சித்தி ஜூனைதா பேகம் – கனவுலகும் படைப்புலகும்
அ. வெண்ணிலா
(உயிர் எழுத்து – ஆகஸ்ட் 2007)
சித்தி ஜுனைதா பேகம் – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி. 1917-ஆம் ஆண்டு பிறந்தவர். 81 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர். பன்னிரெண்டு வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டவர். நான்கைந்து ஆண்டுகளே நீடித்த இவரின் திருமண வாழ்க்கையின் பலன் நான்கு குழந்தைகள். பதினேழு வயதிற்குள்ளேயே விதவையான இவருக்கு வழக்கமான பெண்களைப் போல வாழ்க்கை ஒடுங்கிப் போய்விடவில்லை. சித்தி ஜூனைதா பேகம் எழுத்தாளராயிருந்தார். அவருடைய கல்வித்தகுதி மூன்றாம் வகுப்பு.
தாத்தா மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயர், தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். நாகை நகரசபை துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு தலைமுறைகளாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட குடும்பத்தினராக இருந்த காரணத்தினால் வழக்கமான குடும்பங்களை விட இறுக்கம் குறைவாக இருந்திருக்கலாம். வண்ணக் களஞ்சியப் புலவர் பெருமானின் குடும்ப வழித்தோன்றலாகத் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அறிமுகம் செய்கிறார்: ‘எங்கள் குடும்பத்தில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித்திறமை எல்லாம் உண்டு’
குடும்பத்தின் இலக்கிய ஆளுமைகளாக அவர் சுட்டும் எல்லோரும் ஆண்களாக இருக்கலாம். காரணம், சித்தி ஜூனைதா மட்டுமே எழுத வந்த முதல் பெண் என குறிப்புகளில் காண முடியும். இத்தனை இலக்கிய ஆளுமைகள் இருந்தும் தன்னுடைய நேர்காணல் ஒன்றில் ‘எந்தப் பெரியவர்களும் என்னை எழுதத் தூண்டியதில்லை; துணை செய்ததுமில்லை. எப்போதும் எனது சொந்த முயற்சியும் ஆவலும்தான்’ என்கிறார். தூண்டல் நிகழாமல் போனதற்கு எண்ணிறந்த காரணங்கள் இருந்திருக்கலாம். பெண்ணாயிருப்பது உட்பட. ஆனால் அவர் எழுத்திற்கு எந்தத் தடையும் குடும்பத்தினரால் உண்டாக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது. இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க மேடைகளில் ஆவலாதிகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் சிலர் இவரின் தெளிவைக் கணக்கிலெடுத்துக் கொள்ளலாம்.
தன்னுடைய 21-ஆம் வயதில் அவர் எழுதிய முதல் நாவல் ‘காதலா ? கடமையா?‘ 1938-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இச்சரித்திர நாவல் இஸ்லாமிய உலகில் ‘காதல்’ என்ற வார்த்தைக்காகவே பெரும் கண்டனத்தைக் கண்டிருக்கிறது. கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல். ஒன்றுபோல் உருவ ஒற்றுமை கொண்ட இரு இளைஞர்கள், ஒருவர் இளவரசர், மற்றொருவர் சாதாரணக் குடிமகன். இளவரசி ஒருவர். வழக்கம்போல் இடம் மாறுதலும், காதலும், சண்டையும் நடைபெறுகிறது. இறுதியில் காதலா கடமையா என்ற கேள்வி வருகையில் தனி நபர் சுகத்தை விட பொதுமக்களின் நலம் கருதும் கடமையுணர்வே உயர்வானது என்ற சுபம். திருப்பமான காட்சிகளும் சுவாரசியமான சம்பவங்களும் என நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ‘எழுத வந்துள்ள மகமதியப் பெண்’ என உ.வே.சா முன்னுரையில் பாராட்டுகிறார்.
சரித்திர நாவலாக இருந்தாலும் சமகால சீர்திருத்தக் கருத்துக்களைக் கதாபாத்திரத்தின் மூலம் முன்வைக்கிறார். குறிப்பாக அனைவருக்கும் கல்வியறிவு, சமத்துவம் இதனோடு பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல் என்பதையும் குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பெண்களுக்குக் கல்வியறிவு வழங்க இன்னும் போதிய முன்னுரிமை தராத காலத்திலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன் அவர் முன்வைத்துள்ள கருத்து அவரின் தெளிவைக் காட்டுகிறது.
1947-இல் வெளிவந்த ‘சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல்’ என்ற நாவல் இஸ்லாமியர்கள் நடத்திய மதமாற்ற நடவடிக்கையை எதிர்த்தும், இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போரிடும் அப்பா, மகனைப் பற்றிப் பேசுகிறது. தந்தையைக் கொன்றவனையே காப்பாற்றும் மானிட உணர்வையும், அதே நேரத்தில் தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரபார்ந்த வீரத்தையும் முன்னிறுத்துகிறது சண்பகவல்லி பாத்திரம். இறுதியில் தன் நாட்டை ஆக்ரமிக்கும் வஜீர் அப்பாஸை மணந்து சலீமாவாக மாறுகிறார்ள். அவள் குழந்தை ‘முகமது ரஷீத்பே’வாக மாறுகிறது. பல்வேறு வரலாற்றுச் செய்திகளின் பின்புலத்தில் இக்கதை நாவலாக்கப்பட்டுள்ளது.
சித்தி ஜூனைதா பேகம் எழுதிய சில கட்டுரைகள் தொகுக்கப்பெற்று ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற நூலாகியிருக்கிறது. இஸ்லாம் மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளன.
பெண்ணென்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘அடக்கம், பொறுமை, தியாகம், தொண்டு முதலிய இயல்பாக அமைந்த ஒன்றே பெண் என்பது’ என்கிற மரபார்ந்த பெண் பற்றிய பார்வையில் இருந்து எந்த மாற்றுக் கருத்தையும் உட்கொள்ளாத பார்வை இது கூடவே ‘பெண்ணில்லையேல் உலகில் அழகேது? நீலவானத்தில் திங்கள் போலவும் பாலைவனத்தின் பசுஞ்சோலை போலவும், மலரின் நிறம் போலவும், மலரின் நிறம் போலவும் பெண்ணெனும் அழகு உலகை அழகு செய்கிறது’ என்கிறார்.
பெண் உரிமைகளைப் பற்றிப் பேச நேரிடுகையில் ‘பெண்களுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளுள் முக்கியமானது சொத்துரிமையாகும். அவர்தன் கணவனது அனுமதி, மற்றவரது அனுமதியின்றி, தன் சொத்தை தான் நினைத்தபடி செய்து கொள்ளலாம்’ என்கிறார். இன்றுவரை சாத்தியப்பட்டுள்ளதா இவ்வுரிமை என்பது கேள்விக்குறி.
‘இஸ்லாத்தில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இல்லை’ என்கிறார். ஆனால் ஆண் வன்மையுடையவன், பெண் மென்மையுடையவள் என்ற தன்னுடைய கருத்தைக் கொண்டு, அவரே இஸ்லாத்தின் நீதிக்கு விதிவிலக்கு அளித்துவிடுகிறார். ‘ஆண்மகன்; ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை அடையலாமே, பெண்ணுக்கு ஏன் அந்த உரிமை வழங்கப் படவில்லை?’ என்ற கேள்விக்கு முதலில் அத்தகைய உரிமை பெண்களுக்குமுண்டு என்று இறைவன் கூறுவதாக தன் வாதத்தை முன்வைக்கிறார். உடனே மறுப்பாக ‘ஆண்மகன் வல்லியல்பு வாய்ந்தவன், பெண்மகள் மெல்லியல்பு வாய்ந்தவள். எனவே அவரவர் உடல் அமைப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப கடமைகளும் உரிமைகளும் மாறுபட்டிருக்கலாம். ஒரே சமயத்தில் நான்கு கணவரை ஒரு பெண் பெற்றிருப்பாளாயின் அவள் தன் நிலை என்னாகும். பிறக்கும் குழந்தையின் பொறுப்பை எந்தக் கணவன் ஏற்றுக் கொள்வான்? இன்னும் வெளியில் கூறத்தகாத பல்வேறுபட்ட கேலிக்கூத்துக்கும் அவள் ஆளாக வேண்டிவரும்’ என பெண்ணின் பலதார மண உரிமையை மறுக்கிறார்.
‘ஒருத்தியிடம்தான் ஒருவனுக்கு உள்ளன்பு ஏற்பட முடியும்’ என ஒருவனுக்கு ஒருத்தி தத்துவத்தை முன்னிறுத்த வரும் அவர் உடனே, ‘எதற்கும் விதிவிலக்கு உண்டு. தீராத நோய் காரணமாக அல்லது தன் மனையாட்டியை அணுக முடியாத , விலக்க முடியாத ஏதோ ஒரு காரணம் பற்றியோ ஒருவன் மற்றொருத்தியை மணம் புரியலாம் என்கிறார். உடன், ‘ஒருவன் தன் சமூக நலம் கருதியோ இனநலம் கருதியோ அல்லது அரசியல் நலம் கருதியோ பல பெண்களை மணக்கலாம்’ என்கிறார். தன் காலத்தை ஒட்டி சிந்திக்கும் கட்டாயமும், பெண்களுக்காக அதை மீறி யோசிக்க வேண்டும் என்ற போராட்டமும் இவர் எழுத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது.
பெண்கள் சினிமா பார்க்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார். ‘ஆண்கள் பார்க்கலாமென்றால் பெண்களும் பார்க்கலாம்’ என்கிறார். சிந்தையைக் கலைக்கும் படங்களை ஆண் பெண் இருவரும் பார்க்கக்கூடாது என்ற பொதுவான நியாயத்தையும் கூறுகிறார். சினிமா பித்தால் கணவன், குழந்தை, குடும்பம் எதையும் கவனியாது குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றனர் பெண்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.
பெண்கள் சமையல் கலையில் தேறவேண்டும். காரணம், உன்னத உணைவைக் குடும்பத்தினருக்கும் பிறர்க்கும் பதமாகச் சமைந்தளிக்கும் பாக்கியம் இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்துள்ளது என்று நம்புகிறார். அதனால்தான் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற வரியில் அடுப்பூதும் என்ற சொல் சுட்டும் இழிவைக் கண்டு கோபப்படுகிறார். தாய்மையும் சமையற்கலையும் பெண்ணுக்கு மிக அவசியமான அம்சங்களாக முன்னிறுத்தும் இவர், ‘இவர்கள் தம் காலமும் பொழுதும் பேறு காலத்திலும் சமையலறையிலும் கழிக்கப்படும்போது இவர்கள் மனம் ஏனைய மாற்றங்களில் எங்ஙனம் செல்லும்? எனப் பெண் , கல்வியில் ஆர்வம் இல்லாதிருப்பதை சுட்டுகிறார். பழமையிலிருந்து புதுமைக்கு முழுமையாகத் தன் சிந்தனையை நகர்த்திக் கொள்ள இயலாத தடுமாற்றங்கள் ஆங்காங்கே உள்ளன.
பெண் ஆணைத் தொழலாமா என்ற கேள்விக்கு மனிதனை மனிதன் தொழலாம் என்றால் பெண் ஆணைத் தொழலாம் என்கிறார். மனிதனை மனிதன் தொழுவது இழிவு; அப்படியென்றால் பெண்ணும் ஆணைத் தொழத் தேவையில்லை என்கிறார். வள்ளுவரை சுட்டிக் காட்டி கணவர்கள் மனைவிகளின் வணக்கத்திற்கு ஏற்றவராக இருந்தால் அவரைப் பெண்கள் தொழலாம் என்கிறார். இலட்சியக் கணவர்களை உண்டாக்கி விடலாம் என்ற பேராசையாகக் கூட இருக்கலாம்.
ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் முதல் பெண் எழுத்தாளராக அறிமுகமானவர் சித்தி ஜூனைதா பேகம். குறைந்த கல்வியறிவும், கொஞ்சமும் நிகழாத இலக்கியச் சந்திப்புகளும் அற்று அவர் தன் சூழலில் இருந்து எழுத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாவல்களைப் படைக்கும்பொழுது அவருக்குள் எழும் சம்பவக் கோர்வைகளும் கதாபாத்திரங்களின் படைப்புகளும் அவரை அனுபவமிக்க எழுத்தாளராக முன்னிறுத்துகிறது. நாவல்களில் இடையிடையே கூறப்பட்டுள்ள இலக்கிய உதாரணங்கள் அவரைத் தேர்ந்த தமிழிலக்கிய வாசிப்பாளராகவும் காட்டுகிறது. கவிதை உலகில் பாரதிவரை உதாரணங்களை அடுக்குகிறார்.
மதம் சார்ந்த கருத்துக்களில் அவர் வாழ்க்கை முறையை ஒட்டி மிகவும் உயர்நோக்கு தன்மையிலேயே அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன. அவர் தன்னை நிறைந்த இறைப்பற்றாளாராக உருவாக்கிக் கொண்டதும் ஒரு காரணாமாயிருக்கலாம்.
பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் உரிமை குறித்து தன் வாழுங்காலத்தை மீறிய சிந்தனைகள் அவரிடம் இருந்தால் சில இடங்களில் நிறுவ அவர் முயன்றுள்ள போதிலும் அவருடைய மரபார்ந்த சிந்தனை மறுப்பையும் எழுப்பியுள்ளது. தான் வரையும் சித்திரத்தை அழித்தழித்து எழுதும் ஓவியன் போல.
சமகால நிகழ்வுகள் பற்றியும் , இவருடைய சமகால படைப்பாளிகள் குறித்த பாதிப்புகளையோ இவருடைய படைப்புகளில் காணக் கிடைக்கவில்லை. உ.வே.சாவை சென்றடைந்த இவர் பாரதிதாசனையும் பெரியாரையும் உள்வாங்கியுள்ளாரா என்ற பதிவுகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து இதழ்களில் எழுதுபவராகவும், நூல்களை வாசித்தபடி இருப்பவராகவும் இருந்துள்ளமையால் இந்தக் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
1960களின் இறுதிவரை , எழுதும் பெண்கள் என்றாலே ஓரினத்தைச் சார்ந்த பெண்களின் பெயர்களையே பட்டியலிட்டுக் கொண்டிருக்க வேண்டிய சமூக
நிலையில் , மாற்று எழுத்தை முன்னிறுத்திய , மாற்று இனத்தைச் சார்ந்த இரண்டு பெண்களாக இரண்டு பேரை என்றும் கொண்டாடலாம். ஒருவர் மூவலூர் ராமாமிர்தம். மற்றொருவர் சித்தி ஜூனைதா பேகம்.
**
நன்றி : அ. வெண்ணிலா மற்றும் ‘உயிர் எழுத்து’
**

