வெளிச்சம் – ஆழி சூல் உலகிலிருந்து…

“அங்க மேசையில கார்டினல் நியுமேன் புக் இருக்கு, சிவப்பு கலரு. அத எடுத்திற்று வந்து அதுல ‘லீட் கைண்டிலி லைட்‘ன்னு ஒரு பொயம் இருக்கு, அத எனக்கு வாசிச்சிக் காட்டு பாப்போம்.”

கில்பர்ட், அவர் குறிப்பிட்ட கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

“Lead, Kindly Light, amidst th’encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.”

“கவிதையின் பொருள் புரிஞ்சிச்சா ஒனக்கு? மோட்சத்த இப்பவே பாக்கணுமின்னு அவசியம் இல்ல. அடுத்து எடுத்து வைக்கிற ஒரு அடிக்கி வெளிச்சம் தெரிஞ்ச போதும்ங்குறாரு. வாழ்ற இந்த நிமிஷம் ஒழுங்கா வாழனும், அதுக்கு வழிகாட்டுனா போதும்ங்குறாரு. நீ என்னென்னா நற்கருண, ஆசீர்வாதம், மோட்சம்ங்குறா..!” – காகு சாமியார்.

***

நன்றி :  ஜோ டி குரூஸ் , தமிழினி

சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்

‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்கள் எழுதிய கட்டுரை (தினகரன் – ரம்ஜான் மலர் 2002 ) :

***

siddhi-2இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

***

தொடர்புடைய சுட்டி : திரைக்குப் பின்னால் – எஸ். ராமகிருஷ்ணன்

‘இறையருட் கவிமணி’ பற்றி நாகூர் ரூமி

‘என் ஆசான்’ என்ற தலைப்பில் நண்பர் அப்துல் கையும்,  ‘இறையருட் கவிமணி’ கா.அப்துல் கபூர் அவர்களைப் பற்றிய சிறந்த பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.  சுட்டி: இங்கே . பார்த்து விட்டீர்களா? அவர்களைப் பற்றிய சாகித்ய அகாதெமியின் நூலுக்கு (ஹ.மு.நத்தர்சா எழுதியது)  ரூமி எழுதிய மதிப்புரையை இப்போது வாசிக்கலாம். அன்பிற்குரிய கல்லூரித் தோழன் புஹாரியின் ‘அன்புடன்’ குழுமத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ரூமி பதிந்தது. இப்போது கேட்டால் தனக்கு ஞாபகம் இல்லை என்கிறார் . குழம்புகிறதே…’இம்மை வாழ்வின் சோதனையில் இதயப் பொறுமை தந்திடுவாய் !’

- ஆபிதீன் -

***

நாகூர் ரூமி :

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமுமோ ரிறையின் இனிய பேர் போற்றி இந்த இரண்டு வரிகளைப் படித்தவுடன் என் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு நன்றியுணர்ச்சி என்றுகூட அதைச் சொல்லலாம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தையும் தொடங்கும்போது அரபியில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்’ என்று சொல்வார்கள்.’இறைவனின் பெயரைக் கொண்டு தொடங்குகிறோம்’ என்று பொதுவாகப் பொருள்தரும் அந்த வாக்கியத்தை இவ்வளவு அழகாகக் கவிதையில் பார்த்தபோது, இனி இப்படியேகூடத் தொடங்கலாம் என்று தோன்றியது. இந்த இரண்டு வரிகளும் மார்க்கப் பற்று மிகுந்த ஒரு கவிஞரை எனக்கு அடையாளம் காட்டின.

அந்த அறிஞர்தான் ‘இறையருட் கவிமணி’ என்ற புகழ்ப்பெயருடன் அறியப்படும் கா.அப்துல் கபூர். அவரைப் பற்றிய சாகித்திய் அகாதெமியின் வெளியீடு இந்த நூல்.

அதை முழுவதும் படித்துப் பார்த்தபோது சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த மதிப்புரையின் நோக்கம்.

பேராசிரியர்,எழுத்தாளர், கவிஞர், குழந்தை இலக்கியம் படைத்தவர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பக்தி இலக்கியகர்த்தா, பத்திரிகையாளர், பன்மொழி வல்லுணர் என பன்முகம் பளபளக்கும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர்ந்த அவர்
திருவிதாங்கோட்டில் 1924ல் பிறந்து 2002ல் மறைந்தவர்.

1946ல் இருந்து 67வரை சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தம பாளையம், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்த கல்லூரிகளில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும், முதல்வராகவும், கீழ்த்திசை மொழித்தலைவராகவும் இருந்திருக்கிறார். 1967க்குப் பிறகு வண்டலூர் பிறைப்பள்ளி முதல்வராகவும், கும்பகோணம் அல் அமீன் உயர் நிலைப்பள்ளி நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், சென்னைப் பல்க்லைக்கழக செனட் உறுப்பினராகவும், கேரளப் பல்கலைக்கழக் பாடநூல் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

உர்து முஷாயிரா பாணியில் முதன் முதலாக தமிழ்க் கவியரங்கை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 1948ல் அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமையும், முதன் முதலாக ஒரு கல்லூரியின் முதல்வாராகப் பொறுப்பு வகித்த தமிழ்ப் பேராசிரியர் (ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரி, உத்தமபாளையம்) என்ற பெருமையும் இவரையே சேரும்.

முன்னாள் ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர், மதியழகன், பேரா.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இவரோடு உடன் பயின்ற மாணவர்கள். கலைமாமணி மணவை முஸ்தபா, சிற்பி,சாதிக் பாட்சா போன்றோர் இவருடைய மாணவர்கள். பன்னிரண்டு கவிதை நூல்களும் ஆறு உரைநடை நூல்களும் எழுதிய இவர் குழந்தை இலக்கியத்தில் பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், கவிமணிக்கும் அடுத்த இடத்தில் இருப்பவர். ‘அரும்பூ’ என்ற குழந்தைகளுக்கான பாடல்களின் தொகுப்பு இவருக்கு அந்த புகழைக் கொடுக்கிறது.

நண்பன் என்ற கையேட்டுப் பிரதியில் முதல் கவிதை எழுதி இலக்கிய வாழ்வைத் துவக்கிய இவர், பின்பு ‘மதிநா’ என்ற ஒரு மாத இதழை சிறப்பாக நடத்திக்காட்டினார். ‘மதிநா’ என்ற பெயர் முஹம்மது நபியவர்கள் அடக்கமாகியுள்ள புனித நகரான மதினாவைக் குறிப்பதாகவும் மதி, நா ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டது அதன் சிறப்பு. இந்த இதழின் மூலமாகத்தான் தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்
பிரபலமடைந்தன.

உரை நடை நூல்கள்

‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற இவருடைய நூல் சென்னை, அண்ணாமலை மற்றும் கேரள பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. பதினோரு தலைப்புகளில் வானொலி
உரைகளாக பேசப்பட்டதன் தொகுப்பே இது. அராபியர்கள் இந்தியாவைக் குறிக்க ‘ஹிந்த்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இந்திய நாட்டின் புளி அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் பேரீச்சம் பழத்தை நினைவு படுத்தியதால் அதை அவர்கள் ‘தமருல் ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். அதுவே ஆங்கிலத்தில் ‘டாமரிண்ட்’(tamarind) என்று ஆனது! இதுபோன்ற பல அரிய, ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

அறவாழ்வு, வாழும் நெறி இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியம், இனிக்கும் இறைமொழிகள், மிக்க மேலானவன் ஆகியவை இவருடைய மற்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களாகும்.

‘இஸ்லாமிய இலக்கியம்’ என்ற நூலில் தமிழ் மற்று அரபி மொழிகள் பற்றிய கட்டுரையும் முகலாய ஆட்சியாளர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

‘வாழும் நெறி இஸ்லாம்’ என்ற நூல் இவருடைய பல்வேறு சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதிலும் அரபி மொழி பற்றிய ‘வையகம் போற்றும் வான்மொழி’, ‘அறிவுத் துறையில்
முஸ்லிம்களின் பங்கு’, ‘பாரகம் போற்றும் நூலக முன்னோடிகள்’ ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

திருக்குர்ஆனின் வசனங்களுக்குத் தெளிவுரையாக அமைந்த 21 கட்டுரைகளின் தொகுப்பு ‘இனிக்கும் இறைமொழி’ என்ற் நூல்.

தன் இறுதி நாட்களில் திருக்குர்ஆனுக்கு இவர் எழுதிய விளக்கக் கட்டுரைகள்தான் ‘மிக்க மேலானவன்’ என்ற நூலாக உருப்பெற்றது. இவருடைய விசாலமான அறிவையும் ஆழமான பார்வையையும் உரை நடையையும் கவிதா நடையாக அமைக்கும் திறனையும் இவருடைய எல்லா படைப்புகளிலும் நாம் காணலாம்.

சிறுவர் இலக்கியம்

இவர் நடத்திய ‘மதிநா’ இதழில் ‘சிறுவர் சோலை’ என்ற பகுதியில் அபூஜமால் என்ற பெயரில் இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள்தான் பின்னர் ‘அரும்பூ’ என்ற பெயரில்
தொகுக்கப்பட்டது. இப்பாடல்கள் குழந்தைக்ள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டன. கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ரப்பர் எஸ்டேட்டில் குழந்தைகளின் திற்னைச்
சோதிக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றில் விருந்தினராகக் கலந்து கொள்ள எழுத்தாளர் தோப்பில்முகமது மீரான் சென்றிருந்தபோது, ஒரு குழந்தைப் பாடலைச் சொல்லி இதை எழுதியது யார் என்று கேட்டபோது, ‘இறையருட் கவிமணி கா.அப்தில்கபூர்’ என்று ஒரு தொழிலாளியின் குழந்தை பதில் சொன்னதை தோப்பில் பதிவு செய்திருக்கிறார்!

‘இறைவா உனக்கோர்

இணையே இல்லை

நிறைவே தருவாய்

நேர்வழி காட்டுவாய்

நல்லவை செய்யும்

நாட்டம் நல்குவாய்

அல்லவை தவிர்க்கும்

ஆற்றல் தருவாய்

என்று துவங்கும் ‘இறைவா’ என்ற முதல் பாடல் மழலைகளின் உள்ளத்தில் நல்ல விதைகளை எளிதாக விதைத்து விடுகிறது.

கணிதம் கற்றுக்கொடுக்கும் பாடல்களில்கூட, கணிதத்தோடு கருத்தையும் கற்றுக்கொடுக்கிறார்:

எண்ணத் தொடங்கு ஒன்று

என்றும் இறையை ஒன்று!

ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஒளிரும் கண்கள் இரண்டு!

‘மாலை மாற்று’ என்று கூறப்படும் சொற்களைத் திருப்பிப் படித்தாலும் அதே பொருளைத் தரும் வரிகளை உள்ளடக்கிய பாடல்களையும் எழுதி சோதனை செய்துள்ளார்:

வாத மாதவா

தேனு மீனுதே

மோக ராகவா

மோரு தீருமோ

யானை சேனையா

வாடி ஆடிவா

அலைவதினாலே அலையாகும்

திரள்வதினாலே திரையாகும்

என்று காரண காரியத் தொடர்பை உணர்த்தும் வகையிலான பாடல்களும் எழுதியுள்ளார். இதேபோல, ஆங்கிலத்தில் ‘ஹோமோனிம்ஸ்’(homonyms) என்று சொல்லப்படும் ஒலி வடிவம்
ஒன்றாகவும், வரி வடிவம் வேறாகவும் இருக்கும் சொற்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார்:

ஆற்றின் ஓரம் கரையாகும்

ஆடையில் படுவது கறையாகும்

காட்டில் கொல்வது புலியாகும்

வீட்டில் கொள்வது புளியாகும்

புதிர்கள்,கதைகள் என பல்வேறுபட்ட வடிவங்களில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டின் பள்ளிகள் தோறும் இப்பாடல்களைப் பாடமாக வைத்தால் நம் குழந்தைகள் நிச்சயம் விரைவாகப் பயனடைவர்.

மாலை இலக்கியம்

இறையருள் மாலை, திருமறை மாலை, நபிமொழி மாலை, நாயக மாலை, நபிமணி மாலை, பாத்திமா மாலை, காஜா மாலை, முஹ்யித்தீன் மாலை என ஏராளமான புகழ்ச்சிப் பாக்கள் அடங்கிய தொகுப்பு இது. இவற்றின் பெரும்பகுதி நாகூர் ஈ.எம்.ஹனிபாவால் பாடப்பட்டு புகழடைந்தவை.இசைத்தட்டில் கம்பீரமாக ஒலித்த இப்பாடல்கள் பாமரர்களின் இதயத்தினுள் சென்று இடம் பிடித்தன.

ஆதியருள் கனிந்திறங்கி

அமரர் கோன் வழியாக

நீதிநபி மாமணிக்கு

நிறைவளித்த திருமறையாம்

என்று தொடங்கும் திருமறை மாலையின் பாடலும் நாகூர் ஹனிபா பாடியதுதான். ஹஸ்பீரப்பீ ஜல்லல்லாஹ், அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன், ஆளும் இறைவன் தூதர்
நபி, விண்ணகமும் மண்ணகமும், அருளாளன் அன்புடையோன் ஆகியவை மேலும் சில உதாரணங்கள்.

நல்ல தமிழில், அழகு தமிழில் பிரவாகம் போலப் பேசும் வல்லமை படைத்த இவர் இடுக்கன் வருங்கால் நகுக எனும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, துன்பம் வந்தபோதும்கூட
நகைச்சுவை உணர்வோடு பேசியிருக்கிறார். மூட்டு வலியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோது ஒரு நண்பர் இவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிலேடையாக, ‘உடம்பில் முக்கால் பாகம் நன்றாக இருக்கிறது. கால் பாகம்தான் நன்றாக இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார்!

அற்புதமான படைப்பாற்றல் கொண்டவராகவும், சரியான ஆன்மீக வாதியாகவும், நல்லாசிரியராகவும் செயற்கரிய சேவைகள் பல செய்த இந்த மாமனிதரை, சமுதாயம் அடையாளம் காண வேண்டியது காலத்தின் க்ட்டாயம். இவரைப்போல எத்தனைபேர் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இறையருட் கவிமணியை அடையாளம் காட்டிய பேராசிரியர் நத்தர்சாவும், அடையாள கண்டுகொண்ட சாகித்திய அகாதெமியும் நிச்சயம் நமது பாராட்டுக்கு உரியவர்கள்.

- நாகூர் ரூமி -

« பழைய வரவுகள்