தலைப்பைப் பார்த்ததுமே ‘என்னடா , நம்மள பத்தி புக் போட்டிக்கிறாங்க..!’ என்றுதான் வாங்கி உள்ளே உற்றுப் பார்த்தேன், அப்படியெல்லாம் இல்லை , என்னைப் பற்றித்தான்! சந்தோஷமா? சகோதரர் வ. ரஹ்மத்துல்லா எழுதிய ”இஸ்லாமிய ஃபக்கீர்கள்’ என்ற நூலிலிருந்து (வெளியீடு : தென்திசை பதிப்பகம்) சில பக்கங்களைப் பதிகிறேன். ‘ஜக்காத்’ மட்டும் சரியாக கொடுக்கப்பட்டால் ஃபக்கீர்கள் (பரம ஏழைகள்) என்று இஸ்லாமிய சமூகத்தில் யாரும் இருக்க மாட்டார்களே என்று புலம்பாமல் கதைகளை படிக்கவும்.
***
ஜைத்தூன் கிஸ்ஸா – கதைச் சுருக்கம்
‘கதை சொல்லல்’ என்ற பொருளுடைய ‘கஸஸ்’ என்ற அரபுச்சொல்லின் திரிபே கிஸ்ஸா ஆகும். இச்சொல் கதை என்ற பொருளை உடையது. ஃபக்கீர்கள் பாடுகின்ற இக்கதையுடன் கூடிய இப்பாடல் இஸ்லாம் சமயத்தைத் தம் முன்னோர்கள் எம்முறையில் பரப்பி வந்தனர் என்பதைக் காட்டுகிறது.
‘மதின மாநகரத்தில் நான்காவது அரசராக (கலீபாவாக) ஆட்சி செய்து வந்த ‘ஹஜ்ரத் அலி’ என்பவரின் மகன் முஹம்மது ஹனிபா தன் வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாட செல்கிறார். அப்பொழுது இறம் தேசத்து மன்னன் மகள் ஜைத்தூன் வந்து ஹனீபாவை மயக்கமுற அடித்துவிட்டு, மற்ற நால்வரையும் தன் நாட்டில் சிறை வைக்கிறாள். இதனை அறிந்த ஹனீபாவின் தாயார் அவரை இழிவாகப் பேசுகிறார். ஹனிபா ஒரு சபதத்துடன் ஜைத்தூனையும் அவள் தந்தையையும் வென்று அவன் நாட்டு மக்களையும் இஸ்லாத்தில் சேர்த்த பின்னரே தன் நாடு திரும்பி வருவேன் என்று கூறிச் செல்கிறார்.
முதலில் ஹனிபா, ஜைத்தூனுடன் போரிட்டு வென்று அவளையும் அவள் அடிமைப் பெண்களையும் இஸ்லாத்தில் சேர்த்து தன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பின்பு ஜைத்தூன் தந்தையான இறம் ராஜனையும் அவன் நாட்டு மக்களையும் இஸ்லாத்தில் சேர்க்க அவன் நாடு செல்கிறார். வழியில் ஒவ்வொரு நாட்டு மன்னனையும் வென்று, இறுதியில் இறம் ராஜனையும் சேர்த்து தன் நாடு திரும்பி ஜைத்தூனை மணந்து ஆட்சி செய்கிறார்.
இக்கதையையே ஃபக்கீர்கள் பாடி உரைவிளக்கம் சொல்வதைக் கேட்கலாம்.
‘ஐந்து ராசர்களும் ஒன்றாகக் கூடி ஆலோசனை செய்து
காட்டுக்கு போயினி வேட்டைகளாடிட கொண்டாரந்நேரம்
வேட்டையின் ஆயுதமெடுத்தார்கள் கையில்
வேண்டுமானதெல்லாம்
கத்தி கட்டாரி ரம்பம் வாள் முதல் கனத்த கேடயமாம்
ஈட்டியை எடுத்து கையில பிடித்தார் எந்தன் அலிமார்கள்
சக்கரம் எடுத்து கையில பிடித்தார் சாமர்த்தியம் காட்ட…’
இந்த விதமாக ஐந்து அரசர்களுக்கும் வேட்டைக்கு வேண்டுமான ஆயுதங்களை எடுத்துப்பூட்டி, அவர்கள் ஏறி செல்வதற்குப் பஞ்ச கல்யாணி எனும் குதிரையைக் கொண்டுவரச் செய்து, ஐந்து அரசர்களும் ஒன்று போலான பரியில் ஏறி அமர்ந்து, ஹஜ்ரத் முகம்மது ஹனிபா அவர்கள் தன்னுடைய குதிரைக்கு தானே இசாராச் செய்த உடனே அந்த நான்கு வீரர்களும் முகம்மது ஹனீபாவாவுமாக ஐந்து பேர்களும் எப்படி குதிரைகளை நடத்திச் செல்கின்றார்களேயானால்..
‘நான்கு கால்கள் நளினங்கள் ஆடிட
ஓட்டிய குதிரைகள் வானத்துக்கு ஏகிட
சோலை மரங்களும் தலைதூக்கி ஆடிட
காட்டில் மான்மறைகள் கண்டதும் ஓடிட
ஹனீபா வழி நடத்தினாரே…’
இவ்வாறாக சைத்தூன் கிஸ்ஸாவை ·பக்கீர்கள் உரைவிளக்கம் கூறி இடையிடையே பாடல்கள் பாடுவதோடு, இப்பாடல்களில் வருணணைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகின்றனர்.
வினா – விடை பாடல்:
தமிழில் ‘வினா-விடை ‘ போக்கில் அமைந்துள்ள பாடலுக்கு இஸ்லாம் சமயத்தில் ‘மசலா’ எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். ‘மசலா’ என்ற சொல் குறித்து மு. அப்துல் கறீம் பின்வருமாறு கூறுகிறார். ‘ஸூஆல்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வினாத் தொடுப்பது’ என்பது பொருள். அச்சொல்லின் அடிப்படையில் ‘மசலா’ என்ற அரபு இலக்கியம், மார்க்க உண்மைகளை ‘வினா-விடை’ வழியாக விளங்குவதற்கு எழுந்தது. அவ்வரபு இலக்கிய அமைப்பினைத் தழுவித் தமிழ் முஸ்லீம் புலவர்களும் அரபு, பாரசீக மொழிகளில் அமைந்த மார்க்க உண்மைகளைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த ‘மசலா’ என்ற புதுவகை இலக்கியத்தைப் புனைந்தனர்.
அவ்வகையில் ஃபக்கீர்களால் பாடப்படுகின்ற நூறு மசலா தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அம்மானைப் பாடலின் சாயலை ஒத்து விளங்குவதைக் காணலாம்.
……
அம்மானைப் பாடலில் மூன்று பேர் பாடுவது போன்று நூறு மசலாவில் இரண்டு பேர் பாடுகின்றனர். அவர்களுள் ஒருவர் ஆண். மற்றொருவர் பெண் ஆகும். அம்மானைப் பாடல்களில் இறுதியடியில் ‘அம்மானை’ என்ற சொல் இடம் பெறுவது போன்று இப்பாடல்களில் இறுதியடியில் ‘மசலா’ என்ற சொல் இடம்பெறுகிறது. மற்றும் இது நெடுங்கதைப் போக்கில் அமைந்த சமய நிகழ்ச்சிகளையும் , செய்திகளையும் கொண்டு அமைந்த பாடல்களாகக் காணப்படுகிறது.
நூறு மசலா பாடல் கூறு:
நூறு மசலாவின் முற்பகுதி சாதாரண தனிப்பாடல் போக்கில் ‘பாடல்-உரை விளக்கம்’ என்ற முறையிலும், பிற்பகுதி ‘வினா- விடை’ போக்கிலும் அமைந்துள்ளது. முற்பகுதி அப்பாஸ் அரசர் என்பவரின் பிறப்பு, வளர்ப்பு நிகழ்ச்சியையும், அவர் தாய்தந்தையர் படுகின்ற இன்ப துன்பங்களை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பிற்பகுதியிலேயே அப்பாஸ் அரசருக்கும் , மெகர்பானுவல்லிக்கும் நடைபெறுகின்ற போட்டியைப் பற்றிய செய்தி இடம் பெறுகிறது.
நூறு மசலா சுருக்கம் :
‘ஐந்தமா நகரில் அகமது ஷா என்பவர் தன் மனைவி மரியம்பீவியுடன் அரசு புரிந்து வருகிறார். வெகுநாட்கள் ஆகியும் குழந்தையில்லாமல் இறைவன் அருளால் அப்பாஸ் என்பவரைப் பெற்றெடுக்கின்றனர். சூழ்நிலை காரணத்தால் தன் நாட்டை இழந்து இருவரும் தன் குழந்தையுடன் காடு செல்கின்றனர். அங்கு அப்பாஸ் தன் தாய் தந்தையரைப் பிரிந்துசீன மாநகரை வந்தடைகிறார். சீனமாநகரில் ‘நூறரசி’ என்னும் பட்டம் பெற்ற மெகர்பானு வல்லி வாழ்ந்து வருகிறார். அவள் தன்னை மணம் முடிக்கக் கேட்டு வருபவர்களிடத்தில் நூறு கேள்விகள் கேட்டு , அதில் விடை கூறி வெற்றி பெற்றவர்களை மணமுடிப்பது என்பதே நோக்கமாகும். அந்நிலையில் ஏராளமான அரசர்களும், மந்திரிகளும் போட்டியில் தோல்வியுற்று, அவளிடம் அடிமை வேலை பார்த்து வந்தனர்.
ஒருநாள் இச்செய்தியினை அறிந்த அப்பாஸ் அரசர் எப்படியும் வல்லியை வென்றாக வேண்டும் என்ற முடிவோடு மசலா நடைபெறுகின்ற மணிமண்டபத்துக்கு வந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் மெகர்பானுவல்லியை வென்று மணமுடிக்கிறார்.
ஃபக்கீர்கள் இச்செய்தியை வினா-விடை போக்கில் பாடியிருப்பதைப் காணலாம்.
….. ……..
வினா- விடை பாடல் :
மெகர்பானுவல்லி முதல் கேள்வியாக அப்பாஸ் அரசரைப் பார்த்து கேட்கிறாள். மன்னனே! மன்னாதி மன்னனே! மகுடமுடி ராஜனே! என்று சொல்லி சப்தத்தோடு ஆங்காரத்தோடு கேட்கிறாள்.
வினா :
‘தாண்டும் பரிகள் ஏறி மீண்டும் இங்கு வந்தோரே
தாசியராய் வந்த கோசியரே! நீர் இங்கு கேளும்
நீர் யார் மகனுக்காணும்
நீர் இப்போ சொல்லாவிட்டால் கொள்வேன் யானும்
உன்னை யார் வளர்த்தது சொல்லாவிட்டால்
நேரே பிளப்பேன் யானும்…’
விடை :
‘அடி ஞானப்பெண்ணே!
கொல்வேன் என்று சொன்ன குங்கும சந்தனமே
கோதையாராகிய மாதரே! நீர் கேளு – நான்
ஆதம் மகன் தாண்டி – பெண்ணே
ஓதம் வேதம் தாண்டி
என்னை அல்லா வளர்த்தாண்டி – பெண்ணே
உன்னை ஒரு சொல்லால் வெல்லத்தாண்டி’
வினா :
‘ஏய் மன்னா!
தாண்டும் பரிகள் ஏறும் முன்னே
தங்கியிருந்த இடமென்ன
ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே
உயர்ந்திருந்த இடமென்ன
இம்மசலா போல் ஆயிரம் மசலா உள்ளது
விளங்கும் படி சொல்லும் மன்னா – இங்கு
பலபேர் முன்னிலையில்..’
விடை :
‘அடி ஞானப்பெண்ணே!
தாண்டும் பரிகள் ஏறும் முன்னே
தங்கியிருந்தேன் தகப்பன் வீட்டில்
ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே
உயர்ந்திருந்தேன் தாயின் வயிற்றில்
இதுதானா உன் மசலா என்று
என்னை வெல்ல வந்தாயடி’
இரண்டாம் நாள் மசலாவில்…
வினா :
‘மன்னாதி மன்னவனே!
மகுடமுடி ராஜனே!
என்னை வெல்ல வந்த மன்னா
இருந்து நல்லா கேளு மன்னா – அடே
உங்கள் நபி மார்க்கத்திலே
நல்ல முகம்மதியர் வேதத்திலே
நாலாவது மார்க்கத்திலே
நபிகள் சொன்ன சரகின்படி
மானிலேயும் பெரிய மானு அறுபடாத மானுமென்னா?
மீனிலேயும் பெரிய மீனு அறுபடாத மீனுமென்னா?
மாவுலேயும் நல்ல மாவு இடிபடாத மாவுமென்னா?
இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா
சொன்ன உயிர் பிழைப்பாய் மன்னா
சொல்லாவிட்டால் தலையறுப்பேன்’
விடை :
அந்த மொழி கேட்டதுடன் – நம்ம
அகமதுஷா திரு மைந்தன்
‘கேளடியே ஞானவல்லி கிருபையுள்ள நூறுமசலா
எங்கள் நபி மார்க்கத்திலே
நல்ல முகம்மதியர் வேதத்திலே – அல்லா
நாலாவது மார்க்கத்திலே
நபிகள் சொன்ன சரகின்படி
மானிலேயும் பெரிய மானு – பெண்ணே
அறுபடாத மானானது – அல்லா
அறுபடாத மானானது – அது
ஈமானடி மெகர்பானே..
மீனிலேயும் பெரிய மீனு
அறுபடாத மீனானது – அது
ஆமீன் என்ற தாகுமே…
மாவுலேயும் நல்ல மாவு – பெண்ணே
இடிபடாத மாவானது – அல்லா
இடிபடாத மாவானது
ஐந்து நல்ல கலிமா பெண்ணே
இதுதானா உன் கதைகள்
இந்த மன்னனுக்குச் சொல்ல வந்தே..
மூன்றாம் நாள் மசலாவில்
வினா:
‘அட மன்னாதி மன்னனே
மகுடமுடி ராஜனே!
என்னை வெல்ல வந்த மன்னா!
இருந்து நல்லா கேளு மன்னா…
ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தான் ஆறுவீடு
ஆறு வீட்டுப் பேரானதை
அறியும்படி சொல்லும் மன்னா
சொல்லும் மன்னா வெல்லும் மன்னா..’
விடை:
‘அந்த மொழி கேட்டதுடன்
அந்த சிந்தையுள்ள அப்பாஸ் அரசர்
கேளடியே! கிளிமொழியே
கிருபையுள்ள நூறு மசலா – இந்த
ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தான் ஆறுவீடு
முதல் வீடு தகப்பன் வீடு – பெண்ணே
இரண்டாம்வீடு தாய் கருவு வீடு – அல்லா
மூன்றாம் வீடு துன்யா வீடு
நான்காம் வீடு கப்ரு வீடு
ஐந்தாம் வீடு கேள்வி வீடு
ஆறாம் வீடு சொர்க்கம் நரகம் வீடு..’
இவ்வாறாக மூன்று நாட்கள் மசலா மணி மண்டபத்தில் அப்பாஸ் அரசருக்கும், மெகர்பானுவல்லிக்கும் நடைபெற்ற போட்டியில் அப்பாஸ் அரசர் வெற்றிபெற்று மெகர்பனுவை மணம் முடிக்கிறார்.
இவ்விதமாக ஃபக்கீர்கள் நூறு மசலா என்ற பாடல் மூலமாக இஸ்லாமியச் சமயக் கடமைகளையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குகின்றனர்.
***
பொருள் அகராதி :
இசாரா : சைகை
சறகு : இஸ்லாமிய தெய்வீக சட்டம்
ஈமான் – இறை நம்பிக்கை
ஆமீன் – அப்படியே ஆகுக
கலிமா – இஸ்லாத்தின் மூலமந்திரம் (‘லாயிலாஹா இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லா’)
துன்யா – இவ்வுலகம்
கப்ரு – மண்ணறை (அடக்கஸ்தலம்)
கியாமத் – இறுதித் தீர்ப்பு நாள்
***
‘இஸ்லாமிய ·பக்கீர்கள்’ – ரஹ்மத்துல்லாவின் முதல் நூல் (முதல் பதிப்பு அக்’2007). மதுரையைச் சேர்ந்த வ. ரஹ்மத்துல்லா M. Phil, M.Ed தற்போது மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் தென்திசை பதிப்பகத்தாருக்கும் நன்றி.
***
‘மரத்துக்குள்ளே பூப்பந்து – மன்னா
குடத்துக்குள்ளே காய் காய்க்கும்
காயாவது பழம் ஆனது – அது
கனிந்துதான் கீழே விழுந்தது
கனிந்து கீழே விழுந்துதான் – திகட்டாமல்
இனிக்கும் கனி, அந்தக் கனி – மன்னா
எக்கனி என்று சொல்லும் மன்னா’ என்ற
கடைசி ‘மசலா’விற்கு ‘சிக்கந்தர் கனி’ – என்று என் தாய்வழிப் பாட்டனாரின் பெயரைச்- சொல்லி பாடாய்ப்படுத்தாமல் , நூலை வாங்கி பதிலைப் பார்க்கவும் ! ·பக்கீர்கள் பற்றி பல விபரங்கள், அவர்கள் பாடும் பாடல்களோடு உள்ளன. ‘பெண்புத்தி மாலை’யும் உண்டு. ‘தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு எடுத்துச் சொல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ·பக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது’ என்று பின்னட்டை சொல்வது சரிதான். என்ன, ரொம்ப லேட்.