ஆற்றுப்பள்ளி – தோப்பில் முஹம்மது மீரான்

‘ஆதிபிதா   மக்கள் எல்லாம் /  சோதரர்களாய்   நிற்கவைத்து / சாதிமத   இனபேதம் /  சாய்த்துவிட்ட   மாதவமே…!’ என்று நம் ஜபருல்லாநானா பாடும் நாகூர் ஆண்டவர் குறித்து ’தோப்பில்’ முஹம்மது மீரான் அவர்கள் கூறும் இந்த நிகழ்ச்சி  நாகூர்க்காரனான எனக்கு புதிது.  புதிர் நிரம்பியதும் கூட. கருணை மழை!

***

தோப்பில் முஹம்மது மீரானின் ’தென்பத்தன் பெருமை’யிலிருந்து… ( ’கதைசொல்லி’ இதழ் 21)

(தென்பத்தன் என்று அழைக்கப்படும் தேங்காய்ப்பட்டணத்திலுள்ள) வலியாற்றின் கரையிலுள்ள பாறை மீது காணப்படுவது ஆற்றுப்பள்ளி. நாகூர் ஆண்டவர் இந்தப்பாறை மீது வந்து உட்கார்ந்து காற்று வாங்கியதாக அய்தீகம். அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் அவருடைய நினைவாக கடலிலும் ஆற்றிலும் பிழைப்பு தேடும் தொழிலாளர்கள் எழுப்பியது இப்பள்ளிவாசல். பாறையின் தொடர்ச்சியாக ஆற்றோரத்தில் சின்னச் சின்னப் பாறைகள். ஒரு பாறைக்கருகில் முனை கூர்மையான இரண்டு குத்துப் பாறைகள். இந்தப் பாறைகளுக்கு இடையிலுள்ள இடுக்கில் ‘வாளி’ (சுழி) உண்டு. இந்த வாளியில்தான் ஒரு கடலோரக் கிராமத்தில் (நாவல்) வரும் ஆயிஷா குதித்து தற்கொலை செய்து கொண்டது. ஆற்றில் குளிக்க வரும் மக்களுக்கு பெரிய நடுக்கத்தை திகிலையூட்டும் வாளி, பல பச்சை உயிர்களை அப்படியே தூக்கி விழுங்கிய வாளி…. பகல் நேரங்களில் ’செட்டிப் பெண்’ பதுங்கிக்கொண்டிருப்பது இந்த வாளிக்குள். எசகு பிசகாக கால் தவறி வாளிக்குள் விழுந்தால் செட்டிப் பெண் கால் பெருவிரலில் தலைமுடி சுற்றி உள்ளே இழுத்து விடுவாள். வாளிக்கும் கொச்சத்து மூலைக்குமிடையே தண்ணீருக்கடியில் பெரிய சுரங்கப்பாதை உண்டு. இப்போது வாளி மணலால் மூடப்பட்டுக் கிடக்கிறது. எங்கே போனாளோ செட்டிப் பெண்?

வாளிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பாறைதான் பீ பாறை. அந்தப்  பிடாகையில் குடியிருப்பவர்களும் ஆற்றில் குளிக்க வருவோர்களும் மலம் கழிப்பது பீ பாறையின் மீதிருந்து. ஒரு பெரும் வெள்ளப் பாய்ச்சல் வேளையில்  தென்பத்தனை நாசத்திலிருந்து காப்பாற்றியது இந்த சின்னம்சிறு பீ பாறையாகும். பெரும் மழையும் காற்றும் பெசலும் தாமிர பரணியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளின் அடிக்கரையை அரித்தது. வழியேற்றங்களிலுள்ள கிராமங்கள் மூழ்கின. குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. தென்பத்தன் வெள்ளமேறி அழிந்து போயிருக்குமென்று பார்வையிட அரசு அதிகாரிகளும் பக்கத்து ஊர்ச்சனங்களும் வந்தவண்ணமிருந்தனர்.  பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் நம்பமுடியாத ஆச்சரியம். எந்தவிதமான சேதங்களுமில்லை. மக்கள் வாழ்க்கை வழக்கம்போல. பார்க்க வந்தவர்கள் வலியாற்று வெள்ளத்தைப் பார்க்கச் சென்றனர். புயல் வேகத்தில் சப்பும் சலறுகளையும் வேருடன் சாய்ந்த மரங்களையும் சுருட்டி இழுத்துக்கொண்டு  அலையெழுப்பி சுழிப்போட்டு அலறிவரும் வெள்ளம் பீ பாறையில் நூறு நூறாயிரம் மைல் வேகத்தில் வந்து மோதி திசை திரும்பி கடலுக்குப் பாய்ந்தது.

மனம் புரட்ட வைக்கும் இந்த ஒரு சிறு பாறை மட்டும் அன்று நெஞ்சு கொடுத்து தடுக்கவில்லையென்றால் இன்று தென்பத்தன் கிராமமே அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருக்கும். ஊரை அழிக்க வந்த பெரும் வெள்ளத்தை ஆற்றுப்பள்ளிப் பாறையில் உட்கார்ந்து காற்று வாங்கிய நாகூர் ஆண்டவர்கள் சின்னம் சிறு பீ பாறையைக் கொண்டு தடுத்து நிறுத்தினார்கள் என்று கடலிலும் ஆற்றிலும் பிழைப்புத் தேடும் ஏழை தொழிலாளிகள் பெருமையோடு சொன்னார்கள்…

***

நன்றி : தோப்பில் முஹம்மது மீரான், ’கதைசொல்லி’

***

ஒரு சுட்டி : ’தோப்பில்’  -  நேர்காணல் (நன்றி : தீராநதி / ராம்)

« பழைய வரவுகள்