சித்தி ஜூனைதா பேகம் – கனவுலகும் படைப்புலகும்

sithijunaithabegam.jpg 

சித்தி ஜூனைதா பேகம் – கனவுலகும் படைப்புலகும்

அ. வெண்ணிலா

(உயிர் எழுத்து – ஆகஸ்ட் 2007)

சித்தி ஜுனைதா பேகம் – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி. 1917-ஆம் ஆண்டு பிறந்தவர். 81 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர். பன்னிரெண்டு வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டவர். நான்கைந்து ஆண்டுகளே நீடித்த இவரின் திருமண வாழ்க்கையின் பலன் நான்கு குழந்தைகள். பதினேழு வயதிற்குள்ளேயே விதவையான இவருக்கு வழக்கமான பெண்களைப் போல வாழ்க்கை ஒடுங்கிப் போய்விடவில்லை. சித்தி ஜூனைதா பேகம் எழுத்தாளராயிருந்தார். அவருடைய கல்வித்தகுதி மூன்றாம் வகுப்பு.

தாத்தா மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர்,  தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். நாகை நகரசபை துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு தலைமுறைகளாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட குடும்பத்தினராக இருந்த காரணத்தினால் வழக்கமான குடும்பங்களை விட இறுக்கம் குறைவாக இருந்திருக்கலாம். வண்ணக் களஞ்சியப் புலவர் பெருமானின் குடும்ப வழித்தோன்றலாகத் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அறிமுகம் செய்கிறார்: ‘எங்கள் குடும்பத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித்திறமை எல்லாம் உண்டு’

குடும்பத்தின் இலக்கிய ஆளுமைகளாக அவர் சுட்டும் எல்லோரும் ஆண்களாக இருக்கலாம். காரணம், சித்தி ஜூனைதா மட்டுமே எழுத வந்த முதல் பெண் என குறிப்புகளில் காண முடியும். இத்தனை இலக்கிய ஆளுமைகள் இருந்தும் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் ‘எந்தப் பெரியவர்களும் என்னை எழுதத் தூண்டியதில்லை; துணை செய்ததுமில்லை. எப்போதும் எனது சொந்த முயற்சியும் ஆவலும்தான்’ என்கிறார். தூண்டல் நிகழாமல் போனதற்கு எண்ணிறந்த காரணங்கள் இருந்திருக்கலாம். பெண்ணாயிருப்பது உட்பட. ஆனால் அவர் எழுத்திற்கு எந்தத் தடையும் குடும்பத்தினரால் உண்டாக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க மேடைகளில் ஆவலாதிகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் சிலர் இவரின் தெளிவைக் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம்.

தன்னுடைய 21-ஆம் வயதில் அவர் எழுதிய முதல் நாவல் ‘காதலா ? கடமையா?‘ 1938-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இச்சரித்திர நாவல் இஸ்லாமிய உலகில் ‘காதல்’ என்ற வார்த்தைக்காகவே பெரும் கண்டனத்தைக் கண்டிருக்கிறது. கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல். ஒன்றுபோல் உருவ ஒற்றுமை கொண்ட இரு இளைஞர்கள், ஒருவர் இளவரசர், மற்றொருவர் சாதாரணக் குடிமகன். இளவரசி ஒருவர். வழக்கம்போல் இடம் மாறுதலும், காதலும், சண்டையும் நடைபெறுகிறது. இறுதியில் காதலா கடமையா என்ற கேள்வி வருகையில் தனி நபர் சுகத்தை விட பொதுமக்களின் நலம் கருதும் கடமையுணர்வே உயர்வானது என்ற சுபம். திருப்பமான காட்சிகளும் சுவாரசியமான சம்பவங்களும் என நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ‘எழுத வந்துள்ள மகமதியப் பெண்’ என உ.வே.சா முன்னுரையில் பாராட்டுகிறார்.

சரித்திர நாவலாக இருந்தாலும் சமகால சீர்திருத்தக் கருத்துக்களைக் கதாபாத்திரத்தின் மூலம் முன்வைக்கிறார். குறிப்பாக அனைவருக்கும் கல்வியறிவு, சமத்துவம் இதனோடு பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல் என்பதையும் குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பெண்களுக்குக் கல்வியறிவு வழங்க இன்னும் போதிய முன்னுரிமை தராத காலத்திலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன் அவர் முன்வைத்துள்ள கருத்து அவரின் தெளிவைக் காட்டுகிறது.

1947-இல் வெளிவந்த ‘சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல்’ என்ற நாவல் இஸ்லாமியர்கள் நடத்திய மதமாற்ற நடவடிக்கையை எதிர்த்தும், இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போரிடும் அப்பா, மகனைப் பற்றிப் பேசுகிறது. தந்தையைக் கொன்றவனையே காப்பாற்றும் மானிட உணர்வையும், அதே நேரத்தில் தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரபார்ந்த வீரத்தையும் முன்னிறுத்துகிறது சண்பகவல்லி பாத்திரம். இறுதியில் தன் நாட்டை ஆக்ரமிக்கும் வஜீர் அப்பாஸை மணந்து சலீமாவாக மாறுகிறார்ள். அவள் குழந்தை ‘முகமது ரஷீத்பே’வாக மாறுகிறது. பல்வேறு வரலாற்றுச் செய்திகளின் பின்புலத்தில் இக்கதை நாவலாக்கப்பட்டுள்ளது.

சித்தி ஜூனைதா பேகம் எழுதிய சில கட்டுரைகள் தொகுக்கப்பெற்று ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற நூலாகியிருக்கிறது. இஸ்லாம் மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

பெண்ணென்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘அடக்கம், பொறுமை, தியாகம், தொண்டு முதலிய இயல்பாக அமைந்த ஒன்றே பெண் என்பது’ என்கிற மரபார்ந்த பெண் பற்றிய பார்வையில் இருந்து எந்த மாற்றுக் கருத்தையும் உட்கொள்ளாத பார்வை இது கூடவே ‘பெண்ணில்லையேல் உலகில் அழகேது? நீலவானத்தில் திங்கள் போலவும் பாலைவனத்தின் பசுஞ்சோலை போலவும், மலரின் நிறம் போலவும், மலரின் நிறம் போலவும் பெண்ணெனும் அழகு உலகை அழகு செய்கிறது’ என்கிறார்.

பெண் உரிமைகளைப் பற்றிப் பேச நேரிடுகையில் ‘பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளுள் முக்கியமானது சொத்துரிமையாகும். அவர்தன் கணவனது அனுமதி, மற்றவரது அனுமதியின்றி, தன் சொத்தை தான் நினைத்தபடி செய்து கொள்ளலாம்’ என்கிறார். இன்றுவரை சாத்தியப்பட்டுள்ளதா இவ்வுரிமை என்பது கேள்விக்குறி.

‘இஸ்லாத்தில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இல்லை’ என்கிறார். ஆனால் ஆண் வன்மையுடையவன், பெண் மென்மையுடையவள் என்ற தன்னுடைய கருத்தைக் கொண்டு, அவரே இஸ்லாத்தின் நீதிக்கு விதிவிலக்கு அளித்துவிடுகிறார். ‘ஆண்மகன்; ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை அடையலாமே, பெண்ணுக்கு ஏன் அந்த உரிமை வழங்கப் படவில்லை?’ என்ற கேள்விக்கு முதலில் அத்தகைய உரிமை பெண்களுக்குமுண்டு என்று இறைவன் கூறுவதாக தன் வாதத்தை முன்வைக்கிறார். உடனே மறுப்பாக ‘ஆண்மகன் வல்லியல்பு வாய்ந்தவன், பெண்மகள் மெல்லியல்பு வாய்ந்தவள். எனவே அவரவர் உடல் அமைப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப கடமைகளும் உரிமைகளும் மாறுபட்டிருக்கலாம். ஒரே சமயத்தில் நான்கு கணவரை ஒரு பெண் பெற்றிருப்பாளாயின் அவள் தன் நிலை என்னாகும். பிறக்கும் குழந்தையின் பொறுப்பை எந்தக் கணவன் ஏற்றுக் கொள்வான்? இன்னும் வெளியில் கூறத்தகாத பல்வேறுபட்ட கேலிக்கூத்துக்கும் அவள் ஆளாக வேண்டிவரும்’ என பெண்ணின் பலதார மண உரிமையை மறுக்கிறார்.

‘ஒருத்தியிடம்தான் ஒருவனுக்கு உள்ளன்பு ஏற்பட முடியும்’ என ஒருவனுக்கு ஒருத்தி தத்துவத்தை முன்னிறுத்த வரும் அவர் உடனே, ‘எதற்கும் விதிவிலக்கு உண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத , விலக்க முடியாத ஏதோ ஒரு காரணம் பற்றியோ ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம் என்கிறார். உடன், ‘ஒருவன் தன் சமூக நலம் கருதியோ இனநலம் கருதியோ அல்லது அரசியல் நலம் கருதியோ பல பெண்களை மணக்கலாம்’ என்கிறார். தன் காலத்தை ஒட்டி சிந்திக்கும் கட்டாயமும், பெண்களுக்காக அதை மீறி யோசிக்க வேண்டும் என்ற போராட்டமும் இவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது.

பெண்கள் சினிமா பார்க்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார். ‘ஆண்கள் பார்க்கலாமென்றால் பெண்களும் பார்க்கலாம்’ என்கிறார். சிந்தையைக் கலைக்கும் படங்களை ஆண் பெண் இருவரும் பார்க்கக்கூடாது என்ற பொதுவான நியாயத்தையும் கூறுகிறார். சினிமா பித்தால் கணவன், குழந்தை, குடும்பம் எதையும் கவனியாது குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றனர் பெண்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

பெண்கள் சமையல் கலையில் தேறவேண்டும். காரணம், உன்னத உணைவைக் குடும்பத்தினருக்கும் பிறர்க்கும் பதமாகச் சமைந்தளிக்கும் பாக்கியம்  இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்துள்ளது என்று நம்புகிறார். அதனால்தான் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற வரியில் அடுப்பூதும் என்ற சொல் சுட்டும் இழிவைக் கண்டு கோபப்படுகிறார். தாய்மையும் சமையற்கலையும் பெண்ணுக்கு மிக அவசியமான அம்சங்களாக முன்னிறுத்தும் இவர், ‘இவர்கள் தம் காலமும் பொழுதும்  பேறு காலத்திலும் சமையலறையிலும் கழிக்கப்படும்போது இவர்கள் மனம் ஏனைய மாற்றங்களில் எங்ஙனம் செல்லும்? எனப் பெண் , கல்வியில் ஆர்வம் இல்லாதிருப்பதை சுட்டுகிறார். பழமையிலிருந்து புதுமைக்கு முழுமையாகத் தன் சிந்தனையை நகர்த்திக் கொள்ள இயலாத தடுமாற்றங்கள் ஆங்காங்கே உள்ளன.

பெண் ஆணைத் தொழலாமா என்ற கேள்விக்கு மனிதனை மனிதன் தொழலாம் என்றால் பெண் ஆணைத் தொழலாம் என்கிறார். மனிதனை மனிதன் தொழுவது இழிவு; அப்படியென்றால் பெண்ணும் ஆணைத் தொழத் தேவையில்லை என்கிறார். வள்ளுவரை சுட்டிக் காட்டி கணவர்கள் மனைவிகளின் வணக்கத்திற்கு ஏற்றவராக இருந்தால் அவரைப் பெண்கள் தொழலாம் என்கிறார். இலட்சியக் கணவர்களை உண்டாக்கி விடலாம் என்ற பேராசையாகக் கூட இருக்கலாம்.

ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் முதல் பெண் எழுத்தாளராக அறிமுகமானவர் சித்தி ஜூனைதா பேகம். குறைந்த கல்வியறிவும், கொஞ்சமும் நிகழாத இலக்கியச் சந்திப்புகளும் அற்று அவர் தன் சூழலில் இருந்து எழுத்துக்களை முன்வைத்துள்ளார்.

நாவல்களைப் படைக்கும்பொழுது அவருக்குள் எழும் சம்பவக் கோர்வைகளும் கதாபாத்திரங்களின் படைப்புகளும் அவரை அனுபவமிக்க எழுத்தாளராக முன்னிறுத்துகிறது. நாவல்களில் இடையிடையே கூறப்பட்டுள்ள இலக்கிய உதாரணங்கள் அவரைத் தேர்ந்த தமிழிலக்கிய வாசிப்பாளராகவும் காட்டுகிறது. கவிதை உலகில் பாரதிவரை உதாரணங்களை அடுக்குகிறார்.

மதம் சார்ந்த கருத்துக்களில் அவர் வாழ்க்கை முறையை ஒட்டி மிகவும் உயர்நோக்கு தன்மையிலேயே அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன. அவர் தன்னை நிறைந்த இறைப்பற்றாளாராக உருவாக்கிக் கொண்டதும் ஒரு காரணாமாயிருக்கலாம்.

பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் உரிமை குறித்து தன் வாழுங்காலத்தை மீறிய சிந்தனைகள் அவரிடம் இருந்தால் சில இடங்களில் நிறுவ அவர் முயன்றுள்ள போதிலும் அவருடைய மரபார்ந்த சிந்தனை மறுப்பையும் எழுப்பியுள்ளது. தான் வரையும் சித்திரத்தை அழித்தழித்து எழுதும் ஓவியன் போல.

சமகால நிகழ்வுகள் பற்றியும் , இவருடைய சமகால படைப்பாளிகள் குறித்த பாதிப்புகளையோ இவருடைய படைப்புகளில் காணக் கிடைக்கவில்லை. உ.வே.சாவை சென்றடைந்த இவர் பாரதிதாசனையும் பெரியாரையும் உள்வாங்கியுள்ளாரா என்ற பதிவுகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து இதழ்களில் எழுதுபவராகவும், நூல்களை வாசித்தபடி இருப்பவராகவும் இருந்துள்ளமையால் இந்தக் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

1960களின் இறுதிவரை , எழுதும் பெண்கள் என்றாலே ஓரினத்தைச் சார்ந்த பெண்களின் பெயர்களையே பட்டியலிட்டுக் கொண்டிருக்க வேண்டிய சமூக
நிலையில் , மாற்று எழுத்தை முன்னிறுத்திய , மாற்று இனத்தைச் சார்ந்த இரண்டு பெண்களாக இரண்டு பேரை என்றும் கொண்டாடலாம். ஒருவர் மூவலூர் ராமாமிர்தம். மற்றொருவர் சித்தி ஜூனைதா பேகம்.

**

நன்றி : அ. வெண்ணிலா மற்றும் ‘உயிர் எழுத்து’

**

சித்தி ஜூனைதா பேகம் தொடர்பாக மேலும் அறிய…

தூயவன் (எம்.எஸ்.அக்பர்)

 thooyavan

தூயவன் — ஓர் அறிமுகம் :  நாகூர் ரூமி

***

வரலாற்றுச் சுவடுகள் — திரைப்பட வரலாறு 725 ( தினந்தந்தி 10 & 13 – 08 – 2007)

எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்

84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார்

பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த் உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

திரையுலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர் தூயவன்.

இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாஹ் ஒலியுல்லாஹ். அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்று, தஞ்சையில் ரெஜிஸ்திராராகப் பணியாற்றியவர். தாயார் பெயர் ஜொஹரான்.

ஒரே மகன்

ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில் தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

தூயவன் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார் தூயவன். நாகூர் இலக்கியவாதிகள் மிகுந்த ஊர். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் என்ற ஆன்மிக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால் தூயவனால் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

தினத்தந்தி, ராணி, ஆனந்த விகடன், தினமணி கதிர் உள்பட பல பத்திரிக்கைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

முத்திரைக்கதை

1967-ம் ண்டில் ஆனந்த விகடன் அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை 500 ரூபாயாக உயர்த்தியது.

தூயவன் எழுதிய ‘உயர்ந்த பீடம்’ என்ற கதை 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக்கதையாகும். இதனால் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

அது டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும் சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கேட்டார்.

உடனே மேஜர், “நீங்களெல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்? ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுத வேண்டும்! என்ன நடை ! என்ன எழுத்து!” என்றார்.

அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், ‘நீங்கள் பாராட்டுகின்ற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்” என்று நிதானமாகக் கூறினார்.

மலைத்துப் போய்விட்டார் மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகங்கள் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

மேஜருக்காக “தீர்ப்பு” என்ற நாடகத்தை எழுதிக்கொடுத்தார் தூயவன். இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் “பால்குடம்”. இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

எம்.ஜி.ஆர்.

“தீர்ப்பு” நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். “நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது ஆச்சரியமான விஷயம்” என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப் பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

“பால்குடம்” நாடகமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

திருமணம்

இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக, எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

தினமணி கதிர் வார இதழ் ஆசிரியராக ‘சாவி’ இருந்த நேரம் அது. தூயவன் எழுதிய ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை பரிசுக்கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில் செல்வி என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

செல்வி என்ற புனைபெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், அவர் பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிய வந்தது. உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று பெண்ணைப் பார்த்தார்கள்.

இரு தரப்பினருக்கும் பிடித்துப் போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும் ஜெய்புன்னிசாவுக்கும் 27 – 09 – 1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, மேஜர் சுந்தர ராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். திருமணம் நடந்த வேளை பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

கல்யாணப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோதே இரண்டு பெரிய படக்கம்பனிகள் அவரை அணுகி “பால்குடம்” கதையைப் படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

அதேசமயம், “பால்குடம்” கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக்கி நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே பெரிய தொகைக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

வாய்ப்புகள் குவிந்தன

பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும் புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப் படம் 50 நாட்கள் ஓடியது.

கதை எழுதுவதில் மட்டுமல்ல, வசனம் எழுதுவதிலும் தூயவன் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர், ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜி கணேசன் நடித்த “மனிதருள் மாணிக்கம்”, ஜெயலலிதா, முத்துராமன் நடித்த “திக்குத் தெரியாத காட்டில்” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

அந்தக் காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்துகொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். முடிசூடா மன்னன், கல்யாணமாம் கல்யாணம், எங்களுக்கும் காலம் வரும், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன ஆகியவை அவற்றில் சில.

தேவர் அழைப்பு

தன் படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார். அதைத் தொடர்ந்து “கோமாத என் குலமாதா”, “மாணவன்”, “ஆட்டுக்கார அலமேலு”, “அன்புக்கு நான் அடிமை”, ரஜினி காந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”, “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்” முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் கியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த “தவப்புதல்வன்” படம் 100 நாள் ஓடி வசனகர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த “பொல்லாதவன்” படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

ஜாவர் சீதாராமன் எழுதிய ‘பணம், பெண், பாசம்’ என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார். நடிகர் முத்துராமன் தூயவனின் நெருங்கிய நண்பர். படப்பிடிப்புக்காக அவர் ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணமடைந்தார்.

இதேபோல, தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீரென்று காலமானார். இந்த இரு மரணங்களும் தூயவனை வெகுவாக பாதித்தன. இதன் பிறகு வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

நண்பர் சக்திவேலுடன் இணைந்து எஸ்.டி.கம்பைன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி விடியும் வரை காத்திரு என்ற படத்தைத் தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும் நடித்தார்.

நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்கியராஜ் முத்திரை பதித்து வந்த காலகட்டத்தில் ஆன்ட்டி ஹீரோவாக — அதாவது வில்லன் மாதிரியான கதா பாத்திரத்தில் – விடியும் வரை காத்திரு படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால் படம் சுமாராகவே ஓடியது.

கார்த்திக் கதாநாயகனாக நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

அன்புள்ள ரஜினிகாந்த்

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார் தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

அந்தக் கதையை ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்குப் பிடித்துப் போயிற்று. படம் எடுங்கள், நான் கால்ஷீட் தருகிறேன் என்றார்.

அந்தப் படம்தான் அன்புள்ள ரஜினிகாந்த். எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும் துர்க்கா தமிழ் மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நடராஜ் டைரக்ட் செய்தார். 1984-ம் ண்டு ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இது குறித்து தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:

ரஜினி சார் நடித்த தாய்வீடு, அன்னை ஓர் லயம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக் கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் அன்புள்ள ரஜினி காந்த்.

கதை ரஜினிக்கு பிடித்துவிட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார். படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ 25 லட்சம் கொடுத்தார். கணபதி வேல்முருகன் கம்பைன்ஸ் என்ற பேனரில் அன்புள்ள ரஜினிகாந்த் தயாரானது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் 100 நாட்கள் ஓடியது. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறக்காது.

வைதேகி காத்திருந்தாள்

ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் தூயவன் தயாரித்த வைதேகி காத்திருந்தாள் அற்புதமான படம். இதில் அடிதடி இல்லாத குணசித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, “அழகு மலராட” பாடல் நடனக் காட்சியில் மெய் சிலிர்க்கச் செய்தார்.

1984 அக்டோபர் 23-ம் தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

விஜய்காந்த் ராதிகா நடித்த நானே ராஜா நானே மந்திரி, கவுண்டமணி கதாநாயகனாக நடித்த தலையாடி பொம்மைகள் ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

கடைசி படம்

தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் உள்ளம் கவர் கள்வன். இந்தியில் வெளியான சிச்சோர் படத்தின் உரிமையைப் பெற்று அக்கதையைத் தமிழில் தயாரித்தார். படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தபோது, 1987 ஜூலை 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று காலமானார்.

அப்போது அவருக்கு வயது 41-தான்.

குடும்பம்

தூயவன் ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு (இக்பால்) என்ற மகனும் யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு பி.காம். படித்துவிட்டு திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பதில் புகழ் பெற்றவர். அபர்ணா அவர் உருவாக்கிய தமிழ் சீரியல்களில் ஒன்று. ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.

நன்றி: தினந்தந்தி 10 & 13 – 08 – 2007.

***

தூயவனின் முத்திரைக் கதைகள் விரைவில் , இன்ஷா அல்லாஹ்

« பழைய வரவுகள்