உயிர்த்தலம் (சிறுகதைகள் தொகுப்பு) – ஹரன் பிரசன்னாவின் அறிவிப்பும் கோ.ராஜாராமின் பதிப்புரையும்
Published by AnyIndian Pathippagam , Tel : +91 44 24329283
***
முன்னுரை
அப்படியொன்றும் சில இணைய தளங்கள் சொல்வது போல பெரிதாக நான் நையாண்டி செய்பவன் அல்ல - வாசகர்களை விட.
ஒரு கதையில் , என் ஊரின் பெருமைகளை ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டே வரும் நான், ‘தினமும் புதிதாக ஒரு பைத்தியம் கடைசி டிரெயினில் ஊருக்கு வருவது…’ என்று பத்தியை முடித்திருந்தேன். படித்த நொடியில் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார் : ‘ஆமாம், டிக்கெட்டை பத்திரமாக இன்னும் வைத்திருக்கிறீர்கள்தானே?’
உண்மைகளையெல்லாம் போட்டு உடைத்து விட முடியுமா? ஆனால், உண்மைகள்தான் எப்போதுமே சிரிப்புக்குரியவை. இன்னாரின் மார்க்கம் மட்டுமே உலகை உய்விக்க வந்ததெனும் உண்மை, பேரழிவு ஆயுதங்களை இன்னும் கண்டுபிடிக்கிற பெரியண்ணன்களின் உண்மை, தன் எழுத்து மட்டுமே காலாகாலத்துக்கும் நிற்பதென்று நம் தமிழ் எழுத்தாளன் சொல்லும் உண்மை…
பேருண்மையையும் சொல்லி விடுகிறேன்: எனக்கு எழுத வராது. அதாவது, என் சமூகத்தைத் தவிர வேறெதையும் எழுத வராது.
தெரியாத்தனமாக , அல்லாஹ¤த்தஆலா அற்புதமான ஊரில் என்னைப் பிறக்க வைத்தது வசதியாகிப் போனது.
இடறி விழுந்தால் எழுத்தாளர்களின் தலையில் கால் வைக்க வேண்டிய ஊர் மட்டுமல்ல, இடக்கு மடக்காக இளஞ் சிறுவர்களைக் கூட பேச வைக்கும் நாகூர். பேசத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு தன் கலகலப்பூட்டும் நகைச்சுவையால் கற்றுக் கொடுக்க இருக்கவே இருக்கிறார் எங்கள் தமிழய்யா , புலவர் சீனி சண்முகம்.
‘மம்ஹசன் வூடு வரைக்கிம் போவனும் தம்பி’ என்று வழி கேட்டிருக்கிறார் அவர்.
‘மம்ஹசன் வூட்டுக்கே போயிடுங்களேன் சார்’ – சிறுவன்.
இவனுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை.
இவனைப் போன்றவர்கள் – சரியாகப் படித்து முடிவதற்குள் - ‘ச·பர்’ என்ற பெரும் பேயிடம் 108வது தலைமுறையாக மாட்டிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப் போவதையும், தங்களின் அறிவார்ந்த மவுலவிகளால் மூளைச் சலவைக்குள்ளாகி, எதிர் சிந்தனை வைப்பவர்களையெல்லாம் ஊர்விலக்கம் செய்து உதைப்பதையும் பார்த்து எழுதாமல் இருக்க முடியவில்லை. பெரியார் சொன்னது போல, முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்தால் நிலைமை மாறலாம்.
குர்ஆன், ஹதீஸ்கள் மட்டும் கொஞ்சம் தெரிந்த – சகோதர சமயங்களை சற்றும் மதிக்காத – ஒரு ஆலிம்ஷா, ஊரிலுள்ள ஓராயிரம் ஜனங்களை மேலுலகம் காட்டி பயமுறுத்துவதும், இறைமறை தெளிவாக இருந்தும் காட்சிக்கு முன் கொமஞ்சான் புகையைப் போட்டு விடுவதும் அவர் பிழைப்பை எளிதாக நடத்த என்பதை அவன் உணர வேண்டும். அண்ணன் தம்பிகளாய் இஸ்லாமியர்களும் இந்துப் பெருமக்களும் பழகிய கொஞ்சநஞ்ச ஊர்களையும் இன்று ‘குஜராத்’தாக மாற்றும் சகல ஷைத்தான்களையும் (பெரிய ஷைத்தானுக்குப் பெயர் : அரசாங்கம்) அவன் இனம் காண வேண்டும். என் பிரார்த்தனை அது.
ஊரின் பெரியகடைத்தெரு மதக் கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்த மறுநாள், நல்லிணக்கம் பேசும் நானா ஒருவர் , எங்கள் தெருவில் ஏதும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தன் ‘திறமை’யைக் காட்டிவிட்டு ஓடினார். பையன்கள் உடனே ‘ஆர்.எஸ்.எஸ் ஒழிக’ என்று பயங்கரமாக கூச்சல் போட ஆரம்பித்து விட்டார்கள்.
சேத்தமரைக்கார் மாமா தன் பையனைப் பிடித்து ,’டேய்…ஆர்.எஸ்.எஸ்ண்டா என்னடா?’ என்று அதட்டிக் கேட்டார்.
‘தெரியாது வாப்பா’ – வேகமாகச் சொல்லிவிட்டு , அவன் தொடர்ந்தான் : ‘ஹே…ஆர் எஸ் எஸ் ஒழிக’
விட்டார் ஒரு அறை.
தெரிந்திருந்தால் தன்னையே பலமுறை அறைந்து கொண்டிருப்பார் என்பது வேறு விஷயம், ஆனால் என்னிடம் சொன்னார் :’ பாருங்க தம்பி, எப்படி மனசை கெடுக்குறானுங்க..’
நான்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே…
நம்மை நாம் உற்றுப் பார்ப்போம் (கைலியோடுதான்!).
அறிஞர் அபுதாலிப் மக்கி சொன்னாராம் : ‘என்னிடமுள்ள குறைபாடுகளில் ஒன்றை எனக்கு எடுத்துக் கூறுங்கள்; என் தோல்பையில் வைத்திருக்கிற பொற்காசுகளில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன்’ . இதிலிருந்து இந்த மக்கு தெரிந்து கொண்டது , அபுதாலிபிடம் ஒரு தோல் பை இருந்தது என்பது மட்டுமல்ல நம்மை நோக்கி நாம் சிரிக்க வேண்டும் என்பதும் கூடத்தான்.
குறைகளைக் களைய அதுதான் வழி என்று படுகிறது.
இதில் நீங்களும் சிரிக்கிறீர்களா? நல்லது, உங்களுக்கு சிரிக்க வரும். ‘பிறர் சிரிப்பதற்காக எழுதுவதும் பேசுவதும் சுத்த அயோக்கியத்தனம்’ என்ற ஹஜ்ரத் (மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்) என்னையும் உங்களையும் மன்னிப்பார்களாக, ஆமீன்.
அழுகையும் வலியும்தான் அங்கதமாக வெளிப்படுமென்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
வெளிப்படுவதைக் கண்டு சொல்பவர்களுக்கு என் ஜோப்பிலிருந்து அலுமினியக் காசு ஒன்றைத் தருவேன் அன்பளிப்பாக.
தீர்ந்து போனால் , ‘அரபுமொழி கலந்தவண்ணம் அருந்தமிழ் உரைக்கும்’ ஊரின் பிரத்யேக மொழிச் சுரங்கத்திலிருந்து சிறந்த ஒரு சொல்லும் தருவேன்.
(பழைய) தஞ்சை மாவட்ட தமிழ் முஸ்லீம்கள் உபயோகப்படுத்தும் – இந்தத் தொகுப்பில் வரும் – அந்த வழக்குச் சொற்கள் , விளக்கக் குறிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரச் சொல்லுக்கான அர்த்தம் ஊர்களைப் பொறுத்து மாறுபடவும் செய்யும் – ‘குப்பி’ மாதிரி. மிகுந்த ஒற்றுமையுடன் தவறாக உபயோகப்படுத்தும் சொல்லும் உண்டு. உதாரணமாக , ‘பலா’ (bhalaa) என்ற உருது சொல்லுக்கு ‘நன்மை’ என்றுதான் அர்த்தம். ஆனால் ‘தீமை’ என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள். ‘பலா’ தங்களை விட்டுப் போக ‘துஆ’வும் செய்வார்கள். இந்தக் கூத்துக்களையெல்லாம் ஊர் பாஷையில் சொல்லும் – அரபு நாட்டு சபராளியான – என் நோக்கம் , வாசகர்களை ஓட வைப்பது.
ஒடுவீர்களாக – நன்மையை நோக்கி!
‘நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்’ எனும் குர்-ஆனின் 2 : 148 வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது.
நான் அவரது விசிறி என்பதை அறியாமல், ‘இடம் குறுநாவல் படித்ததிலிருந்து Unshakable Fan என்று தன்னைப் பாசாங்கின்றி தெரிவித்துக்கொண்டு , பல கதைகள் எழுதத் தூண்டிய மறைந்த கவிதாயினி சதாரா மாலதிக்கு , நான் குறிப்பிடும் குர்-ஆன் ஆயத்துகள் , ஹதீஸ்கள் , என் ஊர்ச் சொற்கள் அத்தனையும் மனப்பாடம்.
‘வெடுக் வெடுக்’ என்று பேசும் அஸ்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
‘நகைச்சுவை என்பது பொய் கலக்காத நடைமுறைத் துயரம். சூழலின் கேவலங்களை ஆற்றாமையோடு வேடிக்கைப் பார்த்து அதன் கெட்ட தன்மைகளால் பாதிக் கப்படாமல் நம் தார்மீக பலத்தால் அதை எதிர் கொள்வதுதான் எடுத்துச் சொல்லும்போது நகைச் சுவையாகி விடுகிறது. முக்கியம் எதுவென்றால், கேவலங்களில் மூழ்கிவிடாமல் நம்மை நாமே இழந்து விடாமல் இருப்பது’ என்று சொல்லிச் சென்ற மாலதி…
‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்’ஐ அவர் தூண்டித்தான் எழுதினேன். வேதனை, கடைசியாக அவர் படித்துச் சிரித்த கதை , அரபுகளின் ஒற்றுமையைச் சொல்லியவாறு மறுமைநாளை நிறுக்கும் ‘மீஜான்’. நாம் இப்போது வாழ்வதே மறுமைநாளில்தான் என்ற மயக்கத்தோடு (?) எழுதிய கதை.
இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘குழந்தை‘ மாதிரி இப்போது ஏன் நீங்கள் எழுதுவதில்லை என்று கேட்கும் சிலரைப்போல் மாலதி கேட்பதில்லை. குழந்தைகள் வளரவேண்டும் என்று அவருக்குத் தெரியும். அல்லது, சந்தனக்கூடோ கோயில் தேரோ நிறுத்தும் கொட்டகையிலிருந்து மிகப்பெரிய வெள்ளைப் பசு ஒன்று இறக்கைகளுடன் மிதந்தபடி பறந்து சென்ற அந்த எனது வினோதக் கனவு , அது கண்ட அடுத்த நாளிலிருந்து மீண்டும் எழுத வந்த என் எழுத்து நடை மாறியது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.
பல பெரிய எழுத்தாளர்கள் பாராட்டிய ‘ஹே ஷைத்தான்’ மட்டும் மாலதிக்கு ‘சுமார்’ ரகம்.
இப்போது , யார் சொல்வது சரி?
‘ஹே ஷைத்தான்’ பற்றி இங்கே ஒன்று சொல்ல வேண்டும். விமர்சிக்கப்பட்ட அந்த சேனல், ‘எல்லா மனிதர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் ஷைத்தானுக்கு வேலையே இல்லையே..’ என்று மறைமுகமாக சொன்ன நல்ல பதிலை விட , கதையால் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் ‘டே மடையா!’ என்று உடனே தன் தளத்தில் பதிவு போட்டதுதான் என்னை யோசிக்க வைத்தது. இரண்டு நாள் தீவிரமாக யோசித்தேன். அவர் சொன்னது சரிதான். ஏமாளிதான் நான்.
முன் – பின் – சைடு நவீனத்துவங்கள் தெரியாமல் , அவ்வப்போது மனசுக்கு தோன்றும் வகையில் எழுதுகிறேன். ‘இது கதையா , கட்டுரையா?’ – சிரித்துக்கொண்டே கேட்கிறார் ஒரு நண்பர். ‘வாட் ஈஸ் த டி·பரன்ஸ் பிட்வீன் இரட்டைக் கிளவி அண்டு அடுக்குத்தொடர்?’ என்று தமிழய்யா கேட்பது போல் இருக்கிறது. அட, வித்தியாசம் தெரிந்தால்தான் பதில் சொல்லி விடுவேனே..
பெருமதிப்பிற்குரிய இஜட். ஜ·பருல்லா நானாவின் ஆன்மிக கருத்துக்களையும், ஊர்ச் சொற்களுக்கு ஆருயிர் நண்பர் அப்துல் கையும் கொடுத்த வேடிக்கையான ஆங்கில விளக்கங்களையும், நான் மிகவும் ரசிக்கும் மலையாள திரைக்கதாசிரியன் ஸ்ரீனிவாசனின் பஷீர்த்தனமான பரிகாசங்களையும் (அடுத்தவன் கதையைத் திருடி உயர்பவனாக இவர் நடித்த ‘உதயனானு தாரம்’ சினிமாவில், கடைசியாக மன்னிப்பு கேட்டுக் கொள்வது மட்டும் அநியாய கற்பனை!), பிடித்த எழுத்தாளர்களின் ஓரிரு வரிகளையும் சில கதைகளில் உரிமையோடு பயன்படுத்தியிருக்கிறேன்.
அதிர்ச்சியூட்டும் விதமாக, என் கவிதையொன்றைக் கூட ஒரு கதையில் சேர்த்து விட்டேன்.
நான் வளர்ந்திருக்கிறேனா என்பதை இனி வாசகர்கள்தான் சொல்லவேண்டும் – டிரெயின் டிக்கெட்டைப் பார்த்து.
காசுகளோடு காத்திருக்கிறேன்.
எனது இந்த இரண்டாவது கதைத் தொகுப்பு வெளிவர பெரிதும் காரணமான பிரியத்திற்குரிய சகோதரர் பி.கே சிவகுமார் , ‘Go Ahead’ சொன்ன கோ. ராஜாராம், கதைகளை விரும்பிக் கேட்ட தமிழகத்தின் சில வீரதீரப் பத்திரிக்கைகள் – ‘ஆபாசம்’ , ‘பிரச்னைக்குரியது’ என்று – தயங்கித் திருப்பி அனுப்பும்போதெல்லாம் உள்ளடக்கம் உணர்ந்து அவைகளை ஒரு வார்த்தை கூட வெட்டாமல் சர்வ சுதந்திரத்துடன் பிரசுரித்த ‘திண்ணை‘ ஆசிரியர் குழு – ‘பதிவுகள்’ ஆசிரியர் நட்புமிகு வ.ந. கிரிதரன் , கணையாழி – புது எழுத்து – படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்கள் , விளக்கக் குறிப்புகளுக்கு உதவிய ஹமீது ஜாஃபர் நானா, மெய்ப்பு பார்த்து நல்ல ஆலோசனைகளையும் வழங்கிய நண்பர் ஹரன் பிரசன்னா, மற்றும் சிறப்பாக வெளியிடும் ‘எனி இந்தியன்’ பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.
- ஆபிதீன்
அக்டோபர் 12 , 2007
துபாய்