சகோதரி ஸ்ரீவித்யாவுக்கு…..

சகோதரர் ஹத்தீப் சாஹிபின் ‘தமிழினத் துரோகம்’ கட்டுரைக்கு சகோதரி ஸ்ரீவித்யா ஆற்றிய எதிர்வினையையும் சேர்த்தே பதிந்திருந்தேன். ஸ்ரீவித்யாவுக்கான பதிலாக ஹத்தீப் சாஹிப் எனக்கு அனுப்பிய மெயில் கீழே வருவது. சாபு, நீங்க அந்த பதிவிலேயே பின்னூட்டமிட்டிருக்கலாமே…  சரி, எதிர்வினைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே… என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! இதற்கும் எதிர்வினையாற்ற நினைப்பவர்கள் நேராக ஹதீப் சாஹிபிற்கே மின்னஞ்சல் அனுப்பலாம். முகவரி : hatheeb@gmail.com  . என்னை விட்டுடுங்க சார், அடுத்து நான் திக்குவல்லை கமாலின் கதையை பதிய வேண்டும். 

***

 நீலகிரி மாவட்டம், கூடலூர், சகோதரி ஸ்ரீவித்யாவுக்கு…..

Hatheeb02‘விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தனித்தனி இனத்தவர்கள்’ என்ற எதார்த்தத்தை வெளிப்படையாகக் கூறுபவர்களின் தமிழ்ப்பற்றை யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை-நீங்கள் உட்பட. தமிழகத்துத் தமிழர்களின் மொழிப்பற்றையும் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதையும் தொடர்பு படுத்துவது அறியாமை. கனடா,இலண்டன், ஸ்வீடன் போன்ற உல்லாசபுரிகளில் வசிப்பவர்களால் ‘ஈழத்தமிழனைக் காப்பாற்று’ என்று சிங்கள அரசிடம்தான் கோரிக்கைகள் வைக்கப்பட்டனவே தவிர விடுதலைப் புலிகளிடமல்ல என்பதைச் சகோதரி உணர்ச்சி வசப்படாமல் புரிந்துகொள்ள வேண்டும்.எனது ஊடகத் தொடர்பைச் சந்தேகிப்பதைத் தவிர்த்து, செல்வநாயகம் காலத்திலிருந்து இந்தப் பிரச்னையின் பரிணாமத்தைக் கூர்ந்து நோக்க வேண்டும்.புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கென்றே தனி ஈழத்துப் பிரச்னையைக் கையிலெடுப்பதை உண்மையான இந்தியர்கள் ஒருகாலும் ஏற்கமாட்டார்கள்.புலிகள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்திருக்கும் என்பது திரிபு. புலிகளால்தான் தமிழினம் அழிந்துகொண்டிருக்கிறது என்பதே நிஜம்.

‘நாட்டைப் பிரித்துக் கொடு’ என்று கர்ஜிப்பதற்குப் பதிலாக, மக்களைப்பிரிவுபடுத்தும், பிளவுபடுத்தும் அரசியல் சாசன ஷரத்துக்களை நீக்க வலியுறுத்தக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே ஜனநாயகத்தில் ஏற்புடையவை. இந்திய சுதந்திரம் வாளேந்தி வாங்கப்பட்டதல்ல. ஈழத்தமிழர்கள் இந்தியர்களின் வழியையும் வாழ்வையும் பின்பற்றியிருக்க வேண்டும்.

‘போர் நிறுத்தம் என்றாலே மீண்டும் போர் வரும்’ என்று பொருள். அதனால் தான் இலங்கை அரசு இம்முறை புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை.

நூறுகோடி மக்களின் மகத்தான தலைவனைக் கொன்று குவித்தவர்களை நிச்சயமாகப் பூஜிக்க முடியாது. ராஜிவ் படுகொலையை விடுதலைப்புலிகளைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவோ மெச்சவோ முடியாது. கையேந்திகளுக்கும் தேசத்துரோகிகளுக்கும் வேண்டுமானால் பிரபாகரன் பிரம்மாவாகத் திகழலாம். ராஜிவ் காந்தியை ‘மக்கள் தலைவன்’ என்று வர்ணிப்பதில் தயக்கம் ஏதுமில்லை. ‘சிங்கள அரசு புத்த அரசா?’ என்று கேட்டு பிரபாகரனை ‘அரக்கக் குணம் படைத்தவர்’ என்று நீங்கள் ஆமோதிக்கிறீர்கள். புலிகள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடை செய்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

மீண்டும் உங்களுக்குப் புரியும்படிச் சொல்கிறேன்: எமது கட்டுரை நிச்சயமாக மதம் பார்க்காமல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு நல்கியே வரையப்பட்டிருக்கிறது.

அன்புடன்

ஏ.ஹெச்.ஹத்தீப்

E- Mail : hatheeb@gmail.com

« பழைய வரவுகள்