகானதோர் எழுத்துண்டு. இருபத்தி எட்டு வருடக் கடுகு! / ஓர் கோட்டோவியம் மாதிரியான கடுகு!/ வாசிக்கும் நாம்தான் தோணும் காட்சிகளையும், உருவங்களையும் அதில் ஏற்றிப் பார்த்துக் கொள்ளணும் / இது, நவீன எழுத்தின் இன்னொருமுனை! / அபூர்வரகம்!

ஆன்மீகத்தில் அபார நம்பிக்கை உடையவர் / அம்மா, மாமியார், மனைவி இவர்களோடு சச்சரவு என்றால்… அடுத்த அவரது நடவடிக்கை ஆன்மீக ரீதியகத்தான் இருக்கும்! மாதக் கணக்கில் ‘தப்லிக்’ புறப்பட்டுவிடுவார் / இடைக்கால, நவீன சந்நியாசம் மாதிரி! / மத அரவணைப்பிலான தப்பித்தல் என்றும் சொல்லலாம் / ஒரு ரம்ஜான் காலத்தின் முப்பது நாளும், நோன்போடு அவர், பள்ளிசாலை புகலிடமாக்கிக் கொண்டு பக்கா ‘இபாதத்’துடன் காலம் கழித்ததை நான் கண்டிருக்கிறேன்/ அவர், தீரா நேசித்த இறைவன்… அவருக்கு, ‘கபரின்’ கஷ்டத்தை இலேசாக்கியிருப்பானா? சொர்க்கத்தை காட்டுவானா? தெரியவில்லை.

சொல்ல மறந்துவிட்டேன்… மது அவருக்கு இஸ்டம். உயர்வகை மது, தீர இஸ்டம். சரியாகச் சொன்னால்… அதற்கு அவர் அடிமை! 

- கநாசு.தாஜ்

*

இந்திய….
சுதந்திர….
ஜனநாயக…
குடியரசு… முகங்கள்.

 
- ராவுத்தன் ஹாஜா அலி

இவ்வருஷமும்
இந்தியாவின்   ஆட்டு மந்தைகளுக்கு   பழக்கமும்
வழக்கமும்   இரும் பெரும்  தளைகள்.
சட்டை போடாத  ஜாதிகள்   இப்பவும்  
    சாகாவரம்      பெற்றிருக்கின்றன.
இந்த வருஷமும்   சுண்ணாம்புக் கட்டியிலிருந்து 
    சூரியன்வரை    சகலமும்   கோயில்   தெய்வங்களே.
அட,  புது வருஷமென்று  காந்தி சிலைப் பார்த்து 
            காகங்கள்  எச்சமிடாமல்
இருக்கப் போவதில்லை.  அரசியல்வாதி 
           குறைச்சலாய்  போய்விடப்போவதில்லை.
2010  நூற்றாண்டிலும்  இந்திய  இலக்கியங்களெல்லாம்  
                              சடாரென்று

தூக்கத்திலின்றும்   விழித்ததுபோல்  சுதாரித்துக் கொண்டு  திசை
            திரும்பப்போவதில்லை.

பழம்பெருமைகள் நிறைய பேச,   புதுக் கண்டுபிடிப்புகள்  
                              மௌனம்.

‘ரொபோட்’  யாருக்கும்   தெரியவராது.
ராக்காயி வயசுக்கு வந்தது  தெரியாதவனெல்லாம் 
          இத்தடவை அவசியம் தெரிவர்.

இன்னும்   தெரிந்த முனியாண்டி  
           தெரியாத முஸ்தபாவாக  உருவெடுப்பான். 

               மூன்லைட்டில்     கூட்டாஞ்சோறு
               நியான்லைட்டில்      ஊதாரி
               நக்ஸலைட்டில்     பட்டதாரி
                               
                           மேலும்
                   
                  சாதுகள்     சம்சாரித்து
                      சம்சாரி      சன்யாசித்து
                   ரவுடிகள்    சட்ட சபையில்
                ரயில்கள்  விபத்தில்   – நான் தனியே  விட்டுவந்த
                         தங்கச்சி   ஆபத்தில்.
மீந்து கிடக்கும்   கிழங்கட்டைகள்   பார்க் பெஞ்சிலும்,  பீச் மணலிலும்
பழசு  பேசி   வெத்திலை   மெல்லலாம்.     அதோடு…

யுகத்துக்கு முந்தி   எழுதிப்பெற்ற    வேய்ங்குழலுடன்
இடையனின்   மேய்ப்பு.   வழக்கமே  இந்திய   சிங்கங்கள் கத்த
இந்தியக்   கழுதைகள்   கர்ஜிக்கும்.  இந்த   நாதத்தின்   பேதமறியா
அவசரமாய்   மானிடர்   அலைவர்.

                 
                  அவன்   அரிசிக்காய்.
       இவன்  பருப்பிற்காய்.  தின்று கொழுத்த எவனோ ஒருத்தன்
                  பாவாடை   மீறிய   பருவத்துக்காய்.

எனக்கும்   உனக்கும் மட்டும்   திரும்பவும்   டூரிங் டாக்கீஸ் பார்த்து
சக்கை   போடு  போடும்       எம்ஸியாண்டை  போதும்.
எழுதிப்  படிக்க  வேண்டிய     வயதுகளுக்கு    ரஜினிகாந்த்.
    
   
     இந்த லட்சணத்தில்    இனி ஒரு   மாடலாய்   நாற்பது பக்க
     கணக்கு நோட்டு புக்கின்   அட்டையில் சரிதா   சிரிக்கலாம்.
அவதி அவதியாய்  கட்டப்பட்ட  அணைகள் 
                    திரும்பவும்  உடையலாம்.
திரும்பத் திரும்ப   பஸ்கள்  
                    பாதசாரிகளை   பதம் பார்க்கலாம்.

இருநூற்றி   எழுபத்தெட்டாவது  தடவையாக 
                     வரிகள்   ஏறலாம்.
முன்னூற்றி   நாற்பதாவது முறையாக  
                   அரசியல் சாசனம்  திருத்தலாம்.

அங்கே   ‘அந்துலே’ சைஸில்     இன்னொரு   ‘பொந்துலே’
முதன் மந்திரியாகி   பணம்   பண்ணலாம்.

ஏழைகளுக்கும்   ஏமாந்தவனுக்கும்   இப்பவும்  இருக்கவே
                                      இருக்கின்றன,  

                 ஈரத்துணிகளும்
                        நீண்ட   நீண்ட    கியூக்களும்.

அத்தனைக்   கியூவிலும்  நின்று  பார்த்துவிட்டு   இந்த முறையும்
எந்த   கவிஞனாவது   “இன்று  என்னிடம்   பீரங்கி   இருந்தால்”
என்று     புதுக் கவிதை    எழுதலாம்.
காக்காக்கடிப்   போட்டு   சின்னப் பயல்கள் விளையாட்டில்  
                         திண்ணை     ரெண்டுபடுவது போல 
பெரிய   மனுஷன்கள்  வினையால்  அரசியல்  கூறுபடும்.  
          
       டை கட்டி   நகரத்தார்   பூரிகிழங்கு  தின்க,   மிஞ்சியபேர்
             புது   கடன்காரர்கள்.
         புது   கவிஞர்கள்.

            உழைப்பும்    உரிமையும்     ஊரான் சொத்து
அதில்     மறந்தும்கூட   இந்த   வருஷமும்   கைவைக்கவேண்டாம்.

           ரௌத்திரம்   பழகச்   சொன்னது   பாரதிதான்.
அதனால்    என்ன?     அவன்தான்    இல்லையே.

        சாதுவாயிரு ! 
        இவ்வருஷமும். . . .
        புண்ணிய    பாரதத்தில்
        திரும்பத். . . . பம்ருதி
        கத்தரிச் செடி
               வளர்ப்போம். . . .  வா. 

***

நன்றி: கநாசு. தாஜ் | E-Mail : satajdeen@gmail.com

« பழைய வரவுகள்